பீட்டர் பொங்கல்

‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்

மனித வாழ்வின் அனுபவமான பூதபௌதிகங்கள் அறிவு கொண்டு பேசப்பட முடியாத குறை நிலை இலக்கியத்தால் நிரப்படப்பட வேண்டும்- தொழில்மயமாவதற்கு முன்னிருந்தது போல் மானுடமல்லாதவை குரல் பெறவும் நிலையற்ற இவ்வுலகின் விசித்திர அச்சம் நினைவுறவும் பருவநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தையொட்டி வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.

(The Great Derangement (2016), Gun Island –(2019), Amitav Ghosh, Penguin Books)

என் பள்ளிப்பருவத்தில் ஒரு காலகட்டத்தில் ஒரு கனவு அடிக்கடி வந்தது. டம்ளர், டபரா என்று மிகச் சிறிய பாத்திரங்களில் துவங்கி குடம், அண்டா என்று பெரிய பாத்திரங்களாக அதிகரித்துக் கொண்டே போகும் கொள்கலன்களிலிருந்து அவற்றுள் இருந்திருக்க முடியாத அளவில் தண்ணீர் வேகமாக வெளியே கொட்டும். அண்டா போன்ற ஒரு பாத்திரத்திலிருந்து நீர்வீழ்ச்சி போல் நம்ப முடியாத அளவு தண்ணீர் கொட்டும்போது ஒரு பெண் தெய்வம் கால்களைத் தூக்கி மிதிப்பது போல் வந்து வேல் கொண்டு நெஞ்சில் குத்த நிற்கும்போது விழிப்பு வந்து விடும். அதற்கப்புறம் இரண்டு மூன்று நாட்கள் கடும் சுரம் நீடிக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்பது இன்னும் தெரியவில்லை. வழக்கத்துக்கு அதிகமான வெப்பம் காரணமாக கிரீன்லாந்தில் பனியுருகி ஒரு பாலத்தின் கீழே ஓடும் காணொளி ஒன்றை அண்மையில் பார்த்தபோது  அந்த அச்சத்தை மிக மெலிய நினைவாக உணர்ந்தேன்.

ஆங்கிலத்தில் portent என்று ஒரு சொல்லுண்டு. நிமித்தம் என்ற பொருளில் பயன்படுகிறது. ஷேக்ஸ்பியர் ஏறத்தாழ எப்போதும் அதை தீக்குறி என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஜூலியஸ் சீசர் நாடகத்தில், காஸ்கா என்பவர் தான் கண்ட தீக்குறிகளைச் சொல்லிக் கொண்டே வருகிறார். அடிமையொருவன் கரத்திலிருந்து நெருப்பு பொழிந்தது, ஆனால் அவன் கைக்கு ஒன்றும் ஆகவில்லை; வரும் வழியில் சிங்கம் ஒன்று என்னை முறைத்துப் பார்த்தது, ஆனால் என்னை ஒன்றும் செய்யவில்லை; நெருப்பு மனிதர்கள் அங்குமிங்கும் நடந்து போனதைப் பார்த்தோம் என்று பயத்தில் உறைந்திருந்த பெண்கள் சொன்னார்கள்; இரவுப் பறவையொன்று பட்டப்பகலில் கூவிக் கொண்டிருந்தது, என்று சொல்லிக் கொண்டே, வருபவர்,

When these prodigies
Do so conjointly meet, let not men say
‘These are their reasons; they are natural;’
For, I believe, they are portentous things
Unto the climate that they point upon.

அசாதாரண விஷயங்கள் ஒன்றுகூடி வரும்போது “இவற்றுக்கு இவை காரணங்கள், இதெல்லாம் இயல்பான விஷயங்கள்,” யாரும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும், இவை சுட்டும் பருவநிலைக்குரிய தீக்குறிகள் இவை, என்பது போல் இதற்கு பொருள் வருகிறது (‘they are portentous things / Unto the climate that they point upon’ என்பதிலுள்ள அழகை தமிழில் சொல்ல முடியவில்லை.). எந்த பருவநிலைக்குரியவையோ அவை இப்போதே தீக்குறி வடிவில் வந்து விட்டது. இதை வேறு மாதிரி பார்க்கலாம்.

ஷேக்ஸ்பியர் காலத்தில் இப்படியென்றால் தொழிழ்மயமாக்கப்பட்டபின் இவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. சார்லஸ் லயல் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் அமிதவ் கோஷ்: “துவக்க கால வளர்ச்சிக் கட்டத்தில் கிரகணம், பூமி அதிர்ச்சி, வெள்ளம், வால் நட்சத்திரத்தின் வருகை, என்று ஏராளமான இயற்கைத் தோற்றங்கள் புரிந்து கொள்ள முடியாதபோது அசாதாரணம் என்று கருதப்பட்டன, பிற்பாடே அவை இயல்பான வரிசையில் நிகழ்பவை என்று அறியப்பட்டன. இதே பிரமை மனதில் நிகழ்வது தொடர்பாகவும் நிலவுகிறது பேய்கள், பிசாசுகள், சூனியகாரர்கள், மற்றும் பல அபௌதீக அமானுட சக்திகளின் குறுக்கீட்டின் காரணமாக சித்த பேதலிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.” (0). எது தீக்குறியாகவும் தீவினையாகவும் அஞ்சப்படுகிறதோ, அதுவே கணிக்கப்படக்கூடிய தர்க்க ஒழுங்குக்குட்பட்டது என்றறியப்படும்போது சீரான இயல்புக்குட்பட்ட இயற்கை நிகழ்வாகிறது.

portent என்ற சொல்லின் மூலப்பொருள் தேடினால், ‘முன், முன்னோக்கி’ என்று பொருள்படும் por- மற்றும் ‘நீள்தல், விரிதல்’ என்று பொருள்படும் tendere என்ற இரு வேர்கள் கொண்ட சொல் என்று அறிகிறோம். portent என்பது முன்னோக்கி நீள்வது, எதிர்காலத்தின் மீது கவியும் நிழல். சகுனம், நிமித்தம், இத்தன்மை கொண்டது. இதற்கு எதிர்ப்பொருள் கொண்ட, ஆனால் இதற்கு இணையாக பயன்படும் இதன் இரட்டை predict. முதலிலேயே, முன்னே என்று பொருள்படும் pre- மற்றும் உரைத்தல் என்று பொருள்படும் dicere என்ற இரு வேர்களைக் கொண்டது. predict என்பது முன்னுரைப்பது. portent என்பது எதிர்காலத்தை நோக்கி நீளும் நிழல் என்றால் predict என்பதில் எதிர்காலம் இன்றே உரைக்கப்பட்டு யதார்த்த உலகின் சீரான ஓட்டத்தில் அடங்கி விடுகிறது.

அமிதவ் கோஷ், ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற அவரது நூலில், பருவநிலை மாற்றத்தை ஏன் புனைவில் பேச முடியவில்லை என்ற கேள்விக்கு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டபின் பொருளாதாரம், மருத்துவம், அறிவியல் என்று எல்லாமே முன்னேறும்போது நிகழ்தகவு கணிதம் வளர்ந்ததைச் சொல்லி (probability, probare- “to try, to test”) இயற்கை ஒழுங்கை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பூதபௌதிகங்களுக்கு அன்றாட வாழ்வின் விவரிப்பில் இடமில்லாமல் போய் விட்டது, என்கிறார். இலக்கியம் ரெகுலரான வாழ்வை விவரிப்பது. எப்போதும் கதை என்பது வழக்கத்துக்கு மாறான சம்பவத்தை விவரிப்பது, அசாதாரணத்தைச் சொல்வதுதான் காலம் காலமாக கதையென்று இருந்து வந்திருகிறது. ரெகுலரான வாழ்க்கையை மட்டும்தான் இலக்கியம் விவரிக்கும் எனும்போது கதையின் தவிர்க்க முடியாத கூறான அசாதாரணத்தைச் சொல்லுதல் பின்னுக்கு தள்ளப்படுகிறது, உணர்த்தலாக மாறுகிறது. மானுடமல்லாதவற்றுக்கு குரலளிப்பது எப்படி, என்பதுதான் பருவநிலை இலக்கியத்தை எழுத முற்படும்போது எழுதும் கேள்வி என்கிறார் அமிதவ் கோஷ்.

ஆனால் இன்றும்கூட தமிழ் வாழ்வு இலக்கியம் சொல்வது போல் பகுத்தறிவுக்கு உட்பட்ட, பூதபௌதிகங்கள் நீங்கிய நிலையில் இல்லை. சென்ற மாத துவக்கத்தில் தன் குலதெய்வமான செனப்பிரட்டி செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டத்துக்குச் சென்றிருந்தார் என் மனைவி. ஒரு குதிரை தலையசைத்து அனுமதித்தபின்தான் தேர் கிளம்பும், ஆனால் குதிரை தலையசைக்க மறுத்து விட்டது. மாலை சாயும்போது ஒருவருக்கு சாமி வந்து வேறோரிடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்தால்தான் தேர் புறப்படும் என்று சொன்னது. உடனே அங்கிருந்து சிலர் அந்தக் கோவிலுக்குச் சென்று (அது சாலையோரம் உள்ள நடுகல் போன்ற கோவில்) பூஜை செய்து முடித்த அக்கணமே இங்கு குதிரை தலையசைத்து, தேர் கிளம்பியது. இதைச் சொன்ன என் மனைவி, செல்லாண்டியம்மனின் சக்தியை வியந்தார். “யார் இந்த செல்லாண்டியம்மன்?”, என்று கூகுள் செய்தபோது, சேர சோழ பாண்டியர்களுக்கு அவரவருக்குரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுத்து தமிழகத்தில் அமைதி நிறுவிய தெய்வம் செல்லாண்டியம்மன் என்பது தெரிந்தது.

