அஜய். ஆர்

உணர்ச்சிகளின் இடம்: மார்கேஸ்ஸின் ‘The Saint’

ஆர். அஜய்

strangepilgrimscover

பதாகையில் வெளியான இந்தக் கட்டுரை குறித்த உரையாடலில், உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்று ஒரு கருத்து பகிரப்பட்டது. அந்தக் கட்டுரை மற்றும் கருத்தின் நீட்சியாக மார்கேஸ்ஸின் ‘The Saint‘ கதையை அணுகுவது சில புரிதல்களை நமக்கு அளிக்கலாம். மேலே சுட்டப்பட்டுள்ள கட்டுரையில் “In great fiction we are moved by what happens, not by the whimpering or bawling of the writer’s presentation of what happens,” என்று Gardner எழுதிய ‘Art Of Fiction‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது.

மார்கேஸ்ஸின் ‘The Saint‘ சிறுகதையில் மார்கரீட்டோ (Margarito) என்பவர் ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க கிராமத்திலிருந்து ரோமுக்கு வருகிறார். 18 வயதில் திருமணம் முடித்து, பிள்ளைப் பேற்றிற்குச் சில காலத்திலேயே மனைவி இறந்து, சில வருடங்களில் மகளையும் இழக்கிறார். அதன்பின் இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களின் கல்லறைகளை தோண்டியெடுக்கும்போது, மகளின் உடல் கெடாமல் இருப்பதைப் பார்த்து அவர் கிராமமே அதிசயிக்கிறது. மகளின் பூதவுடலை போப்பிடம் காட்டி, இத்தகைய அதிசயம் நிகழ்ந்துள்ளதால் தன் மகளை புனிதர் என கிருத்துவச் திருச்சபை ஏற்க வேண்டும் என்று மார்கரீட்டோ எடுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கதை.

இயல்பாகவே வாசகனை எளிதில் நெகிழச் செய்யக்கூடிய ‘sentiment/ பாசவுணர்ச்சிக்கான’ சாத்தியங்கள் இந்தக் கதையில் உள்ளன என்பது வெளிப்படை. அதே நேரம் வாசகன் இந்தக் கதையின் களத்தை நெகிழ்வோடு அணுகுவான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நடைபெற முடியாத ஒன்றுக்காக இருபத்து இரண்டு வருட காலம் ஒருவர் முயற்சி செய்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக உள்ளது, எனவே நம்மை நெகிழச்செய்ய முனையும் பசப்புணர்வே (sentimentality) கதையில் மிகுந்துள்ளது எனவும் ஒருவர் கூறலாம். அதுவும் தனக்கான நியாயங்களைக் கொண்டுள்ள தரப்பே.

Gardner குறிப்பிடும் புலம்பலோ, பிழிந்தெடுக்கப்படும் சோகமோ The Saint கதையின் எழுத்தில் இல்லை. மார்கரீட்டோ பற்றிய கதை என்றாலும், அவருடன் விடுதியில் தங்கும் கதைசொல்லியின் பார்வையிலே கதை நகர்கிறது. மார்கரீட்டோவின் முயற்சி பற்றிய எந்த விதந்தோதலும் இல்லாமலேயே அதன் கடினத்தை காபோ (Gabo) நமக்கு உணர்த்துகிறார். ரோம் வந்த ஒரு வருடத்தில் அந்நகரின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் மார்கரீட்டோவிற்கு அத்துப்படியாகிவிட்டது என்று காபோ ஒற்றை வரியில் சொல்லும்போது நகரம் முழுதும் அலைந்து திரியும் மார்கரீட்டோவின் உருவம் நம் மனக்கண்ணில் இயல்பாகவே தோன்றுகிறது. அவருடைய அன்றாட நடவடிக்கை பற்றிய எளிய விவரிப்பின் – பெரும்பாலும் வெளியே அலைந்து திரிந்தபடி இருக்கும் தனக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்திலும் தன் லட்சியம் தொடர்புள்ள (புனிதர்கள் பற்றியவையாக இருக்கக்கூடும்) நூல்களை படிப்பது, மாத இறுதியில் செலவினங்களை விரிவாக குறித்து வைப்பது- மூலமாகவே மார்கரீட்டோவின் நடை, உடை, பாவனை அனைத்திலும் கண்ணியத்தை, எப்போதும் சமநிலை குலையாத சீரான தன்மையை, கதைசொல்லி மட்டுமல்ல, அவர்கள் தங்கும் விடுதியில் உள்ள மற்ற அனைவரும், வாசகரும்கூட உணர ஆரம்பிக்கிறார்கள். சிற்சில நிகழ்வுகள் மூலம் அவரின் ஆளுமை இயல்பாகவே வாசகன் மீது தாக்கத்தை செலுத்த ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்கும் விடுதியின் அமைப்பு, அதன் உரிமையாளர், மற்ற குடித்தனக்காரர்கள் பற்றிய தகவல்கள், ரோம் நகரின் நண்பகல் மயக்கச் சித்தரிப்புக்கள், கதைசொல்லியின் புகழ் பெற்ற -திரைக்கதை எழுதச் சொல்லிக் கொடுக்கும்- ஆசிரியர், என காபோவின்- அவர் எடுத்துக் கொள்ளும் களத்தை/ நிலவியலை இன்னும் துல்லியமாக மாற்றும் – எழுத்துக்குரிய சின்னச் சின்ன இன்பங்கள் (incidental pleasures) இந்தக் கதையிலும் உள்ளன.

