சிறுகதை

புத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை

மெல்லிய தூறலாக ஆரம்பித்த மழை இன்னும் வலுத்துப் பெய்யத் தொடங்கியது. பக்கத்தில் எங்கோ இடி விழுந்த மாதிரி இருந்தது. அந்த அலுவலகக் கட்டிடத்தின் முன்னால் நின்றிருந்த தென்னை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு தென்னம்பாளை காற்றில் ஆடிக் கீழே விழுந்தது. முற்றம் முழுதும் பன்னீர்ப்பூக்களும் பூவரசம்பூக்களும் இரைந்து கிடந்தன. முகப்பில் இருந்த மின்விளக்கைச் சுற்றிலும் ஈசல்கள் மொய்த்தன. வரவேற்பறையின் சன்னல் வழியே நீண்ட இழுப்புகளாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் கெவின். அவனது சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. அடுத்த அறைக்குச் செல்லும் வழியில் தொங்கிய திரைச்சீலையைப் பிடித்துக் கை விரலில் சுற்றிக்கொண்டு அவனைப் பின்புறத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மேக்டலீன்.

ஊளைக்காற்றுடன் தாண்டவமாடி ஓர் உச்சத்தை அடைந்த மழை மெதுவாக அமைதியடைந்தது. அதற்குள் மூன்று நான்கு சிகரெட்டுகள் முடிந்துவிட்டன. இருவரிடையே வேண்டா விருந்தாளியாக ஒரு நீண்ட மௌனம். கலைந்திருந்த கூந்தலைப் பின்னிக்கொண்டே, “என்னக் கொண்டு வடசேரி பஸ் ஸ்டாண்ட்டுல விடுவியா கெவின்?” என்று கேட்டாள் மேக்டலீன். எப்போதும் மாறாப் புன்னகை அப்போதும் அவளது முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.

திரும்பிப் பார்க்காமல், “ம்ம்..ஃபைவ் மினிட்ஸ்.” என்றான் கெவின். உள்ளே சென்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வந்தான். போனை எடுத்துப் பார்த்தபோது பதினைந்து மிஸ்டு கால்கள்..லிசாவும் அம்மாவும் அழைத்திருந்தார்கள்.

மழையீரத்தில் பைக் கிளம்ப மறுக்க சலித்துக்கொண்டு பலமாக மிதித்தான் கெவின். அலுவலக வாசலில் நின்று முகத்தில் விழும் கற்றைமுடியை ஊதியவாறு அவனை ஒரு கிண்டல் தொனியில் பார்த்தாள் மேக்டலீன்.

வண்டி ஒருவாறாகக் கிளம்ப, துள்ளிச்சென்று பின்னால் ஏறிக்கொண்டாள். ஏதும் பேசாமல் வழக்கத்தை விட மிக வேகமாக ஓட்டினான் கெவின்.

“கெவின், மழநேரம்லா, மெதுவாப் போ…ஸ்கிட் ஆகிறாம…”

“ம்…”

வண்டி வேகம் குறையாமல் தொடர்ந்து செல்ல, மீண்டும் மழை தூற ஆரம்பித்தது.

“கெவின், மழ பலத்துப் பெய்யப் போகு…எங்கயாம் நிறுத்து..மழ நல்லா விட்டப்பொறவு போவம்..”

கெவின் அடுத்திருந்த கல்லடி சர்ச் வாசலில் வண்டியை நிறுத்த, துள்ளியிறங்கி ஓடினாள் மேக்டலீன். அவளது முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் எதையோ யோசித்தவனாக வந்து நின்றான். அங்கு வேறு யாரும் இல்லை. சர்ச் முகப்பிலிருந்த மின்விளக்கு விட்டு விட்டு எரிந்தது. கெவின் மழை பெய்வதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மேக்டலீன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏன் ஏதும் பேசமாட்ற?” என்று அவனது கையைப் பிடித்தாள்.

“நா ப்ரே பண்ணனும்…நீ?” என்றவாறு அவளது கையைத் தவிர்த்தான்.

“இல்ல..நீ போய்ட்டு வா…நா இங்க நிக்கேன்…” என்றவாறு மழையில் கைநீட்டி நின்றாள்.

பதற்றமாக முழங்காலிட்டு நின்று கண்களை மூடினான் கெவின்.

“சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே…” என்று ஆரம்பித்ததும் மேக்டலீனுடனான சந்திப்புகள் மனதில் வந்து நிற்க, ஜெபம் நின்றது. மனதைத் தடை செய்யாமல் அதன்வழி விட்டான்.

‘மேக்டி அவ மாமனாருக்கு ப்ளட் கொடுக்க என்ன கூப்புட்ட சமயமே எனக்கு ஒரு மாதி தோணிச்சி. ப்ளட் பேங்க்ல அவளுக்குத் தெரியாத ஆளே கெடையாது. பொறவு எதுக்கு மெனெக்கெட்டு என்னக் கால் பண்ணிக் கூப்புடணும்? அவ மாப்ளயும், அத்தயும் என்ன கால்ல விழாத கொறயா தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க… நா நெனச்சிருந்தா வேறெதாம் எடத்துல ப்ளட் அரேஞ்ஜ் பண்ணி குடுத்துருக்கலாம்..ஆனா, நா அப்டி செய்யலல்லா..அப்ப எனக்கும் அந்த சந்தர்ப்பம் தேவைன்னதாலத்தான நா போயிருக்கேன்.’

“தப்பிப்போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு அலைந்து போனோம்…”

‘அவ கவர்ன்மென்ட் வேலக்கிப் போனதுக்கு நாந்தான் காரணம்னு அவ ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னா..எனக்கு ஷாக்காயிட்டு…எதுக்கு இவ இப்பிடிப் பொய் சொல்லுகான்னு நா கொழம்பிட்டேன்..’

“எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம்..”

‘மொத தடவ எனக்க ஆஃபீசுக்கு வந்தப்பயே ஏதோ ரொம்ப நாள் பழகுன ஃபிரெண்ட் மாதி பேசுனா..என்னதான் நா கமிட்டெடா இருந்தாலும் அப்பிடி ஒரு பொண்ணு, அவ்ளோ அழகான பொண்ணு வலிஞ்சு வந்து பேசும்போ நா பெரிய உத்தமன் மாதி நடிக்க முடியாதுல்லா..நா அப்பிடி படம் வைக்க ஆளும் இல்ல..அவ பாக்கதுக்கு காலேஜ் முடிச்ச பொண்ணு மாதிதா இருந்தா..பொறவு பேசும்போ என்ன விட ஏழு வயசு பெரியவ, கல்யாணம் கழிஞ்சி ஒரு பிள்ள இருக்குன்னு சொன்னா..என்ன கொமைக்கான்னுதான் நெனச்சேன்..ஆனா ஃபேமிலி ஃபோட்டோவ காணிச்சா…என்னால அப்பவும் நம்ப முடியல..அன்னிக்கி ஆரம்பிச்ச ஃபோன்தான்…டெய்லி கால் பண்ண ஆரம்பிச்சா..மொதல்ல ஃபார்மலா பேச ஆரம்பிச்சா…பொறவு கொஞ்ச கொஞ்சமா என்ட்ட ஃப்ளர்ட் பண்ற மாதிரி பேசுனா..எனக்கும் அவ பேசுறது, அவ நடக்கிறது, அவ அழகு எல்லாமே புடிச்சனால நானும் கம்பெனி கொடுத்தேன்..’

“உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தோம். செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்துவந்தோம்..”

‘அப்ப கம்பெனி குடுத்தவனுக்கு இப்ப என்ன மயித்துக்கு கில்ட்டி ஃபீலிங்ன்னு கேக்கேன்..தாயளி நீ யோக்கியன்னா அப்பவே அவட்ட, எனக்கு லவ்வர் இருக்கா, எனக்க அத்த மவதான்..எங்கிட்ட இப்படிப் பேசாதன்னு சொல்லி கட் பண்ணிருக்கணும்லா…செரி, அத விடு…அவ மாப்ள வீக்கெண்ட்ல மட்டுந்தா ஊருல இருப்பாருன்னுத் தெரிஞ்சும் அவ அன்னிக்கிக் கூப்புட்ட ஒடனே ஓடித்தானல போன?..இத்தனைக்கும் அவ யாரும் இல்லன்னு சொல்லி வேற கூப்புடுகா..அப்பிடி என்ன டே அவசரம் அவளுக்கு? மெடிசின் வேணும்னா வாங்கிக் கொடுக்க வேற ஆளே கெடைக்காதா? நீ எப்படான்னுதானல இருந்த? அதான் கூப்புட்ட ஒடன ஓடிட்ட..ஆனா அவளும் செரியான ஆளுதாம் பாத்துக்க..ஒடம்பு செரியில்லன்னு சொன்னா..வீட்டுக்குப் போயிப் பாத்தா அப்பத்தான் குளிச்சி முடிச்சி பட்டுப்பொடவ கெட்டி ஒக்காந்துருக்கா..நீயும் நல்ல சான்ஸ்னு நெனச்சிருப்ப ராஸ்கல்..செரி, போனது தான் போன, சட்டுன்னு மெடிசின குடுத்துட்டுப் பொறப்பட வேண்டியதான? பெரிய மயிரு மாதி ‘ஒரு காபி கூட தர மாட்டீங்களா’ன்னு நீ தான கேட்ட? நீ காபி மட்டுமா கேட்ட?..அஃபிசியல் ட்ரெஸ்லயே பாத்துட்டு இப்ப சாரீல பாக்கும்போ அநியாயத்துக்கு அழகா இருக்கீங்கன்னு நீ தான ஆரம்பிச்ச? ஒனக்கு நல்லாவே தெரியும்ல, அன்னிக்கி என்ன நடக்கும்னு..அவளுக்கும் அப்ப அப்டிதான தோணிருக்கும்..அதான், நீ பொறப்படும்போ வந்து கெட்டிப்புடிச்சா..நல்ல வேள, அப்ப லிசா கால் பண்ணா….இல்லன்னா நீ துணிஞ்சிருப்ப டே..பெரிய யோக்கியன் மாதி வேஷம் போடாத..’

“எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும், ஆண்டவரே, தேவரீர், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச்செய்த வாக்குதத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும்..”

‘அவளுக்கு ஒரு பொம்பளப் பிள்ள இருக்குல்லா ல, அதக்கூடவா நீ யோசிக்கல? நாளக்கி ஒம் பொண்டாட்டி வேறொருத்தங் கூடப் போனா ஒனக்கு எப்பிடி இருக்கும்? அவ ஹஸ்பண்ட் எவ்ளோ டீசன்டான மனுசன்? உன்ட்ட எவ்ளோ மரியாதயா பேசுனாரு? நீ ஒரு நிமிஷம் அந்தாள நெனச்சுப் பாத்தியால? செரி, அதயும் வுடு..அவ லவ் மேரேஜ் தான பண்ணிருக்கா? பொறவு என்ன மயித்துக்கு ஒனட்ட வந்தா? நீ நெனச்சது செரிதாம்ல..இவ பிட்ச் தான்…அவளுக்க நடையும் ஆட்டலும்…இன்னிக்கி எப்பிடி ஒன்ன மயக்குனா பாத்தியா? பிட்ச்..பிட்ச்..அவ ஒவ்வொரு ஸ்டெப்பும் பிட்ச் மாதிதான ல இருந்து…ஆனா இன்னிக்கி எல்லாஞ் செஞ்சிட்டு கடைசில எதுக்கு கண்ணீர் வுட்டான்னு தெரிலய? பெரிய பத்தினி மாதி…சப்புன்னு அறஞ்சிருக்கணும் நீ, என்ன மயித்துக்கு அழுகன்னு…அந்த சென்டிமென்ட்ல நீ வுழுந்துருவன்னு நெனச்சிருப்பா…அப்பிடியே தேவப்படும்போ ஒன்ன யூஸ் பண்ணலாம்னு ப்ளான் போட்ருப்பா..’

“தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும்.”

‘செரி, அவதான் அப்பிடி..நீயாவது ஒழுங்கு மயிரா அவாய்ட் பண்ணிருக்கலாம்லா? ஃபோன்ல அவ கேக்கும்போதே, இல்ல, வேற வேல இருக்குன்னு சொல்லிருக்க வேண்டியதான? ஆறு மணிக்கு மேல ஆபீஸ்ல ஒனக்கு என்ன வேல? மழ வரமாறி இருக்குன்னு சொல்லி அவாய்ட் பண்ணிருக்க வேண்டியதான?’

“பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களைச் சீர்படுத்தும்.”

‘எடைல என்னமோ சொன்னாள, ம்ம் … கெவின், நீ ஒரு கொழந்த மாதின்னு…மயிரு…அவ ரொம்ப நாளா இதுக்கு ப்ளான் பண்ணிருப்பா மக்கா…இல்லன்னா இப்பிடி ஒன்ன மடக்க முடியுமா?…ஆனா, அவளவிட நீதாம்ல பெரிய கள்ளன்..அவ பிட்ச்னா நீ யாருல? அவ ஹஸ்பண்ட்க்கு பண்ணது துரோகம்னா நீ லிசாவுக்குப் பண்ணதுக்குப் பேரென்னல ராஸ்கல்? அந்தப் பிள்ள ஒன்னதான் கெட்டுவேன்னு மருந்தடிச்சால்லா, அதெப்பிடி ல மறந்த நீ? அப்பிடி ஒனக்கு எடுப்பெடுக்குமா ல, தொட்டி?’

“மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும்….”

‘ஒண்ணுமே தெரியாத மாதி மூஞ்சிய வச்சிட்டு எப்பிடித்தான் நிக்காளோ? நீ மட்டும் அவட்ட இப்ப பேச்சுக் கொடுத்தன்னு வையி, தொலஞ்ச கேட்டியா..இன்னியோட போட்டும்…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….ஒரு பாடம்னு நெனச்சுக்க பாத்துக்க… இல்ல, யாருக்கும் தெரியாம மேனேஜ் பண்ண முடியும்னுல்லாம் நெனைக்காத..பேப்பர்ல எவ்ளோ கத வருகு டெய்லி..இது அத மாதிதான் போயி முடியும்..சொன்னா கேளு..ஒனக்கு வயசிருக்கு..லைஃப்ல பாக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு பாத்துக்க..ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் ஒங்க அம்மாவ நெனச்சுப் பாத்தியால நீ….தொட்டி…நாளக்கி விசயம் வெளிய தெரிஞ்சா ஒங்கம்மா தாங்குவாளா சொல்லு..தொங்கிர மாட்டாளா?..நீ செஞ்ச காரியத்துக்கு நீ தாம்ல தொங்கணும் ராஸ்கல்.. கடைசியா சொல்லுகேன், நடந்தது நடந்தாச்சு, ஒழுங்கு மரியாதயா இவள இன்னயோட விட்டேன்னா பொழச்ச…இல்லன்னா, ஒந் தலையெழுத்து..தெருவுந் திண்ணையுமா நிக்கப்போற, எழுதி வச்சுக்கோ..’

“நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.”

….

வெளியே வந்தவன், மேக்டலீனின் அருகே சென்று அமைதியாக நின்றான்.

“என்ன கெவின்? கன்ஃபெஷன் குடுத்தியோ?” என்று புன்னகைத்தாள்.

அவன் முகத்தில் எரிச்சலோடு ஏதும் சொல்லாமல் நின்றான்.

“கெவின்..என்னத் தேவிடியான்னு தான நெனச்ச?”

“என்ன…என்ன பேசுக மேக்டி…இல்ல…இல்ல” என்று வேகமாகத் தலையை ஆட்டினான். ஏதாவது பேசிவிடக் கூடாதென தன்னைக் கட்டுப்படுத்தி நின்றான்.

“கெவின், நா ஒண்ணும் தேவிடியா இல்ல கெவின்…..” தீர்க்கமாக அவனைப் பார்த்துச் சொன்னாள் மேக்டலீன். அவளது பாதிமுகம் மட்டும் வெளிச்சத்தில் தெரிந்தது.

அவளது போன் அடிக்க, எடுத்து, “ம்ம்..கிருஷ்ணா…நா இப்ப வந்துருவேன்…” என்று சொன்னாள். பின், சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் ஃபோனில் காதை வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.

“கெவின், கெளம்பலாம்.” என்றாள்.

“மழ அடிச்சு பெய்யில்லா மேக்டி…கொஞ்சம் வெயிட் பண்ணலாம்..” என்று அவள் முகத்தைப் பார்த்தான் கெவின்.

“இல்ல, வா.. போலாம்” என்றவள் பைக் அருகே சென்றாள். கெவின் வண்டியை எடுத்தான், அவள் மெதுவாக ஏறி உட்கார்ந்தாள். மழையில் நனைந்த அவளது முகத்தில் ஒரு புன்னகை தோன்றி நீடித்தது. மழை இருவரையும் பாரபட்சமின்றி முழுக்க நனைத்தது.

மேக்டலீன் மேல் விழுந்து வழிந்த மழைத்துளிகளோடு அவளது எண்ணங்களும் சேர்ந்துகொண்டன.

