ம இராமச்சந்திரன்

நீரற்ற மணல்வெளி

ம இராமச்சந்திரன்

மணல்நீரால் நிரம்பி வழிகிறது அது
ஒற்றை மனிதாய் நடுவில்

நீர் சூழ்ந்தாலும் மண்ணால் சூழப்பட்டாலும்
முகிழ்த்தெழும் அச்சத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

சுட்டெரிக்கும் வெயில் பொழுதில்
மூலநதித் தேடி
வழித்துணை கம்புடன் பயணம்

காட்டின் மெல்லோசை அசைவுகளின் சரசரப்பு
உயிர்ப் பயத்தை உச்சப்படுத்தியது

அருவி ஓசையில் அகமகிழ்ந்து
மனித நடமாட்டத்தால் உயிர்ப்புற்றேன்

வாகன வரிசை மனித கும்மாளம்
காட்டை நிறைத்தன
வழக்கம் போல
குரங்குகளின் காத்திருப்பும் ஏமாற்றமும்

தனித்திருத்தலின் பொருளற்ற சந்தம்
கூட்டிணைவின் உள் மகிழ் அமைதி
நதிமூலத்தை உணர்த்திவிட்டன

பொழுதடங்கி ஈரக்காற்றின் வருகை
வந்த வழி நோக்கி கால்களின் எத்தனிப்பு

கைகாட்டியும் நம்பிக்கையற்று கடந்துசெல்லும்
வாகனங்களின் மனப் பயத்தையும் பாதுகாப்பையும்
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

மணல்வெளியின் நடுவில் மரணப் பயத்தோடு
வாழ்வுத் தேடும் கால்களின் வேகத்தில்
உயிர்த்திருக்கும் உயிர்ச்சாரம்

ஆசுவாசப் பெருமூச்சில் ஆதி மனிதன்
காடலைந்த வலியும் வன்மமும்
என்னோடு பயணிக்கின்றன

கூட்டத்தோடு கூடியிருந்தாலும் வந்து
காதலித்துக் கொள்ளும் அந்தத் தனிமை

காம மறுப்பு: மூன்றாம் பாலினமும் வன்முறையின் உச்சமும் (சு.வேணுகோபாலின் பால்கனிகள் நாவலை முன்வைத்து)

முனைவர் ம இராமச்சந்திரன்

‘காமக் கடல்மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்’ (குறள் 1164)

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இங்கு வாழ்வதற்கான முழு உரிமை உண்டு. காமத்தாலும் காதலாலும் பின்னிப் பிணைந்த வாழ்க்கையில் மறுக்கப்படும் காமத்தாலும் ஒதுக்கப்படும் காதலாலும் வாழ்வியல் சிக்கல்கள் தோன்றுகின்றன. வாழ்வியல் சிக்கலும் போராட்டமும் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமானதாக இருக்கலாம், ஒரு மனிதனுக்கும் ஒரு குடும்பத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு மனிதனுக்கும் ஒரு சமூகத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு பாலித்திற்கும் இன்னொரு பாலினத்திற்குமானதாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் காமத்தாலும் காதலாலும் சிக்குண்டு அல்லாடும் இவ்வாழ்க்கைச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் மூன்றாம் பாலினமாகப் பிறந்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் காமம் சார்ந்த உளவியல் சிக்கல்களையும் சமூகச் சிக்கல்களையும் கேள்விக்குள்ளாக்கும் நாவல் பால்கனிகள். இந்நாவலை சு.வேணுகோபால் எழுதியுள்ளார். இதனைத் தமிழினி அதிகப் பிழையோடு வெளியிட்டுள்ளது.

இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை உற்றுநோக்கும் சூழலில் பால்கனிகள் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் இன்றளவும் இந்திய, தமிழ்ச் சமூகத்தை வந்தடையவில்லை. மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்ற எண்ணமோ அல்லது பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடியவர்கள் என்ற எண்ணமோ அல்லது இழி பிறவிகள் என்ற எண்ணமோதான் மேலோங்கி நிற்கிறது.

பிறந்து வளர்ந்த குடும்பமே ஒதுக்கித்தள்ளுதல், ஆண் பெண், சார்ந்து பழகிக்கொள்ளும் நடைமுறையில் ஒவ்வாமை, கேலி, கிண்டல், அதிகார மீறல் என்ற சமூகக் கொடுமைகள், தனக்கான பாலியல் சுதந்திரத்தைப் பெறமுடியாமல் தவிக்கும் நிலை. வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, பொது இடங்களில் அருவருப்பான பார்வை, பாலியல் சீண்டல்கள் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் அதிகம். இதன் விளைவு சமூகத்தைச் சீண்டும் நாகரிகத்தை உடைக்கும், மதிப்பீடுகளைச் சின்னாபின்னப்படுத்தும் நடத்தை சார் எதிர்வினைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படிபட்ட பாதிப்புகளுக்கு உள்ளான ஒருவன் கிட்ணன்.

