காலத்துகள்

போர்ஹெஸ்ஸின் நிலைக்கண்ணாடி

காலத்துகள்

போர்ஹெஸ் போல் நிலைக் கண்ணாடிகள் சாட்சியிருக்க என் வயது அதிகரிக்கவில்லை. பதின் பருவத்தில் ஆரம்பித்து, முப்பதுகளின் மத்தி வரை கண்ணாடி முன் எல்லோரையும் போல் நேரம் செலவழித்ததுண்டு, அவ்வளவே. செங்கல்பட்டில் வாழ்ந்த இருபது வருடங்களும் வீட்டிற்கே பொதுவாக இருந்த ஒரு கண்ணாடிதான். பின் கிழக்கு தாம்பரத்திற்கு வந்த போது என் அறைக்கு என்று தனியாக புதிய கண்ணாடி வாங்கி அதையே புதுச்சேரிக்கு குடி பெயர்ந்த பின்னும் உபயோகித்து வருகிறேன். ஆக, கிட்டத்தட்ட நாற்பது வருடங்களில் இரு கண்ணாடிகள்.

சவரம் செய்தபின், தலையிலும் முகத்திலும் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கும் வெண்மை குறித்து யோசிக்க ஆரம்பித்தவன், முப்பதுகளிலேயே  ஏன் கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்தேன் என்று யோசிக்க ஆரம்பித்து, பின் நாற்பதுக்கு பதில், முப்பத்தியந்திலேயே ‘ஒப்பனைகள் கலைந்து’, ‘அன்பின் பதட்டம்’ என் மேல் இறங்கி விட்டதோ என்று பயணித்து, போர்ஹெஸின் கண்ணாடிகள் குறித்து விசாரத்தில் இறங்கினேன்.    ஏன் இத்தகைய இலக்கிய/ இருத்தலியல்/ வாழ்வியல் விசாரத்தில் இறங்கினேன், என்று மற்றொரு விசாரத்தில் அடுத்து இறங்க முற்பட …..

‘ரீஸன்ட்டா போர்ஹெஸ் வாசிச்சியா’. முற்றுப்புள்ளியின்  அறைக்குள் நுழைந்த என்னிடம் அவர் கேட்டார். இரண்டு நாட்களாக இதற்கு மேல் தொடர முடியாமல், பெரியவர் முற்றுப்புள்ளியிடம் இது குறித்து பேசலாம் என்று எப்போதும் போல் முடிவு செய்து, அவருக்கு நான் எழுதியவரை அனுப்பி, சந்திக்க வருகிறேன் என்று கூறியிருந்தேன்.

‘எப்படி ஸார்..’

‘பர்ஸ்ட் வர்ட்டே அவர் பேர். ஸோ அவரை திருப்பி படிச்சிட்டிருக்கேன்னு கெஸ் பண்ண முடியாதான்ன, இதுக்கு ஷெர்லாக் வரணுமா’ என்றவர் தொடர்ந்து

‘உனக்கு இந்த பெடிஷ் ரொம்ப அதிகமா இருக்கு’ என்று கூறினார்.

‘எத ஸார் சொல்றீங்க’

‘யார படிச்சாலும், அவங்க பெயரை உன் ரைட்டிங்ல இன்க்லூட் பண்ண வேண்டியது. பொருந்துதா இல்லையானு யோசிக்கறதே கிடையாது’

‘இங்க பிட் ஆகுதே ஸார். போர்ஹெஸ் மெட்டா-பிக்க்ஷன் நிறைய எழுதினார், இந்த கதையும் அதே மாதிரி ..’

‘ஸோ, இந்த ரெண்டு பாராக்ராப்பை நீ பிக்க்ஷன்னு நம்பற’

‘ஆரம்பம் தான ஸார்.’

‘ஒண்ணுமே இல்லையேயா. ஷேவ் பண்றான், வழக்கம் போல செங்கல்பட்டு புராணம், நரைச்ச முடி, தேவதச்சன் கவிதையை வேற உள்ள கொண்டு வந்திருக்க. வாட் ஆர் யூ ட்ரையிங்?’

‘மிர்ரர்ஸ் வெச்சு கதை ஸார். டைட்டில், கண்ணாடிக்குள் இருப்பவன். மிர்ரர்லேந்து வேற முகம் கதைசொல்லியை எட்டிப் பார்க்குது, பேசுது,  அப்பறம் இந்த கதைசொல்லி, கண்ணாடிக்குள்ள  போயிடறான்,  அந்த முகம் வெளிய வருது. கதைசொல்லிக்கு கண்ணாடிக்குள் கிடைக்கும் அனுபவங்கள், இப்படி கதையை கொண்டு போகலாம்னு நினைக்கறேன் ஸார். பட் சரியா வருமான்னு தெரியல’

‘..’

‘ஸார்’

தலையசைத்தார்.

‘..’

‘நீ ஒரு டிபிகல், ‘பேசும் போது நல்லா பேசு, எழுதும் போது கோட்டை விட்டுடு’ கேஸ்யா. உன் ஐடியா ஓரளவுக்கு ஒகே, பட் உன்னால அதை எழுத்துல கொண்டு வர முடியும்னு எனக்கு தோணலை’

‘ஏன் ஸார்’

‘கண்ணாடிக்குள்ள போயிட்டான்னா, அதை வெச்சு பிலாசபி, மெட்டா-பிஸிக்ஸ் எல்லாம் கதைல வரலாம். ஸ்டோரிக்கு டெப்த், இன்டன்ஸிடி கிடைக்கும், அதே நேரம் மூளையையும், மனசையும் ஸ்டிமுலேட் பண்ணவும் முடியும். பட், போர்ஹெஸ் ஏற்கனவே எழுதியதை மாதிரியே இருக்கவும் கூடாது, உன்னுடைய தனித்துவம் தெரியணும். கேன் யூ டூ இட்’?

‘..’

மீண்டுமொருமுறை நான் எழுதியிருந்ததை படித்த முற்றுப்புள்ளி, ‘பர்ஸ்ட் டைம்மே தோணிச்சு, அதான் இப்ப திருப்பி படிச்சேன். இதே கதையை வேறெங்கேயோ நீயே எழுதியிருக்கல’ என்று கேட்டார்.

கிழத்திற்கு அசாத்திய ஞாபக சக்தி. ஆறேழே வருடங்களுக்கு முன் நான் எழுத ஆரம்பித்த போது செய்த குறுங்கதை முயற்சி தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் புனைவு.  நல்ல கரு, அதை இன்னும் விரிவாக எழுதலாம் என்ற எண்ணம். பெரியவர் அந்தச் சிறிய புனைவை ஞாபகம் வைத்திருக்க மாட்டார் என்று எண்ணியது தவறு.

‘ஆமா ஸார். நண்பர் தன் சைட்ல வெளியிட்டார்’

‘இப்ப எதுக்கு பழைய குப்பையை கிளர்ற’

கிழத்துக்கு நக்கல் அதிகம்.

‘எழுத ஆரம்பிச்ச டைம்ல வந்த ஐடியா ஸார், அப்ப ப்ளாஷ்  பிக்க்ஷன் மாதிரி தான் எழுத முடிஞ்சுது. வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது, அதான் இப்ப அதை இன்னும்  நல்லா ..’

‘ஸோ, எழுத ஆரம்பிச்சதிலேந்து இப்ப நீ இம்ப்ரூவ் ஆயிட்டேன்னு நினைக்கற’

‘..’

‘ஒகே, தப்பித் தவறி இது பப்ளிஷ் ஆகுதுன்னு வெச்சுப்போம், உன் ப்ரெண்ட் தப்பா எடுத்துக்க மாட்டாரா’

‘இல்ல ஸார். அவர் எப்பவுமே என்னை ஊக்கப் படுத்துவார், ப்ளஸ் இந்த முறை மாற்றி எழுதப் போறேனே. தலைப்பையும் மாத்திட்டேன்’

மீண்டும் கிழத்தின் தலையசைப்பு.

‘ஆனா லிட்ரரி எதிக்ஸ் பிரச்சனை வருமோன்னு ..’

‘நிறுத்துயா…அந்தக் கதையை இங்க கொண்டு வந்துடாத.. இம்சையா உன்னோட, நாய் எலும்புத்துண்ட கடிச்சிட்டே இருக்கற மாதிரி, ஒரே கதைய திருப்பி திருப்பி…’

‘..’

‘அந்த ப்ரெண்ட்ட சொல்லணும். அன்னிக்கு இந்த குறுங்கதைய வெளியிடாம இருந்திருந்தா நீ நாவல், தொகுப்புனு போயிருக்க மாட்ட..’

பெரியவர் முணுமுணுத்தது என் காதில் விழுந்ததாக நான்  காட்டிக் கொள்ளவில்லை. விமர்சனங்களை, அவை தனி மனித தாக்குதலாக இருந்தாலும், கோபப்படாமல் எதிர்கொள்வதே இலக்கியவாதியின் பண்பு என்பது என் எண்ணம். தவிர கிழத்திடம் எனக்கு இந்த புனைவின் பொருட்டு ஒரு காரியம் ஆகவேண்டும்.

‘வேற எப்படி ஸார் இதை கொண்டுட்டுப் போகலாம், அத பத்தி உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் வந்தேன்’

‘உனக்கு சிறுகதைலாம் வராத விஷயம், இனிமே உனக்கு அந்த சூட்சமம் புரிய வாய்ப்பில்லை. பேசாம எப்பவும் போல கதை எழுதிய கதை பாணில குறுங்கதையா மாத்திடலாம். அது தான் உனக்கு சரி வரும்’

‘அதை எப்படி ..’

