இலக்கிய நண்பரும் லிட்ரரி எதிக்ஸும் – காலத்துகள் குறுங்கதை

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே கதையாக்கிடுவியா’ என்று உரத்த குரலில் கேட்டார் பெரியவர் முற்றுப்புள்ளி.

‘அப்டிலாம் இல்லை ..’

‘என்னய்யா இல்லை, கொஞ்சமாவது எதிக்ஸ் வேண்டாம்’

‘இலக்கியத்துக்கும் எதிக்ஸுக்கும் என்ன ஸார் சம்பந்தம்’

‘உனக்கும் லிட்ரச்சருக்கும் என்னய்யா சம்பந்தம், நீ கதை எழுதி என் கழுத்தை அறுக்கற. அதை எப்படியோ சகிச்சுகறேன், இப்ப இதை பண்ணி வெச்சிருக்க’

பெரியவரின் கோபத்தை பார்த்த போது, என் இலக்கிய வாழக்கைக்கு மட்டுமின்றி எனக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தோன்றியது. நான் எதிர்பார்த்தது தான். அதனால் தான்  எப்போதும் கதையை எழுதும் போதே பெரியவரிடம் அதை கொடுத்து படிக்கச் சொல்பவன், இந்த முறை பிரசுரமானதையே கூட கூறாமல் இருந்தேன்.

‘பப்ளிஷாகி ரெண்டு மாசமாச்சு, என்னை அப்பப்ப வந்து பார்க்கற, மெசேஜ் பண்ற, இதை மட்டும் சொல்லலை’   

பள்ளி காலத்தில் தன்னை விட வயதில் சிறிய மாணவனிடம் கைகலப்பில் ஈடுபட்டதையும், அதன்பின் அவனை பல வருடங்கள் கழித்து சந்தித்ததையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உளச் சிக்கலையும் பெரியவர் ஒரு உரையாடலின் போது கூறியிருந்தார். வழக்கம் போல் புனைவிற்கான எந்த உருப்படியான கருவும் கிடைக்காமல், அப்படியே தோன்றுவதை எழுதி உடனேயே அழித்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் சம்பவத்தை கதையாக மாற்றலாம் என்று அப்போதே முடிவு செய்தேன் ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ என்ற தலைப்பில் கதையை எழுதியிருந்தேன். அது பிரசுரமும் ஆகிவிட்டது. அதன் பின் பெரியவரை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கதை குறித்து கூற எண்ணினாலும், பின் தவிர்த்து விடுவேன்.  சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று

‘இல்லை ஸார், இதை நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு..’

oOo

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே உன் இஷ்டத்துக்கு மாத்தி எழுதுவியா’ என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘நான் ஸ்கூல் டேஸ்ல சண்டை போட்டேன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா அதுக்கப்பறம் நான் அவனை பார்க்கவே இல்லையே. அது ரொம்ப சின்ன இன்சிடன்ட், அன்னிக்கு உன் கூட பேசிட்டிருந்தப்ப ஞாபகம் வந்தது, சொன்னேன். நீயா அவங்க இரண்டு பேரும் சந்திக்கறாங்கன்னும் அதனால கதைல வர ‘நான்’ மனசளவுல பாதிக்கப் படறேன்னு உன் அரை குறை சைகாலஜிகல் குப்பையை வேற கொட்டியிருக்க’

‘கதைல நீங்க வரலையே ஸார். இன்றைய காலகட்டத்தில் நடக்கற மாதிரி தான ஸார் இருக்கு, நீங்க சொல்ற இன்சிசென்ட் நடந்து அறுபது, எழுபது வருஷமாகியிருச்சே’

‘ஆனா நீ எதை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன்னு எனக்கு தெரியுமேயா’

‘அந்த பாத்திரம் உங்களைத் தான் குறிக்குதுன்னு யாருக்கும் தெரியாதே ஸார், நீங்க சண்டை போட்ட அந்தப் பையன் அந்தக் கதையை படிக்கப் போறானா என்ன’

‘ஸோ, நீ என்னை டீக்ரேட் செஞ்சிருப்பது சரின்னு சொல்ற’

‘உங்களை இழிவு படுத்தற மாதிரி எதுவுமில்லையே ஸார்’

‘என் கேரக்டரோட மனவோட்டம், நடந்துக்கற விதம் எல்லாமே அவனை எதிர்மறையா காட்டற மாதிரி தானே இருக்கு, மனதளவுல ரொம்ப பலவீனமானவனா, தாழ்வுணர்ச்சி கொண்டவனா தான் கதைல ‘நான் இருக்கேன்’

‘அப்படிலாம் இல்ல ஸார், நீங்க தானே நடந்ததை அப்படியே எழுதக் கூடாது, அது இலக்கியமாகாதுன்னு சொல்வீங்க, அதான் உங்க சண்டையை ஆரம்பப் புள்ளியா  வெச்சுகிட்டு கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன்.

