அஜய். ஆர்

நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

PDF

ஒரு ஓவரின் இறுதி இரு பந்துகளில் அடுத்தடுத்து இருவரை ஆட்டமிழக்கச் செய்கிறான் ஒரு போலர். இன்னொரு போலர் வீசும் அடுத்த ஓவர் முடித்த பின் ‘ஹாட்ரிக்’ செய்யும் சாத்தியத்துடன் முதல் போலர் மீண்டும் பந்து வீசத் தயாராகிறான். எதிரணிக்கும் அதனுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் உவப்பாக இருக்க முடியாத ‘ஹாட்ரிக்கை’ அவன் அடையக் கூடாது என்று கதைசொல்லி ஏன் எண்ணுகிறான்?

மனக்கோணல் பற்றிய இந்தச் சிறிய கதையில் கணிசமானப் பகுதியை அதன் புறச்சூழலைக் கட்டமைப்பதில் செலவிடுகிறார் அசோகமித்திரன். மாலைநேரத்தில் நூலகத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கவனிப்பது கதைசொல்லியின் வழக்கம். இப்படி எந்த ஆரவாரமுமற்ற காட்சியோடு ஆரம்பிக்கும் கதையில் ஒரு மாலை அவன் கவனிக்க நேர்வதுதான் இந்த ஆட்டமும். ‘நான் உத்தியோகமின்றி இருந்த பல தருணங்களில் அதுவம் ஒன்று’ என்று அந்த தினத்தைப் பற்றி அவன் சொல்லும் ஒரு வரியிலிருந்தே, கதைசொல்லி தொடர்ந்து வேலை தேடிக் கொண்டிருப்பவன், ஆனால் ஏதோ காரணத்தால் அடிக்கடி வேலையை இழப்பவன் என்று அவன் பின்னணி குறித்து யூகிக்க முடிகிறது (அவனுடைய குணாதிசயம் இதற்கு காரணமாக இருக்கலாம்) . இரண்டு மணி நேரம் தேடி ஒரு நூலை தேர்வு செய்பவன் என்பது அவன் வாசிப்பு குறித்து நாம் யோசிக்கச் செய்கிறது. பள்ளி மைதானத்தைச் சுற்றியுள்ள வேலியில் ஒரு சில இடங்கள் மட்டும் – மாணவர்கள் குறுக்கு வழியில் வெளியேற/ நுழைய – அகலப்படுத்தப்பட்டிருப்பது, கதைசொல்லி பள்ளி நாட்களில் வாயில் வழியாகச் செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றது குறித்த நினைவுகள் என்றுஅனைவருக்கும் பொதுவான பள்ளி நிகழ்வுகளை மீட்டெடுக்கின்றது.

இவற்றைத் தொடர்ந்து ஆட்டக்காரர்களைப் பற்றிய கதைசொல்லியின் அவதானிப்புக்கள் கதையின் மையத்திற்கு அருகில் வாசகனை இட்டுச் செல்கின்றன. அந்த போலர் அடுத்தடுத்து இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்கிறான். பிறகு அவன் மீண்டும் பந்து வீசத் துவங்கும் முன் அவனும் அணியின் தலைவனும் மற்றவர்களை எந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்று நேரமெடுத்துக் கொண்டு முடிவுசெய்கிறார்கள். ஹாட்ரிக் என்பது அரிய நிகழ்வல்லவா. இப்போது தான் கதைசொல்லி போலரின் தோல்வியை விரும்புகிறான். வாசகன் இப்போது கதையின் மையத்தை அடைந்து விட்டான்.