‘ஒரு பாராக்ராப் இருந்தா கூட இந்தக் கதையை முடிச்சுடலாம்’

‘..’

‘ஏதாவது சஜெஸ்ஷென்ஸ் தர முடியுமா ஸார்’

‘…’

எத்தனை நேரம் முற்றுப்புள்ளி அமைதியாக இருந்தார் என்று என்னால் சொல்ல முடியாது. ‘சில நிமிடங்கள் அமைதி’ என்று புனைவுகளில் வருவது எனக்கு நம்ப இயலாத ஒன்றாக உள்ளது, இருவர் மட்டுமே உள்ள இடத்தில், சில, பல நிமிடங்கள் பேசாமல் இருப்பார்களா என்ன? ‘சில நொடிகள் மௌனம்’ என்று சொல்வது மிகவும் குறைவான காலகட்டமாக தோன்றுகிறது. ஒரு நிமிடத்திற்கு குறைவாக, முற்றுப்புள்ளி சிந்தித்திருப்பார் என்று மட்டும் என்னால் கூற முடியும். தன் கை விரல்களை பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து

‘ஓகே, இப்படி பினிஷ் பண்ணிடலாம்’ என்று கூறினார்.

சும்மா சும்மா நீ அப்பப்ப காத்து வாக்குல கேட்ட வார்த்தைகளை யூஸ் பண்ணாத, அப்பறம் போர்ஹெஸ்ஸோட புலியை ஏவி விட்டுடுவேன். ஒரு வேளை அது சிறுத்தையோ?- சரி ஏதோ ஒரு மிருகம், அதை விடு. உன்ன பத்தியே நினைச்சுக்கிட்டு இவ்வளவு புலம்பறியே, உன் மூஞ்சியையே இத்தன வருஷம் பாத்திட்டிருக்கற என் நிலைமையை பத்தி ஒரு செகண்ட்டாவது யோசிச்சிருக்கியா? செல்பிஷ் ஃபெல்லோ உன்னைப் பாத்துப் பாத்தே என் ரசம் எல்லாம் தீர்ந்து போய், கிழடு தட்டிடுச்சு  என்று பழிப்பு காட்டிவிட்டு நிலைக் கண்ணாடி முகத்தை திருப்பிக் கொண்டது.

குறிப்பு:

முற்றுப்புள்ளிக்கும் எனக்கும் இடையேயுள்ள உள்ள நட்பைக் குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இலக்கிய நண்பரும் லிட்ரரி எதிக்ஸும் – காலத்துகள் குறுங்கதை

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே கதையாக்கிடுவியா’ என்று உரத்த குரலில் கேட்டார் பெரியவர் முற்றுப்புள்ளி.

‘அப்டிலாம் இல்லை ..’

‘என்னய்யா இல்லை, கொஞ்சமாவது எதிக்ஸ் வேண்டாம்’

‘இலக்கியத்துக்கும் எதிக்ஸுக்கும் என்ன ஸார் சம்பந்தம்’

‘உனக்கும் லிட்ரச்சருக்கும் என்னய்யா சம்பந்தம், நீ கதை எழுதி என் கழுத்தை அறுக்கற. அதை எப்படியோ சகிச்சுகறேன், இப்ப இதை பண்ணி வெச்சிருக்க’

பெரியவரின் கோபத்தை பார்த்த போது, என் இலக்கிய வாழக்கைக்கு மட்டுமின்றி எனக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தோன்றியது. நான் எதிர்பார்த்தது தான். அதனால் தான்  எப்போதும் கதையை எழுதும் போதே பெரியவரிடம் அதை கொடுத்து படிக்கச் சொல்பவன், இந்த முறை பிரசுரமானதையே கூட கூறாமல் இருந்தேன்.

‘பப்ளிஷாகி ரெண்டு மாசமாச்சு, என்னை அப்பப்ப வந்து பார்க்கற, மெசேஜ் பண்ற, இதை மட்டும் சொல்லலை’   

பள்ளி காலத்தில் தன்னை விட வயதில் சிறிய மாணவனிடம் கைகலப்பில் ஈடுபட்டதையும், அதன்பின் அவனை பல வருடங்கள் கழித்து சந்தித்ததையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உளச் சிக்கலையும் பெரியவர் ஒரு உரையாடலின் போது கூறியிருந்தார். வழக்கம் போல் புனைவிற்கான எந்த உருப்படியான கருவும் கிடைக்காமல், அப்படியே தோன்றுவதை எழுதி உடனேயே அழித்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் சம்பவத்தை கதையாக மாற்றலாம் என்று அப்போதே முடிவு செய்தேன் ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ என்ற தலைப்பில் கதையை எழுதியிருந்தேன். அது பிரசுரமும் ஆகிவிட்டது. அதன் பின் பெரியவரை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கதை குறித்து கூற எண்ணினாலும், பின் தவிர்த்து விடுவேன்.  சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று

‘இல்லை ஸார், இதை நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு..’

oOo

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே உன் இஷ்டத்துக்கு மாத்தி எழுதுவியா’ என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘நான் ஸ்கூல் டேஸ்ல சண்டை போட்டேன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா அதுக்கப்பறம் நான் அவனை பார்க்கவே இல்லையே. அது ரொம்ப சின்ன இன்சிடன்ட், அன்னிக்கு உன் கூட பேசிட்டிருந்தப்ப ஞாபகம் வந்தது, சொன்னேன். நீயா அவங்க இரண்டு பேரும் சந்திக்கறாங்கன்னும் அதனால கதைல வர ‘நான்’ மனசளவுல பாதிக்கப் படறேன்னு உன் அரை குறை சைகாலஜிகல் குப்பையை வேற கொட்டியிருக்க’

‘கதைல நீங்க வரலையே ஸார். இன்றைய காலகட்டத்தில் நடக்கற மாதிரி தான ஸார் இருக்கு, நீங்க சொல்ற இன்சிசென்ட் நடந்து அறுபது, எழுபது வருஷமாகியிருச்சே’

‘ஆனா நீ எதை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன்னு எனக்கு தெரியுமேயா’

‘அந்த பாத்திரம் உங்களைத் தான் குறிக்குதுன்னு யாருக்கும் தெரியாதே ஸார், நீங்க சண்டை போட்ட அந்தப் பையன் அந்தக் கதையை படிக்கப் போறானா என்ன’

‘ஸோ, நீ என்னை டீக்ரேட் செஞ்சிருப்பது சரின்னு சொல்ற’

‘உங்களை இழிவு படுத்தற மாதிரி எதுவுமில்லையே ஸார்’

‘என் கேரக்டரோட மனவோட்டம், நடந்துக்கற விதம் எல்லாமே அவனை எதிர்மறையா காட்டற மாதிரி தானே இருக்கு, மனதளவுல ரொம்ப பலவீனமானவனா, தாழ்வுணர்ச்சி கொண்டவனா தான் கதைல ‘நான் இருக்கேன்’

‘அப்படிலாம் இல்ல ஸார், நீங்க தானே நடந்ததை அப்படியே எழுதக் கூடாது, அது இலக்கியமாகாதுன்னு சொல்வீங்க, அதான் உங்க சண்டையை ஆரம்பப் புள்ளியா  வெச்சுகிட்டு கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன்.

‘நீ என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாம, என்னைப் பற்றிய, நான் சொல்லிய விஷயத்தை என் கிட்ட சொல்லாம எழுதியது தப்பு தான்.

oOo

‘என்ன கண்றாவியா இது, உன் எழுத்தை படிக்க எப்பவுமே குழப்பமாத் தான் இருக்கும், ஆனா அந்த அளவுகோல் படி பார்த்தா கூட இது படு கேவலமா  இருக்கே’  என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில, பல நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘உன் கதையை ஒரு தடவை படிக்கறதே கொடுமை, இதுல திருப்பி திருப்பி அதே விஷயம் வர மாதிரி, என்னை வேற கேரக்டரா வெச்சிருக்க, வாட் ஆர் யூ ட்ரையிங்.’

‘ப்ரேம் ஸ்டோரி கான்சப்ட் ட்ரை பண்ணியிருக்கேன் ஸார். ஆரம்பத்துல மெயின் கதை, அதுக்குள்ள இன்னொரு கதை, அந்த இரண்டாவது கதைக்குள்  இன்னொன்னு… அரேபியன் நைட்ஸ், டெகாமரான்லலாம் இப்படி வருமே, வாசகர்களுக்கு புது அனுபவம் தரலாமேன்னு தான்..’

‘டெர்ரிபிள். வழக்கம் போல நீ எதை படிச்சியோ அதை அறைகுறையா புரிஞ்சுகிட்டு வாந்தி எடுத்திருக்க, ப்ரேம் ஸ்டோரி யுத்தி பற்றி உனக்கு சுத்தமா புரியலைன்னு தெரியுது. அது கூட பரவாயில்லை. நான் என்னிக்கு உன்கிட்ட ஸ்கூல்டேஸ்ல சண்டை போட்டேன்னு சொல்லியிருக்கேன். நீ ஏதோ எழவு கதையை எழுதின சரி, அதை ஜஸ்டிபை செய்ய என் தலையை ஏன்யா உருட்டற?’

