பிற

எதற்காக எழுதுகிறேன்? – மு. கோபி சரபோஜி

கோபி சரபோஜி

CIMG0171

எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை முன் வைத்து விடை தேட முயன்ற போது  அதற்கானக் காரணங்களைத் தேடி மனம் கடந்த காலங்களுக்குள் நுழைய ஆரம்பித்தது. பாரதி எடுத்துக் கொண்ட சுய உறுதி போல ”எழுத்து எமக்குத் தொழில்” என்ற உறுதிப்பாட்டோடு எல்லாம் எழுத வரவில்லை என்ற போதும் எழுத்து எனக்கு வசப்படுவதைக் கண்டடைந்த பருவம் நினைவில் இருக்கிறது. பள்ளிக் காலத்திலேயே வாசிப்புப் பழக்கம் இருந்தது. இலக்கிய வாசிப்பெல்லாம் இல்லை. கையில் கிடைக்கும் புத்தகத்தை, இதழ்களை வாசிப்பது என்ற அளவில் மட்டுமே! கல்லூரியின் இறுதி ஆண்டில் அந்த வருட ஆண்டுமலருக்காக படைப்புகள் கேட்ட போது ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தது தான் முதல் எழுத்து. அது ஆண்டுமலரில் வந்ததும் நண்பர்கள் சிலாகித்ததைத் தொடர்ந்து எழுதிப் பார்த்த கவிதைகள்  நாட்குறிப்பேட்டிற்குள்ளேயே கிடந்து தவித்தன.

கொஞ்சம் கொத்தாய் சேர்ந்த கவிதைகளை என் தந்தையிடம் வாசிக்கத் தந்த போது அவர் அதை ஒழுங்கு படுத்தி புத்தகமாக்கும் யோசனையைத் தந்ததோடு அவரே அதற்கான முதலீட்டையும் செய்தார். வெளியீட்டு விழா, அறிமுக விழா என அந்த நூல் சார்ந்து அவர் செய்த ஏற்பாடுகளில் கிடைத்த பாராட்டுகளும், பரிசுப் பொருட்களும், கையில் திணிக்கப்பட்ட பணக் கவர்களும் எனக்குள் எழுத்தின் மீது ஒரு வசீகரத்தை உண்டு பண்ணச் செய்திருந்தது.

பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள் எழுத ஆரம்பித்த சமயத்தில் என் வாசிப்பு தன்னம்பிக்கை நூல்களின் பக்கம் சாய ஆரம்பித்திருந்தது. அதன் உந்துதலில் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தொடராக நாளிதழ் ஒன்றில் வந்த போது நண்பர்கள் வட்டத்தில் ஒரு தனித்த அடையாளம் கிட்டியது. போதாதென்று பத்திரிக்கையில் இருந்து வந்த சொற்பத் தொகைக்கான காசோலையும் எழுத்தின் மீதான ஆர்வத்திற்குத் தூபம் போட்ட படியே இருந்தன.

பதிப்பகம் மூலம் புத்தகங்களை வெளியிட்டால் உலகம் முழுக்க நம் பெயர் தெரிந்து விடும் என்ற அந்த வயதிற்கே உரிய ஆசை பதிப்பகங்களைத் தேட வைத்தது. பதிப்பக வெளியீடுகளுக்காகவே புதிய நூல்களை எழுதும் முயற்சியைச் செய்ததில் வெற்றியும் கிடைத்தது.  தீராத ஆசையும், திகட்டாத முயற்சியும் பதிப்பகங்கள் வழி நூல்களைக் கொண்டு வர வைத்தது.  புத்தகம் போட்டதில் நட்டம் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் பணத்தைப் போட்டுக் கையைச் சுட்டுக் கொள்ளாததும், வெளியாகிய நூல்கள் தமிழக நூலகங்களுக்குத் தேர்வான செய்தியும் ஒரு சேர எனக்கு நிகழ்ந்தது. தொடர்ந்து நான்கு நூல்கள் எழுதி வெளியானதுமே  ”ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்” என்ற கதையாய் தொடர்ந்து எழுதும் ஆசை மடை திறந்த வெள்ளம் போல வடிந்து விட்டது. அதன்பின் பல மாதங்கள் ஒன்றுமே எழுதாமல் இருந்தேன்.

அந்தச் சமயத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடியும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும் நண்பர்கள் வெவ்வேறு ஊர்களுக்கும், அந்நிய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினர்.  வாசிப்பும், நண்பர்களுடனான அரட்டைகளுமே எனக்கான பொழுதுபோக்காக இருந்து வந்த நிலையில்  படித்ததை, கேட்டதை, பாதித்தவைகளைப் பகிர்ந்து கொள்ளப் பயன்பட்டு வந்த நண்பர்களின் இடப்பெயர்வு மனதில் பெரும் பாறையாய் கிடந்து அழுத்திக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக என் கோபங்களை, சங்கடங்களை, அழுத்தங்களை, சந்தோசங்களை எழுத்தாக்க ஆரம்பித்தேன். எனக்கே எனக்கான எழுத்துக்களாக அவைகள் இருந்தன. எந்தக் கட்டாயமும், வரையறைகளுமின்றி அவைகள் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்த போதும் மனதில் இருந்த அழுத்தம் குறையவில்லை. அப்படிக் குறைய வேண்டுமானால் அதை என்னில் இருந்து வெளியில் கடத்த வேண்டும் என்று தோன்றியது. அப்படிக் கடத்தி விடுவதற்காக படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்கள் எனக்குப் பெரும் உதவியாக இருந்தன. நான் கடந்து போகின்ற, என்னைக் கடத்திப் போகின்ற அனைத்தையுமே கதை, கவிதை, கட்டுரை என பல்வேறு தளங்களில் தொடர்ந்து பதிவு செய்ய ஆரம்பித்ததில் எழுத்து என்னை இன்னும் இறுகப் பிடித்துக் கொண்டது.

