பீட்டர் பொங்கல்

ஜேன் ஸ்மைலி நேர்முகம்

எந்த ஒரு எழுத்தாளரின் நாவல்களையும் தொகுத்து நோக்கும்போது அவருக்கென்று உள்ள தனித்தன்மை வெளிப்படும் என்பதுதான் நாவல் வடிவத்தின் சிறப்பு என்று சொல்கிறார் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜேன் ஸ்மைலி. அவருக்கு இது நிச்சயம் பொருந்தும்: ஷேக்ஸ்பியர் கதையோன்றின் நவீன மீளுருவாக்கம், ஹோமிசைட்: லைப் ஆன் த ஸ்ட்ரீட் என்ற தொலைக்காட்சித் தொடரின் ஒரு எபிசோட் வரை பல்வகைப்பட்ட ஆக்கங்களைத் தந்திருக்கிறார் அவர். பிரைவேட் லைப் என்ற தன் சமீபத்திய நாவலில், மார்கரெட் மேஃபீல்டு என்ற பாத்திரத்தின் அகவாழ்வை விவரிக்க ஹென்றி ஜேம்ஸ் பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பித்துக்குளித்தனமான விஞ்ஞானி ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவதிப்பட்ட ஒரு தூரத்து உறவினர்தான் மேஃபீல்டு பாத்திரத்தின் ஆதாரம்.

பெயில்பெட்டர் டாட் காம் தளத்தில் கான்ட்ரிப்யூட்டிங் எடிட்டராக உள்ள ஜூலி நியூபெர்கர் இவரைப் பேட்டி கண்டார்.
நீங்கள் ப்ரைவேட் லைப் நாவலில் மார்க்கரெட்டின் அகவுணர்வுகளைச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது ஏன்? அவரைவிட வலிமையான ஒரு பாத்திரத்தைக் கொண்டு எழுதியிருக்கலாமல்லவா? தான் எதுவும் செய்யத் திராணியற்று இருக்கும் பாத்திரத்தை முக்கியமாகக் கொண்ட நாவலில் வாசகரின் ஆர்வத்தை எப்படி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்?

அவள் சுயமாய் எதுவும் செய்ய திராணியற்றவள் என்று நான் நினைக்கவில்லை. அவள் நல்லவள். அப்போதும் இப்போதும் உள்ள பல பெண்களைப் போலவே, இன்ன மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அதை மேன்மைப்படுத்துவதுதான் அவளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அவளுக்குப் பெரிய கேள்விகள் எதுவும் கேட்கத் தெரியாது. நான் ஏன் முதலாளியாக இல்லை என்றெல்லாம் அவள் கேட்க மாட்டாள். உடனே என்ன செய்ய முடியுமோ அதில்தான் அவளது கவனம் இருக்கிறது… வாழ்க்கையில் நம் மன அமைப்பு, அதிர்ஷ்டம் இரண்டுக்கும் இடம் இருக்கிறது. நான் அதை விவரிக்க விரும்பினேன். அவளுக்கு முக்கியமாக இருந்த அந்தரங்க விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசக கவனத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தேன் – இது ஒரு வகை ஹென்றி ஜேம்ஸ் பாணி. நம் எல்லாருக்கும் அது உண்டு. சில சமயம் பெரிய நிகழ்வுகளில் அவை தொலைந்து போய்விடும், ஆனால் அவை நம்மோடிருக்கும். (more…)

இமைகள் தூரிகை – டானா டார்ட் நேர்முகம்

வாக்கியமொன்றுக்கு வடிவம் கொடுப்பதுதான் இவருக்கு ஆழ்ந்த நிறைவளிப்பதாக இருக்கிறது – சரியான சொல், அழகிய உவமை. “மணிக்கணக்காக” காற்புள்ளியை சந்தோஷமாக இடம் மாற்றிக் கொண்டிருப்பார்.

இவரது புத்தகங்கள் பெரிதாக இருக்கலாம், ஆனால் இவர் தன்னை இவ்வாறு விவரித்துக் கொள்கிறார்: “ஒரு மினியேச்சரிஸ்ட் – சுவற்றளவு பெரிய ம்யூரலை இமையளவு தூரிகையால் வரைபவள்; மிகச் சிறிய, நுண்மைகள் மிகுந்த வேலையைச் செய்பவள், ஆனால் மிகப்பெரும் வெளியில், நீண்ட காலமாக. அதனால்தான் இத்தனை நேரமாகிறது”.

இவரது எழுத்து முறை சிக்கலானது. முதலில் பெரிய அளவிலான, ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட நோட்டுப் புத்தகங்களில் கையெழுத்துப் பிரதியாக எழுதுகிறார். தன் எண்ணங்களையும் திருத்தங்களையும் சிவப்பு, நீலம் பின்னர் பச்சை பென்சிலில் குறித்து வைத்துக் கொள்கிறார். கதையோட்டத்தையும் பாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றில் இன்டெக்ஸ் கார்டுகளை ஸ்டேப்பிள் செய்கிறார். இதெல்லாம் ‘மிகவும் குழப்பமாக’ ஆகும்போது, தன் எழுத்துப்பிரதியை கணினியில் தட்டச்சு செய்கிறார். இந்த வரைவு வடிவங்களை வெவ்வேறு வண்ணத் தாள்களில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்கிறார். “பிங்க் கலர் டிராப்ட்டை எடுத்ததும் அது முதலில் எழுதிய வரைவு வடிவம் என்று எனக்குத் தெரிந்துவிடும்; அல்லது பழுப்பு வண்ணம் இரண்டாவது, கடைசியாய் எழுதியது நீல வண்ண காகிதத்தில் இருக்கும். முதலில் எழுதப்பட்ட வரைவு வடிவம் தேவையென்றால் அது எங்கிருக்கிறது என்பதை என்னால் சுலபமாக தேடியெடுக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் என் பிரெஞ்சு ஆசிரியர் இதைச் சொல்லிக் கொடுத்தார், நிஜமாகவே இப்படிச் செய்வது உபயோகமாக இருக்கிறது”. (more…)

