கெய்சீரோ ஹிரானோ நேர்முகம் – ஜப்பானிய மொழியில் விவியன் எங், ஆங்கில மொழியாக்கம் ஏலி கே. பி. வில்லியம்

(பென் தளத்தில் வாரம் ஒரு எழுத்தாளரிடம் பத்து கேள்விகள் கேட்டு நேர்முகம் பதிப்பிக்கிறார்கள். இந்த வாரம் வந்த நேர்முகத்தில் ஐந்து கேள்விகள் இங்கு)

1. “புனைவு சில ரகசியங்கள் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதவுகிறது என்றாலும் வேறு ரகசியங்களை வெளிப்படுத்த அது ஒன்றே வழி,” என்று ‘அட் தி எண்ட் ஆப் தி மேட்டினி’ நாவலின் முன்னுரையில் எழுதுகிறீர்கள். உண்மையின் தடத்தை உங்கள் எழுத்து எவ்வாறு கண்டு கொள்கிறது? உண்மைக்கும் புனைவுக்கும் உள்ள உறவு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா?

‘உண்மை,’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘மெய்ம்மை’ என்ற சொல்லே புனைவின் பின்புலத்தில் பொருந்தும் என்று எனக்கு தோன்றுகிறது. புனைவின் தேவையை எதார்த்தம் வலியுறுத்துவதால்தான் அது தேவைப்படுகிறது. வேறு சொற்களில் சொன்னால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை இன்னும் சுத்திகரிக்கப்பட்ட வடிவில் பகிர்ந்து கொள்ள மெய்ம்மை என்னை நோக்கி அழைப்பு விடுக்கிறது.

வேறு வழியில் சொல்ல முடியாத தனிப்பட்ட அனுபவங்களையும் புனைவின் பாதுகாப்புக் கூத்தின் உள்ளிருந்து பிறருக்கு தெரியப்படுத்த முடியும். சில சமயம் மெய்ம்மை குறித்து நமக்குள்ள அதிருப்தியும்கூட புனைவில் நிறைவு காண விரட்டுகின்றன என்றும் நினைக்கிறேன். மெய்யுலகில் வாழ்ந்து களைத்துப் போவது புனைவு அளிக்கும் விடுதலையை உணரச் செய்வதை நமக்குச் சாத்தியப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

2. இடத்துக்கும் கதைக்கும் உள்ள உறவு என்ன? உங்கள் எழுத்தில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு நீங்கள் எப்போதும் திரும்பிச் செல்வது உண்டா?

தென் பிரான்ஸ் முதல் மத்திய காலகட்டம் வரையும் 19ஆம் நூற்றாண்டு பாரிஸ்சிலிருந்து மெய்ஜி சகாப்தத்தின் நாரா கோட்டம் வரையும் டோக்கியோ முதல் எதிர்கால ஹூஸ்டன் வரையும்- மார்ஸ், நிகர் மெய்ம்மையைச் சொல்லவே வேண்டாம்- கதைக்கருவையொட்டி என் படைப்பின் களம் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. கதைக்கு எந்த இடங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை நான் கவனமாக பரிசீலிக்கிறேன். எழுதுவதற்கு முன் நேரடியாக அங்கு போய் அந்த இடத்தை அறிந்து கொள்கிறேன். நான் உண்மையாகவே வாழ்ந்த, அல்லது சென்று கண்ட இடங்கள்தாம் என் கதைக்களங்கள். எனவே இயல்பாகவே நான் இப்போது வசிக்கும் டோக்கியோ நான் அடிக்கடி பயன்படுத்தும் கதைக்களமாகிறது.

3. பாத்திரங்களையும் கதையோட்டத்தையும் வளர்த்தெடுக்க மெய்ம்மையை பல எழுத்தாளர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அதை புத்தகத்தில் எங்கும் குறிப்பிடுவது வழக்கமில்லை. மகினோ யோகோ கதை நீங்கள் அறிந்த மனிதர்களின் “உண்மை” கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை வாசகர்கள் அறிய வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயமாக உங்களுக்கு ஏன் தோன்றியது?

18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை எழுதப்பட்ட முக்கியமான கதைகள் சிலவற்றில் முன்னுரை எப்பணி இயற்றுகிறது என்பதில் எனக்கு ஆர்வமிருந்தது. கதாநாயகன் ஏன் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தும் தகுதி கொண்டவனாய் இருக்கிறான் என்பதை ராபின்சன் குரூசோ, கரமசோவ் சகோதரர்கள், தி மாஜிக் மவுண்டெய்ன், நாசியா ஆகிவற்றின் முன்னுரைகள் வசீகரமான வகையில் விளக்குகின்றன. வெகு சீக்கிரம் சலிப்படையும் வாசகர்களின் ஆர்வத்தைக் கைப்பற்ற கதையின் பரபரப்பான இடத்துக்குள் விரைய வேண்டிய தேவையில்லாமல் கதை அதன் வாசகர்களை மெல்ல மெல்ல தன்னுள் இழுத்துக் கொள்ள இந்த உத்தி அனுமதிக்கிறது.