‘நீ என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாம, என்னைப் பற்றிய, நான் சொல்லிய விஷயத்தை என் கிட்ட சொல்லாம எழுதியது தப்பு தான்.

oOo

‘என்ன கண்றாவியா இது, உன் எழுத்தை படிக்க எப்பவுமே குழப்பமாத் தான் இருக்கும், ஆனா அந்த அளவுகோல் படி பார்த்தா கூட இது படு கேவலமா  இருக்கே’  என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில, பல நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘உன் கதையை ஒரு தடவை படிக்கறதே கொடுமை, இதுல திருப்பி திருப்பி அதே விஷயம் வர மாதிரி, என்னை வேற கேரக்டரா வெச்சிருக்க, வாட் ஆர் யூ ட்ரையிங்.’

‘ப்ரேம் ஸ்டோரி கான்சப்ட் ட்ரை பண்ணியிருக்கேன் ஸார். ஆரம்பத்துல மெயின் கதை, அதுக்குள்ள இன்னொரு கதை, அந்த இரண்டாவது கதைக்குள்  இன்னொன்னு… அரேபியன் நைட்ஸ், டெகாமரான்லலாம் இப்படி வருமே, வாசகர்களுக்கு புது அனுபவம் தரலாமேன்னு தான்..’

‘டெர்ரிபிள். வழக்கம் போல நீ எதை படிச்சியோ அதை அறைகுறையா புரிஞ்சுகிட்டு வாந்தி எடுத்திருக்க, ப்ரேம் ஸ்டோரி யுத்தி பற்றி உனக்கு சுத்தமா புரியலைன்னு தெரியுது. அது கூட பரவாயில்லை. நான் என்னிக்கு உன்கிட்ட ஸ்கூல்டேஸ்ல சண்டை போட்டேன்னு சொல்லியிருக்கேன். நீ ஏதோ எழவு கதையை எழுதின சரி, அதை ஜஸ்டிபை செய்ய என் தலையை ஏன்யா உருட்டற?’

‘ரீஸன் இருக்கு ஸார். அக்டோபர்ல  ‘ஹூ இஸ் த பேட் ஆர்ட்  ப்ரெண்ட்’ அப்படின்னு இலக்கிய சர்ச்சை வந்துதே ஸார், ந்யுயார்க்கர் , வேற சில பத்திரிகைகள் அதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் கூட வெளியிட்டாங்களே. இரண்டு பேர், நண்பர்கள் அல்லது  பொதுவா அறிமுகமானவங்கனு வெச்சுக்கலாம், ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றார், அதை கேட்டுகிட்ட மற்றொருவர் அதை கதையாக்கிடறார், அந்த சம்பவத்தை சொன்னவர் இன்னொருவர் அதை கதையா எழுதினது தப்புன்னு சொல்றார்…’

‘ஹோல்ட் ஆன், ஒருத்தர் ஒரு சம்பவத்தை சொன்னார், இன்னொருத்தர் எழுதினார், முதல் ஆசாமி அப்படி செஞ்சது தப்புன்னு சொல்றார், இதை ஏன் ஜிலேபி சுத்தி சொல்ற, உனக்கு பேசறதே சரியா வர மாட்டேங்குது, அதான் எழுத்தும் அதே மாதிரியிருக்கு’

பெரியவர் கூறிய விதமும் ஜிலேபி தான், என்ன, அது அளவில் சிறியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியதை நான் சொல்லவில்லை.

