மணிமேகலையின் வாழ்விலே ஒரு தினம் – ஸிந்துஜா சிறுகதை

மணிமேகலையின் வேண்டுகோளுக்கு கடவுள் செவி சாய்க்கவில்லை என்று அன்றிரவு  அவளுக்குத் தெரிந்து விட்டது. சாப்பிட்டு விட்டுக் கணினியைத் திறந்து பார்த்த போது , அவள் பெயர் லிஸ்டில் காணப்

பட்டது. அவள் வேண்டிப் படைக்கும் கொழுக்கட்டை கடவுளுக்கு அலுத்து விட்டது போலிருக்கிறது. எங்கே  போட்டுத் தொலைத்திருக்கிறார்கள் என்று எரிச்சலுடன் பார்த்தாள். நகரத்துக்கு வெளியே  போவதற்குச் சற்று முன்பாக அமைந்திருந்த காலனியின் பெயர் காணப்பட்டது. அவள் இருக்குமிடத்

திலிருந்து, அங்கே போவதற்கே  பஸ்ஸில் ஒன்றரை மணி நேரமாகும். தங்குமிடத்தில் இரண்டு பகல்களும் ஒரு இரவும் கழித்தாக வேண்டிய கொடும் தண்டனை வேறு என்று வெறுப்புடன் நினைத்தாள். 

சென்ற  முறை தப்பித்த மாதிரி  இந்த முறையும் தேர்தல் வேலையில் 

மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும் என்று ஆரம்பத்தில் ஒரு நப்பாசை இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த முறை கடுமையான விதியைக் கொண்டு வரப்  போவதாகவும் , அரசியல் அல்லது அரசாங்க  செல்வாக்கைக்  கொண்டு வர முயல்பவர்களுக்குக்  கடுமையான தண்டனை இருக்கும் என்றும் சர்குலர் வந்து விட்டதாக ஒரு நாள் செகரட்டரி விமலா செல்வராஜ் அவள் நம்பிக்கையில் மண்ணைப் போட்டாள். விதியை மீறுபவர்களின் ஸி. ஆரில் கறுப்புக் குறிப்புகள் இடம் பெறும் என்று விமலா பயமுறுத்தினாள். போன தடவை மணிமேகலையின் சித்தப்பா கார்பரேஷன் கமிஷனரின் அந்தரங்கச் செயலாளராக இருந்தார். கமிஷனரின் செல்வாக்கு மூலம்  மணிமேகலையின் பெயர் லிஸ்டில் தவிர்க்கப்பட்டு விட்டது. அப்போதே யாரோ போய் விமலாவிடம்,வத்தி வைத்து விட்டார்கள். மணிமேகலைக்குப் பதிலாக , லிஸ்டில் விமலா பெயர் சேர்க்கப்பட்டு விட்டதாக. அந்தக்  கோபத்தைத்தான் விமலா இந்த பயமுறுத்தல்களாகக் காண்பிக்கிறாளோ  என்று மணிமேகலைக்கு மெலிதாக ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் விமலா சொன்னது எல்லாம் உண்மைதான் என்று ரெவினியு இன்ஸ்பெக்டர் குமரப்பா உறுதி செய்து விட்டான்.

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தேர்தல் நடக்கும் போது  வாக்குப் பதிவு  

நடத்த முன் வந்து கடமை ஆற்ற வேண்டும் என்று எந்தப் புண்ணியவான் எழுதி வைத்தானோ என்று திட்டினாள் மணிமேகலை..அ. உத்தியோகஸ்

தர்கள்தான் இளிச்சவாயர்கள் என்று அரசாங்கமே நினைத்து இருக்க வேண்டும் . தேர்தல் அன்று ஓட்டுப் போடத் தகுதியில்லாத குழந்தைகளில் இருந்து தகுதியுள்ள ஆனால் ஓட்டுப் போடப் போகாத பெரியவர்கள் வரை விடுமுறை தினம் என்று ஜாலியாக மஜா பண்ணும் நாளில் ஒரு அரதப் பழசான கட்டிடத்தில் மின்விசிறி இல்லாத அல்லது இருந்தும் ஓடாத அறையில் சர்க்காரின் பழுப்புக்  காகிதங்கள்  சாமான்கள் என்று அடுக்கி பிரித்து மூடி மறுபடியும்  திறந்து அடுக்கி காலை முதல் மாலை வரை தேர்தல் பணி  என்னும் காரியத்தைச் செய்தாக வேண்டும்.