நம் அன்றாட வாழ்க்கையில் கோள்களும் அவற்றின் ஏவலாட்களான ஐம்பூதங்களும் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பேசும்போதும்கூட மழை பெய்தது, காற்று அடித்தது, கடல் சீற்றம் கொண்டது என்று அவற்றுக்கு கர்த்துருத்துவம் கொடுத்துதான் பேசுகிறோம். நாய், பூனை, காகம், யானை, பாம்பு என்று எல்லா பிராணிகளுக்கும் விருப்பு, வெறுப்பு, சூடு, சொரணை, எல்லாம் உண்டு என்பது போல்தான் அவற்றோடு பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் நடந்து கொள்கிறோம். ஆனால் இலக்கியம் என்று வரும்போது இவையெல்லாம் ஊமையாக்கப்பட்டு, இயந்திரகதிக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. இவையும் குரலெடுத்து பேசும்போதுதான், இவ்வுலகம் குறித்து விசித்திரமும் மர்மமும் கலந்த, திகைப்பச்சத்தை உருவாக்கக்கூடிய, uncanny என்று சொல்லப்படும் உணர்வு நமக்கு வரும் என்கிறார் அமிதவ் கோஷ். அப்போது, மானுட எல்லைகள் புலப்படும், ஒரு தன்னடக்கம் உருவாகும், இச் சீரான உலகின் பின் கொதிப்பும் கொந்தளிப்புமாய் பூத பௌதிகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அவை எந்நேரமும் நம் வாழ்வில் குறுக்கிடலாம் என்ற உண்மை புரியும் என்கிறார் அவர். எல்லாம் சீராக இயங்கும் என்ற நம்பிக்கை மனித வரலாற்றில் எப்போதும் இல்லாத, ஆனால் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மட்டுமே உள்ள, இயற்கையை நாம் வென்று விட்டோம் என்ற எண்ணத்தில் உருவான ஒரு பித்துக்குளித்தனம். உண்மையில், பூதபௌதிகங்கள் பழி வாங்கக்கூடியவை, நம்மை பலி கொள்ளக்கூடியவை என்பதுதான் பருவநிலை மாற்றத்தின் பாடம்.

அமிதவ் கோஷின் ‘கன் ஐலண்ட்’ நாவல் படித்தபோது ஒன்றும் சுவாரசியப்படவில்லை, முதலில் கதை இன்ன வகையென்று புரிந்து கொள்வதே தடுமாற்றமாக இருந்தது, அப்புறம் படித்து முடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது. அதற்கப்புறம் நாவலை பல கோணங்களில் நினைத்துப் பார்த்தபோதும் அது ஒன்றும் அவ்வளவு நல்ல நாவலாகத் தோன்றவில்லை. ஒரு சமயம், இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெற்ற பதின்பருவத்தினருக்காக எழுதப்பட்ட நாவலோ என்று தோன்றியது- இதன் நாயகன் என்று சொல்லத்தக்க திப்புவின் கதை நாவலின் மையத்தில் இருக்கிறது, பதின்பருவத்தினர் அவனது விழைவுகள் மற்றும் இன்ப துன்பங்களுடன் தங்களை எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் (கதைசொல்லி பெரும்பாலும் பார்வையாளராக இருக்கிறார், அந்த பதின்பருவ வாலிபனே செயலூக்கம் கொண்டவனாக இருக்கிறான்). டான் ப்ரௌன் சாயல் கொண்ட இந்தக் கதையில் ஏராளமான தன்னிகழ்வுகள் இருக்கின்றன, அவை பொருள் பொதிந்தவையாகவும் அமைந்திருக்கின்றன. எல்லாம் சுவிட்ச் போட்ட மாதிரி அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பவசமாய் நடக்கின்றன. அதிலும் விசேஷமாக, கதையின் முடிவில் யார் யார் யாருடன் சேர வேண்டுமோ அவர்களுடன் சேர்கிறார்கள், யார் யார் பிரிய வேண்டுமோ அவர்கள் பிரிகிறார்கள். பாம்பு என்றால் பாம்பையே இடுப்பில் கட்டிக் கொண்டு ஆடுவீர்களா, என்று புதுமைப்பித்தன் கதையில் கேட்டது மாதிரி மாயம் என்பது லிடரலாகவே கதையில் நிகழ்கிறது. கதைசொல்லியின் தோழிக்கு அவரது இறந்த மகள் உணர்த்தல்கள் அளித்து வழிகாட்டுகிறாள். பதின்பருவ வாலிபன் ஒரு பாம்பு கடித்தபின் அடிக்கடி வலிப்பு வந்து எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் பெறுகிறான். இதில் எதுவும் நம்பத்தக்கதாக இல்லை.

எல்லாவற்றுக்கும் மேல், இந்த நாவல் மேலை நாட்டவர்களுக்காக, அதிலும் குறிப்பாக காகசியர்களுக்காக எழுதப்பட்ட உணர்வு தருகிறது. பருவ நிலை மாற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்படும் வங்கதேச அகதிகள் இந்தியாவில் குடியேறி வருவது தீவிர அரசியலாகி யாருக்கு குடியுரிமை உண்டு, எப்படிப்பட்ட குடியுரிமை உண்டு என்று இந்திய அடையாளத்தைக் குறுக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்தக் கதையில் வங்க தேச அகதிகள் வெனிசில் குடியேறுகிறார்கள். அதையொட்டி இனவாதம், காலனியாதிக்கம் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

மேலை நாட்டவர்களுடன் இந்த நாவல் உரையாடுகிறது என்ற எண்ணம் ஒரு புறம், இன்னொரு புறம், இந்தப் பிரச்சினை இந்தியாவைக் களமாய்க் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற வருத்தம்- என்ன இருந்தாலும் வரலாற்றைப் பார்க்க வேண்டும். போகவும், மேற்கில் குடியேறக்கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் குடிபுகக் கூடிய வங்க தேசத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தவிர, அமிதவ் கோஷ் வங்காளி, இந்தியர், அண்மையில் ஞானபீட விருது பெற்றவர், தேசீய அடையாளமெனும் எருதின் கொம்பைப் பிடித்து பொருதியிருக்க வேண்டும். பிரச்சினையின் குத்திக் கிழிக்கும் கூர்முனையைத் தவிர்த்து, ஐரோப்பிய லிபரல்களிடையே ஒருமித்த கருத்தாய் உருவாகியுள்ள எளிய வாசலில் வெளியேறி விட்டார்- பருவநிலை மாற்றத்தின் பலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும், காலனியத்தாலும் உலகமயமாக்கச் சுரண்டலாலும் வளமையடைந்த மேற்கத்திய தேசங்கள் மூன்றாம் உலகின் ஏதிலியாக்கப்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு ஆதரிக்கும் தார்மீக கடமை கொண்டவை என்பதில் லிபரல்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. எனவே, பருவ நிலை மாற்றத்தால் அகதிகளாக்கப்பட்டவர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியர்களுக்கும் உண்டு என்று இங்கு நடக்கும் விஷயங்கள் குறித்து குற்றம் சொல்வதைவிட எல்லா பழியையும் ஐரோப்பியர்கள் மீது போட்டுவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லாமல் முடிந்தது சோலி. இந்திய வரலாற்றின் பின்னணியில் இந்தியாவைச் சுற்றியுள்ள தேசங்களின் அகதிகளிடம் இந்தியா காட்டும் அணுகுமுறை என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட சூழலைக் கதைக்களமாய்க் கொண்டு பார்த்திருக்க வேண்டிய அமிதவ் கோஷ் இந்தியர்கள் நமக்கு மிக முக்கியமாய் இருக்கக்கூடிய பிரச்சினையைப் பேசாமல் தவிர்த்து விட்டார் என்று தோன்றுகிறது.

கதைக்களம் சார்ந்து இதையும், கதைகூறல் சார்ந்து அதன் deux ex machina விஷயங்களையும் ‘கன் ஐலண்ட்’ நாவலில் முக்கியமாய் விமரிசிக்கத்தக்க விஷயங்களாய்ச் சொல்லலாம். பகுத்தறிவைக் குறைத்து மதிப்பிட்டு, மூடநம்பிக்கையை நியாயப்படுத்தும் வகையில் நாவல் இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் அமிதவ் கோஷ் தர்க்க ஒழுங்கை ஒரு மிஸ்டிக் ஆராவில் போர்த்து அடிப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் தன்னிகழ்வுகளும் மிஸ்டிக் பாவனைகளும் நமக்கு அளிக்கும் ஒவ்வாமைகள் அவரது ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற மிகச் சிறிய, ஆனால் வாசிக்கத் தவறக்கூடாத அபுனைவு நூலை வாசிக்கும்போதுதான், எல்லாம் ஒரு கருத்தாய்த்தான் சொல்லியிருக்கிறார், என்ற புரிதலை அளிக்கின்றன. ‘கன் ஐலண்ட்’ படிப்பவர்களுக்கு ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ ஒரு அவசிய உரை நூல், இரண்டும் இரட்டைப் பிரதிகள் என்று சொல்லலாம். ஒன்று மற்றதுக்கு வெளிச்சம் தருகிறது, அமிதவ் கோஷை ஒரு முழுமையான புனைவெழுத்தாளராக நினைக்கச் செய்கிறது (இதனால் ‘கன் ஐலண்டி’ன் போதாமைகள் மாயமாய் மறைவதில்லை, ‘ஏன் இப்படி எழுதியிருக்கிறார்’ என்ற புரிதல் கிடைக்கிறது. ‘கன் ஐலண்ட்’ ஒரு குறைபட்ட நாவல் என்றால் அதற்கு காரணம் அறியாமையோ தேர்ச்சியின்மையோ அல்ல).

‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அமிதவ் கோஷை ஒரு அசாதாரண, ஒரிஜினல் சிந்தனையாளராகக் காட்டுகிறது. ‘கன் ஐலண்ட்’ நாவலிலும்கூட கதை நிகழ்வுகளைவிட கருத்து நிலை உரையாடல்கள் மிக அருமையாக அமைந்திருக்கின்றன. ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’டில் இலக்கியம் மற்றும் சிந்தனை குறித்து அமிதவ் கோஷ் பேசுவதை ‘கன் ஐலண்டி’ல் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஒன்று எப்படி இருந்திருக்க வேண்டும், எங்கு தவறு நிகழ்ந்தது என்பதைச் சொல்வதும் அதற்கு தீர்வு காண்பதும் முற்றிலும் இரு வேறு விஷயங்கள். இந்த இடைவெளியே அபுனைவில் அமிதவ் கோஷ் தொட்ட உயரத்தை கன் ஐலண்டில் தொட முடியாததற்கு காரணமாகிறது. இது அவரது இயலாமையும்கூட அல்ல, அவர் சொல்ல வரும் விஷயத்தின் இயல்பு அப்படி. மிக முக்கியமாக, இலக்கியத்தின் கூறுமொழிக்கும் கார்பன் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.

