சிறுகதை

கடுவா – இவான்கார்த்திக் சிறுகதை

ஒன்று :

“எவ்ளோ டோஸ் கொடுக்கலாம் இப்போதைக்கு” என்றான் சிபு

“வயசாச்சு , கொறச்சு குடுக்கதுதான் நல்லது , சைட் எஃபெக்ட்ஸ் நிறைய இருக்கும். ஆனா இது இல்லாம அவரால தூங்க முடியாது” என்றார் டாக்டர்

டாக்டர் முடிப்பதற்குள் சிபு “ராத்திரல எந்திரிச்சு கத்துராரு என்னல்லாமோ சத்தம் கேக்குது அந்த ரூமுக்குள்ள. நாலு வயசுல பொண்ணு இருக்கா. எங்கயையாவதுகொண்டு போய் விடவும் முடியல வச்சுக்கவும் முடியல”

“அவரோட உலகம் அது , அதுக்குள்ள உங்களுக்கு இடமில்ல” என்றவாறு தன் பெட்டியுள் இருந்த மருந்தை ஊசியினுள் ஏற்றிக்கொண்டிருந்தான்.

“அவரு வந்த அன்னிக்கு நைட் எம்பொண்ணு தாத்தா கத்துறாறுண்ணு பாக்க போயிருக்கா ,  நாங்க தூங்கிட்டோம் அவ கத்துற சத்தம் கேட்டுதா நாங்க ஓடிப்போய் பாத்தோம். கதவிடுக்குல அவரோட பின்பக்கம் மட்டும்தா தெரிஞ்சிது , அப்படியே நாலு கால்ல ஊந்து போறாரு. அப்பா நெஞ்சுல கைவச்சிட்டு நின்னுட்டிருந்தாரு. அவரோட மொகத்துல ஒரு பயம் இருந்துச்சு. அம்மா முட்ட வரும் போது பயந்துட்டே பால் குடிக்க போகுற கண்ணுக்குட்டி மாதிரி” என்று எங்கோ பார்த்து நினைவு படுத்திச்சொன்னான், நினைவு வந்தவனாய் “கதவுக்கு பக்கத்துல பொண்ணு மயங்கி கெடந்தா. கதவ மூடிட்டு அவள எழுப்புனா பீஸ்ட்..பீஸ்ட்னு கண்ண மூடிக்கிட்டா. அதுக்கப்பறம் அவ அந்தப்பக்கம் போறதேயில்ல” அவன் முகம் சிவந்து அதிகமாக பேசிவிட்டோமோ என்பது போன்றிருந்தது.

“காலைல எப்படி இருக்காரு. எதாவது அம்னாரமலிட்டி தெரியுதா” என்றார் டாக்டர்.

“அவர் எப்போவுமே நார்மலா இருந்தது கிடையாது. அவர அப்பா ஐயான்னு கூப்டுவாரு. சாகும் போது அப்பாக்கு தொண்ணூறு வயசு. எப்படியும் இவருக்கு ஒரு நூத்திபத்து வயசுக்கு மேல இருக்கும். இவர வந்து விட்டுட்டு அவரு போய் சேந்துட்டாரு” என்று சங்கடமாக சிரித்தான் “ஆனா பாத்தா வயசு தெரியாது பிசிக்கலி ஹீ ஸ் ஸ்ட்ராங்க். என்னால இப்போகூட தூக்கமுடியாத வெயிட்ட அவரால தூக்க முடியுங்குற மாதிரி இருக்கும். என்ன கேட்டிங்க….ஐயம் ஜஸ்ட் டைவர்ட்டிங் த டாப்பிக்”

“இல்ல பகல்ல எப்படி பிஹேவ் பண்றாரு”

“அது நார்மல்னு சொல்லலாம் , ரூம் விட்டு வெளிய வந்ததில்ல. எதவாது தேவண்ணா இருமுவாறு நம்ம கிட்ட போய் நிண்ணோம்னா தேவையானத கேப்பாரு. அவருக்கு கொஞ்சம் ஹார்மோன் பிராப்ளம் இருக்கும்னு நினைக்குறேன். அவரோட வாய்ஸ் கீச்சுக்கொரல்ல நல்ல ஜானிகி கொழந்தைங்க ஸ்டைல்ல பாடுற மாதிரி கேக்கும். ஒரு செயர் மேசை மாதிரிதா அவரொட இருப்பும் இருக்கும் இந்த விட்டுல. பட் நைட்ல உங்களால இமாஜின் பண்ணி பாக்கக்கூட முடியாது அவ்ளோ சத்தம். அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர் அதிகமா கேட்டது செயிண்ட் தாமஸ் மவுண்ட்கு போகாணும்னு திரும்ப திரும்ப “அங்க அங்க அங்க” அப்டின்னு சுட்டிக்காட்டுனதுதான். ரொம்ப கம்மியாதா சாபிட்டாரு. ஒரு குருவிக்கு அது பத்துமானு கேட்ட இல்லனுதா சொல்ல தோணும்” என்று சோபாவில் அமர்ந்தவாறே தலையை மட்டும் திருப்பி அந்த அறையை திரும்பிப்பார்த்தான்.

அந்த அறை சலனமற்றிருந்தது. அவர் அந்த நாற்காலியில் ஜன்னலின் வழியே தெரிந்த செயின்ட் தாமஸ் குன்றை பார்த்துக்கொண்டு மேல் சட்டையில்லாமல் அமர்ந்திருந்தார். பழுப்பேறிய வெள்ளை வேட்டி காற்றில் ஆடியது. கைகள் எரிந்த பழுத்த மரத்தின் கட்டைகள் போலிருந்தன. அடித்தால் நாம் இரண்டாக பிளந்து விடுவது போலிருந்தது. நரைபிடித்த தலை. தாடியுடன் நெஞ்சும் பஞ்சடைந்திருந்தது. உணர்கொம்புகள் போல மீசை சிலிர்த்துக்கொண்டிருந்தது. அவர் உடலே பொன்னிறத்திலிருந்தது. இவர்கள் இருவரும் பேசியதை அவர் கேட்டது போல தெரியவில்லை. அவர்கள் இருப்பதையே உணராததுபோல தோன்றியது.

விமானம் பறக்கும் சத்தம் மிக அருகாமையில் கேட்டது. சிபு சோபாவில் திரும்பி உட்காரவும் அதன் ஸ்பிரிங் கிரீச்சிட்டது.

டாக்டர் அந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டார். “அடிக்கடி இப்படி போகும் பக்கத்துல தான் ஏர்ப்போர்ட்” என்றான் சிபு.

எதிரே இருந்த டாகடர் “உங்க அப்பா அவர பத்தி எதும் சொல்லலையா”

“தெளிவா அவரும் எதும் சொல்லல , உங்களுக்கு அவலாஞ்சி தெரியும்ல.. ஊட்டிக்கு பக்கத்துல..நிறைய படம் கூட எடுத்துருக்காங்க அங்க. அந்த டாம் ரொம்ப ஃபேமஸ். நாங்க கூட அப்பா சொன்னதுக்கு அப்புறம் அங்க போயிருக்கோம். எங்க விட்டேன்” என்று சிபு டாக்டரிடம் கேட்டான். அவர் பதில் சொல்வதற்கு முன்பே “ஆ…அது நம்ம காமராஜர் டைம்ல கட்டுனது அதுக்கு முன்னாடி அங்க ஒண்ணும் கிடையாது வெறும் காடுனு அப்பா சொல்லிருக்காரு நமக்கு அத பத்திலா ஐடியாயில்ல. அங்கதா இவரு இருந்ததா அப்பா சொன்னாரு. அங்க மனுசங்க யாரும் இல்லன்னுதா ஃபாரஸ்ட் ரிப்போர்ட் சொல்லுது ஆனா ஒரு நாள் அப்பா நைட்டு பவர் ஸ்டெசன்ல எதொ ஓவர் லோட்னு பாக்க போய்ட்டு திரும்ப வரும் போது இவரு ஜீப் போற பாதைல மயங்கி விழுந்துருக்காரு. ரிசர்வ் ஃபாரஸ்ட்ல இருக்கக்கூடாதுன்னு ஊட்டிக்கு அனுப்பிடாங்க எதோ மடத்துல இருந்தாருண்ணு நெனைக்குறேன்” டாக்டர் அமைதியாக கேட்டார்.

“அதுக்கப்பறம் அப்பா அவர ஊட்டிக்கு போய் அடிக்கடி போய் பாத்துட்டு வருவாறு. திடீர்னு ஒரு நாள் இவர கூட்டிடு வந்து இங்க வச்சிட்டாரு”

டாக்டர் எழுந்து அவர் அமர்ந்திருந்த அறைக்குள் சென்றார். அந்த சலனம் அவரை எதும் செய்யவில்லை. அவர் கண்கள் விலங்கின் கண்களைபோல கருவிழி ஒற்றைக்கோடென சுற்றி பழுப்பேறிக்கிடந்தது போல டாக்டருக்கு தோன்றியது. அவரின் கையில் பஞ்சைவைத்து தடவி ஊசியை நுழைத்தார். அவர் திரும்பிப்பார்க்கவில்லை எந்தவொரு அதிருப்தியையும் தெரிவிக்கவில்லை. அறையின் மூலையில் சிலம்பம் போன்ற கம்பொன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் அதை கவனித்து பின் அறையிலிருந்து வெளியே வந்தார்.

“பாத்தீங்களா நீங்க போனது கூட அவருக்கு தெரியல” என்று ரூமுக்குள் எட்டிப்பார்த்தான் சிபு.

“பகல் அவருக்கு ஒரு ஆழ்ந்த காத்திருப்பு மாதிரி தெரியுது எதையோ எதிர்பார்த்து. என்னோட தொடுகை கூட அவருக்குள்ள போன மாதிரி தெரியல.  நா முன்னாடியே சொன்ன மாதிரி அவரோட உலகுத்துல நாம இல்ல சொல்லப்போன நம்மள அவர் அனுமதிக்கல” என்று அவர் முன்பிருந்த அதேயிடத்தில் அமர்ந்தார்.

“சரிதான்…ஆனா அப்பாவ ராத்திரல கூட அவரு அனுமதிச்சாரு. அப்போவும் சத்தம் வரும். மொத்தமா எட்டு நாள்தா இவரு வீட்டுக்கு வந்ததும் அப்பா இங்க இருந்தாரு. திடீர்னு இறந்துட்டாரு. நாங்க யாருமே அப்பாடியாகும்னு நினைக்கல.”

“அப்போ அவரு இங்க வந்தே பத்து நாள்தா ஆகுது”

“ஆமா” என்றான் சிபு

“இன்னிக்கு நைட் நல்லா தூங்குவாரு , ஒரு டோஸ் எக்ஸ்ட்ராவாதா கொடுத்திருக்கேன். என்ன மாதிரி சத்தம் வரும் ?”

“அது தெளிவா சொல்ல முடியாது , ஒரு உறுமல்…வலில வர முனங்கல்…பூன அழுகுற மாதிரி அப்புறம் யாரோ ஓடுற மாதிரி சம்டைம்ஸ் செவத்துல ஓடுற மாதிரிகூட கேக்கும். அப்பா இருக்குறவர நாங்க அத கண்டுக்கல அவராச்சு அந்த ஆளாச்சுன்னு விட்டுட்டோம். அவரு மெண்டலி இல்னு ஃபீல் பண்றீங்களா ? என்று கேட்டு அவர் பதில் சொல்லும் முன்பு “எங்களுக்கு அப்படிதான் தோணுது. இவர் யாரு எங்கருந்து அப்பா கூட்டிடு வந்தாங்க எதும் தெரியாது. ஹோம்ல சேக்கனும்ணா யாரு என்னனு கேக்குறாங்க. ஒண்ணும் புரியல நீங்க என்ன நினைக்குறீங்க. அப்பா இருக்கும் போதே கேட்டோம் ஆனா அவரு அதுக்கு சம்மதிக்கல.” பேசுவதை நிறுத்தி , டாக்டரை உற்றுப்பார்த்து தன் அந்தரங்கத்தைக்கூறுவதை தவிர்க்கமுடியாமல் சோபாவில் மாறி அமர்ந்தான் அது மீண்டும் கிரீச்சிட்டத்து. “அப்பாக்கு அவர எங்கயும் கொண்டு போய் சேக்கிறது புடிக்கல அத நேரடியாவே சொல்லிட்டாரு” அவன் அதை பேச விரும்பாதது போலிருந்தது. சொல்லவந்ததை சொல்லமல் அப்படியே விட்டுவிட்டு தலைக்கும்மேல் சுத்திக்கொண்டிருந்த ஃபேனைப்பார்த்துக்கொண்டிருந்தார்

“அப்பா சாகும்போது அவர் எப்படி பிஹேவ் பண்ணாரு” என்று சம்பந்தமில்லாமல் கேட்டார்.

“அவர் அந்த ரூம விட்டு வரவேயில்ல” என்றுகூறி பதற்றத்துடன் “அப்பா மேல உள்ள மரியாதைக்காவாச்சும் வெளிய வந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சி இந்த ஆள இவ்ளொ நாள் அப்பாதான் நல்லா பாத்துக்கிட்டு இருந்திருக்காரு. அந்த நன்றிக்காவது வந்திருக்கலாம். காசு பெரிய விசயம் இல்ல ஆனா பொணத்த கூட பாக்கலன்னா எப்படி” என்றவன் சட்டென உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டான். பின் அவரைப்பார்த்து சிரித்தான். அது அவன் தன்னை பற்றி வெளிக்காட்டியதற்கு வருத்தப்படுவதைப்போலிருந்தது.

“உங்க பொண்ணு என்ன சொன்னங்க. கொஞ்சம் டீட்டெய்லா சொல்றீங்களா. அவரோட ட்ரீட்மெண்ட் ப்ரொசிஜர் அத வச்சுதா நான் தொடங்கனும். நா அவரோட இன்னிக்கு தங்குனா உங்களுக்கு எதும் பிரச்சன இல்லைல” என்றார் டாக்டர்

“இல்ல நீங்க தங்கலாம். ஆனா எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. எம்பொண்ணு சொன்னத வச்சு பாத்தா டேஞ்சர்னு கூட தோணுது”

“இல்ல நீங்க மறைக்குறீங்க. முதல் விசயம் உங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர நீங்க பழைய எடத்துக்கு கொண்டு போய்ருக்கலாம். இல்லனா எதாவது பண்ணிருக்கலாம் அது முடியாதுன்னு சும்மா எண்ட சமாளிக்குறீங்க. ஆனா ஏன் அவர சரி பண்ணனும் எதுக்கு அவர பாத்துக்கணும்னு நீங்க தெளிவா சொல்லல. இரண்டாவது உங்க பொண்ணு உள்ள என்ன பாத்தாங்க அத நீங்க தெளிவா சொல்லியே ஆகணும். இல்லனா என்னால ட்ரீட்மெண்ட் கண்டினுயூ பண்ண முடியாது மன்னிச்சிருங்க” என்றார் டாக்டர்

சிபு கைகளை பிணைந்துகொண்டே இருந்தான். நிர்வாணாமாய் நிற்பதைப்போல நெளிந்தான். கால்களை மாற்றி இடது கால் மேல் வலது கால் போடு அமர்ந்தான். பின்பு கைகளை விரித்து பெருமூச்சு விட்டான்.

“அவரு எங்க குல தெய்வம் , அவர நாங்க பத்தரமா பாத்துகணும். நேரம் வரப்போ அவரே போய்ருவாரு. எல்லா வெள்ளியும்  ஒரு கெடா வெட்டி பலி கொடுக்க சொன்னாரு” என்று அவரின் முகத்தைப்பார்ர்காமல் தன் கால் நகங்களில் இருந்த அழுக்கையே பார்த்துக்கொண்டு சொன்னான்.

“இத நீங்க நம்புறீங்களா?” என்றார் டாக்டர்

“நம்பல ஆனா அது எங்கப்பாவோட ஆச , அத என்னால முழுக்க மறுக்க முடியல. ஆனா ஒரு வேள அப்பா இவர நல்லா பாத்துக்கணும்னு எங்ககிட்ட பொய் சொல்லிருக்காரோனு சந்தேகம் இருக்கு.”

“கண்டிப்பா அது பொய்தா. அவ்ளோ பெரிய அந்த்ரொபாலஜிஸ்ட். கடவுள் சாமினு நம்பி உங்கள்ட சொன்னாருன்னு என்னால யோசிக்க முடியல” என்றார் டாக்டர்

“நா நம்பல” என்று முனங்கினான் சிபு. அவன் கண்கள் சிவந்திருந்தன.

“உங்க பொண்ணு பாத்தது”

“அவ எதும் பாக்கல , ஞாபகம் இல்லனு சொல்லிட்டா” என்றான் சிபு

“நீங்க சொல்லாம என்னால எதையும் ஆர்ம்பிக்க முடியாது”

சிபு அமைதியாக இருந்தான். ஐயா இருந்த அறையை எட்டிப்பார்த்தான்.
ஐயா அந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் நினைவில் உள்ளது. கனவுகளை நாமே தொகுத்துக்கொண்டு அது உண்மையா இல்லை பொய்யா  என்று தெரியாமல் கூறுவது போன்று  யோசித்துக்கொண்டிருந்தான். அது அவனுக்கு அந்த நேரத்தில் அந்த சம்பவத்தின் மொத்த உண்மையையும் உணர்த்தியது  போலிருந்தது.

“எங்க அப்பா மேல தேவயில்லாத எந்த ஒரு கருத்தும் மீடியால வரது எனக்கு புடிக்கல அவரோட மேதைமைய வச்சிதா இந்த உலகம் அவர பாக்காணும். முட்டாள்தனத்த வச்சியில்ல. நா இந்த விசயத்த சேர் பண்றதே அவரோட ரெபுடேஷன் சொசைட்டில கொறைய கூடாதுன்னுதா. உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன்” என்றான் சிபு

“நீங்க என்ன நம்பாலாம்” என்று டாக்டர் அவன் நட்பார்ந்த முறையில் சிரித்தார்

“நீங்க அவள கேட்குறதுதா நல்லாருக்கும். புவனா….” என்றான் சிபு

அந்த பெரிய வீட்டில் அவனது சத்தம் எதிரொலித்தது. மாடிப்படியிலிருந்து புவனா மெதுவாக இறங்கிவந்து சிபுவின் மடியில் அமர்ந்தாள். வெளியாட்கள் இருக்கும் போது அவளின் சுதந்திரங்கள் அனைத்தும் கட்டிவைக்கப்படும். தன்னை எல்லா சுவரின் மூலைகளும் கண்காணிப்பதைப்போல உணர்வாள். டாக்டரையும் சிபுவையும் திரும்ப திரும்ப பார்தவள் சிபுவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு டாக்டரைப்பார்ப்பதை தவிர்ப்பதைபோல  நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அது எப்பொழுதுமே வெம்மையுடன் பாதுகாப்பை அவளுக்கு அளிக்கும்.