இந்நாவலின் கதை கம்பம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் நகர்ந்து செல்கிறது. இந்த நகர்வுகள் அனைத்தும் கிட்ணனின் வாழ்க்கைச் சிக்கலின் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளன. நாவல் முழுவதும் பெண்களுக்குப் பிடித்தமானவனாக வலம் வருகின்ற கிட்ணன் பிறகு பெண்ணாக மாறும்போதும் அவர்களின் எண்ணத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. திவ்யாவின் மூலமாகக் கதை சொல்லப்படுகிறது. கிட்ணன் சிறுவயதில் மற்றவர்களோடு விளையாடும்போது எந்தப் பாலின வேறுபாடும் இல்லாமல் இருந்து வருகிறான். சற்று வளர்ந்த பிறகு வேட்டிக் கட்டிக்கொள்ளும்போதும் நடந்துவரும் போதும் அவனிடம் பெண் சாயல் வந்துவிடுகிறது. வீட்டில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் கேளி செய்தாலும் அவனுக்கு தான் ஒரு பெண் என்ற உணர்வு வரவில்லை. மற்றவர்களும் கேலி செய்தார்களே அன்றி அவனைப் பெண்ணாக எண்ணவில்லை.

ஊரில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு இவனும் கலந்துகொண்டு ஆடிய ஆட்டமும் பெண் உடையும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. மோகினி என்று அழைக்கும் அளவுக்கு இவனின் பெண் சாயல் வளர்ச்சிநிலைக் கண்டது. சமையல் செய்வதில் மிகவும் நேர்த்தியை கையாழுவதும் பெண்களுக்குத் தெரிந்த சமையல் சாகசங்கள் அவனிடம் இருப்பதும் அவனது குடும்ப உறவான பெண்களுக்கு இவன் மேல் அக்கறையும் பற்றும் ஏற்பட்டுவிட்டது. இவனின் அம்மா உடல் நலிவால் படுக்கையில் கிடந்தபோது அவருக்கு அனைத்து உதவிகளையும் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து செய்து வந்தான். அம்மாவின் மறைவு அவனுள் இருக்கும் பெண்மையை உணரச்செய்தது.

அவனோடு படித்த நண்பனும் ஊரில் உள்ள விடலைகளின் சீண்டலும் உறங்கிக்கிடந்த பெண்மையை உசுப்பிவிட்டன. தான் ஆணல்ல பெண் என்பதை காமச் சீண்டலின் மூலம் உணர்ந்து கொண்டான் கிட்ணன். ஊராரின் ஏச்சுக்கும் உடன்பிறந்த அண்ணன் அடிக்கும் அப்பாவின் புறக்கணிப்புக்கும் வடிகாலாய் திவ்யா விளங்கினாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு காமத்தின் பெரும்பேயும் சமூகத்தின் வன்கொடுமையும் அவனை ஊரைவிட்டு ஓடச் செய்தன. ஓடியக்கால்களும் உழன்ற மனமும் அவனை அவளாக்கியது. யாருக்கும் பயந்து வாழவேண்டியதில்லை. அவன் அவளாகச் சுதந்திரமாகச் சுற்றித் திரியத் தொடங்கினான்.

அண்ணன் மகனுக்கு மொட்டை அடிக்க போகிறார்கள் என்பதைக் கேட்டு சொந்த ஊருக்குப் பெண்ணாக வந்தான் கிட்ணன். அவனைக் கண்டு ஊரே வியந்துபோனது. ஆனால் அவனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. பெண்களின் கருணையும் அவர்களின் கேலியும் பழக்கப்பட்ட ஒன்றாக மாறிப்போனது. அவனது அண்ணன் சுதாகர் அநாகரிக வார்த்தைகளைப் பேசி அடிக்க வந்தான். ஊரார் அவனை விலக்கிவிட்டனர். பிறந்து வளர்ந்து பேசி பழகிய குடும்பம் ஒதுக்கி தள்ளுவதைக் கண்டு கண்கலங்கி தனித்து நின்றான் கிட்ணன். அவனது அப்பாவும் அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தன்னைத் தேடி தனது இனத்தைத் தேடிப் பயணப்பட்டான் கிட்ணன்.

மதுரையில் திவ்யாவின் வீட்டிற்கு அடிப்பட்ட காயங்களோடு ஒருநாள் வந்தான். அவனைக் கண்டு பிறப்பின் இடர்பாடுகளை உணரத் தொடங்கினாள் திவ்யா. மறுநாள் வீட்டில் கிட்ணனைக் காணோம். அவளது சேலை , உள்ளாடை, செருப்பு, நகைகள் காணாமல் போயிருந்தன. மற்றவர்களாக இருந்தால் ஊருக்குத் தகவல் கொடுத்துச் சண்டைப் போடுவார்கள். ஆனால் சிறுவயது முதல் தம்பி என்று உடன் விளையாடியவன் அவளோடு மனதளவில் கலந்து விட்டவன் கிட்ணன். அவனுக்கும் ஒரே ஆறுதல் அவனது அம்மா. அவள் இறந்தபிறகு திவ்யா அக்காதான். அன்று சென்றவன் பிறகு அவனைப்பற்றிய எந்தத் தகவலும் வரவில்லை அவளுக்கு என்று கூறுவதை விட அவளைத் தவிர வேறு யாரும் அவனைப் பற்றி நினைக்கவில்லை என்பது தான் உண்மை.