அதுவரை நிலையில்லாமல், தீர்மானமான உருவமில்லாமல் இருந்த கதைகூறல், கார்பன் பொருளாதாரம் அளித்த பாதுகாப்பின் காரணமாக சீரான வடிவத்தை நோக்கி நகர்கிறது என்கிறார் கோஷ். அதுவரை கதையாடலில் இடம் பெற்ற அமானுட விஷயங்கள், இயற்கையின் இடையூறுகள், தேவர்கள் தெய்வங்கள் அசுரர்கள் என்று மானுடமல்லாத சக்திகளின் குறுக்கீடுகள், செடி கொடி விலங்குகளின் தாக்கம், அசந்தர்ப்ப நிகழ்வுகள், ஊர்ப்பட்ட விஷயங்களைப் பேசுதல் என்று எல்லாவற்றையும், காலம் சீரான வேகத்தில் மேலும் மேலும் நல்ல உயரங்களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது என்ற கார்பன் பொருளாதாரத்தின் பாதுகாப்பு அளித்த நம்பிக்கை அப்புறப்படுத்தி விட்டது என்கிறார் அமிதவ் கோஷ். அசாதாரண விஷயங்களைப் பேசி வந்த பழங்கதைகள் கண்டிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி அசாதாரணங்களை கூறாமல் கூறும் நவீன கதைகூறல் பூர்ஷ்வா வாழ்க்கையின் சீரான ஓட்டத்துக்கு இசைவாய் இருந்ததால் விதந்தோதப்படுகிறது. மைக்கேல் மதுசூதன் தத்தாவை இப்படி விமரிசிக்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி: “திரு. தத்தாவுக்கு… அமைதி தேவைப்படுகிறது. மிகச் சிறு சலனத்துக்கும் தேவையில்லாத இடத்தில் காற்று சீற்றம் கொண்டு தம்மால் ஆன மட்டும் உரத்து ஒலிக்கிறது. அப்படி எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லாதபோதும் மேகங்கள் கூடி பெருவெள்ளம் பொழிகிறது; அனைவருக்கும் அதன் குறுக்கீடு ஒவ்வாமையளிக்கும் போழ்தில் கடல் வெஞ்சினம் கொண்டு அச்சுறுத்தும் பேருருவம் பூண்கிறது.” (1)

நவீன நாவலின் செயற்கைத்தன்மையை இப்படி அடையாளப்படுத்துகிறார் அமிதவ் கோஷ்- “நவீன நாவல்… தன் மையத்தில் உள்ள அசாத்தியத்தை எதிர்கொள்ளச் செய்யப்படுவதேயில்லை. நிகழ்வுகளின் கட்டுமானச் சாரத்தை மறைப்பதே அதன் செயல்பாட்டுக்கு தொடர்ந்த தேவையாய் இருக்கிறது. இதுதான் குறிப்பிட்ட ஒரு வகை கதைகூறலை நவீன நாவலாக்குகிறது. ஆயின், இங்கிருக்கிறது, ‘யதார்த்த’ நாவலின் நகைமுரண்: யதார்த்தத்தை பிரசன்னப்படுத்தும் அதன் அசைவுகள் உண்மையில் நிதர்சனத்தை மறைக்கின்றன” (2)

பருவநிலை மாற்றத்தை ஏன் இலக்கியம் எதிர்கொள்ள முடியவில்லை என்பதைப் பேசும்போதுதான் இதையெல்லாம் எழுதுகிறார் அமிதவ் கோஷ். அசாதாரணங்கள், நடக்க முடியாத விஷயங்கள், நினைத்தே பார்க்க முடியாதவை, புல்லரிக்கச் செய்யும் வினோத நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்துக்கு உரியவை. கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட சாதாரண அன்றாட யதார்த்தத்தின் பின்னணியில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடப்பதை தாழ்ந்த குரலில் உணர்த்தும் நவீன நாவல்கள் இவற்றுக்கு விரோதமானவை. இந்தப் பார்வை அவரை ஆச்சரியமான முடிவுக்கு கொண்டு செல்கிறது- இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய எழுத்தாளர்கள் யாரெல்லாம் நீண்ட தாக்கம் செலுத்தினார்கள் என்று பார்த்தால் அதன் மாபெரும் எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள், ஆர்தர் சி. கிளார்க், ரேமண்ட் பிராட்பரி, பிலிப் கே. டிக்தான் எஞ்சி நிற்கிறார்கள் என்கிறார் அவர் (3). இதைத் தொடர்ந்து அவர் மிகக் கடுமையான சாடலில் நவீனத்துவ எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட அனைவரையும் நிராகரிக்கிறார். நம் சூழலில் விரைந்து நிகழும் மாற்றங்களை எழுதிய ஆங்கில இலக்கியவாதிகள் யார் என்று பார்த்தால் தேட வேண்டியிருக்கிறது, ஒரு சில பெயர்களையே குறிப்பிட முடிகிறது – ஜே. ஜி. பல்லார்ட், மார்கரெட் அட்வுட், கரட் வோனகட் ஜூனியர், பார்பரா கிங்சால்வர், டோரிஸ் லெஸ்ஸிங், கோர்மாக் மக்கார்த்தி, இயன் மக்ஈவன், டி. கோரகெஸ்ஸான் பாய்ல் (4).

மற்றவர்கள்? பழைய பட வில்லன்கள் சிலர் ஒவ்வொரு நாளும் சிறிது பாம்பு விஷமேற்றி தமக்கு பாம்புக் கடிக்கு எதிரான வீரியம் வளர்த்துக் கொள்வது போல் அச்சுறுத்தலால் பலம் பெறும் விஷயங்களை இணையத்தின் மூர்க்கச் சிந்தனையாளர் நிஸ்ஸிம் நிக்கலாஸ் தலெப் ஆன்ட்டி-ஃப்ரஜில் என்று விவரிக்கிறார்- அது போல் கடந்த இரு நூற்றாண்டுகளின் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள் ஏறத்தாழ எல்லாரும் கார்பன் பொருளாதாரத்தின் குறைகளைக் கடுமையாக விமரிசித்து அதை வலுவாக்கிய துணையாளர்கள். சீரான வாழ்க்கை, கட்டுக்கோப்பான அமைப்பு, பகுத்தறிவு, தர்க்கம், தொடர்ந்து முன்செல்லும் காலத்தின் அம்பு என்ற மாயத்தின் மோகத்தில் இவர்கள் இயற்கையின் தவிர்க்க முடியாத கூறாக இருந்த அசாத்திய நிகழ்வை மறைத்து கார்பன் பொருளாதாரத்தின் சீர்கேட்டை நிராகரிக்கத் தவறி விட்டார்கள் என்கிறார் அமிதவ் கோஷ். ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ இது மட்டுமல்ல, குறிப்பிட்ட சில வசதியான பகுதிகளை மட்டுமே இலக்கியம் சார்ந்து இங்கு கையாண்டிருக்கிறேன்.

இதற்கு மாற்றாகவே அவர் முதலில் சொன்ன விஷயங்களை ‘கன் ஐலண்டி’ல் பயன்படுத்துகிறார்- அசாத்தியங்கள், இயற்கையின் உடன்நிகழ்வுகள், உணர்த்தல்கள், மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கக்கூடிய விஷயங்கள். ஆனால் இவை எல்லாமே யதார்த்த உலகின் பின்னணியில், அறிவியலும் தர்க்கமும் பகுத்தறிவும் தொடர்ந்து விவாதிக்கப்படும் பின்னணியில், நிகழ்வதாலோ என்னவோ ஒரு செயற்கைத் தன்மை கொண்டு ஒட்டாமல் போகிறது. பருவநிலை மாற்றத்தின் சவால்களை மனதில் கொண்டு கடந்த இரு நூற்றாண்டு இலக்கியம் மற்றும் சிந்தனை மரபுகளை, நம் பகுத்தறிவு நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அளவில் சிறிதாக இருந்தாலும் ஒரு மாபெரும் படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. அதன் பொருளாழமும் பார்வை விரிவும் கருத்துகளை தொகுத்துக் கொள்ளும் கற்பனையாற்றலும் நம்மை திகைக்கச் செய்கின்றன. ‘கன் ஐலண்ட்’ அந்த உயரங்களைத் தொடத் தவறுகிறதுஎன்றால் அது அமிதவ் கோஷின் குறை என்றும்கூட சொல்ல முடியாது.

எப்போதும் கதைமொழி நம் பிரக்ஞையின் வெளிப்பாடாகவே அமைகிறது. சீரான வாழ்க்கைக்கும் சாத்தியங்களின் எல்லைகளுக்குள்ளும் வாழ்ந்து, அசாதாரணங்களை அபூர்வ அனுபவமாக்கி விட்ட நவீன மனம் கதைகளிலும் அதைத்தானே மெய்யெனக் கொள்ளும்? பருவ நிலை மாற்றம் கண்களை நீக்க முடியாத நிதர்சன துலக்கம் கொள்ளும்போது இந்நிலை மாறலாம், நம் கதைமொழியும் மாறலாம். ஆனால் அதற்கு முன் கதைமொழியை மாற்றிக் கொள்வதால் வேறொரு தரிசனத்தை அளிக்க முடியும் என்று நம்புகிறார் அமிதவ் கோஷ். இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் அவர் என்பது என்னளவில் சந்தேகத்துக்குரியது. ஆனால் இதுவரை இது குறித்து வந்துள்ள புல்லரிப்பு புளகாங்கித போற்றுதல்களைப் பார்க்கும்போது என் மனம்தான் நவீன கருத்தாக்கங்களால் கெட்டித்துப் போய் விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது, அதையும் சொல்ல வேண்டும்.

