சிறுகதை

வாஸந்திகா – பானுமதி சிறுகதை

என் அலைபேசி ஒலித்த போது அதிகாலை நான்கு மணி. ஒருவிதத்தில் எதிர் பார்த்தும் கொண்டிருந்தேன்.ஆனாலும், சிறு கலவரம் மனதில். மிக இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு மெல்லிய குரலில் ‘சொல்லுங்க’ என்றேன்.”மிஸ்டர். பாலசந்திரனின் நிலை கவலைக்கிடம்;நினைவு தப்புகிறது. நீங்கள் உடனே வரமுடியுமா?” என்றாள் மருத்துவமனையின் தொடர்பாளர்.

எனக்குப் போவதற்கு விருப்பமில்லை.’கீதா இருக்கா இல்லையா அவ பாத்துப்பா’

“அவர் உங்களை மனைவி என்று குறிப்பிட்டிருக்கிறார்;கீதா மேம் தயங்குகிறார்கள்”.

‘சரியாச் சொல்லும்மா;உயிர் போய்ட்தா?’

“கிட்டத்தட்ட”

என் உயிர் போய் முப்பது வருடங்கள் ஆகிவிட்டது என்று சொல்ல நினைத்தேன்,ஆனால் சொல்லவில்லை. ‘வரேன்‘என்று இணைப்பைத் துண்டித்தேன்.தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.என்ன செய்யலாம்? பால்கனி கதவைத் திறந்து கொண்டு தெருவைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.பனிக்குளிர்ச்சி நாடிகளில் ஊடுருவியது.மூட்டம் படர்ந்த வானில் ஒன்றும் தெரியவில்லை.பால் வண்டி ஒன்று முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தது.ஒளியென வந்து மூட்டத்தில் தள்ளிய அவன்,என்றுமே ஒரு மாத்திரை குறைவான என் வாழ்க்கை,நானே ஆடுபவளாய், நானே பகடை உருட்டியாய்,என்றுமே பழசு வாய்க்கப் பெற்றவளாய்…இல்லை இதை விரக்தியில் சொல்லவில்லை.முப்பது வருடங்களில் என் வாய் விட்டு மனம் விட்டு ஐந்தாறு முறை மட்டுமே தான் சிரித்திருப்பேன்.அவன் செத்துவிட்டான் என்பதை அவர்கள் நாசுக்காகச் சொல்லிவிட்டார்கள். என்னை எதற்காக மனைவி என்று குறிப்பிட்டான்? தீ வளர்த்து மணந்தவள் மனைவி என்றால், அவனோடேயே வாழ்பவள் யார்?அவளை மனைவி என்று சொல்ல என்ன தடை?ஓ,அவள் புருசன் இன்னமும் அவர்களோடுதான் இருக்கிறான் என்பதுதானா?

போக வேண்டுமா என்ன?மூன்று முடிச்சில் எத்தனை ஆண்டுகள் சிறைப்படவேண்டும்? அவன் என்னோடு இருந்ததே மொத்தமாக ஒரேதரமாக மூன்றே நாட்கள் தானே.நான் நல்ல நிறம்;அவன் மா நிறம்-ஆனால், அழகன்,உயரம் அதற்கேற்ற பருமன், களையான முகவெட்டு,குழி விழும் கன்னங்கள்,எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கம்பீரம். நான் அவன் மார்பளவிற்குத்தான் இருந்தேன்.என்னிடம் கவர்ச்சி என்பது என் அளவான மார்பகங்களும்,சிறிய பல்வரிசைகளும்தான். இருபத்தியோரு வயதில் எனக்கு வந்த அதிர்ஷ்டம் என உறவு சொல்லியது;தனிமையில் நான் அதைக் குறித்து பெருமிதம் கொண்டேன்.நிச்சயம் ஆகி நடக்க இருந்த இரு மாதங்களுக்குள் அவனுடனான வாழ்க்கைக் கனவுகள்; தனியாகச் சிரித்தும், சிவந்தும்,பித்தியாகி நான் எனக்குள்ளே கொண்டாடிக் கொண்டேன்- இனி எனக்கே எனக்கென ஒருவன்.எதுவும் என்னுடையது, பிறர் உபயோகித்தது இனி எனக்கில்லை.போதும் அந்தக் கடந்த காலம்.அக்காவுடைய ட்ரஸ்,அவள் பேனா,அவள் புத்தகங்கள்,அவள் செருப்பு,அவள் ரிப்பன், வளையல் என எல்லாப் பழசும் எனக்கு.தீபாவளியின் போதுகூட இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் புது ட்ரெஸ்-இரு வேளை சாப்பாடே பெரும்பாடு;இதில் புதிது என்பதற்கெல்லாம் இடமேது?இவ்வளவு ஏன்? என் திரண்ட குளியின் போதுகூட எனக்குப் புத்தாடை இல்லை,பால் பழம் கொடுக்கவில்லை,புட்டு சுற்றவில்லை.அம்மாவிற்கு மனத்தாங்கல் ஏதோ நானே விரும்பி உக்காந்து விட்டதாக.காலைச் சாப்பாடு கூட பழையதுதான்-மத்தியானம் மட்டும் சூடான சாதம், ஜீரா ரசம்;ராத்திரிக்கு மிஞ்சின சாதத்தை இரண்டாகப் பிரித்து மறுநாள் காலைக்குப் பழயதை சேமித்துவிட்டு, மீதியில் தாராளமாகத் தண்ணீர் ஊற்றி மோரில் கலந்து டம்ளரில் அம்மா கொடுப்பாள்.மொத்தம் அம்மா,அப்பாவையும் சேர்த்து நாங்கள் ஒன்பது பேர்.அப்பாவிற்கு மளிகைக்கடையில் கணக்குப்பிள்ளை வேலை;அரிசி, பருப்பு, எண்ணை ஓரளவிற்குக் கடனில் கிடைக்கும்-மாதம் பிறந்ததும் கடன் போக மீதிதான் சம்பளம்.

எனக்கு ஏழு வயது.எனக்கு பிஸ்கெட் திங்க ஆசையா இருந்தது.பக்கத்தாத்து ரமணி தின்னுன்ட்ருந்தான்-நான் வெக்கங்கெட்டு கை நீட்டினேன்;அவன் கொடுத்துருப்பானோ என்னவோ-ஆனா,அதைப் பாத்துண்டிருந்த அக்கா அம்மாட்ட போட்டுக் கொடுத்துட்டா;அம்மா கைல சூடு வச்சுட்டா;அப்றமா அழுதா;பிஸ்கெட்டும் இல்ல அதை அம்மா புரிஞ்சுக்கவுமில்ல.சூடுதான் மிச்சம்.

எல்லாம் பழசுங்கறேனே-வெக்கக்கேடு- கல்யாணப் பொடவ கூட மூத்த அக்காவோடதுதான்-அவ தலைப் ப்ரசவத்ல செத்துப்போனா-அத்திம்பேர் இரண்டாம் கல்யாணம் பண்ணின்டார்-ஆனா, நல்ல மனுஷன்-அவ நகை, பொடவைகளைத் திருப்பித் தந்துட்டார்.அம்மாவும், அப்பாவும் அதுல முக்கா வாசி நகயப் போட்டு காவாசி பொடவையக் கொடுத்து ரண்டு அக்காக்களுடைய கல்யாணத்தை ஒப்பேத்திட்டா.மீந்தது எனக்கு.

ஓசிச் சினிமா காட்டுவா எங்க காலனில-அதுல பாத்திருக்கேன்-ஹீரோ ஹீரோயினுக்கு புதுப்பொடவ, நகயெல்லாம் வாங்கித் தருவான்;தல கொள்ளாம மல்லிப்பூ;எங்காத்ல கிள்ளித்தான் தருவா-அதுவும் மாச முத வெள்ளிக்கிழமைல.கனகாம்பரம், டிசம்பரெல்லாம் கொல்லல மண்டிக்கிடக்கும்-ஆமா, வாசன இல்லாம ஆருக்கு வேணும்?

கல்யாணம் எல்லாவற்றையும் புதிதாக்கும் என நம்பினேன்.அவன் ஊர்வலம் வருகையில் பார்த்துப்பார்த்துப் பூரித்தேன்.தாலி கட்டும் போது ராம சீதா கல்யாணம் என சிலிர்த்தேன்.புகைப்படங்களில் பல் தெரிய சிரித்தேன்;முதலிரவில் அவன் எனக்கெனத் தனிப் பரிசு கொண்டு வந்து தருவானென்று எதிர்பார்த்தேன்.

எனக்கென ஒரு ஆண், அவன் குறும்புகள், அவன் வலிமை, அவன் தன்னம்பிக்கை,கல்யாணம் முடிந்த மறுநாள் தேனிலவு என்று சொர்க்கத்தில் மிதந்தேன்.நான் ஊட்டியில் தேனிலவை அனுபவிக்க ஆசைப்பட்டேன்.ஆனால், அவன் ஏற்காடிற்குத்தான் கூட்டிப்போனான்.சேர்வராயன் மலைக் குன்று.கொண்டை ஊசி வளைவுகளில் அவனை இறுகப்பற்றிக்கொண்டேன்;அவன் சிரித்தான்- வேற வாயிலெடுத்தா சந்தோஷம்-இப்ப எடுத்துடாதே என்றான்;அதற்கு நாணிச் சிவந்தேன்.மரகத ஏரியில் படகுப் பயணம்.அது தானாக ஏற்பட்ட ஒன்றாம்;உள்ளே பெரிய நீரூற்று உள்ளதாம்.அவ்வளவு பெரிய ஏரியை நான் பார்த்ததில்லை;மேகம் ஏரியின் ஒரு கரையில் நின்று தன்னை நீரில் பார்த்துக்கொண்டது;சற்றே சாயும் கதிர்கள் பட்டுஅதன் மேலாடைகள் வெள்ளிச் சரிகையுடன் மின்னின.வானைத் தொட எண்ணி வளர்ந்த மரங்கள் சற்றே வளைந்து அதனுடன் போட்டியிட்டன.காற்று இதமான குளிருடன் இருக்கையில் ஜிவ்வென்று பறவைகள் பறந்து சுழன்று மீண்டும் மரங்களுக்குச் சென்றன.ஆட்கள் குறைவான சிறிய புல்வெளியின் ஓரம் சில தத்தித் தத்தி வந்து எதையோ கொத்திக் கொத்தித் தின்றன. நான் செல்லும் முதல் படகுப் பயணம்.ஏறக்கூட பயப்பட்டேன்-அலாக்காகத் தூக்கி ஏற்றினான்.’படகு கவுந்தா என்ன செய்வ? நா நீந்திப் போயிடுவேன் நீ அவ்ளோதான்’ என்றான்.எனக்கு சுருக்கென்றது.வெண்மையான மேகங்கள் போன இடம் தெரியவில்லை;வானம் இருண்டு ஒளியை மறைக்கப் பார்த்தது.ஒளிச் சிதறல்கள் மேக விளிம்புகளில் சித்திரங்கள் வரைந்தன.மான், புலி, வேடன் என்றும் பயமுறுத்தின.சூரியனின் யாக குண்டத்தில் தீ ஜ்வலிப்போடு எரிய மானும், வேடனும் மறைய புலி மட்டும் நின்றிருந்தது.என்னை முழுங்கப் போகும் புலியா அது? என் தலையை உசுப்பிக்கொண்டேன்.கை கொடுத்து படகில் ஏற்றுபவர்களைப் பார்த்திருக்கிறேன்-இவன் என்னைத் தூக்கி ஏற்றியவன்-இவனா என்னை நட்டாற்றில் தள்ளுவான்?முட்டாளே,உன் கலவரத்தை அவன் இரசித்துக்கொண்டு இருக்கிறான். நான் செல்லக்கோபத்தோடு அவன் மார்பில் குத்தினேன்.படகில் இருந்த மற்றவர்கள் சிரித்தார்கள்.அங்கே பார்த்த கற்களால் ஆன இராமர் கோயிலை நான் மறக்கவேயில்லை.இந்த அவுட்டிங் தவிர முப்போதும் என்னையே சுற்றினான்;கொங்கைகள் மேல் வைத்துக்கிடந்த மலர் மார்பனாகக் கிறங்கினான்.கிள்ளியூர் அருவியில் ஆட்களேயில்லை;நாணமற்று என்னோடுதான் குளிப்பேன் என்று ஒரே அடம்

‘உன் கழுத்துக்கு நெக்லஸ் போடப்போறேன் ஊருக்குப் போனதுமே;ஆனா, உன்பேரு என்னக் குழப்பறது.வாசந்தி சரி, அது என்ன வாசந்திகா’ என்றான்

“அது செஞ்சு லக்ஷ்மியோட பேர்.அவ லக்ஷ்மியோட வனத்ல வேல பாத்தா; விஷ்ணுவ மோகிச்சா,அவருக்கும் இஷ்டம்தான்.கோபத்ல லக்ஷ்மி அவள சபிச்சுட்றா,வனராணியா பூமில பொறன்னுட்டு.இங்கயும் அவ விஷ்ணுவயே கல்யாணம் செய்யணும்னு தவிக்றா;அவரும் நரசிம்மரா வந்து காத்துண்டிருந்தார்.அப்றம் லக்ஷ்மியே மன்னிச்சு கல்யாணமும் பண்ணி வைக்கறா;வசந்த காலத்ல, வனத்ல,வாசன வாசனயா மணம்பரப்பினவ அவ;அதுனால வாஸந்திகா; நான் கூட அப்படித்தான்;”

இதைக் கேட்டு அவன் சொன்னான்’தெரிஞ்சோ தெரியாமயோ நல்ல பேரை பொருத்தமா வச்சிருக்கா’.எனக்குப் புரியாவிட்டாலும் சந்தோஷமாக இருந்தது.காலையா,மாலையா எனப் புரியாத உற்சாக உறவு. ஏற்காட்டில் அந்த லாட்ஜில் இரவின் கேளிக்கைகளில் ஆழ்ந்து உறங்கி எழுந்த பிறகுதான் அது காலை எட்டு மணியெனத் தெரிந்தது.அவன் படுக்கையில், குளியலறையில், வராண்டாவில், ரிஸப்ஷன் ஹாலில், ரெஸ்டாரென்ட்டில் எங்குமில்லை.பணியாளர் வந்தார்- ‘பத்து மணிக்கு காலி செய்யணுங்க; அவரு பணமெல்லாம் கட்டிட்டாரு.ஊருக்கு அவசரமாப் போணுமாம்-ஏதோ கெட்ட சேதி;உங்கள எழுப்பி இதைச் சொல்லப்படாதுன்னு கெளம்பிட்டாரு.நீங்க உங்க ஊருக்குப்போங்க.அவரு வந்து அழச்சுப்பாராம். இந்த டிக்கெட்ட கொடுக்கச் சொன்னாரு’.

எனக்குக் குழப்பமாக இருந்தது; டிக்கெட் கூட வாங்கிக் கொடுத்திருக்கான்-அப்படின்னா முன் திட்டமா?சேச்சே,அவன் நல்லவன்,எனக்கானதை செஞ்சுட்டுத்தானே போயிருக்கான். ஒருக்கால் அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ-அவர் கல்யாணத்லகூட சுரத்தா இல்லயே?