தனது அண்ணனிடம் சொத்தில் தனக்குச் சேரவேண்டிய பங்கைத் தரவேண்டும் என்று கூறியபோது அவனது அண்ணனும் அப்பாவும் அவனை அடித்துத் துரத்தி விடுகின்றனர். ஊரார் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இங்கே மூன்றாம் பாலினத்தவருக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கில்லை என்பதும் அவர்கள் மனிதனாகப் பார்க்கப்படுவதில்லை என்பதும் சமூகக் கொடுமை. அதைவிட அவனை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவலம் கொடூரமானது. இந்த உலகிற்கு அவனைக் கொண்டுவந்த பெற்றோரே ஏற்க மறுக்கும்போது இந்தச் சமூகம் எப்படி அவனை ஏற்றுக்கொள்ளும். இது யார் செய்த தவறு? கிட்ணனா? பெற்றோரா? சமூகத்தில் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் மனிதர்களாக மூன்றாம் பாலினத்தவர் நடத்தப்படுவது மாற்றப்பட வேண்டிய சமூகத் கொடுமைகளில் ஒன்று.

திவ்யா பணியாற்றும் வங்கி நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை வருகிறாள். அங்குக் கிட்ணன் திவ்யாவை அடையாளம் கண்டு அவளிடம் பேசும்போது வியந்துபோகிறாள். என்றாலும் தன்னையும் மற்றவர்கள் பாலியல் சிண்டலுக்கு ஆளாக்கிவிடுவார்களோ என்ற அச்ச உணர்வு ஏற்படுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. இப்போது இருக்கும் கிட்ணன் அமைதி சாந்தம் கொண்டவனாக இருக்கிறான். சுடிதார் போட்டு இயல்பான பெண்ணாகத் தோற்றம் தருகிறான். சற்று உற்று நோக்கினால் மட்டும் அவன் மூன்றாம் பாலினம் என்று தெரியவரும் என்பதால் சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.

அவனோடு உறவாடியபோது தனது தோழி பார்கவியிடம் எனது தம்பி என்று கூற அதற்கு ‘இல்ல அக்கா நான் அவங்களுக்குத் தங்கச்சி’ என்று மறுக்கும் இடம் தனது அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் மனம் வெளிப்படுவதைக் காணலாம். மீண்டும் மாலையில் சந்திக்கும் திவ்யா கிட்ணனுக்குக் குழந்தை இருப்பதைக் கண்டு வியந்து போகிறாள். அவன் வசிக்கும் வீடு மூன்றாம் பாலினத்தவர்கள் கூட்டமாக அங்கு வாழ்கின்ற பகுதியாக இருக்கிறது. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்து வருவதைக் கூறும் கிட்ணன் தனது மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்று கூறும்போது புறக்கணிப்பின் வலி வெளிப்படுகிறது.

ஹோட்டல் முதலாளி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பாலியல் தொல்லைக்கொடுப்பதைச் சகித்துக்கொண்டு வாழ்வதாகக் கிட்ணன் கூறும்போது சமூகத்தின் அவலம் புலப்படுகிறது. வேறு இடத்திற்குச் சென்றாலும் அங்கும் இவனைவிட மோசமான ஆள் இருக்கலாம். என்பதால் இங்கேயே தனது மகனுக்காக வேலை செய்து வருவதாக க் கூறும் கிட்ணன் மூன்றாம் பாலினமாகப் பிறந்ததற்காகப் படுகின்ற துன்பங்கள், அவமானங்கள், தொல்லைகள் போன்றவை திவ்யாவின் கண்முன் வந்து போகின்றன. திவ்யா தனது பர்சில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்துக் குழந்தை கையில் வைக்கும்போது கிட்ணன் அழுது விடுகிறான். முதல் சொந்த உறவு ‘நீ தான் என் பிள்ளைக்குக் காசு கொடுத்திருக்க’ என்று அவன் பூரித்துப்போகும் நிலை உறவுக்காக ஏங்கும் தனிமையின் திக்கற்ற சூழலை வெளிப்படுத்துகிறது. பார்கவி ரயில்வே ஸ்டேசனில் குழந்தையைக் கொஞ்சி பணம் கொடுக்கும்போது வாங்கிக்கொள்ள கண்டிப்பாக மறுத்துவிடும் கிட்ணன் இச்சமூகத்தில் வாழவேண்டிய, அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டிய எலும்பும் சதையும் மனமும் கொண்ட சக உயிர் என்பதை ஒவ்வொருவரும் உணரும் தருணம் இது. அவனல்ல அவளாக வாழ்வதற்கு ஒரு சமூகம் எப்போது தயாராகிறதோ அப்போது இந்தச் சமூகம் நாகரிக எல்லைகளைத் தொடலாம்.

 

பறவையோடு ஓரிரவு

ம. இராமச்சந்திரன்

மெளனத்தின் பேரொலியில் நனைந்து
மெளனித்து உறங்கும் இரவு

வாசல் கதவின் கயிற்று முடிச்சில்
கூடொன்று கட்டிய பறவை

அழையாத விருந்தாளியென மகிழ்வின்
உச்சத்தில் அனைவரும்

உச்சபட்ச பிரக்ஞையோடு அனைவரும்
ஓசை எழுப்ப உள்ளம் அஞ்சி
பறவையோடு பொழுதுகள் சில

மாலை மறைந்து இரவின் வருகையில்
முட்டையோடு கூட்டில் பறவை
ஓசையின் பேரொலியில் தடுமாறி
வீட்டின் உள்ளறையில் வந்தமர்ந்தது.

பயத்தின் பரபரப்பும் இரவின் தவிப்பும்
அதனை அலைக்கழித்தன.