(0) “So, as Gould so beautifully demonstrates, Lyell triumphed over his adversaries by accusing them of being primitive: ‘In an early stage of advancement, when a great number of natural appearances are unintelligible, an eclipse, an earthquake, a flood, or the approach of a comet, with many other occurrences afterwards found to belong to the regular course of events, are regarded as prodigies. The same delusion prevails as to moral phenomena, and many of these are ascribed to the intervention of demons, ghosts, witches, and other immaterial and supernatural agents.’”

(1) ‘Mr. Datta . . . wants repose. The winds rage their loudest when there is no necessity for the lightest puff. Clouds gather and pour down a deluge, when they need do nothing of the kind; and the sea grows terrible in its wrath, when everybody feels inclined to resent its interference.’

(2) But the modern novel, unlike geology, has never been forced to confront the centrality of the improbable: the concealment of its scaffolding of events continues to be essential to its functioning. It is this that makes a certain kind of narrative a recognizably modern novel. Here, then, is the irony of the ‘realist’ novel: the very gestures with which it conjures up reality are actually a concealment of the real.

(3) If a list were to be made of the late-twentieth-century novelists whose works remain influential today, we would find, I suspect, that many who once bestrode the literary world like colossi are entirely forgotten while writers like Arthur C. Clarke, Raymond Bradbury and Philip K. Dick are near the top of the list.

(4) It is when I try to think of writers whose imaginative work communicated a more specific sense of the accelerating changes in our environment that I find myself at a loss; of literary novelists writing in English only a handful of names come to mind: J.G. Ballard, Margaret Atwood, Kurt Vonnegut Jr., Barbara Kingsolver, Doris Lessing, Cormac McCarthy, Ian McEwan and T. Coraghessan Boyle.

க்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்

க்ளைமேட்’, சிறுபத்திரிகை, ஆசிரியர் வியாகுலன், இணையாசிரியர் துரை அறிவழகன், விலை ரூ.30, ‘கலைவெளி மாத இதழ்’, முதல் பிரதி மே மாதம் வந்திருக்கிறது. ‘சுபமங்களா’ போன்ற ஒரு இடைநிலை இதழாக தங்களை வரித்துக் கொள்கிறார்கள்– “தீவிர மனநிலைக்கும் ஜனரஞ்சக மனநிலைக்கும் இடையே இயங்கும் ஓர் வட்டம் தமிழக வாசகப் பரப்பில் உள்ளது என்பதை பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் புறக்கணித்தும் விடுகிறார்கள்”இந்த வெறுமையை இட்டு நிரப்பும் ‘க்ளைமேட்’. “அனைவருக்குமான இதழ், அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களுக்குமான இதழ்…” என்று கோமல் கொண்டிருந்ததைப் போல், “‘க்ளைமேட்’ மாத இதழ் புதிய எழுத்தாளர்களையும் புதிய வாசகர்களையும் கண்டடைந்து நவீன இலக்கியப் பரப்பில் புத்தம் புதிய பக்கங்களை தொடங்க உள்ளதுஅனைத்து தரப்பு எழுத்தாளர்களிடமிருந்தும் படைப்புகளை எதிர்நோக்கியுள்ளோம்,” என்று எழுதுகிறார்கள் (நண்பர்கள் klymatte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பிப் பார்க்கலாம்).

முதல் இதழ் நன்றாகவே வந்துள்ளது. எஸ். ராமகிருஷ்ணன், ‘புருவம் இல்லாத பொம்மைகள்,’ என்ற கதையையும் யுவன் சந்திரசேகர், ‘புழுதிப் புயல்’ என்ற கதையையும் எழுதியுள்ளார்கள். இரண்டு கதைகளுமே இடைநிலை வாசகர்களை புதிர்ப்படுத்தும் என்று நினைக்கிறேன் (“தனிமனிதனின் அகச் சிந்தனைகளையும் அம்மனிதன் சார்ந்துள்ள குழுக்களின் தத்துவார்த்த சிந்தனைகளையும் தாங்கி வரும் சிறுபத்திரிக்கைச் சூழல்…” என்பதை வைத்துப் பார்த்தால் சிறுபத்திரிக்கை ஆர்வலர்களுக்கான கதைகள் இவையல்ல என்று சொல்ல வேண்டும், ஆனால் இத்தன்மைகள் இல்லாத காரணத்தால் தீவிர இலக்கிய முத்திரை குத்தப்படக்கூடாத கதைகளாகி விடுவதில்லை இவை. யதார்த்த கதைகளுமல்ல, யதார்த்தத்திலிருந்து தப்பிக்க உந்தும் விழைவேக்கத்தை நிறைவு செய்யும் கதைகளுமல்ல– “இந்தக் கதையில் என்ன சொல்ல வரார்? உண்மையில் என்னதான் நடந்தது?” என்று நினைக்கச் செய்கின்றன.)

இந்த இரு கதைகளுக்கு இணையாக இரண்டு நேர்காணல்கள் இருக்கின்றன. ‘வெளிச்சம் என் உயிர்’ என்ற தலைப்பில், நடேஷ் முத்துச்சாமியின் நேர்முகமும், “எனக்கு சினிமாக்காரர்கள் போல் கதை சொல்லத் தெரியாது” என்ற தலைப்பில், வண்ணநிலவன் நேர்முகமும் இடம் பெற்றிருக்கின்றன. நடேஷ் நேர்முகம் பேச்சு நடையில் நிறைய ஆங்கிலச் சொற்களுடன் கொச்சைத் தமிழுக்கு அஞ்சாது அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு. ஆனால் ஆங்கிலச் சொற்களை ஆங்கில மொழியில் அச்சிட்டிருக்க வேண்டாம், எழுத்துரு கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது என்பது போக, எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன– “கலரு வந்து deel பண்ணினது ரொம்ப லேட்டு” (இங்கு லேட்டு ஏன் தமிழ்?), “அவன் lyricsamத்தை தூக்கி வெளியே போட்டான்,” “Mathematicalலா convent பண்ணிருவான்,” என்பதெல்லாம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளுக்கும் பாதகம். மிகவும் அனுபவித்து ரசிக்க வேண்டிய நேர்முகத்தை இம்சையான வாசிப்பாக்கி விடுகின்றன இந்த பிழைகள். வண்ணநிலவன் பேட்டி பற்றி சொல்ல வேண்டாம், ஆரம்ப நிலை வாசகன் எடுத்துக் கொள்ள ஏதாவது ஒன்று ஒவ்வொரு பேட்டியிலும் இருக்கும். இதிலும் இருக்கிறது– “தமிழில் எவ்வளவோ படைப்பாளிகள் கவிஞர்கள் இன்று உலகத்தரத்தில் இயங்குகிறார்கள் என்பதை நான் பெருமையுடன் பார்க்கிறேன். ஆனால் எப்பேர்பட்ட படைப்பும், கிணற்றில் போட்ட கல் மாதிரி விமரிசகர்கள் இல்லாமல் தடுமாறுகிறதே, இந்த நேரந்தான் க.நா.சு.வை எனக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றுகிறதுகநாசு மாதிரி, வல்லிக்கண்ணன் மாதிரி, திகசி மாதிரி மறுபடியும் தமிழில் ஒரு விமரிசனச்சூழல் உருவாக வேண்டும் என்பதே இன்றைக்கு நன்றாக எழுதிக் கொண்டிருக்கிற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு முக்கியமான தேவையாகவே நான் கருதுகிறேன்”. விமரிசனம் என்றால் போட்டுத் தாக்க வேண்டாம், நம் குழுவுக்கு வெளியே உள்ள ஒருத்தர் ஒரு கதையோ கவிதையோ நன்றாக எழுதினால், ‘நன்றாக இருக்கிறது’ என்று ஒரு வார்த்தை, ‘ஏன் நன்றாக இருக்கிறது’ என்று இன்னும் சில வார்த்தைகள் சொன்னால் போதும். சமூக ஊடகத்தில் இதற்கே நல்ல விளைவுகள் இருக்கும். பதாகை வாசகர்களாவது இதை தவறாமல் செய்ய வேண்டும்.

இந்த நான்கு போக, பாவண்ணன், கே.என். செந்தில் இருவரும் தம் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். பாவண்ணன் கட்டுரை தலைப்புக்கேற்ப, ‘மாபெரும் கனவு’, கனவுகளை தேக்கி வைத்த வாக்கியங்கள் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்பனை தோய்ந்த நடை, “ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு காட்சி அல்லது ஒரு அசைவு என்னைத் தூண்டி விடும்போதெல்லாம் மின்னேற்றம் பெற்றதும் காந்தத் துண்டென மாறி விடுகிறது மனம். அதுவே கதை பிறக்கும் தருணம்.” கொஞ்சம் சோதிக்கிறது என்றாலும் ஒரு கவி மனதின் உரைநடையை இங்கே பார்க்க முடிகிறது– “:அப்படித்தான் நானும் ஓர் எழுத்தாளனாக மலர்ந்தேன். இரவெல்லாம் சொல்லரும்புகளைக் கோர்த்துக் கோர்த்து என் முதல் சிறுகதையை ஒரு மாலையென புனைந்து முடித்தேன். இன்னும் இருள் பிரியாத காலையில் குயில்களின் பாடல் கேட்டது. என் நெஞ்சில் ஊற்றெடுத்த உல்லாசத்தையே அக்குரல் பிரதிபலித்தது. வானத்தில் ஆழ்ந்து பின்னோக்கிச் செல்லும் நட்சத்திரங்களையும் அவற்றை நோக்கிப் பறந்து செல்லும் காக்கைகளையும் பார்த்துப் புன்னகைத்தேன். வானமே, மேகமே, காற்றே, பறவைகளே, மரங்களே, மலர்களே, பாருங்கள், பாருங்கள், என என் கதையைக் காட்டி பெருமிதமடைந்தேன்.” இந்தக் காலத்தில் இப்படியும் எழுதுகிறார் ஒருவர்! ஆனால் இதுவும் இது போல் இன்னும் பலவும் வெவ்வேறென வேண்டும்.