என் கடிதங்களுக்குப் பதிலில்லை.அப்பாவும்,அண்ணாவும் நேரில் போனார்கள்.அவன் கீதாவின் வீட்டில் அவர்கள் குடும்பத்துடன் இருப்பதாகச் சொன்னார்கள்.

அவனிடம் நேரில் போய் கெஞ்சினேன், கேள்வி கேட்டேன்,அழுதேன்-அவன் மசியவில்லை

‘உனக்கு கீதாவோட பழக்கம்னா என்ன ஏன் கல்யாணம் பண்ணின்ட?’

“அப்பாவோட புடுங்கல் தாங்காமத்தான். கேக்கணும்னா அவரக் கேளூ.ஆனா,ஒன்னு, நீ எங்களோட இங்க இருக்கறதுல ஒரு கெடுதியுமில்ல;ஒத்துப்போ;கல்யாணம் பண்ணின்டு கைவிட்டாங்கற பேரு எனக்கு வேணாம்; நீ என்ன சொல்ற கீதா?”

‘இதோ பாரு, வாசு(வாசுவாம், வாசு-இவ வச்ச பேரு மாரி கூப்ட்றா) பாலு நல்லவன்;ஊர விட்டுத் தள்ளு;எங்களோட இரு;உனக்கு கொற வைக்க மாட்டோம்’

‘நீ வாய மூடு;குடும்பத்தோட இருக்க;இவனையும் சேத்து வச்சுண்ட்ருக்க.தேவடியாகூட இப்படி செய்ய மாட்டா.நாங்க பேசறதுல குறுக்கிட்டின்னா செருப்பு பிஞ்சுடும்’

அவன் பளாரென்று கன்னத்தில் அடித்தான்;நான் சுருண்டு விழுந்தேன்”தொலைச்சுடுவேன் யாரப் பாத்து என்ன வார்த்த சொல்ற போடி, கோர்டுக்குப் போ விவாகரத்து கேளு,ஜீவனாம்சம் தந்து தொலைக்கிறேன்.”

நான் அடக்க மாட்டாமல் சிரித்தேன்.

குழந்தை பிறந்திருக்கிறது என்ற மிகை சந்தோஷம் நான் கடைசிக் குழந்தை, அதிலும் நாலாவது பெண் என்பதால் என் பெற்றோர்களுக்கு இல்லை.பழசிலேயே இருபத்தியோரு வயது வரை வாழ்ந்திருக்கிறேன்;கல்யாணம் கூட எனக்குப் புதிதாய்த் தெரிந்த பழசுதான்.வயிற்றில் வளரும் சிசுவாவது எனக்கே எனக்கென இருக்குமா?

ஸர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றேன்.என் மகள் பிறந்தாள்;அவன் வந்து பார்த்தான். மாதங்கியெனப் பேர் வைத்தான்.போய்விட்டான்.என் அம்மாவிற்கு இந்த மட்டும் மானத்தைக் காப்பாற்றினானே என்று ஆஸ்வாஸம்.நான் அவனுடன் சேர்ந்திருக்கவில்லை என அவளுக்கு மன வருத்தம்.

தன் அப்பாவைப் பற்றி என் மகள் கேட்க ஆரம்பிக்கையில் அவள் வயது ஆறு.எங்கள் திருமணஃபோட்டோவை பார்த்துக்கொண்டேயிருப்பாள்- திடீரென்று அவனது படத்திற்கு மட்டும் முத்தம் கொடுப்பாள்.அம்மாஅழுவாள்- நான் முகம் திருப்பிக் கொள்வேன்

“உனக்கு ஏம்மா இந்தப் பிடிவாதம்?அப்பாதான் கூட இருக்கச் சொன்னாராமே?ஏன் மாட்டேனுட்ட?பீச்சுக்கெல்லாம் எல்லா அப்பாவும் கூட்டிண்டு போய் தண்ணிலெல்லாம் வெளயாட விட்றா;நீ முத அல பக்கத்ல கூட போப்படாதுங்கற’

இந்தப்பெண்ணும் எனக்கு மட்டுமேயில்லை எனப் புரிய ஆரம்பித்தாலும்,அவளுக்குச் சிறு வயது, போகப் போகப் புரிந்து கொள்வாள் என நினைத்தேன்.அம்மாவிற்கு என் ஆண் நண்பர்கள் என்னைப்பார்க்க வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை.சந்தேகப்பட்டாள், பேத்தியைத் தூண்டிவிட்டாள்.

பொறுக்க முடியாமல் ஒரு நாள் சொல்லிவிட்டேன் ‘என்னோட பொறந்தவா ஆறு பேரு’அம்மாவிற்குப் புரியவில்லை.”நா என்ன கேக்கறேன், நீ என்ன சொல்ற?”

‘என் ரணத்த நான் ஆணோட பேசி ஆத்துக்கறேன்;பெத்து ஆத்திக்கமாட்டேன்’

அம்மா இடிந்து போனாள்.மாதங்கி இல்லாத போதுதான் இது நடந்தது.அம்மா என்னுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள்.

பதினாறு வயதில் மாதங்கி அவன் வீட்டில் அவனைப் பார்க்கப் போனாள்.பாட்டியுடன் போனாள், தனியாகப் போனாள்.தெரிய வந்த போது’நீங்க ரண்டு பேரும் அங்கயே போயிடுங்க;அவன் இப்ப உங்களுக்கு முக்யம்’

“ஆமாம்மா, அப்பா எனக்கு வேணும்;அவர் மாரியே நான் இருக்கேன்,உயரம், கண்ணு, கலர்,கன்னக் குழி எல்லாமே;அவர்தான் எனக்குத் தார வாக்கணும்;ஒத்துண்டிருக்கார்.ஆனா,உன்னவிட்டுட்டு போமாட்டோம்.உன்ன கெஞ்சிக் கேக்கறேன்;உன் ஆஃபீஸ் மாமால்லாம் என்னயே அசிங்கமா திருட்டுத்தனமா பாக்கறா;எனக்குப் புடிக்கல.”

அப்பாவின் துரோகம் தெரியவில்லை இவளுக்கு;அம்மாவை சந்தேகிக்கிறாள்.கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டுத் துரத்தலாம்;அங்கேபோய் நிற்பாள்;அவன் ஜெயித்ததாகச் சிரிப்பான்.கீதா உச்சி குளிர்ந்து போவாள்;அம்மாதான் பாவம் தவிப்பாள்,என்னையும் விட முடியாது,இந்த வயதிற்கு அங்கேயும் தங்க மனம் இடம் கொடுக்காது.

“என்னடி, புதுக் கத சொல்ற?”

‘நா கதயெல்லாம் சொல்லல;நீ அப்பாவோட இருந்திருந்தா என் கன்னத்தை உன்ஃப்ரெண்ட் திருட்டுத்தனமா கிள்ளுவானா?இடுப்புலதான் கை போடுவானா?’

‘அப்பவே சொல்றதுக்கென்ன?அவாளை வரவிடாம செய்றதுக்கு அவனும்,உன் பாட்டியும் இதெல்லாம் சொல்லச் சொன்னாளா?’

மாதங்கி என்னை க்ரோதத்துடன் பார்த்தாள்.

இது உண்மையா, பொய்யா? கொஞ்சம் நிஜமோ?சாரங்கன் வழிசல் பேர்வழி,சந்துரு அப்படியில்லையே.

மாதங்கியின் இருவது வயதில் வந்த வரன்கள் சொல்லி வைத்தது போல் அப்பா எங்கே என்று கேட்டார்கள்.அவன் ஒரு முறை துபாயில் இருந்தான்- சிங்கப்பூரில், இலங்கையில், லண்டனில், டெக்ஸாஸில் எங்களுக்குத் தோன்றிய இடங்களிலெல்லாம் அவன் இருந்தான்.ஒரு வரன் அமைந்து அவன் வந்து தாரை வார்த்துக்கொடுத்தான்.

இன்று அவன் இறந்த செய்தி. எனக்கென்ன சந்தோஷம் அல்லது துக்கம் இதில். நான் கீதாவை தொலைபேசியில் அழைத்தேன். ‘மாதங்கி இப்போ தாய்லாந்துக்கு வெகேஷனுக்குப் போயிருக்கா;நீ பேசு, அவ வர வரைக்கும் முடிஞ்சா மார்ச்சுவரில பாடியை வை; நானா? நான் எதுக்கு?யாரோ செத்ததுக்கெல்லாம் நான் போறதில்ல’

நான் வாஸந்திகா; காட்டு வனம்;வசந்தத்தின் அரிய பூ,தனி மணம்,தளிரைத் தொட்டால் பொசுக்கும் தீப் பொறி,குன்றத்தின் காந்தள் மலர்,என்றும் புதியவள்,எனக்கெதற்குப் பழசு?

நான் சிரித்து முப்பது வருஷங்கள் ஆகிவிட்டன. இன்று பொங்கிப் பொங்கி சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

பாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை

குப்பைமேனிகளும், வெட்டுக்காயப்பூண்டுகளும் ,தும்பைகளும் சூழ தனித்துக்கிடந்த அந்தக்கிணறு அவர்கள் கவனத்திலிருந்து நழுவியிருந்தது.எப்போதாவது எட்டிப்பார்க்கும் சிறுபிள்ளைகளாலும், பறக்கத்தெரியாமல் பறந்து விழுந்துவிடும் கோழிகளாலும் துணுக்குற்று, “என்ன மண்ணாங்கட்டிக்கு இத திறந்து போட்டுருகானுங்க,”என்று அதன் பக்கத்தில் வருவார்கள்.

செடிகள் அடர்ந்து சிறுபிள்ளைகளும் கிணற்றை மறுதலிக்கும் மழைகாலத்தில் பரவிய காய்ச்சலால் அது மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.ஊரின் தெற்குத்தெருவான கணபதிபாளையத்தின் மையத்து நாற்சந்தியிலிருந்தது அந்தக்கிணறு.

ப்ளீச்சிங் பவுடர் கொட்டப்பட்டு மீண்டும் தனிமையில் அமர்ந்த அதை லட்சுமி அம்மாவின் திடீர் இறப்பு எழுப்பியது.அன்று கூடிய கூட்டத்திற்கு இடம் பற்றாமல் ஆட்கள் கிணற்றின் சுற்றுசுவரிலும் முன்னால் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளத்திலும், சுற்றுசுவர் மட்டத்திற்கு இடிக்கப்பட்டிருந்த மோட்டார் அறைசுவர்களிலும் அமர்ந்தார்கள்.

ட்ரம்ஸ் அராஜகம் இல்லாமல் ஆட்களை அதிரபதற வைக்காமல் தப்புகள் தாளமிட்டன.சத்தம் தாளமுடியாதவர்களின் சொல்லமெல்ல முடியாத சங்கடமான சொல்கேட்காமல் லட்சுமிஅம்மாள் போகும்நேரத்திலும் உறுத்தாமலிருந்தாள்.

ஆட்களின் சந்தடியால் கிணற்றுள் சலனம். கிணற்றின் உள்சுவரில் ஏறஇறங்க வைக்கப்பட்டிருந்த கால்பிடி குழிகளில் கூடு கட்டியிருந்த சிட்டுகள் ‘விருட்’ என எழும்பவும், மேலிருந்து கீழே ‘சர்’ என பாயவுமாக சலசலத்தன.

அடுத்தவீட்டின் முன்திண்ணையில் அமர்ந்திருந்த வீரய்யன்பாட்டா, “இந்தக்கேணி வெட்டுனப்ப எனக்கு ஐஞ்சாறு வயசிருக்கும்.இங்கனயே பழியாக்கெடப்பம்.எங்கள மூக்கன் விரட்டிக்கிட்டே இருப்பாரு,”என்றார்.

பாட்டாவிற்கு பக்கத்தில் சேகர்,“மூக்கன்னா?”என்று புருவங்களை உயர்த்தி நெற்றியை சுருக்கினான்.வெள்ளைவேட்டியை கொஞ்சம் சுருட்டியபடி திரும்பி அமர்ந்தான்.

“செவப்புகல்லுதோடு கல்ஒட்டரோட முப்பாட்டனாரு,”

“ வம்சந்தொட்டு நம்மளோட தின்னு, தூங்கி, செத்து கூடவே வராங்களோ.அவுங்களும் நம்ம ஊருல பூர்வீகமான ஆளுகளா பாட்டா?”

“ஆமய்யா…அந்தகாலத்தில திருப்பதி வரைக்கு போய் வந்தவரு அவரு ஒருத்தருதான்.இந்தக்கேணி வெட்டறதுக்கு அவரு சாதிசனத்துல சூட்சுமுமான ஆளுகள கூட்டியாந்து வேலைய முடிச்சாரு..”

“முன்னாடிவீட்டுகாரவுங்கதான் இந்த சுத்துசுவரு கட்டி வருசமெழுதி முடிச்சாரு.நம்ம ஊருக்கு வயசு கம்மி.நம்ம காடுதிருத்தினப்பவே அவுங்களும் கூட இருந்தாங்களாம். எங்கப்பாரு சொல்வாரு.நம்மஊருல இங்கருக்கற பழையஆளுக எல்லாரும் பூர்வீகந்தான்.அவங்க தொழில்காரவங்க.நம்ம பாட்டனுங்க நிலத்துலக் கெடந்தாங்க.அப்பெல்லாம் தாயா பிள்ளையா இருந்தோம்,”

“வாய்க்கு வந்தத உலராத பாட்டா..”என்றவன் நிறுத்தியபின் அவனே, “எல்லாருட்டயும் சும்மா மேம்பாக்கு பழக்கம்.அதுனால என்ன ஆகப்போகுது,”என்று சிரித்தான்.

“நீங்க என்ன சொத்தெழுதி தருவீங்களா,”என்ற பாட்டா கேலியாக ஒருசிரிப்புடன் நிறுத்தினார்.

“என்னன்னு சொல்லு பாட்டா..”

“சொன்னா கோவிச்சுக்கப்பிடாது..”

“இல்ல சொல்லு..”

“பொம்பளைக்கு வைக்கிற கெடுபிடிய சாதிசனத்துக்கும் வச்சுப்புட்டீங்களே..”என்றப்பின் வாயிலிருந்த புகையிலையை காறித்துப்பினார்.