மார்கரீட்டோவை மிருகக் காட்சி சாலைக்கு கதைசொல்லி அழைத்துப் போக, சிங்கம் ஒன்று தொடர்ச்சியாக கர்ஜிக்கிறது. அங்குள்ள பணியாளர், சிங்கம் மார்கரீட்டோவையே கவனிக்கிறது, அவருக்காகவே கர்ஜிக்கிறது என்றும், அதில் பச்சாதாபம் தெரிகிறது என்றும் சொல்கிறார். சிங்கத்தின் கண்ணீர் என்றெல்லாம் இந்த நிகழ்வை நீட்டி முழக்காமல் சட்டென்று காபோ கடந்து விடுகிறார்- மேலும், இது பணியாளர் சொல்வதாகத்தான் குறிப்பிடப்படுகிறதே தவிர உண்மை என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. பணியாளர் சொல்லும் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மார்கரீட்டோ அன்று வேறு ஏதேனும் சிங்கங்களுக்கு அருகில் சென்றிருந்து, அவற்றின் உடல் மணம், அவர் மேல் பரவி அதனாலும் சிங்கம் கர்ஜிக்கக்கூடும் என்கிறார் அவர். அவ்வாறு நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ‘சிங்கத்தின் உடல் மணம்’ என்பதை, அச்சிங்கம் தன்னில் ஒருவராக, தன்னைப் போன்ற ஆளுமையாக மார்கரீட்டோவை எண்ணியதா என்பது குறித்தும் வாசகன் யூகிக்கலாம்.

இந்த நிகழ்வுகள் நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கதைசொல்லி மீண்டும் ரோம் செல்கிறார். தான் முன்பு தங்கிய விடுதியும், மிருகக்காட்சி சாலையும் அடையாளம் தெரியாமல் மாறி விட்டுள்ளது. தன் நண்பனை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த அவரது ஆசிரியரை இப்போது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் மார்கரீட்டோவை கதைசொல்லி மீண்டும் சந்திக்கிறார்.’ The Saint is there.. Waiting‘ என்று தன் முயற்சியின் தற்போதைய நிலை பற்றி குறிப்பிடும் மார்கரீட்டோ, இன்னும் சில மாதங்களில் தான் எண்ணியது நடந்துவிடும் என்று கூறி, கதைசொல்லியிடம் விடை பெற்று செல்கிறார். மார்கரீட்டோவை உண்மையான புனிதர் என்றும், அவர் தன்னையறியாமலேயே இத்தனை ஆண்டுகளாக, தன்னுடைய ‘புனிதர் பட்டத்திற்காகவும்’ (canonization) போராடி வருகிறார் என்று கதைசொல்லி எண்ணிக் கொள்வதோடு கதை முடிகிறது. எந்த அதீத மொழி வெளிப்பாடும் இல்லாமல் இயல்பான நடையிலேயே கதைசொல்லியின் மனவோட்டம் வெளிப்படுகிறது.

இங்கு ஒரு கருத்தை யோசிக்கலாம். உணர்ச்சிவசப்படச் செய்வதில் கதையோட்டத்துக்கு உள்ள பங்கும் கதைசொல்லலுக்கு உள்ள பங்கும் ஆராயத்தக்கவை. மகளை புனிதராக ஆக்க முயலும் தந்தையைப் பற்றிய கதையாக இல்லாமல் மனைவியை இழந்து தனியாளாக பெண்ணை வளர்க்கும் தந்தையைப் பற்றியதாக இது இருந்திருந்தாலும் அதன் கரு மற்றும் கதையோட்டம் உணர்ச்சிவசப்படச் செய்யும் சாத்தியத்தைக் கொண்டதாகவே இருக்கும். பெரும்பாலான கதைக்கருக்களுக்கும் இது பொருந்துமென்றாலும் கதையாக மொழியில் அது வெளிப்படும் விதமே நம்மை உணர்ச்சிவசப்படச் செய்கிறது, நெகிழ்த்துகிறது, அல்லது பசப்புணர்வு என்று விலக்கச் செய்கிறது. இந்தக் கதை உணர்ச்சிகரமானதுதான், வாசகனை நெகிழ்த்தும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் உணர்ச்சிகள் வாசகன் மீது திணிக்கப்படுவதில்லை, மாறாக அவற்றை உணரும் பாதையில் காபோவால் மெல்லச் செலுத்தப்படுகிறான், அதன் முடிவில் காபோவின் இடத்தையே அவன் அடைகிறான். மார்கரீட்டோவின் கண்ணியமான ஆளுமை குறித்த சுட்டுதல்கள் கதையின் ஆரம்பத்திலிருந்தே வருவதால் முடிவில் திணிக்கப்பட்ட திடீர் திருப்பமோ, உச்ச நிகழ்வோ வருவதில்லை.

..On one hand, don’t overdo the denouement, so ferociously pushing meaning that the reader is distracted from the fictional dream, giving the narrative a too conscious, contrived, or ‘workshop’ effect…,” என்று கார்ட்னர் குறிப்பிடுவதற்கு சிறந்த உதாரணம் இக்கதை. கடைசி வரை வாசகன் உணர்ந்திருந்த கதையின் ஒழுங்கைக் குலைத்து, அவனை அப்புனைவுலகிலிருந்து காபோ வெளியே இழுப்பதில்லை. இறுதியில் வாசகன் மார்கரீட்டோபால் அடையும் பாசவுணர்வு காபோ முதலிலிருந்து உருவாக்கும் உணர்வுச் சங்கிலித் தொடரின் கடைசி -அதை மேலும் இறுக்கும்- கண்ணியாகவே உள்ளது. இறுதி பகுதிக்கு முன்பான பகுதியை மறுவாசிப்பு செய்வது இது குறித்த மேலதிக தெளிவை அளிக்கக்கூடும்.

