கவிதை

சாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை

சாட்சிக் கூண்டில் ஏறிய போது
தூரத்திலிருந்து முறைத்த குற்றவாளி
முட்டையொன்றை மந்திரித்து  வீசினார்.
அவசரத்தில்
உடைத்துக் குடித்து விட்டேன்.
கோபமுற்றவர்
நாக்கை முழுவதுமாக இழுத்து வைத்து
நான் சொல்லவிருந்த சம்பவத்தை
தடயமில்லாதபடி அழித்துக் கொண்டிருந்தார்.
வயிற்றில் குஞ்சு பொரித்த
சத்தியத் தவளைகள்
சம்பவத்தைத்
தொண்டைக்குள் இழுத்துக் கொண்டன.
தண்டனைப் புத்தகத்தை விரித்தபடி
நான் தவளை போலக் கத்துவதாக
எச்சரிக்கை மணி அடித்தார்
குற்றவாளிக்காக வாதாடியவர்.
சம்பவம் எச்சிலில் கரைந்து கொண்டிருக்க
வளாகத்தில் ஒரு பெரிய குதிரை
கால்களை உயர்த்தியபடி
துள்ளிக் கொண்டிருந்தது.
பிடரியை இழுத்துப் பார்த்த காவலர்
கழுத்தைத் தடவிய போது
“சத்தியம் சாகாது
சத்தியம் பலமாக உதைக்கும்”
என்று பாட ஆரம்பித்தது.
என் பக்கத்தில் நின்ற வழக்கறிஞர்
” இவர் கைரேகையைப் பாருங்கள்
யுவர் ஆனர் ! “
சம்பவத்தின் போது
குற்றவாளியின் சட்டையைக் கிழித்திருக்கிறார்
என்று என் கைவிரல்களை
உயர்த்திக் காண்பித்தார்.
கண்கள் பொய் பேசுவதில்லை என
நீதிபதியை உற்றுப் பார்த்தபடி
சம்பவத்தைச்  சொல்ல ஆரம்பித்தேன்.
வாக்குமூலத்தின்
ஒவ்வொரு சொல்லும்
நான்காகப் பிரிந்து  ஓட
தட்டச்சு செய்தவர் கதற ஆரம்பித்தார்.
அடித்துப் பிடித்து
ஒரே வரிசையில் அடுக்கியபோதும்
சம்பவம்
சேராமல் பிரிந்து கொண்டே இருந்தது.
குற்றவாளி
அடுத்த முட்டையை எடுத்த போது
குதிரை வேகமாகப் பாய்ந்தது
தண்டனைப் புத்தகம்
பறந்து வந்து தாக்கவே
சத்தியம் !சத்தியம் !சத்தியம் !
என்ற பெருமுழக்கத்தோடு
குதிக்க ஆரம்பித்தன
தவளைக் குஞ்சுகள்.
கட்டிடம் அதிர ஆரம்பித்தது
தலைவலி தாங்கமுடியாமல்
சம்பவம் நடந்த இடத்திற்கு
என்னை அழைத்துச் சென்றார்கள்.
உள்ளதை
உள்ளபடியே சொல்வதற்காக
ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய இரவை
இழுத்துக் கொண்டிருந்தேன்
சம்பவம்
அசைந்து அசைந்து
வந்து கொண்டே இருந்தது.

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.

கடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்

கடப்பதெப்படி

இருமலுக்குப் பயந்து
புகைக்கக் கற்கவில்லை ..
நாற்றம் பிடிக்காமல்
நாடவில்லை மதுவை ..
மயக்கும் பிறவற்றோடு
பழக்கம் ஏதுமில்லை ..
இல்லத்திலிருக்கும் மஞ்சமோ
தாத்தா காலத்தியது ..

கருந்தேநீர் உறிஞ்சியபடி
கொடுங்கவிதை இரண்டை  எழுதித்தான் கடக்கவேண்டும்
இன்றைய மனக்கொந்தளிப்பை

நிரப்புதல்

வசித்த பறவைகள்
வேறிடம் தேடிக்கொண்டன

மண்ணால் மூடப்பட்ட இடத்தில்
சிறு செடிகள் முளைத்தன

நிழலில் அணைத்தபடி
ஒய்வெடுக்கும் பூனைகள்
அங்கு நிறுத்தப்படும்
வாகனங்களின்மேல்
துயில்கின்றன

அண்டை வீட்டின் வண்ணம்
அடையாளமாக கூறப்படுகிறது

புதிதாக திறந்த கடையில் பழங்களும் கிடைக்கின்றன

அம்மரத்தை அகழ்ந்ததால்
தோன்றிய என் அகஅகழியை
நிரப்புமென நிறுவியுள்ளேன் …
சிறு போன்சாய் தொட்டியை

