தொடர்தல்

ஸ்ரீதர் நாராயணன்

திருப்பங்களை தொலைத்தாலும்
நீண்டதொரு நடையில்
மீண்டும் வந்து சேர்ந்துவிடுகிறேன்.

புழுக்கமான இறுக்க பாதைகளிலும்
மெல்லிய மூச்சிழுப்பில்
காற்றுக்கான வெளியை
தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

பாதையோரத்து சாளரங்கள்
சாத்தப்படும் சத்தங்களை சமன்செய்ய
விரிசல் வழியே வழியும்
புன்னகைகளை உருவகிக்க முடிகிறது.

விசித்திர வடிவங்கள் காட்டியபடி
நீண்டு பின்தொடரும்
என் நிழல்கள்
சற்றேனும் இப்பூமியை
குளிர்வித்திருக்கும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.