கடுவா – இவான்கார்த்திக் சிறுகதை

ஒன்று :

“எவ்ளோ டோஸ் கொடுக்கலாம் இப்போதைக்கு” என்றான் சிபு

“வயசாச்சு , கொறச்சு குடுக்கதுதான் நல்லது , சைட் எஃபெக்ட்ஸ் நிறைய இருக்கும். ஆனா இது இல்லாம அவரால தூங்க முடியாது” என்றார் டாக்டர்

டாக்டர் முடிப்பதற்குள் சிபு “ராத்திரல எந்திரிச்சு கத்துராரு என்னல்லாமோ சத்தம் கேக்குது அந்த ரூமுக்குள்ள. நாலு வயசுல பொண்ணு இருக்கா. எங்கயையாவதுகொண்டு போய் விடவும் முடியல வச்சுக்கவும் முடியல”

“அவரோட உலகம் அது , அதுக்குள்ள உங்களுக்கு இடமில்ல” என்றவாறு தன் பெட்டியுள் இருந்த மருந்தை ஊசியினுள் ஏற்றிக்கொண்டிருந்தான்.

“அவரு வந்த அன்னிக்கு நைட் எம்பொண்ணு தாத்தா கத்துறாறுண்ணு பாக்க போயிருக்கா ,  நாங்க தூங்கிட்டோம் அவ கத்துற சத்தம் கேட்டுதா நாங்க ஓடிப்போய் பாத்தோம். கதவிடுக்குல அவரோட பின்பக்கம் மட்டும்தா தெரிஞ்சிது , அப்படியே நாலு கால்ல ஊந்து போறாரு. அப்பா நெஞ்சுல கைவச்சிட்டு நின்னுட்டிருந்தாரு. அவரோட மொகத்துல ஒரு பயம் இருந்துச்சு. அம்மா முட்ட வரும் போது பயந்துட்டே பால் குடிக்க போகுற கண்ணுக்குட்டி மாதிரி” என்று எங்கோ பார்த்து நினைவு படுத்திச்சொன்னான், நினைவு வந்தவனாய் “கதவுக்கு பக்கத்துல பொண்ணு மயங்கி கெடந்தா. கதவ மூடிட்டு அவள எழுப்புனா பீஸ்ட்..பீஸ்ட்னு கண்ண மூடிக்கிட்டா. அதுக்கப்பறம் அவ அந்தப்பக்கம் போறதேயில்ல” அவன் முகம் சிவந்து அதிகமாக பேசிவிட்டோமோ என்பது போன்றிருந்தது.

“காலைல எப்படி இருக்காரு. எதாவது அம்னாரமலிட்டி தெரியுதா” என்றார் டாக்டர்.

“அவர் எப்போவுமே நார்மலா இருந்தது கிடையாது. அவர அப்பா ஐயான்னு கூப்டுவாரு. சாகும் போது அப்பாக்கு தொண்ணூறு வயசு. எப்படியும் இவருக்கு ஒரு நூத்திபத்து வயசுக்கு மேல இருக்கும். இவர வந்து விட்டுட்டு அவரு போய் சேந்துட்டாரு” என்று சங்கடமாக சிரித்தான் “ஆனா பாத்தா வயசு தெரியாது பிசிக்கலி ஹீ ஸ் ஸ்ட்ராங்க். என்னால இப்போகூட தூக்கமுடியாத வெயிட்ட அவரால தூக்க முடியுங்குற மாதிரி இருக்கும். என்ன கேட்டிங்க….ஐயம் ஜஸ்ட் டைவர்ட்டிங் த டாப்பிக்”

“இல்ல பகல்ல எப்படி பிஹேவ் பண்றாரு”

“அது நார்மல்னு சொல்லலாம் , ரூம் விட்டு வெளிய வந்ததில்ல. எதவாது தேவண்ணா இருமுவாறு நம்ம கிட்ட போய் நிண்ணோம்னா தேவையானத கேப்பாரு. அவருக்கு கொஞ்சம் ஹார்மோன் பிராப்ளம் இருக்கும்னு நினைக்குறேன். அவரோட வாய்ஸ் கீச்சுக்கொரல்ல நல்ல ஜானிகி கொழந்தைங்க ஸ்டைல்ல பாடுற மாதிரி கேக்கும். ஒரு செயர் மேசை மாதிரிதா அவரொட இருப்பும் இருக்கும் இந்த விட்டுல. பட் நைட்ல உங்களால இமாஜின் பண்ணி பாக்கக்கூட முடியாது அவ்ளோ சத்தம். அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர் அதிகமா கேட்டது செயிண்ட் தாமஸ் மவுண்ட்கு போகாணும்னு திரும்ப திரும்ப “அங்க அங்க அங்க” அப்டின்னு சுட்டிக்காட்டுனதுதான். ரொம்ப கம்மியாதா சாபிட்டாரு. ஒரு குருவிக்கு அது பத்துமானு கேட்ட இல்லனுதா சொல்ல தோணும்” என்று சோபாவில் அமர்ந்தவாறே தலையை மட்டும் திருப்பி அந்த அறையை திரும்பிப்பார்த்தான்.

அந்த அறை சலனமற்றிருந்தது. அவர் அந்த நாற்காலியில் ஜன்னலின் வழியே தெரிந்த செயின்ட் தாமஸ் குன்றை பார்த்துக்கொண்டு மேல் சட்டையில்லாமல் அமர்ந்திருந்தார். பழுப்பேறிய வெள்ளை வேட்டி காற்றில் ஆடியது. கைகள் எரிந்த பழுத்த மரத்தின் கட்டைகள் போலிருந்தன. அடித்தால் நாம் இரண்டாக பிளந்து விடுவது போலிருந்தது. நரைபிடித்த தலை. தாடியுடன் நெஞ்சும் பஞ்சடைந்திருந்தது. உணர்கொம்புகள் போல மீசை சிலிர்த்துக்கொண்டிருந்தது. அவர் உடலே பொன்னிறத்திலிருந்தது. இவர்கள் இருவரும் பேசியதை அவர் கேட்டது போல தெரியவில்லை. அவர்கள் இருப்பதையே உணராததுபோல தோன்றியது.

