2024

எஸ். சுரேஷ்

“ஃபோன் அடிக்கறது கேக்கல? ஃபோன எடு” அம்மாவின் குரல் என்னை அதட்டியது. அம்மா பக்கத்து அறையிலிருந்து பேசவில்லை. ஃபோன்னிலிருந்து பேசினாள்.

நீங்கள் இன்னும் 2016இல் இருப்பதால் உங்களுக்கு நான் இதை விளக்க வேண்டும். நீங்க ஏதோ நான் அம்மாவின் குரலை ரிங்டோன்னாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கக்கூடும். அதெல்லாம் உங்கள் காலம். இப்பொழுது காலம் மாறிவிட்டது.

‘Machine Learning’ என்று சொல்வதை வைத்து கூகிள் போன்றவர்கள் முதலில் உங்கள் மெயில் படிக்க ஆரம்பித்தார்கள். நீங்கள் ‘Please find attached’ என்று எழுதி attachment இல்லையென்றால், அட்டாச்மென்ட் எங்கே என்று ஜீமெயில் கேட்க ஆரம்பித்தது. அதே போல் விளம்பரத்துக்காக பலர் அனுப்பும் மெயில்களை தானாகவே ஸ்பாம் என்று குறிப்பிட்டு தள்ளி வைத்தது. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது.

மெயிலை படிப்பதுடன் நிற்காமல் இப்பொழுது வந்துள்ள ஒரு ஆப் நாம் ஃபோனில் பிறருடன் பேசுவதை ஒட்டு கேட்கிறது. நம்முடன் பேசுபவர்களின் குரலை அது ஞாபகம் வைத்துக்கொள்கிறது. அவர்களின் குரலை அது reproduce செய்கிறது. அவர்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளையும், அவர்கள் உபயோகிக்கும் சொலவடைகளையும் வைத்து அவர்களைப் போலவே அது பேசுகிறது. அம்மாவின் ஃபோன் வந்தால் அம்மாவின் குரலில், அவள் பேசுவது போலவே என்னை அழைக்கிறது. இதை ‘Synthesis of Sound with Machine Learning’ என்கிறார்கள்.

என்னுடன் பணிபுரியும் முருகேசன் எனக்கு இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து தந்தான். அவன் இந்த ஆப்பை அடிக்கடி உபயோகப்படுத்துவான். புதிதாக கல்யாணம் ஆனவன். அவனுக்கு ஃபோன் வந்தால், “டார்லிங். ப்ரீயா இருக்கீங்களா? என்னோட பேச முடியுமா?” என்று அவன் புதுப் பெண்டாட்டி பேசுவாள். அவன் எல்லோரையும் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பான். அவன் பெண்டாட்டி போல் ஆப்பும் புதியது. இன்னும் பீடா டெஸ்டிங் நிலைமையில் உள்ளது பக்ஸ் இருக்கலாம் ஆனால் பலர் இதை யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் ஒரு நாள் அவன் பெண்டாட்டி குரலை என் மொபைலில் ரெகார்ட் செய்து ஆபிசில் அதை ஒலிக்க விட்டேன். முருகேசன் அவசரமாக மொபைலை எடுத்து விழித்தான். ஆபிசில் எல்லோரும் சிரித்தார்கள்.

 

அம்மா என்னை மதுமிதாவுடன் வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு வரச்சொன்னாள். நல்ல நாளாம். ஏதோ ஸ்பெஷல் பூஜை செய்கிறார்களாம். நான் சரி என்று சொன்னேன்.

“டேய். வெள்ளிக்கிழமை ஆறு மணிய உன் காலெண்டர்ல குறிச்சி வச்சுக்கோ. என் காலண்டர் ரிக்வெஸ்ட் ஆக்செப்ட் பண்ணு” என்று ஃபோன் அம்மா குரலில் பேசியது. நான் ஒரு நிமிடத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றால் அதுவே ரிக்வெஸ்ட் அக்செப்ட் செய்துவிடும். நான் ஒன்றும் செய்யவில்லை.

“எப்படி நீங்க வேற ஒருத்தருக்கு வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு appointment கொடுக்கலாம். என்னைப் படத்துக்கு அழைத்து போறேன்னு சொல்லியிருக்கீங்க” என்று என் மனைவி மதுமிதாவின் குரலில் ஃபோன் பேசியது.

