போட்டோ சார் – லட்சுமிஹர் சிறுகதை

“குளிருதா,”

‘கொஞ்சம், “

“கொஞ்சம்னா,”

“இன்னொரு ஸ்வெட்டர் கூடப் போட்டுட்டு வந்துருக்கலாம்னு சொன்னே, அழகாயிட்டயோ ? “

“யாரு.. நானா? “

“அப்புறோம்… உம்னு இருக்கிறயா ? “

“இல்ல “

“அந்தப் பாலுப் பையன் என்ன சொன்னான் தெரியுமா,? “

“கம்முனு இருக்கமாட்டியா? “

“ரொம்ப நாளா அப்படித்தான இருக்கேன் “

……

“பேசு… “

“கூடவே தான இருக்க? “

“அதான்.. உன் நன்மைக்குத்தான் சொல்றேன்… “

“என்ன.. சொல்லு? “

“பாலுப் பையன் உன்ன இந்தக் கம்பெனி பார்க்ல இருந்து தூக்க பிளான் போடுறான் “

“நீயும்.. ஊரு வம்பு பேச ஆரம்பிச்சுட்டயா..? “

“தாடி வெட்டல “

“போய்தான் ஷேவ் பண்ணனும்.. “

“இன்னைக்குக் கூட்டமோ? “

“ஆமா.. சனிக்கிழமையில்ல !”

இப்படித்தான் சில காலங்களாகக் கையில் வைத்திருக்கும் கேமரா உடன் பேசத் தொடங்கிவிட்டார் யாசிர் பாய்.

கொடைக்கானல் பார்க்கில் தனியாக, கேமராவுடன் அமர்ந்திருக்கிறார் . மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க அவரின் மகிழ்ச்சியை அவைகள் விழுங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை.

மக்கள் நெருக்கமாக அங்கும், இங்கும் உட்கார்ந்து கொண்டும், நகர்ந்து கொண்டும் இருந்தனர்.

பாலு கூட்டத்திலிருந்து யாசிர் பாயை நோக்கி வந்து கொண்டிருந்தான்…

கழுத்தில் மாட்டிக்கொண்டார் கையில் வைத்திருந்த கேமராவை…

“ஐடி எங்க யாசிர் பாய்? கேமரா…

யாசிர் தன்னுடைய ஐடி யை எடுத்துவர மறந்தது அப்போது தான் நினைவுக்கு வர…

” யாசிர் பாய் இன்னைக்கு உங்கள மேனேஜர் பாக்கனுன்னு சொல்றாரு, சாயங்காலம் கொஞ்ச வெயிட் பண்ணுங்க ஆபீஸ்ல” எனச் சொல்லும்போதே இருமிக்கொண்டான். யாசிர் பாய் இருமலின் எச்சில் கேமராவின் லென்ஸ்ல் படப் போகிறது என்று நினைத்து கையால் முன்பகுதியை மூடியபடி தலையை ஆட்டினார்.

யாசிர், பாலு ஐடியை பற்றிக் கேட்கவில்லை என்று சந்தோசப்பட்டாலும் , மேனேஜர் என்ன சொல்லப் போகிறார் என்ற பயம் கேலிசெய்யத் தயாரானது ..

அன்றிரவு மேனேஜரிடம் பேசிவிட்டு வீட்டிற்குச் செல்ல 9மணி ஆகிற்று.. லென்ஸ் கிளோஸரைத் தேட ஆரம்பித்தார். அதை எங்கு வைத்தோம் என்ற நினைவும் இல்லை. வீட்டின் அனைத்து லைட்களையும் ஆன்செய்து தேடத் தொடங்கியவருக்குப் பரீதின் கல்யாணத்தின் போது எடுத்த போட்டோ பிலிம் ரோல்கள் இருந்த விரிசல் அடைந்த பெட்டி கண்ணில் படவே அதை எடுத்தார்.

யாசிர் பாய் தங்கி இருக்கும் வீடு, இரண்டு சின்ன அறைகளைக் கொண்ட வீடு.வாடகை ஒழுங்காகச் செல்வதால் பிரச்சனை இல்லை. தேடுவதற்கு எதுவும் இல்லாத அறைகள்தான் அவை.

தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டார் யாசிர். கேமரா பேக்கை காலியாக இருந்த துணிவைக்கும் கூடைக்குள் வைத்துவிட்டார். படுத்துக் கொண்டு அந்தப் பிலிம் ரோல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் யாசிர். அவருக்கு ஏன் இதைப் பிலிம் ரோல்களாகவே விட்டுவிட்டோம் என்று நினைவில்லை . போட்டோ ரோல்கள் அடிபட்டு கோடும், கீறலுமாகப் பல்லிளித்தது .

அடுத்தநாள் காலையில் ஷேவிங் கண்ணாடி டப்பாவில் இருந்த அவருடைய பார்க் ஐடி யை மட்டும் எடுத்துக் கொண்டு பார்க்கிற்குக் கிளம்பினார் .