கதைசொல்லி மார்கரீட்டோவைச் சந்திக்கும் நிகழ்வுக்கான முன்னெடுப்பாக, காலத்தின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை காபோ விரிவாகச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன, கதைசொல்லி ஏன் மார்கரீட்டோவைத் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை, அப்படி அமைப்பதற்கான காபோவின் நோக்கம் என்ன? காலமாற்றத்தையும் மார்கரீட்டோவின் நிலைகுலையாத முயற்சியையும் இணைக்க முயன்றால், அவற்றிற்கிடையே உள்ள பெரும் வேற்றுமையை நேரடியாகச் சொல்லாமல் வாசகனை உணரச் செய்து, அதன் மூலம் அவனையும் மார்கரீட்டோ குறித்த ஒத்த முடிவுக்கு வரச் செய்கிறார் காபோ என்பது புரிகிறது. ஆம், இத்தனை ஆண்டுகளில் ரோம் நகரமே மாறியிருக்கும்போது, மார்கரீட்டோவின் மகளின் பூதவுடல் கெடாமல் இருப்பது அதிசயம் என்றால், மனதைத் தளர விடாமல், அதே கண்ணியமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் கொண்ட மார்கரீட்டோவின் அத்தனை ஆண்டு கால செயல்பாடும் (அவருடைய சிறு கிராமத்தில் அவரை நினைவில் வைத்திருப்பவர்கள் யாரேனும் இன்னும் இருப்பார்களா?) அதிசயம்தானே? அத்தனை மாற்றங்களுக்கிடையே தான் ரோம் நகருக்கு முதலில் வந்தபோது எந்த மனநிலையில் இருந்தாரோ, அது கெடாமல் இருக்கும் மார்கரீட்டோவும் புனிதர்தான் இல்லையா?

நம் வாசிப்பில் மார்க்கரீட்டோவின் கண்ணியம், ஒரு புனிதருக்கு உரிய கண்ணியம் எனப் புலப்படுகிறது என்றால் அது மார்க்கேஸின் கதைகூறலில் வெளிப்படுவதுதான். இந்தச் சிறுகதை அளிக்கும் நெகிழ்வு, உணர்ச்சிகள் நம்மை ஆக்கிரமிப்பதால் அல்ல, உணர்ச்சிகள் அடங்கிய ஒரு அமைதியில் தோன்றுவது. ஆனால் அதனால் இது உணர்ச்சிவசப்படச் செய்யாத கதையாகி விடுவதில்லை. உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்துக்கு நேர்மறை உதாரணமாக இந்தக் கதை இருக்கிறது.

The Lie – T C Boyle

ஆர். அஜய்

காலையில் விழிப்பு தட்டியதும் வேலைக்குச் செல்ல வேண்டுமே/ வேண்டுமா என்று சலிப்புறாதவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல், சொந்த வாகனத்தில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் நில்லாமல் பயணத்தை இலக்கின்றி நீட்டிக்க வேண்டும் என்று ஒரு சில முறையேனும் எண்ணாதவர்களும் குறைவாகவே இருப்பார்கள், குறிப்பாக ‘திங்கட்கிழமை மனச்சோர்வு’ (Monday Morning Blues) பீடிக்காத ஆட்கள் அரிதுதான். சில நாள் அந்த உந்துதலுக்கு தலைவணங்கி ஏதோ காரணத்தைச் சொல்லி விடுப்பெடுத்துவிட்டு அடுத்த நாள் சற்றே குற்ற உணர்வோடு அலுவலகத்திற்குச் செல்வதும் வழக்காக நடக்கும் ஒன்றுதான்.

All the wrecks I’ve crawled out of’ என்ற டி.ஸி போயலின் (T.C. Boyle) சிறுகதையின் தலைப்பை, சுமூகமாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல் தோற்றமளிக்கும் வாழ்வை, அதில் உள்ள சிறிய சிக்கலை பெரிதாக்கியோ அல்லது தேவையில்லாத புதிய இக்கட்டை உருவாக்கியோ, சிதைக்கும் போயலின் புனைவுலகின் மற்றப் பாத்திரங்களுக்கும் பொருத்தலாம். ‘The Lie‘ கதையின் கதைசொல்லி அதன் ஒரு வகைமாதிரி.

அலாரத்தின் சத்தத்தில் கதைசொல்லி துயில் கலையும்போது அவரின் சிறு குழந்தை அத்துடன் சேர்ந்து அலற ஆரம்பிக்கிறது. நண்பர்களுடனான முந்தைய இரவு விருந்தின் தாக்கத்தை உடலில் உணர்கிறார். விடுப்பு எடுக்கலாமென்றால் அனைத்து விடுப்பையும் உபயோகித்தாயிற்று. எனவே நம் கதைசொல்லி தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அன்று வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்.

அன்றாட வேலை நாள் ஒன்றில் திடீர் விடுப்பு எடுத்துக்கொண்டு, பரபரப்பாக மற்றவர்கள் வேலைக்குச் செல்ல, எந்த அவசரமும் இல்லாமல் அன்றைய பொழுதைக் கழிப்பதில் உள்ள சுகத்தை போயல் கதைசொல்லியின் அன்றைய செயல்கள் மூலம் போயல் உணர்த்துகிறார். நிதானமான காலை உணவு, மெல்லிய மழையில் தெருக்களில் சுற்றும் இலக்கற்ற பயணம், மது விடுதியில் திட்டமான பீர் அருந்துதல், ஒரு திரைப்படம், பின் மாலை வீடு திரும்பல் என மிக எளிய – பெரும்பாலும் தொலைத்து விட்ட – செயல்களின் ருசியை கதைசொல்லி மட்டுமல்ல வாசகனும் உணர்கிறான்.

தேவையில்லாத கடினமான பொய் என்றாலும் இத்துடன் அது முடிந்து, கதைசொல்லி அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் போயலின் பாத்திரங்கள்தான் தன்னழிப்பை (self destruction) பெரிதும் விரும்புகிறவர்கள் ஆயிற்றே. முந்தைய நாளின் ருசி, புலி வாலைப் பிடித்தக் கதையாக மாற, அடுத்த நாளும் விடுப்பு எடுக்க முடிவு செய்கிறார் கதைசொல்லி. அதையும் கூட அவர் சமாளித்திருக்கக் கூடும், ஆனால் அதற்காக சொல்லும் காரணத்தில்தான் தன்னழிப்பில் இறங்குகிறார். தன் குழந்தை இறந்து விட்டதாக சொல்லிவிடும் அவர் அந்த நாளையும் இலக்கற்ற சுற்றல், திரைப்படம் என்று கழிக்கிறார்.