என் எழுத்து வெளியீடாக வருமா? வராதா? படைப்பாக அங்கீகரிக்கப் படுமா? அல்லது கேலி செய்யப்படுமா? சன்மானம் கிடைக்குமா? கிடைக்காதா? என்றெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. வாசிக்கிறவனிடம் மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற. அவஸ்தை எல்லாம் இல்லாமல் என் எழுத்து எனக்கு வடிகாலாக, கொண்டாட்டத்தைத் தருவதாக இருந்தால் போதும் என்ற மனநிலையோடு மட்டுமே எழுதுகிறேன். சில நேரங்களில் என் படைப்புகளின் வழியாக மற்றவர்கள் என்னோடு உரையாட மாட்டார்களா? எனக் காத்திருப்பதும் உண்டு. அவ்வாறே சில புத்தகங்களைப் படிக்கும் போது இந்த நடையில் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனத் தோன்றும். அந்த நடையில் புதிய மற்றும் சரியான தரவுகளைத் தேடி அப்படியாக எனக்கு நானே எழுதி வாசிக்கிறேன். அதையே நூல்களாக்கி மற்றவர்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். நான் மற்றவர்களோடு உரையாடலுக்கு அமரும் ஒரு திண்ணையாக மட்டுமே இன்றளவும் என் படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எழுத்தின் வழியாக வாழ்வாதாரத்துக்குத் தேவையான  பொருளாதாரம் கிடைக்கும் என ஆரம்பகாலத்தில் நான் நம்பியது    தவறு என்பதை எழுத ஆரம்பித்த அடுத்த சில ஆண்டுகளில் கண்டு கொண்டேன். அந்த எதார்த்த நிலையைக் கண்டு கொண்ட பின்பு எழுத்தின் வழி என்ன கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் போய் விட்டது. இந்த எதிர்பார்ப்பற்ற நிலை எழுத்தைக் கட்டற்ற சுதந்திரத்தோடு கையாள்வதற்கு உதவியது,

எதற்காகவும், எவர் பொருட்டும் வலிந்து எழுதவில்லை என்றாலும் என் கோபத்தை, இயலாமையை, சந்தோசத்தை, சங்கடத்தை, சலிப்பை பல்வேறு வகைமைகளில் பிரித்து அடுக்கி மற்றவர்களின் வாசிப்பிற்கேற்ற வகையில் கொடுப்பதற்காக நிறைய மெனக்கெடுகிறேன். அந்த மெனக்கெடல் மூலமாக ஒரு வித திருப்தியான, சஞ்சலமற்ற உணர்வைப் பெற முயல்கிறேன். அந்த முயற்சி நூறு சதவிகிதம் வெற்றி தரவில்லை என்ற போதும் இப்போதைக்கு எனக்கு அது போதுமானதாக இருக்கிறது. அதனால் தான் எழுதியே தீர வேண்டும் என்ற வேட்கை இன்றி எழுதவும், மனம் விரும்பாத பட்சத்தில் எதுவுமே எழுதாமல் வாரக் கணக்கில் சும்மா இருக்கவும் என்னால் முடிகிறது. ஒருவேளை எழுத்து எனக்குள் நிகழ்த்தும் மாற்றத்தை அதன் மூலம் நான் கண்டடைந்து கொண்டிருப்பதை வேறு ஏதேனும் ஒன்றின் வழியாக என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை வந்து அது வாய்க்கப் பெருமானால் இன்னும் சந்தோசம் அடைவேன். படைப்பாளியாய் இருக்கும் அவஸ்தையில் இருந்து தப்பிப்பதற்கான அற்புத சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்வேன். படைப்பாளியும் வாசகனுமாய் பயணிக்கும் இரட்டைக் குதிரைச் சவாரியைக் கைவிட்டு நல்ல வாசகனாய் மட்டும் ஒற்றைக் குதிரைச் சவாரியைச் செய்யவே விரும்புவேன். விரும்புகிறேன்.

(இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் என்ற கிராமத்தில் பிறந்த மு. கோபி சரபோஜி, அறிவியலில் இளங்கலைப் பட்டமும், தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, வரலாறு, சிறுகதை, ஆன்மிகம், நாவல், விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும் பயணித்து வருகிறார்,

கல்கி, பாக்யா, கணையாழி, சிகரம், வெற்றிநடை, மகாகவி, அந்திமழை, தமிழ்முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், கருந்துளை, தீக்கதிர்-வண்ணக்கதிர், அருவி, உயிர் எழுத்து, வாதினி, தமிழ் இந்து, கலைஞன் உள்ளிட்ட அச்சு இதழ்களிலும்,பதிவுகள், கீற்று, திண்னை, வார்ப்பு, பதாகை, மலைகள், சொல்வனம், நிலாச்சாரல், உயிரோசை, அதீதம், வினவு, கலையருவி, வல்லமை, எதுவரை?, முத்துக்கமலம், இன்மை, எழுத்து, லங்காஸ்ரீ, யாவரும்.காம், நந்தலாலா, கொலுசு, காற்றுவெளி, தழல், செம்பருத்தி உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன,

மணிமேகலைப் பிரசுரம், நிவேதிதா பதிப்பகம், தீபம் வெளியீட்டகம், கிழக்கு பதிப்பகம், கற்பகம் புத்தகாலயம், காளீஸ்வரி பதிப்பகம், விகடன் பிரசுரம், அருணா பப்ளிகேஷன்ஸ், விஜயா பதிப்பகம், நக்கீரன் பதிப்பகம், அகநாழிகை, வின்வின் புக்ஸ், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகிய பதிப்பகங்கள் வழியாக இதுவரை 24 நூல்கள் வெளி வந்துள்ளன.

”விரியும் வனம்” என்ற நூல் விமர்சனக் கட்டுரைத் தொகுப்பும், ”சலனக் கிரீடம்” என்ற கவிதைத் தொகுப்பும் மின்னூலாக வெளிவந்துள்ளன. இவரது வலைப்பக்க முகவரி : gobisaraboji.blogspot.com/)

எதற்காக எழுதுகிறேன்? – சத்யராஜ்குமார்

சத்யராஜ்குமார்

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. கேட்கப்படும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் கிடைக்குமென்றாலும், ஒரே ஆளிடமும் எல்லா சமயத்திலும் இதற்கு ஒரே ஒரு பதில் இருக்காது. குறைந்தபட்சம் என்னுடைய அனுபவம் அப்படித்தான் இருக்கிறது.

எந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படுகிறேன், எந்தக் காலகட்டத்தில் கேட்கப்படுகிறேன் என்பதைப் பொறுத்து பதில் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது.

‘எதற்காக எழுத ஆரம்பித்தேன்’ என்பதில் இருந்து துவங்க வேண்டும்.

படித்த புத்தகங்கள் மனசுக்குள் கலைடாஸ்கோப் பிம்பங்களை எழுப்ப காகிதத்தில் அவற்றைக் கொட்டுவது படித்தலின் நீட்சியாகத்தான் ஆரம்பித்தது.

வீட்டில் கதைகளைப் பற்றிய விவாதங்கள் நடக்கும். எழுதுபவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிக் கொள்வார்கள். கதை எழுதுபவருக்குப் புத்தகங்களில் அதிகப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. பெயரைக் கொட்டை எழுத்தில் வெளியிடுவதையும் கவனிக்க முடிந்தது. பத்திரிகைகளைத் தபாலில் அணுக முடிவதையும், எழுத்தாளர்களுக்கான புகழையும் பார்த்து அச்சில் எழுத வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது.