நான் இதை முழுவதாக மறந்துவிட்டிருந்தேன். அவளுக்கு புதிதாய் வரப்போகும் கமல் படத்தை முதல் நாள் பார்க்கவேண்டும். அவள் என் காலண்டரில் appointment schedule செய்திருந்தாள்.

“என்ன. ஒண்ணுமே பேச்சில்ல? அம்மாவுக்கு என்ன சொல்ல போறீங்க?” மறுபடியும் மதுமிதாவின் குரல்.

அம்மாவுக்கு காலேண்டர் ரிக்வெஸ்ட் ரிஜெக்ட் ஆகிவிடும். அவள் மறுபடியும் கூப்பிடுவாள். கோவிலை விட சினிமா முக்கியமா என்ற கேள்வி வரும். இப்பொழுது என்ன செய்வது என்று நான் தலையை சொறிந்து கொண்டிருக்கும்போது மதுமிதா உள்ளே வந்தாள்.

“படம் செம கலக்கலாம். துபாய்ல என் friend பார்த்துட்டு சொன்னான். I am waiting, I am waiting, I am waiting” என்று துள்ளினாள்.

“டேய். ஏன் என் ரிக்வஸ்ட் ரிஜெக்ட் பண்ண? உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும்? Machine learning தலையில் கல்லப் போட.

“என்ன ரிக்வெஸ்ட்?” என்றாள் மதுமிதா

“சொல்றேன். சொல்றேன். ஒரு சின்ன confusion”

“என்ன confusion?”

“ஏன்டா ஃபோன் எடுக்க மாட்டேங்கற. நீ இல்லேன்னா உன் பொண்டாட்டி இருப்பாளே? அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால?”

மதுமிதாவுக்கு முகம் சிவந்துவிட்டது. “என்ன? உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள? அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா?”

“அது அம்மா இல்ல மது. ஃபோன் தானே சொல்லுது. எல்லாம் machine learning”

“அது எப்படி learn பண்ணும். உங்க அம்மா இது போல் அடிக்கடி பேசறாங்க. அது வச்சி ஃபோன் learn பண்ணுது.”

“அப்படி இல்லமா. அந்த ஆப் இப்படி பேசக்கூடும்னு ஒரு மாதிரி ப்ரெடிக்ட் பண்ணுது”

“கரெட்டா தான் பண்ணுது. உங்க அம்மா இப்படி தான் பேசுவாங்க”

நான் பதில் சொல்வதற்குள் ஃபோன் மதுமிதா குரலில் பேசியது, “உங்க அம்மா மறுபடியும் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்காங்க. நாம சினிமா போறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத தடுக்கறதுக்கு இப்படி எதாவது டிராமா பண்ணுவாங்க”

மதுமிதா என்னை முறைத்தாள். “நான் இப்படி தான் பேசுவேனா? நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா?”

“இல்லமாஆஆ. இது machine..”

“machineஆ மண்ணாங்கட்டியா. சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்க என்ன ஒரு ராக்ஷஷி மாதிரி பார்கிறீங்க நல்லா தெரியுது”

“அந்த கிழவி ரிக்வெஸ்ட்ட மறுபடியும் ரிஜெக்ட் பண்ணிடறேன்.”, என்றது ஃபோன் மதுமிதா குரலில.

மதுமிதாவிற்கு அப்பொழுதுதான் ஞானோதயம் வந்தது. “என்ன. நீங்க வெள்ளிகிழமை அம்மா கிட்ட வரேன்னு எதாவது சொன்னிங்களா? நீங்க போறதுன்னா போங்க. நான் தனியா சினிமா போறேன். உங்கள நம்பினா ஒரு பிரயோஜனமும் இல்ல”

“அம்மாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்” என்றது ஃபோன் ஏதோ ஒரு அமெரிக்க குரலில். “மெசேஜ் படிக்கட்டுமா?”

“வேண்டாம்” என்று சொல்ல வாயெடுக்கும்முன் மதுமிதா “படி” என்றாள். எங்கள் இருவர் குரலாணைக்கும் தலை வணங்குவார். ஃபோனாண்டவர்.

“வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வரத மறக்காத. உன் பெண்டாட்டி எதாவது படத்துக்கு போகணும்னு அடம் பிடிப்பா. ஒரு நாள் கோவிலுக்கு வந்தா அவ ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டா. ஏதோ சொத்த சினிமாவுக்கு போகிறத விட கோவிலுக்கு வந்தா புண்ணியம் வரும்” அம்மாவின் குரல் துல்லியமாக கேட்டது.

மதுமிதாவின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா? அவள் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தபோது அவள் மொபைலில் என் குரல் கேட்டது. “மது உங்க அம்மா ஃபோன்”

அவளுக்கு மொபைலை எடுப்பதை விட என்னை திட்ட வேண்டும் என்ற ஆசை தான் அதிகம் இருந்தது. “நான் என்னிக்கோ ஒரு நாள் சினிமா போகலாம் …” கோவம் அவள் தொண்டையை அடைத்தது. அவள் அழுதுவிடுவாள் போல் இருந்தது. கோவமும் அழுகையும் சேர்ந்தால் எனக்கு சங்கு தான்.

அப்பொழுது அவள் மொபைல் மறுபடியும் என் குரலில் பேசியது. “ஃபோன் எடு மது. இல்லைனா உங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணிவிடுவா. சீக்கிரம் எடு” என்றேன்.

நான் மதுமிதாவுடன் இது போல் பேசியிருக்க மாட்டேன் என்று உங்களுக்கு தெரியும். பிறகு ஏன் மொபைல் அப்படி பேசுகிறது?. நான் யாருடன் எல்லாம் பேசுகிறேனோ அதை எல்லாம் analyze செய்து வரும் resultஐ cloud எனப்படும் ஒரு பொது இடத்தில் இந்த ஆப் வைத்துவிடும். யாரெல்லாம் என் பெயரை அவர்கள் மொபைலில் வைக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் இந்த cloud செனட்டரிலிருந்து தான் என் குரலும் நான் பேசும் விதமும் செல்லும்.

“ஓஹோ. ஏன், எங்கம்மா உங்கள கூப்பிட கூடாதா?”

“அப்படி இல்ல மது. நான் என்ன சொல்ல வரேன்னா இது machine..”

“Machine learning. Machine Learning. Machine Learning. இதையே சொல்லிண்டிருங்க.”

“நாம சினிமா போறோம்னு தெரிஞ்சா உங்கம்மாவும் கூட வரேன்னு கழுத்தறுப்பாங்க. சீக்கிரம் ஃபோன் எடு” என் குரலில் ஃபோன் மதுமிதாவிடம் கூறியது

இப்பொழுது அவள் கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது. அவள் கோபமாக மொபைல் பட்டனை அழுத்தி “ஹலோ” என்று கூறிக்கொண்டே பெட்ரூம் பக்கம் சென்று கொண்டிருந்தவள் என்ன தோன்றியதோ, “நான் உன்னோட அப்புறம் பேசறேன்” என்று மொபைலை கட் செய்துவிட்டு என்னிடம் வந்தாள். “உங்க சாயம் நல்லா வெளுத்து போச்சு. நீங்க உங்க அம்மாகூட கோவிலுக்கு போங்க. நான் எங்க அம்மாவோட சினிமாவுக்கு போறேன். இப்போ சந்தோஷமா. சந்தோஷமா?” என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் சமையலறைய நோக்கி நடந்தாள்.

அப்பொழுது பளிச் என்று என் மொபைல் ஒளிர்ந்தது. முருகேசன் அழைக்கிறான். “டார்லிங். பிஸியா? என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா?” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல்! இந்த பக் எவனால் வந்ததோ அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். பொழச்சி இருந்தா. செத்தடா மவனே நீ.

வேகமாக சமையலறைக்கு சென்றுக்கொண்டிருந்த மதுமிதா சட்டென்று நின்று, நிதானமாக திரும்பி என்னை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள்..

One comment

  1. அருமை, மிக இயல்பாக செல்லும் நடை. இந்த Machine Learning படுத்தும் பாடு எவ்வளவு தூரம் போகுமென்று தெரியவில்லை. 🙂 

Leave a reply to சோழகக்கொண்டல் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.