அந்த வார இறுதிக்குப் பின் திங்களன்று அலுவலகம் செல்லும் அவர், அங்கு சக ஊழியர்களின் அனுதாபத்தை ஏற்றுக்கொள்வதோடு, அவர்கள் பரிவோடு தரும் உணவுப் பொருட்களையும், அனைவரின் பங்களிப்பில் தரும் பண முடிப்பையும் – உள்ளுக்குள் குறுகியபடி – ஏற்றுக்கொள்கிறார். போயலின் எழுத்தின் முக்கிய அம்சமான, இருண்மையான அபத்தத்தின் வெளிப்பாடு இங்கு நிகழ்கிறது. அடுத்த நாள் மீண்டும் பொய். இறந்த குழந்தையை அடக்கம் செய்யவேண்டுமல்லவா, எனவே அதற்காக மீண்டும் விடுப்பு. இந்த சேதத்திலிருந்து (wreck) அவர் மீண்டு வருவாரா, அவர் செய்துள்ளதை மனைவி அறியவரும்போது குடும்ப வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்விகள் எழ, அவற்றின் பதில்களின் தொடக்கக் புள்ளியில் கதை முடிந்து, வாசகனை மேற்கொண்டு யூகிக்க வைக்கிறது.

நம் கதைசொல்லி இருத்தலியல் சிக்கலில் இருப்பவரோ, அல்லது இசை, இலக்கியம், ஓவியம் என வேறு துறைகளில் ஆர்வம் இருந்து பிடிக்காத வேலையில் சிக்கி அதனால் தன்னிலை இழந்து நடந்து கொள்பவரோ அல்ல. அவரளவில் அத்தகைய நியாயங்கள் எதுவும் இல்லாத நிலையில் வெறும் பொறுப்பற்ற ஆசாமி என்று அவரை பற்றி முடிவுக்கு வருவது எளிது. எனில் பின் எந்த விதத்தில் இந்தக் கதையும், அதன் கதைசொல்லியியும் வாசகனுக்கு அணுக்கமானவர்களாக தெரிகிறார்கள்? கதைசொல்லி முதல் நாள் பொய் சொல்லியபின் மனஎழுச்சியும், குதூகலமும் கொண்டாலும் சிறிது நேரம் கழித்து, குற்ற உணர்வும், பயமும் அவருள் துளித்துளியாக இறங்க ஆரம்பிக்கின்றன. அன்றைய பொழுதை சாவகாசமாக கழிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவை அவருகிலேயே இருக்கின்றன. அடுத்த நாள் வியாழன் என்பதால், இன்னும் இரு நாட்களை மட்டும் ஓட்டி விட்டால், பிறகு வார இறுதி, பின் அடுத்த வார ஆரம்பத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என்று தன்னையே நம்ப வைக்க, ஏமாற்றிக்கொள்ளும் விதத்தில் அவர் மீண்டும் விடுப்பு எடுப்பதில் துயரம் மட்டுமல்ல, நாம் செய்திருக்கும் இத்தகைய சுய ஏமாற்றுக்கள் குறித்த சுட்டுதலும் உள்ளது. குழந்தையை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் விடுப்பு எடுக்கும் நாளில், கொஞ்சமும் உற்சாகமும் இல்லாமல், எதுவும் செய்யத் தோன்றாமல், வெளியே செல்லாமல் நாள் முழுதையும் வீட்டிலேயே கழிப்பதில் உள்ள வெறுமையை வாசகன் எப்போதேனும் உணர்ந்திருப்பான்.

முடிவற்ற ஆழமும் பத்தி விரித்து நிற்கும் அரச நாகமும் நம்முள் உருவாக்கும் அச்சத்தையும் பார்வையை விலக்க இயலாத வசீகரத்தையும் கதைசொல்லியின் வீழ்ச்சியிலும் நாம் உணர்கிறோம். இது மனக்கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் எச்சரிக்கைக் கதை அல்ல. நம்மைக் குறித்து, நம் மனம் உருவாக்கி வைத்திருக்கும் எல்லைகளின் பலவீனம் குறித்து உணர்த்துவதால், கதைசொல்லியின் செயல்கள் குறித்த ஒவ்வாமை முதலில் தோன்றக் கூடுமென்றாலும் அவர் மீது அவனுக்கு ஒரு கரிசனம் இருக்கவே செய்கிறது. அவரை மனதளவில் தன் சகபயணியாக மட்டுமல்ல, அவரைப் போல் தானும் ஒரு நெகிழ்வான தருணத்தில் நடந்து கொள்ளக்கூடும் என்றும் அவருடன் தன்னை வாசகன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். மனவுணர்வின் மேல் தளத்தில் ஒழுக்கவாதியாக, சமூகத்தின் மாதிரி குடிமகனாக இருந்து, அதன் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழ்க்கையை நடத்தினாலும், அதன் அடி ஆழத்திலேனும், சிறிதளவாவது தளைகளை உடைக்க விரும்பாத, எல்லைகளை மீற விரும்பாத, தடை செய்யப்படுள்ளதின் ருசியை அறிய விரும்பாதவர் எவர் உளர்?

..