வெற்றிலைத்துகள்களை துப்பிவிட்டு முற்றிலும் வெண்மையான தாடிமீசையை தோள்துண்டால் துடைத்தார்.பின்,“அவங்ககுடும்பத்து கஷ்டகாலத்துல ஏகாதேசிக்கு சாமிக்கும்பிட நெல்லு இல்ல. கம்மஞ்சோறாக்கியா சாமி கும்படறது? முன்னாலவீட்டு நாய்க்கரு மனசொடிஞ்சு போனாரு.இந்த பக்கத்திலிருந்தவங்க அரிசி நெல்லு பருப்பு எல்லாத்தையும் கொண்டாந்து அவருவீட்டு வாசல்ல போட்டம்.மொதநாளு அரிசிய திரிச்சி கிண்டிப்போட்டாங்க.வெல்லங்காய்ச்சர பரதன் கரும்புப்பால் கொண்டாந்தான். பானகம் கலக்கி குடுத்தாங்க.ராவுக்கு மாவுவெல்லம் சேத்துத்தின்னுட்டு தண்ணியக் குடிச்சுப்பிட்டு இங்கனதான் ஒக்காந்தோம். நாய்க்கரு ராமாயணக்கதைய சொல்லிக்கிட்டு இருக்கப்பவே பயக முருங்க மரத்தையே ஒடிச்சு கொண்டாந்தானுங்க.இருக்கற காயெல்லாம் போட்டு ஒரு குழம்பு.முறுங்கீர வதக்கி விடியகாத்தால வெளிச்சம் வர நேரத்துக்கு சாமியக்கும்பிட்டாச்சு.வெளிச்சம் துலங்குற நேரத்துல நாய்க்கரு தெருவுல நின்னு தலைக்கு மேல கையெடுத்து கும்பிட்டு சீரங்கம் இருக்கற திக்கைப்பாத்து, “ ரங்கா.. உங்கதவு எங்களுக்கும் தெறந்திருச்சுய்யான்னு,” சொல்லிட்டு எங்களையும் பாத்தாரு .அவரு நின்னக்கோலம் நெஞ்சுக்குள்ள அப்பிடியே இன்னிக்கும் நிக்கிது.இந்தத்தெருவுல விடியகாத்தால வரிசயா இலையப்போட்டு தின்னோம்.குந்தானியில நெல்லப்போட்டு ஆம்பளையும் பொம்பளையுமா குத்திப் புடைச்சோம். இந்தத்தெருவே வேலசெஞ்சம்.நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இந்தக் கேணி தண்ணிதான்,”என்றபடி கண்கள் வேறுகாலத்திலிருக்க ஆள் இங்கு அமர்ந்திருந்தார்.

“பாட்டா..பாட்டா..”

“அடுத்த ஏகாதேசிக்கு நாங்களும் வீட்ல சாமிகும்பிட தொவங்கி இன்னிக்கு நாப்பதுவருசமாச்சு.உங்க வீதிக்காரவுங்களுக்கு இந்தப்பழக்கமெல்லாம் இல்ல,”

சேகர்,“என்ன பட்டா என்னிய ‘உங்க’ன்னு சொல்லி பிரிச்சுவிட்டுட்ட,”என்று சிரித்தான்.

அவர்கள் பேசியதைக் கேட்டபடி தங்கம்மா முட்டிகால் வலியோடு எழுந்து அசைந்து நடந்துவந்து கிணற்றுக்கு முன்னாலிருந்த சிமெண்ட் தரையில் அமர்ந்தார்.அந்தக்கம்பத்தில் நிறைமாசக்காரியாக தான் கட்டி வைக்கப்பட்டு அடிவாங்கிய வலியோடு கிணற்றைப் பார்த்துக்கிடந்த அந்த ராவை நினைத்துக்கொண்டார்.பூஞ்சோலை யாருக்கும் தெரியாமல் நீச்சுத்தண்ணியில் உப்புப்போட்டு வாயில் ஊற்றியது நெஞ்சிலிருக்கிறது.மெதுவாக அந்தப்பொருளை எடுத்திருக்கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

நீர்மாலைக்காக ஆண்கள் செல்லும்போது கிணற்றை சுற்றியிருந்த ஆண்கள் கலைந்தார்கள்.வசந்தா வந்து அமர்ந்தாள்.பக்கத்திலிருந்த சந்திரா, “ என்னப்புள்ள பழைய நெனப்பா,” என்று ஆட்களுடன் நடந்து செல்லும் ரகுராமனை பார்த்தபடி கேட்டாள்.வசந்தா கால்களை ஆட்டியபடி, “நான் தப்பிச்சேண்டி,”என்று சிரித்தாள்.

“எங்கண்ணனுக்கு என்னவாம்..கொஞ்சம் குண்டாயிருச்சு,”

“ரொம்ப…”

“வசந்தா,”என்றழைத்த சரவணனை பார்த்து தலையாட்டினாள்.

“எங்காளு எப்பிடின்னு பாக்கறல்ல.அங்க அவப்படற பாடுகள கேக்கமுடியல.பயபுள்ள அவளப் போட்டுபடுத்தறான்.எங்கையில கெடச்சிருக்கனும்,”என்று சிரித்தவள் கிணற்றின் கைப்பிடி சுவரைத் தடவி புன்னகைத்தாள்.

விடிந்தும் விடியாத மெல்லிருளில் வாளிகள் கிணற்றினுள் அடிவாங்கும் சத்தமும், இறைக்கும் வேகத்தில் தண்ணீர் சிந்தும் ஒலிகளும், குடத்தில் ஊற்றும் சத்தமும் ,கொலுசொலிகளும்,வளையல் ஓசைகளும்,சலங்கை வைத்த குடங்களின் மெல்லிய கலகல ஒலிகளும்,பசங்க சைக்கிள்களில் குடங்களை வைத்து நகர்த்தும் சத்தமுமாக இருக்கும் கிணறு பின்மதியத்தில் தான் ஓரிரு ஆட்களுடன் அமைதியாவது மனதில் ஓட கிணற்றை எட்டிப்பார்த்தாள்.தன் வாளி எப்போதும் இடிக்கும் அந்தமுடக்கிலிருக்கும் சிறுகல்புடைப்பை பார்த்தாள்.ரகுராமன் அதில் இடிக்காமல் லாவகமாக சட்டென்று கையைநீட்டி வாளித் தண்ணீரை காப்பாற்றிவிடுவான்.

பார்வதி,“நாப்பது வருஷத்துக்கு முன்ன சரியா மழயில்ல.ராமுழுக்க வாளி சத்தந்தான்..ஊறஊற எறச்சுக்கிட்டே இருக்கறதுதான் வேல.பெய்யற காலத்துல ஒருமுழகயித்துல மொள்றதுக்கு தண்ணி வந்துரும்.போர் போட்டு போட்டுதான் தண்ணி எறங்கிருச்சு,” என்று சற்றுசுவரில் அமர்ந்தாள்.

தலையைத்தூக்கி மூக்கணாங்கயிறு அற்ற அழகுமுகத்துடன், நல்லஉயரத்தில், செவலை நிறத்தில், சற்றுசதைப்பிடிப்பான உடலுடன், நேரேபார்த்து நடந்து வந்து சாமிமாடு கிணற்றடியில் நிற்கும்.

யாராவது வாளியைக் கொண்டு வந்து வைக்கும் வரை இறைப்பவர்களை பார்த்துக் கொண்டிருக்கும்.யாரையும் துரத்தியதோ முட்டியதோ இல்லையென்றாலும் அது வரும்வழியில் தள்ளியே நடந்தார்கள்.பார்வதி இறைக்கும் நேரத்தில் அது வந்ததும்வராததுமாக முதல்ஆளாக,செல்லமாக அதை வைதுகொண்டே, எத்தனை அவசரத்திலும் தண்ணீர் வைப்பாள்.மையிட்டதைப்போன்ற அழகிய பெரிய கண்களை விரித்தும் சுருக்கியும் அது நீர்உறிஞ்சுவதை இடுப்பில் கைவைத்து பார்த்தபடி, “ உன்னப்போல ஒருப்பிள்ளை வேணும்,” என்பவளைப் பார்த்து கேலி செய்யாதவர்கள் இல்லை.

அன்னம் தெருவிளக்கு கம்பத்தை பிடித்துக்கொண்டு நின்றாள்.எதிர்புறம் நின்ற மாணிக்கம் அருகில் வந்து, “இந்த கெணத்துல வச்சிதான் உங்கள கல்யாணமான புதுசில அண்ணின்னு கூப்டேன்,”என்றார்.

அன்னம்,“மாசமா இருக்கயில எனக்கு எவ்வளவு தண்ணி எறச்சி ஊத்தியிருப்பீங்க,”என்றவளின் கண்கள் மின்னின.

மாணிக்கம்,“அதுக்கூட செய்யாம அண்ணின்னு எதுக்கு கூப்படனும்.உங்க மாமியா திட்டுனாலும் எனக்கு வாளிக்கயிறு குடுப்பீங்கள்ல.இப்பெல்லாம் பத்துவாளி சேந்தாப்ல இழுக்க முடியாதுங்கண்ணி,” என்று சிரித்தார்.

வாளி கிணற்றுக்குள் விழுந்த அன்று தாயம்மா அழுது கிணற்றடியில் உட்கார்ந்துவிட்டாள். ராசு வீட்டில் பாதாளக்கரண்டி இருந்தது. ஓடிப்போய் வாங்கி வந்தார்கள்.வாழைப்பழத்தாரில் சீப்புகள் உள்ளதைப்போல மேல்நோக்கி வளைந்த கம்பிகளால் ஆனது அந்தக்கரண்டி.நீர் அலையடங்கியதும் மெதுவாக பாதாளக்கரண்டியில் இரண்டு வாளிக்கயிறுகளை முடிந்து கிணற்றில் விட்டார்கள்.மெதுவாக சுற்றி வந்து தட்டுப்பட்டவைகளை தேடி எடுக்க பழைய வாளி,மாட்டுமணி,கொடுவாள் எல்லாம் சிக்கிக்கொள்ள தாயம்மா வாளி மாட்டவே இல்லை.

பிரபாவதி,“சுத்துசுவர் மேலநின்னு எறச்சி தவறிவிழுந்துட்டேன்.தமிழண்ணன் யோசிக்காம குதிச்சு என் பின்னாடியே கயித்தப்பிடிச்சு ஏறுச்சு.ஒவ்வொரு ஓட்டையிலயும் கால்பதறுச்சு. பின்னாடி காலப்பிடிச்சு வச்சு பேசிக்கிட்டே ஏறினத சாவற வரைக்கும் மறக்கமுடியாது,”என்று கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிணற்றையே பார்த்துக் கொண்டு,“இத்தன மனுச இருக்கயில.அந்த ஊருல கட்டிக்கிட்டு நாதியத்து கெடக்கறேன்.உங்களையெல்லாம் இப்படி நல்லதுகெட்டதுல பாக்கறதுதான். என்னிய எட்டின கையாக்கிட்டீங்க ,”என்றாள்.

தமிழ்மாறன்,“ தொலைவாயிருகேன்னு கேட்டதுக்கு.. அந்தஊர்ல விதியிருக்க நம்ம என்னப்பண்றதுன்னு உங்கய்யன் சொன்னாரு.இருக்கற எடத்துல இருக்கவங்கதான் நம்ம மனுசங்க,”என்றார்.

தெற்குபக்கச்சுவரில் சாய்ந்து கால்நீட்டியிருந்த ரெங்காயி அப்பாயி, “இந்தக்கேணிக்குக்கு ஒரு மானக்கதயிருக்குள்ள,”என்றுத் துவங்கி எதிராளிகளின் கவனத்திற்காக நிறுத்தி பின்தொடர்ந்தாள்.

“மேற்காலவூட்லதான் முதல்ல குடிதண்ணிக்கேணி வெட்டுனாங்க.அந்தக் கிழவி தண்ணியெடுக்க வரவுங்கள ஏசிட்டே இருப்பா.ஒருநா சண்ட முத்திப்போயி தான் பொதுவுல கெணறு வேணுன்னு வெட்டினது.சந்தானம்ஆசாரியார்தான் பொறுப்பெடுத்து நின்னாரு.அப்பெல்லாம் அவுங்க அம்புட்டு சம்பத்துள்ள ஆளுக,”

மாணிக்கம்,“இன்னைக்கும்தான்,”என்று பெருமூச்சுவிட்டார்.பேச்சு கலைந்து பரவத்தொடங்கியது.

“நம்மூருல பொம்பள விழுந்து செத்து தண்ணிய எறச்சி காலிபண்ணின கேணின்னு இல்லாதது இதுமட்டுந்தான்,”

“சுத்துசுவரு எடுத்த பின்னாடி இங்கன வச்சிதான் ராமயணமகாபாரத கத சொல்றது.தெய்வங்காக்கற கேணி.பாழடஞ்சிப்போயிடும் போலயே..”

“நம்மளால என்ன பண்ணமுடியும் பொதுசொத்து,”

“ஐஞ்சாறுவருஷத்துக்குமுன்ன ஊருக்குள்ள தண்ணியில்லாதப்ப பயலுவலா சேந்து மண்ணிழுத்து தூர்வாரி எடுத்தானுங்க.நமக்கு தண்ணி வேணுங்கறப்ப செய்யமுடிஞ்சுதில்ல,”

“அன்னிக்கு தூர்வாரி எறச்சோம்.கைவேல செய்யறதுன்னா யாரு செய்யலங்கறா.இன்னிக்கி தண்ணி தெளிஞ்சு நிக்குது.மனுஷருக்கு எறைக்க முடியல.மோட்ருக்கு காசு போடனுமில்ல,”

பாட்டா, “புலக்காரத்துல இல்லாத நகைநட்டை பெட்டியில போட்டு பூட்டி வைக்கனும்ய்யா.திருத்தமா இருக்கான்னு பாத்துக்கிடனும்.அத செய்யாம நமக்கு வேணுங்கறன்னிக்கி நகை அதுவா குதிச்சு வருமா?”என்று மூச்சுவாங்கியபடி பேசிவிட்டு மெதுவாக காலெடுத்து வைத்து நடந்தார்.

“விடும்..போதும்,”என்ற குரல் பேச்சின் திசையை மாற்றியது.கிணற்றின் கதைகளுடன் கும்பலும் கலைந்தது.லட்சுமிஅம்மாவின் திடீர் மரணத்துடன் கிணறும் அங்கிருந்தவர்களின் மனதை சுற்றிக்கொண்டு பேசும் பேச்சிலிருந்தது.

அன்று கார்த்திகை தீபம்.பின்வீட்டம்மா கேணியின் வடமேற்கு மூலையில் ஒருஅகலை வைத்துவிட்டு சென்றாள்.மோட்டார் சுவரின் சிறுமறைவில் சுடர் அசையாமல் நின்றிருந்தது.

கையில்அகலுடன் வந்த இளம்பெண் தான் நின்ற இடத்தை குனிந்து பார்த்தாள்.ஒருகை சுடரை காற்றிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகளின் குளம் இருந்த இடம் என்ற எண்ணம் அவள் மனதில் எழுந்தது .காலுன்றி நின்று இறைப்பதற்கான பள்ளங்கள் அவை.அதில் சிட்டுகள் முழுகி தலையை உதறி விருட்டெனப் பறக்கும்.தானும் சிட்டாய் பிறந்திருக்கக் கூடாதா என்று தினமும் நினைப்பாள்.

இருளில் ஒருஅசைவு தெரியவும் திடுக்கிட்டுப் பார்த்தாள்.சுப்பன்ஆசாரி மோட்டார் அறையிலிருந்து நிமிர்ந்து அமர்ந்தார்.கலைந்த தாடிதலைமுடியுடன் கைலியை விடாமல் ஒருகையால் பிடித்துக்கொண்டு அலைபாயும் விழிகளுடன் அவளைப் பார்த்து சிரித்தார்.அவள் அகலை சுற்றுசுவரின் மீது வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பொறிக்கடலையை சிறுபையில் எடுத்து வந்து தந்தாள்.