‘கெவின் எங்க மாமனாருக்கு ப்ளட் கொடுக்க கண்டிப்பா வருவான்னு எனக்குத் தெரிஞ்சிச்சி. நா கூப்புட்டா அவனால நோ சொல்ல முடியாது..அவனுக்கு எம்மேல ஒரு ஈர்ப்பு..அது அவன் என்ன மீட் பண்ண மொத நாள்லயே எனக்குத் தெரிஞ்சு போச்சு.. ஆனா, நா அவன அதுக்கு முன்னாடி ரொம்ப தடவ பாத்துருக்கேன்..கேஸ் விசயமா ஜி.ஹெச்சுக்கு அப்பப்போ வருவான்..அவன் பேஷண்ட்ஸ்ட்ட நடந்துக்கிட்ட விதம், அவங்க மேல காட்டுன அக்கற, எப்பவுமே அவனச் சுத்தி இருந்த ஒரு கலகலப்பு எல்லாஞ் சேந்து எனக்குள்ள என்னெல்லாமோ செஞ்சிட்டு..அப்ப நா இருந்த நெலம அப்பிடி..

அவன வீட்டுக்கு வர வச்சி கெட்டிப் புடிச்சப்பக்கூட எனக்கு சொகமால்லாம் இல்ல..அப்ப நா முழு மனசா அதச் செய்யல..சொல்லப் போனா ஒடம்பு கூசிச்சு..கிருஷ்ணா மேல இருந்த கோவந்தான் மனசுல வந்துட்டே இருந்து..என்ன லவ் பண்ணித்தான கல்யாணம் பண்ணுனான், அதுக்காக வீட்டுல எவ்ளோ சண்ட போட்டான்? அத்த, மாமாக்கு என்ன ஏத்துக்க மனசேயில்ல..கிருஷ்ணா ஒத்தக்கால்ல நின்னதாலதான் சம்மதிச்சாங்க….நா நெனச்சிருந்தா கிருஷ்ணாவ கூட்டிட்டுத் தனியா போயிருக்கலாம்லா? ஆனா, அவனுக்கு அப்பா அம்மான்னா உயிருங்கறதாலத்தான எல்லாத்தயும் தாங்கிக்கிட்டு இருந்தேன்..அவன் முன்னாடி ‘மக்களே, மக்களே’ன்னு பேசிட்டு, அவன் இல்லாதப்ப என்னப் படுத்துன பாடு…ஒரு நாளாவது நான் செஞ்ச எதயாம் நல்லாருக்குன்னு சொல்லிருக்காங்களா? எதுக்கெடுத்தாலும் கொற. குத்திக் குத்திப் பேசுனா?…தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொன்னாக்கூட நான் பொறுமையா இருந்தேன்லா? நா நெனச்சா சொகமா வீட்ல இருந்து கால் மேல கால் போட்டு சாப்பிட்டுட்டு இருந்துருக்கலாம், ஆனா, அவங்களுக்காகத்தான கஷ்டப்பட்டு கவர்ன்மென்ட் வேலக்கி ஏறுனேன்..அவங்க ட்ரீட்மென்ட்க்கு கிருஷ்ணா எஞ் சம்பளத்த வச்சித்தான சமாளிக்கான்..ஒரு மூச்சு வீட்டு வேல, பொறவு ஆஃபீஸ், பின்ன சாய்ங்காலம் மறுபடியும் வீட்டு வேல, எல்லாத்தயும் அவனுக்க அந்த உண்மையான அரவணைப்புக்காகத்தான செஞ்சேன்..பொண்டாட்டியா அவனுக்கு என்ன கொற வச்சேன்? ஒடம்புக்கு முடியலன்னா கூட மறுத்தது கெடையாத..ஆனா, அவனால எப்பிடி எனக்குத் துரோகஞ் செய்ய முடிஞ்சு?

அந்த ஃபோன் கால் மட்டும் வரலன்னா என் லைஃப் எப்பிடி சந்தோசமா இருந்துருக்கும்! மொதல்ல நா நம்பல..சே, சே.. எவனோ வேண்டாதவன் பண்ணுக வேலன்னுதான் நெனச்சேன்..ஆனா, நானே என் கண்ணால அந்த மெஸேஜ், வீடியோல்லாம் பாத்தப் பொறவு எப்பிடித் தாங்க முடியும்?

எங்கம்மாவும் அப்பாவும் என்ன எப்பிடில்லாம் வளத்தாங்க? கால தரைல பட விட மாட்டாங்களே..எல்லாமே நா நெனச்ச மாறிதா நடக்கும்..பெரிய பிள்ளையா ஆனப்பொறவுதான் என்ன அவங்க தத்தெடுத்து வளக்க விசயமே எனக்குத் தெரிஞ்சிச்சி..ஆனாலும், எப்பவுமே நாந்தான அவங்க செல்லப் பிள்ள? மாத்தாம்பிள்ளைன்னு ஒரு நாள் கூட பாத்துருப்பாங்களா? எங்கக்காவ விட என்ன எப்பவும் ஒரு படி மேல வச்சித்தான பாத்தாங்க.

நான் கேரளால வேல பாத்துப் போயிருக்கக் கூடாதோ? அப்பதான் அப்பா செத்தது.. என்னால இப்பவும் அந்த நாள மறக்க முடில. எம் ஃபோட்டோவ நெஞ்சுல கெட்டிப்புடிச்சிட்டே தூங்குனவரு அப்பிடியே போய்ட்டாரு..நா வந்து பாக்கேன், அவருக்க மேல எம் ஃபோட்டோ அப்பிடியே இருக்கு..எங்கக்கா சொல்லிச் சொல்லி அழுதா ‘ஒன்னப் பாக்காமப் போய்ட்டாரே அப்பா’ன்னு.

அப்பா போன எடத்த நெரப்ப வந்தவந்தான் கிருஷ்ணான்னு எனக்கு அடிக்கடி தோணும்.. எங்க ஆஃபீஸ்ல வந்து வேலக்கிச் சேந்தான். நா சோகமா இருக்கதப் பாத்து வலிய வலிய வந்து அவனே பேச ட்ரை பண்ணான்.. நா மொதல்ல அவாய்ட் பண்ணேன்..போகப்போக அவனப் புடிச்சிட்டு..ரொம்ப நல்ல மனுசனாத் தெரிஞ்சான்..இப்ப நெனச்சா கொமட்டிட்டு வருகு..அப்பிடி லவ் பண்ணவன் இப்ப எப்பிடி இப்பிடி ஆயிட்டான்? அந்த மலையாளத்தா கிட்ட கொஞ்சும்போ எம் மூஞ்சி அவன் கண்ணு முன்னாடி வந்துருக்கும்லா? எப்பிடில்லாம் போட்டோ எடுத்துருக்கான்..புடிக்காமலா எடுத்துருப்பான்? நான் தூங்குன பொறவு அவளுக்கு என்ன வீடியோ கால் வேண்டிக் கெடக்கு? ஒருநாள் எம் மூஞ்சிக்கிட்ட வந்து நான் தூங்கிட்டனான்னு பாத்துட்டு ஃபோன எடுத்துட்டு வெளிய போனான்..அன்னிக்கே நான் செத்துருக்கணும்.

அவன எப்பிடியெல்லாம் லவ் பண்ணேன்..எவ்ளோ பியூரா இருந்தேன்?

ஆனா, கெவின் இன்னிக்கி எல்லாம் முடிஞ்சப் பொறவு கடசீல ஒரு பார்வ பாத்தான்லா? அது தான் கொஞ்சம் கஷ்டமாய்ட்டு..அதுக்கு என்ன அர்த்தம்னு நல்லாவே தெரிஞ்சி..அவங்கூட இருந்த பத்து நிமிஷமும் வேணும்னே கிருஷ்ணாவ திரும்பத் திரும்ப நெனச்சேன்..என்ன அறியாமலே கண்ணீர் வந்துட்டு…அதோட எல்லாம் முடிஞ்சி..

செரி..எல்லாத்தயும் விடுட்டி, ஒம் பிள்ளைக்க மொகம் கூடவா ஒம் மூஞ்சிக்க முன்ன வரல்ல? அவ நாளக்கி வளந்து ஒனட்ட வந்து கேட்டா நீ நாக்கப் புடுங்கிட்டு சாவணும்லாட்டி? அவளுக்கு ஒலகம் தெரிஞ்சப்பொறவு எல்லாம் அவளுக்குப் புரியும்..அவ எம்பிள்ளல்லா, என் வீம்பு அவளுக்கும் இருக்கும்லா?

கெவின கெட்டிக்கப்போறவள நெனச்சா கொஞ்சம் சங்கடமாருக்கு…அவளுக்குத் தெரிஞ்சா இப்ப நா இருக்க மாதிதான அவளும் இருப்பா? ஆனா, நா என்னதா பண்ணுவேன்? நா ஒண்ணும் கடவுள் இல்லல்லா? செரி, நாளக்கி கிருஷ்ணா நாலு பொம்பளய கூடப் போவான்..நீயும் அப்பிடி ஊர் மேயப் போயிருவியாட்டி? அப்ப நீ தேவிடியாதானட்டி?

நா எதுக்கு அதச் செய்யணும்? நா கிருஷ்ணா கூடத்தா இருப்பேன்..ஆனா, ஒவ்வொரு நாளும் மனசுல சொல்லுவேன்..நீ எனக்க பாசத்த மிஸ் பண்ணிட்டடான்னு.

கெவின் பாவம்…’

…..

மேக்டலீனுக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. அவளிடம் ஃபோனில் பேசிவிட்டு, சாரலின் இதத்தில் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்தான். காட்சிகளின் ஊடாக எண்ணங்கள் மிதந்து வந்தன.

‘இன்னிக்கி மேகி கிட்ட மனசு விட்டு எல்லாத்தயும் பேசிரணும்…கொஞ்ச நாளா அவ சரியில்ல…நல்லா வாடிப் போய்ட்டா….இப்ப ஃபோன்ல கூட செரியா பேசலயே! நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ்க்கு போய்ட்டு டின்னர் போலான்னு சொல்லுகேன்…ஒண்ணும் பதில் சொல்லல…ஒரு வேள நா செய்றதெல்லாம் தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்…பரவால்ல…அவளுக்குத் தெரியணும்…தெரியாட்டாலும் இன்னிக்கி தெரிஞ்சிரும்…எனக்கே நெறைய கொழப்பமாத்தான் இருக்கு…சில விசயங்கள் ஏன் நடக்கு, நாம ஏன் அப்படிச் செய்யோம்ன்னுலாம் யோசிக்க முடியல…நம்மயும் மீறி நடந்திருகு…

மேகிய மொத தடவ பாத்தப்ப நா எப்பிடி ஃபீல் பண்ணனோ அதே ஃபீல் எப்ப கண்ண மூடுனாலும் எனக்கு வந்துருகு..யாரு வந்தாலும் போனாலும் அவ எம் மனசுல அதே எடத்துல அப்டியே தான இருக்கா…நா என்ன தப்பு செஞ்சாலும் அவள விட்ற மாட்டேன்..இந்த லைஃப்ல கடைசி வர அவதான்.

இன்னிக்கி என்னெல்லாமோ தோணுகு…எதோ தப்பான ரூட்ல ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி…எல்லாத்தயும் விட்டுட்டு அவ கிட்ட ஓடிப் போணும்… என் தப்பெல்லாம் அவகிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கணும்…அவ மட்டும் என்ன மன்னிச்சிட்டான்னா போதும்…இனி என்ன பண்ணப் போறேன், இதுலருந்து எப்பிடி வெளிய வருவேன்னுல்லாம் புரியல…ஆனா, அவ நெருப்பு மாதிரில்லா? அவ பக்கத்துல நின்னா, அவ கையப் பிடிச்சிக்கிட்டா, நா செரி ஆயிருவம்லா?

இதெல்லாம் வெளிய சொல்ல முடியாம அவ எவ்ளோ புழுங்கிருப்பா? அவளுக்கு எப்பிடி ஆறுதல் சொல்லன்னு எனக்குத் தெரில, அதுக்கு அருகதையும் இப்ப எனக்கு இல்ல…ஆனா, புதுசா தொடங்கணும்னு தோணுகு..இந்த ஆனிவெர்ஸரி எங்களுக்குப் புதுசா இருக்கட்டும்…’

….

வடசேரி பேருந்து நிலையம் அருகில் வந்ததும், “கெவின், கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.” என்றாள் மேக்டலீன். இறங்கிப் போய் சாலையோரம் இருந்த பூக்கடையில் இரண்டு பந்து மல்லிகைச் சரம் வாங்கினாள். ஒன்றை அவளது தோள்பையில் வைத்துவிட்டு ஒன்றைக் கெவினிடம் நீட்டினாள்.

“இந்தா கெவின், இது லிசாவுக்கு…”

கிருஷ்ணா அவர்களைப் பார்த்துக் கையசைத்து நடந்து வந்துகொண்டிருந்தான்.

பொறி – ராம்பிரசாத் சிறுகதை

வார இறுதிகளில் மலையேற்றம் செல்வது வழக்கம். இந்த முறை சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் கார் எடுத்துக்கொண்டு தொலைவிலிருந்த ஒரு மலைப்பகுதிக்கு வந்திருந்தேன். இந்த மலைப்பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் இருந்தது. இந்த மலைப்பகுதியில் வாழ் நாளை நீட்டிக்கும் மூலிகைகள் கிடைப்பதாக பேச்சு வெகு நாட்களாக நிலவிக்கொண்டிருக்கிறது. எனக்கு அந்த ஐடியா பிடித்திருக்கிறது. சாவே இல்லை. வாழ்ந்துகொண்டே இருக்கலாம். எத்தனை வசீகரமான ஐடியா?அப்படி ஒன்று கிடைத்தால் வரம் தான். பூமி போல் ஒரு கிரகத்தை, எல்லையில்லா பிரபஞ்சத்தை ரசிக்க அனுபவிக்க ஒரு மனித ஆயுள் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இந்த மலைப்பகுதிக்கு நான் வருவது இதுவே முதல் முறை. காரை நிறுத்திவிட்டு என் தோள்ப்பையை எடுத்துக்கொண்டு உற்சாகமாக மலையை ஒட்டிய வனத்துள் நுழைந்தேன். சற்று நேரம் வனத்துள் ஊடுறுவினேன். சீரான நடை.

சற்று தொலைவில் ஒரு சிறு கூட்டம். நடுவே ஆறடி நீளம், இரண்டடி அகலத்தில் ஒரு குழி. ஒரு பிணத்தைப் புதைத்துக்கொண்டிருந்தார்கள். நான் அருகே செல்லவில்லை. என் கேமராவின் கண்களால் கொஞ்சம் அருகே சென்று அந்தப் பிணத்தின் முகத்தைப் பார்த்தேன். பெண் பிணம். தூங்குவது போலவே தோற்றம் தந்து மனதைப் பிசைந்தது. அந்தப் பெண் அழகாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

குழி பிறகு மூடப்பட்டது. மலர்கள் தூவப்பட்டன. சிறு கூட்டம் கலைந்தது.

ஒரு உயிரின் மதிப்பு உண்மையில் என்ன? நடந்து செல்கையில் ஆயிரம் கோடி நுண்ணுயிர்களைக் கொல்கிறேன். அவைகள் உயிர்கள் என்றால் உயிரின் மதிப்பு உண்மையில் என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றுமில்லாமல் இருக்க வேண்டுமா? நுண்ணுயிர்கள் என்பதால் அவைகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? ஏன் இல்லை? அவைகளுக்கு மனிதர்கள் போல் நீளமான வாழ்க்கையும், மனமும் இல்லை என்பதாலா? நமக்கு ஒரு நுண்ணுயிரின் வாழ்க்கை குறித்து என்ன தெரியும்? புழுவின் உயிரை விட, நத்தையின் உயிர் மதிப்பு மிக்கதா? கேள்விகள் என்னைச் சூழ்ந்தன.

மலைப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது ஒரு அழகான நீர்வீழ்ச்சியை காண நேர்ந்து, கண நேர உற்சாகத்தில், நீரில் குதித்து, கரையேறி சுற்றும்முற்றும் பார்த்தேன். பார்த்தபடியே நடந்தேன். எங்கும் மரங்கள், செடிகள், கொடிகள். தங்களுக்குள் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் ஒன்றையொன்று மிஞ்சிவிடும் முனைப்பில் தாறுமாறாக குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து கிடந்தது. சிலவற்றின் அதீத வளர்ச்சியில், சில சிறிய தாவரங்கள் வளர வழியின்றி துவண்டு விழுந்துகிடந்தன. அவைகளை நசுக்கித்தான் அவற்றைவிடப் பெரிய தாவரங்கள் வளர்ந்து கிடந்தன.

வெறும் காடு மட்டும்தானா இங்கேஎன்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் உச்சந்தலையிலிருந்து புகை மேலெழும்பியது. அது பரந்த ஆகாயத்தின் எல்லையற்ற பரப்பில் மெல்ல தேய்வுற்று ஒன்றுமில்லாமல் போனது.

நான் மெல்ல முன்னகர்ந்தேன். ஒரு மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். அவள் திமிர அவன் அவளை இறுகக் கட்டி அணைத்தான். அவள் கைகளை, இறுகப்பற்றிக்கொண்டான். அவள் தன் உடலை உதறினாள். ஆயினும் அவனின் பிடியிலிருந்து அவளால் தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதை நான் கவனித்தேன். அந்தப் பெண்ணை உற்று கவனித்ததில், அவள் அந்த பிணத்தின் முக ஜாடையை நூறு சதம் கொண்டிருப்பதை உணர்ந்து சற்றே அதிர்ந்தேன்.