லீவு போய்விட்டதே என்பதல்ல மணிமேகலையின் வருத்தம் எல்லாம். அவள் விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் வந்து வேலை செய்து

விட்டுப் போகும் பிரகிருதி.  தேர்தல் தேதிதான் அவள் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது. முன்னமேயே ஒரு வாரம் குடும்பத்

துடன் தாய்லாந்து போகத் தீர்மானித்திருந்தார்கள். மிகவும் குறைந்த விலையும்  அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கப்பட்ட  விமானப் பிரயாணச் சீட்டுக்களினால் கவரப்பட்டு ஏற்பாடுகளைச் செய்வதாக மணிமேகலையின் கணவன் கூறியிருந்தான். அந்த வாரத்தின் நட்ட நடுவில் தேர்தல் தேதியை வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனால் என்ன புலம்பி என்ன? 

இதைத் தவிர, தேர்தல் பணியை முன்னிட்டு அவள் மேற்கொள்ள

வேண்டிய பிரயாசைகள் மணிமேகலைக்கு அதிக எரிச்சலைத் தந்தன. அலுவலக நேரத்தில் பயிற்சி முகாம்களுக்குச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்  அவள் மேஜையில் வந்து குமியும் ஃபைல்களை அவள்தான் அலுவலகத்துக்கு வீட்டிலிருந்து சீக்கிரம் வந்து அல்லது வீட்டுக்கு நேரம் கழித்துப் போய், இல்லாவிட்டால், சனி,ஞாயிறுகளில் வந்து உட்கார்ந்து குவியல்களைக் குறைக்க வேண்டும். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் மாதிரி தேர்தல் பயிற்சி முகாமில் சொல்லிக் கொடுப்பதை  மனப்பாடம் செய்ய வேண்டும். நாற்பது  வயதில் இது என்ன தலையெழுத்து?  சிலசமயம் அவள் கணவன் சொல்கிற மாதிரி வேலைக்குப் போகாமல் இருந்திருக்

கலாம்.   ஆனால் கை நிறையக் கிடைக்கும் சம்பளத்தை எப்படி இழப்பது ? அவள் வருவாய்த் துறையில் இரண்டாம் நிலை அதிகாரியாக இருந்தாள்.

இந்த அரசாங்க வேலை சம்பளத்தைத் தவிர தரும் அதிகாரம், செல்வாக்கு போன்ற சௌகரியங்களை எப்படி இழக்க முடியும் ? 

குறிப்பிட்ட தினத்தில் மணிமேகலை  அரசாங்கக் கட்டிடத்தை  அடைந்த போது மணி பத்து அடிக்கப் பத்து நிமிஷங்கள் இருந்தன. பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் குழுமியிருந்தார்கள். மணிமேகலையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். தெரிந்த முகம் எதுவும் தென்படுகிறதா என்று பார்த்தாள். ஒருவரும் காணப்படவில்லை . அன்றையக் கூட்டத்தில் எந்தெந்த வாக்குச் சாவடிகளுக்கு யார் யார் தேர்தல் அதிகாரியாகப்  போக வேண்டும். அவருக்குக் கீழே பணி புரியவிருக்கும் அரசாங்கப் பணியாளர்கள் எவ்வளவு பேர், அவர்களைப் பற்றிய விவரங்கள், என்னென்ன உபகரணங்களை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் விவரங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் பேசி விவாதித்து முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். 

“போன வருஷம் நான் போன பள்ளிக்கூடம் இடிஞ்சு விழுந்துருமோன்னு பயந்துக்கிட்டேதான் எல்லாரும் வந்து போனாங்க. அந்த வாக்குச் சாவடி

லேதான் ரொம்பக் கம்மியான  வாக்குப்  பதிவு. ஒரு சமயம் ஜனங்க  கம்மியா வரட்டும்னு அங்கே ஏற்பாடு பண்ணி ணாங்களோ என்னவோ!” என்று சிவப்பு ஸ்வெட்டர் அணிந்த ஒருவர் சொன்னார்.

“ஏன்தான் இந்த மாதிரி கவர்மெண்டு பள்ளிக்கூடத்தை எல்லாம் வாக்குச் சாவடியா யூஸ் பண்றாங்களோ?” என்று ஒரு நடுத்தர வயது மாது அங்கலாய்த்தாள்.

