பூவன்னா சந்திரசேகர்
துணையிழந்த கிழத்தியொருத்தி
இழுத்துப் போட்ட சுருட்டின்
பொறியெடுத்து கனல் கூட்டி
குளிர் காய்கிறான்
பருவம் ஏய்த்து உடைந்தொழுகும்
வானின் துளைகளையெல்லாம்
சாரம் கிழித்து திரையாக்கி
வேடு கட்டுகிறான்
நிரைத்தது போக
மீந்தவை யாவும்
எதுக்களித்து நிற்கும்
சுனை சுற்றி சுருண்டு கிடந்து
அணைக் கட்டுகிறான்
சேரேறி கரையான அவனுக்கு
கிடாயும் பொங்கலும்
எப்போதேனும் கிட்டும்
குறுகிக் கிடந்த உடல் நோக
நேர் நிமிந்தவன்
நெட்டியுடைக்கும் நாளில்
ஊரழியும்.
One comment