“அன்னைக்கீ ஐயா ரூம்ல…பாப்பா என்னம்மா பாத்துச்சி….மாமாட்ட அத சொல்றியா…..” என்று அவளின் நாடியைப்பிடுத்து தூக்கியவாறு அவளின் கண்களைப்பார்த்து டாக்டரைகாட்டி கேட்டான். ஒவ்வொருவாக்கியத்திற்கும் இடைவெளிவிட்டு இழுத்து பேசினான்.

கதை சொல்வதென்பது அவளை சகஜ நிலைக்கு கொண்டுவரும் என்பதை சிபு அறிவான். அவள் சொல்ல ஆரம்ப்பித்தாள் “நா போகும்போ கதவு பூட்டிருந்தா…கதவுல்ல ஒரு கண்ணிருக்கும்ல அதுக்குள்ள பாத்தா நல்ல கோல்ட் கலர் டைகர்ப்பா ரெண்டுபேர் படுத்தா எப்டியிருக்கும் அந்தமாரி நீளம் வால ஆட்டி ஆட்டி நடக்குது….” என்று கண்கள் விரிய கைகளை ஆட்டி பின் அவன் மடியில் இருந்து இறங்கி நடித்து காட்டினாள் “மொதல்ல எனக்கு வாலுதா தெரிஞ்சிச்சி….உள்ள இருட்டு கதவுகண்ணுல என் கண்ண வச்சு பாத்தேனா….மொதல்ல வாலு ரெண்டாவது நல்லா நீள வயிறு அதுல பிலாக் கலர்ல கோடு கோடா இருந்துச்சி….தாத்தா கையில கம்ப வச்சிட்டு நின்னாரா…புலி போய் அவரு காலுக்கிட்ட போச்சா….தாத்தா கம்ப ஆட்டுனாரா….புலி ஓடிச்சா….தாத்தா கம்ப கீழ போட்டாரா….அப்புறம் அது வந்து என்ன பாத்து சிரிச்சிச்சா…நானும் சிரிச்சனா….அதுக்கு வாய்லாம் செவப்பா இருந்துச்சிப்பா….அது கிட்ட வந்துச்சா….எனக்கு அதுக்க பல்ல பாத்தத்தும் பயந்து பயந்து வந்துச்சா….அப்றம் பாப்பா துங்கிட்டா….” என்று மறுபடியும் சிபுவின் மடியில் போய் அமர்ந்துகொண்டாள்

“சோ , உங்க பொண்ணு உள்ள பாத்தது புலி வேசம் போட்ட அந்த ஐயா.” என்றார் டாக்டர்

“ஆமா , ஆனா மனுசனால புலி வேசம்தா போட முடியும் புலியாக முடியாது” என்றான் சிபு

“வேசமில்லப்பா….புலி….” என்று அவள் கைகளை குவித்து நகங்களை காண்பித்தாள். கூடவே உறுமினாள். பறவை கிரீச்சிடுவது போலிருந்தது.

“ஆமா , அவரு புலியாவே ஆகிற்றாரு. அதும் நம்ம கண்ணு முன்னாலயே. நம்ம அந்த வித்தியாசத்த பாக்கலாம். இப்போ சாதரணமா இருக்காரு ஆனா அந்த வேசத்த அவரே போட்டு முடிக்குற நிலைக்கு வந்ததும். அந்த புலி அவருக்குள்ள முழுசா வந்திருது. நீங்க சொன்னமாரி அந்த நேரத்துலதா அவரு சுவத்துல கூட ஓடுறாரு” என்றார் டாக்டர்.

சிபு அமைதியாக இருந்தான்.

டாக்டர் தொடர்ந்தார் “இது சிப்ம்பிள் , நீங்க சொல்றபடி பார்த்தா இவரு ஒரு ஆதிவாசி. மலைலைருந்துதா உங்க அப்பாவே கூட்டிட்டு வந்துருக்காரு. அவரு ஒரு  பழங்குடி மதத்த கண்டிப்பா ஃபாலோ பண்ணிருக்கணும். அந்த மதத்தோட தெய்வம் அல்லது அந்த இனத்தோட குலக்குறி புலியா இருந்திருக்கும். சாதரணமாவே அவங்க அந்த குலக்குறியோட சந்ததியாதா தங்கள நினச்சுக்குவாங்க. சொல்லப்போனா அவங்க புலிக்கு பொறந்தவங்கனு கூட நம்புறாங்க. அத ஒரு பலி நாள்ல வெளிக் கொண்டுவந்து அந்த தெய்வம் இருக்கிறதா அவங்களோட ஆழ்மனசு காட்டும். இத கார்ல் யுங் ரொம்ப விரிவாவே பேசிருக்காரு. ஒரு மாசம் நீங்க கன்சல்டிங்க்கு அனுப்புனீங்கன்னா அவர பூரணமா குணப்படுத்திரலாம்.”

“அவர குணப்படுத்தனும் வைஃப் பயப்படுறாங்க. ஆனா அப்பா அத விரும்பல. ஈவன் நானும் அத விரும்பல.” என்று பேச நினைத்தவன் நிறுத்தினான். “நீங்க இங்க இன்னிக்கு இருங்க நம்ம நாளைக்கு பேசுவோம். அவரோட் ரூம் கதவு உள்ள லாக்ல இருக்காது. நீங்க ராத்திரி போய்க்கோங்க நாங்க யாரும் வர்ல” என்று அவருக்கான அறையைக்காட்டி மாடிக்கு செல்வதற்கு முன் ஐயாவின் அறையை மூடிவிட்டிருந்தான்.

“அப்பா….புலிய கொண்டு போய்ருவாங்களா” என்றாள் புவனா.

ஐயா இருந்த அறையிலிருந்து முனங்கல் சத்தம் கேட்கவும் டாக்டர் அந்த அறைக்கு சென்றார். அறையின் கதவு சிபு சொன்னது போல தாழிடப்படவில்லை. அறைக்குள் வனமிருகத்தின் வாடை அடித்தது . அறையின் இருளில் ஒலியை மட்டும் உணர்ந்தவராய் உள்ளே நுழைந்தார். விழிக்கு ஒளி பழக பொன்னுருகி ஓடும் உடலில் கருநாகங்களேன வரிகளுடன் ஓர் புலி அவரின் முன் உறுமியபடியே முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தது. அதனைச்சுற்றி ஈக்கள் மொய்த்திருந்தன , அவற்றின் ரீங்காரம் அறையில் நிறைந்திருந்தது. உடம்பிலிருந்த வண்ணப்பூச்சு வழிந்து தரையில் மஞ்சள் தடங்களாயிருந்தன. கைகளாலேயே பூசப்பட்டிருந்ததால் உடம்பில் ஆங்காங்கே திட்டுகளாயிருந்தது.

அதன் கால்கள் நீட்டி மடங்க , கண்கள் சிவந்திருந்தன. தலையை தரையில் தாழ்த்தி முகர்ந்தது. வயிறு ஒட்டி எலும்புகள் தெரிந்தன. உணர்கொம்புகளை சிலுப்பி விட்டு நாவால் அதன் கருத்த மூக்கை நக்கியது. நடப்பது போலல்லாமல் ஒரு புறமிருந்து மறுபுறம் தாவிக்கொண்டிருந்தது. பின்னங்கால்களை அழுத்தி திடீரென்று டாக்டரை நோக்கி பாய்ந்தது. அவர் அருகில் இருந்த் கம்பை எடுக்கவும் அது தன் எல்லைக்குள் போய் நின்று கொண்டது ஆனால் அது அடங்கவில்லை உறுமிக்கொண்டேயிருந்தது. அவர் கம்பை முன்னும் பின்னும் ஆட்ட அது கம்பை முன்னங்காலால் தட்டிவிட முயன்றது.

“யார் நீ” என்றார் டாக்டர்

“கடுவா…” என்றது பின் “ஊணு ஊணு” என்று உறுமியது

கையில் வைத்திருந்த ஆட்டின் தொடைக்கறியை அதன் பக்கமாக எறிந்தார்.

“இன்ணும் இன்ணும்” என்றது கடுவா

“காட்டுக்கு கொண்டு போய்விடுகேன் வறியா” என்றார் டாக்டர்

“காட்டுக்கு போணும் காட்டுக்கு போணும்”

“போகலாம்”

“அது யாரு” என்று பத்மநாபனின் போட்டோவை சுட்டிக்காட்டி கேட்டான்.

அதன் முகம் மலர்ந்தது. முகத்தில் பதிந்திருந்த ரத்தத்தை நாவால் நக்கியவாறு தும்மியது.

“கடுவா கொண்டாடி”

இரண்டு :

அப்பாவை நெருங்கி அறிந்துகொள்ள அவரது ஆய்வு புத்தகங்களே போதுமானவை என்று அவரது இறப்புச்சடங்குகளின் பொழுது அவரது சக ஆய்வாளர்கள் கூடி பேசுவதை சிபு கேட்டிருந்தான். ஆனால் அவை அவனுக்கு தேவையில்லாத பழைய அழுக்கடைந்த தலையணைகளை நினைவுறுத்தும். அவனால் வாசிக்க முடிந்தது அவரது நாட்குறிப்புகள் மட்டுமே. இரண்டு நாட்களாக அதனை வாசித்துக்கொண்டிருக்கிறான். அவை அப்பாவை ஆமை முதுகின் ஓடு போன்று அவர் பிறப்பிலிருந்து தன் கூடவே வைத்தும் அவன் அறியாத அவரின் வாழ்க்கையை காட்டியது. அந்த குறிப்பு புத்தகத்தின் முன்அட்டையில் தெளிவாக தெரியாத ஒரு புலியின் திறந்த சிவந்த வாயின் உருவம் அனைத்து பற்களும் தெரிய அப்பா வரைந்திருந்தார். முன் கோரைப்பற்கள் மட்டும் தெளிவாக தெரிய அதில் ரத்தம் அடர் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. வாயின் உள்ளே ஒருவன் நிர்வாணமாக வாயின் ஒரு புறம் தலை கைகளுடனும் மறுபுறம் கால்களும் தொங்க கிடந்தான்.

1.

வெளியே மழைபெய்துகொண்டிக்கிறது. மென் சாரல் நான் தங்கியிருக்கும் அறையின் இடது நோக்கி சரிவாக பெய்து கொண்டிருக்கிறது. அவை நிலத்தை அடைவதேயில்லை. ஒதுங்கி நிற்கும் வரை சாரல் மழையின் வீரியம் தெரியாது. நனைய ஆரம்பித்தால் ஒரு நிமிடத்திற்குள் முழுவுடலும் நனைந்துவிடும்.

மழைக்காலம் என்பது ஒரு முடிவில்லா என்ணங்களைப்போன்றது. சில நேரங்களில் மென்மையான சாரல் , சில நேரங்களில் அடித்து செவிடாக்கும் இடியுடன் நீள் துளி மழை. ஆனால் அவை ஓய்வதேயில்லை. நான் காடுகளை தேர்ந்தெடுத்தது என் உலகியல் பணிக்காக அல்ல , என் ஆத்மார்த்த  உள்ளொளிப்பணிக்காக. மனிதன் எப்படி தன் பண்பாடுகளை உருவாக்கிக்கொண்டான் , தெய்வங்கள் அவனை எப்படி ஆட்கொண்டன , அதன் சடங்குகள் எப்படி உருவாகின ,  அவை எப்படி அலைந்து திரிந்த அவனை ஒரு சமூகமாக உருமாற்றி ஒரு தங்கி வாழும் மனிதனாக்கியது , இதில் தெய்வங்கள் பெரும் பங்காற்றுகின்றன இதுவே என் கேள்விகள். நான் அதன் இப்போதைய கடைசி துளி. என் குருதியில் ஓடும் அந்த பழந்தெய்வங்கள் எவை அதன் ஊற்றேடுக்கும் இருதயம் எது. அது இங்கெங்கோ இந்த காட்டில் இலைகழுக்கடியில் கண்காணா சுனையில். ஆழ நதியில். மறைந்துள்ளது. அதை தரிசித்து அதன் வழி நான் தொடங்க நினைக்கிறேன்.

பத்மநாபன்.

2.

நேற்றிரவு நாங்கள் தங்கியிருக்கும் அறைகளின் பின் புறம் உள்ள சரிவில் புலி ஒன்று சாவகாசமாக அமர்ந்து மழைக்கு காத்திருக்கும் கரிய வானத்தை நோக்கி கொட்டாவி விட்டக்கொண்டிருந்த பொழுது ,  நான் என் பின் முற்ற அறையில் புகைத்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து அதனை சரியாக பார்க்க முடியும் ஆனால் அதன் பார்வையில் நானில்லை. அதன் வாய் சிவந்திருந்தது. சில பற்கள் உடைந்திருந்தன. அதன் கண்களுக்கு கீழிருந்த சதை தொங்கிக்கொண்டிருந்தது. வயிறு எலும்புகள் தெரிய ஒட்டியிருந்தது. ஒரு வயதான் புலி. அது கர்ஜிக்கவும் எதிர் பக்கமிருந்த சோலை மலைகளில் இருந்து எதிரொலித்தது. அந்த ஒலிக்கு , கையிலிருந்த சிகெரெட் கீழேவிழ நான் பதறி கதவில் போய் விழுந்து விட்டேன். ஆச்சரியம் புலி என்னைபார்த்து சிரித்தது. புன்னகையல்ல நல்ல வாய்விட்ட சிரிப்பு. அதன் சிரிப்பு சத்தத்தை கூட நான் கேட்ட உணர்வு. அதற்குள் நான் இருமுறை பாசி ஈரத்தில் வழுக்கி விழுந்து அறைக்குள் சென்றிருந்தேன். அதன் நீண்ட நெடிய வால் செல்வதை நான் கடைசியாக பார்த்தேன். பின் அந்த பொன்னிறம் மட்டுமே நினைவிலிருந்தது.

3.

நான் பார்த்த புலியை எங்களுடன் வேலை செய்யும் ஓடையன் அவர்களின் தெய்வம் என்றான். அவனது மொழி தமிழ் போலில்லை சில இடங்களில் குழைந்து பின் இறுகியது. அது அனைவருக்கும் இவ்வளவு அருகாமையில் கண்களில் படுவதில்லை , அது சிரிப்பதென்பது தன் பூசாரியைக்கண்டு கொள்ளும் தருணம் என்றான் ஓடையன். என்னை பார்த்து ஏன் அது சிரிக்க வேண்டும் நான் தான் பூசாரியா ? சுத்த கிறுக்குத்தனம். நாய்கள் கூட சிலசமயம் மூச்சு வாங்கும் பொழுது நமக்கு சிரிப்பது போல தோன்றும். இதுவும் அதே போலத்தான். ஆனால் அந்த சிரிப்பு அவ்வளவு மனிதத்தன்மையுடன் இருந்ததே. ஆம் அது சிரித்தது. அவ்வளவு அரவணைப்புடன்.

4.

அந்த புலியை பின் காடுகளில் தேடி நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடையன் சொல்லியது போல அது நமக்கு அருள் கொடுக்கும் சமயம் மட்டுமே கண்முன் வரும் போல. நேற்று அதனை நான் என் கனவில் கண்டதாலேயே இதனை எழுதுகிறேன். திசைகள் தெரியாத அடர்ந்த காட்டில் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை யாரும் துரத்துவது போல தெரியவில்லை. அதனை உணர்ந்திருந்தும் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். பசுந்தழைகளில் உள்ள ஈரமானது என் உடல் முழுவதையும் நனைத்திருந்தது. உதிர்ந்த இலைகள் நீரில் விழுந்து அதன் அழுகும் மணம் புத்துணர்வைக்கொடுத்தது. எதிரே போவதிற்கில்லாத பெரிய காங்கிரீட் சுவர் , அதன் பின் எங்கும் செல்வதற்கில்லை என்ற பொழுது புலி மெதுவாக உடல் குலுங்க அடிவைத்து , உணர்கொம்புகள் சிலிர்க்க என்முன் வந்து நின்று கனத்த மூச்சுக்காற்றுகளை விட்டுக்கொண்டிருந்தது. திடீரென்று அது  என் மேல் பாய்ந்து வந்த தருணத்தில் எங்கிருந்தோ கிடைத்த ஒரு கம்பைக்கொண்டு நான் அதனை அடிக்க முயன்றேன். பின் அது தன் எல்லைக்குள் மீண்டும் போய் நின்று மூச்சு விட்டது. என்னை சுற்றி சுற்றி வந்து வாலை சுழற்றி பின் கால் மாத்தி மாத்தி வைத்து தலையை சுழற்றியது , கோரப்பல்லைக்காட்டி , நாக்கை மடித்து சீறியது. நான் கம்பைக்கொண்டு அதனை கட்டுப்படுத்தினேன். பின்பு அது என் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து சிரித்தது. அதே மனிதச்சிரிப்பு. நான் கம்பை வைத்துவிட்டு அதனை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன்.

5.

இப்பொழுது அந்தக்கடுவா என் அறைக்கு தினமும் வருகிறது. என்னுடன் அமர்ந்து கதைகள் பேசுகின்றது. நான் அதன் நண்பன் என்று கூற முடியவில்லை ஆனால் அது பேசுவது அன்பின் வெளிபாடாகவே இருக்கின்றது. அதனுடன்  என்னுறவை விளக்க முடியவில்லை. ஒரு தந்தையின் இடத்தில் நான் அதனை சில நொடிகள் உணர்கிறேன். இந்த இடத்திற்கு ஒவ்வாததொரு அந்நியனின் இருப்பாக சில நொடி. அதன் கண்களில் அத்தனை கருணை.

இருவரும் நடனமாடுவோம். சில சமயம் இருவரும் பச்சைகறியை உண்போம். என் சக அலுவலக நண்பர்களை என் அறைக்குள் நான் அனுமதிப்பதில்லை. நான் கண்டடைந்த , என்னை கண்டடைந்த அந்தக்கடுவா இந்த நிலத்தில் இருக்க தகுதியற்றதாக அவர்கள் கூறி அதனை விரட்ட வேண்டும் எங்கின்றனர். யார் தகுதியற்றவர் கடுவா நீயே சொல்…ஆனால் கடுவா என்னருகில் இருக்கையில் என்னிடம் எப்பொழும் கம்பிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அதனை என் நிலையில் வைக்க எனக்கு அந்த கம்பு அவசியமாகிறது. நான் அதனை இங்கிருந்து விரட்ட அதை வைத்துக்கொள்ளவில்லையே. அது என் பாதுகாப்புக்கானது மட்டுமே என்பதை நீயே அறிவாய்…

6.