“என்ன அப்படிச் சொல்லிட்டீங்க? பள்ளிக்கூடத்திலே நடத்தினா மேஜை  

நாற்காலி பெஞ்சு இதுக்கெல்லாம் செலவழிக்க வேண்டாம். இடத்துக்கு வாடகை குடுக்க வேண்டாம்ன்னு  ரொம்ப யோசிச்சில்லே முடிவு எடுத்தி

ருக்காங்க?”‘என்று கிண்டலும் கேலியுமாக ஒரு நாமக்காரர் சிரித்தார்.

“இப்ப ஒவ்வொரு கட்சியும்  தேர்தல் செலவுக்குன்னு இறைக்கிற பணத்துல இதெல்லாம் பிச்சைக் காசு. நம்ம கழுத்திலே கத்தியை வச்சு  பாவம் கவர்மெண்ட்டு மிச்சம் பிடிக்கிறாங்க. எதோ நம்மளால ஆன தேச சேவை போங்க ” என்றார் முதலில் பேசிய சிவப்பு ஸ்வெட்டர்காரர். 

“விலைவாசி நாளுக்கு நாள் ஏறிகிட்டே போகுது . பஸ்காரன் அப்பப்ப விலையை ஏத்தறான் . நமக்குக் கொடுக்கற அலவன்ஸ் மாத்திரம் மார்க்கண்டேயன் வயசு மாதிரி அப்படியே நிக்குது. கேட்டா கமிட்டின்னு சொல்றான். இன்னும் முடிவு எடுக்கலையாம்.  அவங்க நாம ரிட்டையரானதுக்கு அப்புறம் வரவங்களுக்குக் கொடுப்பாங்க போல இருக்கு” என்றாள் இன்னொரு பெண்.

மணிமேகலைக்கு இந்தப் பேச்சை எல்லாம் கேட்பதற்கு அலுப்பாக இருந்தது. இரண்டு நாள் வேலைக்கு தினம் ஐநூறோ என்னமோ 

கொடுக்கிறார்கள். அப்படியே உயர்த்தி விட்டாலும் இப்போது ஒருவர் சொன்னது போல கொஞ்சம் அதிகமான பிச்சைக்காசுதான் வரும். 

அப்போது ஒரு பணியாள்  வந்து அவர்களைக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அழைத்தான். எல்லோரும் எழுந்து சென்றார்கள். அவர்களது மேலதிகாரி தேர்தலன்று வாக்குச் சாவடி அதிகாரியாக அவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிச் சொன்னார்.

அதற்கு அடுத்த வாரம் ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு ஒரு கூட்டம் நடந்தது. அன்று அவளுடைய வாக்குச்  சாவடியில் அவளுக்குக் கீழே பணி

புரிய வேண்டிய மூன்று பேர்கள் அவளுடன்  வந்து சேர்ந்து கொண்டனர். அவர்களில் இருவர் உதவி அதிகாரிகள். மற்றும் ஒரு பியூன். இரு உதவி

அதிகாரிகளிலும் மூத்தவர்.பெயர் கஜபதி  . இன்னொருவர் சம்சுதீன். 

கஜபதி அவளருகே வந்து “நமஸ்காரா மேடம்”என்றார். 

“குட்மார்னிங். உங்கள் ஆபிஸ் எங்கே? எந்த டிபார்ட்மென்ட்?” என்று மணிமேகலை கேட்டாள் ஆங்கிலத்தில்.

“சிக்க மகளூரு . ரெவினியூ டிபார்ட்மென்ட்டல்லி கலசா மாடுத்தினி” என்றார்.

“ஓ, நீங்களும் நம்முடைய டிபார்ட்மெண்டில்தான் இருக்கிறீர்களா? ” என்றாள் மணிமேகலை.

“ஹௌது மேடம்” என்றார் கஜபதி.

பிடிவாதமாக அவர் தனக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்காதது அவளுக்கு எரிச்சலை மூட்டியது. சிக்கமகளூரிலிருந்து பெங்களூருக்கு மாற்றல் உத்திரவு கொடுத்தால் இதெல்லாம் சரியாகி விடும்.