ஒளிப்பட உதவி – @tcboyle

அந்தரங்க வாசிப்பின் துணைக்கருவிகள்

 அஜய் ஆர்

 

 

 

உணர்தல், உணர்வதை புரிந்து கொள்ள முயலுதல், பிறகு ஏன் அவ்வாறு உணர்ந்தோம்/ புரிந்து கொண்டோம் என இன்னும் உள்நோக்கி செல்லுதல் என்பது வாசகன் எந்தவொரு கலைப்படைப்பையும் உள்ளுணர்வும் தர்க்கமும் சார்ந்து அணுகும் முறையில் ஒன்றாக இருக்கலாம். வாசிப்பு முதன்மையாக, அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு மட்டுமாக இருந்தால், வாசிப்பின் நாம் அறிந்திராத பல பாதைகளில் பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டாது. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான செவ்வியல் ஆக்கங்களை வாசிக்க -படைப்பு எழுதப்பட்டுள்ள மொழியில் மட்டுமின்றி சமூகத்திலும், விழுமியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் – இலக்கிய பதிப்புக்களின் துணை முக்கியத்துவம் பெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் 5வது சானட்டில் உள்ள

Beauty o’er-snowed and bareness every where:
Then were not summer’s distillation left,
A liquid prisoner pent in walls of glass,
Beauty’s effect with beauty were bereft,
Nor it, nor no remembrance what it was:

வரிகள். கண்ணாடிக் குவளையில் திரவத்தை ஊற்றி வைப்பது போல் அழகை பொத்தி வைத்து, அழகின் சாரத்தையேனும் அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதாக இவற்றை ஒரு பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் , ‘கைதி’ என்று சுட்டுவதன் நோக்கம் என்ன, அப்படிச் சிறைபிடித்தாவது அழகை பாதுகாக்க வேண்டுமா, அப்படி செய்வது அறம் சார்ந்ததா போன்ற கேள்விகளையும் அவன் எழுப்பக் கூடும்.

ஷேக்ஸ்பியரின் 19வது சானட்டின்

“Pluck the keen teeth from the fierce tiger’s jaws,
And burn the long-lived phoenix in her blood;”

வரிகளில் Phoenix பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து (Phoenix பறவை குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்தபின் புத்துயிர் பெறுவதாக பொதுவான ஐதீகம் உள்ளது), காலம் அழகை எத்தனை முறை அழித்தாலும் அது மீண்டும் உயிர்கொள்ளும் என்று புரிந்து கொள்ளலாம்- ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 18வது சானட்டில்

“Nor shall Death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee. “

என்று சொல்லி இருப்பது போல் கவிஞனின் எழுத்தில் கிடைக்கும் இறவாமையால்- என்பதாக வாசகன் நேரடி வாசிப்பில் புரிந்து கொள்ள முடியும்.

ஷேக்ஸ்பியரின் சானட்கள் குறித்து பல கோணங்களில் விளக்கங்களை முன்வைக்கும் பதிப்புகள் பல வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படும் ஒன்றான John Kerrigan பதிப்பில் மேலே பார்த்த 5ஆம் சானட்டின் வரிகளை அவர் இப்படி விளக்குகிறார்: ரோஜா நீர் கண்ணாடி குவளையில் இருப்பது என்பது திருமண பந்தத்தின் தூய்மையின் பாதுகாவலாக, அக்குவளை உடைவது அப்பந்தத்தை கெடுக்கும் ஒன்றின் உருவகமாக ஷேக்ஸ்பியருக்கு முன்னர் Arcadia என்ற நூலில் உபயோகிக்கப்பட்டது. இப்போது வாசகனுக்கு அந்த வரியின் இதுவரை தான் அறிந்திராத பொருள் தெரிய வருகிறது. மணவுறவு என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், அதில் ‘பெண்ணின்’ இடம், அவளிடம் எதிர்பார்க்கப்படும் ‘தூய்மை’ இவற்றையே ‘Arcadia’ சுட்டுகிறது என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த உருவகத்தை ஷேக்ஸ்பியர் எப்படி மாற்றுகிறார் – திருமண பந்தத்தின் பாதுகாவல் என்ற அர்த்தத்தை மாற்றி, குவளை என்பது கருவறையை சுட்டுவதாக, அதாவது அழகின் எச்சமேனும், தலைமுறைகள் தோறும் வாரிசுகளால், வழித்தோன்றல்களால் காப்பாற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுவதாக புரிந்து கொள்கிறான். இப்போது அவ்வரிகள் குறித்த இரு புதிய திறப்புக்கள் மட்டுமின்றி, பழமையை புத்தாக்கம் செய்யும் ஷேக்ஸ்பியரின் எழுத்தாளுமை பற்றிய புரிதலும் கிடைக்கக்கூடும்.

அதே போல் 19ஆம் சானட்டின் வரிகளையும் விரிவாசிப்பு செய்கிறார் Kerrigan. “in her blood” என்ற சொற்றொடர் “to be in blood” என்பதின் அதாவது “to be in one’s prime” என்று அர்த்தம் கொள்ளத்தக்க சொற்றொடரின் மருவல் என்று விளக்குகிறார். இப்போது இந்த வரிகளை, Phoenix பறவையை (அழகை) அழிக்க, காலம் 500 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் அதை அழிக்க முடியும் என்ற பொருளில் வாசிக்க வாய்ப்புள்ளது. Phoenix (அல்லது அது இக்கவிதையில் சுட்ட வரும் அழகு) இப்போது காலத்தை வெல்லும் பறவை மட்டும் அல்ல. நாளை இந்த சானட்களின் பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டால், இவற்றின் உந்து சக்தியான (muse) நாயகன்/ நாயகியை உலகம் காலப்போக்கில் மறந்து விடும். அதே நேரம், ஒரு சிலரிடம் மட்டும் வாய்மொழி பதிவுகளாக இவை காப்பாற்றப்பட்டு மீண்டும் காலத்தை மீறி, உலகின் முன் வலம் வர வாய்ப்புள்ளது. இப்போது இந்தக் கவிதை இறுதியான வெற்றியோ தோல்வியோ இல்லாத – இரு தரப்பும் சமநிலையில் இருக்கும் – களத்தின் சித்தரிப்பாக வாசகனுக்கு தோன்றக் கூடும். மேலும் 5வது சானட்டில் பார்த்தது போல் வாரிசுகளாலும் அழகு தொடர்ந்து உயிர் கொண்டிருக்கும் என்றும் இந்த இரு சானட்களையும் ஒப்பிட்டு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும்.