நான் இருக்கும் விடுதியறை மக்கள் நடமாட்டமில்லாத தெருவின் ஓரத்தில் இருக்கின்றது. இங்கு என் தெய்வத்தை நான் சாந்தி படுத்தி வைக்க முயல்கிறேன். காட்டில் அதற்கு இடமில்லையாம். அது மனிதர்கள் நடமாடகூடாத காடாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. மூடர்களே அது தெய்வங்களின் நிலமென நீங்கள் அறியவில்லையா. மனிதர்களில்லா இடத்தில் தெய்வங்கள் சஞ்சரிக்கும் என்பது தெரியாதா உங்களுக்கு. தெய்வத்திற்கில்லாத இடத்தில் பூசாரிக்கென்ன வேலை. இங்கு என் படையலை ஏற்றுக்கொள் கடுவா. நான் படைக்கிறேன் கையில் கம்புடன்.

மூன்று :

சோலைக்காடுகளில் அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் குடிகள் இருக்கும் இடத்திலிருந்து இருபது கல் தூரம்  இருக்கலாம் என்பது அவனது கணக்கு. அவன் குடிகள் இருந்த இடத்திலிருந்து சோலைகாடுகளை பார்க்கும்பொழுது மொத்த நிலப்பகுதியும் புற்களால் நிரம்பியது போலிருக்கும். ஆனால் அருகில் சென்று பார்க்கையில்தான் இடைவெளிகளை அவனால் உணரமுடிந்தது. ஆளுயரத்திற்கும் அவை வளர்ந்திருந்தன.

செந்நிற மேகங்கள் நீல மலைகளின் மீது புரண்டிருந்தன. சூரியன் தன் இருப்பை மறைக்கும் கணம் நெருங்கும் நேரம் அதிகமில்லை என்பதை அவன் உணர்ந்தான். கால்கள் தளர அவன் அமரலாம் என்று நினைத்த கணத்தில் காற்று பலமாக வீசியது. தூக்கி பள்ளத்தாக்கில் வீசிவிடும் போலிருந்தது காற்றின் வேகம். புற்கள் நிலகொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தன. மழை நின்று இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. மொத்த மலையும் சரிந்து இன்னொன்றாக ஆகியிருந்தது. அவன் குடிகள் இருக்கும் இடத்தை அடைவதென்பது தொலைக்காத பொருளை தெடுவது போன்றது. எங்கும் கருப்பும் செம்பழுப்பும் கலந்த மணல் நிறைந்த  புதியதொரு உலகம் அவன் குடிகள் இருந்த இடத்தில் உருவாகியிருந்தது. மரங்கள் அதன் வேர்களை சூரியனுக்குக்காட்டி கைவிரித்து நின்றன.

கால்களை முன்னும் பின்னும் மடக்கி நீட்டி கைகளை தரையில் ஊன்றி தலையை சுழற்றி பற்களை கடித்தான். கண்கள் விரிந்து விழிக்கோளங்கள் சாடி விழுந்து விடும் போலிருந்தன. கருவிழிகள் இறுகி ஒற்றைகோடென ஆனது. இறுகிய கயிறை மீண்டும் முறுக்குவதைபோல நெளிந்தான். கண்களில் நீர் வழிய வானத்தைப்பார்த்து உடல் நடுங்க விம்மினான்.

அப்பெருங்காற்றுடன் அவன் ஓலம் கலந்தது.

ஒண்ணுமில்லாம போரேனே எங்கடுவா
காத்து நிக்கீரோ எங்கடுவா
பண்டு காலந்தொட்டு வந்தோமே எங்கடுவா
இண்ணு குடியெல்லா கரஞ்சி போச்சே எங்கடுவா
காட்டுக்கு நாங்கல்லோ எங்கடுவா
இண்ணு காடிருக்கு நாங்கெங்கோ எங்கடுவா
கம்பூணி தடுத்தல்லோ எங்கடுவா
அதொண்டு மதமெழகி சோறே குடிக்கான் கெளம்பியோ எங்கடுவா

இருட்டிய பின் அவன் சென்ற பாதையில் நான்கு காலடித்தடங்கள் கிடந்தன.

நான்கு :

“நேத்து நடந்தது எனக்கே ஆச்சரியமாதா இருந்துச்சி , நா பாத்தத என்னாலயே நம்ப முடியல” என்றார் டாக்டர். இருவரும் நேற்றமர்ந்த அதே சோபாவில் அமர்ந்திருந்தனர்.

“நீங்க இன்னும் நம்பல அத” என்றான் சிபு.

” ஸீ , இது வெறும் உளச்சிக்கல் அத நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க , அதுக்கும்மேல நீங்க சொல்லிதா அவர நாங்க சேத்திருக்கோம். நா முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு வாரம் போதும்”

“ஆமா நீங்க அவர குணப்படுத்தலாம். நீங்க பண்றது என்னனு தெரியுமா , ஒரு தெய்வத்த அழிக்குறது” அவன் குரல் அமைதியாக ஆனால் உடைந்துவிடும் போலிருந்தது.

“முட்டாள் மாதிரி பேசாதிங்க. இந்த காலகட்டத்துல இவர மாதிரி ஒரு மனுசன நீங்க வீட்ல வச்சு பாத்துக்க முடியாது”

“எங்களொட தெய்வமா எங்கப்பா கும்பிட்ட சாமிய நீங்க கொண்ணுட்டீங்க”

“கொஞ்சம் அறிவியல் பூர்வமா யோசிங்க , தெய்வம் நம்ம உருவாக்குனது மனுசனோட அப்செசன்தான் அதுக்கு காரணம். அவன் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்டான்.”

“இருக்கலாம் ஆனா நா அத கும்பிடனும் , பத்திரமா பாதுகாக்கணும்னு நினைச்சேன்”

“ஒரு புலிய நீங்க வீட்டுல வைக்க முடியாதுல்ல”

“வைக்கலாம் அது தெய்வமாகும் போது. அதுக்கு நா தயாரா இருந்தேன்.”

“நீங்க சொல்றது , வெயில கையில அடைச்சு வைப்பேன்னு சொல்ற மாதிரி இருக்கு”

“ஆனா வெளிச்சம் விளக்குல கூட இருக்கும்”

“இன்னிக்கு மதியம் செஸ்ஸன் முடிஞ்சதும் அவரோட உண்மையான பேர சொல்லிட்டாரு”

“இல்ல வேண்டாம் அவர டிஷ்சார்ஜ் பண்ணிருங்க , நாங்க வீட்டுல வச்சே பாத்துக்குறோம்”

“உங்க இஷ்டம்தா , ஆனா திரும்பவும் என்ன ட்ரீட்மெண்ட்க்கு கூப்பிடாதீங்க”

“கூப்புடல , நீங்க போகலாம்” என்றான் சிபு.

டாக்டர் சென்ற பிறகு கடுவா இருந்த அறையின்  மூலையிலிருந்த கம்பை  புவனா எடுத்து சிபுவின் கையில் கொடுத்து “புலி எங்கப்பா…காணல” என்றாள். அவன் பதில் கூறும் முன் “நாந்தா புலி…..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்றாள்

தரையில் கைகளை ஊன்றி நாங்கு கால்களில் நடந்தாள். பறவை கிரீச்சிடும் குரலில் உறுமினாள். அவள் பொன்னிறத்தில் கருப்புப்பட்டைகளுடன் கூடிய கவுண் அணிந்திருந்தாள். சிபு ஐயாவை திரும்ப அழைக்க வேண்டுமா என்று யோசித்தான். அவன் கையில் கம்பிருந்தது.

ராம் – வைரவன் லெ.ரா சிறுகதை

வானிற்கும் மண்ணிற்கும் இடையே இவ்வெளி பலயுகங்களாக மிதந்துக்கொண்டிருக்கிறது. என்ன ஆச்சரியம்? மணிக்கணக்கில், நாட்களில், வாரங்களில் வயிறை தடவியபடி படுத்திருப்பேன், அப்பொழுதெல்லாம் விரல்கள் நண்டின் கொடுக்குகளை போல வயிற்றின் மேலே ஆயும், நிலவையோ, நட்சத்திரத்தையோ வெறித்து பார்த்தபடி பலமணிநேரம் உமிழ்நீரை விழுங்கியபடி இருந்திருக்கிறேன். நிலக்கரியை அள்ள அள்ள தின்று எரியும் பெரும் அடுப்பினை போல பசி தீயாக எரிந்துகொண்டிருக்கும். நா வறண்டு கண்கள் அயர்ந்திருப்பினும், நிலவின் அருகே கண்களை அலைபாயவிட்டிருப்பேன். எத்தனை குளிர்ச்சியானது. இவ்வெளியை கடந்து தானே விழியின் ஒளி சென்றிருக்கும். ஆனாலும் இதன் இருப்பையோ, ஊஞ்சலை போல முன்னும் பின்னும் நகருவதை நான் கவனிக்கவில்லையோ, உண்மையிலே ஆச்சரியம் தான். எங்கே தவறவிட்டேன்! எப்படி தவறவிட்டேன். விடை தேடி அலைவதில் பயனில்லை. சரி, எங்கே ராம்? அவனும் இதை கடந்திருக்க வேண்டும். அவனுக்கு முன்னே நான் வந்து விட்டேனா? இல்லை அவன் வருகைக்காக காத்திருக்கிறேனா? கட்டாயம் அவன் வந்திருப்பான், இல்லை வருவான். ஒருவேளை இனிதான் வரவேண்டும் எனில், அவனுக்காக காத்திருப்பதில் மகிழ்ச்சிதான். ஆம் அவனின் சிறிய பாதங்களை கண்டு எத்தனை நாள் ஆகிறது, கொஞ்சம் பேசவும் செய்கிறான் என பாலா கூறியது நினைவில் வந்தது. என்னை போலவே இருக்கிறானாம், இதனைக்கூறும் வேளையெல்லாம் அவ்வளவு வெட்கம் அவள் குரலிலே தெறிக்கும் , முகம் எப்படி ஒளிரும் இத்தருணத்தில். எவ்வளவு இழப்பு, நான் தானே இழக்கிறேன். யாருக்காக எல்லாமே என் பாலாவிற்க்காக, துர்கா, சரஸ்வதி, லெட்சுமிக்காக மூன்று சக்திகளுக்கு அப்பா நான். கடைசியில் ராம், அயோத்திக்கு அவனை கூட்டிச்செல்ல வேண்டும், ராமஜென்ம பூமியில் என் குட்டி ராமின் பாதங்கள் படவேண்டும்.

சொர்க்கம் எங்கோ! வானத்திலோ! இல்லை. வயிறார உணவும், வீட்டிற்கு அனுப்புவதற்கு சிறிது பணமும்

கிடைக்கும் இடங்கள் எல்லாமே சொர்க்கம் தானே. உறக்கமும் தானாக வருகிறது, வயிறு நிறைந்துவிட்டால் தூங்கிவிடலாமே, மனம் கனமின்றி இலகுவாக இருந்தது. ராமிற்கு ஒரு நடைவண்டி வாங்கி கொடுக்கவேண்டும். இங்கே, கடைத்தெரு சென்று வரும்வழியில் குழந்தை ஒன்று நடைவண்டியோடு நடை பயின்றுகொண்டிருந்தது. நேரம் அறியாது அங்கே நின்றபடி என் மொழியால் அவனை உற்சாகப்படுத்தினேன். அப்பா அடிக்கடி சொல்வதுண்டு ஒரு காரியத்தை செய்துமுடிக்க ஒரு நான்கு நல்லவார்த்தை வேண்டும் என்று, நானும் ஏதோ மிதப்பில் கைதட்டி அவனை குதூகலப்படுத்த நினைக்க, குழந்தை அழுதபடி ஓடிவிட்டது, தவழ்ந்தபடியே. வந்தவர்களில் சிலரின் கண்கள் சிவந்தபடியும், நாக்கு உதடுகளினுள் மடிந்தபடியும் இருந்தது. நகர்ந்து விட்டேன், உள்ளத்தின் அத்தனை அடுக்குகளிலும் ராமின் சிரித்த முகமே நிறைந்திருக்கும். நானும் குழந்தையாக இருந்தேன். ராமும் அப்பாவாக மாறுவான். தலைகீழாக மாறும் நிலை உண்டு. ஆனால் ராமை நான் அப்பாவாக கவனிக்கிறேன். அவனின் முதல் அடியை கொண்டாடுகிறேன். இதில் பிழை இல்லையே, ஆனால் நான் அவனோடு இருந்திருக்க வேண்டும்.

தமிழ் பேசும் இப்பிரதேசம் என்னை இழிவாக பார்ப்பது போல தோன்றும், எங்கோ இருந்து வந்தவன் இவன் என்பது போல, நாங்களும் உங்கள் தூரத்துச்சகோதரர்கள் என கூவத்தோன்றும். யாருக்கும் இதில் பலனில்லையே, சதுரங்கத்தில் காய்கள் போல நீங்களும், நாங்களும் எதிரெதிரே, நகர்த்தும் அரசியல் நமக்கு புரிவதில்லை. ஆனால் எனக்கு இப்பிரதேசம் முக்கியமானது, ஆம் இங்கே நான் மூன்று வேளை உண்கிறேன், என் குடும்பமும். மகள்களில் மூத்தவள் அவள் அம்மாவிற்கு உதவியாக இருக்கிறாள். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள், இலவசக்கல்வி. இங்கே பெண்களின் நிலை உயர்வாக உள்ளது. எங்கள் பிரதேசம் அப்படியில்லை, ராமிற்கு இதையெல்லாம் நான் சொல்ல ஆசைப்பட்டேன். அவனிற்கு எல்லாமே கிடைக்கிறது, அதற்காகத்தான் நான் இருக்கிறேனே. அவன் பிறந்து மூன்று மாதங்கள் கழித்தே அவனைக்காண நேர்ந்தது. சிவந்த மலரை போலவிருந்தான். என் கண்களில் இருந்து வடிந்த நீர் அவன் பாதங்களில் பட்டதும், அவன் சிரித்தான். என் சக்திகள் என்னை சுற்றிக்கொண்டு நின்றனர். ஒரு வாரம் தான் அங்கே தங்கமுடிந்தது. மகிழ்ச்சியான நாட்கள், எட்டு மாதங்கள் கடந்துவிட்டது. அதற்குப்பின் இங்கே திரும்பிவிட்டேன். சிலநேரம் நடப்பவை கனவுகள் போல மறுபடியும் கிடைப்பதில்லை. ராமுடன் அங்கிருந்த நாட்கள் அப்படியானவை.

எனக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அங்கே உருளை விதைப்போம். போதுமான எல்லாம் கிடைத்தது, இரவுகள் இனிமையாக கடந்தது, உறங்க நான் பிரயாசை பட்டதில்லை, அதன் பிறகு இப்போதுதான் நான் கண்களை மூடியவுடன் உறங்குகிறேன். ஒரு பெரிய தொழில்நிறுவனத்திற்காக என் நிலம் அற்பக்காசுக்கு வாங்கப்பட்டது. அதன் பின் நெடுநாட்கள் வெறும் ரொட்டியோடு நாட்கள் கழிந்தன. பின் எப்படியோ இங்கே வரநேர்ந்தது. அதன்பின், என் வீட்டில் மூன்று வேளையும் உணவு உண்கிறார்கள். பாலா பசுமாடு வாங்கியிருக்கிறாள் கடந்த மாதம் கூறினாள். கடனாக வாங்கிய பணம் மூலம்தான், நான் இம்மாதம் முதல் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன். அப்படியானால் குறைந்த நாட்களில் கடனை திருப்பிக்கட்டி விடலாம்.

முதலில் ஒரு சிறிய நகரத்தில் கட்டிடப்பணி, அங்கே பெரும்பாலும் பெரிய மீசைகொண்ட மனிதர்கள் தான். விறைப்பான முகம் கொண்ட மேஸ்திரி எனக்கு, ஆனால் கனிவானவர். சனிக்கிழமை எங்களுடன் அமர்ந்தே மது அருந்துவார், எங்களுக்கு வாங்கிக்கொடுப்பதை சம்பளத்தில் பிடித்துக்கொள்வார். உணவு மூன்று வேளையும் இலவசம், இரவு ரொட்டியும் சப்ஜியும் நாங்கள் சமைத்துக்கொள்வோம். என்னோடு எங்கள் பிரதேசத்தை சார்ந்த இருபது பேர் இங்கே வந்திருந்தோம். நாங்கள் கட்டியது ஒரு ஆறு மாடி வணிக வளாகம். இரண்டு வருடம் அங்கே இருந்தேன். அப்போதுதான் லெட்சுமி பிறந்தாள். பின் இங்கே தலைநகரத்திற்கு வந்துவிட்டோம். பதினெட்டு மாடி அடுக்கு குடியிருப்புகள். தொடர்ச்சியாக கட்டிக்கொண்டிருந்த பெரும் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை. இன்னும் பத்து வருடம் கவலையில்லை என்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கௌரி கூறினாள். பாலா நெடுநாளாக நச்சரித்தாள் பசுமாடு வாங்க, எல்லாம் கணக்கில் கொண்டு வாங்க சொல்லிவிட்டேன் கடந்த மாதம் வாங்கிவிட்டாளாம்.

ஒரு சனிக்கிழமை மது அருந்தும்போது லாலு கூறினான், காலரா மலேரியா போல ஒரு நோய் பரவுகிறதாம். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வருபவர்கள் மூலமாக பரவுகிறது என. அதன்பிறகு ஒரு வாரம் இருக்கும், எங்களை தங்கிய அறைக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள். ஒரு இரண்டு வாரம் எங்குமே, யாருமே வெளிவரக்கூடாது என்று. பாலாவிடம் விசாரித்தேன், அங்கே பிரச்னை எதுவுமில்லை கவனமாக இருக்கச்சொன்னாள். ராமிற்கு காய்ச்சல் என்றாள். நான் என்னிடம் இருந்த கடைசி பணத்தையும் அவளுக்கு அனுப்பிவிட்டேன். உணவிற்கு ஒரு வாரம் கவலையில்லை, மூன்று வேளையும் கிடைத்து. பின் இரண்டு வேளை என குறைந்துவிட்டது. தூக்கத்தை, பசியை என்னால் தடைபோட இயலவில்லை. அப்போதெல்லாம் விட்டத்தில் படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவேன். அதே நட்சத்திரங்கள், அதே எண்ணிக்கை போல எனக்கும் அதே பசி. கூடவே ராமை, பாலாவை, சக்தியை பற்றிய நினைவுகள். தூக்கம் இல்லாமல் போக நினைவுகளும் காரணம்.

தினமும் பாலாவிடம் இருந்து அழைப்பு வரும், ராமை பற்றியே பேச்சுக்கள் இருக்கும். காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. கையில் காசுமில்லை, போக்குவரத்து எங்குமே இல்லை. நான் ராமபிரானிடம் வேண்டிக்கொள்வேன். அவன் வாடியிருப்பான், ராமபிரானின் ஆட்சி நடக்கிறது என அரசாங்கமே சொல்லிவிட்டது. அயோத்தியில் பசியில் மக்கள் வாழ்ந்தார்களா? தெரியவில்லை ஆனால் நாங்கள் பசியால் வாடுகிறோம். பொய்யாகி விடாதா? நடந்ததெல்லாம். அங்கே, எல்லாருமே பெண்கள் என்ன செய்வார்கள். நான் அங்கிருந்தால் பேருதவியாக இருக்கும். ஆனால் இங்கிருந்து செல்ல வழியே இல்லை. நடந்துதான் போகவேண்டும். ஏற்கனவே சிலர் நடந்து செல்கிறார்கள் என்று கௌரி செய்தியில் பார்த்தாளாம் கூறினாள்.