சுற்றிய திசைகளில் தடுமாறிய
நெஞ்சங்களாக நாங்கள்

மின் விசிறி அணைத்துக் கதவுகள் திறந்து
பறவையோடு பேசிப் பழகினோம்.

சமாதானம் இருந்தாலும் கவனிப்பின் விசை குறையவில்லை

இயல்பானோம் நாங்கள் எங்களோடு அதுவும் இளைப்பாறிக்
கொண்டிருக்கிறது நிறுத்திய மின் விசிறியில்

பறவையோடு இரவுத் தூக்கம்
உள்ளுக்குள் ஆதி கனவு எங்களோடு
உறங்கப்போனது அதுவும்.

கண்மூட மனமில்லை இந்த இரவின்
அதிசய தருணங்களை இழந்துவிட
இப்படியொரு சூழல் மீண்டும்
ஒருமுறை வாய்க்காமல் போகலாம்.

பறவையோடு கதை பேச அழைக்கிறது மனம்
என்னோடு பேச அதற்கும் ஏதாவது
இருக்கத்தான் செய்யும்

இதோ
வாசல் திறந்து சூரியனை
வரவேற்க தூங்காமல் காத்திருக்கிறேன்
இதனை இணையோடு சேர்த்து வைக்க.

எங்கோ அருகில் விடியலுக்காய்
காத்திருக்கும் இணையின் தவிப்பும்
விடியலின் வரவுக்காய் மௌனித்திருக்கும் உனது தவிப்பும்

என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது
வாழ்தலின் இருப்பும் அன்பின் அதிர்வும்

உன்னோடு கழித்த இவ்விரவு
என்றும் உன்மத்தமாகி என்னை
உறைய வைக்கும் உன்னதத்தில்!

 

தொ.ப. படிக்கப்பட வேண்டியவர்

முனைவர் ம இராமச்சந்திரன்

‘இவ்வளவு காலமாக எங்கையா இருந்தீங்க’ – கா.சிவத்தம்பி

தமிழ் இலக்கியப் பரப்பில் மக்களிடம் இருந்து இலக்கியத்திற்கு என்ற சிந்தனை மரபு பல ஆளுமைகளை உருவாக்கித் தந்தது. படித்தல் என்ற செயல் நூல் வழியாகக் கற்றல் என்ற மரபான சிந்தனைக்கு மாற்றாகப் படித்தல் என்பது வாழ்க்கையைப் படித்தல், மனிதர்களைப் படித்தல், பண்பாட்டுக் கூறுகளைப் படித்தல் என்று புதிய நோக்கில் பயணித்தவர்களில் தொ.ப.வும் ஒருவர். இலக்கிய வளமையும் சிந்தனைத் தெளிவும் காலம் காலமாக வேர்விட்டு வளர்ந்த நெல்லை மண்ணில் தனக்கான வேர்களைத்தேடி பயணித்தவர் தொ.பரமசிவன். நா.வானமாமலை, சி.சு.மணி என்று தனது சிந்தனை முன்னோடிகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து இயங்கியவர்.

நெல்லை மண் இடதுசாரி சிந்தனைக்குப் பெயர் பெற்றது. அதேபோலச் சமூக வரலாற்றில் அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை ஆற்றும் திராணியும் கெத்தும் கொண்டது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் நெல்லை மண்ணைத் தவிர்த்துவிடவே முடியாது. அத்தகைய வளமான பின்புலத்தில் சோடை போகாமல் தன்னைக் கல்வெட்டாகச் செதுக்கிக் கொண்டார் தொ.ப. மார்க்சியச் சிந்தனை, தேசியச் சிந்தனை, திராவிடச் சிந்தனை, பண்பாட்டுச் சிந்தனை என்று முரண்பாடுகளில் சிக்கிக்கொண்ட தமிழ்ச் சிந்தனை மரபில் தனக்கான தனிவழியை உருவாக்கிக் கொண்டு சாதித்துக் காட்டியவர் தொ.ப.

தொடர் வாசிப்பின் வளர்ச்சியில் சிந்தனைப் போக்குகளை அறிந்து கொண்டு அவற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பகுத்துப் பார்க்கவேண்டும் என்று ஆழமாகச் சிந்தித்தார். நா.வானமாமலை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிமுறை அவரைக் கவர்ந்தது. அதேபோலச் சி.சு.மணி கருத்துக்களை எடுத்துரைக்கும் விதம், சான்று காட்டுதல், சொல்லாட்சி என்று பல நெறிமுறைகளைப் பின்பற்றும் போக்கைத் தனது வெளிப்பாட்டு முறையியலாக உருவாக்கிக் கொண்டார். சி சு.மணி சைவ சித்தாந்த நூல்களில் பெரும் புலமை மிக்கவர். இவரின் இறைவன், உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) ஆகியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் தர்க்கவியலை விரும்புபவர் தொ.ப. வைணவ இலக்கியத்தின் பேரன்பு கோட்பாடு அவரை ஆழப் பாதித்தது. அகலச் சிந்திக்கத் தூண்டியது.