தன் கதைகளைப் பற்றி எழுதியுள்ள கே. என். செந்தில் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்– “ஒரு போதும் மோஸ்தரான மேற்பூச்சு கொண்ட மொழியினால் மட்டும் அமைந்த கதைகளை எழுத முயன்றதில்லை. மொழியினால் நிற்கும் கதைகளை எழுதியிருக்கிறேன். வளவளவென, சோடையாக மொழி அமையுமென்றால் அதை எழுதாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணமே எனக்குள்ளது. ஈராயிரம் வருட மரபு கொண்ட மொழியில் எழுத வரும்போது அம்மொழியை கைகொள்வது சார்ந்து, வலுவாக பயன்படுத்துவது சார்ந்து எழுந்த யோசனைகள் இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.” கதைகளைப் பற்றி சொல்லவில்லை, இது போன்ற கட்டுரைகள் எழுதும்போது கே.என். செந்தில் ஷோல்டரைச் சற்று இறக்கிக் கொள்வது நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருக்கும்.

இந்த ஆறு போக, சோ. தர்மனின் “கூத்துக் கலை: சிறந்த கதைசொல்லி” என்ற கட்டுரை வந்திருக்கிறது. இது ஒரு தொகைநூலில் இடம் பெரும் சிறப்பு கொண்டது. “என்னுடைய குழந்தைப் பருவத்தில் பகவான் ஸ்ரீராமனின் தோளில் உட்கார்ந்து பயணப்பட்டிருக்கிறேன். லட்சுமணனின் கைகளில் தவழ்ந்திருக்கிறேன். சீதையின் மடியில் உறங்கியிருக்கிறேன். தனியே சுழற்றி வைக்கப்பட்ட ராவணனின் பத்து தலைகளும் அனுமனின் நீண்ட வாலும் விகார முகமும் என் விளையாட்டுப் பொருட்களாய் இருக்க, சலங்கை கெச்சங்களின் தாளலயத்துடன் ஆடும் ராமாயணக் கும்மியாட்டம் நடைபெறும். என்னுடைய அப்பாதான் கதாநாயகன் ஸ்ரீராமன். என் சித்தப்பா லட்சுமணன். மாமா ராவணன் வேஷம்.” கூத்துக்கலையின் தொடர்ச்சியாகவே தன் கதைசொல்லலைக் காண்கிறார் சோ. தருமன். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான சோ. தருமன், தன் புனைவில் கூத்துக்கலையின் தாக்கம் பற்றி சொல்லியிருப்பது மட்டுமன்றி, திராவிட இலக்கியம் மற்றும் சுதந்திரகால லட்சியவாத எழுத்து தன்னை ஈர்த்து சலிப்படையச் செய்தது பற்றி சொல்லியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் (இதில் திராவிட இலக்கியம் பற்றி மிகக் கடுமையாகவே சொல்லியிருக்கிறார்).

ஏழாச்சா, எட்டாவதாக, நபகோவ் மொழியாக்கம் பற்றி கூறியுள்ளவை, மற்றும் அவர் அவ்வாறு கூறியதன் பின்னணி குறித்து ஜி. குப்புசாமி எழுதியுள்ள ‘மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள்,’ என்ற கட்டுரை விரிவாக இருக்கிறது. இதில் அவர், தான் சொல்ல வரும் விஷயங்களை தெளிவாக எழுதியிருக்கிறார். நபகோவ் பற்றி ஒரு நல்ல அறிமுகம், ருஷ்ய மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்புலம், நமக்கு தெரிய வருகிறது.

இதெல்லாம் போக சா. தேவதாஸ் சூடான் நாட்டுக்கதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஸ்ரீநேசன், ராணி திலக், . பெரியசாமி, அதீதன், ஸ்ரீஷங்கர் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அப்புறம் கடைசியாக ஒன்று. ‘க்ளைமேட்’ இதழின் ஆசிரியர் வியாகுலனின் கவிதை தொகுப்பு பற்றி ஸ்ரீ ஹரி ஒரு நூல் விமரிசனம் எழுதியிருக்கிறார், இதை முதல் இதழிலேயே பதிப்பித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒருவர் எவ்வளவு சிறந்தவராகவோ சாதாரணமானவராகவோ இருந்தாலும் ஒருத்தரைப் போல் ஒருத்தர் இருக்க முடியாது, ஒருத்தர் செய்ததை இன்னொருத்தர் செய்ய முடியாது. இந்த இதழில் உள்ள அக்கறையும் ஆர்வமும் ரசனை தேர்வுகளும் இனி வரும் இதழ்களிலும் இருந்தால், ‘சுபமங்களா’ செய்ததைச் செய்கிறதோ இல்லையோ, ‘க்ளைமேட்’ செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்று சில ஆண்டுகளில் இன்னும் சில பேர் நினைக்கக்கூடும்.

(க்ளைமேட், மாத இதழ், 66 பக்கங்கள், ரூ.30, 14 A, அப்பர் தெரு, காமகோடி நகர், வளசரவாக்கம்,சென்னை 600087, செல்– 88258 99791, மின்னஞ்சல் முகவரி – klymatte@gmail.com)

பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்

அவளுக்கு சிறு வயதிலேயே குளூகொமாவும் காடராக்டும் வந்து விட்டது, ஆனால் அவள் எப்படியே சமாளித்துக் கொண்டிருந்தாள், தொடர்ந்து சின்னச் சின்ன கோலங்கள் கொண்ட க்ரோசட் பின்னினாள், கிளைப் பின்னலில் சிறு பறவைகளையும் மண்ணிலிருந்து சுருண்டு வெளியே எழும் டூலிப்கள் ஒன்றையொன்று சுற்றிக் கொள்வதையும் ஓவியங்களாய் துணியில் நெய்தாள். அது அவளது ஏழு குழந்தைகளுக்கும் அவர்களது துணைகளுக்கும் அந்த ஏழு குழந்தைகளின் பத்தொன்பது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியளித்தது.

ஆனால் இன்று பார்வை அவளுக்கு தொந்தரவாக இருக்கிறது. சமையலறை சன்னலில் நின்று, மலைகளை நோக்கி தலையை உயர்த்திப் பார்ப்பவள், எங்கே மலைகள் முடிகின்றன, எங்கே வானம் துவங்குகிறது என்பதைப் பிரித்துப் பார்க்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள். நேற்றிரவு அவளுக்கு வினோதமான கனவு வந்திருந்தது, உள்ளே எங்கேயோ இன்னும் அது அவளுள் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் அந்தக் கனவை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்; சூரியன் நகர்வதாய் அவள் கனவு கண்டாள், இல்லை, அது மெதுவாக வழுக்கிச் சென்றது, முதலில் ஒரு மலையைக் கடந்தது, பின்னர் மற்றதை, இறுதியில் மூன்றாவதைக் கடந்து அவளது பார்வையிலிருந்து மறைந்தது. பார்ப்பதற்கு சூரியன் மலைகளின் மீது ஸ்கேட்டிங் செய்து கொண்டு செல்வது போலவும், உள்ளடுக்கை தொட்டு விட்டது போலவும், வானத்திலிருந்து கீழே இறங்கி விட்டது போலவும், அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது போலவும், சமையலறை சன்னலின் வழியே அவளை பார்ப்பதற்காக அத்தனை தூரம் வந்தது போலவுமிருந்தது. அவளைப் பார்ப்பதற்காக மலைகளின் மேலிருந்து சறுக்கி வந்தது போலவும், அவளே சமையலறை சன்னலில் சூரியனைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தது போலவும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பது போலிருந்தது. அதன் பின் சூரியன் மறைந்து விட்டது.

அது ஒரு தீர்க்கதரிசனக் கனவு என்று பட்டதால், அவளது உடல் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் இது போன்ற கனவுகளை இதற்கு முன் இரண்டு முறை கண்டிருக்கிறாள். அவள் சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு முறை பாம்பு ஒன்றினால் வசியம் செய்யப்பட்ட பறவையைப் பற்றிய கனவு கண்டாள். அப்பறவை காற்றில் உறைந்து நின்றபடி பாம்பின் கண்ணை குத்திட்டு பார்த்துக் கொண்டிருக்க, தரையில் சுருண்டிருந்த பாம்பு முழுக்க எழுந்து ஒரு உலோகக் கம்பு போல் நிலைத்து நின்று அந்தப் பறவையின் பார்வையை சந்தித்தது. அதன் பின் சிறிது காலம் கழித்து அவள் தான் திருமணம் செய்து கொண்ட பையனைச் சந்தித்தாள்.

இரண்டாம் கனவு வெகு காலம் கழித்து, அவள் பெற்றெடுத்து வளர்த்த ஏழு குழந்தைகளும் சுற்றியுள்ள பண்ணைகளில் குடியமர்ந்து விட்டபின், ஏழு குழந்தைகளும், அவர்கள் பத்தொன்பது பிள்ளைகளும் பெற்ற பின், வந்தது. அவள் சமையலறை சன்னலருகே அமர்ந்திருப்பதாய் கனவு கண்டாள். அவளது கணவன் தன் கைகளை நெஞ்சில் குறுக்கே கட்டிக் கொண்டு, நீண்ட வெண்ணிற அங்கி அணிந்து சொர்க்கத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தாள். தரையிறங்கி அவள் முன் நிற்கும் வரை, அவன் அவள் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, மெல்ல மிதந்து வந்தான். அதன் பின் கொஞ்ச நாளில் அவன் இறந்து விட்டான்.