மேனேஜர் சொன்னது இன்னும் மனதிற்குள் போட்டு உளட்டிக்கொண்டிருந்தார் யாசிர் பாய்… அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவருக்குள் பல நாட்களுக்குப் பிறகு எழுந்தது, இதுவரைஅவரின் வயது அவருக்குக் குறையாகத் தெரிந்தது இல்லை. இன்று அதை எண்ணி வருத்தப்படத் தொடங்கியிருந்தார் .நேற்று காலையில் பாலு சொல்லிவிட்டுப் போன பின்பு மாலை ஆறு மணிக்கு மேனேஜர் அறையில் கொஞ்சம் பதட்டத்துடன் தான் அமர்ந்திருந்தார் என்ன விசயமாக இருக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது ..

 அரை மணி நேரம் கழித்தே வந்தார் நந்தன்.

“பாய் நல்லாருக்கீங்களா? ” என்ற நந்தனிடம் தலையாட்டிச் சிரித்துக்கொண்டார் யாசிர் பாய்.

“பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல பாய்..? “

கேமரா வைத்திருந்த கை வேர்க்கத் தொடங்கியது, அதைப் பேண்டில் துடைத்துக் கொண்டு, இன்னொரு கையில் கேமராவை மாற்றிக் கொண்டார்.

இப்போதான் நமக்கு ரெண்டு, மூணு பார்க் இன்ச்சார்ஜ் வந்திருச்சு அதான் பாய் லேட் ஆகிருச்சு .

கையை நீட்டி பாலுவிடம் எதையோ கேக்க, பாலு உள்ளே ஓடிப் போய் ரெகார்ட் நோட்டை எடுத்து வந்தான்.. அதை வாங்கிப் பார்க்கத் தொடங்கிய நந்தன்.

“பாய், நம்ம பார்க்குல போட்டோ ஆளுங்க நிறைய இருக்காங்கள, அவங்கள மேல இருந்து குறைக்கச் சொல்லுறாங்க… ” என யாசிர் பாயைப் பார்த்தான் நந்தன்.. இடதுகையில் வேர்வையோடு இருந்தது கேமரா… மேலும் பேசிய நந்தன்.

“அதான்யா… இங்கிருந்து உங்கள அடுத்த இனிதல் பார்க்குக்கு மாத்தலாம்னு இருக்கோம் “என்றான்.. பாய் பதில் ஏதும் சொல்லவில்லை, எதிர்பார்த்ததுதான்.

என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியுடன் பார்க் வந்து சேர்ந்தார் பாய். ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடித் காணப்பட்ட பார்க்கை ஸ்வெட்டருடன் இறுக்கி அணைத்துக் கொண்டார் குளிருக்கு.

அங்கங்கே பனிமூட்டம் விலகாமல் நேற்று பெய்த மழையில் கொஞ்சம் பசுமை கூடி இருப்பதுபோலப் பட்டது.

என்ன யாசிர் பாயால்தான் அதை அனுபவிக்க முடியவில்லை. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் தொழுகையை முடித்து விட்டு யாசிர் பாய் வீட்டுக்கு வர மணி ஏழு.

மேனேஜர் பேசி ஒரு வாரம் ஆகிற்று , அவரின் எளிமையான சாராம்சம் வேலைக்கு வர வேண்டாம் என்பதே. கேமராவைத் தோளில்போட்டுகொண்டு, பார்க்பிளாட்பார்மில் இதற்கு முன் எடுத்த பழைய போட்டோக்களை நீட்டி.. “போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .” எனக் குரங்கு உணவை கண்டு பின் செல்வது போல மனிதர்கள் பின் தொற்றிக்கொள்ளத் தயாரானார் .. ” போட்டோ சார்.. போட்டோ சார்… “

பாலுவின் ” போட்டோ போட்டோ போட்டோ” என்கிற சத்தம் இங்கு வரைக்கும் கேட்டது.. இன்றைக்கு யாசிர் பாய்க்கு ஆறுபோட்டோக்கள்தான் கிடைத்தன..சனிக்கிழமையே இப்படி என்றால் வாரநாட்களில் ஒன்றோ, இரண்டோ தான்.

பலரும் யாசிர் பாயைக் கடந்து சென்று கொண்டுதான் இருந்தனர்.. போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .. என நடுங்கும் குரலில் யாசிர் பாயிடமிருந்து வெளிப்பட்டது.

போட்டோவாக மாற்றப்படாத போட்டோ பிலிம் ரோல்களை எடுத்து வீட்டில் அவருக்கென்றிருந்த ஒரே சேரில் அதைப் போட்டுவிட்டு , தான் வைத்திருந்த பழைய கேமராவைத் தேடத் தொடங்கினார்.சில நேரங்களில் நமக்கென்று எதுவும் இல்லாமல் ஆகிவிடக் கூடாது என யோசிப்பது வாழ்க்கை மீதான நம் பயத்தையே மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. நமக்கென இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் பழைய நினைவுகளுக்குள் செல்கிறோம். அதிலிருந்து நம் கையில் அகப்படுவது நம்மை முன் நகர்த்தவும் செய்கிறது. சில நேரங்களில் நம்மை ஒரே நிலையில் தேங்கிவிடவும் செய்கிறது.