பறவைப்பாடல்

டானா டார்ட்டின் மூன்றாவது நாவலின் துவக்கத்தில் அவரது நாயகன் தியோ டெக்கரின் வயது பதின்மூன்று. அவன் மிகவும் நேசிக்கும் அவனது தாய்,- அவன் மீது மிகுந்த நேசம் வைத்திருப்பவள், கலையில் ஆர்வம் கொண்டவள் – தனக்கு மிகவும் பிடித்த ஓவியம், பதினேழாம் நூற்றாண்டு டச்சு கலையின் சிறிய ஒரு அதிசய ஓவியம், அதைக் காண அவனை அழைத்துச் செல்கிறாள். கரேல் ஃபாப்ரிஷியஸின் அந்த ஓவியம் இந்தப் புத்தகத்தின் தலைப்புமாகிறது, “கோல்ட்ஃபிஞ்ச்”. துவக்க காட்சியில் அது ந்யூ யார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆப் ஆர்ட்ஸில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

தியோவும் அவனது தாயும் மிகவும் நெருக்கமான இருவர்; நம்பிக்கை வைக்கமுடியாத அவனது அப்பா அவர்கள் வாழ்வை விட்டு ஏறத்தாழ முழுமையாகவே இல்லாமல் போய் விட்டார். அவர்கள் அங்கிருக்கும்போது ஒரு வெடி விபத்து நேர்கிறது. 1654ஆம் ஆண்டு 32ஆம் வயதில் டெல்ஃப்ட் நகரில் ஃபாப்ரிஷியஸ் இறப்பதற்கு காரணமாக இருந்த வெடிமருந்து விபத்தின் எதிரொலியாக இது இருக்கிறது. தியோவுக்கு நினைவு தப்புகிறது. அவனது தாயும் வேறு பலரும் இந்த விபத்தில் மரணமடைகின்றனர். தியோ எதுவும் புரியாத மயக்க நிலையில் விழிக்கிறான், ஒரு சிறிய ஓவியத்தை ஏந்தியபடி மியூசியத்தைவிட்டுத் தப்பியோடுகிறான். மியூசியத்தின் சுவற்றிலிருந்து கீழே விழுந்த ஓவியம் அது. இறந்து கொண்டிருப்பவன் ஒருவனுக்குரிய ஒரு கனமான தங்க மோதிரமும் அவனுக்கு அதனுடன் கிடைக்கிறது. மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அந்த மனிதன் தியோவிடம் சொல்கிறான்: “ஹோபார்ட் அண்ட் ப்ளாக்வெல். ரிங் த கிரீன் பெல்” (more…)

ஐஸன்பெர்க், சாண்டர்ஸ் – கோட்பாட்டு வெளியில் மானுடத்தை விவரித்தல்

மன்ஹாட்டனில் உள்ள ஸ்ட்ராண்ட் என்ற புத்தகக் கடையில் டெபோரா ஐஸன்பெர்க்கும் ஜார்ஜ் ஸாண்டர்ஸும் வாசிப்பு மற்றும் உரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றனர். இது குறித்து ஸ்டோரி ப்ரைஸ் என்ற தளத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த கட்டுரை இது. சமகால அமெரிக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமான இரு படைப்பாளிகள் பங்கேற்ற நிகழ்வை விவரிப்பதால் இக்கட்டுரை பதாகையில் பதிப்பிக்கப்படுகிறது. இதை எழுதியவர் பாட்ரிக் தாமஸ் ஹென்றி. (more…)

“என்ன எழுதுகிறேன் என்பது எழுதி முடித்த பின்தான் தெரிகிறது” – டெபோரா ஐஸன்பெர்க் பேட்டி

பாரிஸ் ரிவ்யூ தளத்தில் டெபோரா ஐசன்பெர்க் அளித்த நேர்முகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதி:

நான் எதையும் நினைத்துக் கொண்டு எழுதத் துவங்குவதில்லை.

கதை பண்ண முடியும் என்பதால்தான் தனக்கு கதை எழுதப் பிடித்திருக்கிறது என்று கோல்சன் வைட்ஹெட் ஒருமுறை சொல்லக் கேட்டேன். எனக்கு கதை பண்ணுவது அறவே பிடிக்கவில்லை என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.

அல்லது, எனக்கும் கதை பண்ண பிடித்திருக்கலாம், ஆனால் இல்லாத ஒன்றைக் கதை பண்ணுவதாக ஒரு உணர்வு வருகிறதே அந்த உணர்வை நான் வெறுக்கிறேன் என்பதுதான் உண்மையாக இருக்கலாம். நான் எழுதுவது நினைவின் நிலையை அடையும்வரை அது எவ்வகையிலும் முடிவடைந்த உணர்வு எனக்கு கிடைப்பதில்லை.

என்னிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு முழுமை இப்போது வெளிப்படுகிறது என்ற உணர்வு வர வேண்டும், அப்போதுதான் அது எனக்கு கதையாகிறது. எல்லாமே ஒரே சமயத்தில் வேலை செய்தால்தான் உண்டு. (more…)