இத்தகைய பின்புலத்தில் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு அழகர் கோயிலை ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். “பண்பாடு என்பதே உற்பத்தி சார்ந்தது, உற்பத்தி நடவடிக்கைகளிருந்து அது உருப்பெறுவது” என்ற மார்க்சியச் சிந்தனை மரபும் சித்தாந்த சிந்தனை மரபுவழி தாக்கமும் கொண்ட தொ.ப. அழகர் கோயிலை ஆய்வுக்கு உட்படுத்தும்போது பண்பாட்டுச் சிக்கல்களையும் சமூக வாழ்வியல் போக்குகளையும் நேரடியாகக் கள ஆய்வு மூலம் கண்டுகொண்டார். தொடர்ந்த வாசிப்பும் மக்களின் வாழ்க்கையும் அவருக்கு தனக்கான யதார்த்த நிலையை உருவாக்க கற்றுத் தந்தன. நடைமுறைக்கும் சிந்தனைக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடும் அகலமும் அவரைப் புதியத் தளத்திற்கு எடுத்துச்சென்றன. மக்களின் அறிவுத் தெறிப்பின் எளிமை அவரை ஆழமாகக் கவர்ந்தது. இதன் காரணமாகத் தனது சிந்தனைத் தெறிப்புகளைப் பெரும்பாலும் எளிமையான உரைநடையில் பம்பாத்து இல்லாமல் நேரடி உரையாடலில் அமைத்துக்கொண்டார். தான் என்ற இருத்தலை ஒதுக்கித் தள்ளிவிட்டு அறிவு என்ற தளத்திற்கு முதன்மை தந்தார். அவரின் அனைத்துச் சிந்தனை வெளிப்பாட்டு முறைகளும் புதுமையானவை, முன்மாதிரியற்றவை.

அழகர்கோயில் வழிபாடு என்பது கருப்பணசாமி வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மதுரை மாவட்ட மக்களில் கள்ளர் மற்றும் பிற சாதியினர் வழிபடும் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசாமி. இந்த நாட்டார் வழிபாடு பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாட்டால் உள்வாங்கப்படும்போது அம்மக்களின் வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் எப்படி மாற்றம் பெற்றன என்பதும் இதன்வழி அம்மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்திப் புதிய கருத்துக்களை வெளிக்கொணர்தலுமாகத் தொ.ப.வின் ஆய்வு அமைந்திருந்தது. அவர் முன்வைத்த கருத்துகளும் அதனை உறுதிப்படுத்த கொடுத்தச் சான்றுகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. வாழ்க்கையில் அனைவரும் கேட்டிருக்கும், புழங்கியிருக்கும் சொல்லை, கருத்தை மிக விரிவாக ஆவணப்படுத்தும் போக்கில் கையாளும் இவரின் ஆய்வுநெறி புதுமையானது.

தொ.ப. தனக்கான கருத்துப் புலப்பாட்டுத் தன்மையை உருவாக்கிக் கொண்டார். கருத்துக்களின் புதுமை, செறிவு, சொல்லாராய்ச்சி என்று தனது சிந்தனைப்போக்கில் சித்தாந்த முரண்பாடுகள் ஏற்படுவதை உணரத்தான் செய்தார். திராவிட நெறியில் நின்றுகொண்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பகுப்பாய்வு செய்வதில் பல சிக்கல்கள் தோன்றினாலும் அவற்றின் யதார்த்த பின்னணியை அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாழ்வியல் தேவையாக வெளிப்படுத்த தயங்கியதில்லை. பண்பாட்டில் சாதிச் சிக்கல், வர்ணாசர்ம தர்மம் என்பவைகளுக்குத் தனது கருத்துகளை, “இல்லைங்கிறது உண்மையே தவிர, அத யாரும் எதிர்த்து நிலை கொள்ளாம போச்சுனு சொல்றதுக்கில்ல. எழுத்திலதான் அது இருக்கே தவிர அது வாழ்நிலைல ஒரு போதும் இல்ல. எழுத்துலதான் நான்கு வர்ணம்னு இருக்கு. நடைமுறைல சாதிகள்தான் இருந்தன. வர்ண பேதம் இல்லை” என்று தெளிவாகத் தமிழகத்தில் வர்ணாசர்ம கொள்கை நடைமுறையில் இல்லை என்று சான்றுகளுடன் விரிவாக விளக்குகிறார். இன்றைய சாதிமுறையும் பிற்காலத்தில் வந்திருக்க வேண்டும் என்று கூறி இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கூறுகிறார். சாதிகள் பற்றிய சிக்கல் என்பது இன்றும் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது.

தொ.ப. தனது சமகாலச் சிந்தனை ஆளுமைகளை அடையாளம் காட்டாமல் இருந்ததில்லை, நல்ல நூல்களை நல்ல அறிஞர்களைத் தனது எழுத்துகள் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அங்கீகரிக்க தவறுவதில்லை. நேர்காணல் ஒன்றில் தமிழ் இசை குறித்த கேள்விக்குப் பேராசிரியர் மம்மது அவர்களின் பணியை மெச்சிக் கூறி பதிவு செய்தது வியக்கத்தக்கது. இதுபோலப் பலரையும் தனது செயல்பாடுகள் வழியாகப் பிறருக்குக் கடத்திச் சென்றுள்ளார். ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய கண்ணியமாக இதனைக் கூறலாம்.

