புஷ்பால ஜெயக்குமார்
அந்தியில் கரையும்
காகத்தின் ஓசை
சொல்லமுடியாத தூரத்தில்
முன் எப்போதோ கேட்டது
தற்போது ஒருவன்
நடித்து முடித்த
கதைகளின் நிகழ்வுகளை
படித்த புத்தகத்தின்
பக்கங்கள் போல்
கூறாக நின்றது காகிதங்கள்
மறதியில் நினைவுறும்
அதிசயத்தின் சல்லடையில்
சலித்த அனுபவங்கள்
சிக்கியது விடாப்பிடியாக
சுமக்கும் ஞாபகங்கள்
பகடையை உருட்டும்
இச்சைக்குப் பேர் போன
முடிவினை நோக்கி
கையின் விசை கூட
நிலப்பரப்பில் நின்றபடி
கல்லை வீசியவனின்
உள்ளுணர்வின் புரியாமையினால்
கேட்டது கிடைக்கும்