‘ரீஸன் இருக்கு ஸார். அக்டோபர்ல  ‘ஹூ இஸ் த பேட் ஆர்ட்  ப்ரெண்ட்’ அப்படின்னு இலக்கிய சர்ச்சை வந்துதே ஸார், ந்யுயார்க்கர் , வேற சில பத்திரிகைகள் அதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் கூட வெளியிட்டாங்களே. இரண்டு பேர், நண்பர்கள் அல்லது  பொதுவா அறிமுகமானவங்கனு வெச்சுக்கலாம், ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றார், அதை கேட்டுகிட்ட மற்றொருவர் அதை கதையாக்கிடறார், அந்த சம்பவத்தை சொன்னவர் இன்னொருவர் அதை கதையா எழுதினது தப்புன்னு சொல்றார்…’

‘ஹோல்ட் ஆன், ஒருத்தர் ஒரு சம்பவத்தை சொன்னார், இன்னொருத்தர் எழுதினார், முதல் ஆசாமி அப்படி செஞ்சது தப்புன்னு சொல்றார், இதை ஏன் ஜிலேபி சுத்தி சொல்ற, உனக்கு பேசறதே சரியா வர மாட்டேங்குது, அதான் எழுத்தும் அதே மாதிரியிருக்கு’

பெரியவர் கூறிய விதமும் ஜிலேபி தான், என்ன, அது அளவில் சிறியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியதை நான் சொல்லவில்லை.

‘அத விடுங்க. இந்த விஷயத்துல இருக்கற லிட்ரரி எதிக்ஸ் சார்ந்த பிரச்சனை என்னை யோசிக்க வெச்சுது ஸார், அது தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது. தவிர, எனக்கு இலக்கிய நட்புன்னு சொன்னா நீங்க மட்டும் தானே ஸார், அதனால தான் நீங்க ஒரு  சம்பவத்தை சொன்ன மாதிரியும், நான் அதை புனைவா மாற்றின மாதிரியும், அப்படி செஞ்சதுல உள்ள அறச் சிக்கல்கள் குறித்தும் புனைவாக்கினேன்’

‘உன்னோட யூஷுவல் செக்க்ஷுவல் ஆங்சைட்டி தேவையேயில்லாம கதைல இருக்கே, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு’

பெரியவர் நெருங்குகிறார். இந்தக் கதை எழுதியதற்கு நான் சொன்ன காரணம் பொய் இல்லையென்றாலும் அது மட்டுமே உண்மை  அல்ல. ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ கதையில் வரும் பாலியல் தொடர்பான உட்சலனங்கள் குறித்து ‘என்னடா சொந்த அனுபவமா’ என்று என் நண்பர்கள் கேட்டதற்கு  நான் இல்லையென்றும் சொன்னாலும் ‘உன் கதைல அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் வருதே, அதான் சந்தேகமா இருக்கு’ என்று தொடர்ந்து நச்சரித்ததால், கதையின் கரு, அதை சார்ந்து வரும் மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளி மீது சுமற்றி விடலாம் என்பதும் என்னுடைய எண்ணம். மேலும் இப்படி பெரியவரை ஏமாற்றுவதும், எதிக்ஸ் பற்றிய சர்ச்சையை மலினப் படுத்துவதாக புரிந்து கொள்ளப் படக் கூடிய இந்தக் கதையை எழுதுவதும், இலக்கிய அறம் என்று பேசிக்கொண்டே, அதை தெரிந்தே மீறுவதாக இருப்பதால், இந்தப் புனைவின் மீது ‘அபத்த’, ‘அவல நகைச்சுவை’ போன்ற வார்த்தைகளை போட்டுப் பார்த்து, அதற்கு இலக்கிய தகுதியை உருவாக்க முடியும்  என்பது என் யூகம்.

‘அப்படிலாம் எதுவுமில்லை ஸார். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்

‘..’

‘புக்கா வரும் போது, இந்தக் கதையில் வேறொருவர் சம்பவத்தை சொன்ன மாதிரி மாற்றிடறேன்’

‘இதை புக்கா போட்ற ஆசைலாம் வேற இருக்கா’

‘..’

‘லிட்ரரி எதிக்ஸ பேஸ் பண்ணி இந்தக் கதையை எழுதினேன்னு  சொல்ற, ஆனா அப்படி எதுவுமே இல்லையே. இலக்கியம் உன் கைல கிடைச்ச பூமாலை. அறம்லாம் உனக்கு புரியாத விஷயம், எதுக்கு அதையெல்லாம் கதைல கொண்டு வர ட்ரை பண்ற’

‘இப்படி பண்ணலாமா ஸார், மூணாவதா இன்னொரு உள்கதை கொண்டு வந்துடலாமா, அதுல அறத்தை நல்லா அரைச்சு…’

‘ஐயோ வேண்டாம்’

‘..’

உங்களுக்கு இந்தக் கதைல எந்த வருத்தமும் இல்லையே ஸார்’

பெரியவர் தலையசைத்தார்.

‘..’

‘ஜஸ்ட் ஒன் திங்’

‘..’

‘நீ என் ப்ரெண்ட் தான். என்னை பெயர் சொல்லி கூட கூப்பிடு, நோ ப்ராப்ளம். ஆனா இலக்கிய நண்பர்னு என்னை சொல்லாத, லிட்ரச்சருக்கு அது அவமானம்.’

சில தன்னிலை விளக்கங்கள்:

எப்போதேனும் என் புனைவுகளை வாசிக்கும் ஓரிரு அதிதீவிர வாசகர்களுக்கு பெரியவர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை, அந்தப் பட்டியலில் சேர விரும்பும் வேறேதேனும் ஓரிருவர் இருந்தால், அவர்களுக்கு முற்றுப்புள்ளி ஒரு கற்பனை பாத்திரம் என்றே தோன்றக் கூடும். அந்த தவறான எண்ணத்தை நீக்க இந்த தளத்திலேயே அவருடனான என் அறிமுகம் குறித்து இங்கேயும், எங்களிருவருக்குமிடையே உள்ள நட்பைக் குறித்து இங்கேயும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கதாபாத்திர மற்றும் நிஜ முற்றுப்புள்ளியை கோபப்பட வைத்த கதை இங்கே.

பெரியவருடனான இந்த உண்மை உரையாடலுக்கு காரணமாக இருந்த ‘Who is the bad art friend’ சர்ச்சை குறித்து இங்கே , இங்கே

கலவி, வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு

காலத்துகள்

‘இவரும் செங்கல்பட்டு தான்’ என்றாள் இவனுடைய மனைவி. வார ஆரம்பத்தின் சலிப்பு இப்போதே கவிய ஆரம்பித்திருக்கும் ஞாயிறு மாலையில் வீட்டிற்கு வந்தவர்களிடம் அசிரத்தையாக உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன், தலையசைத்து வைத்தான்.

‘எங்க இருந்தீங்க’ என்று எதிரில் அமர்ந்திருந்தவன் கேட்டான். ரவி என்று தானே பெயரை சொன்னான்? வெள்ளி தான் அடுத்த ப்ளாட்டில் குடிவந்திருந்தான்.

மெயின்டனன்ஸ் செலவு, கரண்ட் பில் குறித்து குறித்து தெரிந்து கொள்ள நேற்று வந்திருக்கலாம். விடுமுறையின் உற்சாகம் வடிந்து விட்ட நேரத்தில் தம்பதியராய் வந்து எரிச்சலேற்றுகிறார்கள். இவளும் ‘எப் ஒன்ல மெயின்டனன்ஸ் கரெக்ட்டா தரவே மாட்டாங்க, எங்க வீட்ல ரெண்டு பேரு தான், என்னோட வாட்டர் பில் பங்கு ஏன் இவ்ளோ இருக்குன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க’, ‘எஸ் போர்ல பதினஞ்சாம் தேதிக்கு மேல தான் தருவாங்க’ என்று அபார்ட்மெண்ட் குறித்த பெருங்கதையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.

‘கோகுலபுரம்’

‘நாங்க அண்ணா நகர். எந்த ஸ்கூல்’, ரவி தான்.

‘ஜோசப்’

‘நானும் அங்க தான், நைன்டி ஸிக்ஸ் பேட்ச்’..

‘நான் நைன்டி பைவ்’. போய்த் தொலையேண்டா.

பள்ளியின் அப்போதிருந்த வாத்தியார்கள், இப்போதைய நிலை குறித்து பேசிய பின் ரவி கிளம்பினான்.

 

‘கொயின்சிடன்ஸ்ல’

‘மாடிக்கு போறேன் வரியா, தலைவலி. டீசன்ஸி வேண்டாம், இப்படியா வந்து டார்ச்சர் பண்ணுவாங்க’

‘உங்களுக்கு யாராவது வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது’

‘வரட்டும், அதுக்காக சண்டே ஈவ்னிங்கா’

‘நீங்க போங்க, குக்கர் ஏத்திட்டு வரேன்’.

 

எதிர் ப்ளாட் முதியவர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, நெஞ்சையும் வயிற்றையும் புடைத்து நிமிர்த்தி , முதுகை வளைத்து ஏதோ செய்து கொண்டிருந்தார், ஏதாவது யோகாசனமாக இருக்கும். தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேர நடை, யோகா. எண்பது வயதிற்கு வலுவான உடற்கட்டு. அந்த வயதில் என்னால் மாடிக்கு ஏறி வந்து பத்து நிமிடம் நடக்க முடியுமா?

‘என்ன லேட்டா’ என்று கேட்ட பெரியவர் புட்டத்தை தூக்கி சத்தமாக காற்று பிரிக்க, ‘புதுசா வந்திருக்காங்கல்ல, அவங்க பேசிட்டிருந்தாங்க’ என்றபடி விரைவாக நகர்ந்தான். இது கண்டிப்பாக யோகப் பயிற்சியாக இருக்க முடியாது.