ராமிற்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். எனக்கு மூச்சு அதிகமாக வாங்கியது. உணவும் நேரத்திற்கு கிடைத்தபாடில்லை. நோய் பெரிதாக பரவுகிறதாம், செய்தியை கௌரி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். கௌரி அழகான பெங்காலி பெண். அவளுக்கு குழந்தைகள் இல்லை, கணவன் எங்கோ வேறிடத்தில் வேலை பார்க்கிறான். அவனை நான் பார்த்திருக்கிறேன். மாதம் இருமுறை இங்கே வருவான். அவனின் முகம் வெண்மையான பாலின் நிறத்தில் இருக்கும். அன்றைய இரவு கௌரியும், அவனும் தூரமாய் சென்று விடுவார்கள். இங்கே நாங்கள் குலாவவா இயலும். அன்றைய நாள் பாலாவின் நினைவில் சுயமைதுனம் செய்வேன். அவ்வளவே என்னால் முடியும்.

பாலா அன்று மிகவும் அழுதாள். மிகவும் பலவீனமாக அவளின் குரல் இருந்தது, மூத்தவள் துர்கா தைரியமாக பேசினாலும், முடிந்தால் இங்கே வாருங்கள் அப்பா எங்களுக்கு தைரியமாக இருக்கும் என்றபடியே முடித்தாள். நடந்தாலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும், லாலு ஒரு மிதிவண்டி ஏற்பாடு செய்தான். கூடவிருந்த மற்ற நண்பர்கள் உணவு கொஞ்சம், பணம் கொஞ்சம் கொடுத்தார்கள். ராமிற்காக என் கால்கள் சைக்கிளை மிதித்தது. தார்சாலைகள் கம்பீரமாக இருந்தது. வெயில் கொதித்தது. எங்குமே நிழலை காணமுடியவில்லை. மரங்கள் முடிந்தவரை அரசாங்கத்தால் வெட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் ஆங்காங்கே கிடைத்தது. சிலநேரம் பிஸ்கட், பன் கொடுப்பவருடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும், அது மட்டுமே நிர்பந்தம்.

பல பிரதேசங்கள், விதவிதமான மொழி உச்சரிப்பு. கடுமையான அனல் காற்றோடு கூடிய வெயில் வாட்டியது. கிடைத்த இடத்தில் உணவு, இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. சைக்கிள் சிலநேரம் ஓடியபடியே இருக்கும் என் பிரக்ஞையின்றி, நினைவெல்லாம் ராம் சிரித்தபடி விளையாடி கொண்டிருப்பான். அவனுக்கு கண்ணிற்கு கீழே சிறிய மச்சம் இருக்கும், என் அப்பாவை போலவே. எப்படி இருப்பானோ, காய்ச்சல். அவன் சிறிய உடல் தாங்குமா? பாலா எப்படி சமாளிக்கிறாளோ! தினமும் மூன்றுவேளை அழைப்பாள். காய்ச்சல் குறையும், அவனை தூக்கி கொஞ்ச வேண்டும். இரவுகளில் கிடைத்தவிடத்தில் தூக்கம், கண்கள் மூடியபடி படுத்திருப்பேன். உறங்க முடியாது. உடல் அயற்சியால் ஓய்வெடுக்கவே படுத்திருப்பேன். கனவுகளில் சாலை அரக்கனை போல என்னை வாரி விழுங்கும். நான் விழும்போதெல்லாம், குழந்தையின் கைகள் என்னை தாங்கும், பாலாவின் உடல் வாசனை நாசியை துளைக்கும். ராம் தவழ்ந்து , ஒரு கட்டிலின் அடியில் நுழைவான். சாலை என்னை பிரட்டிபோடும் நான் எழுந்து, கட்டிலுக்கு அடியே தலையை நுழைப்பேன். கட்டில் என் தலையை அழுத்தும், நான் விழிப்பேன்.

அன்றைய நாள் மிகவும் உற்சாகமாக விடிந்தது. நான் இரண்டு நாட்களில் வெகுதூரம் வந்துவிட்டேன். கோதாவரியை நெருங்கி விட்டேன். நதியெல்லாம் அன்னையை போல, இப்போது அதன் மேல் எழுப்பிய பாலத்தில் நின்றுகொண்டிருந்தேன். நின்றபடி அதனை வணங்கினேன். மனிதர்கள் குறைவாகவே கண்ணில்பட்டார்கள். வெயில் தாழ்ந்துகொண்டிருந்தது. கதிரவனின் ஒளி தங்கம் போல நீரில் மின்னியது. பசி இப்போதெல்லாம் பெரிதாக வாட்டுவதில்லை. பாலாவின் அழைப்பு வந்தது. ராமபிரானை வேண்டிக்கொண்டே பேச ஆரம்பித்தேன். பேசியது துர்கா, தடுமாற்றமாக பேசினாள், வார்த்தைகள் சரியாக இல்லை. பதட்டத்தில் இருப்பது போலவிருந்தது. பாலா மயக்கமாக இருக்கிறாளாம். ராம் மூச்சின்றி இருக்கிறான். மருத்துவர்கள் எதுவுமே கூறவில்லை, எடுத்துவிட்டு செல்ல கூறிவிட்டாராம்.

கால்கள் நடுங்கி, கைகள் உதறியது. வார்த்தைகள் எழவில்லை. தேற்றக்கூட யாருமில்லை. நான் அமர்ந்துவிட்டேன். அழைப்பை துண்டிக்கவில்லை. ராமின் சிரிப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருட்டிக்கொண்டு வந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன். யாரென்று தெரியவில்லை, ஒரு வயதான பிராமணர் தோள்களை அழுத்தி புரியாத மொழியில் பேசினார். நான் அவர் கைகளை பற்றிக்கொண்டேன். சிலநேரம் என்னோடு அமர்ந்தார். பின் தோள்களை தட்டிக்கொடுத்து அங்கிருந்து சென்றார். அவரின் பாதங்களின் தடத்தை கண்டேன், அது மின்னியது.

நான் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. கையில் பணமும் இல்லை. நான் நேற்றில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பாலாவிடம் இருந்து அழைப்பும் இல்லை. இரண்டு தடவை அவளின் அண்ணன் அழைத்தார். எல்லாமே அவர்மூலம் முடிந்துவிட்டது. வேகமாக சைக்கிளில் சென்றேன். ஓய்வே இல்லை, மனம் என்னிடம் கட்டுப்படவில்லை. ராமின் கடைசி முகமும் காணக்கிடைக்கா பாவியாக உணர்ந்தேன். அது ஒரு நெடுஞ்சாலை, கால்கள் அதன்போக்கில் மிதிக்க சுயநினைவின்றி இருந்தேன். எல்லாமுமே நினைவுகளால் நிரம்பியது. தத்ரூபமாக காட்சிகள் விரிந்தது. நான் பாலாவை திருமணம் செய்தது, என் சக்திகள் பிறந்தது, ராம் பிறந்தது. ராம் என் மடியிலே சிறுநீர் போனான், சுற்றி எல்லாருமே சிரித்தார்கள் ராமும்தான். அயோத்தி செல்லவேண்டும். அவனின் பாதங்களை ராமஜென்ம பூமியில் படவேண்டும், என் பிரார்த்தனைகள். ஒளி கண்களை கூசச்செய்தது. ஏதோ மோத, பறந்தேன். தலையில் பலமான அடிபட்டது.கண்கள் சுருங்கியது. பாலா, துர்கா, சரஸ்வதி, லெட்சுமி, ராம் அங்கே நின்றார்கள். நான் எழுந்தேன். இலகுவாக உணர்ந்தேன். பறக்க ஆரம்பித்தேன்.இந்த வெளி அப்போதுதான் கண்களில் பட்டது.ஏதோ உள்ளுணர்வு ராமும் இங்கே வருவான் என சொல்ல அவனுக்காக காத்திருக்கிறேன். அவனின் பாதங்களில் முத்தமிட வேண்டும்.

களைதல் – கா.சிவா சிறுகதை

சிறு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவிலுக்கு சங்கரும் குமாரும் சென்றபோது காழாஞ்சியை வாங்கிச் செல்வதற்காக ஊர்க்காரர்கள் கூட ஆரம்பித்திருந்தார்கள்.

என்ன மச்சான், எல்லாரோட மொகத்திலயும் ஒரு தெளிச்சி தெரியுது என சங்கர் குமாரிடம் கேட்டான்.

திருவிழாக்கு தேதி குறிச்சதிலேர்ந்து எல்லாரோட மனசுலயும் சந்தோசத்தோட, திருநா நல்லபடியா முடியனுமேன்னு கொஞ்சம் பதட்டமும் இருந்துச்சு. இன்னக்கி சாயந்தரம் மது, பாரியெல்லாம் ஊரணியில கொட்டிட்டு அங்கேயிருந்து தண்ணி மொண்டுக்கிட்டு வந்து இந்தக் கோயில் பலிக்கல்லுல ஊத்துனதோட திருவிழா முடிஞ்சிடுச்சில்லஅதான் எல்லோரட மொகமும் கனிஞ்ச மாதிரியிருக்கு“.

முக்கால் வட்டமாய் கோவிலைப் பார்த்து அமர்ந்திருந்த கூட்டத்தில் இடத்தைத் தேர்ந்து அமர்ந்த குமாரின் அருகில் சங்கரும் அமர்ந்தான். ” ஏன் இங்க வந்து ஒக்காந்த. அங்க கூட எடமிருக்கேஎன சங்கர் கேட்டான்.

சுத்தி இருக்கறவனெல்லாம் என் வயசுப் பசங்க. என் சேக்காளிங்க. மஞ்சவெரட்டு, சேவச்சண்டைக்கெல்லாம் சேந்துதான் போவோம். அங்க போயி அந்த பெருசுகக்கிட்ட ஒக்காந்தா வாயமூடிக்கிட்டு தேமேன்னுதான் இருக்கனும்என்றான் குமார்.

இப்ப எதுக்கு மச்சான் இங்க வந்திருக்கோம். பெரியாத்தாதான் ஓங்கூட கோயில் வரைக்கும் போயிட்டு வாப்பான்னு அனுப்புச்சு“.

காழாஞ்சி வாங்கறதுக்காக வந்திருக்கோம்

காழாஞ்சியா

இந்தத் திருவிழா நடத்த தேவப்படுற பணத்தை கணக்குப் பண்ணி ஒவ்வொரு புள்ளியும் இவ்வளவு பணம் தரனும்னு முடிவு பண்ணுவாங்க

புள்ளியா

வெளியூர்ல இருக்கறதால எதுவுமே தெரியாமத்தான் இருக்கிறியா. ஒவ்வொரு குடும்பத்திலேயும் இருக்குற ஒவ்வொரு கல்யாணமான ஆம்பளயும் ஒரு புள்ளி. அப்படி வரி கொடுத்து திருவிழா நல்லபடியா முடிஞ்சதுக்கு நன்றி சொல்ற மாதிரி ரெண்டு பழம், ஒரு மூடி தேங்கா, சாமிக்கி போட்ட பூவுல ஒரு இணுக்கு, வெத்தல பாக்குன்னு எல்லாருக்கும் கொடுப்பாங்க“.

.”இதான் காழாஞ்சியா. இதுக்கா வந்து காத்துக்கிட்டிருக்கோம்

இதோட பண மதிப்பு கம்மியா இருக்கலாம். ஆனா இது ஒரு கௌரவம். சபைக்கு நடுவுல கூப்பிட்டு நிகழ்ச்சி நல்லபடி நடந்ததுக்கு நீயும்தான் காரணமுன்னு சொல்றது பெரிய மரியாதைதானே என்றான் குமார்.

அப்போது மூன்று பேர் கோவிலுக்குள் இருந்து வெளிவந்து கூட்டத்தின் முன்பாக கூட்டத்தைப் பார்த்து அமர்ந்தார்கள். அமர்ந்திருந்தவர்களெல்லாம் சற்று நிமிர்ந்தார்கள். ” இவங்கதான் திருவிழா கமிட்டியா என்று கேட்டான் சங்கர்.

கமிட்டியில்லநம்மவூர்ல டிரஸ்டினு சொல்வாங்க . அவங்கள்ல மூத்தவர் செங்கல்வராய அம்பலம் . பக்கத்துல இருக்கிறவர் கணேசக் கோனார். ரெண்டு பேரையும் விட. எளசா சுறுசுறுப்பா இருக்கிறவர் மணிப்பிள்ளை

பரவாயில்லையே மூனு சாதியிலேயும் ஒவ்வொருத்தரப் போட்டுட்டாங்களா

ஆமாம்மா. இந்த மாதிரி விசயங்கல்ல பிரச்சனை வந்துடக் கூடாதில்ல. ஒரு பேரு விட்டுப் போனாக்கூட அடுத்த வருசத் திருவிழா சந்தேகந்தான்என்றான் குமார்.

சற்று தள்ளி விரிந்து படர்ந்திருந்த இலுப்பை மரத்தில் சிறு வெண்கதையைப் போல மலர்ந்து தொங்கிய பூக்களிலிருந்து பரவிய வாசம் கூட்டத்தினரிடம் மெல்லிய கிறக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தனை புள்ளிகளுக்குமான காழாஞ்சி பிரிக்கப்பட்டு கொடுக்க தாயாரானபோது அமர்ந்திருத்த ஆண்களுக்கு மத்தியில் இருந்து கந்தன் எழுந்தான். அவன் முகம் கோபத்தில் கொந்தளித்தது. முகத்தினை சரியாக கவனிக்காத செங்கல்வராய அம்பலம்

பேரக் கூப்பிடறதுக்கு முந்தி ஏப்பா எந்திரிக்கிற என கேட்டார்.

தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து அம்பலத்தையும் கந்தனையும் நோக்கினார்கள்.

அய்யா, நான் ஒரு பிராது கொடுத்திருக்கேன். அத பைசல் பண்ணின்டு அப்பறம் காழாஞ்சியக் கொடுங்கஎன்றான் கத்தன்.

என்ன பிராது. யார்க்கிட்ட சொன்னஎன்றவாறு திரும்பி மற்ற டிரஸ்டிகளைப் பார்த்தார் அம்பலம்.

கணேசக் கோனார் அவர் காதருகே குனிந்து இவம் பொண்டாட்டி கைய செந்தியம்பலம் மவன் பாலன் இழுத்துட்டானாம். அத விசாரிக்கனும்னு மூனு நாளைக்கு முன்னாடி சொன்னான். நாந்தான் செவ்வா முடிஞ்சதும் விசாரிச்சுக்கலாம்னு சொல்லி அடக்கி வச்சேன்என்றார்.

கூட்டத்தில் கலவையான ஒலி எழுந்தது. விபரம் தெரியாதவர்கள் என்னாச்சு என அருகிலிருந்தவர்களிடம் கேட்க தெரிந்தவர்கள் நடந்ததை விளக்க முயல , பெருகி வரும் காட்டாற்றின் ஓசையென சத்தம் வேகமாக உச்சத்தை நோக்கிச் சென்றது.

செங்கல்வராய அம்பலம் கையை உயர்த்தி அமைதியா இருங்கப்பா. விசாரிப்போம்.. அமைதியா இருங்கஎன ஓங்கிக் கூறியதும் சத்தம் மட்டுப்பட்டது.

கூட்டத்தினரைப் பார்த்து செந்தியம்பலம் மவன் பாலன் இங்க வந்திருக்கானா எனக் கேட்டார். அமர்ந்திருந்த. செந்தியம்பலம் எழுந்து வரலிங்கய்யா, வீட்லதான் இருக்கான்என்றார்.

அப்படீன்னா அவஞ் சேக்காளிங்க ரெண்டு பேரு போயி அவனக் கூட்டிக்கிட்டு வாங்கஎன்று கட்டளையாகக் கூறினார். கூட்டத்தின் வெளிவட்டத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் எழுந்து ஊருக்குள் சென்றார்கள்.

சீக்கிரம் வாங்கப்பா.. இந்த பிரச்சனையை முடிச்சுட்டுதான் அடுத்த வேலைக்கு போக முடியும்என்று கூறிவிட்டு கந்தா நீ உக்காரு. அவன் வந்ததும் விசாரிப்போம்என்றதும் கந்தன் அமர்ந்தான்.

கூட்டத்தின் நடுவிலிருந்த

குமார் , தலையை குனித்தபடி கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது. ஒரு வருசத்துக்கு அப்பறம் வந்து அவன் கையப் பிடிச்சான். இவன் அங்க தடவுனான்னு சொல்றதுஎன்று அருகிலிருந்த சங்கரிடம் கூறினான்.

ஊர்க்காரங்கள நம்பித்தானே விட்டுட்டு போறாங்க. ஊர்தானே பாதுகாப்பு கொடுக்கனும்

ஒவ்வொருத்தருக்கும் வேறவேற ஆசையும், கொணமுமிருக்கும். எல்லாத்தையும் ஊர் கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா. பிராதுன்னு வந்தாத்தான் தலையிட முடியும்

குமாருக்கு முன்பாக இருந்த பேன்ட் சட்டை அணிந்திருந்த சந்திரன் திரும்பி இந்த மாதிரி பிரச்சனைக்கு போலீஸுக்கிட்ட போகாம ஏன் இங்க சொல்றாங்கஎனக் கேட்டான்.

போலீசு நாளு முச்சூடும் அந்தப் பொண்ணுக்கு பந்தோபஸ்து கொடுக்க முடியுமாஎன சிரித்தபடி கேட்டுவிட்டு வலப்பக்கம் அமர்ந்திருந்த சிங்காரத்தை நோக்கி நீ ஏன் மச்சான் ரொம்பத் துடிக்கிறஎனக் கேட்டான்.

நானே ஆறு மாசத்துக்கப்புறம் இப்பதான் வந்திருக்கேன். ரெண்டு நாளு கோயில்லேயே போயிடுச்சு. இன்னிக்கும் இவனுவ விட மாட்டானுங்க போலருக்கேஎன்றான் சிங்காரம் சலிப்புடன். ராமன் சங்கரின் பக்கம் திரும்பி சத்தமின்றி சிரித்தான்.

காழாஞ்சி பிரித்துக் கொடுத்தவுடன் ஊரின் தெருவிலெல்லாம் போட்டிருந்த குழல் விளக்குகளை கழட்டலாம் என காத்திருந்த சின்னய்யா கோவிலோரம் படுத்திருந்த அவன் வேலையாட்களை வேகமாக எழுப்பி டேய், ஊருக்குள்ள போட்டிருக்கிற பல்புகளையெல்லாம் உடனே கழட்டுங்கடாஎன்று கூறித் துரத்தினான். இரண்டு வருடங்களுக்கு முன் நிலம் தொடர்பான பிராதை இதேபோல விசாரித்தபோது இரு தரப்பின் கைகலப்பில் ஐம்பது பல்புகளுக்கும் மேல் உடைந்திருந்தது.