கதைசொல்லி விரும்பியதைப் போலவே அந்த பந்தில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் இப்போது கதைசொல்லி போலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான். தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்க விரும்பாமல் நூலகத்திற்குச் செல்கிறான். கதைசொல்லி தன் வெறுப்பைக் கடந்து வந்து விட்டானா அல்லது தான் நினைத்தது நடந்து விட்டது என்ற வெற்றி உருவாக்கும் பெருந்தன்மையில்தான் அவ்வாறு எண்ணுகிறானா என்ற கேள்விகள் எழும் அதே நேரம் கதை அதைப் பற்றியதல்ல என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கதைசொல்லி தான் சிக்கிய சுழலிலிருந்து தன்னை மீட்டெடுக்கிறான் என்பதாக கதையின் முடிவைப் நாம் புரிந்து கொண்டாலும், அவனிடம் போலரின் கொண்டாட்டம் (அல்லது பிறிதொன்று) ஏற்படுத்தும் மனக் கோணலிற்கான உண்மையான காரணம் எளிதில் புலப்படுவதில்லை.

வேறெங்கோ சென்றுகொண்டிருக்கும்போது தனக்கு நேரடியாக சம்பந்தமில்லாத ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்த – பொதுவாக கிரிக்கெட் என்றில்லாமல் விளையாட்டு மேல் கதைசொல்லிக்கு பெரிய விருப்பு இல்லாத நிலையில் (புகழ் பெற்ற ஆட்டக்கார்களை தெரிந்து வைத்திருப்பதைத் தவிர) – ‘எளிய ஓடிப் பிடிப்பது தவிர வேறு விளையாட்டு நான் ஆடினதாக ஞாபகம் இல்லை’ என்று அவன் சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது – மிகக் குறைவான நேரத்திற்கே என்றாலும், முகம் கூட சரியாக பார்க்க முடியாத ஆட்டக்காரனின் தோல்வியை அவன் விரும்பும் அளவிற்கு அவனுள் வெறுப்பு குடிகொண்டு, அதன் கசப்பினால் அவன் தன்னையே ஏன் சுயவதை செய்து கொள்ள வேண்டும்.

‘First impression is the best impression’ என்று அடிக்கடி சொல்லப்படுவதற்கேற்ப விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்த குறைந்த நேரத்திலேயே அந்த போலரிடம் கதைசொல்லிக்கு – அவன் யாரென்று தெரியாமலேயே – மனவிலக்கு ஏற்பட்டுவிடுகிறது. முதல் இரு விக்கட்டை வீழ்த்தியவுடன் போலரின் உற்சாகமான – மற்ற பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடிய – கொண்டாட்டம் கதைசொல்லிக்கு மட்டும் இவ்வளவு பெரிய அசூயையையும், மன விலக்கத்தையும் ஏன் உருவாக்க வேண்டும். கதைசொல்லியும் இதை உணர்ந்தே இருக்கிறான். அந்த போலரால் இப்படி சம்பந்தமேயில்லாத ஒருவன் தன் தோல்வியை விரும்புவான் என்று கற்பனைகூட செய்ய முடியாது.

ஆனால் கதைசொல்லியை பொறாமைக்காரனாகவோ மற்றவர்கள் மகிழ்ச்சியை தாள முடியாத மனப் பிழற்சி கொண்டவனாகவோ அசோகமித்திரன் சித்தரிப்பதில்லை. தான் சுட்ட விரும்புவதை முன்வைக்க அத்தகைய வழமையான பாத்திர வார்ப்பு அவருக்குத் தேவைப்படுவதும் இல்லை. ஒரு சில கணங்கள் மட்டும் தன் அகத்தில் இருள் குடிகொள்ளும் சராசரி ஆசாமி தான் நம் கதைசொல்லி. அப்படி அவன் இருப்பதாலேயே அவன் கொள்ளும் உணர்வுகள் அதிக கூர்மை கொள்வதோடு, அவ்வுணர்வுகளுக்கான உந்துதல் புரியாவிட்டாலும், நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அணுக்கமாகவும் உணர முடிவதோடு, கதைசொல்லி கதையைப் படிக்கும் வாசகர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்ற சுயபரிசோதனையை செய்யவும் தூண்டுகிறது. ஏளனத்தை, அகம்பாவத்தை வெளிக்காட்டுபவை என ஒருவரின் புன்சிரிப்பை, உடலசைவை இன்னொருவர் (தவறாக) புரிந்து கொண்டு ,முதாலமவர் மீது காழ்ப்பு கொண்டு அதை விருட்சமாக வளர்க்கும் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்