இரண்டு அறைகளில்…அப்பா கல்யாணம் பண்ணிக்க வேண்டி எழுதின கடிதங்கள், பழைய சட்டைகள், இரண்டு, மூன்று போட்டோ பிரேம்கள், ரேடியோ காஸெட் சீடிக்கள் இருந்தன. அங்கிருந்து எடுத்த பொருட்கள் தூசிபடிந்து போய்க் கிடந்தன . தனக்கென இருந்த போட்டோ ஸ்டுடியோவை விட்டுவிட்டு வந்த யாசிருக்கு இவைகள் அதைப் பற்றிய கேள்விகள் கேட்பது போலவே இருந்தது. யாசிர் பாய் அவைகளிடம் தன் பக்கம் இருக்கும் காரணங்களைப் பேசத் தொடங்கினார் .யாசிர் பாய் பக்கம் இருந்த எந்தக் காரணங்களையும் அவைகள் ஏற்கவில்லை.பழைய பிலிம் ரோல் கேமராவைத் தேடிக் கண்டுபிடிக்க இரவு பதினொரு மணி ஆகிற்று..அதை எடுத்துக் கொண்டு.. கூடையில் இருந்த கேமரா பேக்கை எடுத்தார் யாசிர்..

“டேய்.. இத பாத்தியா உங்க தாத்தா… இப்பலாம் ஏதோ பொசுக்குன்னு கிளிக் பண்ணா படம் விழுந்துற நீயெல்லாம்.. அப்போ போட்டோக்கு ரோல் வாங்கி லேப்ல கிளீன் பண்ணி நெகடிவ்ல தான் பாப்போம்.. அப்ப அதெல்லாம் ஏதோ பெருசா செய்றமாதிரியிருக்கும்.. காத்துக் கிடந்து முந்தினநாளு எடுத்த போட்டோவ வாங்கிட்டுப் போவாங்க…

அப்போ நான் எவ்வளவு பெரிய கடை வச்சிருந்தேன்.. காலம் இப்படி வந்து தள்ளிருச்சு. இன்னும் எங்க எங்க ஓடப் போறேனோ ” எனத் தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.

இறுதியில் புதுக் கேமரா பதில் ஏதும் சொல்லவில்லை என்பதைப் பார்த்தார்.

” என்னாச்சு உனக்கு..? ஏன் அமைதியா இருக்க நீ..? பே கவர்ல குப்பையா இருக்கா? எனப் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். பழைய கேமரா தரையில் கொஞ்சதூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தது. யாசிர் பாய் கஷ்டத்தில் பங்கு கொண்டாலும் அவருக்கு உதவ முடிய வில்லையே எனப் பழைய கேமரா நினைத்துக் கொண்டது. அந்த டிஎஸ்எல்ஆர் கேமரா பேசவே இல்லை..

யாசிர் பாய் மேனேஜரிடம் பேசிவிட்டு வந்த பிறகிலிருந்து தான் பார்க்கில் கொடுத்த கேமரா பேசவில்லை என்பதை யூகித்துகொண்டவர் ..இந்த புது மாடல் டி எஸ் எல் ஆர் கேமரா யாசிர் பாயோடையது கிடையாது.. பார்க்கில் இருந்து கொடுத்ததுதான். யாசிர் பாய் பார்க்கை விட்டுப் போக நேர்ந்தால், அதை மேனேஜரிடம் கொடுத்துவிட்டுத் தான் செல்ல வேண்டும். அவர் பேசினதக் கேட்டிருப்ப. அதான் இப்படி உம்முனு இருக்க… தெரியும்.. அதான… உன்னத்தான்.. எனக் கேமராவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.அவருக்குக் கேமரா மீதான தனி அக்கறை இன்னும் சிறுவயது பையனைப் போல அதன் மேல் வண்ணம் அடிக்கச் செய்கிறது என்பதை அறிந்தவர்தான் .அதுவே அவரை இதுவரை உயிர்ப்போடு வாழ எத்தனித்திருக்கிறது.

கையில் தனக்குத் துணையாக முதலில் இருந்த கேமராவை மட்டும் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் மலை ஏறிவிட்டார். அந்தக் காலக் கட்டம் யாசிருக்கு பெரும் துயரே . காதல் மனைவியின் பிரிவு, பரீதின் இறப்பு என்று பிடித்த பேய் அவரின் சொந்த ஸ்டூடியோ கை விட்டு போகும் வரை விடவில்லை .அவர் அதிலிருந்து விடுபட்டு வரவே பல காலம் தேவைப்பட்டது.