‘அத விடுங்க. இந்த விஷயத்துல இருக்கற லிட்ரரி எதிக்ஸ் சார்ந்த பிரச்சனை என்னை யோசிக்க வெச்சுது ஸார், அது தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது. தவிர, எனக்கு இலக்கிய நட்புன்னு சொன்னா நீங்க மட்டும் தானே ஸார், அதனால தான் நீங்க ஒரு  சம்பவத்தை சொன்ன மாதிரியும், நான் அதை புனைவா மாற்றின மாதிரியும், அப்படி செஞ்சதுல உள்ள அறச் சிக்கல்கள் குறித்தும் புனைவாக்கினேன்’

‘உன்னோட யூஷுவல் செக்க்ஷுவல் ஆங்சைட்டி தேவையேயில்லாம கதைல இருக்கே, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு’

பெரியவர் நெருங்குகிறார். இந்தக் கதை எழுதியதற்கு நான் சொன்ன காரணம் பொய் இல்லையென்றாலும் அது மட்டுமே உண்மை  அல்ல. ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ கதையில் வரும் பாலியல் தொடர்பான உட்சலனங்கள் குறித்து ‘என்னடா சொந்த அனுபவமா’ என்று என் நண்பர்கள் கேட்டதற்கு  நான் இல்லையென்றும் சொன்னாலும் ‘உன் கதைல அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் வருதே, அதான் சந்தேகமா இருக்கு’ என்று தொடர்ந்து நச்சரித்ததால், கதையின் கரு, அதை சார்ந்து வரும் மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளி மீது சுமற்றி விடலாம் என்பதும் என்னுடைய எண்ணம். மேலும் இப்படி பெரியவரை ஏமாற்றுவதும், எதிக்ஸ் பற்றிய சர்ச்சையை மலினப் படுத்துவதாக புரிந்து கொள்ளப் படக் கூடிய இந்தக் கதையை எழுதுவதும், இலக்கிய அறம் என்று பேசிக்கொண்டே, அதை தெரிந்தே மீறுவதாக இருப்பதால், இந்தப் புனைவின் மீது ‘அபத்த’, ‘அவல நகைச்சுவை’ போன்ற வார்த்தைகளை போட்டுப் பார்த்து, அதற்கு இலக்கிய தகுதியை உருவாக்க முடியும்  என்பது என் யூகம்.

‘அப்படிலாம் எதுவுமில்லை ஸார். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்

‘..’

‘புக்கா வரும் போது, இந்தக் கதையில் வேறொருவர் சம்பவத்தை சொன்ன மாதிரி மாற்றிடறேன்’

‘இதை புக்கா போட்ற ஆசைலாம் வேற இருக்கா’

‘..’

‘லிட்ரரி எதிக்ஸ பேஸ் பண்ணி இந்தக் கதையை எழுதினேன்னு  சொல்ற, ஆனா அப்படி எதுவுமே இல்லையே. இலக்கியம் உன் கைல கிடைச்ச பூமாலை. அறம்லாம் உனக்கு புரியாத விஷயம், எதுக்கு அதையெல்லாம் கதைல கொண்டு வர ட்ரை பண்ற’

‘இப்படி பண்ணலாமா ஸார், மூணாவதா இன்னொரு உள்கதை கொண்டு வந்துடலாமா, அதுல அறத்தை நல்லா அரைச்சு…’

‘ஐயோ வேண்டாம்’

‘..’

உங்களுக்கு இந்தக் கதைல எந்த வருத்தமும் இல்லையே ஸார்’

பெரியவர் தலையசைத்தார்.

‘..’

‘ஜஸ்ட் ஒன் திங்’

‘..’

‘நீ என் ப்ரெண்ட் தான். என்னை பெயர் சொல்லி கூட கூப்பிடு, நோ ப்ராப்ளம். ஆனா இலக்கிய நண்பர்னு என்னை சொல்லாத, லிட்ரச்சருக்கு அது அவமானம்.’

சில தன்னிலை விளக்கங்கள்:

எப்போதேனும் என் புனைவுகளை வாசிக்கும் ஓரிரு அதிதீவிர வாசகர்களுக்கு பெரியவர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை, அந்தப் பட்டியலில் சேர விரும்பும் வேறேதேனும் ஓரிருவர் இருந்தால், அவர்களுக்கு முற்றுப்புள்ளி ஒரு கற்பனை பாத்திரம் என்றே தோன்றக் கூடும். அந்த தவறான எண்ணத்தை நீக்க இந்த தளத்திலேயே அவருடனான என் அறிமுகம் குறித்து இங்கேயும், எங்களிருவருக்குமிடையே உள்ள நட்பைக் குறித்து இங்கேயும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கதாபாத்திர மற்றும் நிஜ முற்றுப்புள்ளியை கோபப்பட வைத்த கதை இங்கே.

பெரியவருடனான இந்த உண்மை உரையாடலுக்கு காரணமாக இருந்த ‘Who is the bad art friend’ சர்ச்சை குறித்து இங்கே , இங்கே

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.