பிறகு அவர் சம்சுதீனை அறிமுகப்படுத்தினார். இருவரும் ஒரே ஊர்க்

காரர்கள். ஆனால் சம்சுதீன் வேலை பார்ப்பது அங்குள்ள ஒரு அரசு நிறுவனத்தின் கிளையில். பியூன் தன்னைக் கரியப்பா என்று அறிமுகப்

படுத்திக் கொண்டான். பேசும் போது கஜபதிக்கு  தேர்தல் வேலைகளில்

அதிகப் பரிச்சயம் உண்டு என்று தெரிந்தது. அந்த வகையில் தான் அதிர்ஷ்டசாலி என்று மணிமேகலை நினைத்துக் கொண்டாள். புதிதாகவோ அல்லது அதிகம் உள்வாங்கிக் கொள்ளாமல் தேர்தல் வேலைகளைக் கடனே என்று செய்பவர்களாய் இருந்தாலோ  எல்லாவற்றையும் முதன்மை அதிகாரி என்று அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும். அதில் அவள் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரும் பிரச்சினை வாக்குச் சாவடியில் தேர்தல் நடக்கும் போதும் முடிந்தவுடனும்  மாநில மொழியில் உள்ள ரிக்கார்டுகளைச் சீராகத் தயாரித்து சமர்ப்பணம் செய்ய வேண்டி

யிருந்ததுதான். அவளுக்கு அம்மொழியில் பேச்சுப் பரிச்சயம் இருந்தது. ஆனால் எழுதத் தெரியாது. ஆனால் அரசாங்கத்தில் அவளைப் போலப் பலர் இருந்தார்கள்.

சென்ற முறை தேர்தல் வேலைக்கு அவளைப் பெங்களூருக்குள்ளேயே போட்டார்கள். ஆனால் அப்போது அவளுக்குஉதவியாளனாக வந்தவன் மண்டைக்கர்வம் பிடித்தவனாக இருந்தான். அவளுக்கு மொழிப் பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்தும்  அவளுடைய வேலைகளையெல்லாம் தான் பார்க்க முடியாது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டான். அதற்குப் பின் அவள் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளார்க்கை வரச் சொல்லி வேலைகளை முடித்தாள். 

கூட்டம் முடிந்ததும் அவர்கள் அதே கட்டிடத்தில் இருந்த தேர்தல் கமிஷன்  அலுவலகத்திற்குச் சென்றார்கள். அவர்களது வாக்குச் சாவடியில் வைக்கப்பட வேண்டிய வாக்கு இயந்திரம்  வாக்குப் பதிவு மற்றும் வாக்காளர் ரிஜிஸ்தர். வாக்காளர் சீட்டுக் கட்டுக்கள், அழியாத மை அடங்கிய கூடுகள், தேர்தல் அதிகாரியினுடைய ரப்பர் சீல், டயரி, தேர்தல் வேட்பாளர் மற்றும் வாக்காளர் ஃபார்ம்கள், சிறிய பெரிய கவர்கள், அடையாளப் பலகைகள், பேனா, பென்சில், ரப்பர், கோந்து என்று எல்லாப் பொருட்களும் அடங்கிய இரு பெட்டிகளில்  அவர்களது வாக்குச் சாவடியின் எண் , சாவடியின் விலாசம் குறிக்கப்பட்டுத் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. மணிமேகலையின் உதவியாளர்கள் அனைத்தையும் சரி பார்த்த பின் அங்கிருந்த ரிஜிஸ்டரில் இவற்றைப்  பெற்றுக் கொண்டதாக மணிமேகலை கையெழுத்திட்டாள். இரு பணியாட்கள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து அலுவலகத்துக்கு வெளியில் இருந்த பஸ்ஸில் ஏற்றினார்கள். மணிமேகலையும் மற்றவர்களும் பஸ்ஸில் ஏறிக் கொண்டனர். ஏற்கனவே மேலும் பலர் அந்தப் பஸ்ஸில் இருந்தனர்.     

ணிமேகலையின் வாக்குச் சாவடியும் ஒரு பள்ளிக் கட்டிடத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தது. பஸ்ஸிலிருந்து இரு பெட்டிகளையும் பணியாட்கள் வாக்குச் சாவடிக்குள் இறக்கி வைத்து விட்டுத் திரும்பிப் போனார்கள். 