தொல்லியல் நாட்டம் தொ.ப. அவர்களுக்குக் கள ஆய்வின் அனுபவத்தில் கிடைத்தது. மக்களையும் வரலாற்றையும் அறிய எண்ணியவர் கல்வெட்டு ஆராய்ச்சியில் செயல்படத் தொடங்கினார். கல்வெட்டுக்களை அடையாளம் காணுதல், படித்தல் என்று தன்னை ஆய்வாளராக என்றும் வளர்த்துக் கொண்டேயிருந்தார். தான் மட்டுமல்ல ஒரு கூட்டத்தையே எப்போதும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதலும் விவாதித்தலும் அவரது பண்பாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் காணப்படும் சமணப் படுக்கைகள், கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகள் என்று தனது சிந்தனைக்கு வலிமை சேர்க்கும் ஆதாரங்களை ஆழமாகக் கவனத்தில் வைத்துக் கொண்டார். இவரின் உரையாடல்கள் பலரையும் புருவம் உயர்த்த செய்வதற்கு காரணம் அவர் முன்வைக்கும் சான்றுகளும் அதற்கான பின்புலமும்தான். பண்பாட்டு ஆய்வுகள் மானுடவியல் துறையாக வளர்ச்சி கண்ட நிலையில் இதன் செயல்பாடுகளைக் கூறும்போது இன்றைய ஆய்வாளர்களின் செயல்பாடுகளையும் அவர்களின் நூல்களையும் வெளிப்படுத்த தயங்கியதில்லை. மானுடவியல் என்றதும் பக்தவச்சல பாரதியின் பணிகளை எடுத்துக் கூறும் பண்பாளர் தொ.ப.

சூழலியல் பற்றிய தொ.ப. வின் கருத்துகள் யதார்த்த புரிதல் கொண்டவை. தமிழாய்வில் சங்க கால மக்கள் இயற்கையைப் போற்றினார்கள். நிலமும் பொழுதும் அவர்களின் முதன்மை சிந்தனையாக இருந்தது என்று உயர்த்திக் கூறும்போது சங்க கால மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தே இருந்தது என்றும் அன்றைய மக்களுக்குச் சூழலியல் விழிப்புணர்வு தேவைப்படவில்லையென்றும் யதார்த்தத்தை இயல்பாகக் கூற வேண்டும் என்ற புரிதலும் தொ.ப.வை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

திராவிடச் சிந்தனை மரபில் பாரதிதாசனை உயர்த்திக் கூறுவதும் பாரதியை ஏற்க மறுப்பதுமான போக்குத் தொ.ப. காலத்தில் இருந்தது. தொடக்கத்தில் பாரதியாரைப் பற்றிய புரிதல் தொ.ப. அவர்களுக்குப் பார்ப்பன எதிர்ப்பு என்ற எல்லையில் நின்றுவிட்டது. ஆனால் தனது ஆழ்ந்த வாசிப்பின் மூலம் இந்த நிலைபாட்டை மாற்றிக் கொண்டார். பாரதியின் ஆளுமையை உணரத் தொடங்கியதாக அவரே கூறியுள்ளார். இவ்வாறு கோட்பாட்டு முரண்பாடுகள் பலவற்றை இலகுவாகக் கடந்து சென்றவர் தொ.ப. இவரின் சிந்தனை மரபு மக்கள் மரபோடு இணைத்துப் பார்க்கும் தன்மையும் யதார்த்த இருத்தலுக்கு வழங்கும் முதன்மையும் வியக்க வைக்கின்றது.

மதமாற்ற தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடுதல் தடை என்ற அரசின் செயல்பாடுகளுக்கு இயல்பான தனது கருத்துகளைச் சான்றுகளோடு வெளிப்படுத்தியுள்ளார். மதம், சாதி, கோயில், வழிபாடு என்று எதுவாக இருந்தாலும் வயிறு (பசி) என்று வரும்போது மக்கள் எதையும் மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள் என யதார்த்த வாழ்வியலைக் கூறுவது தொ.ப.வின் சிறப்புகளில் ஒன்று.

இந்திய சமூக ஆய்வில் பெரும் சிக்கலாகச் சாதி உருவாக்கம் விளங்கி வருகிறது. ஒற்றைத் தன்மையான புரிதலை நோக்கிய ஆய்வில் பன்முகத்தன்மையே எஞ்சி நிற்கிறது. இதன் காரணமாகச் சாதி ஒழிப்பு சிந்தனையும் அதற்கான தீர்வும் நீண்டுகொண்டே செல்கிறது. இது குறித்த உரையாடலில் “தமிழ்ல ‘சாதி கெட்டவன்’ னு ஒரு வசவுச்சொல் உண்டு. ராஜாக்கள் எல்லோரும் சாதி கெட்டவன்தான். ஏன்ன எல்லா சாதியிலயும் பெண் எடுத்துருக்கான். ராஜராஜனும் அப்படித்தான். மனைவிமாரே நாலு பேரு” என்று தமிழ்ப் பொதுப்புத்தியில் போற்றப்படும் மன்னனைச் சாதி கெட்டவன் எனக் கூறுவதற்கு ஆய்வுத் துணிச்சல் வேண்டும் இது தொ.ப.விடம் இயல்பாகக் காணப்படுகிறது.

இவ்வாறு பண்பாடு, மதம், வழிபாடு, கல்வெட்டு, நாட்டார் வழக்கு, வரலாறு, சொல்லாராய்ச்சி, திராவிடச் சிந்தனை, கள ஆய்வு, அகழாய்வு, அரசியல் எனப் புதிய கண்ணோட்டத்தில் படிக்கப்பட வேண்டிய மனிதர் தொ.ப.

