ம இராமச்சந்திரன்
மணல்நீரால் நிரம்பி வழிகிறது அது
ஒற்றை மனிதாய் நடுவில்
நீர் சூழ்ந்தாலும் மண்ணால் சூழப்பட்டாலும்
முகிழ்த்தெழும் அச்சத்தைப் புறந்தள்ள முடியவில்லை.
சுட்டெரிக்கும் வெயில் பொழுதில்
மூலநதித் தேடி
வழித்துணை கம்புடன் பயணம்
காட்டின் மெல்லோசை அசைவுகளின் சரசரப்பு
உயிர்ப் பயத்தை உச்சப்படுத்தியது
அருவி ஓசையில் அகமகிழ்ந்து
மனித நடமாட்டத்தால் உயிர்ப்புற்றேன்
வாகன வரிசை மனித கும்மாளம்
காட்டை நிறைத்தன
வழக்கம் போல
குரங்குகளின் காத்திருப்பும் ஏமாற்றமும்
தனித்திருத்தலின் பொருளற்ற சந்தம்
கூட்டிணைவின் உள் மகிழ் அமைதி
நதிமூலத்தை உணர்த்திவிட்டன
பொழுதடங்கி ஈரக்காற்றின் வருகை
வந்த வழி நோக்கி கால்களின் எத்தனிப்பு
கைகாட்டியும் நம்பிக்கையற்று கடந்துசெல்லும்
வாகனங்களின் மனப் பயத்தையும் பாதுகாப்பையும்
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது
மணல்வெளியின் நடுவில் மரணப் பயத்தோடு
வாழ்வுத் தேடும் கால்களின் வேகத்தில்
உயிர்த்திருக்கும் உயிர்ச்சாரம்
ஆசுவாசப் பெருமூச்சில் ஆதி மனிதன்
காடலைந்த வலியும் வன்மமும்
என்னோடு பயணிக்கின்றன
கூட்டத்தோடு கூடியிருந்தாலும் வந்து
காதலித்துக் கொள்ளும் அந்தத் தனிமை