எனக்கு அந்த இருவரின் செயல்களில் விபரீதத்தைவிடவும், விகல்பத்தின் பங்கு அதிகமாக இருப்பதாகப்பட, ஒரு பெண்ணின் இளஞ்சூட்டு உடல் ஒரு ஆணை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து நான் அறிந்திருந்ததன் விளைவாக, ஒரு அணிச்சை செயலாக, நான் அவனிடமிருந்து அவளை மீட்கும் பொருட்டு அவர்களை நோக்கி ஓடினேன். அவன் முகத்தில் ஒரு குத்து விட நான் முயல, அவன் அதை முன்பே கணித்திருக்க வேண்டும். அவன் போக்கு காட்டியதில் என் முஷ்டி நிலத்திலிருந்த பாறையொன்றில் மோதி வலித்தது. அவனின் முக அமைப்பே தடிமனாக இருந்தது. அவன் என் இடுப்பின் கீழ் தன் காலால் வைத்து எத்த, நான் நிலைதடுமாறி விழுந்தேன். கண்கள் இருளடைந்தன. ஆபத்திலிருக்கும் ஒரு அழகான பெண்ணைக் காப்பாற்றக்கூட திராணியற்ற நானெல்லாம் என்ன விதமான………………………………………………………………………

நான் எழுந்தபோது, அவனும் அவளும் அங்கே இல்லை. சற்று நேரத்துக்குப் பிறகு அவள் அந்த குடிசைக்குள்ளிருந்து அழுதபடி வெளியே ஓடினாள். அவள் பின்னால் மிக மெதுவாக அவளையே பார்த்தபடி அவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அவன் முகத்தில் லேசான களைப்பு தெரிந்தது. இடையை மறைக்கும் ஒரு அங்கி மட்டுமே அணிந்திருந்தான். அந்த அங்கியைப் பற்றிச் சொல்ல வேண்டும். வானவில்லின் அத்தனை நிறங்களும் அந்த அங்கியில் இருந்தது. அவன் உடலெங்கும் அவளின் நகக்கீரல்கள். உள்ளே என்ன நடந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. நான் மயங்கியிருக்கக் கூடாது.

அவன் என்னைப் பார்த்தான். எனக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது. அவனின் எத்தலை என் உடலென்னும் மாபெரும் நினைவடுக்கு இன்னும் மறக்கவில்லை போலும். அவன் என்னை அண்டினான்.

உன் பெயர் என்ன?” என்றான்.

நீலன்என்றேன்.

மணிக்கட்டைப் பார்த்துவிட்டு, என் பெயர் எழுதி, பக்கத்தில் 5:02 என்று குறித்துக்கொண்டான்.

சாத்தியமே இல்லைஎன்றேன் தீர்மானமில்லாமல்.

அவன் என்னைக் கேள்வியாய் ஏறிட்டான்.

அவள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நான் என் கண்களால் பார்த்தேன். பிறகெப்படி இங்கே?” என்றேன்.

அவன் என்னை ஏறிட்டான். அவனின் கண்கள் இமைக்கவில்லை. கூர்மையான பார்வையால் என் கண்களை ஊடுறுவிப் பார்த்தான்.

எனக்கு ஒரு உதவியாளன் தேவைப்படவில்லை என்றால் இந்நேரம் நீ……………” அவன் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே கடந்து போனான். அவன் திரும்பத்திரும்ப என் அகங்காரத்தை சீண்டுவதாய்த் தோன்றியது. மயங்கக் கூடாத நேரத்தில் மயங்கிவிட்டபிறகு கோபம் எதற்காகும்?

எனக்கு பசித்தது. அவன் உதைத்ததில் இன்னமும் வலித்தது. வயிற்றின் அமிலம் உடலை இன்னும் இன்னும் பலவீனப்படுத்தியது. அவன் குறிப்பறிந்தது போல், ஒரு களிமண்ணாலான தட்டில் பொறித்த முட்டைகளுடனும், வதக்கப்பட்ட கீரையுடனும் வந்தான்.

விருந்தோம்பல். அதுவும், ஒரு பெண்ணிடம் தன் பலத்தை காட்டியவனிடம்.

இந்த இயற்கையின் வினோதத்திற்கு அளவே இல்லையா என்று தோன்றியது. அவனது விருந்தோம்பலை மறுப்பதா ஏற்பதா என்பது ஊர்ஜிதமாக இல்லாமல் இருந்தது.

நீ புதியவன். ஆனால் அவள் புதியவள் இல்லை.” என்று துவங்கினான்.

என்ன சொல்ல வருகிறாய் நீஎன்பதாக நான் அவனை ஏறிட்டேன்.

இதுகாறும் நான் தனியாக இந்தப் பிரதேசத்தைக் கையாண்டுகொண்டிருந்தேன். ஆனால், உன் வருகை, என்னால் அதிகபட்சமாகக் கையாளக்கூடிய எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. எனக்கு ஒரு உதவியாளன் வேண்டும். அது நீயாக இருக்கலாம் ஆனால், நீ விரும்பினால் மட்டும் தான்என்றான் தொடர்ந்து.

நான் ஏதும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தேன்.

நீ என்னுடன் சேர விரும்பவில்லை எனில், உன்னை அவளாக்கி அவளை நீயாக்கிவிடுவது தான் எனக்கிருக்கும் ஒரே வழிஎன்றான்.

எனக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவாகச் சொல்என்றேன் கெஞ்சும் குரலில்.

கேள். இந்தப்பிரதேசத்தில் காலம் ஒரு பொறியாக இருக்கிறது. துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துவிடும். நீ பார்த்தது உண்மை தான். அவள் சில மணி நேரம் முன்பு மரணித்தாள். ஆனால், காலம் அவள் இந்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த கணத்திற்கே மீண்டதில், அவள் மீண்டுவிட்டாள். இனி மறுபடி மரணிப்பாளா தெரியாது

அவன் ஏதோ உளறுகிறான் என்றே தோன்றியது எனக்கு. ஒரு சைக்கோவை சந்தித்துவிட்டேன் என்று என் உள்ளுணர்வு சொன்னது. காட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என் அட்ரினலின் விழித்துக்கொண்டது. இரண்டு முறை விக்கினேன். அவன் தண்ணீர் எடுத்து வர குடிசைக்குள் சென்றான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நான் காட்டுக்குள் ஓடினேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வரவில்லை. ஏன்?

நான் ஒடிக்கொண்டே இருந்தேன். எப்படியாவது மலையின் விளிம்பை நெருங்கி என் காரை அடைந்துவிட்டால் திரும்பிக் கூட பாராமல் வீட்டுக்கு திரும்பிவிட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். ஆனால் எவ்வளவோ ஓடியும் மலையின் விளிம்பே தெரியவில்லை. சில சிறு குன்றுகளைக் கடந்தேன். ஒரு குளத்தை அடைந்தேன். உண்மையிலேயே தாகம் எடுத்தது. குளத்தில் தெளிவான நீர் இருந்த பகுதியில் உள்ளங்கையால் நீரள்ளி அருந்தினேன். அவ்வளவு தான் நினைவிருந்தது. சற்றைக்கெல்லாம் என் கண்கள் இருளடைந்தன.

நான் கண்விழித்தபோது எவ்வித சேதாரமும் இல்லாமல் அதே இடத்தில் முழுமையாகக் கிடந்தேன். ஆறொன்று என் பாதையில் வந்தது. உடலெங்கும் அதுகாறும் இருந்த களைப்பும் வியர்வையும் அப்பிக்கிடக்க, உடலைச் சுத்தம் செய்யும் எண்ணத்தில் ஆற்றில் இறங்கினேன். கால் வழுக்கி இடறி விழுந்து நீருக்குள் சில நொடிகள் தொலைந்து, என்னை நானே மீட்டெடுத்து ஆற்றின் மறுபக்கம் கரை ஏறியபோது அந்தக் கரையை அதற்கு முன்பும் எங்கோ பார்த்த நினைவிருந்தது.

தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் தலையிலிருந்து புகை!

அருகிலிருந்த மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். நான் முன்பு கண்ட காட்சிகளையே திரும்பவும் காண நேர்வது என்ன வினோதம்?

நான் இம்முறை அவளை மீட்கும் பொருட்டு அவனிடம் மல்லுக்கு நிற்கவில்லை. திமிறும் அவளை தன் இருகைகளாலும் தூக்கித் தோளில் ஏந்திக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு அவள் கண்ணீருடன் அந்த குடிசையை விட்டு வெளியேறி ஓடினாள். பின்னாலேயே அவன் வெளியே வந்தான். என்னைப் பார்த்தான்.

மாலை மணி ஐந்தாகிவிட்டதுஎன்றான்.

எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. முதலில் அவள் யார்? அவளின் பிணத்தை மண்ணில் இட்டு மூடினார்கள். அவள் உயிருடன் எப்படி எழுந்து வந்தாள்? அவளுக்கு அந்த குடிசையில் அந்த பலவந்தம் முதல் முறை நடந்துவிட்ட பிறகும், மீண்டும் அதே இடத்திற்கு அவள் ஏன் வந்தாள்? மீண்டும் அவன் அவளை ஆக்ரமிக்க அவளே ஏன் வழி செய்தாள்? தான் பலவந்தப்படும் ஒரு வாய்ப்பை அவளே ஏன் அவனுக்கு வழங்குகிறாள்?

உன்னை உடல் வலுவால் வெல்ல எனக்குத் திராணி இல்லை. ஆனால் இது பாவம். ஒரு பெண்ணை நீ இப்படியெல்லாம்….. ” என்னால் அதற்கு மேல் அதை விவரிக்க முடிந்திருக்கவில்லை..

கேள். என்னாலும் இதைத் தனி ஆளாக இனியும் தொடர்ந்து செய்ய இயலாது. உதவிக்கு ஒரு ஆள் தேவை. நீ வருகிறாய் எனில், உன்னை அவளாக்க வேண்டியதில்லை

அவள் யார்? பேயா? அவள் இறக்கவில்லை என்றால் அவள் பிணம் மண்ணுக்குள் புதைந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அது எப்படி?”

அவள் இறந்தது உண்மை

இறந்தவள் மீண்டு வந்தாளா? பிணங்களை உயிர்ப்பிக்கிறாயா? அல்லது அவள் இரட்டையர்களில் ஒருத்தியா?”

இரண்டுமே இல்லை. நீ இங்கு வந்தது இரண்டாவது முறை. அதை கவனித்தாயா?”

நான் ஆமோதிப்பாய் தலையசைத்தேன்.

நீ இன்னும் பல ஆயிரம் முறை இங்கே வரப்போகிறாய். அது தெரியுமா?”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி சாத்தியம்? அப்படியானால் நான் என் வீடு திரும்பப்போவதில்லையா?

என்ன உளறுகிறாய்?”

ஆம். காலம் இங்கே ஒரு பொறியாக இருக்கிறது. அதாவது டைம் ட்ராப். யார் இதை இங்கு இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. இங்கே பலர் சிக்குண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் அப்படிச் சிக்கியவள் தான். இதிலிருந்து மீண்டு வெளியே செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சிலர் துவக்கத்தில் நம்பினார்கள். அவர்கள் இந்தப் பிரதேசத்தின் விளிம்புகளில் எங்கேனும் வெளியேறும் நுழைவாயில் இருக்கிறதா என்று சோதிக்கவும் செய்தார்கள். ஆனால் இதைச்சொல்லும் இக்கணம் வரை ஒருவர் கூட வெளியேறியதில்லை. வெளிச்செல்ல வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு தான் நான் இதைச் செய்கிறேன்.”

எதை?”

அவர்களின் நினைவுகளை அழிப்பது

என்ன?”

ஆம். நீ பலவற்றை கவனிக்கவில்லை என்று ஊகிக்கிறேன். வெளியே செல்ல வழியில்லை. திரும்பத்திரும்ப நடக்கும் ஒரே விதமான நிகழ்வுகள். நீ சற்று யோசித்துப்பார். ஏற்கனவே நடந்த ஒன்று திரும்பத்திரும்ப கோடி முறை உனக்கு நடந்தால், உன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நாளின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவது எது? சுவாரஸ்யம். அது இல்லையெனில் என்னாகும்? அவளுக்கு இறப்பே இல்லை. இங்கிருக்கும் யாரும் முதுமையடையப்போவதுமில்லை. “

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனால் தான் மண்ணுள் புதையுண்டவள் உயிருடன் மீண்டாளா? அவனிடம் மீண்டும் மீண்டும் சிக்குகிறாளா?

ஆனால், ஏன் நினைவுகளை அழிக்க வேண்டும்?”

நீ ஒரு கண்காட்சிக்கு செல்கிறாய். கண்காட்சியின் முடிவில், மீண்டும் கண்காட்சியை முதலிலிருந்து பார்க்கச்சொன்னால், உன்னால் அந்த கண்காட்சியை எத்தனை முறை ரசிக்க முடியும்?”

இரண்டு மூன்று முறைக்கு மேல் சலித்துவிடும்

அதுதான் இங்கும். காலப்பொறியானது இந்தப் பிரதேசத்தில் சிக்குண்டவர்களை மீண்டும் மீண்டும் பார்த்ததையே பார்க்கவும், கடந்ததையே கடக்கவும் நிர்பந்தப்படுத்துகிறது. இதிலிருந்து மீள இரண்டே வழி தான்

என்ன அது?”

ஒவ்வொரு முறை காலப்பொறி மீள்கையிலும், அதை அப்போதுதான் முதன்முதலில் எதிர்கொள்வதாக பாசாங்கு செய்வது. அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, இந்த பிரதேசத்தில் சிக்குண்ட அனைவருக்கும் நான் தருவது இதைத்தான். ஒவ்வொரு முறை கண்காட்சி முடிந்து மீண்டும் துவங்குகையிலும், அதுகாறும் பார்த்ததையெல்லாம் மறக்கச்செய்துவிட்டால், அந்தக் கண்காட்சி புதியதாக சுவாரஸ்யம் கூட்டுவதாகத்தானே அமையும்?”

நான் ஆமோதிப்பாய்த் தலையசைத்தேன்.

அப்படிச் செய்வதால், அவளுக்கு இந்தப் பிரதேசத்தின் மீட்சியற்ற செக்குமாட்டுத்தனம் செக்குமாட்டுத்தனமாகவே தெரியாது. அவளைப்பொருத்தவரை, இந்தக் கண்காட்சியை அவள் பார்ப்பது ஒரு முறை தான். தான், முதல் முறையாகத்தான் இந்தக் கண்காட்சியைப் பார்க்கிறோம் என்கிற எண்ணத்தில் அவள் ஒவ்வொருமுறையும் இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு விதமாய்ப் பார்க்க நான் வழி செய்கிறேன். “

சரி. புரிகிறது. அது என்ன இரண்டாவது வழி?”

இந்தக் கண்காட்சியின் அழகில் தொலைந்து விடுவது. அதைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவள் போன்ற எண்ணற்றவர்களை இவ்விதம் கண்காட்சியில் தொலைய வைப்பதே எனது கண்காட்சி ஆகிவிடுகிறது. இவர்களை மேலாண்மை செய்வதிலேயே என் காலம் சுவாரஸ்யமாய்க் கழிகிறது. ஒவ்வொருமுறை அவர்கள் அவர்களுக்கான கண்காட்சிகளை ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வதை வேடிக்கை பார்ப்பதில், எனக்கு சுவாரஸ்யம் கூடுகிறது. அவள் போல் இப்பிரதேசத்தில் சிக்குண்டவர்கள் ஒவ்வொருவரும் எப்போது இந்த பிரதேசத்தில் நுழைந்தார்கள் என்பதை நான் குறித்து வைத்திருக்கிறேன். அந்த நேரம் வருகையில், அவர்களின் நினைவுகளை நான் அழித்துவிடுகிறேன். இதன் மூலம் காலப்பொறியின் அந்த இழையில் இந்தக் காடு அவர்களுக்கு புதியதாகிவிடும். ஆனால், காட்டுக்கு அவர்கள் புதியவர்களல்ல

அவன் சொன்னதைக் கேட்க எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. காலப்பொறி அதாவது டைம் ட்ராப் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவெல்லாம் அறிபுனை கிறுக்கர்களின் அதீத கற்பனை என்றே நினைத்திருந்தேன். நிஜமாகவே அப்படி ஒன்றில் நானே சிக்கிக்கொள்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

எல்லாம் சரி. ஆனால், நீ இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற ஏன் முயற்சிக்கவில்லை? இப்படி இந்தக் காட்டில் காலப்பொறியில் சிக்குண்டு உன் அசலான வாழ்வை வாழமுடியாமல் இருப்பது குறித்து உனக்கு வருத்தமில்லையா?” என்றேன் நான்.

அசலான வாழ்க்கை என்றால் என்ன? பூமியில் மானுட வாழ்வைச் சொல்கிறாயா?” என்றான் அவன்.

நான் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் ஆமோதிப்பாய்த் தலையசைத்தபடி அவனையே உற்றுப்பார்த்திருந்தேன்.