பள்ளிக் கட்டிடம் பங்கரையாகக் காணப்பட்டது. அதன் சுவர்களில் அடிக்கப்

பட்டிருந்த வெண்மை நிறம் இப்போது பழுப்புக்கு மாறிக் கொண்டிருந்தது. ஊர்த் தூசியும் மாறி மாறி அடித்த வெய்யிலும் மழையும் இந்த மாற்றத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று மணிமேகலை நினைத்தாள். ஆனால் வெளித் தோற்றத்திற்கு மாறாக உள்ளே சுத்தமும்,

ஒழுங்கும் காணப்பட்டன. தரை கழுவப்பட்டு மேஜை நாற்காலிகள் சீராக வைக்கப்பட்டிருந்தன. கஜபதி அவளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் அறைக்கு எதிரே இருந்த அறையில் நுழைந்தவரை மணிமேகலையும் தொடர்ந்தாள். அச் சிறிய அறையில் ஒரு கட்டிலும், அதன் மேல் ஒரு தலையணையும் போர்வையும் இருந்தன. 

“இல்லினே மேடம் நீங்க தங்கணும்” என்றார் கஜபதி அவளைப்  பார்த்து.

“உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“சொல்ப சொல்ப” என்றார்.. 

“எனக்குக் கன்னடம் தெரிஞ்சிருக்கற மாதிரி” என்று அவள் சிரித்தாள்.

கஜபதி வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவளைப் பார்த்தார். அது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“ரொம்ப திவசமா இங்க இருக்கீங்களா?” என்று கேட்டார் மணிமேகலை

யிடம்.

“ஆமா. பத்துப் பன்னெண்டு வருஷமா இருக்கேன்” என்றாள் அவள்.

‘அப்படியும்  கன்னடம் கத்துக்  கொள்ளவில்லையா?’ என்று கஜபதி கேட்க

வில்லை. ஆனால் மனதுக்குள் எழுந்த குற்ற உணர்ச்சியை அவளால் அடக்க முடியவில்லை.  

“கரியப்பா இங்க ராத்திரி நீரு  வெச்சிர்வான். ஃபேனு  இருக்கு. நல்லதாப் போச்சு”  என்று விட்டத்தைப் பார்த்தார்.

“நீங்கள்லாம்?” என்று கேட்டாள். 

“நாம  வெளி ஜாகாலே தலையை போட்டுக்க வேண்டியதுதான். எங்க தூங்கறது? சொள்ளே பிராபிளம்   ஜாஸ்தி” என்றார்.

பரிதாபத்தை வரவழைக்கும் பேச்சா என்று அவள் அவரை உற்றுப் பார்த்தாள்.

“எலக்சன் கலசாந்தரே  எரடு மூறு திவசா ஒள்ள கிரகச்சாரானே. நம்பள ஆளப் போறவன் கிட்டே கஷ்டப்படுடான்னு  இப்பவே  நம்பள கஷ்டப்படுத்த

றாங்கோ. அப்புறம் அவன் ஆளறேன்னும் நம்பளத்தான் கஷ்டப்படுத்தப் போறான்” என்றார் கஜபதி.

மணிமேகலை புன்னகை செய்யவில்லை. 

பிறகு தன் கைப்பையை அங்கிருந்த கட்டிலின் மீது வைத்தாள். அது தவறிக் கீழே விழ உள்ளிருந்த பர்ஸ் வெளியே வந்து திறந்து கொண்டது.. கஜபதி குனிந்து அதை எடுத்து அவள் கையில் கொடுத்தார். அப்போது பர்ஸின்  உள்ளேயிருந்த புகைப்படத்தின் மீது அவர் பார்வை விழுந்தது. பர்ஸை மணிமேகலையிடம் கொடுத்துக் கொண்டே “நிம்ம மகளுனா?” என்று கேட்டார்.

“ஆமா” என்று அவள் புன்னகை செய்தபடி பர்ஸைத் திறந்து பெண்ணின் 

படத்தைப் பார்த்தாள்.

“பேரு என்னா மேடம்?” என்று கேட்டார் கஜபதி.

“சத்யபாமா.” 

“ஓ ஒள்ள எசரு. கிருஷ்ண பரமாத்மாவை நினைச்சா சத்யபாமா

ஞாபகத்துக்கு வந்திடும்”  என்று சிரித்தார் கஜபதி.

“உங்களுக்குக் குழந்தைகள்?” 

“எனக்கும் ஒரே மகள்தான். சம்யுக்தான்னு பேரு.”

“நல்ல பெயர்” என்றாள்.