தானும் செங்கல்பட்டு தான் என்று அந்த ரவி சொல்வதற்கு முன் எதுவும் தோன்றவில்லை. இப்போது பரிச்சயமானவனாக தெரிகிறான். ஒரே ஊர், பள்ளி என்பதால் வரும் உளமயக்கம். மாடிச் சுவற்றினருகே நின்று தெருவை கவனித்துக் கொண்டிருந்தான். ட்யுஷன் முடித்து சைக்கிளில் மூன்று சிறுவர்கள் வந்து கொண்டிருந்தார்கள், பள்ளி திறக்கவிட்டாலும், ட்யுஷன் நடந்து கொண்டுதானிருக்கிறது. காலை நடைக்கு பதிலாக சைக்கிள் வாங்க வேண்டும் என்று சில மாதங்களாக இவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் என்கிறார்கள். வாங்கி சில நாட்கள் மட்டுமே ஒட்டி, மீண்டும் நடக்க ஆரம்பித்தால் வீணாகிவிடும்.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. சண்டையை யாரோ தடுக்கிறார்கள். அந்தப் பையன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல, இவனும் கிளம்புகிறான்.

இதுவரை வாழ்வில் இவனுடைய ஒரே கைகலப்பு, அதனாலேயே அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்வு. முகம் மறந்திருந்த அந்தப் பையன் ரவியா, அதனால் தான் முன்பே பார்த்தது போல் தோன்றுகிறதோ? இல்லை, ரவியை பார்த்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கும், காலை இறை வணக்கத்திற்கு செல்லும் போதும், அது முடிந்து திரும்பு போதும் அல்லது உணவு இடைவேளையில் எங்கேனும் பார்த்திருப்பான். பள்ளியில் இல்லாவிட்டாலும், பஜாரில் அல்லது தசரா சந்தையில். இல்லை, அப்படி மட்டுமே எதிர்பட்டிருந்தால் இப்போது நினைவுக்கு வராது, இந்த நிகழ்வோடு அவனை பொருத்திப் பார்க்கத் தோன்றாது. மாடியின் இன்னொரு முனைக்குச் சென்று அடுத்து கட்டிக் கொண்டிருந்த வீட்டை கவனிக்க ஆரம்பித்தான்.

ஸ்டாண்டில் வகுப்புவாரியாகத் தான் சைக்கிள்களை நிறுத்த வேண்டும். அந்தப் பையனுடைய சைக்கிள் இவனுடைய வண்டிக்கு சற்று முன்னால் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் எட்டாம் வகுப்பு மாணவனாகத் தான் இருந்திருக்க வேண்டும், எனவே அவன் ரவியாக இருக்கலாம்.

அருகில் வந்து நின்ற இவன் மனைவி

‘ரவி வைப் சொன்னதை கவனிச்சீங்களா, பார்ட்டி டூ லாக்ஸுக்கு வாங்கிருக்காங்களாம், உள் வேலைக்கு டூ லாக்ஸ் எக்ஸ்ட்ரா’

‘நம்ம வாங்கினப்ப இருந்ததை விட கொஞ்சம் தான் இன்க்ரீஸ் ஆயிருக்கு’

‘நீங்க அவரை பார்த்திருக்க சான்ஸ் இருக்குல’

‘இப்ப எதுவும் ஞாபகம் இல்லை, .. மேபி’

மாடியை சுற்ற ஆரம்பித்தாள். மாலை பதினைந்து, இருபது நிமிடங்கள் நடந்தால் தான் இரவுணவு எடுத்துக் கொள்ள முடிகிறது என்கிறாள். முதியவர் வேட்டியை அவிழ்த்து, உதறி கட்ட, அவர் அணிந்திருக்கும் நீல நிற உள்ளாடை சில நொடிகளுக்கு கண்ணில் படுகிறது. கிழத்திற்கு விவஸ்தையே கிடையாது, நிதானமாக சரி செய்து கொள்கிறார். நல்லவேளையாக இவள் அப்போது தான் அவரைக் கடந்து சென்றிருந்தாள்.

 

ஞாயிறு இரவின் கலவி. அட்டவணை போடவில்லையென்றாலும் வார இறுதியில் மட்டும் முயங்குதல் என்பது எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டது. மதியம், முன்மாலை என்று உடலெங்கும் இச்சை பரவியிருந்த காலம் முடிந்து விட்டது. சலிப்புடன், அசுவாரஸ்யமாக ஈடுபடாமல் அல்லது தலைவலி என்று அவள் தவிர்க்காமல் இருப்பதை எண்ணி தேற்றிக் கொள்ள வேண்டியது தான். சில வார இறுதிகளில் இவன் தான் தவிர்க்க காரணங்கள் தேடி, பின் அப்படிச் செய்தால் பொய்யென்று கண்டுபிடித்து விடுவாள் என்பதால் சமாளிக்க வேண்டியுள்ளது. உடலுறவில் ஈடுபட விருப்பமில்லை என்று ஆண் கூறுவது இழிவில்லையா? ‘ஆண்ட்ரோபாஸாக’ இருக்கலாம், இதற்கு யோகாவில் ஏதாவது உள்ளதா என்று பெரியவரிடம் கேட்கலாமா? இன்று ரவி பிரச்சனை வேறு, அவள் மீது கவிழ்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது, ரவியுடன் மனதில் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். உதட்டருகே இருந்த அவள் கழுத்தை கடிக்க, அவள் முகத்தில் குத்த தோன்றிய உணர்வை கட்டுப்படுத்த செல்ல சிரமப்பட வேண்டியிருந்தது.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. மங்கலாகிவிட்டிருந்த அந்தப் பையனின் முகம் ரவியின் ஜாடையில் இருப்பதாகத் தான் இப்போது தெளிவுறுகிறது.

 

ஆனால் எதுவும் ஞாபகம் இருப்பது போல் ரவி காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிற்குச் சென்றப் பின் அவனுக்கும் நினைவிற்கு வந்திருக்கக் கூடும். ‘என் சீனியர் தான். ஒரு நாள் சண்டை, அடி பின்னிட்டேன்’ என்று மனைவியிடம் கூறியிருப்பான். அவள் இனி ஏளனமாக தான் என்னைப் பார்ப்பாளோ? அபார்ட்மெண்டில் வசிப்பவர்களிடையே சிறு சிறு தற்காலிக மனஸ்தாபங்கள் எழுவதுண்டு, அப்போது ‘என் ஹஸ்பன்ட் கிட்ட ஓத வாங்கினவன் தான் ஒன் புருஷன்’ என்று அவள் கூறி விடலாம். அபத்தம். பேச்சு வாக்கில் சொல்லிவிடவே அதிக வாய்ப்புண்டு. ‘நம்ம ரெண்டு பேர் வீட்டுக்காரங்களும் ஸ்கூல் டேஸ்ல சண்ட போட்டாங்களாம், உங்க ஹஸ்பண்டுக்கு நல்லா அடி பட்டுருச்சாம்’. அதன் பின் இவளிடம் எப்படி முகம் கொடுத்து பேச முடியும், தன்னைக் காக்கக்கூடிய பலமுடையவனையே கற்காலத்திலிருந்து பெண்கள் தேர்வு செய்ய விரும்புவார்கள் என்று கூறுகிறார்கள். நாற்பது வயதுக்கு மேல் அந்த உயிரியல் இச்சை இருக்காதா என்ன? தன்னை விட வயது குறைந்தவனிடம் அடி வாங்கியவன் என்று அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி பரவக் கூடும். ஆனால் ரவிக்கு என் வயதிருக்கலாம், நவம்பர், டிசம்பருக்கு பின் பிறந்திருந்தால் ஒரு வருடம் தாமதமாக பள்ளியில் சேர்ந்திருப்பான். பெயிலாயிருந்தால் என்னைவிட பெரியவனாகக் கூட இருக்கக் கூடும். அன்று தாக்கிக் கொள்ளுமளவிற்கு என்ன நடந்தது?

காலை நடந்து முடிந்து திரும்பிக் கொண்டிருந்தவன் மெயின் ரோட்டிலுள்ள பேப்பர் கடையின் வாசலில் ரவி நின்றுகொண்டிருப்பதை கவனித்து வேறு பக்கம் பார்த்தபடி கடந்தான். ‘என்ன ஸார், வாக்கிங்கா’, என்றழைத்தான் ரவி.

‘டெய்லி ஒன் அவர்’

‘உங்களுக்கு யார் பேப்பர் போடறாங்க, நேத்து அதை கேக்க மறந்துட்டேன் ’

‘நம்பர் தரேன்’ நேற்று வெட்டி அரட்டை அடித்து, மாலையை பாழாக்கியதற்கு இதையும் கேட்டுத் தொலைத்திருக்கலாம்.

‘வர்க் ப்ரம் ஹோமா இல்லை ஆபிஸா ஸார்’

‘வீக்லி ஒன்ஸ் போகணும்’

‘நான் மூணு நாள் போகணும்.’

‘கம்பெனி வண்டியா’

‘அதெல்லாம் கிடையாது, பைக் தான்’

‘…’

‘அண்ணா நகர் ஸ்கூல்லேந்து தூரமாச்சே, எப்படி வருவீங்க, சைக்கிளா’ என்று கேட்டானிவன்.

‘ஆமா ஸார், பிப்த் வரைக்கும் வாலாஜாபாத் போற பஸ்ல வருவேன். அப்பறம் சைக்கிள்’

‘ஈவ்னிங் ஸ்டாண்ட்லேந்து வண்டிய எடுக்கறது ரொம்ப கஷ்டம்ல’

‘ஆமா ஸார், மத்த வேண்டிமேல இடிக்காம எடுத்துட்டு வரது ரொம்ப கஷ்டம்’

அபார்ட்மென்ட்டை அடைந்திருந்தார்கள்.

‘மூணு ப்ளோர் ஏற கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு, மார்னிங்கே பவர் கட்டு ஆகுமா ஸார்’

‘இல்ல, லைன் மாத்தறாங்க போல, அஞ்சு பத்து நிமிசத்துல வந்துடும்.’