பாலனை அழைக்கப் போனவர்கள் மட்டும் மெதுவாக நடந்து வந்தனர்.

ஏய் வேகமா வாங்கன்னா ஆடி அசஞ்சுக்கிட்டு வர்றீங்க. அவன் எங்கேஎன செங்கல்வராய அம்பலம் வந்தவர்களைக் கேட்டார்.

அவன் ஒடம்பு சுகமில்லாம படுத்திருக்கான். அவனால எந்திரிக்க முடியலங்கய்யாஎன்று ஒருவன் சொன்னான்.

இதனைக் கண்டதும் கந்தனின் அருகிலிருந்த அவன் பங்காளிகளில் சிலர் வேகமாக எழுந்து நாங்க போயி இழுத்துக்கிட்டு வர்றோம்என்று கூறியபடி தாவினார்கள்.

ஏய்பொறுங்கப்பா. லேய் செந்தீ நீ போயி உடனே ஒம் மவனக் கூட்டிக்கிட்டு வா. இல்லேன்னா வேற முடிவு எடுக்க வேண்டியிருக்கும். அது ஒங்குடும்பத்துக்கு நல்லதில்ல ஆமா…” என்று செந்தியம்பலத்திடம் கூறினார் செங்கல்வராயன்.

இந்தா.. கூட்டியாறேன்யா என்று செந்தி எழுந்தவுடன்

ஏப்பா, யாராவது சைக்கிளக் கொடுங்கப்பா. இவன் சீக்கிரம் வரட்டும் என்று கூறவும் சாலையின் மேல் நின்றிருந்த சைக்கிளை ஒருவன் தள்ளிக் கொண்டுவந்து செந்தியிடம் கொடுத்தான். வேகமாகத் தள்ளியபடி ஓடி குதித்தமர்ந்து ஓட்டிச் சென்றார்.

கூட்றதுக்குப் போனவனுங்க , நேரத்தக் கடத்துறதுக்காக மெதுவாப் போயிட்டு வந்தானுங்க. இப்ப இவரு போயி கூட்டிட்டு வர்றப்ப இன்னும் நேரமாயிரும்குமார் சங்கரிடம் கூறினான்.

ஆனா என்னசங்கர் கேட்டான்.

நேரமாயிடுச்சுன்னா ஆவுஆவுன்னு விசாரிச்சு வேகமா முடிச்சிடுவாங்கல்ல“.

சரியா தீர்ப்பு சொல்லுவாங்களா

சரியா இருக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனா தப்பா இருக்காது. காலங்காலமா எப்படி சொல்றாங்களோ அப்படியே இருக்கும்சொல்லியபடி கைகளை நீட்டி சோம்பல் முறித்து, கால்களை முன்பக்கம் அமர்ந்திருந்தவர்களுக்கிடையே நீட்டினான். முன்னால் இருத்தவர் முறைத்தார்.

கொஞ்சம் தள்ளிக்க மாப்ளே. ரொம்ப நேரமா ஒக்காந்து காலு மரத்துப்போற மாறி இருக்குஎன்றான் கொஞ்சம் குழைந்தவாறு.

கூட்டம் முழுக்கவே கை கால்களை நகர்த்தியும் நீட்டியும் சோம்பல் முறித்தது பெரிய அலையொன்று புரள்வதுபோலத் தோன்றியது. கோவிலுக்கும் இலுப்பை மரத்திற்கும் இடையே வடக்கிலிருந்து வந்த காற்று அமர்ந்திருந்தவர்களின் உடலில் துளிர்த்திருந்த வியர்வையின்மீது பட்டு அவர்களுக்கு மெல்லிய மயிர்க் கூச்சத்தை அளித்தது.

கந்தனைச் சுற்றியிருந்தவர்களும் சாலையோரமாக நின்றிருந்த பாலனின் நண்பர்களும் சிறு வட்டமாக தனித்தனியாகக் குழுமி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

பின்பக்கம் சைக்கிளின் அரவம் கேட்டதும் எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள். செந்தியம்பலம் பின்னால் அமர்ந்திருக்க பாலன் ஓட்டிக்கொண்டு வந்தான்.

அங்க பாரு, எந்திரிக்க முடியாம கெடந்தவன்தான் இப்ப சைக்கிள ஓட்டிக்கிட்டு வர்றான்என்றான் குமார்.

பாலன், பேன்ட் சட்டை அணிந்திருந்தான். சட்டையில் பாதி பொத்தான்கள் போடப்படவில்லை. முடியை முன்பக்கம் ஒட்ட வெட்டி பின்பக்கம் தொங்கவிட்டிருந்தான்.சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு யாருக்கும் பயப்படாத தன்மையுடன் நடந்துவந்து நின்றான்.

அவனை நோக்கிய செங்கல்வராய அம்பலம் கூப்பிட்ட உடன வரமாட்டீயா. சைக்கிள் வச்சு அழச்சாத்தான் வருவியாஎனக் கேட்டார்.

அதான் வந்தாச்சுல்ல. என்ன விசயம்னு சொல்லுங்க என்றான்.

பாலனின் நடத்தை கந்தனின் துணைவர்களிடம் சிறு கொதிப்பை உண்டாக்கியது. ” பஞ்சாயத்துல கூப்பிட்டு இருக்காங்க. கொஞ்சம் மரியாதயா பேசுஎன்று ஒரு குரல் எழுந்தது.

மரியாத கொடுத்துதான் வந்திருக்கு. விசயத்தச் சொல்லுங்க தூக்கம் வருதுல்லஎன்றான் கேலித் தொணியில்.

ஏப்பா, பேச்ச நிறுத்துங்கப்பா. கந்தா ஒன்னோட புகாரச் சொல்லு

போன புதன்கெழம அன்னிக்கி என் பொண்டாட்டி ராணி கம்மாய்ல குளிச்சிட்டு வந்திருக்கா. அப்போ இந்தப் பய எதிரே வந்திருக்கான். இவன் வர்றானேன்னு அவ ஒதுங்கி நின்னுருக்கா. இவன் அவ கையப் பிடிச்சு வாயேன் இன்னொருதரம் குளிக்கலாம்னு கூப்பிட்டுருக்கான். எம் பொண்டாட்டி கையப் பறிச்சிக்கிட்டு ஓடி வந்துட்டாளாம். அன்னயிலேர்ந்து குளிக்கிறது தொவக்கிறது எல்லாமே வீட்லதான். வெளிய போகவே பயந்துக்கிட்டு வீட்லேயே கெடக்கிறா.நான் ஊர்லேர்ந்து வந்தவுடனே சொன்னா.போயி இவன வெட்டனும்னுதான் தோணுச்சு. ஆனா புள்ளங்களப் பார்த்து மனச மாத்திக்கிட்டேன். நீங்கதான் கேக்கனும்என்று கோபமாகவும் தழதழப்பாகவும் சொல்லிமுடித்தான்.

கந்தன் சொல்லிக் கொண்டிருந்தபோது , பாலன் எதையும் கேட்காத பாவனையில் கூட்டத்தையும் காற்றிலாடிய மரக்கிளைகளையும் பார்த்தபடி இருந்தான்.

கந்தனின் உடனிருந்தவர்களில் ஒருவன் தாயோளி.. இவனை ஊரவிட்டு ஒதுக்கி வைக்கனும். இவன் ஊருக்குள்ளே இருந்தா பொண்டு புள்ளங்க எப்படி வாழ்றதுஎன்று பாலனை அடிப்பது போலப் பாய்ந்தான்.

பாலனின் நண்பனொருவன் நீ மூடிக்கிட்டு இருடா. சபைக்கு நடுவுல பெரிய இவனாட்டம் பேச வந்துட்டான். நீ என்னென்ன பண்றேன்னு எங்களுக்குத் தெரியாதா என்றபடி எகிறி வந்தான்.

கணேசக் கோனார் எழுந்து குறுக்கே வந்து ஏய் ஆளாளுக்குப் பேசாம சும்மா இருங்கப்பா.. ஒக்காருங்க.. ஒக்காருங்கப்பா என்று அமரவைத் கைகலப்பு ஆகாமல் தடுத்தார். செங்கல்வராய அம்பலம் பாலனைப் பார்த்து கந்தன் சொல்றது நெசந்தானா. அவம்பொஞ்சாதி கையைப் பிடிச்சியாஎனக் கேட்டார்.

கையையெல்லாம் புடிக்கல. சாயந்திர நேரமாயிருந்துச்சு. கம்மாயில யாரும் இருக்கமாட்டாங்கன்னு தோணுச்சி. எனக்கு தனியா குளிக்கப் பயமாயிருந்ததால அவங்கள தொணக்கி கூப்புட்டேன். இது பெரிய தப்பா. இதுக்குப் போயி பஞ்சாயத்து வேறஎன்று விட்டேத்தியாக கேட்டான் பாலன்.

டேய்.. ஒன்னய அன்னிக்கே வெட்டிப் போட்டிருக்கனும். வெட்டியிருந்தா என்ன தப்புன்னு இப்பக் கேப்பியாஎன்று கந்தன் பாய்ந்தான். பாலனின் நண்பர்கள் குறுக்கே வந்து கந்தனைப் பிடித்து தடுத்தார்கள். ” போய் உக்காரு. விசாரிக்கிறாங்கல்லஎன்று பின்னால் தள்ளினார்கள்.

கணேசக் கோனார் எழுந்து ஏலே..வெலகுங்கப்பா. கந்தா நீ ஒக்காரு. விசாரிக்கிறமுல்ல.. ஒக்காரு என்று அமர வைத்தார்.

ஏப்பா கந்தா இவன் கையப்பிடிக்கலைனு சொல்றானேப்பாஎன்று அம்பலம் கந்தனைக் கேட்டார்.

பொய் சொல்றான்ங்க. கையப் பிடிச்சத இந்த சுப்பையாவும் பாத்திருக்கான்என்று ஆவேசமாகக் கூறினான் கந்தன்.

ஆமாங்க. நான் வயல்லயிருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தப்ப பாலன், கந்தன் பொஞ்சாதியோட கையப் பிடிச்சு இழுத்ததப் பாத்தேன்என்றான் கந்தனுக்கு அருகிலிருந்த சுப்பையா.

குமார் குனிந்தபடி அதானே பாத்தேன். விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னுஎன்றான் சங்கரிடம்.

ஏலே பாலா. இப்ப என்ன சொல்ற. சுப்பையா பாத்தேன்னு சொல்றானேஎன்றார் அம்பலம்.

பயத்துல அவசரமா கூப்பிட்டப்ப கை லேசா மேல பட்டிருக்கும். இப்ப அதுக்கென்ன. இது அவ்ளோ பெரிய குத்தமாஅசராமல் பதில் சொன்னான்.

டேய் என்னடா பேசற. பண்றதயும் பண்ணிட்டு இவ்ளோ திமிரா அதுக்கென்னங்கிறகூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்ததும் மொத்தக் கூட்டமுமே அதானேஎன வழிமொழிந்தது.

சாதாரணமாக இம்மாதிரி பஞ்சாயத்துகளில் இரு தரப்புக்கும் ஏறக்குறைய சமமான ஆதரவுக் குரல்கள் எழும். இப்போது கூட்டம் ஒட்டு மொத்தமாகவே ஒரே தரப்பின் பக்கம் சாய்ந்துவிட்டதாகத் தெரிந்தது. இது தீர்ப்பிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

கூட்டத்தின் குரலைக் கேட்டதும் சற்று நடுக்கத்துடன் எழுந்த செந்தியம்பலம் தன் மகனை நோக்கி எலே பாலா செஞ்சது தப்புதான்னு ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்டுர்றாஎன கை கூப்பியபடி கெஞ்சினார்.

இவரு ஏன் இப்படி நடுங்குறாருஎனக் குமாரிடம் கேட்டான் சங்கர்.

தப்ப ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்டா தண்டனை கம்மியாயிருக்கும். இப்படியே திமிறிக்கிட்டு நின்னா ஊருக்குள்ள வரக்கூடாதுங்கற மாதிரி பெரிய தண்டனையா கொடுத்திடுவாங்க. அத நீக்கனும்னா அதுக்கு ஒரு வருசங்கூட ஆயிடும்என்றான் குமார், சங்கருக்கு மட்டும் கேட்குமாறு.

கைகூப்பிக் கெஞ்சிய தன் தந்தையைப் பார்த்தபோது பாலனின் உடல் பாவனை சற்று மாறியது. “இல்லையினே சொல்லு, அவங்களால என்ன செஞ்சிட முடியுமென நண்பர்கள் உறுவேற்றக் கூறியவையெல்லாம் மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது . எந்த வம்புக்கும் போகாமல் எல்லோரும் மதிக்கும் வகையில் வாழ்பவர் அப்பா. எவ்விதமான சுவாரசியமும் இல்லாத அவரின் வாழ்க்கையைப் பார்த்து இவனுக்கு ஏளனமாகத் தோன்றும். அதனாலேயே அவர்மீது பெரிதாக இவனுக்கு மதிப்பில்லை. இவ்வளவு நாளாக அப்பாவின் பேச்சைக் கேட்டதேயில்லை. அவர் சொல்கிறார் என்பதற்காகவே படிப்பின் மீது வெறுப்பு வந்தது. போகக் கூடாதென்று அவர் கூறியதாலேயே திருப்பூருக்குச் சென்று பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். இரண்டு மாதம் வேலை செய்து வாங்கிய சம்பளத்துடன் ஊருக்கு வந்து அடுத்த இரண்டு மாதம் பசங்ளுடன் சேர்ந்து செலவு செய்வான். அப்பாவை பிடிக்காமல் போனதேன் என பலமுறை யோசித்திருக்கிறான். அப்போதெல்லாம், இது நல்லதை மட்டுமே போதிப்பதனால் வந்த வெறுப்பு என்ற முடிவுக்குதான் அவனால் வரமுடிந்தது. அப்பாவின் மீதான அவன் வெறுப்பு அந்தரங்கமானது ஆனால், இவ்வளவு கூட்டத்தின் நடுவே அப்பா கெஞ்சியதைப் பார்த்ததும் இதுவரை தோன்றாத கூச்சம் ஏற்பட்டது. தன் மேலேயே கடும் வெறுப்பு உண்டானது. உடலில் இருந்த மிதப்பு மறைந்து லேசான பணிவு தோன்றியது.

தன் அப்பாவைப் பார்த்து நீ உக்காருப்பா..உக்காரு. நான் மன்னிப்புக் கேக்குறேன்என்று கூறிவிட்டு டிரஸ்டிகளை நோக்கி கைகூப்பிய பாலன் அய்யா .. நாந் தெரியாம செஞ்சுட்டேன் என்னய மன்னிச்சிடுங்கய்யா

என்றான்.

செங்கல்வராய அம்பலம் கந்தனை நோக்கி ஏப்பா கந்தாசெஞ்சது தப்புதான்னு மன்னிப்புக் கேக்குறானே நீ என்ன சொல்றஎன்றார்.

அய்யா, ஒத்துக்கிட்டா செஞ்சது சரின்னு ஆயிடுமாங்கய்யா. இன்னொரு தடவை செய்யாத மாதிரி தண்டனை கொடுக்கனுங்கஎன்றான் கந்தன்.

மற்ற இரண்டு டிரஸ்டிகளையும் நோக்கி நீங்க என்ன சொல்றீங்கஎனக் கேட்டார் பெரிய அம்பலம்.

சின்னப் பயதான். ஏதோ புரியாம செஞ்சிட்டான். அவராதம் கட்டச் சொல்லலாம் என்றார் கணேசக் கோனார்.

அவராதம் மட்டும் பத்தாது. இதுமாரி இன்னொருத்தன் செய்யாம இருக்கனும்னா தண்டனையும் கொடுக்கனும் என்றார் மணிப்பிள்ளை.

கூட்டத்தைப் பார்த்தார் செங்கல்வராய அம்பலம். பாலனின் நண்பர்களெல்லாம் அபராதம் மட்டும் போடுங்க எனக் கூவினார்கள். கந்தனைச் சுற்றியிருந்தவர்கள் தண்டனை கொடுக்கனும் என்றார்கள். கூட்டத்திலிருந்து கலவையான குரல்கள் எழுந்தன. கூட்டத்தினரை முழுமையாக நோக்கியபின் அமைதியா இருங்கப்பா என்று கூறி கையாலும் சைகை செய்தார்.

மரத்தினை சிறிது நேரம் பார்த்துவிட்டு கோவில் பக்கம் பார்த்து உதடுகள் அசைய மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.

கூட்டம் முழுக்க அவரின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தது. அவரது தீர்க்கமான முகம் அவர் என்ன சொல்வதென்று முடிவு செய்துவிட்டார் என்பதைக் காட்டியது. அனைவரும் அவர் கூறப்போவதை கேட்க ஆயத்தமானார்கள். காற்றோசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

செங்கல்வராய அம்பலம், கூட்டத்தையும் கந்தனையும் ஒருமுறை பார்த்துவிட்டு, பாலனைப் பார்த்து அடுத்தவன் பொஞ்சாதிய தப்பான நோக்கத்தோட கையைப் புடிச்சு இழுத்ததால அபராதமா இந்த மாரியம்மனோட உண்டியல்ல நூறு ரூபாயப் போடனும்என்று கூறி நிறுத்தினார்.

பாலனின் ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சி தென்பட்டது. கந்தன் தரப்பினரிடேயே இறுக்கமான கையறு நிலை புலப்பட்டது.

கைகளால் அமைதியாக இருங்க என சைகை செய்த அம்பலம் தனது தீர்ப்பை தொடர்ந்தார் இது மாதிரி தொடரக் கூடாதுங்கிறதுக்காக இந்த பாலன் கந்தனோட பொஞ்சாதியோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்க வேணும்னு இந்தப் பஞ்சாயத்து முடிவு பண்ணியிருக்கு என்று முடித்தார்.

பாலன் முகம் அவமானத்திலும் கோபத்திலும் வெளிறியது. கணத்தில் முகத்தில் வியர்வை கொப்பளித்து தாடையிலிருந்து வழிய ஆரம்பித்தது. அவன் நண்பர்களும் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து பின் சற்று சுதாரித்து பாலனை அணுகி அவன் தோளை ஆதுரத்துடன் பற்றிக்கொண்டு முகத்தை துண்டால் துடைத்தார்கள். செந்தியம்பலம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் உடல் லேசாகக் குலுங்கியது.

கந்தன் தரப்பில் லேசான திருப்தியுடன் குழப்பமும் தெரிந்தது. கந்தன் எழுந்து அய்யா , இந்த நேரத்துல ராணியை எப்படிக் கூட்டியாரதுஎன்று பெரிய அம்பலத்தை நோக்கிக் கேட்டான்.