உண்மையில் நீ குறிக்கும் அந்த அசலான வாழ்வும் கூட ஒரு வகைக் காலப்பொறிதான் என்பதை உணர உனக்கு இன்னும் என்னவெல்லாம் தேவைப்படும்? என்ன இருந்தால் நீ அதைப் புரிந்துகொள்வாய்? பிறந்து, வளர்ந்து, அடுத்தவனுக்கு ஏதோவோர் வகையில் பயன்பட்டு, அதன் மூலம் பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, அவர்கள் வளர துணை நிற்பதிலேயே இளமையை வீணாக்கி, முதுமை அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, வளர்ந்து………. பிறப்பை, இந்த பிரதேசத்துள் நுழைவதாயும், இறப்பை காலப்பொறியின் இறுதிக்கட்டமென்றும் எடுத்துக்கொண்டால் மானுட வாழ்வும் இந்தப் பிரதேச வாழ்வும் ஒன்று தான். மானுட வாழ்விலும் நீ இதையே தான் நிகழ்த்துகிறாய். அறுபது வருட வாழ்வை, வெவ்வேறு செயல்பாடுகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறாய். சிரமேற்கொண்டு உனக்கு நெருக்கமான அர்த்தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். அதன் மூலம், வாழ்வனுபவத்தை சுவாரஸ்யமாக்க முயல்கிறாய். அல்லது அடுத்தவர்களை மேலாண்மை செய்வதிலேயே உன் காலத்தை இட்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். இவையெல்லாவற்றின் நோக்கம் தான் என்ன? காலம் கடத்துவது. அதுமட்டும் தான் நோக்கம். அதையே இந்தக் காட்டுக்குள் மேற்கொள்வதில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? ” என்றான் அவன்.

அவன் சொன்ன எதையும் மறுக்க என்னிடம் எவ்வித வலுவான வாதமும் இல்லை என்பதே என்னை பலவீனப்படுத்துவதாக இருந்தது.

வாழ்க்கை என்று எதை நாம் குறிக்கிறோம்? சில மணி நேரங்களே உயிர் வாழும் உருவத்தில் மிகச்சிறியதான பூச்சிகளுக்கு வாழ்வனுபவம் என்னவாக இருக்கிறது? அவ்வாழ்வனுபவத்தில் ஏன் மனித இனம் தேடும் அர்த்தங்கள் இருப்பதில்லை? மேற்கொள்ளும் பயணங்கள் இருப்பதில்லை? ஆனால் அது குறித்தெல்லாம் அந்தப் பூச்சிகள் அலட்டிக்கொள்வதும் இல்லை. இந்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட ஒரு தேனீ, தான் பல்லாயிரம் தேனீக்களின் வாழ்வுகளைவாழ்ந்து முடித்த பின்னும் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்திருக்குமா?

அதன் பார்வையில், தான் சற்று முன் பூவிலிருந்து எடுத்த மகரந்தத்தை ஏற்கனவே பல்லாயிரம் முறை எடுத்தாகிவிட்டது என்பதை அறியுமா? இவை எதையும் அறியாமல்தான், இவை எதையும் பொருட்படுத்தாமல்தான் தேனியானது இந்தப் பிரதேசத்தில் தன் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறது. முடிக்கும் தருவாயில் மீண்டும் பிறக்கிறது. அதன் நினைவுகளை அவன் அழிப்பதில்லை. ஏன்? அதன் நினைவுகள் அதற்கு ஒரு பொருட்டே இல்லை. அந்த நினைவுகள், அதன் வாழ்வின் மையமாக இருப்பதில்லை.

நினைவுகள்! ஞாபகங்கள்!

மனிதர்களின் நினைவடுக்கு என்பது தொடர்ச்சியாக, படிப்படியாக, ஒவ்வொரு புள்ளியாகச் சேர்த்து இணைக்கப்பட்ட ஒரு நேர்கோடு. மொழியின் மூலமாக, ஓலைச்சுவடிகளின் வாயிலாக, காகிதங்களின் வாயிலாக, கல்வெட்டுக்களின் வாயிலாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு வெறும் கருவி. அந்தக் கருவியுடன் மனித இனம் தோன்றிடவில்லை. துவக்கத்தில், தேனீயைப்போலத்தான் மனிதனும் தோன்றியிருக்கிறான் என்னும்போது மிகவும் தற்செயலாக, ஒரு வெறும் பக்கவிளைவாகத் தோன்றிவிட்ட, பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு கருவிக்கு சரியான விலை என்னவாக இருக்க முடியும்? ஒரு விரலின் வீக்கத்திற்காய், ஒரு முழு உடலையும் வீங்க வைப்பதென்பது என்ன விதமான விளைவுகளை உருவாக்கவல்லது?

இப்போது இந்தப் பிரதேசத்தில் நுழைந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யாரேனும் இந்தப் பிரதேசத்தில் நுழைந்தபடியே இருக்கிறார்கள். அவர்களை நான் தனியனாகக் கையாள்வது சிரமமாக இருக்கிறது. என்னதான் இது, காலப்பொறியானாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், என்னால் எத்தனை பேரைக் கையாள முடியுமென்று ஒரு வரையறை இருக்கிறதல்லவா? அதை நான் எப்படி மீற முடியும்? அதனால் இப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறது. நீ எந்த வழி செல்ல இருக்கிறாய்? மேலாண்மை செய்து காலம் கடத்த விரும்புகிறாயா? அல்லது, ஒவ்வொருமுறையும் இந்த பிரதேசத்தை புதிதாகப் பார்த்தே காலத்தை கடத்த விரும்புகிறாயா?” என்றான் அவன்.

ஐயோ கடவுளே! இப்படி ஒரு இக்கட்டில் வந்து சிக்குவேன் என்று கனவிலும் நினைத்திடவில்லைஎன்றேன் நான் சோர்வு தழுவிய குரலில்.

யார் கண்டது? அந்தக் கடவுளே கூட இப்படியொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டவன் தானோ என்னவோஎன்றான் அவன்.

நான் மேலாண்மையின் மூலம் காலம் கடத்துகிறேன்என்றேன்.

சபாஷ்.. இன்றிலிருந்து நீ என் உதவியாளன். வா ..என்னுடன்என்றுவிட்டு அவன் என்னை குடிசைக்குள் அழைத்துப்போனான். அணிவதற்கு சில மேலாடைகள் தந்தான். அவைகளிலும் வானவில்லின் அத்தனை நிறங்களும் இருந்தன.

அங்கு வைத்து எப்படி பின் மண்டையின் ஓரிடத்தில் தாக்கி சமீபத்திய நினைவுகளை அழிப்பது என்று கற்றுக்கொடுத்தான். அதையும் மீறி எவரேனும் எதையேனும் நினைவு வைத்திருப்பின் அதை கனவென்றோ‘, ‘அதீதக் கற்பனையென்றோசொல்லி மூளைச்சலவை செய்யவும் அவனிடம் பயிற்சி பெற்றேன். பிறகு அவன் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினான். அதில் அந்த பிரதேசத்திலிருக்கும் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்ட இடமும், நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிது சிறிதாக அந்தப் பிரதேசத்தின் ஒழுங்கு எனக்குப் பழக்கமாகிப்போன ஒரு நாளில் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது பின் மண்டையில் ஓங்கி அடித்தேன். அவன் மயங்கி விழுந்தான். நினைவு திரும்பும் போது அவனும் இந்த பிரதேசத்திற்கு புதியவனாகிவிடுவான். அவன் மீது அவன் எனக்களித்த வானவில்லின் அத்தனை நிறங்களும் கூடிய ஆடையை வீசினேன். ஓரினச்சேர்க்கையாளர்களின் குறியீடு எனக்கெதற்கு. நான் தேடியது வாழ் நாளை நீட்டித்துக்கொள்ள ஒரு தீர்வை.

நான் அருகாமையிலிருந்த அந்த மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டேன். அவள் வரக் காத்திருந்தேன்.

என் மூளையில் திட்டம் தெளிவாக இருந்தது. காலப்பொறிக்குள் இனி நோயும் இல்லை, முதுமையும் இல்லை, மரணமும் இல்லை. உடன் ஒரு பெண் இருப்பின் எத்தனை அழகாய் இருக்கும்? இந்தப் பிரதேசம் காலத்தைத் திகட்டத்திகட்ட வழங்க இருக்கிறது. தர்க்க ரீதியாய்ப் பார்க்கின் இத்தனை நீளமான காலத்தைக் கடத்தத் தேவையான அனுபவத்தை, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரைக் காட்டிலும், வெவ்வேறு பாலினத்தைப் சேர்ந்த இருவரால் பெறவே அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது உண்மையில்லை என்று எப்படிக்கருத இயலும்? பூமியில் முதன் முதலாய் உதித்தது பெண் இனம். பின் அதுதான் ஆண் இனமென்று ஒன்று உருவாகக் காரணமாகவும் இருந்தது. முற்றிலும் ஒரே பாலினம் நீண்ட நெடுங்காலத்திற்கு சாத்தியமெனில், ஆண் இனம் என்ற ஒன்றே உருவாகியிருக்க வேண்டியதில்லையே.

அவள் வருவாள். அவள் மீது நான் தாவி ஆட்கொள்வேன். அவள் நினைவுகளை நான் அழிக்கப்போவதில்லை. அவள் நினைவுகளை மட்டும் நான் அழிக்கவே போவதில்லை.

விழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை

லிபரலைசேஷன், குளோபலைசேஷன், பிரை வடை சேஷன் என்ற சேஷன் கள் ஆதிக்கம் புரிந்து கொண்டிருந்த 92 இல் நம் கதாநாயகன் பாலசங்கரனுக்கு 24 வயது. அன்று எழுந்திருக்கும் போதே மனது பரபரவென்று இருந்தது பாலசங்கரனுக்கு. பின்புற வேப்ப மரத்திலிருந்து குயில் ஒன்று விட்டுவிட்டு கூவிக்கொண்டிருந்த மலர்ந்தும் மலராத பொழுது. அபூர்வமான செண்பக மலரின் வாசம் எங்கிருந்தோ வீசிக் கொண்டிருந்தது. தரையில் வெள்ளை வேட்டியை விரித்து பவழ மல்லி மலரை வழக்கம் போல பங்கஜம் மாமி சேகரித்துக் கொண்டிருந்தார். இளங்காலையின் அமைதியில் அவர் பாடிக் கொண்டிருக்கும் ‘கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா’ என்ற பாடல், தென்றலின் வருடல் போல செவிகளில் எட்டி உட்புகுந்தது. மொட்டை மாடியில் நின்று பார்த்த பாலசங்கரனுக்கு நீலத் தண்டிலிருந்து இள மஞ்சள் பூவெனக் கிளம்பும் சூரியன் சொல்ல முடியாத சந்தோஷத்தை அளித்தான். இன்னமும் பிடிவாதமாக வானில் தென்பட்ட நிலா அவனை புன்னகைக்க வைத்தது. எதிர் வரிசையில் நின்ற சிறு மரக் கூட்டங்களிலிருந்து பறவைகள் உற்சாகமாகத் தங்கள் சிறகுகளை விரித்துப் பறந்து நான்கு புறத்திலும் பார்த்தன. அடக்கமாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டே ஜிவ்வென்று பறந்து செல்லமணி நாடார் கடையின் முன் சிதறியிருந்த தானியங்களைக் கொரித்தன. காக்கைகள் அரிசி மணிகளைக் கொத்தினால், குருவிகள் பயிறு வகைகளைக் கை பார்த்தன. தென்னை மரத்திலிருந்து வெகு வேகமாக இறங்கி வந்த அணில் குஞ்சு பாதியாய்க்கிடந்த கொய்யாவை முன்னங் கால்களால் பற்றி பற்களைப் பதித்து ருசி பார்த்தது. அதன் ஒய்யார வாலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கறவை மாடுகள், கன்றுகளின் வாசமாவது வருகிறதா எனப் பார்த்துக் கொண்டே மடி கனக்க, மணி ஒலிக்க நடந்து கொண்டிருந்தன. கோயில் யானை குளிக்கப் போகிறது போலிருக்கிறது. அதன் நடையின் விரைவும், உலகையே வென்றவனைப் போல் அதன் மீதிருந்த பாகனும் ‘உலகம் இன்பமயம்’ என்று சொல்லின.

“காலங்காத்தால மேக்கையும் கெழக்கையும் பாத்துண்டு நின்னா எப்படி வேலயாகும்? ஒரு கீத்துக் காய்கூட இல்ல; போய் வாங்கிண்டு வாங்கோ சீக்ரமா, அப்றம் ஆஃபீசுக்கு நேரமாச்சுன்னு பறப்பேள்; என்னது, இப்ப வந்திருக்காதா? தட்டி கழிச்சுடுங்கோ எல்லாத்தையும்; என்னது, காஃபி குடிச்சுட்டுப் போறேளா, டிக்காஷன் இன்னும் இறங்கல, லொட்டு லொட்டுன்னு தட்டித்தட்டி கைதான் சுட்றது; காய் வெளைஞ்சான் சந்தேலேந்து மணி மணியா இப்ப வந்திருக்கும்; போய்டு வாங்கோ. நல்ல ஸ்டராங்க் காஃபி போட்டுத் தரேன் நீங்க வந்தோன்ன.”

இப்போதைக்கு காஃபி கிடைக்காது என்றான பிறகு அவனுக்கும் வேற வழியில்லை. நடேசய்யர் கடையில் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் காஃபி கிடைக்கும் என்று சுப்புணி சொல்லியிருந்தாலும் பால சங்கரனுக்கு வெளியில் எதையும் சாப்பிடும் பழக்கமில்லை. அவன் வயிறு அப்படிப்பட்டது, தாகத்திற்குத் தண்ணீர் கூட வெளியில் குடிக்க முடியாது அவனால். வீட்டில் அவன் மனைவியையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கிறார்கள். அவன் மாமனார், மாமியார், அவனுடைய சின்ன மாமனார், சின்ன மாமியார். அவனுக்கு அவர்கள் தான் சீதனம். சும்மா, சொல்லக்கூடாது, அத்தனைக் கிழத்திற்கும் பயங்கர சொத்தும் அதிலிருந்து வருமானமும் வருகிறது. இவனது மனைவி அவர்கள் குடும்பங்களின் ஒரே வாரிசு. பெண் பார்க்கப் போகும் போதே அவன் மாமனார் சொல்லிவிட்டார்-‘என் தம்பிக்குக் கொழந்தேளில்லை. எனக்கும் லல்லி ஒரே பொண்ணு; அதுவும் காலம் தப்பிப் பொறந்தவ. இப்ப எம் பொண்டாட்டிக்கு கொஞ்சமாத்தான் வேல செய்ய முடியும்; எங்க தம்பி ஆம்படையா எல்லாரையும் பாத்துப்போ, எல்லாமும் செய்வோ; கூடி வாழ்ந்தா கோடி நன்ம, என்ன சொல்றேள்? எல்லாரும் உங்களோட தான் வந்திருக்கணும்; எங்களால இனி குடும்பத்தையெல்லாம் தனியா நடத்த முடியாது. சொத்து சுகமெல்லாம் உங்களுக்குத்தான், மாப்ள..’

அவன் அப்பா ‘பொண்ணத் தானடா பாத்துருக்கோம். நிச்சயமா பண்ணிட்டோம்? இது நடமுற இல்லடா; வேணாம்னு சொல்லிடு.’ என்றார். அவன் சொல்லவில்லை, அவள் அழகு அப்படி, அவளுடன் வரும் பணம் அப்படி. குடும்பக் கவலைகள் அற்று அக்கடாவென்று இருக்கலாம் என நினைத்தான்.

நடைபாதைக் கடைகள் திறந்தாகிவிட்டன. பச்சைப்சேலென்று கீரையும், மினுமினுவென்று வயலட் கத்திரியும், பிஞ்சு வெண்டையும், முற்றாத அவரையும், கொத்தவரங்காயும், நீள் புடலையும், கைகளை விட நீளமான முருங்கையும், தளதளத் தக்காளியும், பச்சைத் தாள்களுடன் முள்ளங்கியும், அசுர வளர்ச்சியில்லாத பச்சை மிளகாயும், பசும் குறு மிளகுக் கொத்தும், வாடாத கொத்தமல்லியும் கூவிக் கூவி அழைத்தன. மஞ்சள், சந்தனம், குங்குமம், கோல மாவு, தாமரை, ரோஜா, மல்லி, கதம்பம் என்று ஒவ்வொன்றின் முன்பும் சில பேர் நின்றிருந்தனர். கோயிலில் ஓதுவார் இந்தத் திருக்காட்சியைக் காணாமல் போகலாமா நீ என்ற சம்பந்தர் பதிகத்தை மனமுருகிப் பாடிக்கொண்டிருப்பது அந்தக் கம்பீரக் கோயிலின் ஞான விளக்காகப் பிரகாசித்தது. இசையும், இறையும், தமிழும் என்னவொரு ஒத்திசைவு என்று மனம் அந்தப் பதிகத்தைத் தானும் வாங்கிப் பாடியது.