பார்க்கில் புது டி எஸ் எல் ஆர் யை மேனேஜர் யாசிரிடம் கொடுத்த போது, அதைப் பயன்படுத்த தெரியவில்லை.. பழைய கேமராவிலேயே எடுத்தவருக்குப் பாலுதான் புதுக் காமெரா இயக்கங்கள் பற்றிச் சொல்லித் தந்தான். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், பழகிக் கொண்டார் யாசிர்.. ஆனால் அந்தப் பெயர்களை மனப்பாடம் செய்து கொள்வதில்தான் சிரமம். ‘ ஐ எஸ் ஒ, ஷட்டர் ஸ்பீட், கான்ட்ராஸ்ட் லெவல் ‘….. .கடைசியில் பெயர்கள் தான் மாறியுள்ளது, எப்போதும் போலத்தான் போட்டோ எடுக்கும் விதங்கள் உள்ளன என அடிக்கடி யோசித்துக் கொள்வார்.ஆனால் பாலு அளவுக்குத் தெளிவாக அந்தப் பெயர்களை உச்சரிப்பதில் கொஞ்சம் கஷ்டப்பட்டார் யாசிர்.. தன்னோடு பதினைந்து வருடங்களாக இருந்த கேமராவை மட்டுமே கடனில் இருந்து மீட்டு யாசிரால் கொடைக்கானலுக்குக் கொண்டு வர முடிந்தது. அதையும் மடித்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்தார் யாசிர்.. எப்போதும் தொலைத்த பொருள் எளிமையாகக் கிடைத்து விடுகிறது.நாம் பத்திரமாக வைத்ததை எடுக்கத்தான் சிரமம்ஆகிவிடுகிறது. அப்படிதான் நேற்று யாசிர் அந்தப் பழைய கேமராவைத் தேடி எடுத்தார்.அதன் மேல் இருந்த குப்பை, நூலாம்படையைத் தட்டி விட்டு, துணியால் துடைத்து விட்டு அந்தச் சிறிய பெட்டிக்குள் இன்று காலையில் வைத்து விட்டு வந்தார்.

பார்க்கிற்குச் செல்லும் வழி நெடுகிலும் கேமரா உடன் பேசிப் பார்த்தும் பதில்சொல்லவில்லை.

‘போட்டோ சார் போட்டோ சார். . ‘இன்றைக்கு இரண்டு போட்டோ என்று ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டார் யாசிர்.அதில் யாசிர் பெயருக்கு மேல் எழுதியிருந்த பாலுவின் பெயருக்கு அருகில் இன்றைக்கு மட்டும் 10 போட்டோ என எழுதி இருந்ததைப் பார்த்தார். எப்போதும் பார்க்காத அவர்.. ஏன் பார்த்தார் என்பது அவருக்குத் தெரியவில்லை.. வாழ்க்கையின் அடுத்த நகர்வைப் பற்றிய கவலையிலேயே அன்றிரவு கண்கள் விழித்திருந்தார்…

போட்டோ சார் போட்டோ சார் ..

” எவ்வளவு “

” இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது ரூபா சார் .. “

” நாலு போட்டோ எடுங்க “என வயதான தம்பதி ஒருவர் யாசிர் பாய் உடன் பேசிக் கொண்டிருப்பதைப் பாலு பார்த்துக் கொண்டிருந்தான்.யாசிர் பாய் அவர்களைப் பார்க்கின் நல்ல ஸ்பாட் களில் எல்லாம் நிற்க வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.. அடிக்கடி அந்த அம்மா மட்டும் கால் வலிக்குது கொஞ்சம் பக்கத்திலேயே இருந்தா நல்லாருக்கும் எனக் கணவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் … ஒரு அரை மணி நேரத்தில் போட்டோ எடுத்து முடித்து அதை அவர்களிடம் கொடுத்தார் யாசிர்.அந்த அம்மாவுக்குப் போட்டோக்கள் ரொம்பப் புடித்துவிட்டன… ரொம்ப நேரமாக இருவரும் போட்டோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்… போகின்ற போது யாசிருடைய மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டனர்.. அவருக்கு மொபைலில் நம்பரை சேவ் பண்ணுவதில் பிரச்னை இருந்ததால்.. பாலு தான் வந்து உதவி செய்தான்.. அவர்களுக்குப் பேத்தி பிறந்துள்ளதாம்.. அவர்கள் வீட்டுக்கு வந்து போட்டோ எடுக்கணும் என்றார் அந்த அம்மா… அருகில் நின்றிருந்த கணவர், நாங்க எதுக்கும் பையன் கிட்ட கேக்கணும்.. அப்புறம் தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டுத்தான் நம்பரை பதிந்து கொண்டனர் .