அதற்குப் பிறகு அவர்களுடைய ஏழு குழந்தைகளும் பத்தொன்பது பேரக் குழந்தைகளும் அவளுக்கு துணையாய் இருக்க அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். அடிக்கடி வீட்டிற்கு வந்தார்கள், சமையலறை மேஜையில் உட்கார்ந்து குறுக்கெழுத்து போட்டார்கள், பேச்சு கொடுத்தார்கள். அதெல்லாம் நன்றாகதான் இருந்தது, ஆனால் அவர்கள் தனக்காக வந்ததைவிட தங்களுக்காகவே வந்தார்கள் என்று அவளுக்குச் சில சமயம் தோன்றியது, அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு நியாயமாக நடந்து கொள்ளவே இங்கு வருகிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் எப்போதும் பிஸியாக இருந்தார்கள், செய்ய நிறைய இருந்தது. அவள் இங்கே வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், தினமும் சமையலறை மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு க்ரோசெட் போட்டுக் கொண்டிருக்கிறாள், துணியில் சித்திர வேலைப்பாடுகள் நெய்து கொண்டிருக்கிறாள். சன்னல் வெளியே வெளியே பார்க்கிறாள். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமில்லை. அவர்கள் வந்தார்கள். அவளும் அங்கேதான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

அவள் சன்னல் வழியே வெளியே பார்க்கிறாள், மலைகளுக்கும் வானத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளுக்கு இன்றோடு தொண்ணூறு ஆகிறது. வயல்களுக்கு அப்பாலிருந்து முதல் விருந்தாளிகள் நடந்து வருவதைப் பார்க்கிறாள். மேஜையில் எல்லாருக்கும் தட்டு வைத்திருக்கிறாள், அதற்காக தனது சிறிய வீட்டில் இருந்த அத்தனை மேஜைகளையும் இதற்கு பயன்படுத்திக் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாள். எல்லா நாற்காலிகளையும் முக்காலிகளையும் கண்டெடுத்தாள். அருகே நெருங்கிக் கொண்டிருக்கும் நிழல்களை எண்ணப் பார்த்தாள், முடியவில்லை. அவளால் தன் மகன்களையும் அவர்களுடைய மனைவிகளையும் அவர்களின் நடையை வைத்து அடையாளம் காண முடிந்தது, சில பேரக் குழந்தைகளையும். ஒருத்தி குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறாள். அல்லது அவள் கேக் டின்னை சுமந்து வருகிறாளா? சன்னமாய் க்ரோசெட் செய்யப்பட்ட லேஸ் திரைச்சீலைகளை விலக்குகிறாள். அவர்கள் படியேறி வரும் சத்தமும், கதவின் கைப்பிடியைப் பிடித்து ஆட்டும் சத்தமும் கேட்கிறது. கதவைத் திறக்கப் பார்க்கிறார்கள். தட்டுகிறார்கள். அவள் நகரவில்லை. அழைப்பு மணி ஒலிக்கிறது. இன்னும் பல பேர் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள், அவளது குடும்பத்தினர், எப்போதும் நேரத்துக்கு வந்து விடுபவர்கள், அதை ஒப்புக் கொண்டாக வேண்டும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. கதவின் கைப்பிடியை பலமாய் ஆட்டுகிறார்கள். அவள் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். அவள் கதவைத் திறக்க விரும்பவில்லை. அவள் தயாராகவில்லை, கனவு இன்னும் அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாள், இன்னும் அது முடியவில்லை. அவள் தனியாய் இருக்க விரும்புகிறாள். அவர்களுடைய நிழல்கள் சன்னலை இருட்டடிப்பதைப் பார்க்கிறாள். அவர்கள் தட்டுகிறார்கள், அவளை பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அவள் குடும்பத்தினர் அனைவரும். ஆனால் அவள் திறக்க மாட்டாள்.

கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்

பீட்டர் பொங்கல்

இத்தொகுப்பில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் ‘முடிச்சுகள்’, ‘இரு கோப்பைகள்’, ஆகிய இரு கதைகளும் கார்த்திக் பாலசுப்ரமணியனை நம்பிக்கை மிகுந்த சிறுகதையாளராக அடையாளப்படுத்துகின்றன, என்கிறார் எம். கோபாலகிருஷ்ணன், தன் முன்னுரையில். இவை போக, ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’ ஆகிய மூன்று கதைகளையும் மென்பொருள் துறை சார்ந்த களம் காரணமாய் முக்கியமான கதைகளாய் குறிப்பிடுகிறார் (‘ஐ போன் எக்ஸ்’ கதையும் இந்த வரிசையில் வருவதே). இவை போக ‘டொரினா’, ‘விசுவாசம்’ கதைகளும் கவனிக்கத்தக்கவை. பிற கதைகளான ‘யயகிரகணம்’, ‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்’, ‘வழிபோக்கன்’, ‘நிழல் தேடும் ஆண்மை’, வேறு சிலரை ஈர்க்கலாம்.

அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தில் ‘கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்/ திங்களைப் பாம்புகொண் டற்று,’ என்ற குறளின் உரையில் ‘யயகிரகணம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கலைஞர் கருணாநிதி (கூகுளில் தேடும்போது அது ஒன்றுதான் முதல் பக்கங்களில் கிடைக்கிறது). குறள் அளிக்கும் பொருளில் பொருத்தமாகவே தலைப்பு அமைந்திருக்கிறது. முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றும் கதையை குறள் விளக்க பொருள் கொண்டு வாசித்தால், கனம் கொண்டதாகவும் நுட்பமானதாகவும் தோன்றுகிறது. ஆனால் கதையின் வாசிப்புக்கு தலைப்புச் சொல் இந்த அளவு முக்கியத்துவம் கொண்டதாக இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. வாசகன் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்’ சிறுகதை முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் கொண்டதாக  இருக்கிறது. ‘யயகிரகணம்’ கதையின் தலைப்புச் சொல் நாம் வாசித்த கதையை வேறு வகையில் வாசிக்கச் செய்கிறது என்றால் இந்தக் கதையின் இறுதியில் வரும் சொல் நாம் வாசித்த எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விடுகிறது. ஒரு சொல் இத்தனை முக்கியமாக இருக்கும்போது அது உத்தி சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உணர்வு சார்ந்ததாகவும் இருக்கும்போது அது அளிக்கும் நிறைவு வேறு வகைப்பட்டது.

கார்த்திக் கதைகள் பலவும் நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறான ஒரு பார்வையை, முடிவை அளிக்கின்றன, அதைச் செய்யும்போது உணர்வுத் தளத்தைத் தொடும்போது வெற்றி பெறவும் செய்கின்றன. ஆனால் அதே சமயம் கதைசொல்லி தன்னை மையம் கொண்டவராய் பல கதைகளில் இருப்பதால், நம் புரிந்துணர்வுகளுக்கான பாத்திரம் வேறொரருவராய் இருக்கும்போது போதிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. ‘வழிப்போக்கன்’ கதையில் வரும் நொய்டா வழிகாட்டியை நாம் கடைசி வரை வீடு பார்த்துக் கொடுக்கும் ப்ரோக்கர் என்றே நினைக்கிறோம். ஆனால் கடைசி வரை அவனைப் பற்றிப் பேசாமல் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் கதைசொல்லியால் முடிவு ஒரு ஆச்சரிய உணர்வாய் மட்டுமே அமைந்து விடுகிறது. இலக்கிய வாசிப்பில் நம் எதிர்பார்ப்புகள் அதனோடு நிற்பதில்லை. இந்தத் தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக பலராலும் சொல்லப்படும் ‘இரு கோப்பைகள்’ கதையிலும் கதைசொல்லியின் தற்கூற்றுப் பார்வை ஒரு குறையாகவே அமைகிறது. சாவு வீட்டில் அழுகையைப் பார்ப்பவன், அந்த வீட்டில் உள்ளவர்களின் துயரத்தை நமக்கு கடத்தித் தருகிறானா அல்லது அவனது உணர்வுகளைச் சொல்லுவதோடு நின்று விடுகிறானா என்பதில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

மேற்சொன்ன கதைகளைப் போலவே ‘நிழல் தேடும் ஆண்மை’ கதையும் கடைசி வரி திருப்பத்தில் அதன் உரிய பொருள்படுகிறது. மனைவியைப் பிரிந்த கணவனின் பிரிவாற்றாமைதான் கதை என்கையில் கதையின் முடிவில் நாம் அவன் உணர்வுகள் குறித்த புரிதலில்தான் அக்கறை கொண்டிருக்கிறோம், அவனது மனநிலை நாம் அறிந்த ஒன்றே. அதன் ஆச்சரியங்கள் நிறைவளிப்பதில்லை.

மென்பொருள் துறை சார்ந்த கதைகள் என்ற அளவில், ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’, ‘ஐ போன் எக்ஸ்’, ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே வசதியானவர்கள் வாழ்க்கை குறித்து புரிந்துணர்வுடன் எழுதப்பட்ட கதைகள் தமிழில் அவ்வளவாக காணப்படுவதில்லை. பொருளாதாரச் சிக்கல்கள், பணம் மட்டும் போதுமா, போன்ற வகையில் எழுதப்பட்ட கதைகளும் செல்கின்றன. மென்பொருள் துறையில் உள்ளவர்கள் வாழ்க்கை முறை சாதாரணர்களின் பார்வையில் பணக்காரத்தனமாக இருக்கிறது என்றாலும் அவர்களில் பலரும் மத்திய வர்க்கத்துக்கு சற்று உயரே சென்றவர்கள், அவ்வளவே. அடிப்படையில் மத்திய வர்க்கத்தினரின் அத்தனை பிரச்சினைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன.

டெட்லைன்கள், அவற்றை வைத்துக் கொண்டு உயர் அதிகாரிகள் அளிக்கும் அழுத்தம், குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாத பெண் நிலை, வேலைக்குப் போகும் பெண்ணைப் பொதுவாகவே சமூகம் எதிர்கொள்ளும் விதம் என்று பலவற்றை ‘பார்வை’ தொடுகிறது. மென்பொருள் துறைக்கே உரிய பிரச்சினைகளைப் பேசும் இக்கதையின் முடிவும் தாக்கம் கொண்டதாக இருக்கிறது. ‘லிண்டா தாமஸ்’ கதையும் மென்பொருள் துறையில் மட்டுமே நிகழக்கூடியது. தன் பணியை வேறொருவருக்கு பயிற்சி அளித்து தாரை வார்ப்பவர் பற்றிய கதை- இதன் பலகீனம், கடைசி வரியில்தான் கதை இன்னது என்று நாம் தெரிந்து கொள்கிறாம். இது கார்த்திக்கின் பலகீனமும்கூட.