‘வடக்கத்தி ராணி பேருன்னு ஞாபகம் வச்சுக்கலாம்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். சொல்லவில்லை.      

அவளும் கஜபதியும் கட்டிடத்தின் பின் பகுதிக்குச் சென்றார்கள். பரந்த இடத்தை முள்ளும் கல்லும் நிறைத்திருந்தன. வலது பக்க மூலையில் கிணறு காணப்பட்டது. அதன் வெளியே இரண்டு பக்கெட்டுகளும், சங்கிலி பிணைத்திருந்த வாளியும் இருந்தன. கிணற்றிலிருந்து வாளியில் நீரை எடுத்து க்கெட்டில் வைத்திருந்தார்கள். அவள் பார்வை சுற்றிய போது சற்றுத் தொலைவில் கதவு மூடிய ஒரு அறை தென்பட்டது. 

அவள் பார்வையைப் பின்பற்றிய கஜபதி “அதுதான் பாத்ரூம். உள்றே டாய்லெட்டும் இருக்குது” என்றார்.

அவள் அதை நோக்கி நடந்து மூடியிருந்த கதவைத் திறந்தாள். டாய்லெட் படு சுத்தமாக இருந்தது. ஆனால் குளிக்க வசதியாக அந்த இடம் இருக்க

வில்லை.

“ரொம்ப ஆச்சரியமா இருக்கே. பப்ளிக் வந்து போற இடம் இவ்வளவு சுத்தமா இருக்கும்னு நான் நினைக்கலே” என்றாள் அவள்.

கஜபதி அங்கிருந்த போர்டைக் காண்பித்தார். கன்னடத்தில் எழுதப்

பட்டிருந்தது. ‘வெளியாட்களுக்கு உரிமை கிடையாது. மீறி நுழைவோர் தண்டிக்கப்படுவர்’ என்று எழுதியிருப்பதாக அவர் கூறினார்.  

கஜபதி அவளிடம் “இது எங்களுக்கோசரம் மேடம். இங்க பக்கத்து மனேலே சொல்லி வச்சிருக்கு. இந்த ஸ்கூல் டீச்சரவரு மனை. அங்க நீங்க போயிட்டு வரலாம்” என்றார்.

அவள் நன்றியுடன் கஜபதியைப் பார்த்தாள்.   

இரவுச் சாப்பாடு வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு அன்றிரவு கரியப்பா வந்தான். அவள் வீட்டிலிருந்து பிரெட்டும் பழமும் கையில் எடுத்துக் 

கொண்டு வந்ததால் ஒன்றும் வேண்டாம் என்று கூறி விட்டாள். அவன் போன பின், பையிலிருந்து பிரெட்டையும் பழங்களையும் எடுத்தாள். கூடவே பையிலிருந்து எடுத்ததில் ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட்டும் வந்தது. மறுநாள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அதை உள்ளே வைத்து விட்டாள்.  

மறுநாள் காலையில் ஏழு மணிக்கு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு ஆரம்பிக்கும் என்பதால் ஐந்து மணிக்கே மணிமேகலை படுக்கையை விட்டு எழுந்து விட்டாள். அருகிலிருக்கும் வீட்டிற்குச் சென்று தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள அவள்  கஜபதியைத் தேடிச் சென்றாள். இரவு வாசலில் படுத்திருந்த மூன்று பேரையும் அங்கே காணவில்லை. அவள் ஹாலுக்குள் நுழைந்த போது கஜபதியும் சம்சுதீனும் கரியப்பாவும் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.

கஜபதி அவளைப் பார்த்ததும் “குட்மார்னிங் மேடம்” என்றார். மற்ற இருவரும் அவரைப் பின்பற்றினார்கள்.

“இந்த வேட்பாளர்கள் லிஸ்டு, அவங்க கையெழுத்து ஸ்பெசிமன், போட்டோ எல்லாத்தையும் நீங்க பாக்கறதுக்கு எடுத்து வச்சிருக்கேன். அதேமாதிரி ஏஜெண்டுகளுக்கும் இந்த பேப்பர்கள் எல்லாம் கொடுத்

திருக்காங்க. அழியாத மசி பாட்டில் மூடியோட வச்சிருக்கோம். கட்சிச் சின்னத்தோட இருக்கிற வேட்பாளர் போஸ்டரையெல்லாம் எல்லாப் பக்கமும் ஒட்டி வச்சாச்சு. வாக்காளருங்க  மத்தவங்க பார்வை படாம வோட்டு போடுறதுக்கு வசதியா மூணு கவுண்டர் கட்டி வச்சாச்சு. இதெல்லாம் முடிக்கணும்னுதான் நாங்க சீக்கிரமா எழுந்து வந்துட்டோம்” என்றார் கஜபதி.   