மொழி என்றில்லை, எழுதப்பட்ட சூழல் குறித்தும் பதிப்பு நூல்களில் இருந்து வாசகனுக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் குறித்து எந்த வாசிப்பும் செய்திராத ஒருவரிடம் அவரின் சானட் தொகுதியைக் கொடுத்தால், அனைத்து சானட்களும் கவிஞனின் உத்வேகமாக (muse) இருந்த ஏதோ ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்டவை என்றே முடிவுக்கு வருவார். எனவே, இந்தத் தொகுதியில் 126 சானட்கள் ஒரு இளைஞனை நோக்கி எழுதப்பட்டவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவருக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். இந்தப் புரிதல் அவருடைய வாசிப்பில், அவர் முதலில் இந்தக் கவிதைகளில் உணர்ந்ததில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது யோசிக்கத்தக்கது. ஷேக்ஸ்பியரை பாதித்த படைப்புக்கள்/ எழுத்தாளர்கள்,அவற்றின் தாக்கத்திலிருந்து சிறு கருவை எடுத்துக் கொண்டு முற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்புக்களை அவர் உருவக்கிய விதம் குறித்து விளக்கும் பல கட்டுரைகள்/ நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிய அறிதலும் அவரின் எழுத்தாளுமையை இன்னும் உள்வாங்க உதவக்கூடும்.

ஒரு கலைப்படைப்பை அதன் படைப்பாளி எந்த அர்த்தத்தில்/ கோணத்தில் உருவாக்கினான் என்பது குறித்தோ அதிலிருந்து தான் மிகவும் விலகிச் செல்வதைப் பற்றியோ கவலை கொள்ளாமல் அதை உள்வாங்குவதை முற்றிலும் தனக்கான ஒன்றாக மட்டுமே வாசகன் அணுகக் கூடும். செவ்வியல் படைப்புக்களைப் பொருத்தவரை, ஒரு படைப்பிற்கே பல பதிப்பாசிரியர்கள்/ தொகுப்பாசிரியர்கள் உள்ளார்கள். அவரவர்களின் அழகியல், கருத்தியல் கோட்பாடு சார்ந்து பல்வகைப்பட்ட பார்வைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றோடு சேர்த்து செவ்வியல் ஆக்கங்களை படிக்கும்போது, தன் வாசிப்பின் சுயத்தை கொஞ்சமேனும் விட்டுக் கொடுக்காமல் பன்முக வாசிப்பை உள்வாங்குவது சாத்தியம் அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கும்போது பல புதிய உலகங்கள் அவன் முன் தோன்றுகின்றன, அவற்றினுள் செல்ல தான் உருவாக்கிய உலகை விட்டு அவன் தற்காலிகமாகவேனும் நீங்க வேண்டியுள்ளது. அதே நேரம் தன் அழகியல் மற்றும் உணர்வுத்திறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை அவன் கொள்ள வேண்டியதில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தவாறே மற்ற கோணங்களின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களின் தன் முந்தையை நிலைபாட்டை மாற்றிகொள்வதும் கூட அவன் வாசிப்பு ஆளுமையையை இன்னும் மெருகேற்றவே செய்யும்.

பின்குறிப்பு:

பெங்குவின் வெளியீடாக வந்துள்ள ‘The Sonnets and A Lover’s Complaint’ (John Kerrigan) நூலில் இருந்து இந்த இரு சானட்களுக்கான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒளிப்பட உதவி – Owl Moon Tree of Life

லிடியா டேவிஸ் குறுங்கதைகள் – ஒரு விரிபார்வை

 அஜய் ஆர்

cover1

We are sitting here together, my digestion and I. I am reading a book and it is working away at the lunch I ate a little while ago.

Companion‘ என்ற தலைப்பிலான லிடியா டேவிஸின் (Lydia Davis) ‘குறுங்கதை’ இது. கதையா, நாட்குறிப்பா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதில் நாம் என்ன வாசிக்க முடிகிறது?. கதைசொல்லியும் அவருடைய செரிமானமும் ஒருவருக்கொருவர் துணை என்று Companion என்ற தலைப்பை வைத்து புரிந்து கொள்வதோடு, புத்தகமும், கதைசொல்லியும் ஒரு இணை, வாசிப்பும் செரிமானமும் மற்றொரு இணை என்றும் வாசிக்கலாம். வெளிப்படையாகச் சுட்டப்படாவிட்டாலும், ‘working away at the lunch’ என்பதை, உண்டதை வெளிக் கொணரும் குமட்டல் நிறைந்த எழுத்தை கதைசொல்லி வாசிக்கிறார் என்ற பிழைவாசிப்பையும் நாம் நிகழ்த்தக்கூடும். செவிக்குணவில்லாதபோது மட்டுமே வயிற்றுக்கு ஈவதை டேவிஸ் கொஞ்சம் மாற்றுகிறார் என்றும் இது குறித்து பேசிப் பார்க்கலாம் இல்லையா? .

Away from Home (தலைப்பு)

It has been so long since she used a metaphor!

இந்த நொடிக்கதையின் ஒரே வரியான ‘உருவகத்தை அவள் உபயோகித்து பல காலமாகி விட்டது’ என்பதை தலைப்போடு பொருத்தி வாசிப்போமே. எழுத்தாளனுக்கு உருவகங்கள் மிக நெருக்கமானவை என்பதால், அதை அவள் உபயோகிக்காமல் இருந்துள்ளது, தன் தாய் (தன் சொந்த) வீட்டிலிருந்து/ நாட்டிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்ட உணர்வை அவளுக்குத் தந்திருக்கக்கூடும் என்ற வாசிப்பை நிகழ்த்தலாம். தலைப்பில் உள்ள ‘Home’ ஐ உருவகமாக வைத்துப் பார்த்தால், Away from Home போன்ற உருவகம் கொண்ட தொடரைப் பல காலம் கழித்து இப்போதுதான் எழுதி இருக்கிறார் என்றும் தலைகீழாக வாசிக்கக்கூடுமா?