‘பொதுப்புத்தி’, ‘ஐபோன் எக்ஸ்’ இரு கதைகளிலும் வரும் இரு முக்கிய பாத்திரங்கள் மென்பொருள் துறையில் கேட்டுக்கு வெளியே நிற்பவர்களும் உள்ளே செல்பவர்களும். இருவருக்கும் உள்ள இடைவெளி இக்கதைகளில் மிக நன்றாகவே வெளிப்படுகிறது, ‘பொதுப்புத்தி’ கதையைவிடக் கூர்மையாய் ‘ஐபோன் எக்ஸ்’ கதையில். ‘ஐபோன் எக்ஸ்’ கதையில் உள்ள நுண்விவரணைகளில் நாம் நல்ல ஒரு கதைசொல்லியைப் பார்க்கிறோம். பொதுவாகவே கதைகள், அவற்றின் முடிவுகள், களம் என்று குறைகள் சொன்னாலும் கார்த்திக் பாலசுப்ரமணியனின் கதைசொல்லலில் குற்றம் காண முடியாது. பெரும்பாலான சமயம் அவரது கதைகள் சுவாரசியமளிக்கத் தவறுவதில்லை.

இலக்கிய வகைமை என்ற அளவில் ‘டொரினோ’ கதை ஏற்கனவே வாசித்து வாசித்து அலுத்துவிட்ட அக்காக்களைப் பற்றியதாக இருப்பதால் முக்கியமில்லாததாக இருக்கலாம். ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தவிர, காதலிகளாக இல்லாதபோது, அக்கா, தங்கை, அத்தை, சித்தி, என்று உறவுகளாய்தானே பெண்கள் இருக்க முடியும்? அந்த உறவுகளுக்கேற்ற வாழ்க்கையை வாழ்ந்து மறைகிறார்கள் அவர்கள். இவர்களைப் பற்றி எழுதக்கூடாது என்றால் நம் வாழ்வின் பெரும்பகுதி பேசப்படாமலே மறையும். எல்லாருக்கும் ஒரே கதைதான் என்றாலும் எத்தனை அம்மா கதைகள் இருக்கின்றனவோ அத்தனை அக்கா கதைகளுக்கும் அவசியம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இது செண்டிமெண்ட்டாக இருக்கலாம், ஆனால் அக்காக்கள் விஷயத்தில் செண்டிமெண்ட் உண்மையான உணர்வாகவே இருக்கிறது.

‘டொரினோ’ கதை குறித்து எம். கோபாலகிருஷ்ணன் எழுதியிருப்பது குறித்து வேறுபடுகிறேன் என்றால், ‘முடிச்சுகள்’ கதைக்கு அவர் அளிக்கும் வாசிப்பு குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு புனைவெழுத்தாளன் மட்டுமே அளிக்கக்கூடிய வாசிப்பு அது. சாதாரண கதையாக நாம் வாசித்தது எவ்வளவு அபூர்வமான கதையாக இருக்கக்கூடியது என்பதை எம். கோபாலகிருஷ்ணன் எழுதுவது உணர்த்துகிறது.

‘இரு கோப்பைகள்’ கதையில் இன்றுள்ள இணைய இலக்கிய உச்சத்தின் தளத்தைத் தொட்டு விடுகிறார் கார்த்திக் பாலசுப்ரமணியன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு கதைக்காக மட்டுமே இவரை நம்பிக்கைக்குரிய எழுத்தாளராக கருதலாம். ஆனால் அதற்கு முன் அவர் கடைசி வரி ஆச்சரியங்கள் அளிப்பதைத் தவிர்க்க ஒரு வழி கண்டாக வேண்டும். தனிப்பட்ட முறையில், ‘விசுவாசம்’ கதையில் அவரது ஆற்றல்கள் அத்தனையும் பொருந்தி வருவதாய் காண்கிறேன். அதன் கடைசி வரி ஆச்சரியம் கதையில் ஒரு திருப்பமாக அமைந்தாலும் கதைக்கு அன்னியமாக இல்லை, ஒரு வகையில் அந்த முடிவை நோக்கிதான் கதை போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கச் செய்கிறது, கதைகூறலும் யார் மீது அழுத்தம் விழ வேண்டுமோ அவரையே மையம் கொண்டிருக்கிறது. தலைப்பும்கூட கதையின் மையத்திலிருந்து எழுகிறது, அது ஒரு மந்திரத்தன்மை கொண்ட திறப்புச் சாவியாக இல்லை.

‘எலும்புக்கூடுகள்’ சிறுகதையை முன்வைத்து- பீட்டர் பொங்கல்

பீட்டர் பொங்கல்

உண்மையைத் திரிப்பது, கலைப்பது, வெவ்வேறு வரிசைகளில் தொகுத்துக் கொள்வது என்பதைக் கொண்டு வரிசைக்கிரமமாக, அல்லது தர்க்க ஒழுங்கின் பாற்பட்டு நாம் அடையும் புரிதல் சந்தேகத்துக்கு உரியது; அப்படிப்பட்ட ஒரு காலவரிசையையும் அதன் படிப்பினைகளையும் உருவாக்கும் வரலாற்றாசிரியன் சந்தேகத்துக்கு உரியவன்; அவனது குரல் அதிகாரத்தின் குரல், அவன் அறியும் உண்மைகள் அரைகுறையானவை, அவற்றின் வெளிப்பாடுகள் உள்நோக்கங்களால் முறிவுற்றவை, என்ற உணர்வில் படைக்கப்பட்ட இலக்கியம் தன்னைத் தானே கண்ணாடியில் கண்டு ரசிக்கும் ஒரு வகை சுய மெச்சலாகவும், சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை விவரிப்பதில் அக்கறையற்ற, மானுட உணர்வுகளில் பங்கேற்கும் இதயமற்ற, அறிவுப்பூர்வமான, உலர்ந்த எழுத்தாகவும் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ‘கதைகளை’ தவிர்ப்பதை இயல்பாய்க் கொண்ட இப்படிப்பட்ட எழுத்தில் நாம் காணும் சுவாரசியமின்மை  அலுப்பூட்டுவது உண்மையே. ஆனால் சான்றாவணங்களின் மீது கட்டமைக்கப்படும் தோற்றத்தை அளிப்பதால் வரலாறு அறிவியலுக்குரிய மெய்ம்மை பெற்று சந்தேகத்துக்கு இடமில்லாததாகி,  வெவ்வேறு தரப்பினருக்கும் மிகுந்த பயன்மதிப்பு கொண்ட கருவி நிலையை எட்டி, அவற்றை எடுத்துரைக்கும் வரலாற்றாசிரியர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடுநிலை என்று ஓரிடத்தில் இருக்க இடமில்லாமல் ஏதோ ஒரு பக்கம் கொண்டு செல்லப்பட்டு கட்சி கட்டி நிற்கும்போது வரலாறு மட்டுமல்ல, அறிவியலும்கூட புறவயப்பட்ட உண்மையை உரைக்கும் துறை என்ற உயர்நிலையை இழந்து கவன ஈர்ப்புக்கான சந்தையில் ஒலிக்கும் பல போட்டிக் குரல்கள் கொண்ட கடைச்சரக்காகிறது, எது விலை போகிறது என்பதைக் கொண்டே ஒன்றன் முக்கியத்துவம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘கதை’ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அதிலல்ல, அது எப்படி உருவாகிறது, எந்த நோக்கத்தை முன்னிட்டு உருவாகி பல்கிப் பெருகுகிறது, என்பதை அறிவதில்தான் சுவாரசியம் இருக்கிறது. செய்திகளையும் வரலாறுகளையும் செய்பவர்கள் மற்றும் அவற்றின் நுகர்வோர் வெவ்வேறாக இருந்த காலத்தில் குறைவளவு எண்ணிக்கைக் கொண்ட புத்திசாலி எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவி பாவனைகள் கொண்ட வாசகர்களுக்கும் மட்டுமே ஆர்வம் எழுப்பியிருக்கக்கூடிய இக்கதைகள், இணையத் தொடர்பினால் ஊடகச் சுவர்கள் உடைக்கப்பட்டு ஒவ்வொரு லைக்கிலும் பார்வர்டிலும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் நுகர்வதோடு உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கும் இக்காலத்தில், நம் கதைகளாக இருக்கக்கூடியவை; சாதாரண மனிதர்களுக்கும் அவர் கதைகளுக்கும் இடையிலான தொடர்பு கண்ணிகள் இன்று உருவாகி வருவதால், தன் பாட்டுக்கு கதைகளைப் பற்றிய கதைகள் எழுதிக் கொண்டு, உண்மையின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழுப்பிக் கொண்டு, தோற்றங்களுக்கும் நோக்கங்களுக்கும் உள்ள உறவை விசாரித்துக் கொண்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று பரவலான வாசக பரப்புக்கு வெளியே இருந்து கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் காலம் வந்து விட்டது.

Image result for skeletal remains mass grave

ஆண்- பெண் உறவு கதைகள் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் முக்கியமானவை என்றாலும்,  ‘ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்’, ‘ஒரு திருமணம்’, போன்ற பல கதைகள், கதைகளின் உருவாக்கத்தையும் பேசுகின்றன. அவற்றில், ‘எலும்புக்கூடுகள்’ என்ற கதை வரலாற்றின் பயன்மதிப்பையும் வரலாற்றாசிரியனின் புறவயத்தன்மை சாத்தியமில்லாமல் போவதையும் நேரடியாகவே பேசுகிறது.

‘எலும்புக்கூடுகள்’ கதை இருபதாம் நூற்றாண்டின் துவக்க தசாப்தங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள ‘கரெஷியா’ என்ற கற்பனை மண்ணில் நிகழ்கிறது. கதைசொல்லி லூயி பெர்டினாண்ட் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளன், நீக்ரோ-ஆஸ்திரேலிய இனம் குறித்து ஆய்வு மேற்கொள்பவன்.  அந்த இனத்தவர் வாழும் ஆஸ்திரேலியா, கரேஷியா மற்றும் மரேலியா நாடுகள் ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள்  கரேஷியாவின் பெரும்பான்மை மக்கள் கரேஷியர்கள், மரேலியர்களின் ஆட்சியில் நெடுங்காலம் வாழ்பவர்கள். கரேஷியா பிரிட்டிஷ் காலனியாக மாறியவுடன், மரேலிய மன்னன் அவர்களின் கைப்பாவையாய் ஆட்சி செய்கிறான். பெரும்பான்மை கரேஷியர்கள் சிறுபான்மை மரேலியர்களின் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரம் பிரிட்டிஷார் கையில் இருக்கிறது.