அவள ஏன் இங்க கூட்டியார. அவ சார்பா நீ அவன் மன்னிப்ப வாங்கிக்கஎன்று கூறிவிட்டு மணிப்பிள்ளையை நோக்கி ஏலம் விடுறதுக்கு வச்சிருக்கிற அம்மனோட பூசைச் சாமான்களோட இருக்கிற அம்மனுக்குச் சாத்துன சேலய எடுத்துக்கிட்டு வா. போன வருசம் ஏலம் போன தொகைக்கே இப்ப கந்தன் ஏலம் எடுத்ததா எழுதிக்கஎன்றார்.

மணிப்பிள்ளை கோவிலுக்குள் சென்று எலுமிச்சம் பழ மாலை, பூமாலை, தாம்பாளத் தட்டு வாழைப்பழம், பூசணிக்காய் என பரப்பி வைத்திருத்த இடத்திலிருந்த லேசான ஒளியில் மின்னிய வெள்ளிச் சரிகையிழைத்த சிவப்புக் கரையுடன் கூடிய பச்சைப் புடவையை எடுத்து வந்தார்.

போன வருசம் ஏலம் போன தொகை என்னன்னு நோட்டப் பாத்து பிறகு சொல்றேன்என்றபடி கந்தனிடம் நீட்டினார். கத்தன் எழுந்து அம்மன் இருக்கும் திசையை நோக்கி வணங்கியபின் குனிந்து புடவையை வாங்கிக் கொண்டான்.

கந்தா அந்தப் புடவையைக் கொண்டுக்கிட்டு இங்க வா என பெரிய அம்பலம் அழைத்தார். புடவையை கட்டிக் கொள்ளச் சொல்வாரோ என்ற யோசனையுடனேயே அவர் அருகில் சென்றான் கந்தன்.

பயப்படாதகட்டிக்க வேண்டாம். தோள்ல இருந்து உடம்புக்கு குறுக்கால முந்தானை மாதிரி போட்டுக்கிட்டு அந்த ஓரமா நில்லுஎன. கோவிலின் ஓரத்தை கைகாட்டினார்.

கந்தன் புடவை மடிப்பை நீள வாட்டமாகப் பிரித்து முந்தானையைப் போல தோளிலிட்டு இடுப்பு பெல்ட்டை தளர்த்தி புடவைக்கு மேல் பொருத்தி இறுக்கினான்.

தீர்ப்பை முதலில் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தாலும் ராணியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டாம், கந்தனிடம் கேட்டாலே போதுமென்றதும் ஆசுவாசமடைந்தான் பாலன். புடவையை மேலில் போர்த்தியதைப் பார்த்தபோது வேடிக்கையாக இருந்தது. புடவை இருந்தாலும் அவன் கந்தன்தானே. எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னிப்புக் கேட்க தயாரானான்.

பெரியம்பலம் ஏன் இப்படியெல்லாம் பண்றாரு. இப்படி மன்னிப்புக் கேக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லஎன்று முனங்கிய சங்கரைப் பார்த்து ஏனிப்படி சொல்ற எனக் கேட்டான் குமார்.

கந்தன் பாலனவிட மூத்தவருதான். படிச்ச மரியாதைக்குரியவர்தான். அவர்கிட்ட எந்தத் தயக்கமும் இல்லாம மன்னிப்புக் கேட்டுவான் பாலன் என்றான் சுந்தரம்.

இதுலதான் அனுபவத்தோட பக்குவத்த நீ உணரனும். மன்னிப்புக் கேக்க வச்சிட்டோம்னு இவங்களும் மன்னிப்புக் கேட்டாலும் மீசையில மண்ணொட்டலையின்னு அவனும் நெனக்கிற மாதிரி தீர்ப்புக் கொடுத்தாலும் தேவையான பலனும் கெடச்சிடுமில்ல

அதென்ன தேவையான பலன்

பாத்துக்கிட்டேயிருஉனக்கே புரியும் என்று சொல்லிவிட்டு அமைதியானான் குமார்.

தண்டனை பெற்றதன் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி நினைத்த பெண்ணுக்கே தாலிகட்ட தயாராயிருப்பவனின் மலர்ச்சியான எதிர்பார்ப்புடன் இருந்தான் பாலன். இந்தச் சடங்கு எப்போது முடியும் எப்போது வீட்டில் போய் படுப்பது என்று எண்ணத் தொடங்கினான். செங்கல்வராய அம்பலம் பாலனை அழைத்தார். இதோ முடியப் போகிறது என்று ஆவலுடன் அருகில் சென்றான்.

கந்தனப் பாரு. இப்ப அவன் கந்தனில்ல. நம்ம அம்மனோட சேலையக் கட்டியிருக்கிற கந்தம் பொஞ்சாதி ராணி. அத மனசில நிறுத்திக்க

அங்க நிக்கிற ராணியோட காலத்தொட்டு இனிமே எம் பொஞ்சாதியத் தவிர வேற பொண்ணத் தொட மாட்டேன்னு சொல்லி மூனுதடவ விழுந்து கும்பிட்டுட்டு நூறு ரூபாய உண்டியல்ல போட்டுட்டு வாஎன பாலனை நோக்கிக் கூறினார்.

கூட்டத்தினர் எந்தச் சத்தமும் எழுப்பாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கந்தனை நெருங்கும் போதே பாலனின் முகம் மலர்ச்சியெல்லாம் வடிந்து இறுகியது. புடவையை அருகில் பார்த்தபோது ராணி இழுத்துச் செருகியிருப்பது நினைவில் தோன்றியது. ராணியை நினைக்கக் கூடாது. இது கந்தன்தான். என்னைவிட மூத்தவர். ஆசீர்வாதம் பெறுவது போலத்தான். எந்தத் தாழ்வும் இல்லை. எதுவும் மாறப் போவதில்லை என அழுத்தமாக மனதிற்குள் கூறிக்கொண்டிருந்தபோதே அவள் சிரிக்கும் போது உயர்ந்து இழுபடும் புருவம் அணுக்கத்தில் தெரிந்தது. லேசாக புன்னகைக்கும்போது மடியும் கீழுதடின் கோடுகள் நெளிந்தன.

பாலா ஏன் நிக்கிற. வேகமா ஆகட்டும் வேல கெடக்குதுஎன்று கணேசக் கோனார் பாலனின் தோளை அழுத்தினார்.

கீழே குனிந்து இனிமே எம் பொண்டாட்டியத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தொடமாட்டேன்என்று கூறியவாறு காலைத் தொட்டான். மிளிரும் கரு வண்ணத்தின் பூசினாற் போன்ற இடையுடன் ஒரு காலை நேராகவும் மற்றொரு காலை சற்று வளைத்தபடியும் நின்று கொண்டிருந்தாள்.

திடுக்கிட்டு நின்றவனைப் பார்த்து பாலனின் நண்பன் அருகில் வந்து என்ன மச்சான். யோசிச்சிக்கிட்டு நிக்கிற. நம்ம நெனச்ச மாதிரிதானே நடக்குது. எதுவும் மாறாது. சட்டுனு முடிஎன்று காதோடு கூறி தோளில் தட்டினான்.

தலையை உலுக்கிக் கொண்டு வேகமாகக் குனிந்து இனிமே எந்தப் பொண்ணையும் தொடமாட்டேன் என்றபோது கட்டை விரலைவிட நீண்ட பக்கத்து விரலில் இருந்த மெட்டி ஒளிர்ந்து கரண்டைக் காலின் வளவளப்பு தெரிந்தது.

வேகமாக நிமிர்ந்தபோது கந்தன் லேசாக நகர கோவிலுக்குளிருந்த அம்மனின் முகம் தெரிந்தது. ஒரு கணம் மின்னல் வெட்டியதென அருகில் நிற்பவளெனத் தோன்ற, உடல் நடுங்கியது.

நண்பன் மீண்டும் முதுகை அழுத்தியவுடன் அம்மா தாயே, என்ன மன்னிச்சிடு இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டேன் என்றவாறு நெடுஞ்சான்கிடையாக விழுந்தான். அவன் நண்பன்தான் அவனை தூக்கி கையில் நூறு ரூபாயைக் கொடுத்து மணிப்பிள்ளை நீட்டிய உண்டியலில் போட வைத்தான். போட்டதும் கைத்தாங்களாக பெரியம்பலத்திடம் கூட்டி வந்தான். “இனிமே ஒன் வாழ்க்க குறையில்லாம இருக்கும் என்று கூறியபடி கையிலிருந்த திருநீறை பூசினார். அவன் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க தப்பு பண்ண மாட்டேன் .. தப்பு ..பண்ணமாட்டேன்என உதடு துடித்துக் கொண்டிருந்தது. செந்தியம்பலமும் எழுந்து அவன் தோள் மேல் கை போட்டபடி கூட்டிச் சென்றார்.

பாலன் சோர்ந்து கலங்கியபடி மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்த கந்தனின் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்ட சுப்பையா நிம்மதியாக உணர்ந்தான்.

என்னதான் ஆச்சு பாலனுக்கு எனக் கேட்ட சங்கரிடம் அதையெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது எனக் கூறிவிட்டு பெரியம்பலத்தைப் பார்த்து அய்யா, காழாஞ்சியக் கொடுக்க ஆழம்பிங்கய்யா.. நேரமாச்சு என்று குரல் கொடுத்தான் குமார்.

அமாசை – தன்ராஜ் மணி சிறுகதை

“ஏம் பாய் நிறுத்திட்டிங்க,” என்றான் துரை.
“இன்னும் வண்டி சேந்தப்புறம் மொத்தமாதான் கணவாய தாண்டனும்,” என்றார் ஜலீல்.
“பாய் போன ட்ரிப்பு வந்தப்ப இப்படி எல்லாம் நிக்கலயே,” என்றான் குழப்பமாக.
“இன்னிக்கி அமாசடா. அமாசன்னிக்கி எந்த லாரிகாரனும் ராத்திரில தனியா இந்த கணவாய தாண்டமாட்டான்,” என்றுவிட்டு வண்டியை விட்டு இறங்கி முன்னால் நிற்கும் வண்டிக்காரனிடம் பேசுவதற்கு சென்றார்.

வண்டியின் இன்னொரு டிரைவர் மதியண்ணன் அயோத்தியாபட்டணம் தாண்டியவுடன் பெர்த்தை போட்டு படுத்துவிட்டார். அவர் எழுந்திருப்பதாக தெரியவில்லை.
துரை டார்ச் லைட்டை எடுத்து கொண்டு கீழே இறங்கினான். டயர்களை தட்டிப் பார்த்துக் கொண்டு வண்டியை ஒரு சுற்று சுற்றி வந்தான்.

சென்னை செல்லும் தனியார் சொகுசு பேருந்துகள் லாரிகளை சீறிக் கொண்டு கடந்தன. ஒவ்வொரு வண்டி கடக்கும் போதும் துரையின் முகத்தில் காற்றை அள்ளி வீசி அவன் தலையை கலைத்தது. அது அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு, வண்டியின் மேல் சாய்ந்து நின்று அடுத்த வண்டி வந்து தலையை கலைக்க கண்ணை மூடி காத்திருந்தான்.
சற்று நேரத்தில் ஜலீல் வந்தார். “ஏறு,” எனச் சொல்லிக் கொண்டே வண்டிக்குள் ஏறினார்.
துரை வண்டிக்குள் ஏறி கதவோரம் இருந்த மர பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பின்னால் திரும்பி பார்த்தான். அவர்கள் லாரிக்கு பின்னால் இன்னும் ஒரு பத்து லாரிகள் நின்று கொண்டிருந்தன.
லாரிகள் மெதுவாக கணவாயை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

“பாய் எல்லா பஸ்ஸிகாரனும் சல்லு சல்லுனு போறான். நம்ம மட்டும் எதுக்கு இப்படி கூட்டம் சேத்துகிட்டு போறம்,” என்றான்
ஜலீல் சிரித்தார். “ பஸ்ல நிறைய ஜனம் இருக்குடா, அப்புறம் என்ன பயம். அதுவுமில்லாம பண்ணெண்டு டன்னு வெயிட்ட வெச்சுகிட்டு வரட்டு வரட்டுனு ஏற முடியாமயா ஏறறான் , அவம்பாட்டுக்கு உட்டடிக்கிறான், காடும் இருட்டும் அவன் கண்ல எங்க படும்,” என்றார்.
“ஏம் பாய் அமாவாசைனா பேய் பிசாசெதாவது திரியுமா இந்த காட்ல,” என்றான்.
ஜலீல் எதுவும் சொல்லவில்லை. துரைக்கு இருப்பு கொள்ளவில்லை.
“இந்த காலத்துல கூட இத்தன பேரு பேய் பிசாசெல்லாம் நம்புறிங்களா?” என்றான்

வண்டிகள் நின்றன. ஜலீல் இன்ஜினை ரன்னிங்கில் வைத்துவிட்டு நியூட்ராலாக்கி ஹாண்ட் பிரேக்கை இழுத்துவிட்டார்.
“அந்த எலுமிச்சம் பழத்த எடுத்துகிட்டு எறங்கு,”  என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் இறங்கி விடுவிடுவென்று நடந்தார். துரை டாஷ் போர்டை திறந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு இறங்கினான். அத்தனை லாரிகளிலும் இன்ஜின் ஆனில் இருந்தது, லோ பீமில் ஹைட் லைட்டுகள் மஞ்சளாய் எரிந்து கொண்டிருந்தது. அந்த இடம் கார்த்திகை தீபத்தன்று அவன் ஊர் தெருக்களில் நிரம்பி இருப்பது போல் மஞ்சள் ஒளி நிரம்பி அழகாக இருந்தது.
லாரி ட்ரைவர்கள் கூட்டமாக காட்டுக்குள் இறங்கிச் சென்று ஒரு சூலம் நட்டு வைத்திருந்த இடத்திற்கு முன் நின்றனர். அனைவர் முதுகும் தங்க முலாம் பூசியது போல ஜொலித்தது. துரை ஜலீலை பின்னால் இருந்தே அடையாளம் கண்டு கொண்டு, அவருகில் சென்று பழத்தை அவரிடம் கொடுத்தான்.

ஜலீல் இடுப்பில் இருந்த பட்டை பெல்டில் இருந்து ஒரு சிறு பேனா கத்தியை எடுத்து பழத்தை இரண்டாக வெட்டினார். சூலத்திற்கு முன்னால் இறைக்கப்பட்டிருந்த மஞ்சள் குங்கும கலவையில் இரண்டு பாதிகளையும் புரட்டி எடுத்து துரையின் கைகளில் கொடுத்தார்.
ஏற்றப்பட்டிருந்த கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு சற்று தள்ளி இருந்த திருநீறை எடுத்து கழுத்தில் வைத்துக் கொண்டார். துரையிடம் இருந்து பழத்தை வாங்கி கொண்டு, “கும்புடு, “ என்றார். துரை கற்பூரத் தீயில் கையை காட்டிவிட்டு, திருநீறை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டான்.

ஜலீல் பழத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, “முன்னாடி டயர்ல  வையி,” என்றார்.
சூலம் நின்ற இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாமலானவுடன் முதல் லாரி கிளம்பியது.
அத்தனை லாரிகளும் மலையை முக்கி முனகி ஏறி , காடு சூழ்ந்த சரிவில் இறங்கின.  முக்கால் மணி நேரத்தில் லாரிகள் காட்டை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய நெடுங்சாலையில் இறங்கின.

லாரி ஊத்தங்கரை செல்லும் ரோட்டில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“ஏம் பாய், சாதாரண ரோடு மாதிரிதான இருந்தது இதுக்கு எதுக்கு நின்னு ஒண்ணா வரனும்,” என்றான்.
“அது சாதாரணமான ரோடா தெரியணும்னுதாண்டா தொர,” என்றார் சிரித்தபடி.
“போ பாய். எங்காளுங்க நம்புனா செரி நீங்க கூட எதுக்கு இதையெல்லாம் நம்புறிங்க?”
“ரெண்டு கண்லயும் பாத்தத நம்பாம எப்டி இருக்கிறது,” என்றார்.
“ பேய பாத்தியா பாய்?“
“ பேயா நினைக்காம நம்மெல்லாம் பேய பாக்க முடியாது. ஆனா பேயடிச்சவன பாத்திருக்கேன். அவன அடிக்கும் போது கூட இருந்திருக்கேன் , இதே கணவாய்ல,” என்றார்.
துரைக்கு வேறு கேள்வி ஏதும் எழவில்லை. ஜலீலையே  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, “எப்போ பாய்?” என்றான்.
ஜலீல் சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு அஞ்சாறு வருசமுன்னாடி. அப்பவும் கல்கத்தாதான் ரெகுலரு. எங்கூட செகண்ட் ட்ரைவரு மோகன்னு ஒருத்தன் இருந்தான். அவங்கொஞ்சம் அரிப்பெடுத்த நாயி. வண்டிய நிறுத்தி சோறு திங்கறானோ இல்லயோ , காலு தரையில பட்டதும் எவளயாவது ஏறணும் அவனுக்கு.
படிக்காசுல பாதி இதுக்கே செலவு பண்ணிருவான்.
ரெண்டு வருசமா நாங்க இதே ரூட்டுலதான் போவோம்  ஆனா ஒரு தடவ கூட அமாச அன்னிக்கி க்ராஸ் பண்ணதில்ல, அந்த அமாச நாளு வர வரைக்கும். மோகந்தான் அன்னிக்கு வண்டிய ஓட்டிகிட்டு வந்தான். நான் அயோத்தியாபட்னம் தாண்டுனதும் பெர்த்த போட்டுட்டேன். நல்ல தூக்கம். திடீர்னு தொம்முன்னு ஒரு சத்தம் . நான் ஜெர்க்காகி பெர்த்து சங்கிலில முட்டி எந்திருச்சி ஒக்காந்தேன். வண்டி ஆப் ஆயி நின்னிட்டிருக்கு.
ஹைட் லைட் கூட எரியல. கரி மாதிரி இருட்டு.எங்கைய்யே எங்கண்ணுக்கு தெரியாதளவுக்கு இருட்டு.
நான் பயத்துல “ மோகா” னு கூப்புடுறேன்.
“ஒண்னில்ல பாயி வண்டி ரோட்ல செத்து கெடந்த எது மேலயோ ஏறிரிச்சு, எறங்கி பாக்குறேன்,”னு சொன்னான்.
“எங்க இருக்கோம்,”னு கேட்டேன்.
“கணவா குள்ள” னு சொல்லிட்டு டார்ச்சோட அவனும் கிளீனரும் கீழ எறங்கிப் போனாங்க.
முன்ன பின்ன வண்டி இல்ல இவன் தனியா கணவாகுள்ள ஏறிட்டானு தெரிஞ்சது. எனக்கு உடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது.
தனியா எதுக்குடா கணவாக்குள்ள ஏறுனேனு லாரிகுள்ள இருந்தே கத்துனேன்.
அதுனால என்னானு வண்டி முன்னால இருந்து அவனும் கத்துனான்.
பேசி ஒன்னும் ஆக போறதில்லனு நாலு கெட்ட வார்த்தைய வாய்க்குள்ள சொல்லிட்டு அவனுங்க வரட்டும்னு உக்காந்திருந்தேன்.
ரெண்டு பேரும் உள்ள வந்தானுங்க.
“வண்டில எதுவும் அடி படல பாயி, பெரிய கல்லு ஏதாவது ரோட்ல இருந்து டயர் பட்டு காட்டுக்குள்ள உருண்டிருக்கும்னு நினைக்கிறேன்,“னு சொல்லிகிட்டே வண்டியெ ஸ்டார்ட் பண்றான், வண்டி செல்பே எடுக்க மாட்டேங்குது.