உள்சுழித்து வளரும் அலை, எறும்புகள் விசேஷமானவை – இரா.கவியரசு கவிதைகள்

உள்சுழித்து வளரும் அலை
வாசனை
தூங்கமுடியாத நோயைப் பரப்புகிறது
இருக்கைக்குப் பின் அமர்ந்து
உந்தித் தள்ளுகிறது காமம்
வாகனங்கள் சீறிப் பாய்கின்றன.
ஒவ்வொரு வீட்டையும்
ஏக்கத்தோடு பார்த்து நகர்பவன்
மெல்லிய ஒளி கசியும் அறைகளிலிருந்து
வெளிவரும் காற்றை
நுரையீரலுக்குள் இறக்குகிறான்
ஓரிடத்தில் நில்லாமல்
விளையாடும் குறுஞ்சுடர்
பாலைமணலாக உடைக்கிறது அவனை.
தற்காப்புக்காக வைத்திருக்கும் கத்தியால்
சுடரை வெட்டுகிறான்
அது அவனை ஊதிச் சிரிக்கிறது.
உள்சுழித்து வளரும் அலை
காயங்களின் இச்சை மீது
கத்தியைச் செருகும் கணங்களில்
நுரைத்துப் பொங்குகிறது கடல்.
விண்மீன்களைப் பிய்த்தெறியும் வேகத்தில்
மேல்நோக்கிச் செல்லமுடியாமல்
வீடுகளை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும்
பூமியை முத்தமிடுகிறான்
விடியல் வந்து கொண்டிருக்கிறது
அவன் மிகவும் புதியவனாக
அதே வீடுகளின் வழி
போர்வைகள் விற்பவனாக
செல்லும் போது
குரைப்பதை மறந்து
சிரிக்கின்றன நாய்கள்
​​எறும்புகள் விசேஷமானவை
கோடிக்கணக்கான
கவிதை எறும்புகள்
பூமியெங்கும் நகர்ந்து செல்கின்றன.
ஒரு முறை நகர்ந்தாலே
தடங்கள்
கூகுள் மேப்பில் வந்துவிடுவதால்
வானத்திலிருந்து கடவுள் கவனித்துக் கொண்டிருப்பதாக நம்பிய பிறகு
விஷேச எறும்புகளாக மாறி
மரங்கள் தோறும்
துளையிட்டு ஊதுகின்றன.
எறும்புகள் வாசிக்கும் இசை
காட்டு விலங்குகளுக்கு
பெரும்பாலும் புரிவதில்லை
கோபத்துடன் உறுமும் போது
எறும்புகள்
தலையைக் காப்பாற்றிக் கொள்ள
பூமிக்கடியில் பதுங்குகின்றன.
எறும்புகளுக்கு
டைனோசராக மாறி
அச்சுறுத்தும் விலங்குகளைத்
தெறிக்க விட வேண்டும் என்பது
கால்கள் முளைத்த நாளிலிருந்து
சொல்லித்தரப் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும்
நசுங்குதல் தவிர
வேறெதுவும் பெரிதாக
நிகழ்ந்து விடுவதில்லை.
எப்போது எங்கு சென்றாலும்
எறும்புகளைத் தேடிப் பிடித்து
தின்று  செரிப்பவர்கள்
எறும்புத்திண்ணிகள் அல்ல
அவர்கள்
எறும்புகளை விடவும் விஷேசமானவர்கள்
லட்சம் எறும்புகள் சேகரித்தும்
வாழ்நாள் முழுதும் ஆராய்ச்சி செய்தும்
ஒரு  எறும்பாக மாறமுடியாதது குறித்து
கோபத்தில் இருக்கும் போது
அவர்களின் தலையிலிருந்து
முடியைப் பிடுங்கி விளையாடும்
இந்தக் குறும்பு எறும்புகளை
என்னதான் செய்வது ?

வானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்

வானெங்கும் நெடுவனம்

நிலவை களிமண்னெனப்
பிசைந்து
குழந்தையிடம் கொடுத்து விட்டேன்
ஒளியற்ற இருள்
புலம்பி புலம்பி
அழுதப்படியே நடக்கிறது.
நட்சத்திரங்களை பிடுங்கி
களிமண்ணில் புதைத்து
வீசியெறிகிறது பிள்ளை.
திமுதிமுவென
கிளர்ந்தெழுகிறது பெருவனம்.
கண்ணீரில் உப்பியக்
கிளையொன்று
அசைந்து அசைந்து
மேகத்தை தூசென துடைக்க,
சிலிர்த்து சிரிக்கிறது வானம்.
இப்போது
மண்ணை கழுவிய குழந்தையின்
கரங்களில் அப்பியிருப்பதெல்லாம்
வெறும் நிலாவாசம்.

 

புழுத்தாய்

உறக்கத்திற்கும்
உலாவலுக்குமிடையே
அலுத்துக்கிடக்கும்
சிறுஉயிரென்னை
கைகளில் ஏந்தி
மூலையில் கிடத்தி
துளசியூறிய நீரென
எனதெச்சில்லை சுவைக்கும்
ஈயாகிறது நான்
மார்ப்பிடுக்கில் துடைக்காத
ஈமப்பாலொழுக்கை

நக்கியுண்ணும்
சரீரப்புழுவிற்கு
இன்று நான் தாய்