 

‘சொல்லு நாயே’ என்றான் சசி.

‘டேய், நான் ஸ்கூல் டேஸ்ல சைக்கிள் ஸ்டான்ட்ல சண்டை போட்டது உனக்கு ஞாபகம் இருக்கா’

‘சண்டையா, என்னது’

‘ஒரு ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு கிளம்பும் போது , நாம நயனத்ல இருக்கும் போதுன்னு நெனக்கறேன்.’

‘என்னடா சொல்ற, நாம எங்கடா சண்டைலாம் போட்டோம்’

‘நீ இல்லடா, நான் மட்டும் தான். எய்த் ஸ்டான்டார்ட் பையனோட. ஜான், இல்ல பெப்ரவரில இருக்கும்’

‘நோ, அப்படி எதுவும் ஞாபகம் இல்ல’

‘நல்லா யோசிச்சு பாரு நாயே’

‘‘நானே மண்டே மார்னிங் வெறுப்புல இருக்கேன், சண்ட போட்டேனா , குண்ட போட்டேனான்னு சாவடிக்காத’

‘ஸ்டாண்ட்டுக்கு அந்தப் பக்கம் கர்ல்ஸ் ஸ்கூல் க்ரவுண்ட், பாத்ரூம் இருக்குமே, அது ஞாபகம் இருக்குமே’

‘நீ ரொம்ப ஒழுங்கு, நீயும் தானடா எட்டிப் பார்த்த’

‘அத கரெக்ட்டா சொல்லு. ஈவ்னிங் கால் பண்றேன், அதுக்குள்ள ஏதாவது தோணுதா பாரு’

‘இன்னிக்கு சில பல ஆபிஸ் பஞ்சாயத்துக்கள் இருக்கு, கொசுவத்தி கொளுத்தறதுக்குலாம் வாய்ப்பில்ல ராஜா’

‘ரவின்னு நமக்கு அடுத்த பேட்ச்சுல யாரையாவது உனக்குத் தெரியுமா’

‘ஒத்தா, போன வைடா வெண்ண’

 

சசியும் இவனும் ஒன்றாகத் தான் பள்ளிக்கு சென்று வருவார்கள், பின் எப்படி நினைவில்லை என்கிறான். அப்படியொரு சண்டை நடக்கவே இல்லையோ? இல்லை, சசி அன்று பள்ளிக்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது இப்படியிருக்கக் கூடும், சண்டை நடந்தது உண்மை, ஆனால் ரவியும் வேறொருவனும் அடித்துக் கொண்டது இவன் மனதில் இப்படி பதிந்திருக்கலாம். இல்லை, இதுவும் சாத்தியமில்லை. அன்று மாலை முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த வலி உண்மை.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கில் அடிபட்டு நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது சாய்ந்து விழுகின்றவனை, ரவி எட்டி உதைக்கிறான்.

எட்டி உதைத்ததெல்லாம் நடக்கவில்லை. முகம் சற்று வீங்கியிருந்ததைத் தவிர அந்த சண்டையில் வேறெந்த அடியும் படவில்லை. மூக்கிலும் எந்த காயமும் இல்லை. முக வீக்கமும் கூட விரைவில் குறைந்து விட்டது. அதனால் தான் வீட்டில் யாரும் எதுவும் கேட்கவில்லை. தவிர, இலக்கில்லாத ஆறேழு கை வீசல்களைத் தவிர வேறெதுவும் ஸ்டாண்டின் மாலை நேர நெரிசலில் நடந்திருக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நிமிட சண்டை, அதற்குக் குறைவாகக் கூட இருக்கலாம். அதற்குள் தடுத்திருப்பார்கள்.

ரவிக்கு இப்போதே பெரிய தொப்பை, மூன்று மாடி ஏற சிரமப்படுகிறான், இன்னும் சில வருடங்களில் இன்னும் பருத்து விடுவான். அந்தப் பையன் அப்போதே கொஞ்சம் பூசினாற் போல் தான் இருந்தான் என்று தோன்றுகிறது. ஆனால் அப்படியிருந்திருந்தால் அந்த உடம்புடன் எப்படி சண்டை போட்டிருக்க முடியும். அந்தப் பையன் ரவி தானா?

அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றது நினைவில் உள்ளது. அன்று ரவியை பார்க்கவில்லை, அதன் பின்பும் ஸ்டாண்டில் அவன் எதிர்பட்டது போல் தெரியவில்லை. பள்ளியில் எங்காவது ஒரு சில கணங்களுக்காவது எதிரெதிரே வந்திருக்க வேண்டும். அடி வாங்கிய பயத்தில் ரவி என் முன் வருவதை தவிர்த்திருக்கலாம்.

இரு கைகளையும் குத்துவது போல் இவன் வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கு உடைபட்டு சைக்கிளின் மீது சாய்ந்து விழும் ரவியை எட்டி உதைக்கிறான்.

‘ஜன்னலை இப்பவே சாத்திட்டீங்க, ஆபிஸ்ல வீடியோ காலா’ என்று படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி கேட்க இல்லையென்று தலையசைத்தவன்,

‘அருண் வர ஒன்னாயிடும்ல’ என்றான்.

‘ஆமாம்… இப்பவே ஏஸி வேற போட்டிருக்கீங்க’

அவள் மேல் கவிழ்ந்திருந்தவன் விலகி படுத்தான்.

‘நேத்து நைட்டே உன்ட்ட சொல்லனும்னு நினைச்சேன், மறந்துட்டேன். ரவி வந்திருக்கான்ல அவன் கூட ஒரு வாட்டி சண்ட போட்டேன்’

வலது காலை மடித்தவள் இவனை நோக்கி திரும்பி ‘நீங்களா’ என்றாள்.

‘லைப்ல என்னோட பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பைட். ஸ்கூல் சைக்கிள் ஸ்டாண்ட்ல வண்டி எடுக்கறதுல ஏதோ ஆர்க்யுமென்ட். செம அடி அடிச்சுட்டேன். பாவம் கீழ விழுந்தவனை எட்டி வேற ஓதச்சேன். அவன் அப்பவே கொஞ்சம் குண்டாத் தான் இருந்தான். சசி தான் வந்து தடுத்து விட்டான்.’

‘நெஜமாவா’

‘எஸ்’

‘என்னால நீங்க சண்ட போட்டதை இமாஜினே பண்ண முடியலை’

‘ஒரு நிமிஷம் கூட இருக்காது , சினிமா பைட்டான்ன. ரெண்டு அடி அடிச்சவுடன விழுந்துட்டான். மூக்கொடைஞ்சு ரத்தம்’

‘அடிச்சீங்கன்னு சொல்லுங்க, கொஞ்சமாவது நம்பற மாதிரி இருக்கு. அதுக்காக மூக்கலாம் ஓடச்சேன்னு..’

‘நெஜமாத்தான்டி. சில்லுமூக்குன்னு சொல்வாங்கல’

‘சின்ன விஷயத்தால கூட சில்மூக்குல வரும். காலேஜ் டேஸ்ல என் கூட படிச்சவ, மதியம் மூஞ்சி கழுவும் போது, அழுத்தி தேய்ச்சு ரத்தம் வந்துடுச்சு, செம அழுகை, அப்பறம்…’

‘இவனுக்கு நான் அடிச்சு தான் ரத்தம்’

‘ஒகே..’

‘நான் ஏண்டி பொய் சொல்லப்போறேன்’

‘..’

‘எனக்கு நேத்து வரை அவன் ஞாபகமே இல்ல, அவனைப் பத்தி எதுக்கு நான் பொய் சொல்லணும்’

‘சண்ட போட்டீங்க சரி, மூக்க ஓடச்சீங்கன்னே வெச்சுப்போம். ஆனா அந்தப் பையன் ரவி தானா. நிச்சயமா தெரியுமா?’ இடது காலை மடித்துக் கொண்டபடி கேட்டாள். உள் தொடையின் மென் மயிர்கள், ரவி மனைவியின் முழங்கையில் படர்ந்திருந்ததைப் போல.

‘ரவிக்கே கூட ஞாபகம் வந்திருக்கும் போல , அதான் இன்னிக்கு காத்தால வாக்கிங் போயிட்டு வரும்போது அவன பார்த்தப்ப சரியா பேசல. அந்தப் சண்டைக்கப்பறம் கூட அவன் அந்த இடத்துல சைக்கிளை வெக்கவே இல்ல’

‘..’

‘அவனால ஸ்டெப்சே ஏறே முடியல, மூச்சு வாங்குது.’

‘நீங்களும் கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க’ என்றபடி எழுந்தவள் ‘சண்ட போட்டீங்களோ இல்லையோ, அது ரவியாவே இருந்தாக் கூட, இந்த வயசுல அதெல்லாம் வேண்டாம்’ என்று கூறிவிட்டு கழிவறைக்குச் செல்ல, வயிற்றைத் தடவிப் பார்த்தான். ரவி அளவுக்கு தொப்பை இல்லை, சொஞ்சம் சரித்துள்ளது அவ்வளவு தான், கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்தால் தட்டையாகிவிடும். இப்போது சண்டையிட்டால் ரவியால் ஒரு அடி கூட அடிக்க முடியாது.

ரவியை வயிற்றிலும், முகத்திலும் குத்தி அவனை வீழ்த்துகிறான். ‘விட்ருங்க’ என்று உரக்க கத்தியபடி இருவருக்கும் இடையில் ரவியின் மனைவி வருகிறாள். வியர்வை படிந்த அவள் முழங்கையில் மயிர்கள் இன்னும் கருமையாக படர்ந்துள்ளன. விலகிச் நிற்கிறான்.