விமானம் பறக்கும் சத்தம் மிக அருகாமையில் கேட்டது. சிபு சோபாவில் திரும்பி உட்காரவும் அதன் ஸ்பிரிங் கிரீச்சிட்டது.

டாக்டர் அந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டார். “அடிக்கடி இப்படி போகும் பக்கத்துல தான் ஏர்ப்போர்ட்” என்றான் சிபு.

எதிரே இருந்த டாகடர் “உங்க அப்பா அவர பத்தி எதும் சொல்லலையா”

“தெளிவா அவரும் எதும் சொல்லல , உங்களுக்கு அவலாஞ்சி தெரியும்ல.. ஊட்டிக்கு பக்கத்துல..நிறைய படம் கூட எடுத்துருக்காங்க அங்க. அந்த டாம் ரொம்ப ஃபேமஸ். நாங்க கூட அப்பா சொன்னதுக்கு அப்புறம் அங்க போயிருக்கோம். எங்க விட்டேன்” என்று சிபு டாக்டரிடம் கேட்டான். அவர் பதில் சொல்வதற்கு முன்பே “ஆ…அது நம்ம காமராஜர் டைம்ல கட்டுனது அதுக்கு முன்னாடி அங்க ஒண்ணும் கிடையாது வெறும் காடுனு அப்பா சொல்லிருக்காரு நமக்கு அத பத்திலா ஐடியாயில்ல. அங்கதா இவரு இருந்ததா அப்பா சொன்னாரு. அங்க மனுசங்க யாரும் இல்லன்னுதா ஃபாரஸ்ட் ரிப்போர்ட் சொல்லுது ஆனா ஒரு நாள் அப்பா நைட்டு பவர் ஸ்டெசன்ல எதொ ஓவர் லோட்னு பாக்க போய்ட்டு திரும்ப வரும் போது இவரு ஜீப் போற பாதைல மயங்கி விழுந்துருக்காரு. ரிசர்வ் ஃபாரஸ்ட்ல இருக்கக்கூடாதுன்னு ஊட்டிக்கு அனுப்பிடாங்க எதோ மடத்துல இருந்தாருண்ணு நெனைக்குறேன்” டாக்டர் அமைதியாக கேட்டார்.

“அதுக்கப்பறம் அப்பா அவர ஊட்டிக்கு போய் அடிக்கடி போய் பாத்துட்டு வருவாறு. திடீர்னு ஒரு நாள் இவர கூட்டிடு வந்து இங்க வச்சிட்டாரு”

டாக்டர் எழுந்து அவர் அமர்ந்திருந்த அறைக்குள் சென்றார். அந்த சலனம் அவரை எதும் செய்யவில்லை. அவர் கண்கள் விலங்கின் கண்களைபோல கருவிழி ஒற்றைக்கோடென சுற்றி பழுப்பேறிக்கிடந்தது போல டாக்டருக்கு தோன்றியது. அவரின் கையில் பஞ்சைவைத்து தடவி ஊசியை நுழைத்தார். அவர் திரும்பிப்பார்க்கவில்லை எந்தவொரு அதிருப்தியையும் தெரிவிக்கவில்லை. அறையின் மூலையில் சிலம்பம் போன்ற கம்பொன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. டாக்டர் அதை கவனித்து பின் அறையிலிருந்து வெளியே வந்தார்.

“பாத்தீங்களா நீங்க போனது கூட அவருக்கு தெரியல” என்று ரூமுக்குள் எட்டிப்பார்த்தான் சிபு.

“பகல் அவருக்கு ஒரு ஆழ்ந்த காத்திருப்பு மாதிரி தெரியுது எதையோ எதிர்பார்த்து. என்னோட தொடுகை கூட அவருக்குள்ள போன மாதிரி தெரியல.  நா முன்னாடியே சொன்ன மாதிரி அவரோட உலகுத்துல நாம இல்ல சொல்லப்போன நம்மள அவர் அனுமதிக்கல” என்று அவர் முன்பிருந்த அதேயிடத்தில் அமர்ந்தார்.

“சரிதான்…ஆனா அப்பாவ ராத்திரல கூட அவரு அனுமதிச்சாரு. அப்போவும் சத்தம் வரும். மொத்தமா எட்டு நாள்தா இவரு வீட்டுக்கு வந்ததும் அப்பா இங்க இருந்தாரு. திடீர்னு இறந்துட்டாரு. நாங்க யாருமே அப்பாடியாகும்னு நினைக்கல.”

“அப்போ அவரு இங்க வந்தே பத்து நாள்தா ஆகுது”

“ஆமா” என்றான் சிபு

“இன்னிக்கு நைட் நல்லா தூங்குவாரு , ஒரு டோஸ் எக்ஸ்ட்ராவாதா கொடுத்திருக்கேன். என்ன மாதிரி சத்தம் வரும் ?”