oOo

ஒளிப்பட உதவி – Vaidheeswaran Voices…

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

அலுவலங்களில் வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்கும் அன்றாட மாலைப் பொழுதில் அசோகமித்திரனின் ‘இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்‘ சிறுகதை ஆரம்பிக்கிறது. சிக்னல் விழும்போது “… ஏதாவது ஒரு வரிசை வெறி பிடித்தது போலச் சீறி விரையும்,” என்று எழுதியிருந்தால் வழக்கமான விவரிப்பாக இருந்திருக்கும். ஆனால் அதனுடன் “பிரமாண்டமான பஸ்களிலிருந்து சாத்வீகமாகத் தோற்றமளிக்கும் சைக்கிள்கள் வரை அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்ற பின்னிணைப்புப் போன்ற வரியை கோர்க்கும்போது – உண்மையில் அனைத்து வாகனங்களும் ஒரே வேகத்தில் செல்வதில்லை எனபதை, “…அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்று வாகனங்களில் குடிகொள்ளும் வெறி வெளிப்படுவதில் உள்ள வேறுபாட்டை, – அந்த விவரிப்பு நுட்பம் கொள்கிறது. இத்தகைய சிக்கனமான சித்தரிப்புக்கள் பரபரப்பான அந்தி வேளையை உயிர் கொள்ளச் செய்கின்றன.

இந்த பரபரப்பின் ஒரு கண்ணியான சகுந்தலா அலுவலகம் விட்டு வெளியே வருகிறாள். பேருந்து நிறுத்தம் வரும் அவள் ராஜரத்தினம் அங்கில்லை என்று ஆசுவாசப்படும்போது அவள் மனமும் ஏதோ பரபரப்பு கொண்டுள்ளது என்பது புரிகிறது. ராஜரத்தினம் அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவன் ஒன்றும் இல்லை. அவனும் சகுந்தலாவும் காதலர்கள். அப்போது அவனும் அங்கு வர ஒரு ‘பொறி’ மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஹோட்டலுக்குச் சென்று உரையாடுகிறார்கள். ராஜரத்தினம் தாங்கள் மணம் புரிவது குறித்து சகுந்தலா தன் வீட்டில் சொல்லிவிட்டாளா எனக் கேட்க, சகுந்தலா உடனே பதில் சொல்வதில்லை. சகுந்தலாவின் அக்காவிற்கு திருமணமாகாத நிலையில் தன்னால் வீட்டில் இது குறித்து பேச முடியாத சூழல் இருப்பதாய் சகுந்தலா சொல்கிறாள். இது இவர்களுக்கிடையே ஏற்கனவே நடந்துள்ள, அடிக்கடி நடக்கும் உரையாடலின் நீட்சிதான் என்று நமக்குப் புரிகிறது. சினம் கொள்ளும் ராஜரத்தினம் அடுத்த திங்களன்று முடிவாகச் சொல்ல வேண்டுமென்று கடுமையாகப் பேசிவிட்டுச் செல்கிறான். ஏன் முதலில் ராஜரத்தினம் இல்லாததால் சகுந்தலா ஆசுவாசமடைந்து பின்பு அவனைக் கண்டு ‘பொறி’ மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பது இப்போது புரிகிறது.

