குற்றமும் தண்டனையும்

காலத்துகள்

1. குற்றம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு வார இறுதியில் பழைய புத்தகக் கடையில் துழாவிப் கொண்டிருக்கும்போது ‘வாசகனுக்காக காத்திருக்கும் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை பார்த்தேன். எழுதியவர் பெயர் ‘முற்றுப்புள்ளி’ என்று இருந்தது. 1971ஆம் ஆண்டு வெளிவந்திருந்த அந்தநூலின் முதல் பக்கத்தில் ‘எப்போதும் என்னுடனிருக்கும் என் மனைவிக்கும், இந்தப் புத்தகத்தை வாசிக்கப்போகும் என் முதல் வாசகனுக்கும் சமர்ப்பணம்’ என்றிருந்ததும் என்னை ஈர்க்க, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

சிறிய முன்னுரையில் இந்த நூல் உருவான விதம் குறித்து எழுத்தாளர் சொல்லி இருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக எழுதி வந்துள்ள அவருடைய எந்தக் கதையும் பிரசுரமாகவில்லையாம். அதற்காக பத்திரிக்கைகளை அவர் திட்டவும் இல்லை. ஆனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவரிடம் அவர் மனைவிதான், தானே தன் கதைகளைத் தொகுத்து வெளியிடும் யோசனையைத் தந்திருக்கிறார். முதலில் இவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யோசித்துப் பார்க்கும்போது அதுவே சரியான முடிவென்று தோன்றியதாகவும், இந்த நூலை வெளியிட்டு முடித்தவுடன் எதையும் எழுதப்போவதில்லை என்றும் முடிவு செய்ததாக கூறுகிறார். அதுவரை அவர் மனைவி மட்டுமே அவர் கதைகளை வாசித்திருந்தாலும், கணவன் என்பதால்தான் அவர் வாசித்திருக்கிறார், வேற்று மனிதனாக இருந்திருந்தால் அவருக்கும் தன்னைப் பற்றி தெரிந்திருக்காது, எனவே இனிமேல்தான் தன் முதல் வாசகனைப் பெறவேண்டும், எனவேதான் இந்நூலுக்கு இத்தகைய தலைப்பை வைத்ததாகவும், இத்துடன் தன் எழுத்துலக வாழ்க்கை முடிந்து விடுகிறது என்றும் எழுதியிருந்தார். பதிப்பித்தவர் பற்றிய தகவலில் ‘முற்றுப்புள்ளி’ என்றிருந்தாலும், முகவரி நானிருக்கும் நகரத்தில் இருந்தவர் அவர் என்பதை தெரிவித்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் இன்னும் அங்கிருப்பாரா கேள்வி எழுந்தது.

நான் அன்றிருந்த மனநிலைக்கு இந்த நூல், இல்லை, அதன் முன்னுரை மிகவும் நெருக்கமானதாக இருந்தது. 14 கதைகள் கொண்ட அந்தத் தொகுப்பை அன்றே படித்து முடித்தேன். எனக்கு அக்கதைகள் பிடித்திருந்தன. அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய 3 கதைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. சோர்வுற்றிருந்த நான் மீண்டும் இந்த சிறுகதைத் தொகுப்பை படித்தபோதுதான் அந்த எண்ணம் தோன்றியது. யோசிக்காமல், ‘முற்றுப்புள்ளி’ என்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து உங்களுக்கு இந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கதையை தட்டச்சு செய்து அனுப்பினேன்.

தன் கதைகளைப் பிரசுரிக்க பெரும்பாடுபட்ட அவர்பால் எனக்கு உண்டான பரிவா அல்லது (‘எனது’ இரண்டாவது புனைபெயரில் என்றாலும்) இதுவாவது பிரசுரமாகுமா என்ற நப்பாசையா என்று என்னால் இப்போதும் உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த நேர உந்துதலில் அதைச் செய்து விட்டேன். அந்தக் கதை ஏற்கப்பட்டது. பிறகு கடந்த 4 மாதங்களில் முற்றுப்புள்ளி தொகுப்பில் இருந்த வேறு 6 கதைகளும், காலத்துகளின் 2 கதைகளும் உங்கள் தளத்தில் வெளிவந்துள்ளன.