அன்றைக்கு இரவு பாயில் ஓடிய கரப்பான்பூச்சியை அடிக்க நோட்டைத் தேடுவதற்குள் ஓடிவிட்டது.படுத்துக்கொண்டார்.. கால் எதுவும் அவர்களிடம் இருந்து வருமோ என நினைத்தவர் மொபைலைப் பக்கத்தில் வைத்து போன் ரிங்கிற்காகக் காத்திருந்தார். அப்படி வந்தாலும் இப்போது இருக்கிற பிரச்னையால் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் வர , கேமரா இல்லாமல் என்ன எடுப்பது? பாலு தனியாகக் கேமரா வாங்குவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனிடம் கேட்கலாமா என்று யோசித்தவர் வேணாம் என்று முடிவெடுத்தார். தன் மொபைல் போனில் இருக்கும் காண்டாக்ட் களைப் பார்த்துக் கொண்டே வந்தவர் .அதில் இருந்தது வெறும் எட்டு

நம்பர்களே..

பாலு

பரீத்

தமிழரசன்

தமீம்

கஸ்டமர் கேர்

வோடபோன் ஸ்பெஷல் அபெர்ஸ்

யமர்ஜன்சி காண்டாக்ட்

பாலு தான் அவைகளைப் பதிவு செய்து தந்திருந்தான் ..

பரீத்.. யாசிர் பாயுடன் அசிஸ்டன்ட் ஆக ஸ்டுடியோவில் வேலை பார்த்தவன்.. ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டான்… அவன் இறந்த பின் பரீத் மொபைலில் இருந்து கால் வர பதறிப் போய் விட்டார் யாசிர் பாய்… அது பரீத்தின் மனைவி

“வாப்பா.. நான் பேகம் பேசுறேன்…”

“சொல்லுமா… “

“இல்ல.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. “

“என்னமா… நான் கொடைக்கானல இருக்கேன்”

” இல்லப்பா… போன்லதான்… “

” என்னமா.. “

” நம்ம போட்டோ ஸ்டூடியோல இருந்து பரீத் கடைசியா வேல முடுஞ்சு கொண்டு வந்த கொட லைட்டு.. கலர் பேப்பர்ல இருக்கு.. அதல விக்கலாமானுதான் வாப்பா?.. இங்க பாப்பாவை வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியலப்பா… “

யாசிர் பாய் இப்போதும் நினைத்துப் பார்ப்பார் – “பாய் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் னு ” பரீத் சொல்றத..ஏண்டா அப்படிச் சொல்றனு? கேட்டா பதில் சொல்லமாட்டான். டேய் நான் அவ்ளோ கொடுமக்காரனாடா என்பார் யாசிர். ‘ இல்லபாய்… எங்க அப்பா பாய் நீ ‘ என்றான் சின்னச் சிரிப்புடன்.

பேலன்ஸ் இல்லாமல் கால் கட்டாகிவிட்டது என்று அடுத்த நாள் பேசினாள் பேகம்.எடுத்துக்கம்மா எனச் சொல்லி விட்டார்.. கையில் கொஞ்சம் காசு சேரும் போது பழைய போட்டோ ஸ்டூடியோ அட்ரஸ்க்கு காசு அனுப்பியும் வந்தார்… பேகத்திற்குக் கிடைக்கிறதா என அதை உறுதிப் படுத்தியும் கொள்வார். இனிமேல் அனுப்புவதில் தான் சிக்கல்கள் இருக்கும்.

பதினைந்து நாளாக ஷேவ் பண்ணாத தாடி யாசிருக்குப் புதுத் தோற்றத்தை கொடுத்துவிட்டது எனத் தொழுகை முடித்து வரும்போது சிலர் கூறினர். கையிலிருந்த போனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டார். அவர்கள் கால் பண்ணுவார்கள் என எண்ணி.. பாட்டு வர மாதிரி மொபைல் ரிங்க்டோனை செட் பண்ணி கொண்டார்.. அது பழைய போன் என்பதால் சத்தமாக அடிக்க.. பார்க்கிலிருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர்.. ஆன் செய்து காதில் வைத்தார்.. அது கஸ்டமர் கேரிலிருந்து வந்த கால். உடனே கட் பண்ணி விட்டார்…

“இன்னும் ஏன்டா அமைதியா இருக்க…? நீ பேச என்ன செய்யணும்னாதுசொல்லுடா!” எனக் கேமராவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்….

மேகமூட்டம் சட்டென நகர்ந்து வெயில் வந்தவுடன் யாசிர் பாய்க்குத் தலைச் சுற்றல் ஏற்பட்டது.

கொஞ்சதூரம் பார்க்கில் நடந்து சென்று தண்ணீர் வரக் கூடிய பைப்பை திறந்து… கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் பிடித்துக் குடித்துக்கொண்டார்.. அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொள்வதற்காக நடந்த யாசிர் பாய் பக்கத்தில் இளம் ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர், அவர்களை நோக்கிச் சத்தம் போட, இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.. அதில் அந்தப் பெண் யாசிர் பாயை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

சேரில் அமர்ந்து மதியச் சாப்பாடைச் சாப்பிடத் தொடங்கினார் யாசிர் பாய்.