எம். கோபாலகிருஷ்ணனின் ‘வால்வெள்ளி’: தன்னைக் கண்டடைதலும் வாழ்தலின் யதார்த்தமும் -முனைவர் ம இராமச்சந்திரன்

முனைவர் ம இராமச்சந்திரன்

“கொண்டாடுவதற்கே இப்பிறவி என அனைத்தையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு நகரும் ஒரு ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய குறுநாவல் ‘வால்வெள்ளி’. இது சமூக வாழ்க்கையில் மனிதர்களின் நடத்தைமுறையும் காமமும் வினையாற்றும் சூழ்நிலையைக் களமாகக் கொண்டது. தன்னில் தொலைந்துபோன பாதியின் எச்சங்களைத் தேடிய பயணத்தில் கண்டடையப்படும் அனுபவம் நாவலின் மையமாக விளங்குகிறது. எந்தச் சமூக மதிப்பீடுகளும் அவனால் அல்லது அவளால் ஏற்றுக்கொள்ளப்படும்ம்போது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிகின்றன. எளிய நிலையற்ற வாழ்க்கைச் சூழலில் நின்று நிதானித்து எவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் புறந்தள்ளவும் முடிவதில்லை.

மனம் தனது பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டும் செயல்பாடுகளாக நகர்ந்து செல்கிறது கதை. நடுத்தர வயதில் உள்ளுக்குள் இருக்கும் காமம் தன்னை இனம் காணும்போது அனைத்து முறைமைகளும் பொருளற்றுப் போவதே இதன் அடிநாதம். “அன்றைய பகல் நேரத்தில் நான் என்னைக் கண்டு கொண்டேன். அதுவரை நான் அறிந்திராத ரம்மியங்களையும் வலிகளையும் எனக்கு அறிமுகப்படுத்தினாய்.” பெண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு ஆணும் ஆண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு பெண்ணும் வெளிப்படுத்தும்போது ஏற்படும் காந்த ஈர்ப்பு இயற்கையானது என்பதும் அனுபவிக்கப்பட வேண்டியது என்பதும் நாவலால் உணர்த்தப்படுகிறது. யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அனைத்தும் அனைவருக்குமான புரிதலோடு கடந்து செல்கிறது கதை.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பேராசிரியரின் மனைவி தனது கணவனைக் காண வரும் பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளனிடம் தன்னைக் கண்டடையும் பேற்றை நாவலாசிரியர் வாசகனுக்கும் உணர்த்தி விடுகிறார்.

“உன்னை நன்கறிந்த நானும்
என்னை நன்கறிந்த நீயும்
இதற்கு முன்
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை
ஆனால் உன் வாசனை எனக்கு வெகு பரிச்சயம்”

என்ற கவிதை வரிகள் இயற்கையின் உன்னதங்களை உன்னிப்பாகக் காணும் அவனுக்கு அவளின் இருப்பும் இயல்பும் அவனை உணரச் செய்யும் தருணங்களும் வியப்பானவை. அனைத்து அறங்களையும் தாண்டி அவர்கள் செய்யும் களவும் புணர்ச்சியும் அவர்களை நிலை தடுமாற செய்தாலும் அவர்களின் சுய இருத்தலும் சுயத் தேவையும் பூரணமாக அமைவதால் அவர்களின் பிரிதலும் இயல்பாக அமைந்து விடுவதைக் காண முடிகிறது.

பேராசிரியரின் மனைவி, இரு குழந்தைகளுக்குத் தாய், சமூகத்தில் மதிக்கப்படும் நிலை இவற்றையெல்லாம் கடந்து அவளின் உடலும் மனமும் விரும்புவது ஆணின் அன்பான கனிவான புரிதல்கள் சொல்லாடல்கள் மட்டுமே என்பதை உணர்த்தினாலும் சமூக மதிப்பீடுகள் அவளில் வினையாற்றும் வலிமைமிகு உணர்ச்சிகளை நாவலாசிரியர் பதிவு செய்யாமல் இருப்பதில்லை. அவளது மனப்போராட்டங்கள், தவிப்புகள், சுய அறங்கள் அனைத்தையும் தாண்டி அவனது அருகாமை அவளை அவளாக்குகிறது. தன்னை இழந்து அவளைக் கண்டடையும் அதே வேளையில் அவனும் அவளைத் தன்னுள் கண்டடைந்த மாண்பின் ஊடாகக் கடந்து செல்கிறது நாவல்.

பெண்களின் சுதந்திர வெளிகள் பெரும் மதிப்புள்ளவை. ஆனால் பணமதிப்பற்றவை. சிறு பார்வை, சிறு காத்திருப்பு, உதட்டின் வழி சிறு அங்கீகரிப்பு, அவனின் ஊடாக அவளைக் கண்டடைதல் போன்ற எதிர்பார்ப்பு எத்தனை காலம் வாழ்ந்தாலும் இவை நிரப்பப்பட வேண்டிய கோடிட்ட இடங்களாகவே இருக்கின்றன. நிரப்பப்படும் சூழல் ஏற்படும்போது அதனைப் பெறுவதற்கான அனைத்து எத்தனிப்புகளையும் மனம் அவளையும் மீறி வினையாற்றிச் செல்கிறது.