கல்லு வொயர்ல ஏதாவது அடிச்சிருக்குமோனான் பாரு, எனக்கு நெஞ்சு அடிக்குற அடில நெஞ்செலும்பே பிச்சிக்கிட்டு வெளிய உழுந்துரும்னு நினைச்சேன்.
மோகா மூடிகிட்டு எந்திரினு அதட்டி அவன எழுப்பிட்டு நான் ட்ரைவர் சீட்ல உக்காந்தேன்.
சாவிய வெளிய எடுத்து திரும்ப உள்ள போட்டு திருப்பிட்டு,  ஸ்டார்டர மேல இழுத்தேன். வண்டி செல்ப் எடுத்து ஸ்டார்ட் ஆயிருச்சு.
ஹெட் லைட்டை ஆன் பண்ணிட்டு வண்டிய நகத்த போறேன், மோகன் கியர் ராட புடிச்சிகிட்டு “எந்திரி பாயி இது என் டர்னு,” ன்றான்.
“டேய் வெளயாடாத, கணவாய தாண்டிட்டு வண்டிய உன்கிட்ட குடுத்தர்றேன்,” னு சொன்னேன்.
“ஆமா நான் நேத்து லைசென்ஸ் எடுத்துட்டு இன்னிக்கி லைனுக்கு வந்திருக்கேன் நீ எனக்கு காட் ரோட்ல எப்படி ஓட்றதுனு சொல்லி குடுக்கறதுக்கு, எந்திரி மொதல்ல,”னான்.
அங்க உக்காந்து சண்ட போட்டுட்டு இருந்தா சரி வராதுனு வண்டிய அவன்ட்ட குடுத்தேன்.
வண்டிய எடுத்து ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டியிருப்பான், வண்டி எது மேலயோ ஏறி எறங்கி தொம்முனு சத்தத்தோட நின்னது. இன்ஜின் ஆப் ஆகி, ஹைட் லைட்டும் அதாவே ஆப் ஆயிருச்சு.
இந்த தடவ நானும் கீழ எறங்கிப் பாத்தேன். முன்னாடி ஒன்னுமே இல்ல. வண்டிய சுத்தி சுத்தி பாத்தும் கல்லடியோ, காட்டு மிருகம் அடிபட்ட ரத்த கறையோ ஒன்ணுமே இல்ல.
மோகன் திரும்பவும் வண்டில ஏறி நான் செஞ்ச மாரியே சாவிய எடுத்து போட்டு, ஸ்டார்டர தூக்குனான். வண்டி செல்ப் எடுக்கல.

கோவத்துல ஸ்டேரிங்க போட்டு ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பிச்சிட்டான்.
“நீயா நானானு பாத்திடுரேண்டி இன்னிக்கி உன்ன,”னுஆங்காரமா ஸ்டார்டர புடிச்சி இழுக்க ஆரம்பிச்சிட்டான். அவன சீட்ட விட்டு கிளப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. திரும்பவும் நான் உக்காந்தேன். ஸ்டார்டர இழுத்ததும் செல்ப் எடுத்துருச்சி. நான் பாட்டுக்கு கியர தட்டி வண்டிய கெளப்பிட்டேன். இந்த தடவ ராட்ல கை வெச்சானா ஓங்கி ஒரு அப்பு அப்பலாம்னு நினைச்சிருந்தேன், அவன் கைய வெக்கல, பேசாம உட்கார்ந்திட்டிருந்தான். அங்க புடிச்சவன் ஊத்தங்கர வந்துதான் வண்டிய நிறுத்துனேன்.

அன்னிக்கு அவன தூங்க சொல்லிட்டு நானே ஓட்டிட்டு, அடுத்த நாள் அவன்ட்ட வண்டிய கொடுத்தேன். அந்த ட்ரிப்பு முழுக்க எப்பவும் போலதான் இருந்தான். நிக்கற இடத்துல எல்லாம் எவளயாவது புடிச்சி போட்டுகிட்டு. சொல்லப் போனா வழக்கத்தவிட அதிகமா ஆடிக்கிட்டு இருந்தான். ஊருக்கு திரும்பி வர ரெண்டு நாள் இருக்கும் போது லைட்டா காய்ச்சலா இருக்குனு படுத்தான். சேலத்துக்குள்ள நுழையும் போது அவன் ஒடம்பு ஓவர் ஹீட்டான ரேடியேட்டர்  மாதிரி கொதிச்சிகிட்டு இருந்துச்சு. அவன ஆஸ்பித்திரில சேத்துட்டுதான் நான் லோடே எறக்க போனேன்.

ஒரு வாரம் ரெஸ்ட் எல்லாம் முடிஞ்சு வண்டியேற வந்தா மோகன காணம். மொதலாளி இன்னும் அவனுக்கு ஒடம்புக்கு முடியல , எயிட்ஸ் ஏதாவுது இருக்குமோனு டெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்கன்னு சொன்னாரு. எனக்கு ஒரே கஷ்டமா போச்சு. வண்டி ஏறனும் , போய் பாக்கவும் முடியாது. சரி ட்ரிப் முடிஞ்சு வந்தப்புறம் போய் பாத்துக்கலாம்னு கெளம்பிட்டேன்.
பதினெட்டு நாள் கழிச்சு நான் வண்டி இறங்குறேன் அப்பவும் ஆஸ்பத்திரிலதான் இருக்கானு சொன்னாங்க. ஆனா எயிட்ஸ் இல்ல, வேற ஏதோ சொல்றாங்க, காச்ச மட்டும் கொறய மாட்டேங்குதுனு சொன்னாங்க.

அன்னிக்கு வெள்ளிக்கிழம. வீட்டுக்கு போயி குளிச்சிட்டு தொழுவ கூட போகாம அவன பாக்க பெரியாஸ்பித்திரிக்கு போனேன். அங்க அவன் இருந்த கோலம்.

ஜலீல் சொல்வதை நிறுத்திவிட்டார், சற்று நேரம் இன்ஜினின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்ததது. தொண்டையை செருமி கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்
அப்படி எல்லாம் யாருக்குமே வர கூடாதுடா தொர. வெறும் எலும்பா கெடந்தான். வெறும் எலும்பு. அவனால எதையும் சாப்பிட முடியல. சாப்டாலும் வாந்தி வந்திருது இல்ல பேதி ஆகுது.
என்ன பாத்ததும் பாயி பாயினு ஒரே அழுக. எனக்கும் கண்ணுல இருந்து தண்ணி ஊத்திகிட்டே இருக்கு. எல்லாம் செரியாயிரும் மோகா எல்லாம் செரியாயிரும்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தேன். எனக்கு வேற என்ன சொல்றதுன்னும் தெரியல.
அவம் பொண்டாட்டிய டீ வாங்கிட்டு வானு அனுப்பி வெச்சுட்டு என் கிட்ட சொன்னான், “எனக்கு செரியாவாது பாயி, அவ மொத்தமா உறிஞ்சி எடுத்துட்டா,” னு சொல்லிட்டு அழுவறான்.

“எவடா, என்னத்த உறிஞ்சினா,”ன்னேன்.

“அமாச அன்னிக்கி கணவாக்குள்ள. கணவாக்கு முன்னால வண்டி எதுவும் வெயிட்டிங்ல இல்ல, நம்ம வண்டிதான் மொதல் வண்டி. கூட்டம் சேத்த நின்னா ஒரு மணி நேரமாவது ஆவும். எனக்கு ஊத்தங்கர போவனும்னு இருந்தது. சீக்கிரமா போனா நல்ல கிராக்கி ஏதாவது மாட்டும் இல்லாட்டி கெழுடுங்கதான் கெடக்கும். நீ நல்லா தூங்கிட்டிருந்த , அப்படியே வண்டிய கணவாகுள்ள உட்டுட்டேன். கொஞ்ச தூரம் கூட போகல தீடீர்னு ஒண்ணுக்கு முட்டிகிட்டு வந்தது. வண்டிய நிறுத்தி இறங்கி ஒண்ணுக்கடிச்சிட்டு திரும்புனா , ஐட்டங்காரி ஒருத்தி பேக்க மாட்டிகிட்டு போய்ட்டு இருந்தா. விசிலடிச்சி கூப்டேன், பக்கத்துல வந்தா. இந்த காட்ல என்ன பண்றனு கேட்டேன். ஒரு லாரிக்காரன் ஏத்திகிட்டு வந்தான், வேல முடிஞ்சு திரும்ப ரோட்டு பக்கம் போறேன்னா. சின்ன வயசுக்காரி , பாக்க வேற அம்சமா இருந்தா. ஒற போட்டானானு கேட்டேன், போட மாட்டேனு சொல்லிட்டான்னா. கழுவ தண்ணி குடுக்கலாம்னா லாரிக்கு வரணும், நீ எந்திரிச்சா சத்தம் போடுவ, விடவும் மனசில்ல. வாய் வெக்கறியானு கேட்டேன். சரின்னா.
முடிஞ்சதும் காச குடுத்துட்டு வந்துட்டேன். வண்டிய கொஞ்ச தூரம் ஓட்டிக்கிட்டு வந்தப்புறம்தான் கவனிச்சேன் எந்திரிச்சது எறங்கவே இல்ல, நெட்டு குத்தலா நிக்குது. தொடய ரெண்டயும் சேத்து அழுத்தி நசுக்குனா எறங்கும்னு அழுத்துனேன், வண்டி எது மேலயோ ஏறி ஆப் ஆயி போச்சு.
அப்புறம் நீ எந்திரிச்ச. திரும்ப நின்னப்பவும் இதே கததான். சரி வண்டிய குடுத்துட்டு தூங்கி எந்திரிச்சா சரி ஆயிரும்னு படுத்தேன்.

அடுத்த நாளும் அப்படியேதான் இருந்தது. ஆனா அதுக்குள்ள எனக்கு இது ஒரு மாதிரி பழகிருச்சி. ஆந்திரால போனன்ல, அவ கையெடுத்து கும்புட்டு கதறிட்டா. எனக்கு சந்தோசம் தாங்கல. எப்பவும் போறதவிட அதிகமா போனேன். ரெண்டு மூணு தாட்டி போனப்புறம்தான் கவனிச்சேன் எனக்கு கஞ்சி வரவே இல்ல, கணவாய்ல தூக்குனது எறங்கவே இல்ல.
ஒரு பத்து நாளைக்கப்புறம் அங்க நரம்பெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிருச்சி பாயி. வலி கொஞ்சங் கொஞ்சமா அதிகமாயி காய்ச்ச வந்தது. நீ ஆஸ்பத்திரில சேத்தப்புறம் குறையவேயில்ல , அப்படியேதான் இருக்கு”

“இப்ப கீழ எறங்கிருச்சானு,“ கேட்டேன்.
லுங்கிய தூக்கி காட்னான், பனை மரம் மாதிரி நெடுக்கா நின்னுகிட்டிருக்கு. அவன் உடம்புக்கும் அது இருந்த இருப்புக்கும் துளி கூட சம்மந்தமில்லடா தொர.
எனக்கு உடம்பெல்லாம் ஆடி போச்சி.

ரொம்ப வலிச்சா டாக்டரு வந்து அங்க ஊசி போட்டு ரத்தத்த எடுப்பாங்க. அப்ப வடிஞ்சிரும். திரும்ப பெருத்து பெருத்து ரெண்டு நாள்ல இப்ப இருக்க மாரி ஆயிரும். அங்க அடிபட்டா இப்படி ஆவுமாம். ஏதோ வாயில நொலயாத வியாதி பேரு சொன்னாங்க.
இப்படி யாருக்காச்சும் வந்தா நாலைஞ்சு நாள்ல செரியாயிருமாம். எனக்குதான் செரியாவே மாட்டேங்குது . அவங்களும் என்னன்னமோ மாத்திரையும் ஊசியும் போட்றாங்க , குடுக்கும் போது கேக்குது அப்புறம் திரும்ப வந்துருதுன்னான்.

நான் கொஞ்ச நெரம் இருந்துட்டு கெளம்பி வந்துட்டேன். அந்த ரெஸ்ட் வாரம் முழுசும் தெனமும் அவனைப் போய் பாத்தேன். அங்கயே கெடந்தனு வையேன்.  டாக்டருங்க வந்து வந்து பாத்தாங்க, ஆபரெசன் பண்லாம் அது இதுனு பேசுனாங்க. மோகனுக்கு நாங்க பேசற பேச்செல்லாம் காதுல உழுந்த மாரியே தெரில. அவம் பாட்டுக்கு ஒரு ஒலகத்துல இருந்தான்.
நான் அடுத்த ட்ரிப் போய்ட்டு வண்டி எறங்கும்போது அவன் செத்து  நாலு நாள் ஆயிருந்தது.

மீண்டும் சற்று நேரம் லாரி இன்ஜின் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.
தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல, “அந்த பொம்பள மோகினிப் பிசாசா?” என்றான் துரை

“ஒவ்வொரு அமாச அன்னிக்கும் ஒரு மலைல இருந்து இன்னொரு மலைக்கு இந்த கணவா வழியாதான் பேய்ங்க, காத்து கருப்புங்க போவும்னு சொல்றாங்க. அப்படி போவும் போது அதுங்க மனுசங்கள அடிச்சிற கூடாதுனுதான் வெள்ளகோவில் முனிப்பன அங்க நிறுத்தி வெச்சிருக்காங்க. ஆனா எல்லா பேயும் எல்லா நேரமும் முனிப்பன் பேச்ச கேக்கறதில்ல,“
சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்

“இப்படி க்ராஸ் பண்ணி போற பேயிங்க மனுசனுக்குள்ள ஆட்டம் போட்டுகிட்டு இருக்கற பேய உறிஞ்சு எடுத்துட்டு மனுசன சக்கயா உட்டுட்டு போயிரும்.”

துரை திடுக்கிட்டு கண்கள் விரிய,  “அப்ப அவருக்குள்ள ஒரு பேயி இருந்திச்சா?” என்றான்

“பேயில்லாத மனுசன் ஏதுறா தொர. அதுங்கள ஆட உடறவன் அல்லாடி சாவறான். அடக்கி வெச்சிருக்கவன் அமைதியா சாவறான்,” என்றார் ஜலீல்.

துரைக்கு சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. பாயை வண்டியை நிறுத்த சொல்லலாமா என நினைத்தான். ரோட்டோரத்தை பார்த்தான், அமாசை இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஊத்தங்கரைகே போய்விடலாம் என்று அடக்கி கொண்டு உட்கார்ந்து விட்டான்.

வளர்பிறை – ஜீவ கரிகாலன் சிறுகதை

“அப்பா நான் பாத்துக்கறேன் நீங்க போயிட்டு வாங்க ”

“ சரிப்பா ”

“ஹாஸ்பிட்டல் கேண்டீன் வேணாம். அஞ்சரை மணி ஆச்சுல்ல பஸ்ஸ்டாண்ட் கிட்ட இருக்கும் கடைல போய் காபி சாப்பிடுங்க”

“சரிப்பா ”

“மறுபடியும் ப்ரிண்ட் போட்டு கொண்டு வந்துருக்கேன் நீங்களே போய் வீட்ல வச்சுருங்க”

இதயத்தின் கனம் இருமடங்காக அப்போது கூடியிருந்தது அவருக்கு. தொங்கிய முகத்துடன் அறையிலிருந்து வெளியேறினார்.

*

மருத்துவமனை நெடி அவர் மீது வீச ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிற்று. காபி மிடறு மிடறாய் இறங்குவதைப் போலவே அந்த சில மணித்துளிகளில் கடந்த இரண்டாண்டுகளும் உருளத் தொடங்கியது. ரகு நைட் ஷிஃப்ட் பார்த்திருப்பதால், சனிக்கிழமையாவது ஓய்வு எடுக்கவேண்டும் என்று குளித்துவிட்டு உணவு எடுத்துக்கொண்டு முடிந்தமட்டும் விரைவாகத் திரும்ப வேண்டும் என்கிற பதட்டத்தில் அவர் இருந்தார்.

பேருந்து நகரை விட்டு ஆற்றுப்பாலத்திற்கு வந்திருக்கும் வேளையில், கதிரவனின் ஒளி ஆரங்கள் கலங்கிய ஓடை போல் தன்னைச் சுருக்கிக்கொண்ட நதியின் வண்ணத்தை மாற்றியிருந்தது. ஆற்றின் மறுகரையில் படித்துறை, ஏழெட்டு புரோகிதர்கள் டோக்கன்படி காத்திருக்கின்ற வாடிக்கையாளர்களின் இறந்து போன உறவுகளுக்கு பிண்டங்களை வைத்து சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.

‘ஆடி அமாஸ்யை’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். கண்ணனுக்காக தர்ப்பணம் கொடுத்த நாள் வந்து போனது. சாகுற வயசாடா உனக்கு என்று அவர் உச்சரித்த ஸ்லோகங்களையெல்லாம் கண்ணனைத் திட்டுவதாகவே தோன்றியது. தனது வாழ்வின் ஒருபாதியை முழுமையாக அர்த்தமிழக்கச் செய்துவிட்டான் என்கிற வேதனை.

செல்பேசி.

“ப்ரகாஷா? நல்லாருக்கியாப்பா”

“ ”

“உன் வீட்டுக்காரி சவுக்கியமாப்பா?”

“ ”

“அம்மா. இருக்காப்பா. இப்ப பஸ்ல போயிட்ருக்கேன். வீட்டுக்குப் போனதும் கூப்டட்டுமா? ”

இப்போதெல்லாம் பொசுக்கென அவருக்கு கண்ணீர் வந்துவிடுகிறது.

அண்டை வீட்டில் உள்ளோரோடு நல்ல பழக்கம் உடையவர் என்றாலும், சில காலமாக யாரோடும் பேசுவதில்லை. அவர்களும் இவரைத் தொந்தரவு செய்வதில்லை. வீட்டிற்குள் வந்ததும் சோஃபாவில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார்.