மேனேஜரிடம் வேண்டும், வேண்டாம் என்ற பதில் எதுவும் சொல்லாமல் வந்தது தவறு . மாற்ற வேண்டாம் என்று நேரடியாகக் கூடக் கேட்டிருக்கலாமோ என்று யோசித்தவருக்கு இல்லை அவர்களின் முடிவு முன்பே எடுக்கப் பட்டதுதானே என்று வீடு வந்து சேரும் வரை மண்டைக்குள் நிறைய விஷயங்கள் ஓட பதிலாய் ‘ என்ன கவலை பாய்.. எது இருக்கு நம்மகிட்ட கவலைபட…. இப்போ எதுக்கு இவ்ளோ வருத்தம்… ‘ என்று மனதை கேட்க…இதயத் துடிப்பு ஓசை டப்.. டப்… ப்…

இரவு போன் அடிக்க, பழைய ரூமில் எதையோ தேடிக் கொண்டிருந்த யாசிர் பதறி அடித்துக் கொண்டு அதை ஆன் செய்தார்..

” ஹலோ யாசிரா..? ! “

“ஆமா…நீங்க…!? “என இழுத்தார் யாசிர் பாய்…

“அன்னைக்குப் பார்க்ல போட்டோ எடுத்தோமே நானும், மனைவியும்…”

” ஆமா சார். . நல்லாருக்கீங்களா… “

“நல்லாருக்கேன்.. யாசிர்.. ப்ரீயா “

” ப்ரீதான் சார்.. சொல்லுங்க “

“பேத்திய போட்டோ எடுக்கச் சொல்லிருந்தோமே ஞாபகம் இருக்கா…? ” எனச் சிரித்துக்கொண்டார் , தயக்கத்துடன் யாசிர் பாய் ‘ஆமாம் சார்’ …

” இந்த மாசம் எண்ட்ல அவங்க வெளி ஊர்ல இருந்து வராங்க.. நீங்க கொஞ்ச பிரீயா வச்சுக்கிட்டா நல்லாருக்கும்”

” கண்டிப்பா சார் .. வந்தவுடனே போன் பண்ணுங்க”

” ஷ்யூர் .. ” எனச் சொல்லி கட் பண்ணினார்…

யாசிருக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.. போட்டோ ஸ்டூடியோ வச்சுருந்தப்போ எடுத்த ஆர்டர் .. இப்பதான் பார்க்கினுடைய கேமராவில் வெளியே யாருக்கும் எடுக்கக் கூடாது, சிலருக்கு மட்டும் தான் வெளியே எடுத்துச் செல்லவே அனுமதி என்பது யாஸிர்க்குச் சட்டெனெ ஞாபகம் வர … தூரத்தில் அமைதியாக மூட்டையில் இருந்த கேமரா , பாவனையற்ற முகத்தோடு .

பார்க்கைச் சுற்றியும் புதிதாக விளம்பர பேனர்கள் வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே அன்று பார்க்கிற்குள் நுழைந்தார் யாசிர் பாய். . பார்க்கினுள் நுழைய நுழைய பத்து வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்தப் பார்க் அந்நியப்பட்டுப் போனது . அது பார்க்கில் நடந்திருக்கும் வெளி மாற்றத்தால் இல்லை என்பது அவருக்குத் தெரியும். பாலு யாசிரிடம் வந்து” ஆபீஸ்ல உங்கள கூப்டறாங்க” என்றான்..

” இதலாம் உங்களுக்குத் தேவையா.. போட்டோ எடுக்குறதுனா.. அந்த வேலைய மட்டும் பாக்கவேண்டியதுதான? வயசானாலும் சின்னப் புத்தியா இருக்கீங்க” எனத் திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் பாலு..

“யாசிர், பார்க்குக்கு வரவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? ” என்றான் நந்தன்..

பாய்க்கு புரியவில்லை.

. “பாய்.. இந்தப் பொண்ணு உங்க மேல வந்து கம்பளைண்ட் பண்ணிருக்கு “எனப் போட்டோவைக் காட்டினார்…

யாசிர் யாராக இருக்கும் என்பதை அந்தப் படத்தைப் பார்க்கும் முன்பே யூகித்துவிட்டார்.

“அவங்களப் போட்டோ எடுங்கனு சொல்லி நீங்க கம்பெல் பண்ணிங்கனு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு இந்தப் பொண்ணு….”. சிறிது அமைதிக்குப் பிறகு நந்தன் “பாய் அங்க என்ன நடந்துருக்கும்னு எனக்குப் புரியுது…இப்ப காலம் மாறிபோச்சு.. சில விஷயங்கள ஏத்துக்கிட்டு..பாத்தும் பாக்காத மாதிரி போய்றனும் ” நந்தன்…

யாசிர் பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.. என்றைக்கும் இல்லாமல் கால் வலிக்க ஆரம்பித்தது.. இந்தப் பார்க் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே பிரஷர் மாத்திரை எடுக்க மறந்திருந்தார், இன்றும் அசதியில் தூங்கிப் போனார்..