ஒப்பீட்டளவில் அப்போதைய கால கட்டத்தில் பிரபல அச்சிதழ்களில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. வீடுகளில் வானொலிக்கு அடுத்தபடியாக அவையே பிரதான பொழுதுபோக்கு சாதனமாயிருந்தன. குறிப்பிட்ட தரத்தில் எழுதுவது அவசியமாயிருந்தது. என் முதல் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ஒரு ப்ளஸ் டூ லெவெல் பையன் எஸ். ஏ. பி, ராகிரா, ஜராசு போன்ற ஜாம்பவான்கள் ஆட்சி நடத்தும் குமுதத்தில் எழுத முயற்சி செய்தால் வேறென்ன ஆகும்.

ஊர் பேர் தெரியாத புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு பிட் நோட்டீஸ்தனமான பத்திரிகையில்தான் ஒரு கதை எழுத முடிந்தது. எதிர்பார்த்த பேரும், புகழும், அங்கீகாரமும் அதனால் கிடைக்கவில்லை.

“எவ்வளவு குடுத்தாங்க?”

“என்ன புக் இது? இதுல படமே இல்லையே?”

மொத்தத்தில் நான் பேப்பரில் எழுதி நாலு பேரிடம் வலியச் சென்று கொடுப்பதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஸோ, எதற்காக எழுதுகிறேன்? அந்தச் சமயத்தில் கேட்டிருந்தால் தெளிவாக ஒரே ஒரு பதில்தான்.

புகழ்.

எழுத்தை நீ வாசகர்களிடம் சேர்ப்பது முக்கியமில்லை. எழுத்து வாசகர்களை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். எனக்கு மனதில் பட்டதை சுவாரஸ்யமான மொழியில் பகிர்வதற்காக எழுத ஆரம்பித்தது, எப்படியாவது பகிர வேண்டும் என்பதிலிருந்து இப்படித்தான் பகிர வேண்டும் என்ற சட்டதிட்டத்துக்குள் வந்து மாட்டிக் கொண்டது.

பிரபல வார இதழ்களில் எழுதிப் புகழ் பெற வேண்டும்.

இலக்கு தெளிவானதும் அதை நோக்கி நகர்வது எளிதாகி விடுகிறது. அதைத்தான் இலக்கியம் என்கிறோம். வார இதழ் இலக்கியம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் சாவி, அதன் பின் இதயம் சிறுகதைக் களஞ்சியம், தாய், இதயம் பேசுகிறது, குமுதம், விகடன்,கல்கி, அமுதசுரபி, கலைமகள் இப்படி நான் எழுதும் பத்திரிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. வாசகர் கடிதங்கள் வீட்டுக்கு வந்தன. வாசகர்களும் தேடி வந்து சந்தித்து உரையாடி விட்டுப் போனார்கள். நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், “யார் அதுன்னு கேட்டிங்களே இவர்தான் சத்யராஜ்குமார்” என்று யாராவது ஒருவர் யாராவது இன்னொருவரைக் கூட்டி வந்து அறிமுகம் செய்வார்கள். இதோ நீ கேட்ட ப்ராபல்யம் கிடைத்து விட்டது. இதற்காகத்தானா எழுதுகிறேன்? இல்லை போலிருக்கிறது. அப்படி இருந்தால் அதையேதானே இன்னமும் செய்து கொண்டிருந்திருப்பேன்.

“புக்ல எழுதினா பணம் கிடைக்குமா?” ஒவ்வொரு எழுத்தாளனையும் யாராவது ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டு இம்சைப்படுத்தாமல் இருக்க மாட்டார்.

“கிடைக்கும் ஸார்.”

“எவ்வளவு குடுப்பாங்க?”

“சன்மானம் அம்பது ரூவா. சில புக்ஸ்ல எழுபத்தஞ்சு கூட கிடைக்கும். “

பார்வை கொஞ்சம் கேவலமாக மாறிப் போய்விடும். “அவ்வளவுதானா?”

ஓ எழுபத்தஞ்சு எல்லாம் ஜாஸ்தி இல்லையோ? “குமுதம் மாதிரி புக்ஸ் இன்னும் அதிகமா தருவாங்க ஸார். நூறு ரூவா அனுப்புவாங்க.”

“மாசத்துக்கு ஒரு பத்து கதை புக்ல வருமா?”

“அப்படிச் சொல்ல முடியாது. வேணா நாலு வரும்.”

“பத்து வருதுன்னு வெச்சிப்போம். அப்பவும் மொத்தமா மாசம் எழுநூத்தம்பது ரூபா. எழுதிப் பொழைக்க முடியாது போலிருக்கே?”

என்னய்யா பெரிய பணம்? அவர்கள் முகங்களில் பொட்டென்று அறையலாம் போல வந்தது. சரளமாக பிரபல இதழ்களில் எழுத ஆரம்பித்ததால் ‘கவிதை எமக்குத் தொழில்’ என்று சொன்ன பாரதியைப் போல ‘கதை எமக்குத் தொழில்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல வேண்டும் என்று விரும்ப ஆரம்பித்த காலகட்டத்தில் இப்படி அபசகுனமாய்ப் பேசினால் கோபம் வரத்தானே செய்யும்.

நாவல்கள் எழுதினால்தான் அதிக பணம் சம்பாதிக்க முடியும், எழுத்தையே தொழிலாக்கிக் கொள்ள முடியும். பணம் இலக்கானதும் அந்த முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். அது என்ன ஆனது என்பதை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஸோ, எதற்காக எழுதுகிறேன்? ‘எழுத்து எமக்குத் தொழில்’ என்று மார் தட்டிக் கொள்வதற்காக. இலக்கு மாறி விட்டது பாருங்கள். பதிலும் மாறி விட்டது. அந்தச் சமயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் பணத்துக்காகவே எழுதுகிறேன் என்று எளிதாகச் சொல்லியிருப்பேன்.

நான் பகுதி நேர எழுத்தாளனா, முழு நேர எழுத்தாளனா என்று தீர்மானிக்க இயலாத நிலையில் எஞ்சினீரிங் படிப்பு, வேலை, அமெரிக்கா என்று ஓடம் திசை மாறிப் போனது.

முக்கியத்துவங்கள் மாறிப்போயின. முக்கியமாய் அமெரிக்கா வந்த பின் எழுதிச் சம்பாதிக்கும் பணம் முக்கியமில்லாமல் போனது. தீவிரமாய் எழுதுவதற்கான பயிற்சி இருந்தும், பத்திரிகைகளில் பதிப்பிக்க வாய்ப்பிருந்தும் அதை வலுக்கட்டாயமாய்க் கை விட்டதை புகழ் மீதான போதை குறைந்ததால் என்றும் சொல்லலாம்.