Spring Spleen (தலைப்பு)

I am happy the leaves are growing large so quickly.
Soon they will hide the neighbor and her screaming child.

அண்டை வீட்டார் தன் கண்களில் படமாட்டார்கள் என வசந்த – இனிமையின் – காலத்தின், நாம் எண்ணிப் பார்த்திராத நன்மையை டேவிஸ் முன்வைக்கிறார். அதில் ‘screaming’ என்ற பெயர் உரிச்சொல்லின் (adjective) தேவை என்ன? அண்டை வீட்டுப் பெண்ணும் அவள் குழந்தையும் கண்ணில் பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே? இலைகள் உருவத்தை மறைத்தாலும், சத்தத்தை மறைக்கக்கூடுமா, அந்தளவிற்கு அடர்த்தியாக செடிகள், பல குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் வளர்ந்திருக்குமா என்று கேட்டு இந்த குறுங்கதையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். குழந்தையின் அலறல் எப்படியும் கேட்கப் போவதால், தான் இப்போது உணரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, அரைகுறையானது என்பதை கதைசொல்லி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சுட்ட ‘screaming’ஐ பயன்படுத்தி இருக்கிறாரா?

Examples of Remember (தலைப்பு)

Remember that thou art but dust.
I shall try to bear it in mind.

(Italics as in print edition)

முதல் வரியில் உள்ள அறிவுரைக்கான, (அரைமனதான?) ஒப்புதலாக இரண்டாவது வரி உள்ளது. இது ஒரு வாசிப்பு. இரண்டு வரிகளையும் தலைப்போடு பொருத்திப் பார்த்தால், அவை தனித்தனியே கூட அர்த்தம் கொள்கின்றன, அதாவது தலைப்பில் உள்ள ‘Examples’ இந்த இரண்டு வரிகள். சில வார்த்தைகள் ‘Italics’ல் குறிப்பிடப்பட்டுள்ளது அவசியமான ஒன்றா அல்லது சொல்ல வருவதை வாசகனுக்கு திணிக்கும் முயற்சியா என்றும் வாசகன் கேள்வி எழுப்பக்கூடும். எப்படி இருப்பினும் நம் வாசிப்பை ‘Italics’ எப்படி பாதிக்கின்றன போன்ற கேள்விகளையும் இங்கு எழுப்பலாம்.

Insomnia (தலைப்பு)

My body aches so-
It must be this heavy bed pressing up against me

தூக்கம் வராத ஒருவர் அதற்கான காரணமாக, படுக்கையைச் சுட்டுகிறார் – அவருக்கு வேறேதும் உடல்/ மனரீதியான காரணங்களும் இருக்கலாம், ஆனால் வசதியாக படுக்கை மீது பழி போடுகிறார் – என்பது இந்தக் கதையின் முதல் வாசிப்பாக இருக்கக்கூடும். ‘against me’ என்று சொல்லப்படும்போது, படுக்கை எப்படி ஒருவர் மீது அழுத்த முடியும், கரடுமுரடான படுக்கை என்றாலும், படுப்பவர்தானே அதன் மேல் அழுந்தி இருக்கிறார் என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அப்போது உடல் வலி என்று வருந்துவது, அவ்வலியால் தூங்க இயலாமல் துன்புறுவது படுக்கை நிலை கொண்டிருக்கும் தரை போலிருக்குமோ? அப்போது, மண்ணின் சுமையே தன்னை அழுத்துவதாக வாசிக்கலாம்.

The Busy Road (தலைப்பு)

I am so used to it by now
that when the traffic falls silent,
I think a storm is coming.

வரிகள் மடக்கி எழுதப்பட்டு இருப்பதால் மட்டுமல்ல, இது உருவாக்கும் துல்லியமான பிம்பமும், அதில் பொதிந்துள்ள உணர்வும் கவித்துவ கணத்தை நினைவுபடுத்தக்கூடும். ‘so used to it’ என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் கதைசொல்லி ஏன் ‘think’ என்று தயக்கத்துடன் /சந்தேகத்துடன் முடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் போக்குவரத்து அமைதியாகும்போது, புயல் வரப்போகிறது என்று நினைத்து அது பொய்த்து விடுகிறது என்பதாக இந்த சந்தேகத்தைப் புரிந்து கொள்ளலாமா? அல்லது இரைச்சலுக்குப் பழகிய செவிகளை மௌனம் அச்சுறுத்துகிறது என்றோ, மக்கள் திரளுக்கு நடுவே வாழ்ந்து பழகியவர்கள் தனிமையை அஞ்சுகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?

இன்னொரு கவிதையையொத்த குறுங்கதை.

Head, Heart (தலைப்பு)

Heart weeps.
Head tries to help heart.
Head tells heart how it is, again:
You will lose the ones you love. The will all go. But
even the earth will go, someday.
Heart feels better, then.
But the words of head do not remain long in the ears of
heart.
Heart is so new to this.
I want them back, says heart.
Head is all heart has.
Help, head. Help heart.

எல்லாருக்கும் தெரிந்த கதைதான். மூளை சொல்வதை மனம் கேட்பதில்லை, அப்படியே கேட்டாலும் அது நீடிப்பதில்லை. மனக் குரங்கு மீண்டும் வெளியே உலவ ஆரம்பித்து விடுகிறது. ‘Heart is so new to this’ என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கும். மனம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், புதிய புதிய வருத்தங்கள் அதற்குள் தோன்றுகின்றன அல்லது பழைய வருத்தங்கள் மீண்டெழுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் மனம் துயர் கொள்ள, அதை மீண்டும் மூளை தணிக்க என இது தொடர்கதையாக நீள்கிறது. எனில் இங்கு யார் ‘Sisyphus’, தொடர்ந்து துயருறும் மனமா அல்லது துயரைத் துடைத்து சில காலத்திலேயே மீண்டும் அதே துயர் துடைத்தலில் ஈடுபடும் மூளையா?

