மித்யா

அமேஸான் காடுகளிலிருந்து- 4: தேவதை வந்தாள்

 மித்யா

அன்று இரவு கிறிஸ்டோவிற்கு தூக்கம் வரவில்லை. ஜெப்ரியின் கண்கள் இல்லாத சடலம் அவன் கண்களில் அடிக்கடி தோன்றி மறைந்தது. டேவிட் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெப்ரிக்கு இந்த கதி என்றால் அவருடைய கதி என்னவோ? அவர் உயிருடன் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஆனால் அவர் எப்படி மாண்டிருப்பார்? ஜெப்ரி போல் அவரும் துடிதுடித்திருப்பாரா? அவரை எந்த மிருகம் கொன்றிருக்கும்? ஜெப்ரியின் மரணத்துக்கும் எந்த மிருகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். மிருகத்தினால் சாவு வந்தால் ஒரு கை காணாமல் போயிருக்கலாம், அல்லது ஒரு கால் காணாமல் போயிருக்கலாம். ஏன், தலையே காணாமல் போயிருக்கலாம். இப்படி கண் மட்டும் காணாமல் போயிற்றென்றால் அது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் வேலைதான் என்று இந்த குழுத் தலைவன் நேற்றுதான் எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். சற்று நேரம் முன் எல்லோரும் வானைப் பார்த்து ஏதோ கத்தினார்கள். பல முறை காட்டை வணங்கினார்கள். அதற்கு பிறகு தூங்கச் சென்று விட்டார்கள்.

கிறிஸ்டோவின் குடிசைக்குள் அந்தப் பெண் நுழைந்தாள். கிறிஸ்டோவை தங்களுடைய குழுவில் உள்ள ஒருவனைப் போல் காட்டுவாசிகள் நடத்தினார்கள். தினமும் ஏதோ ஒரு பெண் கிறிஸ்டோவின் குடிசைக்குள் வந்து அவனுடன் படுத்துக் கொள்வாள். முதலில் கிறிஸ்டோவிற்கு இது குழப்பமாக இருந்தது. அவன் ஒரு பெண் மேல் மோகித்திருந்தான். அவளை அவனுக்கு ரொம்ப பிடித்தது. அவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அந்தப் பெண்ணோ பல ஆண்களுடன் கூடினாள். இதைக் கண்டு கிறிஸ்டோ வெகு கோபமாக இருந்தான். அவள் அவனுடைய குடிசைக்குள் இரவில் வந்தபொழுது தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு அவளைத் தொடாமல் இருந்தான். இப்படி பல முறை நடந்தபின் கிறிஸ்டோ இவர்களுடைய விழுமியங்கள் தன்னுடைய விழுமியங்களுக்கு நேர் எதிராக இருப்பதை உணர்ந்தான்.

லண்டனில் ஒரு பெண் பலருடன் செல்வதுண்டு. ஆனால் ஒருவனுடைய காதலி ஆனபின் அவள் அவனுடன்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இங்கு அது போல் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் யாருடனும் கூடி இருக்கலாம். யாரும் யாருக்கும் சொந்தமில்லை. கிறிஸ்டோ முதலில் இதை ஒரு காட்டுமிராண்டி சமூகமாகப் பார்த்தான். ஐரோப்பியா இவர்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது என்று பல ஐரோப்பியர்கள் போல் அவனும் நினைத்தான். ஆனால் மெதுவாக அவன் கருத்து மாறியது. இந்த குழுவிற்குள் கற்பழிப்பு என்பது யாரும் கேட்டதில்லை. இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் ஜெயித்தவர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உட்படுத்துவதில்லை. இந்த குழுக்களின் தலைவன் ஆணாக இருந்தாலும் எல்லோரும் சமமாகதான் கருதப்படுகிறார்கள். கிறிஸ்டோவிற்கு இதையெல்லாம் யோசிக்கும்பொழுது மிகவும் குழப்பமாக இருந்தது. அப்பொழுதுதான் குடிசைக்குள் வந்த பெண் அவனை முத்தமிட்டாள்.