வயிற்றை தடவிக்கொண்டிருந்த கை கீழிறங்கியது.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி.

உள்ளங்கைக்குள் இறுகும் குறி.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி, மீண்டும் இவன் மீது பாய முயற்சிக்க ‘விடுங்க, திருப்பி அவர்கிட்ட அடி வாங்கதீங்க’ என்று அவன் மனைவி தடுக்கிறாள்.

உள்ளங்கையில் பரவும் குறியின் ரத்த ஓட்ட சூடு. கழிவறையிலிருந்து வெளிய வந்து தொடைகளுக்கிடையில் துண்டால் துடைத்துக் கொண்ட பின் படுக்கையிலிருந்த உள்ளாடையை எடுக்க குனிந்தவளின் கைகளைப் பற்றி இழுத்தான்.

சோஷியல் ரியலிஸ புலனாய்வு – காலத்துகள்

காலத்துகள் 

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணப் போறேன்னு சொல்றா ஸார்’ என்று கான்ஸ்டபிள் வய்யின்  குரல் கேட்க வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘கத்தாதையா, தெருல இருக்கறவங்க நான் தான் காரணம்னு நினைக்கப் போறாங்க’

‘திடீர்னு இப்படி சொல்றா ஸார், என்ன பண்றதுன்னே புரியலை’

‘உன் நிலைமை எவ்வளவோ பரவயில்லையா’

‘என்ன ஸார் சொல்றீங்க’

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணிட்டு , இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா. என் ரெண்டு பசங்களும் அவன் கூட தான் ஒட்டுதலா இருக்காங்க, என்கிட்டே பேசக் கூட மாட்டேங்கறாங்க.’

‘ஏன் ஸார்’

‘நான் மொடாக் குடிகாரனாம், வேலை வேலைன்னு குடும்பத்தை கவனிக்காம இருந்துட்டேனாம், தனியா வாழத் தான் லாயக்காம்’

‘நீங்க டீடோலர் ஆச்சே ஸார். தவிர நம்ம எழுத்தாளர் நாலஞ்சு மாசத்துக்கு ஒரு முறை தான் ஒரு கேஸை கொடுக்கறார், மத்த நேரத்துல நீங்க ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிடுவீங்களே ஸோ வேலை பளுவும் கிடையாது. என்ன ஸார் நடக்குது,   நம்ம  லைப் ஏன்   இப்படி தலைகீழா மாறிப் போச்சு’

‘புது கேஸ்யா’

‘புரியலை ஸார்’

‘இந்த தடவை ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுகளின் பாணில இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு எழுத்தாளரோட ஐடியா. ஸ்காண்டிநேவியன்/நார்டிக் நுவார் புனைவுகளில் வரும் போலீஸ்காரன்   எல்லாம் இப்படித்தான் குடிகாரனா, உலகத்தின் மொத்த சுமையையும் சுமப்பவனா, குடும்பத்திலிருந்து பிரிந்தவனா, யாருமற்றவனா, ஆனா அதே நேரம் அறவுணர்ச்சி உள்ளவனா இருப்பாங்க, அதான் நம்மையும் இப்படி மாத்திட்டார்’

‘இப்ப என்ன ஸார் பண்றது’

‘இந்த மாற்றத்தை நாம ஒத்துக்கணும்னு அவசியம் இல்லை. புனைவுலகில் வாழ்கிறோம் என்பதால் நம்மை பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க முடியாது. நாமும் மனுஷங்க தான், நமக்கும் உணர்ச்சிகள்  இருக்கு, இதை நான் இப்படியே விடப் போறதில்லை’

‘என்ன செய்யப் போறீங்க’

‘அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கப் போறேன்’

‘ஸார், இந்த வரியை இப்ப நிறைய பேர் யூஸ் பண்றாங்க தான், ஆனா  இந்த இடத்துல பொருத்தமா இருக்குமா…’

‘ஏன் இருக்காது. அதிகாரத் திமிருல, காலனியாதிக்க மனநிலைல, எழுத்தாளரும் பாத்திரங்களும் கலந்தாலோசித்து தான் எந்த முடிவையும் எடுக்கணும் என்ற   பெடரலிஸ தத்துவத்தை மதிக்காம எழுத்தாளர் என்ன வேணும்னாலும் செய்வார், அதை நாம பொறுத்துக்கணுமா. ‘

 

‘பெடரலிஸம், காலனியாதிக்கம் எல்லாம் இங்க எங்க வந்ததுனு   உங்களை நான் கேட்க மாட்டேன், என் டிவோர்ஸ் பிரச்சனை தீர்ந்தா சரி, ஆனா அவர் கிட்ட நாம எப்படி பேச முடியும்… நாம அவரோட எண்ணங்களின் வெளிப்பாடு தானே, அவரை  எப்படி மீற முடியும்?’

 

‘எதற்காக அவரிடம் பேச வேண்டும். இது  நம் உணர்வு, நம் உரிமை, நாமே பறித்துக் கொள்ள வேண்டியது தான். ஸ்பார்டகஸ்  போல்  புரட்சி செய்து , உலகமெங்கும் உள்ள   இரக்கமற்ற எழுத்தாளர்களின் அரக்கத்தனமான தளைகளில் சிக்கியிருக்கும் புனைவுலக மாந்தர்களை  விடுவித்து, நம் ‘பாத்திர’ இனத்திற்கே விடியலைத் தருகிறேன் பார், போர் போர் …’

‘போர்லாம் வீட்டுல முடங்கி, விடியல் வந்து இரண்டு வாரம் ஆயிடுச்சு ஸார்’

‘என்னையா முனகற’

‘ஒண்ணுமில்லை ஸார். நீங்க இப்ப பேசின தமிழ் வேற மாதிரி இருந்தது’

‘ஸ்பார்டகஸ் பத்தி குறிப்பிட்டேன்ல, அதான் மொழி கொஞ்சம் மாறிடுச்சு’

‘ஓகே ஸார் , விடியல் வந்ததால இன்னிக்கு  கேஸ் கிடையாது இல்லையா, கிளம்பறேன். நீங்க என்னதான் சொன்னாலும், வைப்  வீட்ல தான் இருக்கான்னு கன்பர்ம் பண்ணினாத் தான் நிம்மதியா இருக்கும்’

‘நோ, இன்னிக்கும்  வேலையிருக்கு’

‘எழுத்தாளர் வேற கேஸ் தரப்போறாரா ஸார்’

‘இல்லை, இந்த முறை நாமே புலனாய்வு செய்யறோம்’

‘அதெப்படி முடியும் ஸார்’

‘அந்தாளு உருவாக்குகிற கேஸை விட நாம பெட்டரா பண்ணலாம். ‘

‘என்ன செய்யப் போறீங்க’

‘பூட்டின ரூம்ல கொலை, பணக்காரங்க வீட்ல பஞ்சமாபாதகம்னு நிஜத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, மேட்டிமைத் தன்மை கொண்ட  கேஸ்களை விசாரிச்சது போதும். யதார்த்தத்தில் நடக்கும் குற்றங்களை புலனாய்வு செய்வோம். ரத்தமும் சதையுமா சோஷியல் ரியலிஸ க்ரைம்’

‘ஸார் ..’

‘இரு இரு, இங்க இன்னொரு வார்த்தை யூஸ் செஞ்சா இன்னும் பொருத்தமா இருக்கும், பூர்வஜாவோ, பூர்வஷாவோ, மிடில் க்ளாஸை குறிக்கிற பிரெஞ்சு வர்ட்.. ‘

‘எனக்கு நிரவ் ஷா, அமித் ஷா தான் ஸார் தெரியும்’

‘பாண்டில இருந்துட்டு நமக்கு அது தெரியலைனா அசிங்கம்யா’

‘..’

‘ஞாபகம் வந்துடுச்சு, … பூர்ஷ்வா. இந்த வார்த்தையை இங்க எப்படி பொருத்தலாம்னா…’

‘இப்ப அது முக்கியமில்லை ஸார். நம்ம கிட்ட கேஸ் வந்தா தானே இன்வெஸ்டிகேட் பண்ண முடியும், அதை நீங்கள் யோசிக்கலைன்னு நினைக்கறேன்’

‘அதெல்லாம் தேவையில்லை, இப்ப சும்மா ஒரு அரை மணி நேரம் நடந்துட்டு வருவோம், நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சா போதும், ஏதாவது க்ரைம் கண்ணுல படும். கெளம்பலாம் வா’

‘இது லாக்டவுன் டைம், இப்ப இது தேவையா, கொஞ்சம் நிதானமா யோசிக்கலாமே’

‘யோவ், நான் சொல்றபடி செய், அது போதும் ‘

‘இப்ப மட்டும் அதிகாரத்தை நோக்கி  உண்மையை பேசக் கூடாதா…’

‘என்னய்யா முணுமுணுக்கற ‘

‘ஒண்ணுமில்லை ஸார் ‘

 

oOo

ஜவஹர் நகர், பொன் நகரைக் கடந்து அந்தோனியார் கோவில் தெருவினுள் நுழைந்தார்கள்.

‘நில்லுயா’

‘..’

‘நீ ஒண்ணுத்தையும் கழட்ட வேண்டாம்’ ஆங்காரத்துடன் ஒலித்த பெண் குரல். சில நொடிகள் மௌனத்திற்குப் பின் அதே குரல்

‘படிடீ’ என்று இறைஞ்சலாக கேட்டது.

‘கேஸ் கிடைச்சாச்சு யா’

‘ஸார் …’

‘இந்த வீட்ல குழந்தைகளை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்காண்டிநேவியா நாடுகளில் இது க்ரைம்’ என்றபடி குரல் வந்த வீட்டின் கேட்டை திறந்து சென்ற எக்ஸ், காலிங் பெல்லை அழுத்தினார்.