அது நாள் வரைக்கும் எங்கிருந்து கதை பெற்றேனோ அந்தத் தமிழக நகரத்து, கிராமத்து சூழலை இழந்து விட்ட பிறகு, அதையே பிரதானமாக வெளியிடும் பத்திரிகைகளிலிருந்து ஒதுங்கினேன்.

ஆனால் அனுபவங்களைக் கதையாய் எழுதும் வியாதி மட்டும் விடவில்லை, அதெல்லாம் பிறவியிலேயே ஒட்டிக் கொள்ளும் மரபியல் குறைபாடாயிருக்கும். இங்கே கிடைப்பதென்னவோ எல்லாமே அமெரிக்க அனுபவங்கள்.

அவற்றைக் கொண்டு இணையத் தளத்தில் ‘துகள்கள்’ என்னும் தலைப்பில் எழுத ஆரம்பித்தேன். சுமார் நானூறு, ஐநூறு வாசகர்கள். பணமும் இல்லை, புகழும் இல்லை. ஜஸ்ட் எழுத வேண்டும். அவ்வளவுதான். சில அனுபவங்களைச் சக மனிதர்களிடம் பரிமாற விளைகிறேன். அதற்காக எடுத்துக் கொண்ட எழுத்து என்ற இந்த வடிவம் வடித்து முடிக்கும்போது எனக்கே ஒரு பரவசம் தருகிறது.

சும்மா எழுத ஆரம்பித்து – புகழ் வேண்டும் என்று தடம் பிறழ்ந்து, அப்புறம் இல்லை, இல்லை பணம் வேண்டும் என்று திசை மாறி மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வருகிறது பாருங்கள்.

அப்படியானால் எதற்காக எழுதுகிறேன் என்றால் சும்மா அது ஒரு கலையுணர்வோடு கூடிய தகவல் பரிமாற்ற சந்தோஷம் அவ்வளவுதான். அதுதான் நிஜமான காரணம் போல் தோன்றுகிறது. அதன் மூலமாய்ப் பணம், புகழ் எல்லாம் கிடைத்தால் மகிழ்ச்சியே… இல்லா விட்டாலும் நஷ்டமில்லை. அப்படித்தான் என் வாழ்க்கை இது வரை நகர்ந்திருக்கிறது.

ஆனால், எதற்காக எழுதுகிறேன் என்பது தாண்டி ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு சில விதிவிலக்கான நட்சத்திர எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் தமிழில் எழுதி லட்ச லட்சமாய் சம்பாதிப்பதில்லை.

ஒரு பத்தியாகட்டும், நாலு பக்கமாகட்டும். இலக்கியச் செறிவானதாகட்டும், சும்மா மொக்கையான கட்டுரையாகட்டும். எழுதுவதற்காக ஒவ்வொருவரும் பணம், நேரம் உட்பட பல விஷயங்களைத் தியாகம் செய்து தன்னார்வமாகத்தான் ஒரு படைப்பைத் தமிழுக்கு அளிக்கிறார்கள். நிறைய மெனக்கெடுகிறார்கள். அதனால் குடும்பங்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள். தற்கொலை வரை போனவர்கள் இருக்கிறார்கள்.

எழுதுபவர்களுக்கு மாலை மரியாதை செய்ய வேண்டாம். பொன்னாடை போர்த்த வேண்டாம். தமிழில் எழுதுவதும் தமிழுக்கான ஒரு சேவைதான் என்று உணர்ந்தால் மட்டும் போதும்.

oOo

(தமிழ் வார, மாத இதழ்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர். இலக்கிய சிந்தனை விருது பெற்றவர். கல்கி, கலைமகள், அமுதசுரபி உட்பட பல இதழ்களில் இவரது பல சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. தயாராகி வரும் ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்துக்கு கதை-திரைக்கதை எழுதியுள்ளார்)

எதற்காக எழுதுகிறேன் – சரவணன் அபி

சரவணன் அபி

எதற்காக எழுதுகிறேன்?

எழுதுவதின் லௌகீக தேவை இல்லாத என் போன்றோரிடம் எழுத்தின் தேவை பலவாறாக இருக்கலாம்; அவை காலப் போக்கில் மாறவும் செய்யலாம். நான் எழுதத் தொடங்கிய நாட்களில் இருந்து, இதோ இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இன்று வரை எனக்கான எழுத்தின் தேவையும் மாறியே வருகிறது, என் எழுத்துக்களைப் போலவே.

மூன்று கால கட்டங்கள்; மூன்று விதமான தேவைகள். மூன்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது நான் எனக்காக மட்டுமே எழுதுகிறேன் எனப் புரிகிறது.

பதின்ம வயதின் இறுதிக்காலத்தில், புறக்கணிப்பும் (அல்லது அவ்வாறு நினைத்துக் கொள்கிற) அதனால் விளைந்த கொதிப்பும், கொந்தளிப்பும், உணர்வெழுச்சியும், மயக்கமும், பருவமும் அதன் தன்வயப்படலும், கற்று கடந்து விடக்கூடிய, கண்முன் தெரிவதாக நம்பிய தூரங்களும், அறிவின் கர்வமும், சகங்களின் அலைக்கழிப்பும், புலனழிவும், அழிந்து உருமாறுதலுமாக இருந்தபோது எழுதவாரம்பித்தேன்.

எழுத்து அப்போதெனக்கு வலியோடு கூடிய போகம் போல் காட்சியளித்தது. என்னிலிருந்து திமிறி விடுபட்டு, நானாக, என்னில் பகுதியாக, மூச்சுப்பரிதலாக ஆசுவாசம் தந்தது எழுத்து. சூனியங்களில் நிலைத்து, போதை போல் தொலைந்து நின்ற காலங்களில் மீண்டு வரும் வழியாகவும் எழுத்தே இருந்தது.

ஏதும் எதிர்பாராமல் எதுவும் அணிந்து கொள்ளாமல் நானாக இருக்கிற கட்டற்ற விடுதலை உணர்வே எழுத்தையும் என்னையும் பிணைத்திருந்தது.

வேண்டியன தயக்கமின்றி உரைத்தலும், கசடின்றி புனைவின்றி, சிலசமயம் சமநிலை பிறழ்ந்த, எளிதில் கோஷங்கள் போல் தோன்றிவிடக்கூடிய, ஆரவாரமான வெளிப்பாடு அன்றென் எழுத்தின் அடையாளம். அதைத் தரவேண்டிய தேவை எழுத்துக்கு இருந்தது.

காதலும் சகமும் பற்பல உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் என்னைக் கடத்திச் சென்ற இரண்டாவது காலகட்டத்தில் எழுத்தின் தேவை எப்படியிருந்தது?