வாங்கிக்கொண்டவர், “தாத்தன் கேணி..”என்று நெஞ்சில் கைவைத்துக் காட்டினார்.முழுநிலவின் ஔியில் காற்றில் பறந்துக்கொண்டிருந்த அவரின் முடிக்கற்றைகளும்,விரிந்த கண்களும்,முகமும் சோபை கொண்டன.

அவளும், “ஆமா மாமா….தாத்தா கிணறு,”என்று தேய்ந்த சுற்றுசுவரை தொட்டுக்காட்டினாள்.இரண்டுபேரும் கிணற்றை எட்டிப்பார்த்தார்கள்.அவர் தலையை சாய்த்து வாய்விட்டு சிரித்தார்.உள்ளே கரியநீர் மினுமினுத்துக் கிடந்தது.

உயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை

இன்று நான் அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன்.இளங்கலை மருத்துவம் பயின்ற அதே இடம்.படிப்பை முடித்து கிராமத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றி, யு.எஸ்ஸில் முதுகலை அறுவை சிகிச்சைப் படிப்பும்,’மல்டிபிள் ஸ்க்ளீரோஸ்’ பற்றியும் ஆராய்ந்து, அதற்கான டாக்டரேட் பெற்று அங்கேயே பணியாற்றும் நான் சென்னைக்கு ஒரு மாநாட்டின் பொருட்டு வந்திருக்கிறேன்.உலக மருத்துவர்கள் கூடி முக்கியமாக நரம்புச் சிதைவு, வெண்படலம் எனப் பொதுவாக அறியப்படும் நோய்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்; கருத்தரங்கங்கள் நான்கு நாட்களாக நடைபெற்று நேற்று மாலையுடன் முடிவடைந்தன. என் மரியாதைக்குரிய மருத்துவர் எம் கே எஸ் அவர்களைச் சந்திக்க இப்போது போய்க்கொண்டிருக்கிறேன். நான் சென்னைக்கு மாநாட்டிற்கு வரப்போவதாகவும், அவரை மாநாடு முடிந்த பிறகு சந்திப்பதாகவும் சொன்ன போது’கடவுள் நம் விருப்பங்களை எப்படியோ நிறைவேற்றுகிறார்’ என்றார்.ஆம், நான் அவரது அன்பு மாணவி, அவரோ எனக்கு எல்லாமுமாக இருப்பவர்.என் உழைப்பு, வெற்றி, தோல்வி, நான் பட்ட அவமானங்கள்,என் சொந்த வாழ்வில் சந்தித்த வேதனைகள் எல்லாம் அவருக்கு மட்டுமே முழுதாகத் தெரியும்.

விடுதியை விட்டு வெளி வருகையில் சென்னை அதன் பலக் குரல்களுடன் விழித்துக் கொண்டிருந்தது.வைக்கோல் கன்றுக்குட்டியை இடுக்கியபடி இன்னமும் பசுவை ஒருத்தர் ஓட்டிச் சென்றார்.எட்டும் போதெல்லாம் நாவால் சுவரொட்டிகளை அது நக்கிக்கொண்டே சென்றது.வண்ண வண்ணக் குடங்கள் அணிவகுத்து தாகம், தாகம் என்றன.காகங்கள் திடீரென்று ஒன்றாகக் கிளம்பிப் பறந்து, தங்கள் ஒன்றரைக் கண்களால் சூரியனைப் பார்த்து வந்தனம் செய்தன.முக்கிய வேலை இருப்பதைப் போல் நான்கு நாய்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின.விடுதியின் வாசலில் இருந்த செம்பருத்தி மலர்ந்தும் மலராமல் யோசித்துக் கொண்டிருந்தது.முல்லைக் கொடிகளில் வண்ணத்துப் பூச்சிகள் காத்து நின்றிருந்தன.எதிர் சாரியில் முன்னிருந்த அதே பாழடைந்த வீடு.அதன் சட்டச் சிக்கல்கள் இன்னமும் தீரவில்லை போலிருக்கிறது. முள்வேலியில் கரட்டோணான்உனக்கு இங்கு என்ன வேலை?’ எனக் கேட்பது போல் தலையை நிமிர்த்திப் பார்த்தது.காய்ந்த நத்தைக்கூடுகளையும், எறும்புச் சாரிகளையும் பார்க்கையில் இனம் தெரியா வேதனை வந்து சென்றது.தெருவோர நடைபாதைக் கடைகளில்கௌசல்யா சுப்ரஜா ராமனைஎழுப்பிக் கொண்டிருந்தார்கள்.கோயில் வாசலைக் கடக்கையில் நாகஸ்வரத்தில் பூபாளம் கேட்டது.கதம்ப நினைவுகள், கதம்ப வாசனைகள், என் மண்ணின் மணம் இதை அசை போட்டவாறே நான் மருத்துவ மனையின் நீள் நெடும் பாதையில் சென்று எம் கே எஸ்ஸின் அறைவாயிலைத் தட்டிவிட்டு உள்ளே சென்றேன்.

மருத்துவத்தையே ஒரு தவமாகச் செய்யும் மாமனிதர்.கருணையாலேயே பாதி நோய்களைப் போக்கியவர்.நோயின் மூலக் காரணங்களைக் கண்டறிந்து குணப்படுத்தும் வெகு சிலரில் இவரும் ஒருவர்.ஸ்டெத் இருந்தாலும் கைகளால் நாடி பார்ப்பதை இன்று வரை கடைபிடிப்பவர்.அதிலும், கழுத்துக் குழியிலும், கணுக்கால் மேல் மூட்டிலும் நாடியைப் பரிசோதிப்பார்.இருப்பவரிடம் அதிகம் பெற்று இல்லாதவர்க்கு இலவச மருத்துவம் பார்க்கும் நவீன ராபின் ஹூட்.எப்போதும் வெள்ளைக் காற்சட்டை, மேல்சட்டை,மருத்துவர் அணியும் வெள்ளை மேலங்கி, தும்பையென வெளுத்த தலை இவ்வளவுதான் அவர்.

வா, வா விரூபாக்ஷி.எப்படி இருக்கிறாய்?உன் அடுத்த கட்ட ஆய்வு எந்த நிலையில் இருக்கிறது?”

நான் அவரைக் கீழே விழுந்து வணங்கினேன்.பொது விஷயங்கள் பேசிய பிறகு அவர் என்னைப் பார்க்க விரும்பிய காரணத்தைச் சொல்வதற்கு முன்னால் ஒரு காணொலிக் காட்சியைப் பார்க்கச் சொன்னார்.

இனிய ஹம்மிங்குடன் அந்தக்காட்சி துவங்கியது.சில வினாடிகளில் இராக ஆலாபனையாக மாறியது. ‘மோக்ஷமு கலதாஎன்று அந்தப் பெண் குரல் கெஞ்சிக் கொஞ்சியது. சாரமதி சிறு மகவெனப் பிறந்து,சிரித்து, நான்கு கால்களால் தவழ்ந்து,திடுமென எழுந்து நின்று சிறு அடிகள் நடந்து, ஒரே பாய்ச்சலில் விரைந்தோடி,காற்சதங்கைகள் குலுங்க,சிறுமியாய், யுவதியாய்,அமைதியான பெண்ணாய் .., எப்படிச் சொல்ல நான்? பாடுபவளுக்கு 30 வயதிருக்கலாம்.சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். மெலிந்த உடல்,தீர்க்கமான கண்கள்,களையான முகத்திற்கு சோபை சேர்த்த கவலையை நான் பார்த்தேன்.மூன்று வயது குழந்தை ஒன்று அவள் மடியில் ஏற முயற்சிப்பதும்,உடனே வழுக்கி ஓடுவதுமாக இருந்தது.எல்லாவற்றையும் விட அந்தக் குரல், அதன் பாவம், நேர்த்தி, கமகம்,ஸ்தாயீ,ஸ்ருதி,ஆதிக் காலம் தொட்டு அவனை வேண்டிக்கொண்டேயிருந்த அத்தனை உயிர்களின் பிரார்த்தனைகளையும் சேர்த்து மன்றாடும் இசைச் செதுக்கல்கள்.ஆணின் குரல் போன்ற அடர் அடுக்குகளும், பெண்மைக்கே உரித்தான இன் குரலும் எப்படி ஒருமித்தன இக்குரலில்!அழுத்தம், கம்பீரம், இனிமை, துயரம்,ஆற்றாமை, கெஞ்சுதல் என வண்ணக் கோலங்கள் காட்டும் குரல். மிகத் தெளிவான உச்சரிப்பு;உள் மனச் செவியில் ஒலிக்கும் நாதம். நான் இதுவரை இப்படி யார் பாடியும் கேட்டதில்லை.

என் உணர்வுகளை என்னால் அடையாளம் காண முடியவில்லை.கடலில் சறுக்கி விளையாடி,அலைகள் மேல் எழுந்தேன் ஒரு முறை; மறுமுறை அலைகள் என்னை மூழ்கடிக்கக் கீழே விழுந்தேன்.குறுக்குத்துறை குமரன் கோயிலின் குகை வழியில் செல்வது போல் இருந்தது. மலையின் மேல் உள்ள சுனையில் குளிர் நீரில் முழு நிலா குளிப்பதைப் பார்ப்பது போலிருந்தது.யாருமற்ற வனத்தில் உள்ளே பூத்திருக்கும் சௌகந்தியின் வாசம் வந்தது; இல்லையில்லை இது நிஷாகந்தி. சேற்று வயலாடும் மீன்களின் குதூகலம்;கான் அதிர நடந்து மரக்கிளையை ஒடித்து வாய்க்குள் அடக்கும் பிடி. பொற்றாமரைக் குளத்தின் கரையில் வரையப்பட்ட மாக்கோலங்கள், வண்ண வண்ணப் பூச் சொரியும் பூவாணம். நான் சிரமப்பட்டு நீண்ட மூச்சிழுத்து என்னை சுதாரித்துக்கொண்டேன். ஆனால், கண்ணீர் வழிவதை நிறுத்த நினைக்கவில்லை.

காணொலி முடிந்த பின்னும் நானும் அவரும் ஒரு அரை மணி நேரம் ஒன்றும் பேசவில்லை.எங்களுடைய கல்லூரி நாட்களில் வகுப்புகள் முடிந்த பிறகு விருப்பமானவர்களோடு அவர் தென்னிந்தியக் கர்னாடக இராகங்கள்,அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி இவற்றையெல்லாம் பற்றி குறைந்தது இருவது நிமிடங்களாவது பேசுவார். 72 மேளகர்த்தா இராகங்கள் 72 முக்கிய நரம்புகளை உடம்பில் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைச் சொல்வார். வீணை என்பதே நம் முதுகெலும்பும், நரம்புக் கோர்வையும்,உள்ளிருந்து இலங்கும் சக்தியின் புற வடிவம் என்பார்.இசை என்பது கலைகளின் அற்புதம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.இசை உபாசகரான அவருக்கு இசையின் மேதமை கைவரப் பெற்ற ஒரு பாடகி எம் எஸ் நோயால் அவதியுறுவதைப் பொறுக்க முடியாமல்தான் என்னிடம் பேச நினைத்திருக்கிறார். நான் அந்தத் துறையில் உலகளவில் பேர் சொல்லும் ஒரு பெண்; அவருடைய மாணவியாக நான் எப்போதுமே பெருமைப்பட்டிருக்கிறேன்.

இவ பேரு சந்தோஷி.நகை முரணான பேர்ன்னு தோண்றதா?.அவளுக்கு மல்டிபிள் ஸ்க்ளீரோஸ் மிகத் தீவிரமாக இருக்கு. எப்போ ஆரம்பிச்சிதுன்னு அவளுக்குத் தெரியல்ல.என் பரிசோதனை,அனுபவம் இதெல்லம் வச்சுப் பாத்தா ஆறேழு வருஷத்துக்கு மேல ஆயிருக்கும்.அவா ஊர்ல எம் எஸ்ஸைப் பத்தித் தெரிஞ்ச டாக்டர்கள் இல்ல போலிருக்கு. இப்போ அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்.இவ படிச்சவ.கல்யாணத்துக்கு அப்றமும் வேல பாத்திருக்கா.ஒரு கொழந்த இருக்கு.ஆறேழு வருஷமா ஏகமா செலவு பண்ணிருக்கா. வேலைக்கும் போக முடியல்ல; வருமானமும் கொறஞ்சுடுத்து. இப்ப செலவத் தாள முடியல அவ குடும்பத்தால.ஹஸ்பென்ட் நல்லவன்தான்.ஐ டில இருந்திருக்கான். போறாக்குறைக்கு ஆள் குறப்ல அவன் வேல போய்டுத்து”

மிதமான வேகத்தில் வரும் கடலலைகள் சுனாமியின் போது கொள்ளும் பேயுரு என் முன் எழுந்தது.என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இப்ப டபிள் விஷனாய்டுத்து இவளுக்கு. வெளிச்சமே இடஞ்சலாயிருக்கு.முழங்காலுக்குக் கீழ உணர்ச்சியில்ல.பசி அமோகமாயிருக்கு.”

சின்ன வயசு. நாபிலேந்து ப்ராண சக்திய எழுப்பிக் கரஞ்சு கரஞ்சு பாட்றா.இப்ப என்ன ட்ரீட்மென்ட்ல இருக்கா?’

ஸ்டெராய்ட். ஆனா, அதைத் தொடரப் படாதே; அப்பப்ப மரிஜ்வானா கொடுக்கறோம்.ஓரல் மெடிகேஷன் வேறெதுவும் செல்லுபடியாயில்ல. நீ இந்த ஃபைலப் பாரு. நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்.”

சாக்ஷாத் காரணி சத் பக்தி, சங்கீத ஞான விஹினிலுகு’ என்னை அந்தப் பாட்டின் அனுபல்லவி சுற்றிச்சுற்றி வந்தது.பிரணவ மந்திரமான ‘ஓம்’அதிலிருந்து பிரவகித்த சப்த ஸ்வரங்கள்ச ரி க ம ப நி.உயிர் காற்றும் அனலும் இயைந்துஓமி’ன் அதிர்வலைகளைக் கொணரும் இசை.அவள் பாவத்தில் பக்தி இருந்தது, நாதத்தில் அவள் ஜீவன். அவளுக்கு எம் எஸ் அதுவும் மிகக் கடுமையாக! அந்த நாத பிந்துக்கள் இவளின் குரல் மூலம் அத்தனை உயிர்களின் குருதியிலும் கலக்கும் வல்லமை பெற்றவை.இன்றோடு முடியப் போகும் இசை அல்ல இவளுடையது.இதை இன்று பதிவேற்றிவிடலாம்;ஆனால், அவள் இசையில் நாளை செய்யப் போகும் மாயங்களை எப்படிப் பதிவு செய்வது? அவள் பிழைக்க வேண்டும், எப்படியாவது.எப்படிச் செய்யப் போகிறோம் இதை?எம். கே.எஸ் இதில் என்னை மிகவும் முக்கிய இடத்தில் வைத்திருக்கிறார். நான் என்ன செய்யப் போகிறேன்?