*

தீராத ஆனால் வெளிப்படுத்த முடியாத கோபம் அவர் முதுமையைக் கூட்டிக்கொண்டே இருந்தது. உண்மையில் உடலில் இல்லாத திராணி அது, தன் மனைவி கீழே விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்களாகிறது. எல்லாமும் இவர் தான். ரகுவிற்குப் பெண் பார்த்து முடிவாகிவிட்ட நேரம் இப்படி நடந்துபோக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம் ஒத்திப்போட முடியும் என்கிற கவலை அவரையும் தளர்த்த ஆரம்பித்து இருந்தது.

அவரது மனைவி ஐ.சி.யுவிலிருந்து தனி அறைக்கு வந்தும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. திருமணத்திற்காக வைத்திருந்த பணம் இன்னும் சில நாட்களில் காலியாகிவிடும். அவரது மனைவி விழுந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என டாக்டர்கள் சொல்கிறார்கள். தவிர இரத்தக்கொதிப்பும் கட்டுக்குள் வாராததால் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கப் பணித்து விட்டார்கள். சந்திராவும் யாருடனும் பேசவில்லை, அவரது கணவரின் கேள்விகளுக்குக்கூட தலை மட்டும் தான் ஆட்டுவார். ரகு எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவன். திருமணம் தள்ளிப்போகும் அழுத்தமும் அம்மாவின் உடல்நிலையை பாதிக்கும் என்பதால் அவனும் ஒன்றும் நடக்காதது போலவே இருந்தான்.

சந்திராவின் ஒரே செய்கை, ஜன்னலை நோக்கிக் கை உயர்த்துவது. கை உயர்த்தியபடியே பல நிமிடங்கள் வைத்திருப்பார். தன் மனைவி என்ன கேட்கிறார் என்று அவருக்கே தெரிவதில்லை. சில சமயம் கடிந்துகொள்ளவும் செய்வார். ஏ.ஸி அறையில் எப்படி ஜன்னலைத் திறப்பது என்று தெரியாதவள் அல்ல என்று அவருக்குத் தெரியும். இருந்தபோதும் சந்திராவின் அடம் அவருக்குப் பல நேரங்களில் கோபத்தையே தந்தது.

“என்னன்னு சொல்லித் தொலை”

சந்திராவால் பேச முடிந்தும் ஏன் பேசாமல் இருக்கிறார் என டாக்டர்களே குழம்பினர். ஐ,சி.யுவிலிருந்து மாறியதைத் தவிர ஒரு முன்னேற்றமும் காணாமல் ரகுவும் இவருமாக மாறி மாறி சந்திராவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

*

அவர் குளியலறையில் இருக்கும்போது இருமுறை அழைப்பு வந்தது, ப்ரகாஷ் தான்.

“ப்ரகாஷ் என்னப்பா. ஸாரி குளிச்சிட்டு இருந்தேன். கூப்ட்டத மறந்துட்டேன்”

“ ”

“ரகுட்ட பேசுனியாப்பா. ஆமாப்பா அவளை விட எட்டு வயசு பெரியவன். முதல்ல நான்தான் போகணும்னு சொன்னா உன் அம்மா கேட்கிறாளா”

“ ”

“அப்படியா.. நானா..? ”

“ ”

“இல்லப்பா அழலாம் இல்லை, அதயெல்லாம் கடந்தாச்சு. இன்னொரு பிள்ளையும் இருக்கறான்னு சந்திராதான் நினைக்கல. ஆனா நானும் அப்படியே இருக்க முடியுமாப்பா?”

“ ”

“அவனுக்கென்ன படிச்ச உடனே சம்பாதிக்க ஆரம்பிச்சான். இந்த இன்னிக்கு வரை ஆறு லட்சமாகியிருக்கு. மொத்தமும் அவன் கல்யாணத்துக்கு சேர்த்து வச்சதுதான். அவ சித்தபிரம்மை புடிச்சது மாதிரி கண்ணனைத்தான் நெனச்சுக்கிட்டு இருக்கா. நீயே சொல்லு .. செத்தவன் என்ன திரும்பியா வருவான்”

“ “

“ தெரியும். எனக்கு நீ வேற கண்ணன் வேற கெடையாதுப்பா.. ”

“என்னது இந்தியா வந்துருக்கியா. இங்க வர்றியா.. ”

“ ”

“ சரி உனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வரேன்.. இல்ல இல்ல.. எடுத்துட்டு வரேன்”

அவன் பேசி முடிப்பதற்குள் துண்டித்தார்.

**

மருத்துவரைப் பார்ப்பதைத் தவிர வேறு எதற்கும் வெளியே வராத சந்திரா. பிரகாஷின் திருமணத்திற்கு முன்னின்று வேலைகள் செய்தாள். வேலைகள் செய்தாளே தவிர அவள் யாரோடும் பேசவோ சிரிக்கவோ இல்லை. ஆனால் அவள் அழுததும்தான் இல்லை. கண்ணனின் மரணச்செய்தியை ப்ரகாஷ் மூலம் அறிந்த போது அவன் பெயரைச் சொல்லி அமர்ந்தவள்தான். இறுதிச்சடங்கு முடித்து அவன் உடலை எடுத்துச் செல்லும்போதும் அழாமல் வெளியே வந்து நின்று இருந்தாள். எல்லோருக்கும் சந்திராவின் மீது பயம் வந்தது. அப்போது அவள் பலரோடும் பேச்சை நிறுத்திவிட்டாள்.

சந்திரா, ப்ரகாஷ் வருவதற்கு முன்பே கண்ணன் வந்து தன்னை ஆற்றுப்படுத்திவிட்டுப் போய்விட்டான் என்று சொன்னால், அதை யாரும் நம்ப மாட்டார்கள். தான் உயிரோடு இருக்க கண்ணன்தான் காரணம் என்றும் தன் இதயத்தை பலமானதாக்கிவிட்டவன் அவன்தான் என்றாலும் வீட்டில் பிரச்சனைதான் மிஞ்சும். சந்திராவை குணப்படுத்த வேண்டுமெனில் கண்ணன் வாசித்த புத்தகங்கள், உபயோகித்தப் பொருட்கள் எவையும் வீட்டில் இருக்கக்கூடாது என எல்லாவற்றையும் பழைய பொருட்கள் கடையில் விற்று விட்டார்கள். அன்றிலிருந்து ரகுவிடமும் அவள் பேச்சு வார்த்தை குறைந்துபோனது.

டாக்டரிடம் அழைத்துச் சென்றதில், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார். மனநல மருத்துவர் எந்தவிதமான ட்ரீட்மெண்ட்டையும் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவரிடம் சகஜமாகப் பேசினார். அது கண்ணனும் மனநல ஆலோசகர் என்கிற காரணத்தால்தான் என டாக்டரே பதில் சொன்னார். சந்திராவின் தூக்கத்திற்கான மருந்துகளை மட்டும் பரிந்துரைத்தார். சந்திராவிடம் பரிசோதித்ததில் சந்திரா இன்னமும் கண்ணனுடன் பேசிக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருப்பதாகச் சொன்னதை தெரிவித்தார். ரகுவுக்குமே அம்மா மீது முதலில் கடுங்கோபம் இருந்தது. டாக்டர் அவரது நிலையை சொல்லவும் துடித்து விட்டான். அன்று முதல் அவர்களது வீட்டில் சந்திராவை ஒரு குழந்தையைப்போல் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.

தூக்க மாத்திரை போட்டு இருந்தாலும் அவ்வப்போது தூக்கம் கலைந்து எழுந்துவிடுவார். பெரும்பாலும் அவர்களது வீட்டின் டைனிங் டேபிளில் இருள் கவிழ்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பார். என்னதான் சந்திராவின் நிலை தெரிந்தாலும், சந்திராவின் கணவர் ஒருநாள் கண்ணனின் போட்டோவைக் கீழே போட்டு உடைத்துப் போடவும், சந்திராவின் அழுகை சப்தம் முதன் முறையாக அந்த தெருவிற்குள் கேட்டது. அடுத்த நாளே சமையலறையில் கீழே விழுந்து இடுப்பிலும் தலையிலும் காயம்.

**

மர பெஞ்சை தூக்க முடியாமல், டைல்ஸ் தரையில் இழுத்துக்கொண்டே வந்து அதன் மீது தடுமாறியபடி ஏறி, கண்ணனின் போட்டோவை மாட்டினார். அப்படியே தள்ளாடி கீழிறங்கினார். சப்தமே இல்லாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.

கண்ணாடியில் தன் முதுமையின் கோரம் இத்தனை வலிமையானதாக இருந்திருக்கத் தேவையில்லை எனத் தோன்றியிருந்தது. வெடித்து அழ ஆரம்பித்தார்.

ஏ கண்ணா… கண்ணா!!! என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டுருக்கியே

அம்மா பிள்ளை… அம்மா பிள்ளைன்னு… அவளையும் என்கிட்ட இருந்து பிரிச்சிடாதடா. உன் தகப்பனை ஏண்டா இப்படி தெனம் தெனம் கொடுமைப்படுத்தற, அந்தப் பைத்தியக்காரிக்கு நான் வேணாம போகட்டும், இன்னொரு புள்ளை இருக்குதுன்னு தெரியாதா?

தன்னை மீறிய கோபத்தில் அழுதபடியே அருகிலிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தார். திடீரென எங்கிருந்தோ வந்த காற்றின் வேகம், திறந்திருந்த வீட்டின் கதவை சாத்தியது. அதேநேரம் பெட்ரூமின் ஜன்னல் வழி வந்து கொண்டிருந்த அதே காற்று பெட்ரூமின் கதவை தள்ளியது கீழே வைத்திருக்கும் தக்கை சிக்கி பாதி மட்டும் கதவை சாத்தியிருந்தது. அந்த கணமே மின்சாரம் போக, வீட்டில் சொற்ப வெளிச்சம் பெட்ரூமின் ஜன்னல் வழி மட்டுமே வந்தது. சரியாக அவ்வெளிச்சம் டைனிங் டேபிளில் தலை வைத்திருந்த அவரது மீதும் குறுக்காக விழுந்தது. எதிர்புறமிருந்த இருட்டிலிருந்து மெல்லிதாய் ஒரு குரல்.

“ அப்பா.”

“யாரது.. யாரதெ”

“அப்பா நாந்தான்ப்பா…”

“எ… என். என்னது”

ஈஸ்வரா…. என்னால நம்ப முடியலை…. “யார் நீ”

நிசப்தமாய் சில விநாடிகள்

“கண்ணா… நீயா. என்ன வாழ்க்கடா இது”

“பதட்டப்படாதிங்கப்பா… இதுதான் வாழ்க்கை. ஒரு மரணத்தால் கூட சில சங்கிலிகள் அறுபடாது அப்பா ”

“ஐயோ வேண்டாம்ப்பா போயிடு..”

“நான் தான் போய்ட்டேனேப்பா”

அவருக்கு இப்படியான சண்டை கண்ணனோடு எப்பவும் இருக்கறதுதான். கண்ணன் இறந்த அன்றுகூடப் போய்த்தொலை என்று திட்டினேனே அது உண்மையாகிடுச்சே என்று தலையில் அடித்தபடி அழுதார்.

காற்றின் பலம் கூடுதலாக இருந்தது, அவர் உடலின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தியது.

“ அப்பா, இந்த ஒருமுறையாச்சும் கவனிங்கப்பா. அம்மாவவிட நான் உங்களை எண்ணித்தான் அதிகம் கவலைப்படுறேன். நானும் அம்மாவும் ரகுவை விட உங்களப் பற்றிதான் அதிகம் பேசுவோம். ”

“ என்னால எதையுமே கேட்க முடியலை.. எப்படி என் உடல் இந்த உசுரை இன்னும் தாங்குது. தயவு செஞ்சுப் போயிருடா கண்ணா ”

”போகும் காலம் வந்துருச்சு அப்பா. உடல் உசுரை தாங்குறதுன்னு சொல்றது தப்புப்பா. நம்ம உசுர்தான் உடலைத் தாங்குது. இன்னும் ஒரேயொரு விசயம் தான் சொல்வேன். நீங்க விரும்புற மாதிரி நான் புறப்படும் காலம் வந்துவிட்டது”

“ … ”

அவன் அவற்றைச் சொன்னான்.

*

ரகு போனில் அழைத்து, ப்ரகாஷ் வந்திருப்பதாய்ச் சொல்லும்போதே அப்பாவும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுவிட்டதை சொன்னார்.

“ அப்பா!!”

“ப்ரகாஷ் எங்க ரகு”

“அம்மாக்கிட்ட”

“ நீ வேணும்னா கிளம்பு”

“இல்லப்பா ப்ரகாஷ் பார்த்துட்டு வரட்டும். அவனை வீட்ல விட்டுட்டு, நம்ம வீட்டுக்குப் போறேன்.”

“ அவனை வீட்ல விட்டுட்டு அப்படியே படித்துறைக்குப் போறியா”

“அப்பா..”

“ஆடி அமாஸ்யைக்குத்தானே ரகு”

“அண்ணனுக்குப்பா ”

“அப்போ அவனும்…. ”

அதற்குள் ரகுவுக்கு அட்வகேட்டிடம் இருந்து போன் வந்தது.

“அப்பா MCOP கேஸ் ரிவார்ட் ஆகிருச்சாம்”

ரகு சொன்ன பதிலை முழுவதுமாக உள்வாங்கிடாது, சந்திராவின் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ரகுவும் கண்ணீர் விட்டபடியே அப்பாவைத் தொடர்ந்தான்.

உள்ளே சந்திரா ப்ரகாஷின் தலையில் கை வைத்தபடி ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தார். ப்ரகாஷ் சப்தமில்லாமல் அழுதுக்கொண்டிருந்தான். மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே வந்த அவரது கணவரின் நெற்றியில் குங்குமம் இருந்ததை கவனித்தார். உடல் சிலிர்க்கத் தொடங்கியது. ப்ரகாஷும் அவரைக் கண்டதும் அப்பா என எழுந்தான். அவன் தோளில் கைவைத்து அமர்த்திவிட்டு சந்திராவின் அருகில் சென்று பாக்கெட்டிலிருந்த காகித பொட்டலத்தை திறந்து குங்குமம் எடுத்து சந்திராவின் நெற்றியில் வைத்தார்.

இத்தனை நாட்களில், ஏன் கண்ணனின் மரணத்திற்கு பின்னர் இதுவே முதல் முறை. சந்திராவுக்கு கண்ணீர் வருவது இரண்டாம் முறை.

“உன் வீட்டுக்காரி எங்கப்பா”

“ஸ்டேட்ஸ்ல இருந்து வந்து இது மூணாவது நாள். அவளுக்கு இன்னமும் ஜெட்லேக் போகல. காலைல வரேன்னுதான் எழுந்தா. ஆனா மயக்கமா இருக்குன்னு படுத்துட்டா”

“பரவால்லப்பா.. அது” வேறு ஏதோ கேட்க வந்து நிறுத்திவிட்டு, சந்திராவைப் பார்த்து திரும்பினார். சந்திராவின் முகத்தில் குழப்பங்கள் தென்பட்டன. அவள் இருவரையும் வித்தியாசமாகப் பார்த்தார். அதற்குள் ரகு உள்ளே வந்து அப்பா அண்ணன் கேஸ்ல ரிவார்ட் ஆகிருக்குப்பா.

”ப்ச்ச்ச் ”

“ஸாரிப்பா ”

“எனக்கு ஏன்டா ஸாரி சொல்லுற” என்றபடியே ரகுவின் தோளைத் தட்டிக்கொடுத்தார். ப்ரகாஷின் போனிலிருந்து சப்தம். அழைப்பை எடுத்தபடி அறையை விட்டு வெளியேறினான். ரகுவும் அவனோடு நகர்ந்தான். இருவரும் வெளியேறிய பின்னர் மெதுவாக வந்து சந்திராவின் காதருகே சன்னமான குரலில் கேட்டார்.

“நம்ம ப்ரகாஷ் கல்யாணம் பண்ண பொண்ணு, கண்ணனுக்கும் ஃப்ரண்டு தானா?” என்று கேட்டார்.

அவர் மனதில் பிரகாஷ் கல்யாணத்தில் சந்திரா அத்தனை வேலைகளையும் முன்னின்று செய்தது நினைவில் திரையாக ஓடியது. சந்திரா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென சந்திராவின் நெற்றியில் முத்தமிட்டார்.

“என்ன மன்னிச்சுடு சந்திரா ”

அதற்குள்.

“அப்பா” ப்ரகாஷின் குரல், உற்சாகமாய் வெளிப்பட்டது. அறையை விட்டு வெளியே வந்து ப்ர்காஷிடம் என்னவென்று விசாரித்தார்.

“நல்ல விசயம் தான் ப்ரகாஷ்… ”

“அம்மா கிட்ட நம்ம கண்ணன் திரும்பவும் வருவான்னு சொல்லவாப்பா. அம்மா ஒருவேளை உளவியலா மாறலாம்லயா?”

“அது தேவைப்படாதுப்பா. ஒரு உசுரு புதுசா உன்னையும் உன் மனைவியையும் தேர்ந்தெடுத்துருக்கு. நீங்க அதற்கு உடல் கொடுக்கப்போறீங்க. இந்த செடி, விருட்சமாகி, அதுவும் விருத்தியடைஞ்சு புது வனம் உண்டாகும். அத ப்ரகாஷோட புள்ளையாவே நாங்களும் எடுத்துக் கொஞ்சுவோம். கண்ணன் நம்ம எல்லோரோடைய ஆரோக்கியத்துலயும், சந்தோசத்துலயும் ஒருநாள் எதுவாகவோ மாறுவான். அதுவரை கண்ணன் இன்னொரு உரு எடுக்கமாட்டான். ”

“அப்பா ”

“கண்ணன் எங்களோடதான் பா இருக்கறான் ”.

மீண்டும் சந்திராவின் அறைக்குச் சென்று, அவள் எப்பவும் கை தூக்கி காண்பிக்கும் ஜன்னலை முழுமையாகத் திறந்துவிட்டார்.

“என்னங்க”

சிரித்தபடியே கதவை சாத்திவிட்டு வெளியேறினார். ஏற்கனவே ப்ரகாஷையும், ரகுவையும் காரில் காத்திருக்க சொல்லியிருந்ததால் விரைவாகவே பார்க்கிங் நோக்கிச் சென்றார்.

மாலை நேரத்திலும் படித்துறையில் பிண்டங்களை வைத்து தர்ப்பணம் செய்து கொண்டிருந்தார்கள். கண்ணன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், அவருக்குள்ளே திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

பெயரென்ன : கண்ணன்

ராசி, நட்சத்திரம் :

இருவருமே சொன்னார்கள்.

*

சந்திரா கொஞ்சம் எழுந்து அமர்ந்தபடி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அணைத்துப் போட்டிருந்த விளக்கொளியையும் மீறி கதவின் இடுக்குகளின் வழி ஒளி கீற்றாகக் கோடு போட்டது.

“ அம்மா”

அதுவே கடைசி முறை எனச் சந்திராவுக்கு அவன் சொல்லிவிடுவான்.