‘மட்டிட்ட புன்னையம் கானல் மட மயிலைக்

கட்டிடட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்’

காய்களை வாங்கிக் கொண்டான்- இதில் எந்தக் கிழம் (!) கயாவில் எந்தக் காயை விட்டுவிட்டது என்பதை நினைவில் கொள்வது அவனுக்கு லத்தீனை விடக் கடினம். அவன் சாப்பாட்டில் வெண்டை, முருங்கை,(சில நாட்களில் மட்டும்) கேரட் நிச்சயம் உண்டு; என்ன ஒன்று, அவை மட்டும்தான் உண்டு. வாங்கிக் கொண்டு திரும்பும் போது தள்ளு வண்டியில் அதைப் பார்த்தான். இளம் பெண்கள் அணியும் மெல்லிய ரோஸ் வண்ண தாவணி நிறம், அதைப் போலவே ஒளிபுகும் எழில், தலைப் பகுதியில் சீரான சிறு வெண் முழி சிலவற்றில், ஒட்டிப் பிறந்த பெண்கள் போல ஒரே அளவில், குவியலில், அவைகளின் உடன் பிறந்த செவ்வொளியில் சாய்வாகக் கதிர் பட்டு மின்னும் அழகோ சொல்லி மாளாது. ‘என்னையும் வாங்கேன்’ என்று அவை கெஞ்சின, கொஞ்சின; வாங்கி விட்டான் துணிந்து. அவளை எப்படியாவது சமாதானம் செய்து இன்று அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் செய்யச் சொல்ல வேண்டும். நினைக்கையிலேயே நாவில் நீர் ஊறியது. சுப்புணி செய்யும் கேலி நினைவில் வந்து ரோஷம் வந்தது. ‘அப்பா, சங்கரா, உனக்கு ஜன்மத்ல இல்லாத பலதுல வெங்காய சாம்பாரும் ஒண்ணு. மொறு மொறுன்னு ரவா தோசைல பொடிப் பொடியா ஆனியன் தூவி ராயர் மெஸ்ஸுல கொடுப்பா பாரு, அதெல்லாம் நள பாகம்ன்னா; பாவம்டா நீ, வெளில சாப்ட மாட்டேங்க்ற.’

உண்மைதான் என்று நினைத்தான் அவன். திரும்புகையில் வெயில் சற்று ஏறிவிட்டது. குரல்களென ஒலித்தவை கூட்டுக் கத்தலெனக் கேட்டது. குளித்து வந்த யானை அது அத்தனை விரைவில் முடிந்ததை எண்ணி தளர் நடையில் வந்தது. உலா முடிந்த ஏக்கத்தில் மாடுகள், வயிறு நிறையாத சோர்வில் கன்றுகள், அணில் பிள்ளையைக் காணோம், உரத்த குரலில் பங்கஜம் மாமியின் கணவர் குளிப்பதற்கு வென்னீர் கேட்டு கத்திக் கொண்டிருந்தார். செல்லமுத்து நாடார் கடையில் விளக்குமாறைப் பார்த்தவுடன் அத்தனைப் பட்சிகளும் பறந்து போயிருந்தன. அவனை சோர்வு அப்பிக் கொண்டது.

“இப்ப யாராவது வெங்காயம் வாங்குவாளா? மாளய பக்ஷம் இல்லையா? அப்புறம் சுந்தர காண்ட பாராயணம், நவராத்திரில நம்மாத்ல உண்டே? கலசம் வேற வைச்சுன்னா தேவி பூஜை? காசக் கரியாக்கறேள்.”

‘நீ முதல்ல காஃபி கொடு, அப்றமா எனக்கு அர்ச்சன செய்யலாம்; வெங்காய சாம்பார் சாப்ட என் வீட்ல எனக்கு உரிமையில்ல, நீங்க சாப்பிடாட்டி என்ன, எனக்கு மட்டுமாவது பண்ணேன்.”

அவள் பதிலே சொல்லவில்லை. அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் வெங்காயக்கூடை காலியாக இருப்பதைப் பார்த்தான். கோபம் தலைக்கேறியது. ஒரு மாதத்திற்குத் தேவையில்லையென்பதால் அது மொத்தமாக வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் போய்விட்டது என்று அவள் சொன்ன போது அவனுக்கு அவமானமாகக் கூட இருந்தது. அவன் அன்று மதியம் தான் சுப்புணியிடம் கேட்டு அரைத்துவிட்ட சாம்பார், வெங்காய வத்தக்கொழம்பு, வெங்காய கொத்ஸு, வெங்காய பக்கோடா போன்றவற்றின் சமையல் குறிப்புகளை சிரத்தையாக எழுதி வந்திருந்தான். அவள் அருகில் சென்றான்- “நா ஒரு நா செத்துப் போவேன். அப்போ, சாஸ்திரிகளுக்கு வெங்காய தானம் மட்டும் பண்ணிடு; இல்லேன்னா, பேயா உன்னப் புடிச்சுடுவேன்.” அவன் கோபம் அவ்வளவுதான் .காதுகளைப் பொத்திக்கொண்டு ‘ராம, ராம, சாயறக்ஷல பேசற பேச்சைப் பார்.’ என்றாள்.

இதுகளெல்லாம் என்ன ஜென்மம் என்று ஆற்றாமையாக வந்தது அவனுக்கு. பசிக்கு மட்டுமே சாப்பிடும் ஜந்துக்கள், ருசி தெரியுமா இதுகளுக்கு. தன் இள வயதில் இறந்து போன அம்மா நினைவில், அவனுக்கு கண்களில் தன்னிரக்கத்தால் நீர் வந்தது. ஏழு வயதில் ஒன்றும் சாப்பிடாமல் அடம் பிடித்ததும், அம்மா அவன் கேட்டான் என்பதற்காகவே கையளவு உளுந்தை அம்மியில் அரைத்து வடை தட்டித் தந்ததும் இரவு முழுதும் அவனை அரற்ற வைத்தன.

அவனுக்கு ஐம்பது வயது (சரி, 52)ஆகிவிட்டது இப்போது. இரட்டையராகப் பிறந்த பெண் குழந்தைகள்; அவர்கள் தாத்தா, பாட்டிகளின் வளர்ப்பு, வார்ப்பு. அவன் வைப்புத் தொகை இழந்த வேட்பாளன். பதினெட்டு வயதில் மாமனார் அன்ட் கோ அவர்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள்- ‘மாலையும் கழுத்துமா அவாளப் பாக்க வேண்டாமோ?’ என்ற டயலாக் வேறு. இந்த வாழ்வில் எல்லாம் அவனுக்குக் கிடைத்திருப்பதாக ஊரும், உறவும் சொல்லும் போதெல்லாம் அவன் உள்ளூரக் குமைவான். கேவலம் ஒரு வெங்காய சாம்பார் அவனுக்குக் கிடைக்கவில்லை, வயிற்றுக் கோளாறைச் சரி செய்யவும் முடியவில்லை, அதனால் துணிந்து வெளியிலும் சாப்பிட முடியவில்லை; என்னத்தைக் கொடுத்து வைத்திருக்கிறோம் எனத் தனியே நொந்து கொள்வான்.

அன்று வேலை பார்க்கும் இடத்தில் சிறு வாக்குவாதம். அவன் மூடே மாறிவிட்டது. ஏற்றாற் போல் ஸ்கூட்டரும் எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. அவனது மெக்கானிக் ‘நாளைக்குத்தான்’ என்று சொல்லிவிட்டார். பேருந்தில் வழிந்த கூட்டத்தைப் பார்த்த அவனுக்கு அதில் ஏறும் துணிச்சல் வரவில்லை. நடந்து போகத் தீர்மானித்தான். தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?வீடு, அலுவலகம்,கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகள், மனம் சரியாக இல்லாத நாள் பார்த்து மக்கர் செய்யும் ஸ்கூட்டர், பன்னிரண்டு வருஷப் பழக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பதிலளித்த மெக்கானிக்,அனுசரணை யா, கேலி யா எனப் புரியாத விதத்தில் பேசும் சுப்புணி. என்ன வாழ்க்கை உன் வாழ்க்கை என்று தன்னையே அவன் நொந்து கொண்டான்.

எப்போதாவது அவனுக்கு வரும் கோபம் போல வானம் திடீரென்று இருண்டது. சட சடவென்று பெரும் துளிகள் மேனியை அறைந்தன. மனிதர்கள் ஓடி கடை வாயில்களிலும், வீட்டுச் சார்புகளிலும் நின்று கொண்டனர். அவன் ஓடிச் சென்று நின்ற இடத்தில் ஒருவர் மேடையில் அமர்ந்து உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். நாற்காலிகள் காலியாக இருக்கவே அவன் சென்று அமர்ந்து கொண்டான்.

“வாசன இருக்கே, அது தான் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணம். நல்ல வாசன இருக்கே அது புண்யம் தரும், ஆனா, பொறப்லேந்து விடுதலயில்ல;கெட்ட வாசன, அதுவும் பொறப்லேந்து வெட்டி விட்றாது, ஈனமா நடக்க வச்சுடும். இன்னிக்கு மாரியே அன்னைக்கும் பேய் மழ. ஊழி முதல்வன் உருவம் போல மெய் கருத்து வானத்தையும், பூமியையும் மஹா சரடால அவன் நெய்யறான். இப்பத்த மாரி அப்ப வசதி கடையாது பாருங்கோ, ஊரே இருளோன்னு கிடக்கு. தக்ஷ நாகம் மாரி மின்னல் நெளிஞ்சு ஆட்றது. பீமனும், துரியோதனனும் கதையால அடிச்சுக்கற மாரி இடியான இடி. காளி ஊழிக்கூத்து ஆட்றா. அப்பப் பாருங்கோ, மச்சுல படுத்துண்டு இதையே பயமா, ஆர்வமா பாத்துண்டு ஒரு பொண்ணு. ரத்னாவளி, ரத்னாவளின்னு பேரு. அசட்டுத்தனமா அவர் ஏதும் பண்ணாதிருக்கணுமேன்னு அவ நெனைச்ச அடுத்த நொடி தடார்ன்னு ஒரு சத்தம். மாடி வரண்டாவுல ஒத்தன் குதிச்சுட்டான்; தக்ஷ மின்னல்ல தன் ஆத்துக்காரர்ன்னு அவளுக்குத் தெரிஞ்சுடுத்து. அது மட்டுமல்ல, அவர் இந்தக் கொட்ற மழல யமுனா ஆத்து வெள்ளத்ல நீந்தி தோட்ட மரத்ல தொங்கற ஏதோ ஒன்னப் புடிச்சுண்டு இப்படிக் குதிச்சிருக்கார்ன்னு தெரியறது.

மரத்ல ஏது கயிறுன்னு யோசிக்கறப்பவே ஜகஜ்ஜோதியா மின்னல் .ஒரு தடிமனான பாம்பு தொங்கிண்டிருந்தத பாத்தா ரத்னாவளி. ‘எங்கிட்ட இருக்ற மோகத்ல நூத்ல ஒரு பங்கு ராமர் கிட்ட இருந்தாத் தேறுவேளேன்னு அழுதா. சொன்னா,

“காம எஷ க்ரோத எஷ ரஜோகுண சமுத்பவ:

மஹாக்ஷணோ மஹா பாப்மா வித்யேனமிக வைரினம்.”

“ராம் போலா, கரும்புகை தீயைச் சூழும்; தூசியோ கண்ணாடிய மூடும். வாசனை மனுஷ மனசக் கெடுக்கும்”

அதுதான் அவருக்கான மந்த்ர உபதேசம். அவ கால்ல அப்படியே விழுந்தார். அப்றம் சன்யாசியாகி ‘ராம் சரித மானஸ்’ என்ற மஹா நூல எழுதின துளசிதாசரானார்.’

பால சங்கரனுக்கு ஒரு அதிர்வு ஏற்பட்டது. அரங்கில் ஆட்கள் கலைய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு விளக்காய் காவலாளி அணைத்துவர இவனுக்கு ஒவ்வொரு தீபமாய் ஒளி விட்டது. அருகில் வந்த அவர் ‘கிளம்பும் நேரம், சார்’ என்றார். வெளியில் வானம் கொட்டி முடித்து வைரங்கள் சிதறிக் கிடக்க பெரும் நெசவெனக் காட்சிப்பட்டது. இருளும், ஒளியுமாக கோயில் கோபுரம் உயர்ந்து நின்றிருந்தது.’ஓம்’ என்பது ‘ஆம்’ எனக் கேட்டது.அதே நேரம் தெருவோரக் கடைகளில் மழைக்கு இதமாக எண்ணெயில் பொரித்த மசால் வடை யும் பக்கோடாவும் அவன் நாசியை துளைத்தது.

நான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை

நான் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தேன். கடந்த சிலநாட்கள் போல ‘நான்’ என்றால் ‘நான்’ மாத்திரம் அல்ல. பூனையும், நாயும் மற்றும் நானும் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தோம். நடப்பதற்கு ஏதுவான காலநிலை, கருத்திருந்த வானம் சாரலை மட்டுமே அவ்வப்போது தெளித்துக்கொண்டு இருந்தது, முச்சூழ் மலையும் நேரடியாய் வானில் இருந்து இறங்கிய காற்றை நிலம் எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. எங்கே நடக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்கில்லை, நாயோ அங்கும் இங்கும் வெறித்தபடி வந்துகொண்டு இருந்தது. ஒருவேளை அதற்கு பிரக்ஞை இருக்கலாம். இப்போதெல்லாம் நாக்கு வெளிநீட்டி எச்சில் ஒழுக நான் அனுமதிப்பதில்லை, எனவே வாய் மூடியே இருந்தது, ஆயினும் மூச்சு பலமாக வாங்கிக்கொண்டு இருந்தது. இங்கே பூனையும் இருக்கிறது, சாலையில் வேகமாய் வாகனங்கள் சீறிப்பாய்வதால் பத்திரமாய் வந்துக்கொண்டு இருந்தது. நான் என்றுமே எதிரே வருபவரை கூர்மையாய் கவனிப்பதில்லை, கடந்து போகும் காட்சிகள் மட்டுமே. உயிரற்ற பொருட்கள் மட்டுமே என் கண்களில் நுழையும். அவையும் வெறும்குப்பைகளாக இல்லாமல், விலைமதிப்பற்ற பொருட்களின் மீது பதியுமாறு, இங்கே ஒரு பொருளின் மதிப்பு தீர்மானிக்கப்படுவது அது என்னிடம் இருக்கிறதா? என்பதனை பொறுத்தது. நாய் வித்தியாசமானது, அதன் கண்கள் எந்நேரமும் நாலாபக்கமும் சுழன்று கொண்டேவரும். ஆனால் காட்சிகள் நினைவில் நிற்காது. பூனைக்கு எதிலுமே நாட்டம் இல்லை. அதன் நடையை, ஆம் அதன் நடையை மாத்திரம் கவனிக்கிறது, தன்னை மட்டுமே ஆழமாக, எவ்வளவு ஆழம் என்றால் பள்ளிகொண்டவனின் தொப்புளில் நான்முகன் தோன்றிய தாமரைத்தண்டின் வேரினை காண விழைவதை போல. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் முதல்மாதிரி வைக்கிறது. உண்மையிலே ஒவ்வொரு அடிக்கும் ஒரே சீரான இடைவெளி இருக்கிறது. நாய் இந்நேரம் மாத்திரம், பூனையை போல சீராக நடக்கிறது. பூனை எதையும் உற்றுநோக்காது, இருப்பினும் பதிந்தவை என்றாகியும் தெளிவாய் கண்முன் விரியும். ஆக நான், நாய், பூனை சாலையில் நடந்துக்கொண்டிருந்தோம், வேகமாக, இன்னும் வேகமாக. ஏன் நடக்கிறோம் எனக்கு ‘அது’ உடனடியாக தேவைப்படுகிறது.