ஓர் அடைக்கலமாக, வலியை கசந்து உமிழ்ந்தாலும் சகித்துக்கொள்கிற ஒரு தாதியாக, இரவுகளின் ஆயிரக்கணக்கான கண்ணீர்த்துளிகளை உள்ளிளுத்துக்கொள்கிற வெம்மையான அரவணைப்பாக எழுத்து மாறி விட்டிருந்தது.

பார்க்குமெவற்றிலும் வாழ்வின் உணர்வுகளை சித்தரித்து வடித்துவிடக் கூடிய ஒரு நிரப்பியாக எழுத்து உருமாறியிருந்தது.

இன்றோ, ஆயிரம் உறவுகள் சூழவிருந்தாலும், உள்ளளவில் தனிமை உணர்வதும், அத்தனிமையின் நிறைவில் மகிழ்வதுமான இந்நிலையில், எழுத்தென்பது என்னை எனக்கு பிரதிபலித்துக் கொள்ளும் ஓர் ஆடியாக மாறியிருப்பதைக் காண்கிறேன்.

சூனிய தரிசனங்கள், உறவுச் சிக்கல்கள், மரண பயங்கள் ஆகியவற்றின் உறுத்தல்கள் மெதுமெதுவே மட்டுப்பட்டு, மனிதம் மட்டுமேயான கருதுகோள் எதிலும் தோன்றும்போது, மனிதத்தின் ஒற்றைத்துளியான என்னை இம்மனிதத்தில் எப்படி பொருத்திப் பார்த்துக் கொள்வது என்று (இன்னும் கூட) சுய பரிசோதனை செய்துகொள்கிற ஓர் ஆடியாக எழுத்தின் தேவை இன்றிருக்கிறது.

நாளை, உயிரின் மதுவாக, கடைவழியின் இறுதிச்சுவையாக எழுத்து என்னுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் எழுதுகிறேன். எழுதுவேன்.

oOo

(மதுரையில் பிறந்து சென்னையில் படித்து  வளர்ந்த சரவணன் அபி, படித்தது பொறியியல். “இளம் பருவத்தில், நோய்ப்பட்ட உடலும், எந்நேரமும் எதையாவது படிக்கத் தூண்டிய பெற்றோரும், எதையும் விவாதிக்க தயாராக இருந்த நண்பர்களும், கடமையென இல்லாமல் தமிழ் போதித்த குருமார்களும் வாய்த்த நல்லூழின் காரணமாக பதின்பருவத்தில் எழுத ஆரம்பித்தேன்,” என்கிறார் அவர்.  மேலும், தன் கவிதைகள் குறித்து, “எளிய மொழி, சிக்கலான படிமங்கள் என ஆரம்பித்த என் கவிதைநடை இன்று குறைந்த படிமங்கள் நேரான கூறுமொழி என மாறியிருப்பதை காண்கிறேன். எஞ்சிய காலத்தில் எப்படி மாறும் எதைப் பேசும் எனக் காண நானும் காத்திருக்கிறேன்,” என்று கூறுகிறார்.)

எதற்காக எழுதுகிறேன்? – சத்யானந்தன்

சத்யானந்தன்

sathyanandhan

பகுதி ஒன்று – கேள்வியைப் புரிந்து கொள்ளுதல்

ஏன் எழுதுகிறேன் என்று பதாகை கேட்டிருந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் பதில் என்னை எழுத உந்துவது எது மற்றும் என் சிந்தனையின் தொடர் பயணம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி கேட்கிறார்கள் என்று பொருள். ஆனால் எதற்காக எழுதுகிறேன் என்பதே கேள்வி. எதற்காக? எந்தக் குறிக்கோளுடன் அல்லது நோக்கத்தோடு என்பதான கேள்வி அது.

பதிலைத் துவங்கும் முன் எழுத்தாளர்கள் நோக்கத்தோடு குறிப்பிட்ட ஓர் இலக்கோடு எழுதுகிறார்கள் என்று நாம் பொதுவாகக் கூற முடியுமா என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். ஒரு நோக்கத்தைக் கற்பித்து ஒரு பதிப்பாசிரியர் என் மனதைப் புண்படுத்தினார். அதை முதலில் பார்ப்போம்.

அவரது நூல் வெளியீட்டு விழாவில் நான் நூலின் மதிப்பு கருதி அதன் செறிவு கருதி பேசுவதற்காகப் போயிருந்தேன். மற்றொரு பேச்சாளர் வந்தவுடன் நமது பதிப்பாசிரியருக்கு உற்சாகம் அதிகமாகியது. மடை திறந்த வெள்ளமாகத் தாறுமாறாகப் பேசிக் கொண்டே போனவர், “எழுத்தாளர்கள் தன்னை (பிறர் பார்வையில்) மேம்படுத்திக் கொள்வதற்காக எழுதி செலவு செய்து வெளியிடுகிறார்கள்,” என்று ஒரு போடு போட்டார்.

புகழ் பெறுவது தன்னை புத்திசாலியாக, சிந்தனையாளனாகக் காட்டிக் கொள்வது இதற்கெல்லாம் அரசியல் அல்லது சினிமா போன்றவை நிச்சயம் மிகுந்த துறைகள். இன்று கவிஞன் என்று தமிழ்நாட்டில் ஒருவர் அறியப் பட வேண்டுமென்றால் அவர் சினிமாப்பாடல் எழுதியிருக்க வேண்டும். மேடைப் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் இவற்றால் தனது சிந்தனையை வியாபாரப் பொருளாக்கி நிறைய தூரம் போக முடியும்.

நம்முடைய எழுத்தாளர்களும் புத்தகம் கவனம் பெற விழாக்கள் பெரிய அளவில் நடத்துவது என்று களம் இறங்கி விட்டார்கள். மறுபடி கேள்விக்கு வருவோம். ஒரு நோக்கம் அல்லது இலக்கு என்ற ஒரு புள்ளியைச் சுட்டிக் காட்டி இதனால் எழுதுகிறார்கள் என்று கூற முடியாது.

உண்மையில் எழுத்து என்னும் மனோரதம் எழுத்தாளனின் சிந்தனையை வாசகனுடன் பகிரும் உந்துதல் உள்ளவரை நகர்கிறது. இந்தப் பகிரும் உந்துதல் எழுத வைக்கிறது. பகிர்வதற்காக எழுதுகிறார்கள் என்ற விடை மிகவும் கேள்விக்கு அண்மையானது. இந்தப் பகிரும் உந்துதல் எப்படி எல்லா எழுத்தாளர்களிடமும் இருக்கிறது?