கல்லூரியில் முதல் வருடத்தில்ராகிங்போது பயந்து ஊருக்குத் திரும்பிவிட்டேன்.இவர் வீட்டிற்கே வந்துவிட்டார்.’நல்ல மூளைய வீணாக்குவாளா?’ என்ற அவரது கேள்வி எனக்கு நம்பிக்கை தந்தது.துணிச்சலுடன் எதையும் எதிர் கொள்வது அவர் பயிற்றுவித்ததுதான். மூன்றாம் ஆண்டு படிக்கையில் என் தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.பொருளாதாரச் சிக்கல்;படிப்பை நிறுத்த வேண்டிய சூழல்.இத்தனைக்கும் அரசுக் கல்லூரிதான். விடுதிக்கும், மெஸ்ஸிற்கும்,உபகரணங்களுக்கும் செலவு செய்ய முடியவில்லை.அப்போதும் நான் வாய்விட்டுச் சொல்லாமலே என்னைப் புரந்தவர் இவர். எல்லாவற்றிற்கும் மேலாக இன்னமும் நினைவில் நடுங்கச் செய்யும் அந்த நள்ளிரவு. அன்று சொந்த ஊருக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் பேருந்து இயந்திரக் கோளாறால் நின்றுவிட்டது.அவர்கள் அதைச் சரி செய்து சென்னைக்கு வந்து சேர இரவு பன்னிரண்டு ஆகிவிட்டது.விடுதியை நெருங்கும் போது எங்கிருந்து வந்தார்களோ இருவர் என்னைச் சுற்றி வளைத்தனர். ஒருவன் இடுப்பிலும், மற்றவன் தோளிலும் அழுத்தமாகக் கைகளை வைத்தார்கள்.நான் திமிறிக் கதறுகையில்சர்ப்ரைஸ் ரவுன்ட்முடிந்து திரும்பிக் கொண்டிருந்த எம். கே எஸ் பதறிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். பாஞ்சாலியைக் காத்த கண்ணன்.அவர் எழுப்பிய சத்தத்தில்அந்தக் கயவர்கள் ஓடி விட்டனர்.ஒரு அப்பாவைப் போல் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற உத்தமர்.’ஒரு ஃபோன் பண்ணிட்டு வரமாட்ட நீ, அசட்டுப் பெண்ணேஎன்றார்.’யார்ட்டயும் சொல்லக் கூடாது. மறந்துடணும், என்ன?’ என்றார்.

நல்ல நிலைக்கு வந்த பிறகு நான் பணத்தைத் திருப்பிக் கொடுக்கையில் இவர் சொன்னது இதுதான்பணத்தை யாராவது ஏழயோடப் படிப்புக்குக் கொடு.

இவர் மட்டும் இல்லையெனில் என் வாழ்வு என்னவாகியிருக்கும்?இவருக்குப் பட்ட நன்றிக்கடனை நான் எப்படித் தீர்க்கப் போகிறேன்? பணத்தால் அதை ஈடு செய்ய முடியுமா?

அவருடன் நான் அவளிருக்கும் தளத்திற்கு நடந்து செல்கையில்குறையொன்றுமில்லைஎன்று பாடிக்கொண்டிருந்தாள்.அவள் நிலையில் இந்தப் பாடல் சங்கீத லஹரியாக என்னுள் பிரவகித்தது.அந்தப் பாடல் முடிவடையும் வரை உள்ளே போக வேண்டாம் என்று அறை வாயிலிலேயே நின்றோம். உள்ளே சிறு ஜோதியின் வெளிச்சம் மட்டுமிருந்ததே,அந்த இருட்டிற்குக் கண்கள் பழகிய பிறகுதான் தெரிந்தது.

சந்தோஷி, இவ பெரிய டாக்டர். விரூபாக்ஷின்னு பேரு.உன்னப் பத்தி சொல்லிருக்கேன்.அவ கிட்ட மனம்விட்டுப் பேசு. நான் நாளைக்கி வரேன்.

அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.பிறகுமேம், என் பிரச்சனை என்னன்னு தெரியுமில்லையா?’ என்றாள்.

தெரியும். டாக்டர் எல்லாம் சொன்னார்.”

என்னதான் ஆயிண்டு இருக்கு உள்ள? என்னக் கொல்லப் போறதா?’

இதென்ன பேச்சு?உனக்கு நோய் எதிர்ப்பு கொறஞ்சிருக்கு.அது நரம்பு மண்டலத்த பாதிச்சிருக்கு. குறிப்பா,நரம்புகளைப் போத்திக் காக்கற நரம்புக் கொழுப்ப அழிச்சு நரம்பு நார்கள வீங்க வச்சிருக்கு. இதுக்கெல்லாம் நல்ல மருந்து நிறைய வந்தாச்சு. நீ பயப்படவே வேணாம்

நான் கஷ்டப்பட்டுண்டு,குடும்பத்தக் கவனிக்காம,பாரமாத்தான் இருக்கணுமா?’

அப்படின்னு யார் சொன்னா? உனக்குப் பூரணமா குணமாகும். நம்பிக்கைதான் வேணும்.உன்னப் பத்திச் செல்லு

நான் நன்னாத்தானிருந்தேன்.கல்யாணம் ஆன புதுசில பாடல;அது அவாளுக்கெல்லாம் அவ்வளவா புடிக்கல்லேன்னு புரிஞ்சுண்டு நானாத்தான் நிறுத்தினேன்.கட்டுப்பாடுன்னு சொல்ல முடியாது. ஏதோ புரிஞ்சுக்காம நடந்த வின அது. எங்கள்து லவ் மேரேஜ். எல்லாம் நன்னாத்தான் இருந்தது. தனியா இருக்கறச்சே பாடுவேன், குளிக்கறச்சப் பாடுவேன்.ஆஃபீஸ் ஃபங்க்ஷன்ல பாடுவேன்.அப்றமா வீட்லயும் பாட ஒத்துண்டாங்க.

ஒரு நா ஸ்கூட்டில வீட்டுக்குத் திரும்பி வரச்சே, ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். காயமெல்லாம் பெரிசாயில்ல, வீக்கமில்ல; உள்ள என்னமோ ஆயிருக்கணும்.ஆனா, அப்றமா, தல வலிக்க ஆரம்பிச்சுது,திடீர்ன்னு கண்ணு மங்கலாகும்,அப்றம் எல்லாம் பளிச்சுன்னு இருக்கும்.நடக்கறச்சே தரை சில சமயம் கால்லேந்து நழுவற மாரித் தோணும்.என்னென்னவோ டெஸ்ட் எடுத்தா,ஊசியும், மருந்துமா ஆச்சு. ஒரு நா காலைல ஏந்துக்கப் பாத்தேன் படுக்கைலேந்து. பாதம் ஊணல,சுரண அத்துப் போச்சு.எங்கெங்கோ அலஞ்சு இவரக் கண்டுபிடிச்சோம்.ஆனாலும், இப்ப என் நில எனக்கே மோசம்னு தோன்றது.’

அப்படியெல்லாம் நெனைக்காதே.எம் கே எஸ் மாரி திறமையான டாக்டர்ஸ் அபூர்வம்.உன்ன சரி பண்ணிடலாம்.டயர்டா இருக்கா?தூங்கு. சிஸ்டர் ,பெட்டை சரி பண்ணி இவங்களப் படுக்க வைங்க

அவளுக்கு நம்பிக்கை கொடுத்திருந்தாலும் எனக்கு அவள் நிலை கவலைக்கிடமாகத்தான் இருந்தது.இங்கே சென்னையில் வைத்து என்ன அட்வான்ஸ்ட் ட்ரீட்மென்ட் தர முடியும்?நான் யு.எஸ்ஸிற்கு அவளை என் செலவில் அழைத்துச் செல்லலாம்,ஆனால், மருத்துவச் செலவுகள்,அதற்கென்ன செய்வது?அவளும், குடும்பமும் இதற்கு ஒப்புவார்களா?ஒருக்கால் அவளுக்கு பெரிய அபாயம் ஏற்பட்டுவிட்டால்,சட்டம் என்னை எந்த விதத்தில் பாதிக்கும் அல்லது பாதுகாக்கும்?இங்கே இவர்கள் செய்யும் அதே மருத்துவத்தைத் தொடர்வதற்காக எம் கே எஸ் என்னைப் பார்க்க நினைத்திருக்க மாட்டார்.அப்படியென்றால் என்ன என்னிடம் எதிர்பார்க்கிறார்?

அவர் மற்ற நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவளது மொத்த மருத்துவ வரலாற்றைப் படித்து குறிப்புகள் எடுத்தேன்.”சாப்பிடப் போகலாம் வாஎன்று அவர் அழைத்தவுடன் நாங்கள் வெளியே போய் சாப்பிடப் போகிறோம் என்று நினைக்கவில்லை. எங்கள் வளாகத்தில் உள்ள உணவுவிடுதியைத் தவிர்த்துவிட்டு அவர் நகரின் புகழ் பெற்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.

சந்தோஷிக்கு சி சி ஆர் 5 என்ற மரபணு இல்லை அல்லது இப்போது செயலற்றுப் போய்விட்டது.” என்றார்

ஒரு கணம் நான் திணறிப் போனேன்.டி என் வை எவ்வளவு ஊன்றிப் படித்து அதை நினைவிலும் வைத்திருக்கிறார் இவர்!

சரிதானா, டாக்டர்?” என்றார் சிரித்துக்கொண்டே.

ஜீன் எடிடிங் இங்கு உண்டா, சார்?’என்றேன்

அது அவள் இருக்கும் நிலைக்கு இப்ப ஒத்து வருமான்னு தெரியல. அது இங்கே இன்னமுமில்லை

அப்படின்னாஎன்ன செய்யலாம்?’

நீ தான் சொல்லணும். உன் ஆராய்ச்சிலஎலியிலவெற்றி கடச்சுதுன்னு சொன்னியே?”

டாக்டர்.. அது அது..’

தெரியும்.அது மனுஷங்களுக்கு இன்னமும் செய்யப்படல்ல.ஆனா, உயிர் ஆபத்து இல்லாத முற தான அது

ஆமா,சார்.ஆனா ப்ளாஸ்மா மாத்தறதுங்கறதோட ஜீன் எடிட் செய்ய நேர்ந்தாலும் நேரலாம்; அதை இரகசியமாச் செய்யறதுல ஆபத்து இருக்கே

தெரியும் விரூ.இந்த ஜீனியஸ்ஸ, அவ இறுதிய நெருங்கிண்டு இருக்கான்னு தெரிஞ்சப்றம் எனக்கு இதுதான் வழின்னு தோணித்து

நான் மலைத்துப் போனேன்.ப்ளாஸ்மாவை அவள் குருதியிலிருந்து நீக்கி புது ப்ளாஸ்மாவைச் செலுத்துவது, தேவையென்றால் சிசிஆர்5 எடிட் செய்வது,அதுவும் மனித இனத்திற்கு இப்போது சாத்தியமாக்கக் கூடிய முறையில் சட்டங்கள் இல்லை. ப்ளாஸ்மா மாற்றுதல் சட்டப்பூர்வமானதுதான் ஆனால், மரபணு அமைத்தல், களைதல் வழி முறை, முழுதும் உறுதியான வழிமுறை இருக்கிறது. சட்டம் ஒத்துக்கொள்ளவில்லையே?அவள் பாடல் ஜீவனோடும், லயத்தோடும் உலகின் அத்தனை அரங்குகளிலும் ஒலிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றது.

ஆனா, டாக்டர்..’

அவகிட்ட இதைப் புரிய வைக்க முடியும்;அவ ஹஸ்பென்ட ஒத்துக்க வைக்க முடியும்.பாட்றதுக்கு அவளுக்கு வாய்ப்பு தரதாச் சொன்ன பல சபாக்காராளும், திரையிசைக்காராளும் அவளுக்காககிரவுட் ஃபன்டிங்செஞ்சு பணம் கொடுக்கறா.அவ விமானப் பயணச் செலவு என்னோடது.தங்கறத்துக்கும், ட்ரீட்மென்டுக்கும் இந்த ஃபன்ட்ல எடுத்துக்கலாம்.போறாத்துக்கு நீ கொஞ்சம் போடு.”

டாக்டர்…’ நான் தழுதழுத்தேன்.ஒரு பெண்ணிற்காக, அவளின் இசைக்காக மனித நேயம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.நான் நேரில் பார்த்திராத அத்தனை மனிதர்களையும் ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.இத்தனை யோசனையுடன் அனைத்தையும் செய்திருக்கும் இந்த மாமனிதரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக்கொண்டேன்.

உன்னால முடியும் விரூ. யாருக்கும் என்ன மருத்துவம்னு தெரியாது.அத இரகசியமா வச்சுப்போம். உன் அஸிஸ்டென்ட்ஸ் உன்னக் காட்டிக் கொடுக்க மாட்டாங்க இல்லயா? இவ குடும்பத்துக்கு மட்டும் விளக்கிச் சொல்லிடுவோம்.என்ன சொல்ற?”

நான் நினைத்தேன்இதில் நான் பிடிபட்டால் என்ன ஆகிவிடும்? நான் தொடர்ந்து மருத்துவராக இருக்க முடியாது. ஒருக்கால் சந்தோஷி வேறு காரணங்களுக்காக இறந்து போனாலும் நான் குற்றம் சாட்டப்பட்டு சிறை செல்ல நேரிடலாம்.ஆனால், என் மருத்துவம்,மூல இசையைக் காப்பாற்றுமானால், சந்தோஷியின் இசை உலகின் அரங்குகளிலெல்லாம் ஒலிக்குமானால், இதைச் செய்வதில் எனக்கு என்ன குறை?அப்படியே ஒன்று நேர்ந்தாலும் அது நான் என் குருவிற்குச் செலுத்தும் காணிக்கைதானே?

வானம் துடைத்து விட்டதைப் போல் தெளிவாக இருந்தது.தன் குழந்தையையே விமானத்தில் ஏறும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளுக்காகச் சிறப்பு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவள் கைகளைப் பற்றித் தட்டிக் கொடுத்தேன்.

பாஸ்டனில் அதிகாலையில் தென்பட்ட வானத்தைப் பார்க்கையில்நீல வானம் தனில் ஒளி வீசும் முழு மதியோ உன் முகமே?’ என்று ஊத்துக்காட்டின் பாடலை அதி அற்புதமாகப் பாடினாள்.மாலையில் தோட்டத்தில் இருக்கையில்தூய தாமரைக் கண்களும்என்ற ஆழ்வார் பாசுரம் தோடியில்.ஆஹீர் பைரவி, யமன் கல்யாணி, மால்கோஷ்,சங்கராபரணம், பஹாட், சாரங்கா, கேதார கௌளை, சஹானா,சிவரஞ்சனி,மஹதி,கீரவாணி,அமிர்த வர்ஷினி அவள் பாடாத இராகம் இல்லை.அதைக் கேட்டு கண்ணீர் சிந்தாமல் என் உதவியாளர்களும் இருந்ததில்லை.