கரேலியாவுக்கு 22ஆம் வயதில் வரும் பெர்டினாண்ட் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனது ஆராய்ச்சியில் ஈடுபாடில்லாத அவன் மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு தனது தாயகமான இங்கிலாந்து திரும்பி விடுகிறாள். கரேலியாவில் தங்கிவிடும் பெர்டினாண்ட் அங்கு வந்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின், 1930ல் ஏராளமான எலும்புக்கூடுகளை ‘கம்பக்டி டமரு’ என்ற நகருக்கு வெளியே கண்டெடுக்கிறான்.  பெர்டினாண்டைப் பொறுத்தவரை இத்தனை பேர் ஏன் ஒரே இடத்தில் செத்தார்கள் என்பதற்குத் தடயமில்லை- இயற்கை அழிவாக இருக்கலாம், பாதுகாப்புக்காகக் கூடியிருந்தபோது மாண்டிருக்கலாம், உட்குழுச் சண்டையாக இருக்கலாம், அல்லது சதியால் கூட்டம் கூட்டி கொல்லப்பட்டிருக்கலாம். இந்த எலும்புக்கூடுகள் மரேலியர்கள் கரேஷியாவில் குடியேறிய காலத்துக்கு முற்பட்டவை.

ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அவனுக்குப் பிரச்சினையாகிறது. அது குறித்த செய்திகள் பத்திரிக்கைகளில் வரவும், அவன் இராணுவச் செயல் உதவி அலுவலரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான். அவர், “மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்குமான பிளவை ஆழப்படுத்துவதன் மூலம் சச்சரவுகள் ஏற்பட்டு மக்களின் வாழ்வை ஒழுங்கு செய்வதற்கான சக்தி என்ற தேவையில் நாம் ஸ்தாபிதம் பெறலாம்,” என்று வெளிப்படையாகவே சொல்லி, மரேலிய – கரேஷிய பகைமையை வளர்க்கும் வகையில், அத்தனையும் மரேலிய தாக்குதலில் இறந்த கரேஷியர்களின் எலும்புக்கூடுகள் என்று அறிக்கை வெளியிடச் சொல்கிறார். முதளில் மறுக்கும் பெர்டினாண்ட், வன்முறை அச்சுறுத்தலுக்கு பயந்து வெற்றுத் தாள்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கிறான். அதன் பின் அவன் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறான்.

நான்கு நாட்கள் சென்றபின் அவனுக்குச் செய்தித்தாள்கள் அளிக்கப்படுகின்றன. மரேலியர்கள் கரேஷியாவைக் கைப்பற்றியபோது கொன்றொழித்த கரேஷிய ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் படிக்கிறான். இந்தச் செய்தி வந்ததும் பல நகரங்களில் கலவரம் வெடிக்கிறது, சொத்துச் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. இரு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள்கள் விடுக்கின்றது. இவ்வாறாக ஒரு போலியான வரலாற்றை இட்டுக் கட்டி இறுதியில் அரசு தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது. கதை இப்படி முடிகிறது-

“அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி என்னை அச்சுறுத்திக் கொண்டேயிருந்தார். என் செயல், என் மனம், மாந்திரீகவாதியின் கட்டளைக்கு உட்பட்டது என்று தோன்றியது. மாந்திரீகவாதி கட்டிலுக்குக் கீழே படு என்று உத்தரவிட்டதும், நான் அவ்வாறே கட்டிலுக்குக் கீழே படுத்தேன். காகிதங்களைத் தின்ன உத்தரவிட்டதும் காகிதங்களைத் தின்ன ஆரம்பித்தேன். தலைகீழாக நிற்க உத்தரவிட்டதும் நான் அவ்வாறு நிற்க இயலாமல், உத்தரவிற்குப் பணிய வேண்டும் என்ற நினைப்பில் பலமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கீழே விழுந்து கொண்டிருந்தேன். வார்த்தைகள் உருவாகி என்னைக் குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில் மாந்திரீகவாதி என்னை வார்த்தைகளை விழுங்க உத்தரவிட, அவ்வாறே நான் செய்ய ஆரம்பித்தேன். எப்போது நான் இல்லாமல் போனேன் என்பது என் நினைவில் இல்லை”

ஜார்ஜ் புஷ், பெரியவர், அவருடைய அரசின் பிரதம ஆலோசகர்களில் முக்கியமான ஒருவராக இருந்த கார்ல் ரோவ் பத்திரிக்கையாளர் ரான் சுஸ்கைண்டிடம் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு மேற்கோள் மிகப் பிரபலமானது. “மெய்ம்மையை அடிப்படையாய்க் கொண்ட சமூகத்தில்” உள்ளவர்களாய் தம்மை நினைத்துக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள், “புலப்படக்கூடிய மெய்ம்மையைக் கவனமாக ஆய்வு செய்கையில் தீர்வுகள் தோன்றும் என்று நம்புகிறார்கள்,” என்று கூறிய ரோவ், அது தவறான எண்ணம் என்கிறார். “உண்மையில் உலகம் இப்போதெல்லாம் அப்படி இயங்குவதில்லை.  இப்போது பேரரசாகி விட்டோம், நாம் செயல்படும்போது, நமக்குரிய மெய்ம்மையை உருவாக்குகிறோம். நீங்கள் அந்த மெய்ம்மையை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது- வேண்டுமென்றால், கவனமாக ஆய்வு செய்யும்போது என்று சொல்வதாய் வைத்துக் கொள்ளுங்கள்-, நாங்கள் மீண்டும் செயல்படுகிறோம், இப்போது வேறு புதிய மெய்ம்மைகளை உருவாக்குகிறோம், நீங்கள் அதையும் ஆய்வு செய்யலாம், இப்படிதான் விஷயங்கள் தீர்வடைகின்றன. நாங்கள் வரலாற்றை நிகழ்த்திக் காட்டுபவர்கள்… நீங்கள், நீங்கள் எல்லாரும்… நாங்கள் செய்வதை ஆய்வு செய்து கொண்டிருப்பது மட்டும்தான் உங்களுக்கு விட்டு வைக்கப்பட்டிருக்கிறது”.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் மானுடவியல் ஆய்வாளன் பெர்டினாண்ட் உண்மையை உருவாக்குபவனாகத் தன்னை நினைத்துக் கொள்பவனல்ல-  வரலாற்றை நிகழ்த்துபவன் என்று நினைத்துக் கொள்வதைவிட தன்னை வரலாற்றின் குறிப்புகளை வாசிப்பவன் என்று நினைத்துக் கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் வாசிப்பதற்கும் நிகழ்த்துவதற்கும் தொலைவு அதிகமில்லை, வாசிப்பே நிகழ்வாவதும் உண்டு. பெர்டினாண்ட் ஆய்வு செய்து அடைந்த முடிவுகள் குறித்த செய்தி, மானுட இயல், புவியியல் ஆதாரங்களுடன் வெளிவந்ததும், “… பத்திரிகைகளில் பல நகரங்களில் மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்கு ஏற்பட்ட மோதல்கள், சொத்துச் சேதங்கள், மற்றும் உயிர் அழிவு பற்றிய விரிவான செய்திகளும் அரசு அமைதியையும், சட்டத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்துமாறு விடப்பட்ட அறிக்கைகளும் இருந்தன. மோதலினால் ஏற்பட்ட மனித அழிவுகள் துக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை மோதலில் தாட்சண்யமற்ற தன்மை அதிகரித்துக் கொண்டே போவதைக் காட்டிக் கொண்டிருந்தன”. இதுவே பெர்டினாண்ட்  நொறுங்கவும் காரணமாகின்றது- “நான் சந்தித்த அந்த அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி வாளால் சரித்திரத்தில் காயங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் எல்லா நேரங்களிலும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சரித்திரம் அலற, மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் தாட்சண்யமற்று சண்டையிட்டு மடிவது எங்கோ பார்த்த ஓவிய அல்லது படக்காட்சி போல் தோன்றிக் கொண்டிருந்தது,” என்று கோயாவிய கொடுங்கனவு மனநிலையில் அவன் மனம் சிதைகிறது. இந்த நிலையடைந்த பின்னரே அவன் தன் வார்த்தைகளை விழுங்கி, இறுதியில் காணாமல் போகிறான்.

அதிகாரச் சமநிலையின் தீவிரத்தை எப்போதும் யார் மெய்ம்மையைத் தீர்மானிப்பது என்ற கேள்விக்கான விடையில் காண இயலும். சர்வாதிகாரிகள் தம் அதிகாரத்தின் எல்லையைச் சோதிப்பது வன்முறையால் அல்ல- தாம் நிர்ணயிக்கும் உண்மையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கொண்டுதான். அதன் பின்னரே ஆயுதங்கள் வெளியில் வருகின்றன. துவக்கத்திலேயே அவர்களை எதிர்க்கத் தவறும் பெர்டினாண்ட்கள் கொண்ட “மெய்ம்மை அடிப்படையிலான சமூகம்” தன் வார்த்தைகளை விழுங்கிக் காணாமல் போக வேண்டியதுதான். சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘எலும்புக்கூடுகள்’ சிறுகதை, உண்மையைத் திரித்து பயன்படுத்திக் கொள்வது, பிரித்தாளும் சூழ்ச்சியால் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வது, போன்ற அரசியல் மற்றும் ஆதிக்க உத்திகளை எடுத்துரைப்பதாய் கொள்ளலாம். ஆனால், அதனுடன், உண்மையைத் தீர்மானிக்கும் உரிமையை அரசும் அதிகாரமும் பறித்துக் கொள்வதை அனுமதிக்கும் சமூகம் தலைகீழாக நிற்பதில் ஆரம்பித்து தன் குரலை மட்டுமல்ல, இருப்பையும் இறுதியில் இழக்கிறது என்ற எச்சரிக்கை கொண்ட நேரடியான, இலக்கிய நுட்பங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்காத, நீதிக்கதையாய் முக்கியத்துவமடைகிறது.  இங்கு பெர்டினாண்ட் எதை பிரதிநிதிப்படுத்துகிறான் என்ற புரிதல் உள்ள அளவில் அதன் கலை வெளிப்படுகிறது.