“அது தெளிவா சொல்ல முடியாது , ஒரு உறுமல்…வலில வர முனங்கல்…பூன அழுகுற மாதிரி அப்புறம் யாரோ ஓடுற மாதிரி சம்டைம்ஸ் செவத்துல ஓடுற மாதிரிகூட கேக்கும். அப்பா இருக்குறவர நாங்க அத கண்டுக்கல அவராச்சு அந்த ஆளாச்சுன்னு விட்டுட்டோம். அவரு மெண்டலி இல்னு ஃபீல் பண்றீங்களா ? என்று கேட்டு அவர் பதில் சொல்லும் முன்பு “எங்களுக்கு அப்படிதான் தோணுது. இவர் யாரு எங்கருந்து அப்பா கூட்டிடு வந்தாங்க எதும் தெரியாது. ஹோம்ல சேக்கனும்ணா யாரு என்னனு கேக்குறாங்க. ஒண்ணும் புரியல நீங்க என்ன நினைக்குறீங்க. அப்பா இருக்கும் போதே கேட்டோம் ஆனா அவரு அதுக்கு சம்மதிக்கல.” பேசுவதை நிறுத்தி , டாக்டரை உற்றுப்பார்த்து தன் அந்தரங்கத்தைக்கூறுவதை தவிர்க்கமுடியாமல் சோபாவில் மாறி அமர்ந்தான் அது மீண்டும் கிரீச்சிட்டத்து. “அப்பாக்கு அவர எங்கயும் கொண்டு போய் சேக்கிறது புடிக்கல அத நேரடியாவே சொல்லிட்டாரு” அவன் அதை பேச விரும்பாதது போலிருந்தது. சொல்லவந்ததை சொல்லமல் அப்படியே விட்டுவிட்டு தலைக்கும்மேல் சுத்திக்கொண்டிருந்த ஃபேனைப்பார்த்துக்கொண்டிருந்தார்

“அப்பா சாகும்போது அவர் எப்படி பிஹேவ் பண்ணாரு” என்று சம்பந்தமில்லாமல் கேட்டார்.

“அவர் அந்த ரூம விட்டு வரவேயில்ல” என்றுகூறி பதற்றத்துடன் “அப்பா மேல உள்ள மரியாதைக்காவாச்சும் வெளிய வந்திருக்கலாம். எனக்கு தெரிஞ்சி இந்த ஆள இவ்ளொ நாள் அப்பாதான் நல்லா பாத்துக்கிட்டு இருந்திருக்காரு. அந்த நன்றிக்காவது வந்திருக்கலாம். காசு பெரிய விசயம் இல்ல ஆனா பொணத்த கூட பாக்கலன்னா எப்படி” என்றவன் சட்டென உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டான். பின் அவரைப்பார்த்து சிரித்தான். அது அவன் தன்னை பற்றி வெளிக்காட்டியதற்கு வருத்தப்படுவதைப்போலிருந்தது.

“உங்க பொண்ணு என்ன சொன்னங்க. கொஞ்சம் டீட்டெய்லா சொல்றீங்களா. அவரோட ட்ரீட்மெண்ட் ப்ரொசிஜர் அத வச்சுதா நான் தொடங்கனும். நா அவரோட இன்னிக்கு தங்குனா உங்களுக்கு எதும் பிரச்சன இல்லைல” என்றார் டாக்டர்

“இல்ல நீங்க தங்கலாம். ஆனா எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. எம்பொண்ணு சொன்னத வச்சு பாத்தா டேஞ்சர்னு கூட தோணுது”

“இல்ல நீங்க மறைக்குறீங்க. முதல் விசயம் உங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் அவர நீங்க பழைய எடத்துக்கு கொண்டு போய்ருக்கலாம். இல்லனா எதாவது பண்ணிருக்கலாம் அது முடியாதுன்னு சும்மா எண்ட சமாளிக்குறீங்க. ஆனா ஏன் அவர சரி பண்ணனும் எதுக்கு அவர பாத்துக்கணும்னு நீங்க தெளிவா சொல்லல. இரண்டாவது உங்க பொண்ணு உள்ள என்ன பாத்தாங்க அத நீங்க தெளிவா சொல்லியே ஆகணும். இல்லனா என்னால ட்ரீட்மெண்ட் கண்டினுயூ பண்ண முடியாது மன்னிச்சிருங்க” என்றார் டாக்டர்

சிபு கைகளை பிணைந்துகொண்டே இருந்தான். நிர்வாணாமாய் நிற்பதைப்போல நெளிந்தான். கால்களை மாற்றி இடது கால் மேல் வலது கால் போடு அமர்ந்தான். பின்பு கைகளை விரித்து பெருமூச்சு விட்டான்.

“அவரு எங்க குல தெய்வம் , அவர நாங்க பத்தரமா பாத்துகணும். நேரம் வரப்போ அவரே போய்ருவாரு. எல்லா வெள்ளியும்  ஒரு கெடா வெட்டி பலி கொடுக்க சொன்னாரு” என்று அவரின் முகத்தைப்பார்ர்காமல் தன் கால் நகங்களில் இருந்த அழுக்கையே பார்த்துக்கொண்டு சொன்னான்.

“இத நீங்க நம்புறீங்களா?” என்றார் டாக்டர்

“நம்பல ஆனா அது எங்கப்பாவோட ஆச , அத என்னால முழுக்க மறுக்க முடியல. ஆனா ஒரு வேள அப்பா இவர நல்லா பாத்துக்கணும்னு எங்ககிட்ட பொய் சொல்லிருக்காரோனு சந்தேகம் இருக்கு.”

“கண்டிப்பா அது பொய்தா. அவ்ளோ பெரிய அந்த்ரொபாலஜிஸ்ட். கடவுள் சாமினு நம்பி உங்கள்ட சொன்னாருன்னு என்னால யோசிக்க முடியல” என்றார் டாக்டர்

“நா நம்பல” என்று முனங்கினான் சிபு. அவன் கண்கள் சிவந்திருந்தன.