சிறிதாக திறக்கப்பட்ட கதவினூடே மாஸ்க் அணிந்த முகம்.

‘என்ன வேணும்’

‘நாங்க டிடெக்டிவ்ஸ்’

கதவு நன்றாக திறக்கப்பட உள்ளே சென்றார்கள். ஹாலில் பதின் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கக் கூடிய சிறுமி.

‘நீங்க தானே இப்ப சத்தம் போட்டுக் கொண்டிருந்தது’

‘ஏன் கேக்கறீங்க?’

‘குழந்தைகளை இப்படி துன்புறுத்துவது தப்பு. அவங்களுக்கு எதுல ஆர்வம் இருக்கோ அதுல அவங்களை ஈடு படுத்துங்க, அதை விட்டுட்டு படி படின்னு கொடுமைப் படுத்தாதீங்க.’

‘உங்களுக்கு இவளைப் பத்தி என்ன தெரியும்’

‘எல்லா குழந்தைகளுக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும், அவங்களை அதுல ஈடுபடுத்தணும்’

‘இவ கிட்ட என்ன இன்ட்ரஸ்ட்னு கேட்டுப் பாருங்க’

‘உனக்கு என்னம்மா பிடிக்கும்’ என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கேட்டார் எக்ஸ்.

‘மாஸ்டர் பிடிக்கும்’

‘ரொம்ப நல்ல விஷயம்தானேங்க, வாத்தியாரை பிடிக்கும்னு சொல்ற பசங்க ரொம்ப கம்மியாச்சே, இதுக்குப் போய்…’

‘ஸார், மாஸ்டர்னு அந்தப் பொண்ணு சொன்னது டீச்சரை இல்ல, அந்தப் பெயர்ல …’

‘அப்படியா சொல்ற’

‘ஆமாம் ஸார்’

‘…’

‘சினிமா கூட ஒரு ஆர்ட் தானே, அதுல ஈடுபாடு இருப்பது தப்பில்லையே’

‘…’

‘வெகுஜன சினிமாவை ஒட்டு மொத்தமா ஒதுக்க வேண்டியதில்லையே, மிடில் ஆப் த ரோட் சினிமா கூட இருக்கு’

‘..’

‘ஸார், அந்தம்மா பார்வையே சரியில்லை, நாம கெளம்பறது நல்லது’

‘சரிங்க, பெத்தவங்க உங்களுக்கு அக்கறை இல்லாமையா இருக்கும், பாத்துக்குங்க’

‘வந்துட்டானுங்க கோமாளிங்க’

oOo

காவேரி நகரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

‘ஸார், தடுப்பூசி, டெஸ்ட் எடுக்க வந்த கூட்டம் நின்னுட்டிருக்கு, திரும்பிடலாம்’

‘ஏன்யா பயப்படற, நாம ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஐடியா தான்யா, நமக்கு எந்த பிரச்சனையும் வராது’

‘அப்படியில்லை ஸார். புனைவுலக மனிதர்கள் என்றாலும் நிஜ உலகுக்கு வந்துட்டா அவங்க படற கஷ்டத்தை நானும் பட வேண்டியிருக்கலாம். நம்ம புராண அவதாரங்கள் கூட மனித உருவில் எவ்வளவோ துன்பங்களை எதிர் கொண்டிருக்காங்களே’

‘அத விடு, அங்க பாரு இன்னொரு கேஸ், சூழியல் குற்றம்’ என்று எதிரே சுட்டினார் எக்ஸ்.

அவர்களுக்கு முன்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தவன் அதை நிறுத்தி, மாஸ்கை கழற்றி தெருவில் காறித் துப்பிக் கொண்டிருந்தான். பின் மாஸ்கை கூர்ந்து கவனித்தவன், அதை முகர்ந்து பார்த்தான். அதையும் கீழே போட்டு விட்டு கிளம்ப எத்தனித்தவனின் அருகே சென்ற எக்ஸ்

‘இப்படி செய்யறது தப்பில்லையா ஸார், சுற்றுச் சூழலை இப்படி கெடுக்கறீங்களே. இதைப் பத்தியெல்லாம் எவ்வளவோ எழுதறாங்க, சொல்றாங்க  அப்படியும் நீங்க இப்படியிருந்தா எப்படி’ என்றார்.

‘எனக்கும் என்விரான்மென்ட் பத்திலாம் தெரியும்’

‘என்ன தெரியும்’

‘பூவுலகின் நண்பர்கள் பெயரை கேள்விப் பட்டிருக்கேன், ஒற்றை வைக்கோல் புரட்சி புக்கை நாலு தடவை படிக்க முயற்சி செஞ்சிருக்கேன்  , க்ளைமேட் சேஞ்ச் பத்தி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணறேன், , நம்மாழ்வார் போட்டோவை வாட்ஸாப் ஸ்டேட்டஸா வைக்கறேன், இது போதாதா. நான் ஒண்ணு கேக்கறேன், ஓசோன்ல ஓட்டை விழுந்துருக்கே அது உனக்கு தெரியுமா’

‘இதெல்லாம் சரி, நீங்க சொல்றதுக்கு நேர் மாறா செய்யறீங்களே. இப்படி பொது இடத்துல துப்பலாமா, மாஸ்க்கை வேற அப்படியே தூக்கி போட்டுட்டுப் போறீங்க’

‘மக்கும் குப்பை, மக்காத குப்பை எல்லாம் எனக்கும் தெரியும். அதுக்காக சளி முட்டிக்கிட்டு வந்தா, சேர்த்து வெச்சு வீட்ல போய் துப்பணுமா.   மாஸ்க்ல வேற சளி கொஞ்சம் சிந்திடுச்சு,  அப்படியும் அதை போட்டுக்கிட்டு, குமட்டிக்கிட்டே போகணுமா. மொதல்ல இதெல்லாம் கேக்கறதுக்கு நீங்க யாருன்னு சொல்லுங்க’

‘டிடெக்டிவ்ஸ்’

‘ஸார், இந்தாளு சளி, கிளின்னு கிலியேத்தறான், கெளம்பிடலாம்  வாங்க’ என்று வய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ‘டிடெக்டிவ்ஸாம், லூசுங்க’ என்று முணுமுணுத்தபடி சளி ஆசாமி வண்டியை இயக்கி கிளம்பினான்.

oOo

மெயின் ரோட்டை அடைந்து, தேர்தல் ஆணைய அலுவலகத்தை கடந்து, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை நெருகினார்கள். வெளியே நின்று கொண்டிருந்த இரு போலீஸ்காரர்கள் இவர்களை நோக்கி வந்தார்கள்.

‘லாக்டவுன் பீரியட்ல என்ன வெளில சுத்திட்டிருக்கீங்க’

‘நாங்களும் டிடெக்டிவ்ஸ் தான்’

‘எந்த பீட்’

‘நிஜவுலகும் புனைவுலகும் இணையும் ட்வைலைட் ஸோன் பீட்’

‘என்னய்யா ஒளர்ற’  என்று ஒரு போலீஸ்காரர் கேட்க, கூட இருந்தவர்

‘ட்வைலைட்னு ரத்தக் காட்டேரி படம் பார்த்திருக்கேன் ஸார், இவனுங்க மந்திர தந்திரம் பண்றவங்களா இருக்கலாம்’ என்று கூறினார்.

‘அதெல்லாம் இல்லைங்க, நாங்க ப்ரைவேட்  டிடெக்டிவ்ஸ்’ என்றார் வய்.

‘பொண்டாட்டி யார் கூட போறா, புருஷன் எவ கூட இருக்கான்னு பாலோ பண்ணி போட்டோ எடுக்கறவங்க தானே’

‘நோ நோ’

‘ஸார், சில பேர் அப்படிப்பட்ட  போட்டோக்களை வெச்சு ப்ளாக்மெயில் கூட செய்வாங்க’

‘என்னய்யா, நீங்களும் அப்படிப்பட்ட கேஸ் தானா’

‘நோ, நாங்க வேற மாதிரி கேஸை தேடி வந்தோம்’

‘எனக்கு சந்தேகமா இருக்கு ஸார், பட்டப்பகல்ல உலாத்தறாங்க, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கலாம்’

‘நாங்க சொல்றது உண்மை ஸார்’

‘ஐடி ப்ரூப் காட்டுங்க’

‘…’

‘என்ன?’

‘..’

‘இவங்க கிட்ட எந்த டாகுமென்ட்ஸ் இல்லை போல, ஆண்ட்டி-நேஷனல்ஸ்னு சந்தேகமா இருக்கு .. என்கவுன்ட்டர் பண்ணிடலாமா  ஸார்?’

எக்ஸும், வய்யும் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.

Ooo

மீண்டும் பொன் நகரை அடைந்த பின் தான்  ஓடுவதை நிறுத்தினார்கள். தடுமாறாமல் நிற்பதற்காக அருகேயிருந்த  போது ஸ்வச் பாரத் குப்பைத் தொட்டியை பிடித்துக் கொண்ட எக்ஸ், மாஸ்கை கழட்டி மூச்சு வாங்கிக் கொண்டே

‘என்னய்யா இது , நாமே தனியா புலனாய்வு பண்ணி, ரியலிஸ குற்றப் புனைவை உருவாக்கலாம்னா இப்படியாயிடுச்சே.’ என்றார் எக்ஸ்

‘..’

குப்பைத் தொட்டியின் மீது சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தார் வய்.