சகுந்தலா வீட்டுக்குச் செல்கிறாள். மீண்டும் பின்மாலை/ முன்னிரவு நேரச் சித்தரிப்புகள், அதனூடே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்கிறோம். 30 வயதாகும் சகுந்தலாவின் அக்கா எஸ்.எஸ்.எல்.சி தாண்டாதவள், வீட்டின் அனைத்து வேலைகளையும் அவள்தான் பார்த்துக்கொள்கிறாள், அவள் ஏற்று நடத்தாத வீட்டுப் பொறுப்பே கிடையாது. ஆனால் வேலைக்குச் செல்லாத, அதே நேரம் அதை ஈடு செய்யக்கூடிய பெரிய வசதிகள் இல்லாத குடும்பத்துப் பெண்ணை மணம் புரிய யாரும் இல்லை. இது அக்காவிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை “இப்போதும் அவள் குளித்துவிட்டு வந்தவுடனே அழகாக இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் ஐந்து பத்து நிமிடங்களுக்குள் முகத்தைக் களையிழக்கச் செய்யும் சோர்வும் சலிப்பும் மெல்லிய கோடுகளாகவும் சுருக்கங்களாகவும் வந்து விடும்,” என்று அ.மி விவரிக்கிறார். இங்கு சோர்வும், சலிப்பும் வயது அதிகமாவதால் மட்டுமல்ல, ஒரே விதமாக முடியும் தொடர் பெண் பார்க்கும் படலங்கள் உருவாக்குபவை என்று உணர முடிகிறது.

வீட்டிற்கு வரும் சகுந்தலாவிடம் அவள் அக்கா தலைவலியால் படுத்திருப்பதாக அவள் தாய் சொல்கிறார். அவள் மூக்குக்கண்ணாடி அணிய நேரக்கூடும், அதுவும் வரன் தகைய தடையாக இருக்கக்கூடும் என என சகுந்தலா எண்ணுகிறாள்.

இப்போது அ.மியின் கதைசொல்லலில் வாசகன் நேரடியாக ஒரு முறை கூடப் பார்க்காத, வீட்டில் மட்டுமல்ல கதையிலும் ஒரு ஓரத்தில் இருக்கும் சகுந்தலாவின் அக்கா விஸ்வரூபமெடுக்கிறார். சகுந்தலாவின் காதலுக்கு இணையாக -அவள் இன்னும் எத்தனை நாள் அக்காவிற்காக தன் திருமணத்தை தள்ளிப்போடுவாள் – அவள் அக்காவின் எதிர்கால வாழ்க்கை என்ன என்றும் வாசகன் கவலை கொள்ள ஆரம்பிக்கிறான். இதற்கடுத்து வாசகனின் கவனம் இருவரின் பெற்றோர் மீதும் திருப்புகிறது. தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்விக்க முடியாதது குறித்த குற்றவுணர்வுடன் அவர்கள் குமைந்து கொண்டிருக்கக்கூடும். அவர்கள் சகுந்தலாவின் அக்காவை மணம் முடிக்க அதிக முயற்சிகள் எடுக்கவில்லையா, அல்லது அவர்களின் இயலாமையே ஒரு தடையாக இருக்கிறதா என்பதை வாசகனின் யூகத்திற்கே அ.மி விட்டுவிடுகிறார்.

“இன்று ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டே சகுந்தலா படுக்கும்போது கதை முடிய, அந்த நினைப்பில் உள்ள நம்பிக்கையின்மையை அவள் மட்டுமல்ல, வாசகனும் உணர முடிகிறது. சகுந்தலா மட்டுமல்ல, அவள் அக்கா, பெற்றோர் மற்றும் ராஜரத்தினம் அனைவருக்கும் – இதையே விழையும் நகரின் எண்ணற்ற மனிதர்கள் போல் – அன்றிரவு உறக்கம் அரிதான ஒன்றாகத்தான் இருக்கும்.