முதல் வாரம் அவளை வெளிச்சம் குறைவான அறையில் வைத்துப் பரிசோதித்தோம்.அவளுக்கு வயதிற்குத் தகுந்த தெம்பில்லை.பாடும் நேரம் தவிர்த்து அவள் தனக்குள்ளேயே தலைவலியாலும்,டபிள் விஷனாலும் சுருங்கிக் கொண்டாள்.வீட்டைப் பற்றிய ஏக்கமும் இருந்தது.என் உதவியாளர் சில்வியா சென்னையில் அவள் கணவனுடன் பேசி அவன் குரலையும்,குழந்தையின் குரலையும் பதிவு செய்து உடனே சந்தோஷிக்குப் போட்டுக்காட்டினாள்;அவள் நிலையில் முன்னேற்றம் சிறிது வந்தது. தினமும் பேச ஏற்பாடுகள் செய்தோம்;அவளுக்கு செல் திரையோ, ஸ்கைப்போ ஒத்துவரவில்லை.

முதலில் ப்ளாஸ்மாவை மாற்றிப்பார்க்கலாம் என்று தீர்மானித்தோம்.அவளை அமைதிப்படுத்துவது என்பது மிகச் சவாலாக இருந்தது.உறக்கமே இல்லாமல் படுத்துக்கிடந்தாள்;லாரன்ஸ் கேட்டான்

உங்கள் இசையில் உறங்க வைக்க ஒன்றுமில்லையா?” அவன் கையைப் பற்றிக் குலுக்கினேன்.’மணி நூபுர தாரி, ராஜ கோபாலாஎன்ற நீலாம்பரி கீர்த்தனை என் நினைவில் வந்தது.அவளையே பாட வைத்து,அவளைக்கேட்க வைத்து தூங்கச் செய்தோம்.

மேத்யூ,ப்ளாஸ்மா சவ்வில் புரதம் அவளுக்கு எதிராகச் செயல்படுகிறது; நல்ல புரதங்களை எதிர்த்து அவளது செல்களை அவைகளே அழித்து வருகின்றன.நம்மிடம் அவள் உடலில் செலுத்தத்தக்க ப்ளாஸ்மா இருக்கிறது;இவள் நாலு மணி நேரம் இதைத்தாங்குவாளா என்பதுதான் கேள்வி

விரூ,பிரித்துப் பண்ணலாம்;பார்க்கலாம்; நம்பிக்கையோடு இருப்போம்

இரு கைகளிலும் ஊசி பொருத்தப்பட்டு அவள் உடலிலிருந்து இரத்தம் ஒரு ஊசி வழியாக மெஷினுக்குச் சென்று அலசி பிரிக்கப்பட்டு மறு ஊசிவழியாக அவள் உடலுக்குள் செல்ல வேண்டும்.அன்று ஒரு மணி நேரம் மட்டும் அதைச் செய்வதாக இருந்தோம்;ஆனால், அரை மணிக்குள்ளாகவேஅலாரம்அடித்தது.அவள் உடலிலிருந்து சென்ற இரத்தம் மெஷினில் உறையத் தொடங்கியது.அவளுடைய இரத்த அழுத்தம் மிக மிகக் குறைந்தது.ப்ளாஸ்மா மாற்றுவதை அப்படியே நிறுத்தி அவள் க்ரூப்ரத்தத்தை நேரடியாக உள்ளே செலுத்தினோம்.;பிழைத்துக்கொண்டாள்.

மறு நாள் மேத்யூவிரூ, உடனே வாஎனப் பதறினான்.

அவள் குருதியில் இரத்தத்தட்டுக்கள் குறைந்து அலர்ஜி ஏற்பட்டு உடலெங்கும் வட்ட வட்ட பளப்பள கொப்புளங்களாகத் தெரிந்தது.மீண்டும் ஸ்டெராய்ட்கள்.

நாங்கள் நால்வரும் குழம்பினோம்;ப்ளாஸ்மா மாற்ற நிலையை இவள் எம் எஸ் தாண்டிவிட்டது எனப் புரிந்தது.ஒரு வழிதான் இருக்கிறது;துணிந்து செய்ய வேண்டியதுதான்.

கிரிஸ்பர் செயல்முறையில் புது நுணுக்கம் என்ற சோதனை என்று சொன்னோம் அரசிடம். மனிதர்கள் மேல் இந்த சோதனை இல்லை எனவும் சொன்னோம்.அனுமதி கிடைத்தவுடன் சி சி ஆர் ஐய்ந்தை எடிட் செய்தேன்;அனைத்தையும் நானே, நான் மட்டுமே, பிறர் அறியாமல் செய்ததாகக் கோப்புகள் ஏற்படுத்தினேன்.அவள் உடலுக்குள் இனி போர் இல்லை.

ஆறு மாதங்கள் கழித்து அவள் ஊர் திரும்புகிறாள். சக்கர நாற்காலியில் வந்தவள் தன் கால்களால் நடந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில் ஏறினாள்.மிகுந்த மகிழ்ச்சியுடன் என் மருத்துவ ஆய்வகம் திரும்பினேன். அங்கே *எஃப் டி வின், சி பி ஆர் பிரிவு ஆட்கள் என் உதவியாளர் லாரன்சைக் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

எந்தரோ மஹானு பாவுலு அந்தரிக்கி வந்தனமுஎன்று சந்தோஷியின் ஸ்ரீ இராகம் காதுகளில் ஒலித்தது.

*(FDA- Food and Drug Authority.CBER- Center for Biologics Evaluation and Research)

எனக்குப் பூனைகளைப் பிடிக்காது -மாரியப்பன் சிறுகதை

நல்ல இரவு. எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த சாக்கடைக்குச் செல்லும் பொந்திலிருந்து , நடுங்கியபடி எட்டிப் பார்க்கிறேன் நான். எனது அப்பாவும், அம்மாவும், நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் குரல் எழவில்லை. திடீரென ஒரு கரு வெள்ளம். கருத்த, கொழுத்த பெரிய பெரிய பூனைகளின் படை என் மீது பாய்ந்தது. கத்துவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் அவை என்னை பற்களால் இழுத்து வெளியே போட்டன. அவை அனைத்தும்

ஒரே மாதிரி இருந்தன. ஒரே மாதிரி கண்கள், மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்பூண்டு போல், நடுவில் மட்டும் ஒரு சிறிய கரிய தீற்றல். ஊசி நகங்களும் கோரப் பற்களும் காவு கொள்ளத் தயாராகின்றன. மரண பயத்தில் பரிதவிப்புடன் அவர்களைப் பார்க்கிறேன். என்னைக் கைவிட்டவர்களுடன் சேர்ந்து நானும் புன்னகைத்தபடி நிற்கிறேன்.

நெடு நாட்களுக்குப் பிறகு வந்தது இப்படியொரு கனவு. எழுந்து அமர்ந்தேன். நான் A-block 52வது அறையில் இருக்கிறேன் என்று உணர சிறிது நேரம் பிடித்தது. தூக்கம் வரவில்லை. தண்ணீர் குடித்தால் தேவலாம் எனத் தோன்றியது. ஆனால், எழுந்து அவ்வளவு தூரம் தனியே நடந்து மெஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். பயம்.

எனக்கு தூக்கத்தின் மூன்றாம் சுழற்சியில் இருந்த தினேஷை எழுப்பிக் கூற வேண்டும் போலிருந்தது.

எனக்கு பூனைகளை பிடிக்காது”

எனக்கு இந்த உலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்பிக் கூற வேண்டும் போல இருந்தது. யாருமற்ற அந்த பின்னிரவில் என்னிடமே நான் பேசத் தொடங்கினேன்

எனக்கு பூனைகளை பிடிக்காது”

ஏன்?”

தெரியாது, காரணமில்லாமல் வெறுக்கக் கூடாதா?”

இல்லை.”

அவை அருவருப்பாக இருக்கின்றன.”

பொய்.”

உண்மை.”

இல்லை

சரி. பொய். எனக்குப் பூனைகளைப் பார்த்தால் அந்தக் கிழவனின் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவன் ஆளும் மூஞ்சியும் சிரிப்பும்.”

யார் ?”

தினமும் சரியாக காலை ஏழரை மணிக்கெல்லாம் வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பான்.

அப்பொழுது எனக்கு 5 அல்லது 6 வயது. அது ஒரு நீளமான காம்பவுண்ட், அதன் கடைசியில் தான் எங்கள் வீடு. வாசலில் இருந்து பார்த்தாலே தெரியும். காலையில் கார்பரேஷன் தண்ணீர் வரும்போது தான் குளித்தாக வேண்டும். காம்பவுண்ட் பாதையில் எங்கள் வீட்டிற்கு வெளியே நின்றுதான் குளிப்பேன். இல்லை நிற்பேன். அம்மா தான் என் மேல் தண்ணீர் கொட்டி, சோப்பு தேய்த்து விடுவார்கள். மோப்பம் பிடித்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்.

அவனது முகம் கோணல் வாயுடைய கிழட்டுப் பூனையைப் போல இருக்கும். காதுகள் மட்டும் ஓநாயுடையவை. முள்ளு முள்ளாக மீசை வைத்துக் கொண்டு, நரைத்த தலையுடன் குட்டையாக இருப்பான். வெள்ளை வேட்டியும் சட்டையும் தான் எப்பொழுதும். அருகில் இருந்த காளிமார்க் சோடா கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

குளித்து யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு வெளியே ஸ்கூல் வேனிற்காக எங்கள் பக்கத்து காம்பவுண்ட் படியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, என் அருகில் தவறாமல் வந்து அமர்வான்.

அவன் என்னிடம் பேசியதெல்லாம் ஒரே வாக்கியம், சிரித்தது ஒரே மாதிரி சிரிப்பு, பார்த்தது ஒரே மாதிரி பார்வை.

உன் குஞ்சுமணியை எனக்குத் தருவியா?”

நான் பதிலே பேச மாட்டேன்.

ஒரே ஒரு முறை “ என் கிட்ட குஞ்சு மணி கிடையாது” என்றேன் எரிச்சலுடன்.

நான் இதுவரை கேட்டதிலேயே மிக அசிங்கமான ஒரு சிரிப்பை சிரித்தான்.

குளிக்கறப்ப ஆடுதுல, அது பேரு என்னது?”

நான் ஒண்ணும் குளிக்கலை. உள்ள என்னைய மாதிரியே ஒரு பையன் இருக்கான். அப்படியே என்னை மாதிரி. அவன் கிட்ட தான் அது இருக்கு”

திரும்பவும் அசலாக அதே கிழட்டுப் பூனையின் சிரிப்பு.

லூசு தாத்தா” என்றேன் மகா எரிச்சலுடன்.

அவன் பேசியதில் என்ன அப்படி தப்பாக இருந்துவிட்டது? சத்தியமாகத் தெரியவில்லை. ஆனால் ஏனோ ஒரு எரிச்சல். ஏதோ காய்ந்த சாக்கடையின் வண்டையில் போட்டு புரட்டியது போல்.

இனி என்னால் நிறுத்த முடியாது,சொல்லித்தான் ஆக வேண்டும்.”

சொல்

எனக்கு குடோன்களையும் super heroக்களையும் கூட பிடிக்காது.”

ஏன் ?”

அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் வீடு இருந்த இடம் ஒரு நகரின் மிக முக்கியமான மையம். அங்கே எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கும், கார்கள், பஸ்கள், ஆட்டோக்கள், டூ வீலர்கள், சைக்கிள்கள், ரிக்‌ஷாக்கள், மனிதர்கள். எப்போதாவது, தலைக்கு மேல் கொஞ்சூண்டு தெரியும் வானம் போல, தெரியாமல் விழுந்து விட்டேன் என மன்னிப்பு கேட்டுக் கொண்டே விழும் தூறல் போல, அருகில் அணி வகுத்திருந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் இருந்து யாராவது எட்டிப் பார்த்து சிரிப்பார்கள். அதிர்ஷ்டம் இருந்தால், ப்ளாஸ்டிக் ஸ்டம்ப்பையும், பேட்டையும் பாலையும் வைத்துக் கொண்டு வீட்டு காம்பவுண்டுக்குள் தனியாக வேர்ல்ட் கப் ஆடிக் கொண்டிருக்கும் என் மேல் பாவப்பட்டு வந்து இரண்டு ஓவர்கள் விளையாடுவார்கள். என் வயதையொத்த யாரும் சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடையாது. அந்த ரோட்டில் மொத்தம் இருந்தது பத்து வீடுகள். ஆனால் மூன்னூறு கடைகள் வரிசை கட்டி நின்றன. ஆட்டோமொபைல், டிராக்டர், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல் உதிரி சாமான்கள் விற்கும் கடைகள்.

அன்று சரியான வெயில்.

நடு நிசியில் உறங்கிக் கொண்டிருந்தது அந்த காட்டின் வாயிலில் இருந்த கிராமம். நிலா இல்லாத வானத்தின் கீழ், குதிரைகளுடன் படையெடுத்து வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஊரை சூறையாடினர். நகை, பணம், பாத்திரங்கள் என அனைத்தையும் எடுத்து சுருட்டிக் கொண்டு, எதிரில் பட்டவர்களை வெட்டி வீழ்த்தி, ஊரை தீயிட்டுக் கொளுத்தி தப்பித்துச் சென்று கொண்டிருந்தனர்.

இரும்புக்கை மாயாவியான நான் தான் அந்த ஊரின் ஒரே போலீஸ். எதுவுமே அறியாமல் எனது குகையில் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள், ஊர் கொள்ளை போனது என்று கதறினார்கள்.

வெகுண்டெழுந்த நான், கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகமூடியாக்கிக் கொண்டு சீறிப் புறப்பட்டேன், கயவர்களை அழிக்க. மலை மேல் ஓடிச்சென்று பார்த்தேன். வெகு தூரத்தில் அவர்களின் தீப்பந்தங்கள் தெரிந்தன. எனது குதிரையை முடுக்கி விட்டு துரத்தினேன்.

இதோ! நெருங்கி விட்டேன்!

என்ன செய்கிறேன் பார்! நான் இருக்கும்போதே இவ்வளவு தைரியமா? முதுகில் இருந்து ஈட்டியை உருவி வீசினேன்.

அம்மா!” என்ற அலறலுடன் சரிந்தது ஒரு குதிரையும் அதன் சுமையும்.

இன்னும் 50 பேராவது இருப்பார்கள்.

பாவம் நீங்கள்! என் கையிலா வந்து சிக்க வேண்டும்? ஹா! ஹா! ஹா!”

கழுத்து முறியும் சத்தம். குதிரையின் கால் முறிந்து கத்தும் சத்தம், மரங்கள் உடையும் சத்தம், இடி வெடிக்கும் சத்தம்.

எனது இரும்புக்கை பட்டவுடன் நொறுங்கித் தூள் தூளாகிப் போய்க் கிடந்தது மொத்த படையும்.

அதோ! ஒருவன் பதுங்கிச் செல்கிறான். கோழை!

நீ கொடுத்து வைத்தவன். என் கையால் சாகப் போகிறாய்!”

மூச்சிழுத்து ஓங்கிய எனது கை, முழு வேகத்துடன் சென்று மெதுவாக இறங்கியது ஒரு நிஜ வயிற்றில்.

ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய், எனது முகமூடியை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டேன்.

ஐய்யோ! விளையாட்டு ஆர்வத்தில் வாசல் வரை கண் மண் தெரியாமல் வந்து விட்டேன்.

யாருடைய வயிறு இது?”

செபாஸ்டியன். பக்கத்துக் கடையில் வேலை பார்க்கும் அண்ணன். என்னோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடும், மேட்ச் பார்க்கும் நல்லவர். 16லிருந்து 19 வயதிற்குள் இருக்கும். அவனுக்கு பூனை மீசை துளிர்த்திருந்தது.

ஆம், எனக்கு பூனைகளைப் பிடிக்காது

அந்த கணத்தில் வெறும் டிரவுசர் மட்டும் அணிந்து, அதற்குத் துணையாக அரைஞான் கயிறும் கட்டியிருந்தேன்.

என்னடா, சட்டை போடாம சுத்திட்டு இருக்க?” என்றபடியே எனது நெஞ்சுக் காம்பை பிடித்து நன்றாக ஸ்க்ரூவை திருகுவது போல திருகி விட்டான் அவன். வலி சுர்ரென்று உச்சந்தலை வரை போனது.

வலிக்குதுண்ணே!” என்று கத்தினேன்.

எங்கள் காம்பவுண்டை ஒட்டியபடி இருந்த ஒரு சிறிய சந்தினுள் இருந்தது அவன் வேலை பார்த்த குடவுன். அங்கே குவியல் குவியலாக இரும்புப் பட்டைகளை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள்.

என்னைத் தனது இரும்புக்கரங்களால் தூக்கிக் கொண்டு சென்றான். நான் தாவிக் குதிக்கத் துள்ளினேன். இரும்புப் பிடி. வேகமாக என்னை இரு கைகளிலும் தூக்கி, அவன் உடலோடு அணைத்துக் கொண்டு (நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த இரும்பு வியர்வையின் வாசம்) வேகமாகச் சென்று என்னை அந்த குடவுனுக்குள் தூக்கி வீசினான். பட்டைகள் தேய்த்துத் தேய்த்து பிளந்திருந்த தரை என் முதுகை சிராய்த்தது.

சடாரென்று கதவை மூடினான். ஜன்னல்களற்ற அறையின் இருட்டு எங்களை விழுங்கியது. பொதுவாக குடவுன்களில் மின்சார இணைப்பும் இருப்பதில்லை. தீக்குச்சியை பற்ற வைத்து என் கண்களுக்கருகே கொண்டு வந்தான்.

தீக்குச்சி அணைந்து போனது.எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

புது குச்சி. எனக்கு ஏதோ விபரீதம் என்று புரிய ஆரம்பித்தது. நான் பயந்து கண்களை மூடிக் கொண்டேன். கன்னத்தில் பளார் என்ற அறையுடன் மயங்கினேன்.

செபாஸ்டியன்” என்று வெகு தூரத்தில், பல மைல்களுக்கு அப்பால் இருந்து யாரோ கூப்பிட்டார்கள். அந்த கூச்சலில் தான் கண் விழித்தேன். சில நொடிகளில் கதவு திறந்து ஒரு உருவம் வெளியேறியது. கதவு தாழிடப்பட்டது. ஒரு வகை அருவருக்கத்தக்க, பனம்பூவின் நெடியை உண்டாக்கக்கூடிய நாற்றம் உடல் முழுவதும் பரவியிருந்தது, குமட்டிக் கொண்டு வந்தது. கூடவே செபாஸ்டியனும் கதவைத் திறந்து வந்தான். மறுபடியும் இருட்டு.

அதன்பின் இருட்டு என் வாழ்வை விட்டு விலகவே இல்லை,அந்த நொடியில் தான் ஒரு பூனையின் குரூர சிரிப்பைப் போல இருட்டும் எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கத் தொடங்கியது.

அந்த மூச்சுமுட்டும் இருட்டில், பிசுபிசுத்த நெடியில், இரும்பாலான ஒரு அறையில், புழுவைப் போல கிடந்த எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் நான் வெறுத்தேன், கடவுள்களை, super heroக்களை, இரும்புக் கைகளை, முக்கியமாக பூனைகளை.

பல ஆண்டுகள் அங்கேயே கிடந்தேன். கத்த வேண்டும் என்று கூட தோன்றவில்லை. எதிர்க்கத் திராணியற்ற ஒரு செடியைப் போல. வலுவற்ற ஒரு நோஞ்சானைப் போல. செத்துப்போன ஒரு சிலையைப் போல. தற்காத்துக் கொள்ள லாயக்கில்லாத முதுகெலும்பற்ற ஒரு கோழையைப் போல.

பல வருடங்கள் கழித்து, ஏதோ புத்தகத்தில் ‘இரும்பு மனிதர்’ என்றிருந்ததை பார்த்தவுடன் எழுதத் தோன்றியது,

இரும்பின் அர்த்தம் வலிமையல்ல. அதிகாரமும் அத்துமீறலும்.”

இரும்பாலானது இந்த அறை, இந்த ஊர், இவ்வுலகு.

ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை

இன்று ஓப்பன் பண்ணியே ஆகவேண்டும்” என்று அஜய் முணுமுணுத்துக்கொண்டே வண்டியை முறுக்கினான்.

*

அஜய் பேட்ஸ்மன் இல்லை. பவுலர். புரொபசனல் கிரிக்கெட்டரும் அல்ல. வாரம் முழுவதும் நைட் ஸிப்ட் பார்த்துவிட்டு சனிக்கிழமை காலையில் கிரவுண்டிற்கு முதல் ஆளாக வரும் ஐடி ஊழியர்களுள் ஒருவன். சென்னைக்கு வந்த முதல் வருடம் அவனது கம்பெனியில் கிரிக்கெட் போட்டி அறிவித்தார்கள். போட்டி பற்றிய அறிவிப்பு வந்த உடன் அவனது அணியில் எல்லோரும் எப்படி பரபரப்பானார்கள் என்று அடிக்கடி அஜய் நினைத்துப்பார்ப்பான். யாரெல்லாம் புதிதாக சேர்ந்திருந்தார்களோ அவர்கள் எல்லோரிடமும் கிரிக்கெட் விளையாடுவாயா என்று மேனேஜர் கேட்டார். அஜய் “விளையாடுவேன்” என்று சொன்னவுடன் “பேட்ஸ்மனா?” என்றார். “இல்லை பவுலர்” என்றவனை ஒரு நொடி ஆச்சர்யமாய்ப் பார்த்துவிட்டு “சரி, சனிக்கிழமைக் காலை எம்சிசி கிரவுண்டிற்கு வந்துவிடு. ‘நெட்ஸ்’ இருக்கு.. ஈஸ்ட் தாம்பரம் ஆப்போஸிட்டில் இருக்கிறது” ஒரு சிரிப்போடு அவர் சொல்லிவிட்டுப் போனார். அவர் ஏன் சிரித்தார் என்று அஜய்க்கு புரிந்தது.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அஜய்க்கு இது பழகிப்போன விசயம். முதலாம் ஆண்டின் முதல் வகுப்பில் எல்லோரின் பெயரையும் ஊரையும் கேட்டு வந்த பேராசிரியரிடம், “பேரு அஜய், ஊரு எம்.காட்டாம்பட்டி” என்றான். “என்னடா.. பேருக்கும், ஊருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லையே” என்று சொல்லி சிரிக்க மொத்த வகுப்பும் சிரித்தது. “பேரு அஜய்.. ஊரு காட்டுப்பட்டி.. ஹாஹாஹா..அது என்ன எம்.காட்டாம்பட்டி..ஹாஹ.. ஊருக்கு இனிசியல்லாம்” பேராசிரியர் விடுவதாக இல்லை. அஜய்க்கு கோபம் வந்தது. சட்டென்று,”அது ஒரு சுதந்திரப் போராட்ட வீரரோட நினைவா வச்சுருக்காங்க சார்.. அவரு பேரு மணவாளன் தியாகி.. எங்க ஊர்ல இருந்து சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டு உயிர் நீத்தவர்.. அவரோட பிள்ளைகளா எங்க ஊர்ல இருக்கவங்க நினைக்குறோம்.. அதான் எம். இனிசியல்..” என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்தான். பேராசிரியர் முகம் சுருங்கியது. வகுப்பில் அமைதி. அஜய்க்கு ஒரே சந்தோசம். தனக்குத் தோன்றிய அந்த திடீர் கதையை நினைத்து சிரிப்பை அடக்கமாட்டாமல் தலையைக் குனிந்து நின்றான். “சரி உட்க்கார்” என்றவர் அதன் பிறகு அவனிடம், கல்லூரி முடியும் வரை, ஒரு சிறு மரியாதையோடு நடந்துகொண்டதாக பலரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்வான் அஜய்.

சனிக்கிழமை கிரவுண்டிற்குப் போனபோது அனேகமாக எல்லோருமே வந்துவிட்டிருந்தனர். எப்படியும் டீமில் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்து அவசரமில்லாமல் பொறுமையாக கிளம்பிப் போனவனிடம் “என்னய்யா இதான் டைம்மா. ஆபிஸுக்குத்தான் டைம்க்கு வர மாட்றீங்க விளையாடக்கூடவா.. இந்தா பவுலிங் போடு“ எனப் பந்தைக் கொடுத்தார் மேனேஜர்.

அஜய் சற்று குழம்பித்தான் போனான். “எப்போதும் தன்னைப் பார்த்துதானே குழம்புவார்கள் இது என்ன புதுக்கதை” என்று நினைத்துக்கொண்டே சுற்றி மற்றவர்களைப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் ஒரு மெல்லிய கிண்டல் மறைந்திருந்தது. இந்த தொப்பையை வைத்துக்கொண்டு ‘என்னத்த போடப்போறான்’ என்பதைப்போல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மேனேஜர் பவுலிங் போடச் சொன்னது கேப்டனுக்கு. ஒருவேளை நன்றாகப் போட்டால் டீமில் எடுத்தாலும் எடுப்பார்களோ என்று யோசித்துக்கொண்டே ‘ரன்அப்பை’ சரி பார்த்தான்.

பாஸ்ட் பவுலரா” என்று மேனேஜர் கேட்டார். “

ஆமா சாஜி, ரைட் ஆர்ம் மீடியம் பார்ஸ்ட்”, “ம்க்கும்” என்று யாரோ சொன்னதுபோல் அவனுக்கு கேட்டது.

முதல் பால் புல்டாஸானது. ஆனால வேகம் நன்றாக இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கையாய்ப் பார்த்தார் மேனேஜர். அடுத்த பாலைப் போடத் திரும்பியவனிடம். “ஸ்பீட் ஓகே.. பட் குட் லெந்த்ல போடு” என்றார்.

அடுத்தப் பந்து ‘யார்கராய்’ விழுந்தது. சரியாக கேப்டனின் டோவில் அடிக்க அவர் வலியில் காலை உதறிக் கீழே விழுந்தார். “சூப்பர்.. சூப்பர் அஜய்” என நெட்ஸுக்கு வெளியே இருந்து மேனேஜர் கத்துவது கேட்டு அஜய் உற்சாகமானான். “செம யார்க்கர்டா” என டீமில் மற்றவர்களும் பாராட்டினர்.

அடுத்த இரண்டு பந்துகளும் யார்க்கர்ஸ். கேப்டனால் ‘ப்ளாக்’ மட்டுமே செய்ய முடிந்தது. சாஜி இம்ப்ரஸ் ஆகிவிட்டார். ஒரு ஓவர் போட்டுவிட்டு அடுத்தவரிடம் பந்தைக்கொடுத்தவனைப் பார்த்து “வெல் டன் டா.. ஆறு பாலும் கன்டினியஸா எப்படி யார்க்கர் போட்ட.. ஐ எம் இப்ரஸ்ட்.. இந்த வருசம் மேட்ச்சல நீ இருக்க.. ரெடியாயிக்க” என்று சொல்லிவிட்டு கேப்டனிடம் பேசப் போனார்.

அஜய் வாயெல்லாம் பல்லாக சிரித்தாலும் உள்ளூர ஒரு சின்ன உறுத்தல் இருப்பதை வெளியே காட்டமல் இருக்க சற்று சிரமப்பட்டான்.

ஆறு பாலும் எப்படிடா யார்க்கர் போட்ட..?” அவனுக்கே தெரியாது என்பதுதான் உறுத்தலுக்குக் காரணம். பந்தைப் போட ஓடிவரும்போது குட் லெந்தில் போடவேண்டும் என்று குட் லெந்த் இடத்தையே பார்த்துக்கொண்டு ஓடிவந்தாலும் பந்து கையை விட்டு வெளியே போய் யார்க்கராகத்தான் விழுந்தது. அடுத்த பால் நினைத்த மாதிரி போடுவோம் அதற்கு அடுத்தபால் போடுவோம் என்று ஒரு ஓவர் முழுவதும் யார்க்கர்தான்.

எது எப்படியோ மேனேஜர் ஹேப்பி. டீமில் இடம் கிடைத்ததால் அவனும் ஹேப்பி.

அதன் பிறகு அணியில் முக்கிய நபராகிப் போனான் அஜய். டீமில் சேர்ந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. நிறையத் தோல்விகள், சில வெற்றிகள், சின்ன சின்ன சண்டைகள், பல விலகல்கள், புதியவர்கள் வருதல் என பல விசயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அஜயின் பவுலிங் பற்றின சந்தேகங்களும் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருந்தன என்பதில் அவனுக்குத் வருத்தம். அது நன்றாக விளையாடாதபோது அதிகமாகும், நன்றாக விளையாடும்போது அதைவிட அதிகமாகும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு எப்போதும் ஒரே மாதிரியான சந்தோசத்தையும் துக்கத்தையும்தான் விளையாடும் எல்லோருக்கும் தரும். ஒரு சர்வதேச வீரருக்கும் அஜய் போன்று ஜாலியாக விளையாடுபவருக்கும் ஒரே வித்யாசம் அவர்களின் விளையாட்டில் இருக்கும் தரம் மட்டும்தான். மற்றபடி சந்தோசம், துக்கம், ஏமாற்றம், சோர்வு எல்லாமே விளையாட்டை நேசித்து விளையாடும் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அஜய் விசயத்தில் இது அப்படியே நேர்மாறாக நடப்பதாக நினைத்தான்.