எதிரே, அகண்ட பெருவெளியில் சுழலும் பந்தின் ஒருசுழற்றியின் ஈடுக்கு இணையாய் வேகமாய் பருத்த, தோள் கடந்து தொங்கும் பெரும் கூந்தல்காரர் வந்தார். அதிகம் உயரம் இல்லை என்றாலும், குள்ளம் என குறைக்கூற முடியாது. அவரின் வேகத்திற்கு காரணமாக கரும்பரி அவரிடம் இருந்தது, கூடவே குள்ளநரி ஒன்றும். வந்தவரில் இருவர் எங்களை நோக்காது இருப்பினும், நரி கண்டுவிட்டது. என் பூனை ஒளிய முயற்சிக்க, நாய் அதற்கு முன்னே பேச்சை கொடுக்க எத்தனித்தது. நரியின் பார்வை நாயிடம் திரும்ப, பூனை ஒளிந்துக்கொள்ள தேவை ஏற்படவில்லை. எனக்கு எதிரே நின்றவரின் தோற்றம் பழைய கௌபாய் திரைப்படங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. நீலநிற ஜீன்ஸ் மிகவும் வெளிறி இன்னும் சிலதினங்களில் பழுப்பு நிறத்தை அடைந்துவிடும் போல, காலின் கரண்டை தொடும் பேண்டின் விளிம்பு நூல்பிரிந்து இருந்தது. கோடு போட்ட நீலமும் சிவப்பு வடிவம் சட்டையின் கசங்களை குறைத்துக்காட்டியது. அவரில் இருந்து எழும்பிய வியர்வை வாடை பூனைக்கு ஒவ்வாமையை கொடுத்தாலும், அதன் கண்கள் குதிரையை நோக்கியே இருந்தது. குதிரையோ இங்கே எதிரே நிற்பவர், எவரின் மீதும் பார்வையை திருப்பாது கர்வமாய் நின்றது. இன்னும் சிறிதுநேரம் இங்கே நிற்பதால் இழக்க ஏதுமில்லை என்ற எண்ணமே பூனையை நிற்க அனுமதித்தது. நாயோ எப்போது பேசலாம் என்பது போல வாயை திறந்ததால் , நானும் அமைதியாய் நின்றேன். என்னிடம் இருந்த நாயைப்போல அவரிடம் இருந்த, நரியும் ஆசைப்படுகிறது போல, அதுவும் முன்னங்காலை உயர்த்தி ஏதோ சமிக்கை கொடுத்தது. நாய்தான் அவரிடம் ‘அது’ இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது,

“டோப் இருக்கா அண்ணாச்சி”, நாய் எடுத்த எடுப்பிலே நேரடியாய் விஷயத்திற்கு வந்துவிட்டது. வெளிப்படையாக கேட்டதை குதிரையும் பூனையும் விரும்பவில்லை போலும், பூனை என் காலுக்கு இடையே குலைந்து, காலிடுக்கில் நெளிந்து என்னை அதன்பக்கம் இழுக்க, குதிரை வந்தவரை கனைத்து, முன்னங்கால்களை தூக்கி, மகாபலியின் தலையை ஒரு அடியில் மிதித்த குள்ளனின் பாத பதிஅதிர்வை பரப்பியது. அவரும் நானும் எங்களிடம் இருந்த இரண்டையும் ஓரம்கட்டி,

“டோப் இருக்கு அண்ணாச்சி, ஆளு லேகை தெரியு. அதுக்குன்னு பொசுக்குன்னு கேட்டுட்டிலே” என்றார்.

“மண்டகனம், பொறுக்கல. வெளியே ரவுன்சு வருவோம்னு வந்தேன். நீரு எதிர நிக்கேறு. சரி வந்தது வகை, எத்தன இழுப்புக்கு அயிட்டம் இருக்கு”

“பத்து, பதினஞ்சு இழுப்பு வரும். நாம உரிஞ்சத பொறுத்து. வச்சு இருபதும் இழுக்கலாம். ஆனா உம்ம இழுப்புக்கு அஞ்சு தாண்டுமானா சந்தேகம் தான்”

அவரின் குதிரை, ராமரின் அசுவமேத யாகத்தில் வருவது போல கர்வமாய் நின்றது. நரியும், நாயும் அசையாமல் நின்றது. பூனை, யாரின் விழிகளிலும் தன் உருவம் பதியாமல் என் காலிடுக்கில் நின்றிருந்தது. நாய் அங்கும் இங்கும் தலையை சிலுப்பி, ஓரமாய் இறங்கியிருந்த இந்தியாவின் நீண்ட கழிப்பறையை நோக்கி கண்களை செலுத்தவும், நரியும் அதனை உணர்ந்துகொண்டு எங்களை அங்கே செல்ல நிர்ப்பந்தித்தது. உள்ளே சென்றவுடன், தண்டவாளத்தின் மறுப்பக்கம் ஆற்றை நோக்கி இறங்கும் பாதையில் ஒற்றையாய் இருந்த வேம்பின் அடியில் அமர்ந்தோம். கருக்கள் நேரம் ஆகிவிட்டது, கூட காலநிலையும் சேர்ந்து வானம் இருட்டிக்கொண்டு இருந்தது.

இருவரும் எதிரெதிரே அமர, பேண்டின் மேல்பட்டை வழியே இடுப்பின் கீழே கைவிட்டு சிறிய பொதி ஒன்றை வெளியே எடுத்தார். அவரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்தார், நான் வேகமாக கீழே கிடந்த சிறுக்குச்சியை எடுத்து புகையிலை அனைத்தையும் வெளியே எடுத்தேன். அதற்குள் அவர், பொதியில் இருந்த இலைகளையும், விதைகளையும் உள்ளங்கையில் பெருவிரலால் அழுத்தி தேய்த்து கொடுத்தார், விதைகளை மட்டும் நீக்கி, இலைகளை தேய்த்து சிறுசிறு துகளாய் பின் அனைத்தையும் சேர்த்து பொடிபோல் ஆக்கிக்கொண்டார். நாயும் நரியும் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. பூனையும் குதிரையும் மட்டுமே அங்கிருக்கிறது. சிலநொடிகளில் கையில் இருந்தவற்றை சிகரெட்டில் நுழைத்து பற்றவைத்தார். பின் எனக்கும் கொடுத்தார். ஆளுக்கு ஒரு இழுப்பு வீதம் இழுத்துக்கொண்டே இருக்க, கால்கள் தரையில் மோதி, உந்தி என்னை அத்துவானவெளிக்கு அனுப்ப, என்னிடம் கனமாய் தொங்கிக்கொண்டிருந்த என் ஆன்மா நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த கூட்டை நொறுக்கி, என்னிடம் இருந்து எழும்பியது. கைகள் பலமாய் உணர, எதையும் பொருட்படுத்தாது என் உதடுகள் புன்னகையில் விரிந்தது. அதேவேளை என்னிடம் இருந்த பூனை ஒவ்வொரு இழுப்புக்கு உருவத்தில் பெரியதாக மாறிக்கொண்டு இருந்தது. மாறாக குதிரை உருவம் சிறுத்துக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் இரண்டும் ஒரே உருவத்தில் இருந்தது.

நான் “எங்கயோ போய்ட்டு இருந்தீரு. நான்தான் இங்க திருப்பிட்டேனோ”.

அவர் “எங்க போக. எங்க போனாலும் ஏத்தமும் இறக்கமும் உண்டுலா அண்ணாச்சி.”

“அது சரிதான், ஏறும்போது பைய போறோம், இறங்கும் போதும் ஓட்டமாலா இருக்கு. ஆனா கடைசி ஓட்டம் நின்னுதானே ஆகணும்”

“சரியா சொன்னீரு, ஆளு இளசுட்டேரே, உடம்புக்கு ஏதும் சோமில்லையா”

“அதுலாம் ஒன்னும் இல்லை” எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன் என் நிலை அவ்வளவு பரிதாபகரமான தோற்றத்திலா இருக்கிறது. நினைத்துக்கொண்டே தாடையில் கை வைக்க அது கழுத்தை தாண்டி முள்முள்ளாய் நீண்டு நிற்கும் தாடியை ஒதுக்கி கன்னத்தை தொட்டது, கடந்து போய்க்கொண்டே இருக்கிறேன். எல்லாமுமே, பகற்கனவு போல உறுத்தினாலும் என்னுடைய நிலைக்கு யாரும் பழியேற்க முடியாது. நானே வருத்தி ஏற்றுக்கொண்டது. ஆயினும் சிலகேள்விகள் நிலைகுலைய செய்யுமல்லவா,

“சாப்பாட்டுக்கே வழி இல்லையோ”

இக்கேள்வி மேலும் ஆத்திரத்தை பெருக்குகிறது. இருப்பினும் மென்மையாக பதில் அளித்தேன். காரணம் ‘அது’.

“சோத்துக்கு நிறைய வழி இருக்கு. டெய்லி நாராஜா கோயில்ல மதியம் சாப்பாடு. பஸ் ஸ்டாண்ட்ல ஒரு மணி நேரம் நின்னேனா நூறு ரூவா தேத்திரலாம்.”

ஆற்றங்கரையின் ஓரமாய் நின்ற தென்னம்பிள்ளைகள் காற்றில் அசைந்து இன்பமான ஒலியை பரப்பிக்கொண்டு இருந்தது. உள்ளே சென்ற ‘டோப்’ இறகை போல மனதை மெலிதாக்க, இனி நடப்பவை எல்லாம் எளிதாக முடியும் என்பது போலவிருந்தது. இந்த நாயும், பூனையும் சிலநாட்களாக என்னிடம் தொற்றிக்கொண்டது. வந்த புதிதில் யாரிடமும் இவை உங்கள் பார்வைக்குள் விழுகிறதா? எனக்கேட்க வசைகள் தான் பதிலாய் வந்தது. சரி, அவரோடு வந்த குதிரையும், நரியும் எனக்கு மட்டுமே தெரிந்திருக்கும், அவரே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

“வேற காரியம் என்ன” என்றார் வேம்பில் உடலை சாய்த்தபடி அவர், வேம்பின் அருகே பாறாங்கல் ஒன்று கிடந்தது. ஒருவன் தூக்குமளவுக்கு எடை இருக்கும். என் கண்கள் அதை சட்டென நோக்கியது. பின், மீண்டும் அவரிடம்,

“காரியம் ஒன்னும் இல்லவோய். சட்டுனு திரும்பாதையும். பின்ன ஆத்துக்கு அந்தப்புரம் பாரும். ஒரு கருத்த குண்டன், முறுக்கு மீசைக்காரன், எருமை கூட நிக்கானா”

அவர், தலையை திருப்பி ஆற்றின் மறுப்பக்கம் கண்களை சுழற்றினார். அங்கே எருமைக்கூட்டம் போய்க்கொண்டு இருந்தது. அருகே இவர் சொன்ன லேகையில் ஆள் யாரும் நிற்பதாய் தெரியவில்லை. ‘எவன் நின்னா நமக்கென்ன, இழுத்தாச்சு போவோம்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே,

“நாலஞ்சு எரும தான் நிக்கு அண்ணாச்சி, நா கிளம்புறேன்.இன்னொரு நாளைக்கி பாப்போம்” என்றார்.

“கொஞ்சம் இருவோய். சொல்லத கேளு.” ஆக, குண்டனும் எனக்கு மட்டுமே தெரிகிறார்கள்.

நான், பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவர் எழுந்து இங்கிருந்து நகர ஆரம்பித்தார். உருவத்தில் பெரிதான பூனை, புலி போல நின்றிருந்தது. சட்டென, உறுமி அவர் சட்டை காலரை பிடித்து கண்களால் அமரச்செய்தது. பூனை, இல்லையில்லை இப்போது புலி. தேவைப்படும் நேரம் மாத்திரம் காரியத்தை செய்யும்.

உடனே, ‘சல்ல எடவாடுகிட்டலா மாட்டிகிட்டேன்’ என எண்ணிக்கொண்டே எரிச்சலோடு அமர்ந்தார், ஆமாம் அவர் உதடுகள் முனங்குவது எனக்கு தெரிகிறது. ஆனால், இவரை இங்கே அமர்த்தியாக வேண்டும்

“நாலஞ்சு வாரம் இருக்கும், ஒரு நாலு ஆராம்பலி போயிருந்தேன். அங்க நம்ம கூட்டு உண்டு. தெக்கூறுல வடக்கால போனா ஒரு பெரிய குளம் வரும். பக்கத்துல பழைய இடுகாடு உண்டு. குளம் உமக்கு தெரியும், இடுகாடு தெரிய வாய்ப்பில்லை.” அமர்ந்திருந்தவர் என்னை கவனிக்கிறாரா என்பதை புலி அடிக்கடி உறுதிப்படுத்திக்கொண்டது.

“ஆராம்பலி பழைய நாஞ்சில் நாட்டு வாசலு அப்போ, அங்க ஒரு பிள்ளைமாரு திருவாங்கூருக்கு சிங்கி போட்டு, காவலுக்கு நிக்கேனு உத்தரவு வாங்கிருக்காரு. காவலுக்கு ஆள வச்சுக்கிட்டு, ராசட்ட இருந்து வாராத பாதி ஆட்டைய போட்டுட்டு மீதி காவக்காரனுக்கு போகும். ஆளுக்கு வயசு உண்டு, ரெண்டு மூணு பொண்டாட்டி. சாராயம் கீராயம் எந்த பழக்கமும் கிடையாது. ஆனா பாத்துக்கிடுங்க பிள்ளைக்கு அவருக்கு பொறவு வாரிசு இல்லை” சற்று அமைதியானேன். தூரத்தில் இன்னும் எருமையோடு குண்டன் நிற்பது தெரிந்தது.

“சரி உமக்கு கல்யாணம் ஆகலையே” அவரிடம் கேட்டேன்.

“யோவ், நா இப்போ உள்ள பயக்க சொல்லுகாம்ல நைன்டீஸ் கிட்டுனு. அத மாதிரி”

“அப்போ வயசு முப்பதா உமக்கு கத அடிக்காதையும்” என்றேன் சிரித்தபடி.

“இல்லவோய், அது நாப்பது ஆகு. இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்றேன்”

“சரி, கதையை பாதில விட்டுட்டேன். அவருக்கு பிள்ள இல்லையா. வயசு ஆகியும் அரிப்பு நிக்கல. அப்போ கிழக்கே இருந்து பஞ்சம் பிழைக்க இங்க ஆட்காரு வருவா. அதுல கிளி மாதிரி இருக்கிற பிள்ளைகள தூக்கிருவாரு. பிள்ளையும் இல்லை, அரிப்பும் நிக்கல. கண்டவள்ட்டயும் அவரு குட்டி வளரதுல பிடித்தக்குறவு. நல்ல ஓத்துட்டு வெளிய சொல்லலைனா விட்ருவாரு. இல்ல நா சொன்னமலா குளம், அதுக்கு மறுகரைல பொதச்சருவாரு”

“சண்டாள பாவியாலா இருக்கான், இந்த வெள்ளாள பயக்களே இப்படித்தான். நான்லாம் அரிப்பு எடுத்தா போய் கைல பிடிச்சுட்டு வந்துருவேன். கதம் கதம்” என்று மேலே கதை கேட்க ஆர்வமாய் இருந்தார். புலியும், அவரிடம் இருந்த குதிரை இல்லை சிறுத்துப்போய் இப்போது கழுதையும் அமைதியாய் நின்றது. நாயும் நரியும் எங்கு சென்றதோ இன்னும் காணவில்லை.

“அப்புறம் என்னாச்சு, ஆளு கொஞ்ச நாளுல மெலிஞ்சி போய், பொன்டாட்டிலாம் வேற யாருகூடயோ போய், ஒருநாள் அவரு வீட்டு பக்கமா போனவன் பொண நாத்தம் அடிக்க உள்ள போய் பாத்திருக்கான் ஆளு செத்து அஞ்சு ஆறு நாலு ஆயிருக்கும். இவரு சங்கதி ஊருக்கு தெரியுமே. பயக்க வீட்டோட சவத்தை போட்டு எரிச்சுட்டானுங்க. வீடு இப்போவும் பாக்கலாம் இடிஞ்சு போய் கிடக்கும்”

“ஆளுக்கு வந்தது எய்ட்ஸா இருக்கும். அப்போ உள்ள ஆட்காருக்கு இதுலாம் தெரியாதுலா. ”

“ஆமா, என்ன எழவோ. பின்ன அவரு செத்து கொஞ்ச நாலு கழிச்சு. இன்னொருத்தன் குளத்துக்கு மறுகரைல நிலம் வாங்கி மாங்கா போட்ருக்கான். எழவு அவ்வளவு கசப்பு மாங்கா, நாரு நாரா சவுரி மாங்கா. உரம் கிரம் போட்ருக்கான். ஒன்னும் எடுபடல. அப்புறம் மேற்கே ஒரு மந்திரவாதியை பிடிச்சு, சொக்கரான் எவனோ செய்வினை வச்சுட்டானான்னு பூச போட்ருக்கான். தோப்பு முழுக்க இசக்கி நிக்கா. எல்லாம் அந்த பிள்ளைமாரு ஓத்த பொம்பள. ”

“யோவ், இருட்டிட்டு வேற வருகு. நாம இருக்கிற இடமும் சரியில்ல. நீ வேற இசக்கி மயிறுனு பயம் காட்டாதவோய். ”

“மோண்டுராதா. நா சொன்னேன்ல நாலஞ்சு வாரதுக்கு முன்னாடி போனேன்னு. அப்போதான் ஒரு பய இந்த கதையை சொன்னான். அந்த பிள்ளைமாரு பணமா எதையும் சேக்கலையாம், எல்லாம் பவுனு. சாவதுக்கு முன்னாடி எங்கயோ பொதச்சருக்காரு. ”

“எல்லாத்தயுமா பொதச்சு வச்சுட்டாரா”

“ஆமா, நம்ம பய ஒருத்தன் சொல்லித்தான் நா அரிஞ்சது. ஆராம்பலி நம்ம ஜில்லாவுக்கே டோப்க்கு நடுசென்டரு, அங்கேர்ந்துதான் மொத்த சப்ளை. டோப் வாங்க போய் ரகசியம்லா கிடச்சருக்கு. ”

“அதுக்குன்னு வீட்லயும், குளத்துலயும், இடுக்காட்டுலயும் போய் தோண்டுவீரா. வேற வேலைய பாரும். நேரமாச்சு நா போனும்”

“இருக்கு, குலசேகரத்துல ஒரு மந்திரவாதியா பார்த்தேன். பவுனு இருக்கது இசக்கிக்கு தெரியும். அத சாந்திபடுத்தினா ரகசியம் தெரியும்”

“இந்த காலத்துலயும் நீரு இதுலாம் நம்புகீரே. இதுலாம் பிராடு, காச சீரழிக்காதேயும். மந்திரவாதி பயக்க இப்படித்தான் அலையான் ஊருக்குள்ள”

“அப்போ, இசக்கினு நா சொன்னதுக்கு எதுக்குவே அரண்டேயீரு. எல்லாம் நிசம், நாம கண்டுக்காம போற வர ஒன்னும் புரியாது. நின்னு கவனிச்சா எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும். நீ இருக்க வேப்பமரத்துலே ஒரு இசக்கி உண்டு. சின்னதுல இந்தப்பக்கம் ஒரு பய வெளிக்கி இருக்க வரமாட்டோம். நா அப்போவே சீம, ஒருநாள் வந்துட்டு அதுவும் கருக்கள் நேரத்துல, இங்க வெளிக்கி இருந்துட்டு போறேன். கொஞ்சம் நடந்திருப்பேன். ஓங்கி ஒரு அடி குறுக்குள்ள, எடுத்தேன் வீட்டுக்கு ஓட்டம். நமக்கு நடந்தா அது நிசம், அடுத்தவனுக்கு நடந்தா அது பிராடு. ” நான் சொல்லிமுடிப்பதற்குள் அவர் எழுந்துவிட்டார். அவர் முகத்தில் பயம் அப்பியிருந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு இன்னொரு பொட்டலத்தை வெளியே எடுத்தார். நான் எதிர்ப்பார்க்கவில்லை இன்னொரு டோப் பொட்டலம். நான் சிரிக்க, அவர் “நயிட்க்கு வச்சுருக்கேன். கிளாரா இருக்கு. சிரிக்காதையும் வாரும் இழுப்போம்”.