பிறகு அவர் “மேடம் நீங்க வாங்க. டீச்சரவரு மனையல்லி நீங்க ரெடி பண்ணிட்டு வந்திறலாம்” என்று அழைத்துச் சென்றார். அவள் குளித்துத் தயாராகி கஜபதி இருந்த இடத்துக்குத் திரும்பிய போது ஐந்தரை என்று கைக்கடிகாரம் காட்டியது. ஆறு மணிக்கு தேர்தல் ஏஜெண்டுகள் அனைவரும் வந்து விட்டார்கள். மாதிரி தேர்தல் நடத்தி முடிக்க ஐம்பது நிமிஷம் ஆகியது. ஏழு மணிக்குச் சரியாக முதல் மனிதர் வாக்குப் பதிவு செய்ய உள்ளே வந்தார்.

மணிமேகலை கஜபதியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வந்திருந்த ஏஜெண்டுகளிடம் இன்முகம் காட்டி அவர்கள் ஒவ்வொரு

வரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மாதிரி தேர்தல் நடக்கையில் மெஷினிலிருந்து வர வேண்டிய ‘பீப்’ சத்தம் வராத போது அதைச் சரி செய்தார். உள்ளூர் பாஷையிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ஏஜெண்டுகளுக்கான கடமைகள் உரிமைகள் பற்றிச் சொன்னார். அவரது பார்வை ஹாலின் உள்ளே, வாக்கைப் பதிவு செய்யும் இயந்திரம் மேலே, அவரது உதவியாளர்கள் மீது என்று சுழன்று கொண்டே இருந்தது., வாக்காளர்களின் சந்தேகங்களை நிவர்த்திப்பது,வாக்காளர்களை வாக்குப் பெட்டிக்கு அருகே நடத்திச் செல்லுவது என்று பம்பரம் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் பல தேர்தல்களில் அவர் பணி  புரிந்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

காலையில் குடிக்க எடுத்து வந்த கடுங் காப்பியையும், இட்லி என்று கல்லுடன் போட்டி போட்டுக் கொண்டு வந்து நின்ற உணவையும் சாப்பிட மணிமேகலை திணறி விட்டாள். இது ஒவ்வொரு முறையும் அவள் எதிர் கொண்ட சித்திரவதைதான். அவள் பரிதாபமாக கஜபதியையும் அவர் அவளையும் நோக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

கஜபதி அவளிடம் வந்து “மத்தியானம் டீச்சர் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வர அரேஞ்சு பண்ணிடறேன்” என்றார்.

“எனக்கு மட்டுமா?” என்று மணிமேகலை கேட்டாள். அவள் முகத்தை அவர் உற்றுப் பார்த்தார். “சரி, நாம நாலு பேருக்கும் சொல்லிடறேன்” என்று சிரித்தார். மதியம் வந்த உணவு சாப்பிடும்படி ஓரளவு சுவையாக இருந்தது. 

அவளுக்கு அவரிடம் நன்றி தெரிவிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அலுவலகத்தில் அவளுக்குக் கீழ்மட்டத்தில் வேலை பார்ப்பவர்களிடம் நன்றி தெரிவிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அவர்கள் கடமையைச் செய்வதற்கு எதற்கு நன்றி கூற வேண்டும்? 

நடுவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல்  ஏழு மணிக்குத் தேர்தல் முடிந்தது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘மூடு’ என்று தெரிவித்த பட்டனை கஜபதி அழுத்தினார். அதன் காட்சிப் பலகை அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டியது. அதைக் குறிப்பிட்ட பாரத்தில் எழுதி மணிமேகலையின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார். சம்சுதீனும் கஜபதியும் வாக்குச் சாவடியில் தேர்தல் நடந்த வழிமுறை

களைப் பின்பற்றியது, வாக்குப் பதிவு சம்பந்தமான பாரங்கள்,வாக்காளர்கள், ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியவர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ரிஜிஸ்தர்கள் ஆகியவற்றை அப்டேட் செய்தார்கள்.மணிமேகலை