ஒரு மேட்ச்சில், ஒரு இடைவெளிக்குப் பிறகு,பவுலிங்கை ஓப்பன் செய்தான். முதல் பந்தை எதிர்கொள்ள நின்றவர் நல்ல உடற்கட்டுடன் இருந்தார். அடிக்க வசதியாக போட்டால் எல்லா பந்துகளையும் சிக்ஸர்தான் அடிப்பார் என்பதுபோல் இருந்தது தோற்றம். அஜய் அவருக்கு “மிடில் அண்ட் ஆப்பில்” போட வேண்டும் என்று முடிவு செய்து ஓவரின் முதல் பந்தைப்போட்டான். ஆனால் கையிலிருந்து பந்து வெளியேறும்போதே தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டது. உள்ளங்கையில் இருந்து போகையில் அது லெக் ஸ்டம்பை நோக்கி போகப்போகிறது என்று தெரிந்தததால் முழுவதுமாக போவதற்குள் நான்கு விரல்களாலும் ஒரு சிறு அழுத்தம் கொடுத்தான். பவுன்ஸ் ஆகும் என்று நினைத்து அப்படிச் செய்தான். பந்து அவன் முதலில் நினைத்தது போலவே லெக் ஸ்டெம்ப் லைனில் விழுந்தது. ஆனால் அவன் எதிர்பாராதவிதமாக ஸிவிங் ஆகி உள்ளே வந்து ஆப் ஸ்டம்பைத் தட்டியது. அஜையை போலவே பேட்ஸ்மனும் அதை எதிர்பார்க்கவில்லை முதல் பந்திலேயே போல்ட். போல்ட் எடுத்ததை நம்பமுடியாமல் வாய்விட்டுச் சிரித்தான் அஜய். அவன் மட்டுமல்ல டீமில் இருந்த எல்லோருமே சிரித்தார்கள். எல்லோருக்குமே அது மோசமான பந்தாக, பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ போகவேண்டியது, தப்பித்தது என்று தெரிந்திருந்தது.

அஜய் அந்த மேட்ச் முழுவதும் நன்றாகப் பந்து வீசினான். இன்ஸிவிங், அவுட்ஸிவிங் என பந்து இரண்டு பக்கமும் திரும்பியது. “மேட்” புதிதாக இருந்ததும் ஒரு காரணம். அவனின் பந்துவீசும் முறையும் ஒரு காரணம். பந்து வீச ஓடத் தொடங்கும் முன் ஒரு குதி குதித்துவிட்டு ஸ்டம்ப் அருகில் வரும்போது கழுத்தை இடப்பக்கம் திருப்பி கையை வலதுபக்கமாய் சாய்த்து வீசுவான். பந்து தரையில் குத்தியவுடம் பேட்ஸமனை நோக்கித்தான் வரும். வெளியே போகாது. ஆனால் அன்று இரண்டு பக்கமும் எப்படி திரும்பியது என்று வழக்கம்போல் அவனுக்கே தெரியவில்லை. யூடியூப்பில் எப்படி ஸிவிங் செய்வது என்று பார்த்துவிட்டு வந்துபோட்ட போதெல்லாம் கோட்டைக் கிழித்து அதன் மேலேயே போவதுபோல் நேராக போகும், இன்றைக்கு என்ன ஆனது என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அதை அருகில் இருந்து கேட்டதுபோல் கேப்டன் “உன் கன்ட்ரோல்லதான் இருக்கா இல்லா அதுவா ஸிவிங் ஆகுதா” என்று கேட்டார். சிரித்துச் சமாளித்தாலும் உள்ளூர எரிச்சல் அடைந்தான். “அது என்ன.. தன்னிடம் மட்டும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படி சந்தேகமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி போட்டால் என்ன.. நன்றாக போடுகிறேனா இல்லையா… இவர்கள் பவுலிங் போடும்போதோ பேட்டிங் ஆடும்போதோ நான் இப்படிக் கேட்டால் ஒத்துக்கொள்வார்களா” மனதிற்குள் குமைந்தான். அவரிடம் எதுவும் கேட்க்கவில்லை.

அப்போட்டிக்குப் பிறகு அவன் நன்றாக விளையாடினால் மற்றவர்களின் குறைகளைக் குத்திக்காட்ட ஆரம்பித்தான். டீமில் எப்போதுமே நன்றாக விளையாடியவர்கள் பேசும்போது திரும்ப பேசமாட்டார்கள். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையும் விடாமல் பழித் தீர்த்துக்கொண்டான் அஜய். அவர்களும் பதிலுக்கு அவன் ‘பார்ம்அவுட்’ ஆன சமயங்களில் பவுலிங்கை ஓப்பன் செய்யவிடாமல் பந்து நன்றாக தேய்ந்து பழையதானவுடன் கொடுப்பார்கள். எப்படிப் போட்டாலும் பேட்ஸ்மனின் முன் போய் நின்று “ம்ம்.. அடி” என்கும்.

*

அஜய் கிரவுண்டிற்கு போனபோது யாரும் இல்லை. ‘கிட் பேக்கை’ வைத்துவிட்டு ‘ஸ்ட்ரெச்’ செய்தான். கிரவுண்டை சுற்றி ஒரு முறை ஓடி வந்தான்.

நன்றாக வார்ம் அப் ஆகவேண்டும். இத்தனை நாள் போடாத வேகத்தோடு போடவேண்டும்” போன மேட்ச்சில் நான்கு ஓவரில் முப்பத்தி ஏழு ரன்கள் கொடுத்ததிற்கு டீமில் சீனியர்கள் கிண்டல் செய்ததுதான் அவனின் இந்த ஆவேச பயிற்சிக்கு காரணம்.

டாஸில் வென்று அஜய் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. கேப்டன் உள்ளே போவதற்கு முன் பேசும்போது இன்னைக்கு “மேட் புதுசு போட்ருக்காங்க பந்து நல்லா வரும். ஒழுங்கா போடலன்னா அடியும் செமயா வாங்குவோம்.. அதுனால சேசிங் எடுத்தேன்.பவுலர்ஸ் ஒழுங்கா போடுங்க” என பவுலர்களைப் பார்த்து பேசினார்.

அஜய் ஆர்வத்தோடு சரி என்று தலையாட்டிவிட்டு எல்லோருக்கும் முன் உள்ளே ஓடினான்.

கீப்பரும், கேப்ட்டனும் பீல்டிங்கை செட் செய்தார்கள். எல்லோரையும் நிற்க வைத்துவிட்டு அஜையை பார்த்து, நீ தேர்ட் மேன் போ என்றார்கள்.

ஏமாற்றமாக இருந்தாலும் தேர்ட் மேன்னாய் நிற்பதால் அடுத்த ஓவர் போடச் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் போய் நின்றான்.

ஆனால் அஜய்க்கு மேட்ச் முடியும்வரை ஓவரே தரவில்லை. அவனே இரண்டு முறைப் போய் கேட்ட பிறகும் “இரு வெய்ட் பண்ணு” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை வருடங்களில் இதுதான் முதல் தடவை அவனுக்கு பந்து வீச வாய்ப்பே கிடைக்காமல் போனது. முதல் பாதி முடியும்போது கிளம்பி வீட்டுக்குப் போய்விடலாம் என்று கூட நினைத்தான். கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டான்.

எதிரணியினர் இருபது ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு நூற்றி நாற்பத்தி ஏழு ரன்கள் எடுத்தனர்.

அஜய் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக ஆரம்பித்தனர். முதல் விக்கெட் ஆறாவது ஓவரில் விழுந்தது. ஸ்கோர் 36/1.

பின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன.

பவுலிங் தராததால் பேட்டிங் கிடைக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தான். யாரிடமும் எதுவும் கேட்க்கவில்லை. தந்தால் அவர்களாகவே தரட்டும் என்று காத்திருந்தான்.

பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் முடிவில் எழுபது ரன்கள் எடுத்தனர். இன்னும் அறுபது பந்துகளில் எழுபத்தி ஏழு ரன்கள் தேவை.

அஜய்க்கு ஓவர்கள் போக போக கோபமும் எரிச்சலும் அதிகமாகிக்கொண்டே வந்தன. ஒரு மேட்ச் முழுவதும் எதுவுமே செய்யாமல் வீட்டிற்குப் போவற்குப் பதில் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற கடுப்புடன் விக்கெட்டுகள் சீக்கிரம் விழ வேண்டத் தொடங்கினான்.

பதினைந்தாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. அதுவரை நன்றாக ஆடி வந்த கேப்ட்டன் அவுட்டானார். எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை மாறி அணி தடுமாறத் தொடங்கியது.

ஒரு வழியாக அஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. இருபதாவது ஓவர். அவனுக்குப் பின் ஒரு விக்கெட் இருந்தது. வெற்றி பெற பதினைந்து ரன்கள் தேவை. அனேகமாக மேட்ச் கையைவிட்டு போய்விட்டதுபோலத்தான்.

அஜய்க்கும் பெரிய நம்பிக்கை இல்லை. இப்படி வாய்ப்பு கிடைத்ததிற்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே நான் ஸ்ட்ரைக்கரில் போய் நின்றான். எதிர் முனையில் நின்றிருந்த சீனியர் எதுவும் இவனிடம் சொல்லவில்லை. ரிசல்ட் தெரிந்துவிட்டது என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். அஜய் க்ரீசிற்குள் நன்றாக பேட்டை தள்ளி வைத்து நின்றுகொண்டான். போன மாதம் ஒரு முறை ‘மேன்கேட்’ முறையில் அவுட்டானதை அவன் மறக்கவில்லை. முதல் பந்தில் ஒரு ரன் ஓடினார்கள். ஓவரின் இரண்டாவது பந்தை அஜய் எதிர்கொண்டான். ‘ஷாட் பிட்ச்’ பால்தான். ஆனால் பேட்டை தூக்கி பந்திற்கு வருவதற்குள் பந்து எழும்பாமல் வந்து காலில் அடித்து ‘ஷார்ட் பைன் லெக்கிற்குப்’ போனது. ஒரு ரன் ஓடினார்கள். நல்லவேளை ‘எல்பிடபில்யூ’ ஆகவில்லை என்று நினைத்துக்கொண்டான். அடுத்த ஒரு ரன் எடுத்தார்கள். மூன்று பந்துகள் மீதமிருந்தன. முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள். வெற்றிக்கு இன்னும் பன்னிரெண்டு ரன்கள் வேண்டும்.

அஜய்க்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்றிருந்தது. ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொள்வதற்கு முன்னால் வெளியே நிற்கும் தன் அணியினரைப் பார்த்தான். எல்லோரும் இவனையே பார்த்துகொண்டிருந்தார்கள்.

பவுலர் ஓடிவரத்தொடங்கினார்.

அஜய் ஒரு முடிவெடுத்தவனாய் இறங்கி வரத் தொடங்கினான். பந்து வரும்போது ஏறக்குறைய பிட்ச்சின் நடுவில் இருந்தான். ஹெல்மட் போடாமல் அவ்வளவு தூரம் இறங்கி ஆடுவது ஆபத்தான விசயம். வெறி வந்தவன்போல் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பேட்டை லாங் ஆன் திசையை நோக்கிச் சுத்தினான். பந்து அவன் பேட்டில் பட்டவுடன் ரன் எடுக்க ஓடியவன் இரண்டாவது ரன் ஓடி முடித்தபோதுதான் பந்து பவுண்டரிக்கு போனதைப் பார்த்தான்.

வெளியே நின்றுகொண்டிருந்த அணியினர் உற்சாகமானார்கள். “கமான் அஜய்.. யு கேன் டூ யிட்“ என்று கத்தினர்.

அடுத்தப் பந்தையும் அதே மாதிரி இறங்கி வந்து எதிர்கொண்டான் அஜய். இந்த முறை ‘லாங் ஆப்’ திசையில் நான்கு ரன்கள். திடீரென்று பரபரப்பானது ஆட்டம். வெளியே இருந்து “கமான் அஜய் கமான் அஜய்” என்று கத்தத்தொடங்கினர். எதிரணியினர் பவுலரிடம் சென்று பேசினர்.

அவனுக்கு நெஞ்சு பட பட என்று அடித்தது. அவன் காதெல்லாம் அடைத்தது சுத்தி என்ன நடக்கிறது என்று புரியாததுபோல் ஒரு மெல்லிய நடுக்கத்தோடு அடுத்தப் பந்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கத்தொடங்கினான். இந்தப் பந்தையும் இறங்கி ஆட வேண்டாம், எப்படியும் ஆப் ஸ்டம்பிற்கு வெளியேதான் போடுவார்கள் நின்ற இடத்தில் இருந்தே அடிப்போம் என்று முடிவு செய்தான். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த “சீனியர், என்னடா பண்ற.. ட்ரை பண்ணு” என சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.

கடைசி பந்தைப் போட பவுலர் ஓடி வந்தார். ஒரு பால். நான்கு ரன்கள். அதுவரை எவ்வளவு நன்றாக விளையாடினாலும் கிண்டலாகவும், சந்தேகத்தோடும் பார்த்து வந்த அணியின் முன் நிரூபிக்க, தனக்கு பவுலிங் மட்டுமல்ல. பேட்டிங்கும் வரும் என்று சொல்ல ஒரு வாய்ப்பு.

பவுலர் பந்தை வீசினார். கடைசி நொடியில், இதையும் இறங்கி வந்தே ஆடலாம் என்று முடிவு செய்து ஒரு அடி எடுத்து வைத்தான். அதற்குள் பந்து வந்துவிடவே முன்னேயும் போக முடியாமல் பின்னாலும் வர முடியாமல் இரண்டிற்கும் நடுவில் மாட்டிக்கொண்டு எந்த திசையில் அடிப்பது என்பதையும் முடிவு செய்ய நேரம் கிடைக்காமல் அப்படியே நின்றுவிட்டான். நான்காவது, ஐந்தாவது பந்துகளை இறங்கி வந்து ஆடியதால் பவுலர் பிட்ச்சின் நடுவிலேயே பந்தைக் குத்தி பவுன்சர் போட்டார். பேட்டை விட்டிருந்தால் எட்ஜ் வாங்கிக் கூட தேர்ட் மேன் திசையில் பவுண்டரி கிடைத்திருக்கும்.

பந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது.

நான்கு ரன்கள் வித்யாசத்தில் தோல்வி. அஜயின் கண்கள் கலங்கின. எல்லோரும் வந்து கை கொடுத்தார்கள். நன்றாக முயற்சி செய்தான் என்றார்கள். நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த சீனியர், அம்பயர்கள், எதிரணியினர், அவனின் அணியினர் என எல்லோருமே பாராட்டினார்கள். அவனுக்குத்தான் மனம் ஆறவேயில்லை. “நல்லா ஷார்ட்டாதான வந்தது .. டீப் ஸ்கொயர் லெக்ல ஒரு புல் ஆடுவீங்கன்னு நினச்சேன்.. ஏன் மிஸ் பண்ணீங்க” எதிரணி விக்கெட் கீப்பர் தோளில் தட்டி கேட்டுவிட்டுப் போனார்.

எப்படி அந்தப் பந்தை விட்டேன்னு தெரியல..” என்று தன் அணியில் ஒவ்வொருத்தரிடமும் புலம்பினான். “எல்லோரும் பரவால்ல விடு…. நல்ல ‘ட்ரை’தான்” என்றனர். ஒருவர் கூட வழக்கமான கிண்டலைச் செய்யவில்லை. அதில் ஒரு சிறு சந்தோசமடைந்தாலும் அவனுக்கே முதன் முறையாக அவன் மேல் சந்தேகம் வந்தது.

தான் நினைத்தபடி ஒரு நாளும் தன்னை விளையாட அனுமதிக்காதா இந்த விளையாட்டு”. என்றிருந்தது அவனுக்கு.

கிளம்பும்போது என்றுமில்லாத அளவு சோர்வாய் உணர்ந்தான் அஜய்.