அவரே, எல்லாவற்றையும் செய்தார். அவரிடம் சிகரெட் இல்லை, கையில் இருந்த பீடியிலே முன்பு போல தேய்த்து சுருட்டி ஆளுக்கு இழுக்க ஆரம்பித்தோம். இப்போது கருத்த குண்டன் இன்னும் அருகே, அவர் தலைமாட்டில் நின்றிருந்தான். புலி முன்பக்க கால்களை நீட்டி பாய்வது போலவிருந்தது. கழுதை படுத்தேவிட்டது.

“ஏதோ மந்திரவாதி வழி இருக்குன்னு சொன்னானே, என்னது”

“இசக்கிய சாந்திபடுத்த நட்டசாம பூச பண்ணனும். இளங்கிடா, சேவலை அறுக்கனும். வேற மை ஒன்னும் கேட்டாரு”

“கண்ணுக்கு வைக்கிற மையா”

“இல்லையா, உமக்கு தெரியுமா. குடுகுடுப்பைக்காரன் பச்சைபிள்ளைக செத்தா நைட் சுடுகாட்டுல கிடையா கிடப்பான். எதுக்கு தெரியுமா. பொணம் எரிக்கும் போது, மெதுவா அதுக்க மூளையை மட்டும் எடுத்து வச்சுப்பான். அதுல செய்ற மைக்கு முன்னாடி பேய்க ஒன்னும் பிடுங்க முடியாது”

“சரி, இதுவும் அதே மாதிரி மையா”

“ஏறத்தாழ ஒரேமாரிதான். ஆனா, இவாளுக்கு சக்தி அதிகம், எல்லாமே மோசமான சாவு, தலைநசுங்கி, எரிச்சு கொன்றுக்காண் சண்டாளப்பய. சக்தி அதிகம். அதுக முன்னாடி நிக்கும் போது, நம்மள அடிச்சர கூடாது. அதுக்கு தான் மை தேவ, அப்புறம் தான் அதுக தேவைய கேட்டு செய்யமுடியும். இசக்கி அடிக்காம நிக்க கன்னி கழியாத ஆம்பள மை வேணும். அதுவும் அஞ்சு ஆம்பளையோடது வேணும்”

“அப்போ, நீரும் இனி சுடுகாட்டுலே கிடையா கிடக்க போறியா” என்று கூறியபடியே சிரித்தார்.

நான் எழுந்து நின்றேன். அவர் பார்வையை எங்கோ திருப்பி இருந்தார். நான் நகர்ந்து பாரங்கல்லுக்கு அருகே குனிந்தேன்.

“கன்னி கழியாத அஞ்சு பொணத்துக்கு எங்க போவீரு. வருஷம் ஆகும். அதுக்குள்ளே இசக்கியே போயிருவா”

நான் நிதானமாய் “இனி நாலுதான் தேவ” என்றபடி கல்லை அவர் தலையில் போட்டேன். புலியின் வாயில் கழுதையின் கழுத்து இருந்தது. எங்கோ சென்ற நாய், ஓநாய் போல திரும்பிவந்தது. அதன் வாய் சிவந்த இரத்தம் படிந்து இருந்தது. கருத்த குண்டனும் அங்கிருந்து நகர, தேவையான ‘அதை’ எடுத்துக்கொண்டு நானும், புலியும், ஓநாயும் சாலையில் ஏறி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். ஆம், இன்னும் வேகமாக, எனக்கு ‘அது’ வேண்டும்.

சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை

வீரபாகு முதலியார் குளித்து முடித்து கிணற்றங்கரையிலிருந்து இடுப்பில் ஈரத் துண்டோடு தோட்டத்துப் பக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். உள் நுழைந்தவுடன் ஒரு பெரிய கூடம் அளவுக்கு இருக்கும் அறையின்( அது அறை அல்ல. ஒரு பெரிய கூடம்தான். ஒரு மூலையில் மாட்டுத் தீவனம் மூட்டை;. ஒரு பக்கம் பெரிய வென்னீர்த்தவலை வைத்து விடுவது மாதிரி முக்கூட்டி அடுப்பு’ இன்னொரு மூலையில் பாத்திரங்கள் என்னவோ பறத்தினாற்போல வைக்கப்பட்டிருந்தது). மேலோரம் உயர்த்தி கட்டியிருக்கும் கொடியிலிருந்து நேற்றுத் தோய்த்துக் காயப் போட்டிருக்கும் வேட்டியை ஒரு கம்பினால் ஏதோ தொரட்டிக் கம்பினால் மாங்காய் பறிப்பது போல எடுத்தார். வெள்ளாவி வைத்தது போல, தும்பைப் பூப் போல வெண்ணிறமாக இருந்த வேட்டியை எடுத்து உதறி இடுப்பில் சுற்றிக் கொண்டு இடது கையை வேட்டிக்குள் நுழைத்து ஈரத் துண்டினை உருவி எடுத்தார். மீண்டும் கிணற்றடிக்குப் போய் பிழிந்து வைத்த வேட்டியோடு, இந்தத் துண்டினையும் ஒரு அலசு அலசி எடுத்து வந்தார். வேட்டியைக் கொசுவி மீண்டும் அதே கொடியில் பறித்த மாங்காயை வைப்பது போல கையில் இருந்த கழியினாலேயே விரித்து விரித்து காயப் போட்டார். கையை கொஞ்ச நேரம் உயர்த்தி வைத்துக் கொண்டே இருந்ததில் தோள்பட்டையும், மணிக்கட்டுப் பக்கமும் வலித்தது. தலையைத் தூக்கியே வைத்திருந்தது, மீண்டும் தலை அதன் இடைத்திற்கு வந்தவுடன் ஒரு மாதிரி கிர் ரென்று சுற்றியது. மெதுவாக சுவற்றைப் பிடித்தாவாறு அந்த பெரிய தொட்டிகிட்டைத் தாண்டி, நிலா முற்றத்தைத் தாண்டி, கூடத்திற்கு வந்தார்.

கூடத்திற்குள் அடியெடுத்து வைத்தார் அவர். வலது பக்கம் திரும்பி சுவாமி அலமாரி முன் நின்று, இரண்டு கைகளையும் தூக்கி ஒரு கும்பிடு போட்டு, கண் மூடி நின்றார். எண்பத்தைந்து வயதுக்கும் மூப்பு தெரியாத தேகக் கட்டு. விபூதிக் கப்பரையில் இருந்து விபூதி எடுத்து, பஞ்சபாத்திரத்திலிருந்து கொஞ்சம் நீர் விட்டுக் குழைத்து நெற்றியிலும், இரண்டு கைகளிலும், நெஞ்சின் குறுக்கேயும் பட்டைகளை போட்டுக் கொண்டார். ஆழி மழைக் கண்ணனாய் கறுத்த உடம்பில், காய்ந்தவுடன் விபூதிப் பட்டைகள் பளிச்செனத் தெரிந்தன.. இது மாலையில் அவர் முகம் கழுவுவது வரை அப்படியே இருக்கும். மூன்று தோப்புக்கரணம் போட்டார்; இரண்டு ஊதுபத்தியை எடுத்து ஏற்றி, ” ஐந்து கரத்தனை” சொல்லி முடிக்கும்போது ஊதுபத்தியை எல்லாப் படங்களையும் சுற்றி, ”ஓம்” என்று எழுதுவது போல் சுற்றி முடித்து ஊதுபத்தி ஸ்டேண்ட்டில் குத்தினார். இவர் போட்ட ஊதுபத்தி “ஓம்” வளையத்தில் அப்படியே மயிலோடு முருகன் வந்து நின்ற மாதிரி இருந்தது. ”துதிப்போர்க்கு வல்வினை போம்” என்று கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தார். அப்புறம், “ பால் நினைந்தூட்டும்” ஆரம்பிப்பார். அது முடித்து, “கலையாத கல்வியும்” தொடர்ந்தது.. அதைத் தொடர்ந்து “ ஒருமையுடன் உனது திருவடி நினைக்கினற உத்தமர் தன் உறவு வேண்டும்” எனத் தொடர்ந்தார். இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டே, ஏற்கனவே மருமகள் செங்கமலம் பறித்து வைத்திருந்த அரளி, செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களை ஒவ்வொரு படத்திற்கும் வைத்து முடித்தார். கடைசியில், நெருக்கித் தொடுத்திருக்கும், முல்லைச் சரத்தை எடுத்து, தங்க ஃப்ரேம் போட்ட சதுரத்திற்குள் மங்கலமாய்ச் சிரிக்கும் மங்கலட்சுமி படத்திற்குச் சாற்றினார். கண்ணில் நீர் துளிர்த்தது. “என்ன இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டேயேடி பாவி மனுஷி” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். அவ்வளவுதான், பூஜை முடிந்தது.

மாமனாரின் “ஒருமையுடன்” காதில் விழுந்தவுடனேயே செங்கமலம் சிற்றுண்டியைத் தயாராக கூடத்தில் இருக்கும் உணவு மேசையில் கொண்டு வைத்து விடுவாள். நாற்காலியை பின்னுக்கு இழுக்கும் சத்தம் வந்தவுடன், அவள் வந்து அவருக்குப் பரிமாறுவாள். மூன்று இட்டிலிகளோ, இரண்டு தோசைகளோ சாப்பிட்டு, தொண்டைக்கு இதமாக சின்னச் செம்பில் வென்னீர் குடித்து விட்டு, அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு, வெளித்திண்ணையில் வந்து இரண்டு பக்கமும், கையை நன்றாக ஊன்றிக் கொள்ள வசதியாக இருக்கும் மர நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வார். அவர் வந்து உட்கார்ந்தால் மணி 9.25.

முதலியார் திண்ணையில் வந்து உட்காருவார். செய்தித்தாளைப் பார்ப்பார். நடு நடுவே தலையை நிமிர்த்தி சாலையில் போவோர் வருவோரையும் பார்த்துக் கொள்வார். அவர்கள் வீடு, கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டி போகும் பிரதான சாலையில் உள்ளது. இரண்டு நகருங்களுக்குமிடையே வழி நெடுக அழகான பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள் நிறைந்த கிராமங்கள். வியாபாரிகள், நரிமேட்டு ஜோஸ்யர்களைப் பார்க்கச் செல்பவர்கள், பாலூர் பண்ணைக்கு விதையோ, மரக் கன்றுகளோ வாங்கச் செல்பவர்கள், காய்கறிகள் அப்படியே புதிதாகக் கிடைக்கிறதே என்று வாங்க வருபவர்கள், அலுவலகம் செல்பவர்கள், அக்கம் பக்கத்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் செல்லும் மாணவ மாணவிகள் என எப்போதும் சாலை சுறுசுறுப்பாகவே இருக்கும். அதனால், வீரபாகு முதலியாருக்கு நேரம் போவதே தெரியாது.

அன்று வீரபாகு முதலியார் திண்ணையில் வந்து அமர்ந்து நிமிரும்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஆணும், பெண்ணும் போனதைப் பார்த்தார். அந்தப் பெண், வழக்கமாக முன்னால் உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஆணின் தோளையோ, தொடையையோ பிடித்துக் கொள்ளவில்லை. என்னவோ, பேருந்தில் உட்கார்ந்து செல்பவள் மாதிரி, மடியில் கைப்பையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். தன் வீட்டு வாசலை அந்த வண்டி கடக்கும் அந்த ஒரு நிமிடத்தில் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவருக்குக் கண்கள் மலர்ந்தன. ”ஐயோ….அப்படியே மங்கா மாதிரியே இருக்கா” என்று நினைத்துக் கொண்டார். இன்னொரு தரம் பார்க்க மாட்டோமா என்று நினைக்கும்போது வண்டி அவர் வீட்டிலிருந்து ஐந்தாறு வீடுகள் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அதன் பின், முதலியாருக்கு செய்திகளில் மனம் செல்லவில்லை.

மங்கலட்சுமி போய்ச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஓடியே விட்டன. ”யாராரோ என்கேர்ந்தெல்லாமோ திருக்கடையூர் வந்து அறுபது, எண்பதும் செஞ்சிக்கிட்டுப் போறாங்க; இந்தா நம்ப இவ்வளவு கிட்ட இருந்துக்கிட்டு செஞ்சுக்காட்டா எப்படி” என்று சிதம்பரத்தில் இருக்கும் மச்சினிதான் எண்பதாம் கல்யாணம் செய்து கொள்ளத் தூண்டினாள். அறுபதாம் கல்யாணம் செய்து கொண்டார்கள்தான். அப்போது அலுவலக நண்பர்கள் தூண்டுதலினால் செய்து கொண்டார். அவருக்கென்னவோ அதிலெல்லாம் ரொம்ப ஈடுபாடு இல்லை. மங்காதான் எல்லாத்துக்கும் ஆசைப்படுவாள் அவளுக்கு எப்போதும் குழந்தைகள் மாதிரி மகிழ்ச்சிதான். தன்னிடம் அவள் அதிகமாகக் கோபப் பட்டது கூட இல்லை. தான் எது சொன்னாலும் முதலில் ஒப்புக் கொள்வாள். அதில் அவளுக்கு வேறு யோசனை இருந்தால் அதைப் பக்குவமாக, அப்புறம்தான் சொல்வாள். அவளுக்கு எதுவும் தெரியாத மாதிரி இருக்கும். ஆனால், அவள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். அது மாதிரி, மனுஷாளுடன் பழக அவளை மதிரி முடியாது. வாசலில் வரும் பூக்காரியிடமும் சரி, அக்கம் பக்கம் வீடுகளிலும் சரி, தன் வீட்டு சொந்தம், அவள் வீட்டு சொந்தமாகட்டும், நண்பர்களாகட்டும் யாருடனும் அவளுக்குப் பகையில்லை. எப்பப் பார்த்தாலும் “மனுஷா வேணும் காலத்துக்கும். பணம் வரும், போகும், மனுஷாள் கிடைப்பாங்களா”: என்று சொல்லிக் கொண்டே .யிருப்பாள் அது மாதிரி எந்த விசேஷங்களூக்கு யார் வீட்டுக்குப் போனாலும் சரி, உடனே, அது என்னவோ தன் வீட்டு விசேஷம் மாதிரி ஒன்றி விடுவாள். அவளே பந்தி பரிமாறுவாள். அவர்கள் வீட்டுக்கு என்ன உறவு முறையோ அதை வைத்தே இவளும் அவர்களை விளிப்பாள். அந்தக் குடும்பத்தினர் யாரும் இவளை மறக்க முடியாதபடிச் செய்து விடுவாள்.

தான் கூட அவள் என்னவோ அதீதமாக நடந்து கொள்கிறாளோ எனப் பலமுறை நினைத்ததுண்டு. ஆனால். அவள் இறந்து போய், கடந்து விட்ட இந்த ஐந்து வருஷத்தில், யார் வீட்டு விசேஷங்களூக்குப் போனாலும், அவர்கள் மங்காவை ஞாபகப்படுத்துவது இருக்கட்டும், இவருக்கே மங்கா இல்லாத அந்த விசேஷ வீடு வெறிச் சென இருப்பது மாதிரி இருக்கும்.