இப்படி ஏமாற்றி அனுப்புவது குறித்த கடந்த 10-15 நாளாக மன உளைச்சல் அதிகமாக, நேற்று மாலை நூலில் இருந்த முகவரிக்கு சென்று பார்க்க முடிவு செய்தேன். அந்த வீட்டில் 50-55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்எ ன்னை எதிர்கொண்டார். அவருக்கு இந்நூல் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும், தன் தந்தை அறிந்திருக்கக்கூடும் என்றும் சொல்லி அவர் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். 80 வயதிருக்கக்கூடிய முதியவர், என் கையில் இருந்த நூலைப் பார்த்ததும் மிக சிறிய அளவில் சலனமடைந்தார் என்று தோன்றியது.

மகன் வெளியே செல்ல, இருவரும் பேச ஆரம்பித்தோம். முன்னுரையில் எழுதி இருந்ததையே மீண்டும் சொன்னார். மனைவி குறித்து மன எழுச்சியுடன் பேசினார். அவர்தான் நூல் வெளியிட்டு ஒரு வடிகால் கிடைத்தால், தான் தொடர்ந்து எழுதுவோம் என்று நம்பினார் என்றும், அவர் இல்லாவிட்டால் தனக்கு பைத்தியம் பிடித்திருக்கும் என்றார். அருகிலுள்ள பூங்காவிற்கு மாலை நேர நடைக்கு சென்றிருக்கும் அவரது மனைவி என்னை (அவரது முதல் வாசகனை) கண்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்றும் சொன்னார். அவர் இன்றைய எழுத்துக்கள் வரை தொடர்ந்து வாசித்து வருகிறார் என்பது அவர் அறையில் அறையில் இருந்த புத்தகங்களிலிருந்து தெரிந்தது. இன்னும் பத்திருபது நாட்களில் ‘வெய்யோன்’ நாவலின் செம்பதிப்பு கிடைத்து விடும் என்று குதூகலத்துடன் சொன்னார்.

அவரிடம், மிகுந்த தயக்கத்துடன் நான் செய்த காரியத்தைச் சொன்னேன். அவர் உடல் மொழியில் இறுக்கம் தோன்றினாலும் , அதிர்ச்சி அடைந்தவர் போல் தெரியவில்லை. அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். உங்கள் தளத்தை அவர் தொடர்ந்து வாசித்து வருகிறாராம். 4 மாதங்களுக்கு முன் தன் புனைப்பெயரிலேயே தன் கதைகளை இன்னொருவன் தன் அனுமதியில்லாமல் பதிவுகள் செய்திருந்ததை படித்து முதலில் வியப்படைந்தாலும், பிறகு விட்டுவிட்டாராம். (இந்த வயதில் வேறு என்ன செய்ய, என்றார்). தொடர்ந்து தன் கதைகள் வெளியாகவே அடுத்து எந்தக் கதை வரும் என்று (நான் புத்தகத்தில் உள்ளது போல் இல்லாமல் எனக்கு பிடித்திருந்த வரிசையில் உங்களுக்கு கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன்) ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.

மன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கு இல்லை, இன்றே உண்மையைச் சொல்லி அனைத்து கதைகளையும் எழுதியவர் நீங்கள்தான் என்று தெரிவித்து விடுகிறேன் என்றேன். அதெல்லாம் வேண்டாம், உங்கள் மனசாட்சி உங்களைத் தொந்தரவு செய்ததால்தானே நீங்கள் இங்கு வந்தீர்கள், இலக்கியத்தின் ஒரு முக்கிய நோக்கம், மனசாட்சி குறித்த சிக்கலை முன்வைப்பதுதானே, மஹாபாரதமே அதைத்தானே செய்கிறது, மேலும் தாஸ்தாவெஸ்கிகூட ரஸ்கால்நிகோவும் மீட்சியடைமுடியும் என்றுதானே சொல்கிறார், அவனுடன் ஒப்பிடும் போது நீ ஒன்றுமே செய்யவில்லையே, எனவே நீ வருந்தாதே, என்றார்.

