எந்த ஒரு எழுத்தாளரின் நாவல்களையும் தொகுத்து நோக்கும்போது அவருக்கென்று உள்ள தனித்தன்மை வெளிப்படும் என்பதுதான் நாவல் வடிவத்தின் சிறப்பு என்று சொல்கிறார் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜேன் ஸ்மைலி. அவருக்கு இது நிச்சயம் பொருந்தும்: ஷேக்ஸ்பியர் கதையோன்றின் நவீன மீளுருவாக்கம், ஹோமிசைட்: லைப் ஆன் த ஸ்ட்ரீட் என்ற தொலைக்காட்சித் தொடரின் ஒரு எபிசோட் வரை பல்வகைப்பட்ட ஆக்கங்களைத் தந்திருக்கிறார் அவர். பிரைவேட் லைப் என்ற தன் சமீபத்திய நாவலில், மார்கரெட் மேஃபீல்டு என்ற பாத்திரத்தின் அகவாழ்வை விவரிக்க ஹென்றி ஜேம்ஸ் பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பித்துக்குளித்தனமான விஞ்ஞானி ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவதிப்பட்ட ஒரு தூரத்து உறவினர்தான் மேஃபீல்டு பாத்திரத்தின் ஆதாரம்.
பெயில்பெட்டர் டாட் காம் தளத்தில் கான்ட்ரிப்யூட்டிங் எடிட்டராக உள்ள ஜூலி நியூபெர்கர் இவரைப் பேட்டி கண்டார்.
நீங்கள் ப்ரைவேட் லைப் நாவலில் மார்க்கரெட்டின் அகவுணர்வுகளைச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது ஏன்? அவரைவிட வலிமையான ஒரு பாத்திரத்தைக் கொண்டு எழுதியிருக்கலாமல்லவா? தான் எதுவும் செய்யத் திராணியற்று இருக்கும் பாத்திரத்தை முக்கியமாகக் கொண்ட நாவலில் வாசகரின் ஆர்வத்தை எப்படி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்?
அவள் சுயமாய் எதுவும் செய்ய திராணியற்றவள் என்று நான் நினைக்கவில்லை. அவள் நல்லவள். அப்போதும் இப்போதும் உள்ள பல பெண்களைப் போலவே, இன்ன மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அதை மேன்மைப்படுத்துவதுதான் அவளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அவளுக்குப் பெரிய கேள்விகள் எதுவும் கேட்கத் தெரியாது. நான் ஏன் முதலாளியாக இல்லை என்றெல்லாம் அவள் கேட்க மாட்டாள். உடனே என்ன செய்ய முடியுமோ அதில்தான் அவளது கவனம் இருக்கிறது… வாழ்க்கையில் நம் மன அமைப்பு, அதிர்ஷ்டம் இரண்டுக்கும் இடம் இருக்கிறது. நான் அதை விவரிக்க விரும்பினேன். அவளுக்கு முக்கியமாக இருந்த அந்தரங்க விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசக கவனத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தேன் – இது ஒரு வகை ஹென்றி ஜேம்ஸ் பாணி. நம் எல்லாருக்கும் அது உண்டு. சில சமயம் பெரிய நிகழ்வுகளில் அவை தொலைந்து போய்விடும், ஆனால் அவை நம்மோடிருக்கும். (more…)