இதற்கான விடை மிகவும் எளிமையானது. தீவிர எழுத்துப்பணியில் ஒருவர் குதிக்கும் முன் அவர் வாசிப்பில் துவங்குகிறார். இது எல்லாப் படைப்பாளிகளுக்குமே பொருந்தும். வாசிப்பில் இலக்கியம் என்னும் விளிம்பில்லாப் பெருவெளியில் தான் லயித்தவை ரசித்தவை அவை பற்றிய விமர்சனங்கள் யாவற்றையும் வாசித்து ஒரு கட்டத்தில் தன்னுள் அசலாய் இருக்கும் ஒரு கருவை இலக்கிய வடிவாக்கும் முனைப்பைப் பெறுகிறார். அந்த முனைப்பில் அவர் தனது அசலான கற்பனை, சிந்தனை, விமர்சனம் இவை யாவுமே சமுதாயத்தை விலகி நின்று விமர்சிக்கும் கலகப் பொறியுடனிருப்பதாக உணர்கிறார். தனித்து அறச் சீற்றத்துடன் சமூகத்தில் தான் ஏற்காதவற்றாய் அங்கத்ததுடன் கூர்மையாக ஒரு கலை வடிவாகக் கவிதையாகவோ கதையாகவோ கட்டுரையாகவோ பகிர்கிறார்.

மறுபடியும் பகிர்வதற்கு வந்து விட்டோம். சமுதாயத்திலிருந்து தனித்து நின்று சிந்தித்தாலும் நான் அல்லன் – என் சகஜீவிகளே உம்மோடு பகிர்வதில் நான் சமூகஜீவியாக, பிணைப்புள்ளவனாக இருக்கிறேன் என்னும் நட்புக்கரத்துடன் படைப்பாளி முன்னகர்கிறார்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை நாம் கடக்கிறோம். எது இரண்டு எழுத்தாளர்களை வேறுபடுத்துகிறது. பன்மையே சரியானது. எவை இரண்டு எழுத்தாளர்களை வேறுபடுத்துகின்றன?

முதலாவது பின்னணி. வெள்ளிக் கரண்டியுடன் அமையும் குழந்தைப் பருவம் கண்டிப்பாக பாதிக்கிறது. மிகவும் மோசமான வறுமை சார்ந்த வலி மிகுந்த குழந்தைப்பருவம் எதிர் துருவம்.

இணையானது அவர் எழுதத் துவங்கும் காலகட்டம். காலகட்டம் இரண்டு விதமாக. ஒன்று அவரது வயது மற்றும் குடும்பத்தில அவர் நிலை. இரண்டாவது அவரது சமகாலத்தில் வெளியாகும் படைப்புக்கள். பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மற்றும் சமகாலம் என நாம் ஒரு வசதிக்காகப் பிரித்துக் கொள்ளலாம்.

அடுத்தது அவர் எந்த அளவு வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கிறார்? தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை- நிகழ்வுகளை- பேச்சை – மௌனத்தை- சுரண்டலை – வன்முறையை -அதிகாரத்தை – அடிமைத்தனத்தை- வாய்ப்பை – இழப்பை- வெற்றிகளை- தோல்விகளை- கொண்டாட்டங்களை – புறக்கணிப்புக்களை எப்படி உள்வாங்குகிறார்? அதில் எவற்றைப் பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கிறார்? எப்படிப் பதிவு செய்கிறார்?

பகிர்வதற்காக எழுதியவர் வாசகரை எங்கே இட்டுச் செல்கிறார்? அவர் இட்டுச் செல்ல விரும்பிய இடத்துக்கு எந்த அளவு அருகில் சென்றார்? எந்த அளவு வெற்றி பெற்றார்? இந்த வெற்றி படைப்புக்குப் படைப்பு வேறுபடும். ஒரு பெரிய எழுத்தாளர் சறுக்கிய இடங்கள் நிறைய இருக்கலாம். அதிகம் எழுதாத, கவனம் பெறாத ஒரு பெண் கவிஞர் சாதித்தது நம்மை அயர வைக்கலாம். ஒவ்வொரு படைப்பிலும் எழுத்தாளர் ஒரு உறைகல்லில் சீர்தூக்கப்பட்டு அந்தப் படைப்பில் அவரது வெற்றி இந்த அளவு என்று ஒரு புள்ளியில் நிலை பெறுகிறார். தொடர்ந்து எழுதும் உந்துதல் விமர்சகர், வாசகர் மற்றும் சக படைப்பாளிகளுடனான விவாத‌த்தால் கிடைக்கிறது.

இன்றைய தமிழ்ச்சூழலில் தீவிரமாக இயங்கும் எந்த ஒரு படைப்பாளியும் சகஜீவிகளுடன் பகிர விரும்பும் பரிவு ஜீவ நதியாக ஊற்றெடுப்பதால் மட்டுமே இயங்குகிறார். மிகவும் சோர்வுதரும் எதிர்மறையான சூழல் இது.

எனவே பகிரும் பரிவின் இடையறா உந்துதலால் பகிர்வதற்காக அதுவே ஆகச் சிறந்த வாழ்நாள் முனைப்பு என்பதாக எழுதுகிறார் என்றே இந்தக் கேள்விக்கு மிக அருகாமையான விடையைத் தருகிறேன்.

பகுதி 2 – நான் எதற்காக எழுதுகிறேன்?

முதல் பகுதியில் குறிப்பிடாத எந்தப் புதிய காரணத்தை, விளக்கத்தை நீ கூறப் போகிறாய் என்ற கேள்விக்கு ஒரு விடை உண்டு. என் பயணம் பற்றிய சில விவரங்கள் பல சாளரங்களைத் திறக்கும். அதுவே பகுதி ஒன்றிலிருந்து மேற்செல்வதாகும்.

என்னைப் பற்றிய எளிய அறிமுகம் கவிஞன், விமர்சகன் மற்றும் புனைகதை எழுதுபவன். கவிதை எழுதுவோர் அபூர்வமாகவே பிற வடிவங்களில் படைப்பளிப்பதில் வெற்றி காண்பவர்கள். அந்த அபூர்வம் எனக்கு அமைந்தது. கணையாழி உள்ளிட்ட பல சிறுபத்திரிகைகளில் என் பணி துவங்கியது. 2009க்குப் பிறகு திண்ணை, பின்னர் நவீன விருட்சம், பதாகை, பதிவுகள் ஆகிய இணைய தளங்களில் எனது பதிவுகள் வந்துள்ளன. மிகச் சமீப காலத்தில் மீண்டும் அச்சு ஊடகத்தில் எழுத எண்ணி சில படைப்புக்களை அனுப்பி இருக்கிறேன். விமர்சகனாக இயங்குவதில் சமகால எழுத்துக்களை வாசித்து விமர்சிப்பதில் என் பங்கையும் வெற்றியையும் பல படைப்பாளிகள் பாராட்டியுள்ள‌னர்.