நாற்காலியில் உட்கார்ந்தபடியே இப்படி யோசனைகளில் மூழ்கிப் போனவரின் கண்ணோரம் கசிந்திருந்தது. வாசலில் எரிவாயு உருளை கொண்டு வருபவர்களின் வண்டிச் சத்தமும், உருளைகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டும், உருண்டு கொண்டும் வருகிற ஓசையும், “சார்…கேஸ்” என்ற குரலும்தான் அவரது நினைவுகளை அறுத்தன. வீட்டினுள்ளே திரும்பிப் பார்த்தார். அதற்குள் மருமகளே கையில் பதிவேட்டுப் புத்தகத்துடன் வந்து விட்டாள். உருளையை உருட்டி உள்ளே வைத்து விட்டு அதை வைத்தவன் வெளியேறிப் போனான். வீரபாகுவும் எழுந்து உள்ளே சென்றார். தன்னுடைய அறையில் போய் ஈசிசேரில் சாய்ந்து கொண்டார். அங்கும் மங்கா புகைப்படத்தில் சிரித்தாள். என்னவோ, இன்று காலை, அந்த இருசக்கர வாகனத்தில் கடந்து போன அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்காவின் நினைவு அதிகமாகத் தோன்றுகிறது. மருமகளுக்கு வேலைகள் ஆகி விட்டன போலும். தொலைக்காட்சியில் அவள் தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டாள். மகன் சாப்பிட வர இரண்டு மணி ஆகும்.

மங்காவுக்கும் தனக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். ஏதோ தூரத்து சொந்தம். வீரபாகுவுக்கு இரண்டு அக்காக்கள் மூன்று தங்கைகள். எல்லோர்க்கும் இவர் செல்ல சகோதரன். பாலூரில் தாத்தா பார்த்திருந்த விதைப்பாடு கொஞ்சமும், ஒரு வீடும் இருந்தது. அப்பா, பாலூர் காய்கறிப் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இரண்டு அக்காவுக்கும், ஒரு தங்கைக்கும் திருமணம் முடித்த பிறகு இறந்து போனார். மற்ற இரண்டு தங்கைகளின் திருமணத்தை இவர்தான் செய்து முடித்தார். அப்பா இறந்துபோனவுடன், இவருக்கும் அந்தப் பண்ணையிலேயே வேலை கிடைத்தது. வயதும் முப்பத்தந்தை நெருங்கியது. அப்போதுதான் பெரிய அக்கா மூலமாக கடலூர் கரும்புப்பண்ணையில் வேலை பார்க்கும் தண்டபாணி என்வருக்கு பெண் இருக்கும் விஷயம் தெரிய வந்தது. மங்காவின் கரம் பிடித்தார். பாலூர் வாசம். வந்த கொஞ்ச நாட்களிலேயே மங்கா இந்த வீட்டு நடைமுறைகளைத் தெரிந்து கொண்டதோடு, வயல், விதைப்பாடு பற்றியும் தெரிந்து கொண்டாள். பண்ணை அலுவலக வேலைகளோடு, வீரபாகுவும் வீட்டு விதைப்பாடு வேலைகளையும் கவனித்துக் கொண்டார். மங்கா வந்த நேரமோ என்னவோ, தொட்டதெல்லாம் துலங்கிற்று. கொய்யா போட்டாலும், நிலக்கடலை போட்டாலும், மிளகாய் போட்டாலும் எல்லாம் நல்ல விளைச்சல் கொடுத்தன. மங்கா பக்குவமாக சொந்தக் காரர்களுக்கும் அள்ளிக் கொடுத்தாள். தன் குடும்பத்துக்கும் லாபம் வருவது மாதிரி பொருட்களை நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்தாள்.

தெருவில் யாரோ மாடு விரட்டிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது. வளையல் விற்பவர் “ கண்ணாடி வளையல்” “கண்ணாடி வளையல்” என்று விட்டு விட்டு ராகமாகச் சொல்லியபடியே தள்ளு வண்டியை உருட்டும் சத்தம் கேட்டது. கண்ணை மூடிக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்த வீரபாகு கண்ணைத் திறந்து பார்த்தார். கடிகாரம் சரியாக பனிரெண்டு மணியைக் காட்டியது. கடிகாரத்தின், “சிக்’ “சிக்” என்ற சத்தம் மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மருமகள் செங்கமலம் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு சமையற்கட்டுக்குப் போயிருப்பாள் போல. அருகிலிருக்கும் மேசை மீதிருந்த செம்பிலிருந்து அதன் மூடி விலக்கி, பக்கதிலிருந்த தம்ளரில் விட்டுத் தண்ணீர் குடித்தார்.

மூடி வைத்து விட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்துத்தான் வெற்றிவேல் பிறந்தான். அதற்குள் எத்தனை பேச்சுகள், சந்தேகங்கள். எல்லாவற்றையும் மங்கா சகித்துக் கொண்டாள். தான் தளர்ந்த போது கூட “எப்பவும் நல்லதையே நினைங்க..நடக்கும், நடக்கும்னு நாம்ப நினைக்க நினைக்கத்தான் நல்லது நடக்கும். நம்ப எண்ணங்களுக்கு அப்பிடி ஒரு வலிமை இருக்கு தெரியுமா” அப்படினு சமாதானப்படுத்துவா. அவ எவ்ள நல்லவ. எதிலுமே அவளுக்குக் குத்தம் கண்டுபிடிக்கத் தெரியாது. யாரையும் கெட்டவங்கனு அவ ஒரு நாளும் சொன்னது கிடையாது. யார் என்ன சொன்னாலும்” ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி” அப்படினு சொல்லிடுவா. மீண்டும் வீரபாகு முதலியாருக்கு ரொம்ப அழுகையாக வந்தது. “ஏண்டி….மங்கா…என்ன விட்டுட்டுப் போன” என்று மனதிற்குள் நினைத்து கண்ணீர் சொரிந்தார். குளிச்சிட்டு வந்த ஈரம் காயறதுக்குள்ள காபியக் குடிச்சுட்டு, ஊஞ்சல்ல உட்கார்ந்தவ அப்படியே போயிட்டியே…மகராசி….ஒரு வார்த்தை என்கிட்ட பேசலையே…. ஈசி சேரில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

காலையில் அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்கா நினைவு அதிகமாக வருகிறது. அவள் முகம் அப்படியே மங்கா முகம் மாதிரியே இருந்தது. அவள் எங்கிருந்து எங்கு போகிறாள்? மீண்டும் இந்த வழி வருவாளா? அப்படியே அங்கு தங்குபவளா? இல்லாவிட்டால், நெல்லிக்குப்பம் வழியாக மீண்டும் கடலூர் சென்று விடுவாளா? மீண்டும் அவளைப் பார்த்தால் நன்றாக இருக்கும்.

வெற்றிவேல் பிறந்தபோது இங்கு பாலூரிலேயே இருந்தோம். அவனைப் படிக்க வைக்க வேண்டும் எனும்போது, கடலூர்தான் சரிப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மஞ்சக்குப்பத்தில் வீடு பார்த்து, மங்காவும், வெற்றிவேலும் அங்கிருப்பது என்றும், தான் மட்டும் வாரத்திற்கு இருமுறை கடலூர் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மங்கா புளிக் குழம்பு, பொடிகள், இட்டிலி மாவு எல்லாம் செய்து தருவாள். வீரபாகு பாலூருக்கும், கடலூருக்கும் அலைந்து கொண்டிருந்தார். வெற்றிவேல் நன்றாகப் படித்தான். அவன் விவசாயம் சார்ந்தே வளர்ந்ததால் அதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றான். முடித்து விட்டு வந்தவுடன் அவன் கிராமத்திலிருந்து விவசாயம் பார்க்கப் போவதாக தீர்மானமாகச் சொல்லி விட்டான். படித்த படிப்பையும், அனுபவத்தையும் இணைத்தான். விவசாயம் பெருக்கினான். உரக்கடை வைத்தான். திருமாணிக்குழியிலிருந்து திருவதிகை வரை விதைப்பாடு வைத்திருக்கும் அத்தனை ரெட்டியார்களும் இவனிடம் வந்து ஆலோசனை கேட்டார்கள். செழித்தார்கள். வீரபாகுவுக்கும், மங்கலட்சுமிக்கும் அளவிட முடியாத சந்தோஷம். அவனுக்கு புவனகிரியிலிருந்து பெண் எடுத்தார்கள். அவர்களுக்குத் தங்களைப் போல தாமதமாகாமல் திருமணம் முடிந்த அடுத்த வருடமே ராஜா பிறந்தான். இப்போது அவன் சென்னையில் கல்லூரியில் படிக்கிறான்.

வீரபாகு எழுந்து தோட்டத்துப் பக்கம் போய் சிறுநீர் கழித்து வந்தார். சமையற்கட்டைத் தாண்டும்போது செங்கமலம் அப்பளம் பொரிக்கும் வாசனை வந்தது. இப்போது செங்கமலம் இவரைச் சாப்பிடக் கூப்பிடுவாள். வெற்றிக்கு அவன் வரும் வரை தானும் காத்துக் கொண்டிருந்தால் கோபம் வரும்.” ஏம்ப்பா சாப்பிடாம இருக்கீங்க. நான் வர முன்னப்பின்ன ஆகும். நீங்க அது வரயிலும் சாப்பிடாம இருக்க முடியுமா” என்று கேட்பான். செங்கமலத்திடம் அப்பாவிற்கு வேளையோடு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். அதனால், வீரபாகு, தான் மட்டும் முன்னாலேயே சாப்பிட்டு விடுவார். சாப்பிட்டு, மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாரானால், ஒரு தூக்கம் போடுவார். அப்புறம் நாலு மணி வாக்கில்தான் எழுந்திருப்பார். அதிகம் பேசவே மாட்டார்.

அன்று மதிய உறக்கத்திலும் கனவு வந்தது. மங்காதான். பைக்கில் இருவரும் உல்லாசமாக பாலூரிலிருந்து கடலூர் கடற்கரை வரை போகிறார்கள். கடற்கரையில் மணலில் அம்ர்கிறார்கள். மங்கா அலையில் கால் நனைக்க வேண்டும் என்று அழைக்கிறாள். இவருக்கோ அது பிடிக்காது. பிடிக்காது என்றால் கால் எல்லாம் நனைந்து, மீண்டும் மணல் ஒட்டிக் கொள்ளுமே என என்னவோ ஒரு விருப்பமின்மை. மங்கா குழந்தை மாதிரி புடவையை முட்டி வரை தூக்கிக் கொண்டு அலையில் நிற்கிறாள். மொத்தப் பல்லும் தெரியும்படி சிரித்தபடியே களிக்கிறாள். மீண்டும் கரைக்கு வந்து தன்னோடு ஒட்டி உட்கார்ந்து கொண்டு, பேசுகிறாள். என்ன சொல்கிறாள்?

’ இப்டியே நம்ப ரெண்டு பேரும் கடசி வரக்கும் சந்தோசமா இருக்கணும்.நீங்க என் கூடவே இருக்கணும்ங்க கடசி வரைக்கும்.”

“சீ…என்ன பேச்சு இது. நம்ப ரெண்டு பேரும் ஜாலியா பைக்குல பீச்சுக்கு வந்திருக்கோம். என்ன பேசற நீ? அவள் கையைப் பிடித்துக் கொண்டார். மல்லிகைப் பூ விற்கும் சிறுமி ஒருத்தி பக்கத்தில் வந்தாள். அவளிடம் இரண்டு முழம் தேவணாம்பட்டினம் மல்லி வாங்கிக் கொடுத்தார். அப்பா…என்ன மணம்….மூச்சை இழுத்தார். மல்லிகை வாசனை. அடித்தது. கண்ணை விழித்துப் பார்த்தார். வாசலில் செங்கமலம் பூ வாங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. வெற்றி வந்து சாப்பிட்டுச் சென்று விட்டான் போல. மணியை பார்த்தார். 4 30 என்று காட்டியது. எழுந்து, தோட்டத்துப் பக்கம் போய் வந்தார். செங்கமலம் தேநீரும், ஒரு தட்டில் கொஞ்சம் ஓமப் பொடியும் கொண்டு வந்து வைத்தாள். சாப்பிட்டு, காலையில் படிக்க விட்ட செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வாசலில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். மாலை நேர சம்சா, பஜ்ஜி வியாபாரங்கள், பூக்காரிகள், பள்ளி விட்டு பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக வீடு திரும்பும் மாணவர்கள்.

ஹா….காலையில் பண்ருட்டி போன அந்தப் பெண்…அதோ…அவர்கள் வண்டி வந்து விட்டது. அவள் முக தரிசனம்…ஒரு விநாடி இருக்குமா..ஒரு நிமிஷம் இருக்குமா…பளிச்….மின்னல் போல மறைந்து போனாள். மனசுக்குள் உற்சாகம் பெருக்கெடுத்து வந்தது. கொஞ்ச நேரம் நடக்கலாம் போல இருந்தது. மெல்ல கடை வீதி வரை நடந்து விட்டுத் திரும்பினார். அன்று நல்ல உறக்கம் வந்தது.

மறு நாள்…… இன்று அவள் வருவாளா எனக் காத்திருக்க ஆரம்பித்தார். சரியாக 9 30க்கு வாசலில் வந்து அமர்ந்தார். அவள் வந்தாள். மாலையும் அவள் திரும்பினாள். ஒரு நிமிட தரிசனம்தான்.மனசெல்லாம் பொங்கியது. இரண்டு மாதங்களாக வீரபாகு உற்சாகத்தில் மிதந்தார். செங்கமலம், வெற்றிவேலிடம் ஒரு நாள் சொன்னாள் .” மாமா இப்ப ரெண்டு மாசமா ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி இருக்கு. நல்ல சாப்புடறாங்க” .

வீரபாகுவுக்குக் காலையில் ஒன்பது மணியாகி விட்டால், இப்போது அவள் சுந்தரவாண்டி தாண்டியிருப்பாளா, வானமாதேவி வந்திருப்பாளா, என்று மனசு அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மாலையிலோ திருவதிகை தாண்டியிருப்பாளா, நரிமேடு வந்திருப்பாளா, எழுமெடு வந்திருப்பாளா என் மனம் தவிக்க ஆரம்பித்தது. அந்த ஒரு நிமிட தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்க ஆரம்பித்தார். மழை வரும் மாதிரி இருந்த ஒரு நாளில், அடடா…அவள் நனையாமல் இருக்க வேண்டுமே என கவலைப்பட்டார். மாலையில் மழை வந்து விட்டால், அவர்கள் நம் வீட்டுத் திண்ணையில் ஒதுங்க நேர்ந்தால், அவர்களுக்கு செங்கமலத்தை காபி தரச் சொல்ல வேண்டும். அவள் முகத்தை அருகிருந்து பார்க்க வேண்டும்.

இரண்டு மாதமாக போகும்போதும், வரும்போதும் பார்க்கிறாரே தவிர அவளைப்பார்த்து ஒரு புன்னகை கூடப் பூத்தது கிடையாது. ஆனால், அந்தச் சனிக்கிழமை மாலை அவள் தன் வீட்டைக் கடக்கும்போது அவளைப் பார்த்து சிரித்தார். அவளும் சிரித்துக் கையசைத்தாள். அவருக்கு மனசெல்லாம் சந்தோஷம் பொங்கிப் பிரவகித்தது.

அன்று இரவு மகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவளைப் பற்றிச் சொன்னார். அவர்கள் அலுவலகம் செல்பவர்கள்தான் என்றும், எனவே ஞாயிறு வர மாட்டார்கள் எனவும், திங்கள் கிழமை மாலை அவர்கள் தங்கள் வீட்டைக் கடக்கும்போது அவர்களை நிறுத்தி, கொய்யாப் பழமும், கடலைக்காயும் தர வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்.

ஞாயிறு காலை செய்தித்தாள் பார்த்த பிறகு, தன் அறையில் போய் ஈசி சேரில் சாய்ந்து கொண்டவர் கண்ணை மூடியிருந்தார். ஒரு முறை மங்கலட்சுமியின் படத்தை கண் விழித்துப் பார்த்தார். மங்கலட்சுமி, நேற்று அவள் கையசைத்தது போல் அசைத்த மாதிரி இருந்தது. செங்கமலம், மாமனார் சாப்பிட உள்ளே வரவில்லையே எனப் பார்த்தாள். அவர் அறையில் போய் கூப்பிட்டு வரச் சென்றாள்.

திங்கள் கிழமை அவனும். அவளும் வந்து கொண்டிருந்தார்கள். பாலூர் கடை வீதியில் பெரிய தட்டி வைத்திருந்தது. அவள் பார்த்தாள். அதில் வீரபாகு பட்டை பட்டையாக திருநீறு பூசிய வடிவில் சிரித்திருந்தார். ” ஐயோ…இந்தப் பெரியவரா? “ சனிக்கிழமை கூட பார்த்தோமே” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். கடைவீதி தாண்டி, வீரபாகு வீடு நெருங்கும்போது, போடப்பட்டிருந்த ஷாமியானாவும், கிடந்த நீல நாற்காலிகளும், மரண வீட்டின் லட்சணங்களைச் சொன்னது. ஒரு கறுப்பு நாய் குறுக்கே வந்தது. வண்டியின் ஒலிப்பான் சத்தம் கேட்டு திண்ணையில் நீர்மாலைக்கு மண்குடம் தூக்கி நின்றிருந்த வெற்றிவேல் பார்வையைத் திருப்பினான். அதில் உட்கார்ந்திருந்த பெண் அவன் அம்மா மங்கலட்சுமியின் சாயலில் இருந்தாள்.

அது வரை அழாமல் இறுக்கமாய் இருந்தவன் அழ ஆரம்பித்தான்.