கூடுதலாக, கதாநாயகன் உண்மையாக வாழ்ந்தவன் என்று இப்பின்புலத்தில் விவரிக்கப்படும்போது, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையில் உள்ள உறவில் மாற்றம் ஏற்படுகிறது. வாசகர்கள் எதிர்வினையாற்றும் வகையில் ஆசிரியன் ஒரு நாயகனை அளிப்பதற்கு பதில் – நாயகனை நடுவில் வைத்துக் கொண்டு எழுத்தாளரும் வாசகரும் ஒருவரையொருவர் எதிர்கொள்வதற்கு பதில்- அருகருகே நின்று, ஒரே கோணத்தில் நாயகனை இருவரும் காண முடிகிறது.

வெறும் புனைவாக இருக்கக்கூடிய படைப்பில், “அழகு,”, “திறமை,” போன்ற விவரணைகளை வாசிக்கும்போது வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். இது போல நல்ல வகையில் நாயகனைச் சித்தரிக்கும்போது அது வலிய திணிக்கப்பட்டது போலிருக்கும். ஆனால், நாயகன் ஒரு நிஜ மனிதரின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தால், இது போன்ற விவரணைகள் புறவயப்பட்டவை என்று வாசகன் ஏற்றுக் கொண்டு விடுவான். அப்படி ஒரு மனிதர் உண்மையில் இருந்தாரா என்பதே சந்தேகமாக இருந்தாலும்கூட இதுவே உண்மை. குறிப்பாக மார்க்கரீட் யூர்செனாரின் ‘கூ டி கிரேஸ்,’ என்ற நாவல் ‘அட் தி எண்ட் ஆஃப் தி மேட்டினி’ எழுதும்போது எனக்கு ஒரு முன்னோடியாக இருந்தது.

அக்காலத்தில் தன் காலத்துக்கும் முற்பட்ட காலங்களைப் பற்றிய நாவல்கள் எழுதப்பட்டபோது பிற்காலத்தில் மீபுனைவு கொண்டு படைப்பின் புனைவுத்தன்மை உணர்த்தப்பட்டது போல் உணர்த்தப்படும் வழக்கமில்லை என்றாலும் புனைவென்பது தன்னவில் புனைவு என்பது வெளிபபடையாக இருந்தது. இன்றுள்ள நிலைக்கு இது நெருக்கமான ஒன்று என்று நினைக்கிறேன். எழுத்தாளர்களின் அன்றாட வாழ்வு நம்முன் சமூக ஊடகங்களில் வந்து சேர்ந்து விடுகிறது. ஆனால் இது பற்றி நான் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன், எனவே வேறொரு சமயம் இதைப் பார்த்துக் கொள்ளலாம்.

4. நீங்கள் எப்போதும், “வாசகர்களின் கரங்கள் கட்டுப்படுத்த முடியாமல் மறு பக்கம் திருப்பச் செய்யும் நாவல்கள் எழுதுவதை விட, அவர்களை உள்ளிழுத்துக் கொண்டு மறு பக்கம் திருப்பவும் திருப்பாமல் இருக்கவும் விரும்பும் வகையில் அதன் கதகதப்பில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க நினைக்கும் நாவல்களை எழுதவே விரும்பியதாக,” சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரு வகை நாவல்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டும் குறிப்பிடத்தக்க தனித்தன்மைகள் எவை என்று நினைக்கிறீர்கள்? அண்மைக் காலத்தில் நீங்கள் வாசித்த புத்தகங்களில் ஏதேனும் அதன் பக்கங்களுக்குள் விரியும் உலகினில் நிலைகொண்டு தங்கி விட வேண்டும் என்று உங்களை விரும்பச் செய்திருக்கிறதா?