சோர்வு தரும் தமிழ்ச் சூழலில் பலமுறை என்னை நானே கேட்டுக் கொள்வேன், “எப்படித் தொடர்ந்து இயங்குகிறேன்?” எழுதுவதை நிறுத்தி விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? இன்னும் பணியில் இருப்பதால் பல முறை வேலைப்பளு தாள முடியாததாயிருக்கிறது. அலுவலகம், குடும்பம் இரண்டில் ஒன்று படைப்பூக்கம் எழும்பும் நல்ல மனநிலையைக் காவு வாங்கி விடும். இதையெல்லாம் மீறி எழுதினால் தமிழ்ச்சூழல் சோர்வைக் கொண்டுவரும்.

பலமுறை மனதுள் அலசி நான் எழுத்துப் பணியை, படைப்புவெளியில் தீவிரமாக இயங்குவதை எனக்கான ஓர் இடத்தைத் தேடும் பயணமாகக் காணவில்லை. என் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் ஒரு முயற்சியாகக் காண்கிறேன்.

ஜனவரியில் ‘சொல்வனம்’ இணைய இதழ் மற்றும் இலக்கியப் பத்திரிகையான‌ ‘நவீன விருட்சம்’ ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பெரியவர் எழுத்தாளர் அசோகமித்திரனை சந்தித்தேன். ‘எங்கே வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார். சொன்னேன். அடுத்து ஒருவரிடமும் அறிமுகத்தில் அதேயே கேட்டு பதில் வந்த பிறகு அவர் கூறினார், “நீ எங்கே வேலை பார்க்கிறாயோ அது தான் உன் அடையாளம்”. எதையும் எளிமைப்படுத்திக் கூறுபவர் அல்லர் அவர். ஆனாலும் நுட்பமாகவே அதைக் குறிப்பிட்டார்.

எல்லா அடையாளங்களும் குறுகியவையே. நம்மிது சுமத்தப்படுபவையே. சாதி, வயது, பால், வருமானம், குடும்பப் பின்னணி, தோலின் நிறம், தொழில் என மூச்சுமுட்ட வைக்கும் மலினப்படுத்தப்பட்ட அடையாளங்கள்.

இவை எல்லாமே ‘மந்தையின் ஓர் அங்கமாய் வாழ்நாளெல்லாம் வாழ சபிக்கப்பட்டவன் நீ’ என்று சுட்டுபவை. ‘எண்ணிக்கையில் மிகவும் குறுகிய மனதால் மிகவும் விரிந்த இலக்கியவாதிகளுள் நானும் ஒருவன்’ என்னும் அடையாளத்தை மட்டுமே நானாக ஏற்றுக் கொண்டு என் வாழ்க்கையின் பொருளை அந்த அடையாளத்தில் தேடுகிறேன். அதற்காகவே எழுதத் துவங்கினேன். தொடர்கிறேன்.

என் குடும்பத்தினர் முற்றிலும் நிராகரிக்கும் இந்த அடையாளத்தை சகஜீவிகள் முன் எனது ஒரே அடையாளமாகக் கொண்டு நான் நிற்கிறேன்.

oOo

(சத்யானந்தன் கவிஞர். புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளரும்.. பதினைந்து வருடங்களுக்கு மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதிய கோடாங்கி, இலக்கியச் சிறகு ,கனவு உள்ளிட்ட சிறு பத்திரிக்கைகளிலும், திண்ணை மற்றும் சொல்வனம் ஆகிய இணைய தளங்களிலும் தீவிரமாகத் தன் இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். குறிப்பாகத் திண்ணை இலக்கிய இணைய தளத்தில் இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்தவை. திண்ணையில் தொடராக “ஜென் ஒரு புரிதல்”, முள்வெளி- சமூக நாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை இவைகள் அச்சு வடிவத்தில் வராதவை. இவை sathyanandhan.com என்னும் அவரது இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. http://www.pratilipi.com/ இணையத்தில் ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி மற்றும் சரித்திர நாவல் போதி மரம் வெளியிடப்பட உள்ளன. அச்சு வடிவில் வந்த “புருஷார்த்தம் (2000 வருடம்) நாவல் மற்றும் விக்கிரகம் (2003) நாவல் மற்றும் வெளியே வீடு (2003) கவிதைத் தொகுதி ஆகியவை இன்னும் மின் வடிவம் பெறவில்லை. சத்யானந்தன் தொடர்ந்து இயங்கி வரும் சிந்தனையாளர் எழுத்தாளர். sathyanandhan.mail@gmail.com மின்னஞ்சல் வழி அவரைத் தொடர்பு கொள்ளலாம் – நன்றி, பிரதிலிபி.காம்)

மின் கம்பிக் குருவிகள் – எஸ். சங்கரநாராயணன்

 

எஸ். சங்கரநாராயணன்

sankaranarayanan

ஒரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அநத எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது.

எதனால் எழுதுகிறேன்?

அப்படி அலலாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுஙகற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப்பரிமாணக் காட்சி என பரந்து விரிந்து கிடக்கிறது, ஒரு வானம் போல. சமுதாயம் என்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் கட்டமைத்த ஒரு கற்பனை வடிவம். மனித உயிர் சிரஞ்ஜீவியாக வாழ அவாவுறுகிறது. குறைந்த பட்சம் பாதுகாப்பாக வாழ அது ஆவேசப்படுகிறது. அதை அலட்சியமாக, சம்பவங்களின் இடிபாடுகளில் மாட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது. இதற்கு வாழ்வில் ஒரு கூட்டு அமைப்பு, ஒழுங்கு, நியதிகள் என அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறான் மனிதன்.. இந்த ஒழுங்கற்ற மொத்ததில் சிறு ஒழுங்கைப் பிரித்து தன் ராஜ்ஜியத்தை அவன் அமைத்துக் கொள்கிறான். எதிர்பாராத ஒரு ஆபத்தைச் சமாளிக்க, தன்னால் தனியாக அலலாமல், ஒரு மனிதக் கூடடமாக என்றால் வேலை எளிது, என்பது அவன் துணிபு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வேறு வேறு நபர்கள் தருகிறார்கள். மானுடம் வெல்க. மிருகம் மாருதம் ஆனது கிடையாது. மனிதம் மானுடம் ஆகி விட்டது.

மேலதிக ஒழுங்குகளை அவன் வரையறை செய்துகொண்டபோது, அதற்கான கணக்குகளில், இந்த ஒழுங்கு சார்ந்த கலை வடிவம் தன்னைப் போல சித்தித்தது அவனுக்கு. வாழ்க்கையைக் காரண காரியங்களுக்கு உட்படுத்துகிற அவனது பிரியத்தில், இந்த கலை ஒழுங்குகள் அவனைக் கவர்கின்றன. இப்படிப்பட்ட ஒன்றைத்தான் அவன் வாழ்க்கையில் லட்சியப்படுத்துகிறான். ஒழுங்குகள் சார்ந்த உலகத்தில் மரண பயம் இல்லை. மரணத்தை மீறி வாழ்க்கை சார்ந்து அவனுக்கு நெடுந்தூரப் பயணம் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது என்கிறது கலை. எடுத்துச் சொல்கிறது கலை. அவனது மனசின் விழைவு அது.