அப்போது அவர் மனைவி வர, அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் மனைவி அடைந்த பரவசத்தை எளிதில் சொல்ல முடியாது. கணவரின் முயற்சிக்கு இப்போதாவது பலன் கிடைத்ததே என்று நெகிழ்வோடு சொன்னதோடு, வீடு தேடி வந்து சந்தித்ததற்கு நன்றி சொன்னார். எனக்குத்தான் நான் செய்ததை நினைத்து மிகவும் கூச்சமாக இருந்தது. முற்றுப்புள்ளி நான் செய்ததைக் குறித்து தன் மனைவியிடம் கூறவில்லை. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது மட்டும் தெரிந்திருந்தால் அந்த அம்மையாரிடமிருந்து நான் தப்பித்திருக்க முடியாது. சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பிறகு தன் மனைவி சொன்னதில் பாதி நடந்தது என்றார். தான் தொடர்ந்து எழுதி வருவதாகவும், ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக ஒன்றையும் பிரசுரிக்க அனுப்பவில்லையென்றும் சொன்னார். தன் லேப்டாப்பில் பதிவேற்றி வைத்திருந்த கதைகளை காண்பித்தார். 45 ஆண்டுகளில் 77 கதைகளை எழுதியுள்ளார். ஆனால் அவற்றை 77 கதைகள் என்று சொல்லிவிட முடியாது. 77 ஃபோல்டர்களில், ஒவ்வொன்றின் உள்ளேயேயும் V1, V2, V3 என பல வெர்ஷன்கள் அவை எழுதப்பட்ட வருடங்கள் பற்றிய குறிப்புடன் இருந்தன (சில கதைகள் v1.1, v1.2, v1.3 என்று சப்-ஃபோல்டர்களிலும் நீண்டன). கதைகளை யாருக்கும் அனுப்புவதில்லை என்பதால், அவற்றை தொடர்ந்து திருத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். 70களில் எழுதிய கதையை போன வருடம்கூட சற்றே திருத்தியிருக்கிறார். அவரின் ஈடுபாடு அசரடித்த அதே நேரம் அதற்கு துரோகம் செய்து விட்டேன் என்ற நினைவு வருத்தியது. உண்மையைச் சொல்லப்போகிறேன் என்று நான் மீண்டும் அவரிடம் சொன்னபோது அவர் மறுத்துவிட்டு வேறு சில நாவல்கள்/எழுத்தாளர்கள், இலக்கிய போக்கு இவற்றில் உரையாடலை திருப்பி விட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிய பிறகு, இனி அடிக்கடி வந்து அவரைச் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன். அவர் மனைவியிடம் நான் செய்ததைப் பற்றி கூறாமல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் மீண்டும் செல்ல எண்ணியுள்ளேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

அவர் என்ன சொன்னாலும் என் மனம் ஒப்பாததால் இன்று காலை இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன். அவரை மட்டுமல்ல, உங்களையும் நான் ஏமாற்றி இருக்கிறேன். நான் மன்னிப்பு கோரப்போவதில்லை. இந்த மின்னஞ்சலை நீங்கள் அப்படியே உங்கள் தளத்தில் வெளியிட்டு ‘காலத்துகள்’ என்ற பெயரில் (நான் சொந்தமாக எழுதிய) கதைகளை நீக்க முடிவு செய்தாலும் எனக்குச் சம்மதமே. என்ன, முற்றுப்புள்ளியைப் பற்றி இப்போது உங்களிடம் நான் எதுவும் சொல்ல முடியாது. அதையும் இன்னும் ஓரிரு வாரத்தில் சரிசெய்து அவர் அனுமதி பெற்று அவரது முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

தண்டனை கோரி,

காலத்துகள்

2. தண்டனை

வணக்கம் காலத்துகள்,

உங்கள் கதை கிடைத்தது. இதைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். இரு நண்பர்களின் கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை, இந்தக் கதையை இவை இன்னும் செறிவாக்கும் என்று நினைத்தால் செய்யலாம். அதற்கு முன் என் கருத்து.

இந்தக் கதையில் நீங்கள் இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி என்ற இலக்கிய கோட்பாட்டைப் பயன்படுத்த முயல்கிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியாது, ஆனால் நீங்கள் குறிப்பிடும் அதே காலகட்டத்தில் ‘முற்றுப்புள்ளி’ என்பவரும் சில சிறுகதைகளை இங்கு எழுதியுள்ளார். இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி குழப்பங்கள் வேண்டாம் என்று நினைத்தால் இந்தப் பாத்திரத்தின் பெயரை மட்டும் நீங்கள் மாற்றி விடலாம் (நீங்கள் முற்றுப்புள்ளி இல்லை என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்). இன்னொன்று உங்கள் கதைகள் தன்னுணர்வு கொண்டவையாக, தன்னைத் தானே பிரதிபலித்துக் கொள்பவையாக உள்ளன. அது தவறில்லை, ஆனால் மனித உணர்வுகளின் ஆழங்களை தேடுவதற்கு பதிலாக, வடிவம்/ உத்தி மட்டுமே எழுத்து என்ற இடத்திற்கு உங்களை அவை இட்டுச் செல்லக் கூடும்.