“உங்க பொண்ணு பாத்தது”

“அவ எதும் பாக்கல , ஞாபகம் இல்லனு சொல்லிட்டா” என்றான் சிபு

“நீங்க சொல்லாம என்னால எதையும் ஆர்ம்பிக்க முடியாது”

சிபு அமைதியாக இருந்தான். ஐயா இருந்த அறையை எட்டிப்பார்த்தான்.
ஐயா அந்த வீட்டிற்கு வந்த முதல் நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் நினைவில் உள்ளது. கனவுகளை நாமே தொகுத்துக்கொண்டு அது உண்மையா இல்லை பொய்யா  என்று தெரியாமல் கூறுவது போன்று  யோசித்துக்கொண்டிருந்தான். அது அவனுக்கு அந்த நேரத்தில் அந்த சம்பவத்தின் மொத்த உண்மையையும் உணர்த்தியது  போலிருந்தது.

“எங்க அப்பா மேல தேவயில்லாத எந்த ஒரு கருத்தும் மீடியால வரது எனக்கு புடிக்கல அவரோட மேதைமைய வச்சிதா இந்த உலகம் அவர பாக்காணும். முட்டாள்தனத்த வச்சியில்ல. நா இந்த விசயத்த சேர் பண்றதே அவரோட ரெபுடேஷன் சொசைட்டில கொறைய கூடாதுன்னுதா. உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன்” என்றான் சிபு

“நீங்க என்ன நம்பாலாம்” என்று டாக்டர் அவன் நட்பார்ந்த முறையில் சிரித்தார்

“நீங்க அவள கேட்குறதுதா நல்லாருக்கும். புவனா….” என்றான் சிபு

அந்த பெரிய வீட்டில் அவனது சத்தம் எதிரொலித்தது. மாடிப்படியிலிருந்து புவனா மெதுவாக இறங்கிவந்து சிபுவின் மடியில் அமர்ந்தாள். வெளியாட்கள் இருக்கும் போது அவளின் சுதந்திரங்கள் அனைத்தும் கட்டிவைக்கப்படும். தன்னை எல்லா சுவரின் மூலைகளும் கண்காணிப்பதைப்போல உணர்வாள். டாக்டரையும் சிபுவையும் திரும்ப திரும்ப பார்தவள் சிபுவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு டாக்டரைப்பார்ப்பதை தவிர்ப்பதைபோல  நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அது எப்பொழுதுமே வெம்மையுடன் பாதுகாப்பை அவளுக்கு அளிக்கும்.

“அன்னைக்கீ ஐயா ரூம்ல…பாப்பா என்னம்மா பாத்துச்சி….மாமாட்ட அத சொல்றியா…..” என்று அவளின் நாடியைப்பிடுத்து தூக்கியவாறு அவளின் கண்களைப்பார்த்து டாக்டரைகாட்டி கேட்டான். ஒவ்வொருவாக்கியத்திற்கும் இடைவெளிவிட்டு இழுத்து பேசினான்.

கதை சொல்வதென்பது அவளை சகஜ நிலைக்கு கொண்டுவரும் என்பதை சிபு அறிவான். அவள் சொல்ல ஆரம்ப்பித்தாள் “நா போகும்போ கதவு பூட்டிருந்தா…கதவுல்ல ஒரு கண்ணிருக்கும்ல அதுக்குள்ள பாத்தா நல்ல கோல்ட் கலர் டைகர்ப்பா ரெண்டுபேர் படுத்தா எப்டியிருக்கும் அந்தமாரி நீளம் வால ஆட்டி ஆட்டி நடக்குது….” என்று கண்கள் விரிய கைகளை ஆட்டி பின் அவன் மடியில் இருந்து இறங்கி நடித்து காட்டினாள் “மொதல்ல எனக்கு வாலுதா தெரிஞ்சிச்சி….உள்ள இருட்டு கதவுகண்ணுல என் கண்ண வச்சு பாத்தேனா….மொதல்ல வாலு ரெண்டாவது நல்லா நீள வயிறு அதுல பிலாக் கலர்ல கோடு கோடா இருந்துச்சி….தாத்தா கையில கம்ப வச்சிட்டு நின்னாரா…புலி போய் அவரு காலுக்கிட்ட போச்சா….தாத்தா கம்ப ஆட்டுனாரா….புலி ஓடிச்சா….தாத்தா கம்ப கீழ போட்டாரா….அப்புறம் அது வந்து என்ன பாத்து சிரிச்சிச்சா…நானும் சிரிச்சனா….அதுக்கு வாய்லாம் செவப்பா இருந்துச்சிப்பா….அது கிட்ட வந்துச்சா….எனக்கு அதுக்க பல்ல பாத்தத்தும் பயந்து பயந்து வந்துச்சா….அப்றம் பாப்பா துங்கிட்டா….” என்று மறுபடியும் சிபுவின் மடியில் போய் அமர்ந்துகொண்டாள்

“சோ , உங்க பொண்ணு உள்ள பாத்தது புலி வேசம் போட்ட அந்த ஐயா.” என்றார் டாக்டர்

“ஆமா , ஆனா மனுசனால புலி வேசம்தா போட முடியும் புலியாக முடியாது” என்றான் சிபு

“வேசமில்லப்பா….புலி….” என்று அவள் கைகளை குவித்து நகங்களை காண்பித்தாள். கூடவே உறுமினாள். பறவை கிரீச்சிடுவது போலிருந்தது.

“ஆமா , அவரு புலியாவே ஆகிற்றாரு. அதும் நம்ம கண்ணு முன்னாலயே. நம்ம அந்த வித்தியாசத்த பாக்கலாம். இப்போ சாதரணமா இருக்காரு ஆனா அந்த வேசத்த அவரே போட்டு முடிக்குற நிலைக்கு வந்ததும். அந்த புலி அவருக்குள்ள முழுசா வந்திருது. நீங்க சொன்னமாரி அந்த நேரத்துலதா அவரு சுவத்துல கூட ஓடுறாரு” என்றார் டாக்டர்.

சிபு அமைதியாக இருந்தான்.