ஒரு நாவல் தொடர்ந்து வாசிக்கச் செய்யும் உரைநடை, ஆன்மாவை அசைக்கும் சொற்கட்டுமானம், நிஜ மனிதர்களைவிட அவர்களைப் புரிந்து கொள்ளும் விழைவை ஏற்படுத்தும் பாத்திரங்கள் கொண்டதாய், மெய்ம்மையைக் காட்டிலும் ஆன்மீக உச்சம் தொட்ட பரவச உணர்வு அளிக்கும் உலகைச் சித்தரிப்பதாய் இருக்கும்போது, அதை வாசித்து முடிக்கையில் எனக்கு வருத்தம் வருகிறது. குற்றமும் தண்டனையும், பட்டன்புரூக்ஸ் போன்ற படைப்புகள் மிகவும் நீளமாக இருக்கின்றன, ஆனால் அவற்றை முதல் முறை படித்து முடித்ததும் மூடி வைக்கும்போது உண்மையாகவே ஒரு துயரத்தை உணர்ந்தேன். கலைப் படைப்புகள் ஒரு வகை உக்கிரமான, புலன்களால் உணர்ந்து கொள்ளக்கூடிய அனுபவம் அளிப்பதுதான் இதன் காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சமீப காலத்தைய உதாரணம் கொடுப்பதானால், ஹான் காங்கின் கதைகள் நான் இப்போது விவரித்த அனுபவத்தை எனக்கு அளித்திருக்கின்றன.

ஆனால் மறுபக்கம், நம்மை உள்ளிழுத்துக் கொண்டு பக்கங்களைத் திருப்பிக் கொண்டே இருக்கச் செய்யும் புத்தகங்களையும் நாம் விரும்பி வாசிக்கிறோம், ஒரு சில தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி இதையே முக்கிய நோக்கமாகக் கொள்ளும் புத்தகங்கள் ஒரு வகை வெறுமை கொண்டவை.

5. யோகோவுக்கும் மகினோவுக்கும் இடையில் உள்ள ரசாயனத்தின் கூறுகளில் ஒன்று அவர்களது உரையாடல் பொதுவான விஷயங்கள் பற்றி இருப்பது. குறிப்பாய், துவக்க உரையாடலில் இவ்வுலகில் உள்ள அழகு பற்றி அவர்கள் பேசிக் கொள்வது என் கவனத்தை ஈர்த்தது. வன்முறை நிறைந்த திரைப்படங்களை ரசிக்கும் வகையில், “கொடூரத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வது,” போன்ற “கனமான பணிகளை எப்போதும் சுமந்து களைத்துப் போவதிலிருந்து,” அழகுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று மகினோ சொல்கிறான். யோகோ வேறொரு கோணத்தை முன்வைக்கிறாள். “இவ்வுலகின் கொடூரங்களில் இருந்து கணப்பொழுது கண்களை விலக்கிக் கொள்ளச் செய்யும் அதே ஆற்றல் அழகுக்கு உண்டு” (78-79) என்கிறாள் அவள். காதல் போன்ற உக்கிரமான, நிலையற்ற உணர்ச்சியைப் பற்றி எழுதும்போது அழகிய கணங்களை விவரிப்பதையும் கனமான கணங்களை விவரிப்பதையும் எப்படி சமநிலைப்படுத்திக் கொல்கிறீர்கள்? உரையாடல் கொண்டு இந்த சமநிலையை எப்படி வலுப்படுத்துகிறீர்கள்?

இந்த விஷயத்தில் இசையும் ஓவியமும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. ஒரு கதையின் ஒட்டுமொத்த ஓட்டத்தை இசைப் பதங்கள் கொண்டு தொகுத்துக் கொள்கிறேன். இதற்கு காரணம், இசை என்பது காலம் சார்ந்த கலை. மூவ்மெண்ட், டிரான்ஸ்சிஷன், ஹார்மனி, மெலடி போன்ற பதங்கள் சமநிலையையும் கதையோட்டத்தில் மாற்றங்களையும் கற்பனை செய்து பார்க்கவும் உதவுகின்றன.

ஆனால் ஒரு தனிக் காட்சியை அதன் நுண்தகவல்களோடு எழுதிக் கொண்டிருக்கும்போது எதை முன்னிலைப்படுத்துவது எதைப் பின்னணியில் வைப்பது என்பதற்கு இடையிலுள்ள சமநிலையை ஓவியப் பதங்கள் வழியே உணர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் எதை முழுமையாகவும் தெளிவாகவும் முன்னிலைப்படுத்த வேண்டும், எதைப் பின்னணியில் இருத்த வேண்டும், அதற்கென்று ஒரு தொலைவும் விரிவும் அளிக்க வேண்டும்.என்று நான் என்னிடமே கேட்டுக் கொள்கிறேன்.

THE PEN TEN: AN INTERVIEW WITH KEIICHIRO HIRANO, TRANSLATED BY ELI K.P. WILLIAM By: Viviane Eng

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.