தினமும் நாம் பங்குபெறும் காட்சியில் – சகுந்தலாவும் ராஜரத்தினமும் தாங்கள் சந்திக்கும் முதல் நிமிடத்தில் ‘என்ன என்ன’ என்று பரஸ்பர கேள்விகள் முடியும் முன் பேருந்து வந்து விட ராஜரத்தினம் இடம் பிடிக்க ஓடும் வழக்கமான நிகழ்வு – ஆரம்பித்து, அதில் அரை கணத்திற்கு மேல் கவனம் கொள்ளாமல் நாம் கடந்து செல்லும் எண்ணற்ற – பலதரப்பட்ட இக்கட்டில் இருக்கும் – முகங்களில் ஒன்றின் பிரச்சனையாக விரிந்து, அதனூடாக ஒரு குடும்பத்தின் சித்திரத்தை உருவாக்கும் மூன்று இழைகள் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ள இக்கதை எளியவர்களின் அன்றாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அ.மியின் இன்னுமொரு கவனத்திற்குரிய படைப்பு.

oOo

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

oOo

ஒளிப்பட உதவி – காலச்சுவடு

இரு திருமணங்கள்

 அஜய் ஆர்

‘சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்’ சசிகலாவுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது (‘கல்யாணம் முடிந்தவுடன்’) . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே இருப்பது, பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள் அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும், கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லை, அவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது எரிச்சலாக இருக்கின்றது. ஆனால் சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார், அதை அவளும் அறிந்தே இருக்கிறாள். சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது. அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள் இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன. மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூற, மூர்த்தி தன் நண்பனிடம் ‘சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டா’ . தன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது. அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது.

சசியின் தங்கை, தன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது, ‘..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்’, என்று சொல்ல, அத்தை ‘என்னடீது, இப்பத்தான் அத்திம்பேர், நேத்திக்கு அத்திம்பேர்னு..’ என்று சொல்கிறார். அன்றாட இ யல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல ‘என்னடி இது’ என்று எழுதி இருக்கக்கூடியதை ‘என்னடீது’ என்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் – என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது – நுண்சித்திரமும் தெரிகிறது. சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து ‘கூப்பிடறதே நன்னாயில்லையே’ என்கிறாள். அவ்வளவுதான். அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லை, மூர்த்தி சசியுடன் கிளம்புவதும் பெரிய விஷயமாவதில்லை. ‘மனைவி பின்னால் ஓடுகிறாயே,’ என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள். இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்கு, தான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாக, முதல் சுருக்கம் விழும் இடமாக இது அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.

வாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம், அதுவும் காதல் திருமணம் ஏன் சசிக்கு இப்படி முடிந்தது? இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா? இல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான், அதுவும் அவன் காதலித்தவள், எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால், திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன், இரு குடும்பங்களுக்கிடையே நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள், பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால், புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல், ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த விஷயம், எண்ணியபடியே நடந்தாலும், அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடு, பிடிவாதம், ஏன் இதைச் செய்தோம்- என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம்.

காதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, ‘போட்டோ’ கதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில், மணமகன்/ மணப்பெண் இருவரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட, மணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். (“சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை” – இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதி, அவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வர, அப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வது, தலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா?.

தாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும், அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க, மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், “…தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்” என்று ஏன் அ.மி சொல்லவேண்டும்?. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த – பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா?. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி நிற்கும் போது, மணமகளின் மறுபக்கம் இருப்பவன் மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏன் அ.மி குறிப்பிட வேண்டும்?. ‘போட்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள கதையில் நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா? அந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.

ஆனால் இந்தக் கதை, புதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயல, தாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான், ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது. புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும், அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை உருவாகி விடுவதை உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக் கூட எதிர்கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம். ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தை, அதுவும் ஒரு குழுவாக இருக்கும்போது, இருவருக்கிடையே திடீரென்று உருவாகும் சங்கட நிலையை, எதிர்கொள்வதோ, கண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல், தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வது, புகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடைய நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வது, அவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் – நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப் போல் – ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழ, இறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்கப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரிய, கதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்க, புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.

சசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும், குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல், திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால், தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக் குறித்தும், தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.

oOo

ஒளிப்பட உதவி – திண்ணை

 

இரு நாயகர்கள்

தன்னுடைய பன்னிரெண்டு ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தில் சிமோன் பொலிவர் மூன்றுமுறை ஒன்றுபட்ட இலத்தீன் அமெரிக்காவை நிர்மாணிக்க முயன்று தோற்றுப் போகிறார். எண்ணிக்கையில் சிறிய அளவே கொண்ட படையுடன் நியூ கிரனெடா மேல் அவர் நடத்திய படையெடுப்பு சரித்திர புகழ் பெற்றது. விடுதலையாளர் எனப் போற்றப்பட்டாலும், அவர் முதலில் தன்னை ஒரு சர்வாதிகாரியாகத்தான் நிலைநிறுத்திக் கொள்ள விழைந்தார். அவருடைய கனவான ஒன்றுபட்ட இலத்தின் அமெரிக்கா நிகழாமலே போய்விட்டது. மார்க்குவெஸ் இப்படிச் சொல்கிறார்

“அவருடைய உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும், இருபதாண்டு கால பயனற்ற போர்களையும், அதிகார மாயையும் துப்புரவாக்கும் வண்ணம், அன்றைக்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்ட தினசரி திருப்பலியை வழமையைவிட மிகையான தீவிர எழுச்சியுடன் நிகழ்த்தினார்.”

வரலாறு காட்டும் நாயகர்கள் எப்போதும் ஒளிவட்டத்தினூடே பொலியும் வீரகதைகளைக் கொண்டவர்களாக மட்டும் இருப்பதில்லை. அவர்களை நாம் தரிசிக்கும் நெருக்கம் குறையக் குறைய ஒளிரும் முகங்கள் மறைந்து சாதாரணரின் முகம் அங்கே நிலைகொள்கிறது. சுயபச்சாதாபமும், தோல்வியின் கருமையும் படிந்திருக்கும் அந்த முகங்களில் நமது சாயலும் சமயத்தில் தெரிகிறது. “இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்” கட்டுரையில் அஜய் நம்மை மார்க்குவெஸ்ஸின் புதிர்ப்பாதை வழியே தளபதி பொலிவரின் பொருளற்ற முடிவை நோக்கிக் கொண்டு செல்கிறார். மரணம்தான் எத்தகைய நிவாரணியாக இருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட நிலையிலிருந்து மற்றொரு பாத்திரத்தை கொண்டு வந்து தளபதியின் எதிர்த்தராசில் வைக்கிறார் அஜய். ஸ்டோனரின் ஆளுமையின்மைதான் இப்படியானதொரு இணை வாசிப்பை நிகழ்த்த காரணமாக இருந்திருக்க வேண்டும்.

“நீ யார், எப்படிப்பட்டவனாக ஆக விரும்புகிறாய், நீ செய்வதன் முக்கியத்துவம் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்று ஏடுகளில் பதியப்படாத, இராணுவத்தால் ஆகாத போர்களும், வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன. நீ என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் பொழுதில் இதை நினைவில் கொள்”,

என்று வரும் வரிகள் மூலம் ஸ்டோனரின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரம் நமக்குத் துலக்கமாகத் தெரிகிறது. தோல்விகளால் மட்டுமே தொகுக்கப்பட்ட வரலாற்றின் அந்திமக் கணங்கள் ஸ்டோனருக்கு அளிக்கும் மனச்சாந்தியை சுட்டிக் காட்டுகிறது கட்டுரை.

கொந்தளிக்கும் எரிமலைக் குழம்பின் வலிமை அதன் பீறிட்டு வெளியேறும் வீச்சில் இருக்கிறது. ஆழமான ஏரியின் வலிமை அது அசையாமல் இருப்பதில்தான் இருக்கிறது.