டாக்டர் தொடர்ந்தார் “இது சிப்ம்பிள் , நீங்க சொல்றபடி பார்த்தா இவரு ஒரு ஆதிவாசி. மலைலைருந்துதா உங்க அப்பாவே கூட்டிட்டு வந்துருக்காரு. அவரு ஒரு  பழங்குடி மதத்த கண்டிப்பா ஃபாலோ பண்ணிருக்கணும். அந்த மதத்தோட தெய்வம் அல்லது அந்த இனத்தோட குலக்குறி புலியா இருந்திருக்கும். சாதரணமாவே அவங்க அந்த குலக்குறியோட சந்ததியாதா தங்கள நினச்சுக்குவாங்க. சொல்லப்போனா அவங்க புலிக்கு பொறந்தவங்கனு கூட நம்புறாங்க. அத ஒரு பலி நாள்ல வெளிக் கொண்டுவந்து அந்த தெய்வம் இருக்கிறதா அவங்களோட ஆழ்மனசு காட்டும். இத கார்ல் யுங் ரொம்ப விரிவாவே பேசிருக்காரு. ஒரு மாசம் நீங்க கன்சல்டிங்க்கு அனுப்புனீங்கன்னா அவர பூரணமா குணப்படுத்திரலாம்.”

“அவர குணப்படுத்தனும் வைஃப் பயப்படுறாங்க. ஆனா அப்பா அத விரும்பல. ஈவன் நானும் அத விரும்பல.” என்று பேச நினைத்தவன் நிறுத்தினான். “நீங்க இங்க இன்னிக்கு இருங்க நம்ம நாளைக்கு பேசுவோம். அவரோட் ரூம் கதவு உள்ள லாக்ல இருக்காது. நீங்க ராத்திரி போய்க்கோங்க நாங்க யாரும் வர்ல” என்று அவருக்கான அறையைக்காட்டி மாடிக்கு செல்வதற்கு முன் ஐயாவின் அறையை மூடிவிட்டிருந்தான்.

“அப்பா….புலிய கொண்டு போய்ருவாங்களா” என்றாள் புவனா.

ஐயா இருந்த அறையிலிருந்து முனங்கல் சத்தம் கேட்கவும் டாக்டர் அந்த அறைக்கு சென்றார். அறையின் கதவு சிபு சொன்னது போல தாழிடப்படவில்லை. அறைக்குள் வனமிருகத்தின் வாடை அடித்தது . அறையின் இருளில் ஒலியை மட்டும் உணர்ந்தவராய் உள்ளே நுழைந்தார். விழிக்கு ஒளி பழக பொன்னுருகி ஓடும் உடலில் கருநாகங்களேன வரிகளுடன் ஓர் புலி அவரின் முன் உறுமியபடியே முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தது. அதனைச்சுற்றி ஈக்கள் மொய்த்திருந்தன , அவற்றின் ரீங்காரம் அறையில் நிறைந்திருந்தது. உடம்பிலிருந்த வண்ணப்பூச்சு வழிந்து தரையில் மஞ்சள் தடங்களாயிருந்தன. கைகளாலேயே பூசப்பட்டிருந்ததால் உடம்பில் ஆங்காங்கே திட்டுகளாயிருந்தது.

அதன் கால்கள் நீட்டி மடங்க , கண்கள் சிவந்திருந்தன. தலையை தரையில் தாழ்த்தி முகர்ந்தது. வயிறு ஒட்டி எலும்புகள் தெரிந்தன. உணர்கொம்புகளை சிலுப்பி விட்டு நாவால் அதன் கருத்த மூக்கை நக்கியது. நடப்பது போலல்லாமல் ஒரு புறமிருந்து மறுபுறம் தாவிக்கொண்டிருந்தது. பின்னங்கால்களை அழுத்தி திடீரென்று டாக்டரை நோக்கி பாய்ந்தது. அவர் அருகில் இருந்த் கம்பை எடுக்கவும் அது தன் எல்லைக்குள் போய் நின்று கொண்டது ஆனால் அது அடங்கவில்லை உறுமிக்கொண்டேயிருந்தது. அவர் கம்பை முன்னும் பின்னும் ஆட்ட அது கம்பை முன்னங்காலால் தட்டிவிட முயன்றது.

“யார் நீ” என்றார் டாக்டர்

“கடுவா…” என்றது பின் “ஊணு ஊணு” என்று உறுமியது

கையில் வைத்திருந்த ஆட்டின் தொடைக்கறியை அதன் பக்கமாக எறிந்தார்.

“இன்ணும் இன்ணும்” என்றது கடுவா

“காட்டுக்கு கொண்டு போய்விடுகேன் வறியா” என்றார் டாக்டர்

“காட்டுக்கு போணும் காட்டுக்கு போணும்”

“போகலாம்”

“அது யாரு” என்று பத்மநாபனின் போட்டோவை சுட்டிக்காட்டி கேட்டான்.

அதன் முகம் மலர்ந்தது. முகத்தில் பதிந்திருந்த ரத்தத்தை நாவால் நக்கியவாறு தும்மியது.