காலையில் நேரம் ஆகிவிட்டது.. ஐ டி கார்டை மறந்திடாமல் எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு நடக்க ஆரம்பித்தார்.. காலையில் வாக்கிங் போறவர்கள் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.. பார்க்கிற்குச் சென்ற உடன்தான் தெரிந்தது. இன்றைக்குப் பார்க்கின் போட்டோகிராபர்ஸ் அனைவருக்கும் மேனேஜர் மீட்டிங் பத்து மணிக்கென்று. பக்கத்தில் இருந்த வெள்ளரிக்காயை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார்.மேனேஜர் சரியாகப் பத்து மணிக்கு ஆஜராகிவிட்டார்… பார்க்கின் விதிமுறைகளை மறுபடிமறுபடிச் சொல்லிக் கொண்டிருந்தார். தான் மேலும் இரண்டு பார்க்கிற்கு மேனேஜர் ஆகிவிட்டதையும் சொல்லாமல் இல்லை… பாலுவைக் கூப்பிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்து வரச் சொல்ல… ரெகார்ட் நோட்டிலிருந்து ஒரு கவரை எடுத்த நந்தன்.. அதைப் பிரித்து ஒரு லெட்டரை எடுத்தான்.. அதில் இங்கிருந்து வேற பார்க்கிற்கு மாற்றப் பட்ட பெயர்களைவாசித்தான் நந்தன்.. அதில் யாசிர் பாய் பெயருடன் இரண்டு பெயர்கள் இருந்தன… இது பிரைவேட் பார்க் என்பதால் போட்டோக்ராபர்ஸ் எனத் தனி அஸோஸியேஷன் கிடையாது. அதனால் எந்த முடிவும் எடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு உண்டு. வேலை செய்பவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இங்கிருந்து புதிய பார்க்கிற்குத் தினமும் செல்ல எவ்வளவு செலவாகும், பார்க் கொடுக்கும் சம்பளம்,அறுபது வயது எனப் பலவற்றயும் யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்.. இன்றைக்கு மேனேஜர் மீட்டிங் இருந்ததால் தொழுகைக்குச் செல்ல முடிய வில்லை.. சேரில் கிடந்த பிலிம் ரோல்களை எடுத்து பழைய கேமரா பெட்டிக்குள் திணித்துவிட்டார் யாசிர்.வெளியே மழை பெய்யத் தொடங்கி இருந்தது.. மழை என்பது கொடைக்கானலுக்கு வந்த பின்பு யாசிருக்குப் பழக்கம் ஆகிவிட்டது… இங்கு வந்து நிறைய மாறிவிட்டார்.. பச்சத்தண்ணியில் குளிக்கப் பழகிக் கொண்டார்.

ஒரு மாசம் ஷேவ் பண்ணாத தாடியைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார்.

அருகிலிருந்த ஐ டி கார்டை எடுத்துக் கொண்டு பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ஸார் ..’போட்டோ ஸார் ‘.. ‘போட்டோ ஸார் … ‘ ஜோடியாக வந்தவர்கள் யாசிர் பாயிடம்

“எவ்வளவு” என்றனர்

“இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது “

“நாப்பதா… இவ்வளவு அதிகமா சொல்றீங்க.. “

” இது நம்ம பிக்ஸ் பண்றது இல்லப்பா.. “

” முப்பது நா கூடப் பரவலா… “

“இல்லப்பா.. நாப்பது தான் ” என யாசிர் பாய் சொல்ல.. சரியான பொல்லாதவனா இருப்பான் போல என வாய்க்குள் முனங்கிக்கொண்டே நகர்ந்தனர் இருவரும்..

பெரும்பாலும் இந்தச் சனிக்கிழமைதான் இங்குக் கடைசி நாள் என யாசிர் பாய்க்கு தோன்றியது .. பாலு ‘ போட்டோ சார் போட்டோ சார் …’ எனக் கத்துவது இங்கு வரைக்கும் கேட்டது..