‘வாசகாஸ் ஏமாற்றம் அடைவாங்களே, அதை நினைச்சாத் தான் ரொம்ப வருத்தமா இருக்கு’

‘அப்படியெல்லாம் ஆகாது ஸார்’ என்றார் வய்.

‘என்னையா சொல்ற ‘

‘இது குற்றப் புனைவு தான்னு வாசகர்களுக்கு புரியும் ஸார்’

‘எப்படி’

‘..’

‘சொல்லுயா’

‘எழுத்தாளரோட குற்றப் புனைவுகள் சிலாகிக்கும் படியா இருக்காது தான், அதுக்காக நாமளே தனியா புலனாய்வு பண்ணப் போறோம்னு கிளம்பியதே பெரிய க்ரைம் தான்னு ரீடர்ஸுக்கு தெரியும். ஸோ, இது குற்றப் புனைவு தான்’

 

 

முந்தைய புலனாய்வுகள்:

 

எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை

சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

பேய் விளையாட்டு- காலத்துகள் சிறுகதை

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

குறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்

காலத்துகள் 

‘நீ பேசறது உன் எழுத்தை விட கொஞ்சம் பெட்டரா இருக்கும், மாஸ்க்கால மூடிட்டு பேசினா அதுவும் ஒண்ணும் புரியாத மாதிரி ஆயிடுது’ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. பெருந்தொற்று காலத்திலும், இலக்கியம் குறித்தும்,  நான் எழுதவதைப் பற்றியும் அவருடன் உரையாடுவதை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று அவர் வீட்டிற்கு வந்த காரணம் இலக்கியம் சம்பந்தப்பட்டது மட்டுமேயல்ல. கடந்த மூன்று நான்கு மாதங்களாக நான் எதையும் புதிதாக எழுதவில்லை. ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’ என்று சொல்ல முடியாது. நான் எழுத்தாளனா என்ற தன் சந்தேகத்தை வெளிப்படையாக முற்றுப்புள்ளி கேட்பார், நான் அதை உள்ளூர என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. இன்று மீண்டும் எழுதத் தோன்றியது.

‘இப்ப சரியா இருக்கா ஸார்’

‘ஏன்யா கத்தற, போன்ல பேசும் போது தான் சில பேர்  இப்படி சத்தம்  போடுவாங்க, நீ எதுத்தாப்ல தான ஒக்காந்திருக்க’

‘சாரி ஸார். ஒரு சின்ன குழப்பம், அதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்’

‘..’

‘ரொம்ப நாளைக்குப்பறம் இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன் ஸார்’

‘..’ ‘எதுக்கு’ என்று பெரியவர் வெளிப்படையாக கேட்காதது, நல்ல ஆரம்பம், அவர் மனநிலை மாறுவதற்கு சொல்லி விட வேண்டும்.

‘முதல் வரி  எழுதினேன் ஸார், நான் சொல்றது நம்ப முடியாத மாதிரி இருக்கும், அந்த நொடி போன் வந்தது ஸார். அதுக்கப்பறம் நாள் முழுக்க  கிட்டத்தட்ட மூணு நாலு மணி நேரம் போன்லையே இருந்திருக்கேன். தொடர்ச்சியா கால்ஸ். பர்ஸ்ட் லைனுக்கு பிறகு எதையுமே எழுத முடியலை’

‘என்ன அந்த வரி’

உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம்.’

குட். நான் கூட நீ என்னமோ ‘இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ், இட் வாஸ் தி வர்ஸ்ட் ஆப் டைம்ஸ்’ மாதிரி ஏதோ எழுதிட்டியோன்னு நினைச்சுட்டேன். ‘

‘அந்த வரி என்னவாயிருந்த என்ன ஸார், கண்டின்யு பண்ண முடியலையே’

‘சரி, இப்ப  என் கிட்ட வந்து பேசிட்டிருக்கிறதுக்கு தொடர்ந்து எழுதியிருக்கலாமே. நானும் ஈவ்னிங்கை உருப்படியா ஸ்பெண்ட் பண்ணிருப்பேன்’ பெரியவரின் இத்தகைய பேச்சுக்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

‘நாள் பூரா அடுத்து எழுத முடியாம போனது தான் எனக்கு குழப்பமா இருக்கு ஸார். இதுல ஏதாவது குறியீடா இருக்குமோ?’

‘குறியீடு எங்க திடீர்னு வருது’

‘இலக்கிய கடவுள்கள் இந்தக் கதையை நீ எழுத வேண்டாம்னு சொல்றாங்களோ’

‘சிம்பாலிக்கா சொல்றாங்களோன்னு கேக்கற? இங்க சிம்பாலிக் யூஸ் பண்ற இடத்தில், குறியீடு பொருந்துமா?’

‘..’

‘குறியீடுலாம், நல்ல மொழி வளம், சிந்தனை உள்ளவங்க உபயோகிக்கிற வார்த்தை. நீ நேரடியா எழுதறேன் பேர்வழின்னு அதையே கந்தரகோலம்  பண்ற ஆளு, உனக்கு எதுக்கு’

‘சரி, குறியீடு வேண்டாம். சகுனம்னு வெச்சுக்குங்க. கதையை ஆரம்பிக்கும் போதே தடங்கல் வருதே, இலக்கிய தெய்வங்கள் தரும் கெட்ட சகுனமா எடுத்துக்கலாமா’

‘உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா’

‘எனக்கு பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஸார் , ஆனா பயமாயிருக்கே’

‘அதானே, ஓரு ரைட்டர் நேம் ட்ராப்பிங் பண்ணாம, அவரை க்வோட் பண்ணாம  பத்து நிமிஷம் கூட உன்னால பேச முடியாதே’

‘பேய், பிசாசு குறித்த தன்னுடைய நம்பிக்கை பற்றி இப்படி ஓரு ரைட்டர் சொன்னார்னோ, அவரை பெயரையோ நான்  குறிப்பிடலையே ஸார், நீங்க தான் இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ்ன்னு இன்னொருத்தரை க்வோட் செஞ்சீங்க’

‘ஆனா அவர் தன் நம்பிக்கை குறித்து குறிப்பிட்டதையே தானே நீயும் சொன்ன’

‘நானும் அவர் மரபுல வந்தவன்னு….’  சொல்ல வந்ததை நிறுத்தினேன்

‘…’

பெரியவர் எதுவும் பேசவில்லையென்றாலும் , பல வருடங்களாக அவரிடம் இலக்கிய வசவு வாங்கிக்கொண்டிருக்கும் எனக்கு அவருடைய  மனவோட்டம்  புரிந்தது. இலக்கிய முன்னோடிகளின் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர் முற்றுப்புள்ளி, அதனாலேயே சாதாரணமாக ஏதாவது கூறினாலும், அவர்களை அது சிறுமைப்படுத்துவதாக  எண்ணிக்கொண்டு பொரிந்து தள்ளிவிடுவார். அதற்கு இடம் தரக் கூடாது.

‘நான் சொன்னதை நீங்க எப்பவும் போல விபரீதமாக புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க ஸார். அவர் மரபுல வந்தவன்னு, என் எழுத்தின் தரத்தை வெச்சோ, என்னை அவருடன் ஒப்பிட்டோ  சொல்லலை, அமானுஷ்யம் குறித்த அவர் நம்பிக்கை வழி வரேன்னு தான் சொல்றேன்.’

பெரியவரின் இறுக்கம் இளகியது.

‘குறியீடு, சகுனம் பத்திலாம் நீ கவலைப் படாத. நான் பல வருஷமா  உன்கிட்ட நேரடியாவே மூர்க்கத்தனமா  உன் எழுத்து மோசம்னு சொல்லிட்டு வரேன், அதையே நீ கண்டுக்காம எழுத்திட்டிருக்க. ஸோ நீ எழுத ஆரம்பிக்கும் போது, பூனையென்ன, புலி, பாம்பை நடுல சகுனமா விட்டால்  கூட நீ  மாறப் போறதில்லைன்னு  லிடரரி காட்ஸுக்கு  தெரியாதா என்ன. நீ வழக்கம் போல, எப்பவும் கொட்டற எழுத்துக்  குப்பையை கொட்டு’

‘ ‘ப’னாக்கு ‘ப’னான்னு நீங்க பாம்பு, புலின்னு சொல்லியிருந்தாக் கூட, எனக்கு அதுலயும் ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ஸார். பாம்புகள் மேல் எனக்கிருக்கிற சரிசமான ஈர்ப்பும், பீதியும் பற்றியும், என் கனவுகளில் அவை அடிக்கடி வருவதும் உங்களுக்கு தெரியும். இன்னிக்கு எழுத ஆரம்பிச்ச கதையுடன் சர்ப்பம், எழுத்து, இரண்டையும் இணைக்கும் உளவியல் சிக்கல்னு இன்னொரு புனைவும் எழுதிடலாம்னு நினைக்கிறேன் ஸார். முடிஞ்சா இன்றைய தடங்கல்களையே கூட கதையா மாத்திடலாம். மூன்று புனைவுகள். வாட் டூ யு திங்க்?’

‘..’

‘ஸார்’

‘என்னை ஏன் கேக்கற’

‘என் ஐடியா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு…’

‘நீ எப்படியும் எழுதத் தான் போற. ஒரேயடியா மூன்று கதைகளை நான் படிச்சுத் தொலைக்கணும். அதனால வரும் பாதிப்பை தடுக்க ஏதாவது தடுப்பூசியை இலக்கிய கடவுள்கள் தருவாங்களா, அவங்க கிட்டகூட உன் எழுத்திலிருந்து காப்பாற்றும் மருந்து இருக்காதே’

 

பிற முற்றுப்புள்ளி கதைகள்

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

குற்றமும் தண்டனையும் – காலத்துகள் சிறுகதை