“கடுவா கொண்டாடி”

இரண்டு :

அப்பாவை நெருங்கி அறிந்துகொள்ள அவரது ஆய்வு புத்தகங்களே போதுமானவை என்று அவரது இறப்புச்சடங்குகளின் பொழுது அவரது சக ஆய்வாளர்கள் கூடி பேசுவதை சிபு கேட்டிருந்தான். ஆனால் அவை அவனுக்கு தேவையில்லாத பழைய அழுக்கடைந்த தலையணைகளை நினைவுறுத்தும். அவனால் வாசிக்க முடிந்தது அவரது நாட்குறிப்புகள் மட்டுமே. இரண்டு நாட்களாக அதனை வாசித்துக்கொண்டிருக்கிறான். அவை அப்பாவை ஆமை முதுகின் ஓடு போன்று அவர் பிறப்பிலிருந்து தன் கூடவே வைத்தும் அவன் அறியாத அவரின் வாழ்க்கையை காட்டியது. அந்த குறிப்பு புத்தகத்தின் முன்அட்டையில் தெளிவாக தெரியாத ஒரு புலியின் திறந்த சிவந்த வாயின் உருவம் அனைத்து பற்களும் தெரிய அப்பா வரைந்திருந்தார். முன் கோரைப்பற்கள் மட்டும் தெளிவாக தெரிய அதில் ரத்தம் அடர் சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. வாயின் உள்ளே ஒருவன் நிர்வாணமாக வாயின் ஒரு புறம் தலை கைகளுடனும் மறுபுறம் கால்களும் தொங்க கிடந்தான்.

1.

வெளியே மழைபெய்துகொண்டிக்கிறது. மென் சாரல் நான் தங்கியிருக்கும் அறையின் இடது நோக்கி சரிவாக பெய்து கொண்டிருக்கிறது. அவை நிலத்தை அடைவதேயில்லை. ஒதுங்கி நிற்கும் வரை சாரல் மழையின் வீரியம் தெரியாது. நனைய ஆரம்பித்தால் ஒரு நிமிடத்திற்குள் முழுவுடலும் நனைந்துவிடும்.

மழைக்காலம் என்பது ஒரு முடிவில்லா என்ணங்களைப்போன்றது. சில நேரங்களில் மென்மையான சாரல் , சில நேரங்களில் அடித்து செவிடாக்கும் இடியுடன் நீள் துளி மழை. ஆனால் அவை ஓய்வதேயில்லை. நான் காடுகளை தேர்ந்தெடுத்தது என் உலகியல் பணிக்காக அல்ல , என் ஆத்மார்த்த  உள்ளொளிப்பணிக்காக. மனிதன் எப்படி தன் பண்பாடுகளை உருவாக்கிக்கொண்டான் , தெய்வங்கள் அவனை எப்படி ஆட்கொண்டன , அதன் சடங்குகள் எப்படி உருவாகின ,  அவை எப்படி அலைந்து திரிந்த அவனை ஒரு சமூகமாக உருமாற்றி ஒரு தங்கி வாழும் மனிதனாக்கியது , இதில் தெய்வங்கள் பெரும் பங்காற்றுகின்றன இதுவே என் கேள்விகள். நான் அதன் இப்போதைய கடைசி துளி. என் குருதியில் ஓடும் அந்த பழந்தெய்வங்கள் எவை அதன் ஊற்றேடுக்கும் இருதயம் எது. அது இங்கெங்கோ இந்த காட்டில் இலைகழுக்கடியில் கண்காணா சுனையில். ஆழ நதியில். மறைந்துள்ளது. அதை தரிசித்து அதன் வழி நான் தொடங்க நினைக்கிறேன்.

பத்மநாபன்.

2.

நேற்றிரவு நாங்கள் தங்கியிருக்கும் அறைகளின் பின் புறம் உள்ள சரிவில் புலி ஒன்று சாவகாசமாக அமர்ந்து மழைக்கு காத்திருக்கும் கரிய வானத்தை நோக்கி கொட்டாவி விட்டக்கொண்டிருந்த பொழுது ,  நான் என் பின் முற்ற அறையில் புகைத்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து அதனை சரியாக பார்க்க முடியும் ஆனால் அதன் பார்வையில் நானில்லை. அதன் வாய் சிவந்திருந்தது. சில பற்கள் உடைந்திருந்தன. அதன் கண்களுக்கு கீழிருந்த சதை தொங்கிக்கொண்டிருந்தது. வயிறு எலும்புகள் தெரிய ஒட்டியிருந்தது. ஒரு வயதான் புலி. அது கர்ஜிக்கவும் எதிர் பக்கமிருந்த சோலை மலைகளில் இருந்து எதிரொலித்தது. அந்த ஒலிக்கு , கையிலிருந்த சிகெரெட் கீழேவிழ நான் பதறி கதவில் போய் விழுந்து விட்டேன். ஆச்சரியம் புலி என்னைபார்த்து சிரித்தது. புன்னகையல்ல நல்ல வாய்விட்ட சிரிப்பு. அதன் சிரிப்பு சத்தத்தை கூட நான் கேட்ட உணர்வு. அதற்குள் நான் இருமுறை பாசி ஈரத்தில் வழுக்கி விழுந்து அறைக்குள் சென்றிருந்தேன். அதன் நீண்ட நெடிய வால் செல்வதை நான் கடைசியாக பார்த்தேன். பின் அந்த பொன்னிறம் மட்டுமே நினைவிலிருந்தது.

3.

நான் பார்த்த புலியை எங்களுடன் வேலை செய்யும் ஓடையன் அவர்களின் தெய்வம் என்றான். அவனது மொழி தமிழ் போலில்லை சில இடங்களில் குழைந்து பின் இறுகியது. அது அனைவருக்கும் இவ்வளவு அருகாமையில் கண்களில் படுவதில்லை , அது சிரிப்பதென்பது தன் பூசாரியைக்கண்டு கொள்ளும் தருணம் என்றான் ஓடையன். என்னை பார்த்து ஏன் அது சிரிக்க வேண்டும் நான் தான் பூசாரியா ? சுத்த கிறுக்குத்தனம். நாய்கள் கூட சிலசமயம் மூச்சு வாங்கும் பொழுது நமக்கு சிரிப்பது போல தோன்றும். இதுவும் அதே போலத்தான். ஆனால் அந்த சிரிப்பு அவ்வளவு மனிதத்தன்மையுடன் இருந்ததே. ஆம் அது சிரித்தது. அவ்வளவு அரவணைப்புடன்.