டேவிஸ் அதிகமும் குறுங்கதைகள்/ நிமிடக்கதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார், அதிலும் சொல்/ மொழி விளையாட்டை மட்டுமே நிகழ்த்தியுள்ளார் என்று அவர் எழுத்தைக் குறித்த பிழைத்தோற்றத்தை இந்தக் கட்டுரை தரக் கூடும் .Lonely என்ற “No one is calling me. I can’t check the answering machine because I have been here all this time. If I go out, someone may call while I’m out. Then I can check the answering machine when I come back in,” குறுங்கதையில் அவர் தனிமையை மட்டுமல்ல, அதை தவிர்க்க எதைப் பற்றிக்கொள்வது என்ற மனதின் வேட்கை இட்டுச் செல்லும் உளச் சிக்கலையும் சித்தரிக்கிறார். ‘A Strange Impulse’ என்ற ஒரே ஒரு பத்தி அளவு கதையில் வெய்யில் காயும் பரபரப்பான கடை வீதியில், திடீரென கடை முதலாளிகள் காதைப் பொத்திக் கொள்கிறார்கள், வீதியில் உள்ள மற்றவர்கள் அடித்துப் பிடித்து ஓட ஆரம்பிக்கிறார்கள். விரைவில் முடிவுக்கு வரும் இந்த பித்து நிலை அன்றாட வாழ்வின் எரிச்சலுக்கான வடிகாலாக சுட்டப்படுகிறது.

இல்வாழ்கை, நட்பு, உள்முகப் பரிசோதனை , தனிமை என வாழ்வின் பல பரிணாமங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணரும் டேவிஸ், சிறுகதையின் வழமையான அளவிலும் சரி, குறுநாவலின் அளவிலும் சரி கதைகள் எழுதியுள்ளார். புனைவின் தெளிவான அம்சங்கள் கொண்டவை , புனைவும் நிஜமும் இணைபவை என சொல்லத்தக்கவை, கவிதை வடிவுக்கு நெருக்கமானவை, ‘What you learn about the Baby’ போன்ற வகைப்படுத்த முடியாதவை என பல்வேறு நடை, தொனி கொண்ட கதைகள் அவர் புனைவுலகில் உள்ளன. குறுங்கதைகள் அவர் புனைவுலகின் குறிப்பிடத்தக்க, ஆனால் அதை பிரதிநிதப்படுத்தும், ஒரே அம்சம் கிடையாது. கவிதை/ புனைவு/ அ-புனைவு என அனைத்தின் வரையறைகளையும் ஒன்றுடன் ஒன்று முயங்கச் செய்து கலைத்துப் போடும் டேவிஸின் எழுத்தை வகைப்படுத்த முயல்வது என்பது வியர்த்தமாகவே முடியும்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் டேவிஸின் புனைவுலகைப் பற்றிய ஆழமான குறுவெட்டு பார்வையை தருவதோ , அவரது எழுத்தின் கச்சாப் பொருட்கள், கேன்வாஸ், நுட்பங்கள் பற்றியோ பேசுவது அல்ல, தன் குறுங்கதைகள் மூலம் வாசிப்பை அவர் எவ்வாறு வாசகனை அவன் அறிந்திராத பாதைகளில் பயணிக்கச் செய்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதே. தங்களின் அளவைச் சார்ந்து குறுங்கதைகள் இயல்பாகவே அதற்கு தோதாக உள்ளன. அவை ஒரு சிறிய, பூட்டிய கதவை வாசகன் முன் வைக்கின்றன. அதை திறந்து உள்நுழைபவன் வானமே கூரையாய், வெளியே நாற்புற சுவராய் இருக்கும் முடிவில்லா -உலா வர வழிகளற்ற பாதைகள் கொண்ட – வீட்டினை காண்கிறான். அதனுள் அவன் தேர்ந்தெடுத்து செல்லக் கூடிய பாதைகளும், திசை தப்பிய அலைதலும் – அதற்கிணையான இந்தக் கட்டுரையிலேயே இருக்கும் பிழைவாசிப்பின் சாத்தியங்களும் – மட்டுமே இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

உருமாற்றம்

காலத்துகள்

லிப்டில் ஏறிய ராஜன் மூன்றாம் தளத்திற்கான பொத்தானை இரண்டு முறை அழுத்த, சேருமிடத்தை சுட்டும் இலக்கம் ஒன்பதாக மாறியதை அவன் முதலில் கவனிக்கவில்லை. லிப்ட் வழக்கத்தை விட விரைவாகச் செல்லும், அதே நேரம் தன் தளம் வந்தடையத் தாமதமாவதை உணர்ந்த கணத்தில் அது கண்ணில்பட, தன்னிச்சையாக பின்னால் திரும்பி அங்குள்ள கண்ணாடியில் தன் பிம்பம் முரகாமியுடனும் போர்ஹெஸுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தான்.

கண்ணாடியின் ஓரத்திலிருந்து ‘தலையைச் சீவி விடு’ என்று சினத்துடன் கூவியபடி சீட்டுக் கட்டு ராணியும் , அவரை சமாதானப்படுத்தியபடி ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் ஒரு சிறுமியும் வர, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று குழம்பியவனிடம் ‘’நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போக வேண்டும்’ என்று உங்களூர் எழுத்தாளர் சொல்லியிருப்பது உனக்குத் தெரியாதா?” என்று அச்சிறுமி கேட்டாள்.

போர்ஹெஸின் கைகளைப் பற்றியபடி தன் பிம்பமும் முரகாமியும் நடந்து சென்று பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருப்பதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த ராஜன், ‘இது கனவு, கனவுதான், கண்ணைத் திறந்தால் சரியாகி விடும்’ என்று முணுமுணுத்தபடி கண்களைத் திறக்க முயல, திடுக்கிட்டு விழித்ததில் கீழே விழுந்துவிட்ட கொர்தஸாரின் சிறுகதைத் தொகுப்பை எடுக்காமல் எழுந்து சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் தெரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்.