கையெழுத்திட வேண்டிய இடத்தைக் கஜபதி காட்டினார். வாக்குப்பதிவு யூனிட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் யூனிட்டையும் சீல் வைத்து 

வாக்குச் சாவடியில் பெயரும் விலாசமும் நிரப்பப்பட்ட அட்டையைக் கயிற்றுடன் கட்டி இயந்திரத்தின் வெளிப்புறத்தில் வைத்தார்கள். பிறகு சர்வீஸ் சென்டருக்கு அவற்றை எடுத்துச் செல்ல வந்த வேனில் ஏற்றுக் கொண்டு நால்வரும் சென்றார்கள். அங்குள்ள அதிகாரி அவற்றைச் சரி பார்த்து விட்டு அவர்கள் போகலாம் என்று அனுமதி தந்தார்.

திரும்பவும் அவர்கள் பள்ளிக்கு அருகில் இருந்த டீச்சரின் வீட்டுக்கு வந்தார்கள். அங்குதான் அவர்கள் கொண்டு வந்திருந்த கைப்பெட்டி, பை ஆகியவற்றை வைத்து விட்டு சர்வீஸ் செண்டருக்குப்  போயிருந்தார்கள். அங்கே சென்றதும் அவர் மற்ற இருவரிடமும் “நீங்க இங்கயே இருங்க. மேடத்தை நான் பஸ் ஸ்டான்டில் விட்டுட்டு வரேன்” என்றார். அவளிடம் “நாங்க மூணு பேரும் இங்கியே ஒரு பிரெண்டு வீட்டிலே தங்கிட்டு நாளைக்குதான் ஊருக்குப் போறோம்” என்று சொன்னார். பிறகு இருவரும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். 

அவள் ஏற வேண்டிய பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அவள் தயக்கத்துடன் தன் கைப்பையைத் திறந்து சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து “நீங்க மூணு பேரும் எனக்கு செஞ்ச உதவிக்கு இதைவச்சுக்கணும்”

என்றாள்.  

கஜபதி ஒன்றும் சொல்லாமல் அவளைச் சில நொடிகள் பார்த்தார். பிறகு “இல்ல மேடம். நம்ப வேலைக்கு கவர்மெண்டு பணம் தராங்க. உங்களுக்கும் அவங்க கொடுக்கறது உங்க வேலைக்கு” என்றார்.

மணிமேகலை பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தாள். சற்றுத் தொலைவில் கஜபதி நடந்து போய் ஒரு கடை முன்னே நிற்பதைப் பார்த்தாள். திரும்பி வரும் போது அவர் கையில் ஒரு சிறிய கூடை இருந்தது. ஜன்னல் வழியே அதை மணிமேகலையிடம் நீட்டி “எடுத்திட்டு போங்க மேடம். ரஸ்புரி மாம்பழம். ரொம்ப இனிப்பா டேஸ்டியா இருக்கும்” என்று கொடுத்தார்.

அவள் அவரிடம் “இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு வீண் செலவு? எவ்வளவு ஆச்சு?” என்று பைக்குள் பர்ஸை எடுக்கக் கையை விட்டாள்.

“பணத்தையெல்லாம் எடுக்க வேண்டாம். சரி. உங்களுக்குப் பழம் வேண்டாம்னா சத்யபாமாவுக்குக் கொடுங்க ” என்றார் கஜபதி.

‘சட்’டென்று ஒரு வினாடி அவளுக்குப் புரியவில்லை. பிறகு தன் பெண்ணைச் சொல்கிறார் என்று உணர்ந்து அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.

பைக்குள் விட்ட கையில் சாக்லேட் பாக்கெட் பட்டது. அதை எடுத்து அவள் கஜபதியிடம் கொடுத்தாள்.  சில வினாடிகள் கழித்து “உங்க பொண்ணுக்குக் குடுங்க” என்றாள்.

“தாங்க்ஸ் மேடம்” என்றார் கஜபதி.  பஸ் கிளம்பிற்று. மணிமேகலை கையை அசைத்து அவருக்கு விடை கொடுத்தாள். பஸ் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த கால்மணிக்கும் மேலே அவள் எவ்வளவோ முயன்றும் கஜபதியின் பெண்ணின் பெயரை ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியவில்லை.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.