“தாத்தா.. அப்பா எடுக்குற போட்டோவ விட நீங்க எடுக்குறது தான்நல்லாருக்குனு ” பாலுவின் பையன் சொன்னது ஞாபகம் வந்தது யாசிர் பாய்க்கு…

பார்க்கில் அன்றைக்குப் பார்த்த ஜோடி யாசிரை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றனர்…

யாசிர் புல் தரையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்… பாலு உடன் ஏற்பட்ட சண்டை, அவன் மேனேஜரிடம் அதைப் பற்றிச் சொல்லியது…இங்கு போட்டோ வேலை செய்யும் அனைவரும் சேர்ந்து எடுத்த போட்டோ என எதை எதையோ யோசித்துக்கொண்டிருந்தார்யாசிர்..சற்றுத் தொலைவில் இருந்த பாலு சத்தமாக இருமிக் கொண்டிருந்தான்.. இறுமலும் பேச்சும் ஒரே அளவில் இருந்தது…. யாசிர் பார்க்கைச் சுற்றிப் பார்த்தார்.. முன்பெல்லாம் பார்க்கில் போட்டோ எடுக்க ஆர்வமாக இருந்தனர்.. ஒரு நாளைக்குச் சுமார்  இருபது பேர் போட்டோ எடுப்பாங்க… இப்பலாம் எவ்வளவு கொறஞ்சுருச்சு ஒரு நாளைக்கு மூணோ, நாளோ அவ்வளவுதான் ..

வெயில் அதிகமாக அடிக்கப் புல் வெளியில் இருந்த மரத்தின் அடியில் இருக்கும் சேரில் அமர்ந்தார் யாசிர். புதுசாகப் பார்க்கிற்குள் நுழைந்த டூரிஸ்ட் பஸ் சுமார் அறுபத்தைந்து பேரை இறக்கிவிட்டுவிட்டுப் பார்க்கிங் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது..

அங்கங்கு இருந்த போட்டோ நபர்கள் ஒன்றாக மொய்க்கத் தொடங்கினர்.. சிலர் காதுகொடுத்துக் கேட்டுவிட்டு வேண்டாமென நகர்ந்தனர்.. சிலர் பார்க்கை பார்த்துக் கொண்டே சென்றனர்… சிலர் கோவமாகக் கூடப் பார்த்துச் சென்றனர்.. ஆனால் அனைவரும் தன் கையில் வைத்திருந்த சிலேடு போல இருந்த போனை எடுத்துப் படம் பிடித்துக் கொண்டனர்… அந்தச் சிலேடு எவ்வளவை மாற்றிவிட்டது என யோசித்துக் கொண்டார்யாசிர். பார்க் குளோசிங் டைம் விசில் அடித்தும்.. அங்கும் இங்கும் டூரிஸ்ட் பஸ்சில் வந்தவர்கள் ஷெல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.. ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்க்கை விட்டு வெளியே வந்தார் யாசிர்.. மழை பிடிக்கத் தொடங்யிருந்தது…

“யாஸிற்குப் பேலன்ஸ் சம்பளத்தைக் கொடுத்தனுப்புங்க” என்றார் நந்தன்.யாசிர் பாய் பேசத் தொடங்கினார் தயங்கிக் கொண்டே .

“அவ்வளவு தூரம் போறது கஷ்டம் சார் “

“அப்படினா எப்படிப் பாய்.. ரெகார்ட்ல பேரு வந்துருக்கே “

“பரவால சார்.. “

“புரியல பாய் “

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்குறேன்… “

“அப்புறோம்.. என்ன செய்யப் போறிங்க பாய்.? “.

” தெர்ல சார்… “

லென்ஸ்உடைய கிளோஸர் மூடியைக் காணவில்லை என்று சம்பளத்தில் அதைப் பிடித்துக் கொண்டுதான் மீதி பணத்தைக் கொடுத்தான் நந்தன். அவன் பேசுவான் என்று கடைசி வரை எதிர்பார்த்தும் நடக்கவில்லை. கேமராவைக் கொடுத்துவிட்டு கிளம்பினார் யாசிர் பாய்..கையில் காசில்லாமல் போன வாரம், தான் வைத்திருந்த பழைய கேமராவை விற்கவேண்டிய நிலை . யாசிர் பாய் தனக்குள் எதை எதையோ முனங்கிக் கொண்டே வந்தார்.

மழை நின்றபாடில்லை. உடம்பு கொஞ்சம் ஜுரம் அடிப்பது போல இருக்க , பாயில் படுத்திருந்த பாய் மாத்திரை வைத்திருந்த டப்பாவை திறந்தார்.. அதில் காமெராவின் கிளோஸர் இருந்தது.அவரை அறியாமலே ஒரு சிரிப்பு அவருடன் ஒட்டிக் கொண்டது. அதைத் தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தார்…அவரிடம் இருந்த வெறுமையை அது தன்னுள் புதைத்துக் கொள்ள ! . அவர் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார். சுவரின் மூளையில் இருந்த கரப்பான்பூச்சி இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. வீட்டின் கதவை திறந்து மழை சாரலில் நனைய தொடங்கியவர் மனதிற்குள் எந்த விதமான iso, ஷட்டர் ஸ்பீட் ரேஞ் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டு கண்களைச் சிமிட்டினார் கொண்டாட்ட நிலையாகி போன வான் மழை துளிகள் யாசிர் பாய் சுமந்து கொண்டிருந்த யாவற்றுக்கும் விடுதலையாய் சிமிட்டல்களுக்குள் உறைந்து கிடந்தன…!

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.