4.

அந்த புலியை பின் காடுகளில் தேடி நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடையன் சொல்லியது போல அது நமக்கு அருள் கொடுக்கும் சமயம் மட்டுமே கண்முன் வரும் போல. நேற்று அதனை நான் என் கனவில் கண்டதாலேயே இதனை எழுதுகிறேன். திசைகள் தெரியாத அடர்ந்த காட்டில் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை யாரும் துரத்துவது போல தெரியவில்லை. அதனை உணர்ந்திருந்தும் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். பசுந்தழைகளில் உள்ள ஈரமானது என் உடல் முழுவதையும் நனைத்திருந்தது. உதிர்ந்த இலைகள் நீரில் விழுந்து அதன் அழுகும் மணம் புத்துணர்வைக்கொடுத்தது. எதிரே போவதிற்கில்லாத பெரிய காங்கிரீட் சுவர் , அதன் பின் எங்கும் செல்வதற்கில்லை என்ற பொழுது புலி மெதுவாக உடல் குலுங்க அடிவைத்து , உணர்கொம்புகள் சிலிர்க்க என்முன் வந்து நின்று கனத்த மூச்சுக்காற்றுகளை விட்டுக்கொண்டிருந்தது. திடீரென்று அது  என் மேல் பாய்ந்து வந்த தருணத்தில் எங்கிருந்தோ கிடைத்த ஒரு கம்பைக்கொண்டு நான் அதனை அடிக்க முயன்றேன். பின் அது தன் எல்லைக்குள் மீண்டும் போய் நின்று மூச்சு விட்டது. என்னை சுற்றி சுற்றி வந்து வாலை சுழற்றி பின் கால் மாத்தி மாத்தி வைத்து தலையை சுழற்றியது , கோரப்பல்லைக்காட்டி , நாக்கை மடித்து சீறியது. நான் கம்பைக்கொண்டு அதனை கட்டுப்படுத்தினேன். பின்பு அது என் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து சிரித்தது. அதே மனிதச்சிரிப்பு. நான் கம்பை வைத்துவிட்டு அதனை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினேன்.

5.

இப்பொழுது அந்தக்கடுவா என் அறைக்கு தினமும் வருகிறது. என்னுடன் அமர்ந்து கதைகள் பேசுகின்றது. நான் அதன் நண்பன் என்று கூற முடியவில்லை ஆனால் அது பேசுவது அன்பின் வெளிபாடாகவே இருக்கின்றது. அதனுடன்  என்னுறவை விளக்க முடியவில்லை. ஒரு தந்தையின் இடத்தில் நான் அதனை சில நொடிகள் உணர்கிறேன். இந்த இடத்திற்கு ஒவ்வாததொரு அந்நியனின் இருப்பாக சில நொடி. அதன் கண்களில் அத்தனை கருணை.

இருவரும் நடனமாடுவோம். சில சமயம் இருவரும் பச்சைகறியை உண்போம். என் சக அலுவலக நண்பர்களை என் அறைக்குள் நான் அனுமதிப்பதில்லை. நான் கண்டடைந்த , என்னை கண்டடைந்த அந்தக்கடுவா இந்த நிலத்தில் இருக்க தகுதியற்றதாக அவர்கள் கூறி அதனை விரட்ட வேண்டும் எங்கின்றனர். யார் தகுதியற்றவர் கடுவா நீயே சொல்…ஆனால் கடுவா என்னருகில் இருக்கையில் என்னிடம் எப்பொழும் கம்பிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அதனை என் நிலையில் வைக்க எனக்கு அந்த கம்பு அவசியமாகிறது. நான் அதனை இங்கிருந்து விரட்ட அதை வைத்துக்கொள்ளவில்லையே. அது என் பாதுகாப்புக்கானது மட்டுமே என்பதை நீயே அறிவாய்…

6.

நான் இருக்கும் விடுதியறை மக்கள் நடமாட்டமில்லாத தெருவின் ஓரத்தில் இருக்கின்றது. இங்கு என் தெய்வத்தை நான் சாந்தி படுத்தி வைக்க முயல்கிறேன். காட்டில் அதற்கு இடமில்லையாம். அது மனிதர்கள் நடமாடகூடாத காடாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. மூடர்களே அது தெய்வங்களின் நிலமென நீங்கள் அறியவில்லையா. மனிதர்களில்லா இடத்தில் தெய்வங்கள் சஞ்சரிக்கும் என்பது தெரியாதா உங்களுக்கு. தெய்வத்திற்கில்லாத இடத்தில் பூசாரிக்கென்ன வேலை. இங்கு என் படையலை ஏற்றுக்கொள் கடுவா. நான் படைக்கிறேன் கையில் கம்புடன்.

மூன்று :

சோலைக்காடுகளில் அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் குடிகள் இருக்கும் இடத்திலிருந்து இருபது கல் தூரம்  இருக்கலாம் என்பது அவனது கணக்கு. அவன் குடிகள் இருந்த இடத்திலிருந்து சோலைகாடுகளை பார்க்கும்பொழுது மொத்த நிலப்பகுதியும் புற்களால் நிரம்பியது போலிருக்கும். ஆனால் அருகில் சென்று பார்க்கையில்தான் இடைவெளிகளை அவனால் உணரமுடிந்தது. ஆளுயரத்திற்கும் அவை வளர்ந்திருந்தன.