இருவரின் மனம் உடல் சார்ந்த ஏற்புகளுக்குப்பின் எட்டிப்பார்க்கும் மீதி வாழ்க்கை முடிவற்ற பாதையைப் போல நீண்டுள்ளது. கடும் தவயோகியும் தானடைந்த ஆனந்தம் நிமிடங்களில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் அந்த நிமிடங்கள் மீண்டும் வருவதும் நிச்சயமற்ற தனது தவ வாழ்க்கையில் பயணிப்பது போல அவளது வாழ்க்கை பயணப்படுகிறது.

“நம் தொடுகைகளில் அந்நியமில்லை.
நம் தழுவல்களில் தடுமாற்றம் இல்லை.
நம் முத்தங்களில் ஒத்திகைகள் ஏதுமில்லை.
சர்வ நிச்சயமாய்.
சர்வ சுதந்திரமாய்.
ஒருவருக்கொருவர் படையலானோம்.
பரிபூரணமானோம்”.

யாரும் அறிந்திராத ஒவ்வொரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கை அனுபவங்கள் என்றென்றும் அவர்களுடன் சென்று விடுகின்றன. குழந்தைகளோடு உறவாடினாலும் கணவனோடு இரவுகள் இதமானாலும் விழித்திருக்கும் நினைவுகள் அவர்களுக்கானது. உன்னதமானது. இவர்களின் உன்னத உறவு புகைப்படங்களில் பதிந்த சில பதிவுகளுடன் நகர்ந்து செல்கிறது. ஏதோவொரு தேசத்தில் இயற்கையின் அழகை ஆராய்ந்து கொண்டிருக்கும் அவனது இருத்தலும் அனைத்து எதிர்பார்ப்பும் அர்த்தமற்ற பேரன்பு மேலிட இன்றைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள முயலும் அவளின் இருத்தலும் எப்போதும் நேர்ந்து விடுவதில்லை.

“மற்ற படங்களையும் கடிதத்தையும் நான் புடவைகளுக்கு நடுவில் ஒளித்து விட்டேன். எல்லாவற்றையும் அவரிடம் காட்டும் துணிச்சல் இல்லை என்னிடம் அப்போது.” ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அலமாரியில் மறைத்து வைக்க ஏதேனும் சில பொருட்கள் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. கண்ணில் பட்டாலும் அவற்றை திறந்து பார்க்க, அறிந்துகொள்ள மனம் விரும்புவதில்லை. இதனை “உன் படங்கள் வெளியான சஞ்சிகைகளை வேண்டுமென்றே என் கண்ணில் படும்படி போட்டு வைத்தார். கானுயிர் புகைப்படப் போட்டியொன்றில் உனக்குப் பரிசு கிடைத்த செய்தி பிரசுரிக்கப்பட்ட இதழைக் கொண்டு வந்து என்னிடம் காட்டியபோது நான் எரிந்து விழுந்ததில் சற்றே திடுக்கிட்டுப் போனார்,” என்ற வரிகள் இவளின் அந்தரங்கம் அறியப்பட்டுவிட்ட உண்மையாக மாறியதும் இதனை அவளது மனம் ஏற்க மறுப்பதின் வெளிப்பாடாக அவளது கோபம் வெளிப்படுவதுமாகக் கதை நகர்ந்து செல்கிறது. அவரவர் மனம் அவரவர் அந்தரங்கம் அவரவர் வாழ்வியல் பொக்கிஷங்களாகவும் இருக்கலாம். விகாரங்களாகவும் இருக்கலாம். அவரவர் வாழ்க்கை அவர்களுடன் மரணத்தைப் போல எடுத்துக் கொள்ளவோ அல்லது கொடுத்துச் செல்லவோ முடியாது.

தனது வாழ்க்கை, கணவன், குழந்தைகள், குடும்பம் என்ற சூழலில் இயங்குவதை ஏற்றுக்கொண்ட அவளது மனம் அவனுக்கான வாழ்க்கைச் சித்திரத்தைத் தானே கட்டமைக்க எண்ணுகிறது. “என்னிடம் கண்ட பரவசங்களைத் தரும் இன்னொரு பெண்ணை நீ கண்டடைவது ஒன்றும் சிரமமானது அல்ல. விரைவில் அப்படியொருத்தியைக் கண்டடையும்போது நீ செய்யவேண்டியது ஒன்றுதான். அவளுக்கான கனவுகளை அறிந்து கொண்டு முடிந்த மட்டும் அவற்றுக்கு மரியாதை செய்வதுதான். என்னில் கண்ட ஏதோ ஒன்றை அவளிடமும் உன்னால் கண்டடைய முடியும்,” என்பதன் மூலம் அவனுக்கான வாழ்வியல் வெளியைச் சற்று ஏமாற்ற உணர்வோடும் அதேவேளையில் அங்கீகரித்தலோடும் பெண்ணுணர்வு வெளிப்பட்டு நிற்கின்றது. காலை சூரியன் மலர்களை, பறவைகளை, விலங்குகளைப் புதுப்பிப்பது போல ஓடிக் கொண்டிருக்கிறது மனித நதி வால்வெள்ளியாக.

எம்.கோபாலகிருஷ்ணன், வால்வெள்ளி, குறுநாவல், 2018, தமிழினி பதிப்பகம், சென்னை-51.