ஆனால் கலை என்பது என்ன? கலை எப்படித் தோன்றியது?

கலை என்பது அடிப்படையில் முரண். ஒரு கருத்துக்கு நீட்சி என்றோ, மாற்று எனறோ உதிக்கும்போது அங்கே பரிமாற்றம் நிகழ்கிறது. எது சரி எது தவறு போன்ற விவாதங்கள் நிகழ்கின்றன. கலை அதற்கு ஏற்பாடு செய்கிறது. நல்லது நிற்க வேண்டும். நிலைக்க வேண்டும். இதுவரை இருந்தது அகன்று வேறு, சரி எனப் படும் ஒன்று, மேல் மட்டத்துக்கு, புழக்கத்துக்கு வருகிறது. கலை ஒரு முரண் சார்ந்த வழியில் மேலதிக உன்னதம் நோக்கி மனிதனை வழி நடத்துகிறது.

அதோ, என்கிறது கலை.

ஒரு நல்ல பாடல் கேட்கிறோம். மனசின் இருட்டு, அல்லது கவலை மெல்ல மேகம் விலகுவதாக உணர்கிறோம். கலையின் ஒழுங்கு, அந்த உள்மனச் சிதறலைத் திரும்ப சமப்படுத்த முயல்கிறதாக நமக்கு அமைகிறது. ஒரு பிரச்னை. அதைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. கலை, புனைவு என்கிற வடிவம் வேறொரு பிரச்னையை எடுத்துப் பேசுகிறது. அதற்கான தீர்வு அதில், அந்தப் புனைவில் நேரடியாகவோ உட்பொருளாகவோ காட்டப் பட்டிருக்கும். அல்லது விவாதிக்கப் பட்டிருக்கும். வேறொரு பிரச்னையை அங்கே விவாதித்திருக்கலாம். நம் பிரச்னை என்ன? அதன் தீர்வு நோக்கி நம்மை எப்படி சமப்படுத்திக் கொள்கிறோம்… என கலை சிந்தினைகளைத் தருகிறது. அது சொன்ன தீவை ஒட்டியும் வெட்டியும் இப்படியும் அப்படியுமாய் கலை ஊடாடுகிறது.

மின கம்பிக் குருவிகள்.

எதனால் எழுத வந்தேன் தெரியாது. ஆனால் ஒழுங்குகளுக்கும், ஒழுங்கற்ற சம்பவங்களுக்கும் ஒரு ஒத்திசைவைத் தர கலை முயல்வதை நான் அவதானிக்கிறேன். கட்டாயம் மனிதனுக்கு அது தேவையாய் இருக்கிறது, என்பதை உணர்கிறேன். எனக்கு அது தேவை.

இந்த சமூகத்தில் நான் ஓர் இடத்தில் பணி செய்கிறேன். எனக்கு அந்த வேலை அத்தனை உவப்பாய் இல்லை. ஒருவேளை வேறொரு இடத்தில் நான் இன்னும் சிறப்பாக இயங்க முடியுமோ என நினைக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதைவிட ஒரு நல்ல மனைவி திடைத்திருக்கலாம், என்று சில சமயம் தோன்றுகிறது. நான் பிறந்த ஊர், என் குடும்பம்… எல்லாம் சார்ந்து எனது அதிருப்திகளை நான் கவனிக்கிறேன். அமைதல், புண்ணியம், விதி என்றெல்லாம் மனசு ஊசல் ஆடுகிறது. யாருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது, என்று தான் உலகம் அமைந்திருக்கிறது. அல்லது, இல்லாத ஒன்றுக்குக் கை நீட்டுவதே மனசின் எடுப்பாக இருக்கிறது. இன்றை விட நாளை மேலாக இருக்க வேண்டும் என மனசு வேண்டுகிறது. அப்படியானால் இருக்கிற இருப்பில் ஒரு மனம் திருப்தி கொண்டு அடங்கவிட முடியாது.

மேலான வாழ்க்கை பற்றிய ஒரு கற்பனையைக் கலை ஊக்குவிக்கிறது.

நான் எனக்கு உகந்த பிரதேசங்களில் பயணிக்க என் கலை எனக்கு, ஒரு படைப்பாளனாக வெகு உதவி. இந்த வாழ்க்கை, இது னக்கு அமைந்தது. என்றால், நானாகத் தேர்ந்து கொண்ட என் எழுத்து, அதில் எனக்கான ஒரு வாழ்க்கையை, உன்னதத்தை நான சிருஷ்டி செய்து கொள்வேன். அதில் எனக்கு வாயத்தது இது என்கிற, இன்னொரு தலையீடு இல்லை. ஏமாற்றங்கள் சாத்தியமே இல்லை.

நான் என் எழுத்தை நேசிக்கிறேன். கலைஞர்கள் பிறப்பது இல்லை. அப்படியெல்லாம் அதித நம்பிக்கை எனக்கு இல்லை. நான் கலைஞனாக உருவானவன். இந்த வாழ்க்கையில் வேறு எங்கும் கிடைக்காத அமைதி, திருப்தி எனக்கு நான் கலைஞனாக ஈடுபாடு காட்டுகையில் எனக்கு வாய்க்கிறது.

ஆகா, இதைக் கைமாற்ற முடியுமா?

அதனால் எழுதுகிறேன்.

என் கதைகள் அதை உறுதி செய்கின்றனவா? செய்ய வேண்டும்.இது என் அவா.

oOo

(எண்பதுகளின் தமிழ் இலக்கியவாதியாக அடையாளப்படும் எஸ். சங்கரநாராயணன் கதை கவிதை குறுநாவல் நாவல் கட்டுரை மொழிபெயர்ப்பு என்று பல்துறைகளில் கால் பதித்தவர். உலகச் சிறுகதைகள் மூன்று தொகுதிகள் உட்பட ஏறத்தாழ 80 நூல்களின் ஆசிரியர். நிஜம் என்கிற சிற்றிதழ் நடந்தியவர். தற்போது ஆண்டுதோறும் இருவாட்சி பொங்கல் மலர் கொண்டு வருகிறார். கச்சிதமான உவமை வீச்சுடனான கவிதை நடை இவரது முத்திரை. சொல்லாடல்களில் புன்னகை வரவழைக்கக் கூடிய நகைச்சுவை மிளிரும். மொழிபெயர்ப்பு குறித்து இவரது கருத்துக்கள் கவனங் கொள்ளத் தக்கவை)