செந்நிற மேகங்கள் நீல மலைகளின் மீது புரண்டிருந்தன. சூரியன் தன் இருப்பை மறைக்கும் கணம் நெருங்கும் நேரம் அதிகமில்லை என்பதை அவன் உணர்ந்தான். கால்கள் தளர அவன் அமரலாம் என்று நினைத்த கணத்தில் காற்று பலமாக வீசியது. தூக்கி பள்ளத்தாக்கில் வீசிவிடும் போலிருந்தது காற்றின் வேகம். புற்கள் நிலகொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தன. மழை நின்று இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றன. மொத்த மலையும் சரிந்து இன்னொன்றாக ஆகியிருந்தது. அவன் குடிகள் இருக்கும் இடத்தை அடைவதென்பது தொலைக்காத பொருளை தெடுவது போன்றது. எங்கும் கருப்பும் செம்பழுப்பும் கலந்த மணல் நிறைந்த  புதியதொரு உலகம் அவன் குடிகள் இருந்த இடத்தில் உருவாகியிருந்தது. மரங்கள் அதன் வேர்களை சூரியனுக்குக்காட்டி கைவிரித்து நின்றன.

கால்களை முன்னும் பின்னும் மடக்கி நீட்டி கைகளை தரையில் ஊன்றி தலையை சுழற்றி பற்களை கடித்தான். கண்கள் விரிந்து விழிக்கோளங்கள் சாடி விழுந்து விடும் போலிருந்தன. கருவிழிகள் இறுகி ஒற்றைகோடென ஆனது. இறுகிய கயிறை மீண்டும் முறுக்குவதைபோல நெளிந்தான். கண்களில் நீர் வழிய வானத்தைப்பார்த்து உடல் நடுங்க விம்மினான்.

அப்பெருங்காற்றுடன் அவன் ஓலம் கலந்தது.

ஒண்ணுமில்லாம போரேனே எங்கடுவா
காத்து நிக்கீரோ எங்கடுவா
பண்டு காலந்தொட்டு வந்தோமே எங்கடுவா
இண்ணு குடியெல்லா கரஞ்சி போச்சே எங்கடுவா
காட்டுக்கு நாங்கல்லோ எங்கடுவா
இண்ணு காடிருக்கு நாங்கெங்கோ எங்கடுவா
கம்பூணி தடுத்தல்லோ எங்கடுவா
அதொண்டு மதமெழகி சோறே குடிக்கான் கெளம்பியோ எங்கடுவா

இருட்டிய பின் அவன் சென்ற பாதையில் நான்கு காலடித்தடங்கள் கிடந்தன.

நான்கு :

“நேத்து நடந்தது எனக்கே ஆச்சரியமாதா இருந்துச்சி , நா பாத்தத என்னாலயே நம்ப முடியல” என்றார் டாக்டர். இருவரும் நேற்றமர்ந்த அதே சோபாவில் அமர்ந்திருந்தனர்.

“நீங்க இன்னும் நம்பல அத” என்றான் சிபு.

” ஸீ , இது வெறும் உளச்சிக்கல் அத நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க , அதுக்கும்மேல நீங்க சொல்லிதா அவர நாங்க சேத்திருக்கோம். நா முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு வாரம் போதும்”

“ஆமா நீங்க அவர குணப்படுத்தலாம். நீங்க பண்றது என்னனு தெரியுமா , ஒரு தெய்வத்த அழிக்குறது” அவன் குரல் அமைதியாக ஆனால் உடைந்துவிடும் போலிருந்தது.

“முட்டாள் மாதிரி பேசாதிங்க. இந்த காலகட்டத்துல இவர மாதிரி ஒரு மனுசன நீங்க வீட்ல வச்சு பாத்துக்க முடியாது”

“எங்களொட தெய்வமா எங்கப்பா கும்பிட்ட சாமிய நீங்க கொண்ணுட்டீங்க”

“கொஞ்சம் அறிவியல் பூர்வமா யோசிங்க , தெய்வம் நம்ம உருவாக்குனது மனுசனோட அப்செசன்தான் அதுக்கு காரணம். அவன் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்டான்.”

“இருக்கலாம் ஆனா நா அத கும்பிடனும் , பத்திரமா பாதுகாக்கணும்னு நினைச்சேன்”

“ஒரு புலிய நீங்க வீட்டுல வைக்க முடியாதுல்ல”

“வைக்கலாம் அது தெய்வமாகும் போது. அதுக்கு நா தயாரா இருந்தேன்.”

“நீங்க சொல்றது , வெயில கையில அடைச்சு வைப்பேன்னு சொல்ற மாதிரி இருக்கு”

“ஆனா வெளிச்சம் விளக்குல கூட இருக்கும்”

“இன்னிக்கு மதியம் செஸ்ஸன் முடிஞ்சதும் அவரோட உண்மையான பேர சொல்லிட்டாரு”

“இல்ல வேண்டாம் அவர டிஷ்சார்ஜ் பண்ணிருங்க , நாங்க வீட்டுல வச்சே பாத்துக்குறோம்”

“உங்க இஷ்டம்தா , ஆனா திரும்பவும் என்ன ட்ரீட்மெண்ட்க்கு கூப்பிடாதீங்க”

“கூப்புடல , நீங்க போகலாம்” என்றான் சிபு.

டாக்டர் சென்ற பிறகு கடுவா இருந்த அறையின்  மூலையிலிருந்த கம்பை  புவனா எடுத்து சிபுவின் கையில் கொடுத்து “புலி எங்கப்பா…காணல” என்றாள். அவன் பதில் கூறும் முன் “நாந்தா புலி…..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்றாள்

தரையில் கைகளை ஊன்றி நாங்கு கால்களில் நடந்தாள். பறவை கிரீச்சிடும் குரலில் உறுமினாள். அவள் பொன்னிறத்தில் கருப்புப்பட்டைகளுடன் கூடிய கவுண் அணிந்திருந்தாள். சிபு ஐயாவை திரும்ப அழைக்க வேண்டுமா என்று யோசித்தான். அவன் கையில் கம்பிருந்தது.

2 comments

  1. அருமையான கதை. நல்லா எழுதியிருக்கீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. வாழ்த்துக்கள்..

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.