– ஸ்ரீதர் நாராயணன்

கட்டுரை இங்கே- சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

 

oOo

ஒளிப்பட உதவி- Jacob Bender Has a Blog

ஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு

ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)

‘A Little Love Story’ என்ற தலைப்பு மட்டுமல்ல, “Everything is just as it always was, it seems nothing has changed…”, என்று ஆரம்பிக்கும் முதல் பத்தி, “… Only that summer’s gone…” என்று கோடைப் பருவம் மாறிவிட்டதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்போது, இனி திரும்பி வர இயலாத காலத்தின் ஒரு துளியை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் உறைந்துப் போயுள்ள, இனி மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லாத காதலைப் பற்றிய கதை இது என்று உணர்த்தி விடுகிறது ((‘Shall I compare thee to a summer’s day?’ என்ற கவிதையில் ஷேக்ஸ்பியர், பருவ நிலையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு காலப்போக்கில் எல்லாம் அழிந்தாலும், “But thy eternal summer shall not fade,” என்று தன் காதலைச் சொல்கிறார். ஆங்கில இலக்கியத்தில் உணர்ச்சி வேகத்தையும் இளமையையும் உணர்த்தும் படிமமாக கோடைப் பருவம் உள்ளது)). அடுத்து, இலையுதிர் காலத்தைப் பற்றிய சிறிய, செறிவான வர்ணனை தொடர்கிறது இங்கு ஏன் இலையுதிர் காலத்தைச் சுட்ட வேண்டும் என்று கதையில் போக்கில் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.

இப்போது கதைசொல்லியின் ஒரு கோடை கால நினைவோடைக்குள் வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். இதில் திடீரென்று ‘இது பற்றியெல்லாம் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என்று கதைசொல்லி/ ஆசிரியர் வாசகனிடம் நேரடியாகக் கேட்கும் சித்து வேலையும் நடக்கிறது. இன்று இத்தகைய உத்திகள் மலிந்து விட்டன. Tristram Shandy போன்ற நாவல்கள் இவற்றை இன்னும் முன்னரே செய்திருந்தாலும், 1900களின் ஆரம்பப் பகுதிகளில் இத்தகைய உத்திகள் இன்னும் வியப்பை உருவாக்கக் கூடியவையாகவே இருந்திருக்கக் கூடும். கதையின் ஓட்டத்திற்கு இது பொருத்தமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

அடுத்து, கதைசொல்லி தன்னைக் குறித்தும் சொல்கிறார். இப்போது, கதையில் முதல் பத்திகள் அவர் குறித்து உருவாக்கக் கூடிய நெகிழ்வான சித்திரத்திற்கு நேர்மாறாக இருக்கிறார் அவர். பெண்களைப் போகப் பொருளாக, இச்சையின் வடிகாலாக மட்டுமே பார்த்தவனாக (” I wanted every girl I saw, I wanted to possess her”) தான் அந்தக் கோடையின்போது இருந்ததாக சொல்கிறார். தன் காதலி குறித்தும் அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை, அவள் செவிடாகவும்/ ஊமையாகவும் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார். அதே நேரம், தான் அப்போது மூர்க்கமான மனிதனாக இருந்தேன் என்பதை இப்போது ஒப்புக் கொள்ளுமளவிற்கு காலம் அவரைக் கனியச் செய்துள்ளது.

ஒரு நாள் அவர் காதலி, தயக்கத்துடன், நீ ஏன் என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய், என்று கேட்கிறார். இதை அவர் கழிவிரக்கத்துடனோ, அவனிடமிருந்து தன்னைக் குறித்த புகழ்ச்சியை சுற்றி வளைத்து வரவழைக்கவோ கேட்கவில்லை என்பதையும், அவள் நுண்ணுணர்வு உள்ளவர் என்பதையும் ” You don’t love me at all, …” என்று அவர் தொடர்ந்து பேசுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கும் நம் கதைசொல்லி மிக மட்டமான பதிலையே சொல்கிறான். அவன் குணாதிசயமே இதுதான் என்றாலும், தன் உள்ளத்தை அவள் ஊடுருவிப் பார்க்கிறாள் என்பதும், அதில் (அவளைக் குறித்து அவன் எண்ணுவது) காண்பதைக் குறித்து அவள் அதிகம் வருத்தமடைவது போல் தெரியவில்லை என்பதும் கதைசொல்லியின் அகங்காரத்தைச் சீண்டி அவனை அப்படியொரு இழிவான எதிர்வினைக்குத் தூண்டியிருக்கக் கூடும்.