பின்நவீனத்துவ நகைமுரண் (postmodern irony) குறித்த டேவிட் பாஸ்டர் வாலஸின் இந்தக் கருத்தையும் சிந்தித்துப் பார்க்கலாம்-

“Irony and cynicism were just what the U.S. hypocrisy of the fifties and sixties called for. That’s what made the early postmodernists great artists. The great thing about irony is that it splits things apart, gets up above them so we can see the flaws and hypocrisies and duplicates. The virtuous always triumph? Ward Cleaver is the prototypical fifties father? “Sure.” Sarcasm, parody, absurdism and irony are great ways to strip off stuff’s mask and show the unpleasant reality behind it. The problem is that once the rules of art are debunked, and once the unpleasant realities the irony diagnoses are revealed and diagnosed, “then” what do we do? Irony’s useful for debunking illusions, but most of the illusion-debunking in the U.S. has now been done and redone. Once everybody knows that equality of opportunity is bunk and Mike Brady’s bunk and Just Say No is bunk, now what do we do? All we seem to want to do is keep ridiculing the stuff. Postmodern irony and cynicism’s become an end in itself, a measure of hip sophistication and literary savvy. Few artists dare to try to talk about ways of working toward redeeming what’s wrong, because they’ll look sentimental and naive to all the weary ironists. Irony’s gone from liberating to enslaving. There’s some great essay somewhere that has a line about irony being the song of the prisoner who’s come to love his cage.”

அவருடைய இந்தக் கட்டுரையையும் https://jsomers.net/DFW_TV.pdf படித்துப்பாருங்கள்.

இனி நண்பர்களின் கருத்து.

முதல் நண்பர் கூறுவது இது-

“இந்த மாதிரியான வடிவ உத்திகள் ஏற்கனவே வந்துள்ளன, அதன் தாக்கம் இந்தக் கதையில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எழுத்தாளர் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார், எல்லாவற்றையும் ஒரே கதையில் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை என்று அவருக்கு சொல்லவேண்டும். அதே போல் தேவையில்லாமல் எழுத்தாளர்/நூல்கள்/பாத்திரங்கள் பெயர் உதிர்ப்பும் செய்கிறாரோ என்று- இந்தக் கதையில் மட்டுமல்ல -இவர் கதைகளை படிக்கும் போது தோன்றுகிறது. முன்பு அனுப்பியிருந்த கதையில் மௌனி, இதில் ‘ரஸ்கால்நிகோவ்’ (அடுத்து தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் தால்ஸ்தோய் மற்றும் செகாவ் வரப் போகிறார்களா?)- இதெல்லாம் தேவையா என்று இவர் யோசிக்கலாம்.”

இன்னொரு நண்பரின் கருத்து.

“முற்றுப்புள்ளி பற்றியும் அவர் மனைவி பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லலாம். அவருடைய எந்தக் கதைகளும் பிரசுரமாகவில்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவை எப்படிப்பட்டக் கதைகள் என்று குறிப்பிடப்படவில்லை. அவை எந்த தரத்தில் இருந்தாலும், இந்தப் பாத்திரம் குறித்து படிக்கும்போது ‘கான முயல் எய்த அம்பினில்…’ என்ற குறள்தான் ஞாபகம் வந்தது. முற்றுப்புள்ளி இலக்கியம்/ எழுத்து என்ற களிறுடன் போராடித் தோற்றிருந்தாலும், அது கம்பீரமான தோல்வியே (magnificent failure). காலத்துகள் குறித்து அப்படிச் சொல்ல முடியுமா என்பதை, யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.”

4 comments

  1. மூன்றாம் நண்பனின் கருத்து: குற்றம் மன்னிக்க பட்டது.தண்டனை: இது போல் இன்னும் செறிவான கதை காலத்து இடம் இருந்து வர வேண்டும்☺

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.