இப்போதும் அவன் காதலி தன்னிலை இழப்பதில்லை. “You poor thing” என்று கூறி அவனை மென்மையாக முத்தமிட்டு அவனை விட்டு நீங்குகிறாள். அவள் செய்கையில் காதலோ, வருத்தமோ தெரிவதில்லை. இவன் வாழ்வு முழுதும் அலைக்கழிந்து கொண்டே இருப்பான் என்பது அவளுக்கு புலப்பட அது குறித்த பரிதாப உணர்வோடேயே அவள் செல்கிறாள்.

”On Chesil Beach’ நாவலில், வேறொரு சூழ்நிலையில், ஆனால் ஒரு விதத்தில் இக்கதையின் பாத்திரங்களைப் போல் அதே கொதிநிலையில் உள்ள தம்பதியரின் வாழ்வு எப்படி “This is how the entire course of a life can be changed: by doing nothing-.” முற்றிலும் மாறுகிறது என்று சொல்லப்படுகிறது. நம் கதைசொல்லி, ஒன்றுமே செய்யாமல் இல்லை, அவள் விலகிச் செல்லும்போது பத்தடி தொடர்ந்து செல்பவன், அதற்குப் பின் திரும்பி விடுகிறான். இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருந்தால் அவன் வாழ்வு மாறி இருக்கக் கூடும், ஆனால் முதலில் மனதளவில் எடுத்து வைக்க வேண்டிய காலடியே முடியாமல் போகும் போது, அவன் நின்று விடுகிறான்.

இதுவரை, சிற்சில நுட்பங்கள் இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வழமையான கதையாக இருந்தது, “Only ten paces. But for that brief interval of time, this tiny love blazed heartfelt and intense, filled with splendor like a fairy tale,” என்று முடியும்போது இன்னொரு தளத்தை எட்டுகிறது. இப்போது கதையின் ஆரம்பத்தில் அவன், திரும்ப வர முடியாத கோடையை நினைத்துப் பார்ப்பதற்கு அர்த்தம் கிடைக்கிறது.

கோடையில் அக்காதல் வெந்தழிந்தபின் அவன் பல வசந்தங்களைப் (உறவுகளிலும்) பார்த்திருப்பான். இப்போது காலநிலை மட்டுமல்ல அவன் வாழ்வும், இலையுதிர் காலத்தில் இருக்கக் கூடும் (கோடையில் இளமை வேகம் என்றால் இலையுதிர் காலம் மனமுதிர்ச்சியை சுட்டும் படிமம் என்று கருதலாம்).. அதனாலேயே அகங்காரம் உதிர்ந்து, தன் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்ததை வெளிக்கொணர்ந்து அதை நோக்கும் முதிர்ச்சியை, கனிவை அவன் அடைந்திருக்கக்கூடும். தன் காதல் குறித்து “..Not a love like Romeo and Juliet, that lasts beyond the grave.” என்று இப்போது என்ன சொன்னாலும் உண்மையில் அக்கோடையில் தீ பற்றிய அவன் உள்ளமும் சரி காதலும் சரி பிறகெப்போதும் அணையவேயில்லை என்பதும் கதைசொல்லியைப் பொருத்தவரையிலேனும் (இவர்கள் பிரிந்த பிறகு அப்பெண் குறித்து கதையில் வேறு எதுவும் சொல்லப்படாததால்) எப்போதும் தன் கோடைக் காதலின் தழல் அவனைச் சுட்டெரித்துக் கொண்டே இருக்கும் என்றும் புரிகிறது.

– ஆர். அஜய்

கதையை இங்கு வாசிக்கலாம் – ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)

oOo

ஒளிப்பட உதவி – English with a Twist