கூடல் முடிந்தபின் அவள் ஆழ்ந்த உறக்கத்தில். கிறிஸ்டோ ஆழ்ந்த சிந்தனையில். ஜெப்ரி போன்ற மாவீரர்களை தின்று துப்பிய காடு என்னை ஏன் ஒன்றும் செய்யவில்லை? அப்படி எனக்குள் என்ன இருக்கிறது? இவர்கள் நம்புவது போல் நான் ஒரு தெய்வப் பிறவியா? அப்படியானால் அதை என்னால் ஏன் உணர முடியவில்லை? நான் இவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? தன்னுள் எழுந்து கொண்டிருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குடிசையை விட்டு வெளியே வந்தான் கிறிஸ்டோ.

தரை ஈரமாக இருந்தது. மழை பேய்ந்து ஓய்ந்திருந்து. இங்கே எப்பொழுது மழை பெய்யும் என்றே சொல்ல முடியாது. இங்கு எப்பொழுதும் ஒரே போன்ற சீதோஷ்ண நிலைதான். இரவில் குளிர்ச்சி இல்லை. காற்றில் மிதமான வெப்பம் கலந்திருந்தது. மழை விட்டபின் வானம் சுத்தம் செய்யப்பட்டது போல் இருந்தது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.

கிறிஸ்டோ தன் கால்கள் தானாக காட்டை நோக்கிச் செல்வதை உணர்ந்தான். தனக்கு தன் சொந்த கால்களின் மேல் எந்த அதிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தான். அவனை பயம் கவ்விக் கொண்டது. அவனுக்கு மறுபடியும் குடிசைக்குள் சென்றுவிடவேண்டும் என்று இருந்தது. ஆனால் அவன் கால்களோ அவனை காட்டுக்குள் அழைத்து சென்றன.

காட்டுக்குள் நுழைந்த கிறிஸ்டோவிற்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் காடு இருட்டாக இருக்கும் என்றும், தன்னால் அந்த இருளில் ஒன்று பார்க்கமுடியாது என்றும் கிறிஸ்டோ எண்ணியிருந்தான். வானில் நிலவொளியும் இல்லை. ஆனால் காட்டுக்குள் அவனுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்தன. எல்லா பக்கமும் மரங்களும், மரத்தில் பொந்துகளும், பொந்துக்குள் குடியிருக்கும் ஆந்தைகளும், மரத்தின் கிளை மேல் படுத்திருக்கும் சிறுத்தையும், ஊர்ந்து செல்லும் பாம்பும் அவனுக்கு தெரிந்தன. ஆனால் காட்டை யாரோ ஒரு சன்ன பச்சை நிற போர்வையால் போர்த்துவிட்டதுபோல் இருந்தது. எங்கும் எதிலும் பச்சை நிறம் குடிகொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் ஆச்சரியமாக பார்த்தக்கொண்டே நடந்தான் கிறிஸ்டோ, எவ்வளவு நேரம் நடந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு நதிக்கரையை அடைந்திருந்தான். கால்கள் வலித்தன. ஓடும் நதியிலிருந்து தண்ணீரை கைகளால் மொண்டு குடித்தான். மிகவும் சோர்வாக இருந்தவன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தான். அந்த இடத்தின் அமைதியை ரசித்துக்கொண்டு கண்களை மூடினான். மூடியவுடன் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்படியே தூங்கிவிட்டான். காட்டின் அந்தப் பகுதியில் ஒலிகள் எதுவும் இல்லாததால்தான் அமைதி குடிக்கொண்டிருந்தது என்பதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு பத்தடி தூரத்தில் ஒரு ரைஃபில் இருந்ததையும் அவன் கவனிக்கவில்லை. அதன் அருகில் துண்டிக்கப்பட்டு கிடந்த காதும் அவன் பார்க்கவில்லை.

காலையில் சூரிய வெப்பம் முகத்தில் அடித்து அவனை எழுப்பியது. கண்ணைத் திறந்து பார்த்தான். அவனுக்கு முன் வெள்ளை நிற உடையில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தாள்.

அமேஸான் காடுகளிலிருந்து- 3 : நிசப்தம்

மித்யா

அத்தியாயம் 3 – நிசப்தம்

 

மறு நாள் காலை ஜெப்ரி, டேவிட் மற்றும் ஜிம் ஆகிய மூவரும் அந்தக் காட்டுப் பகுதிக்குள் செல்லக் கிளம்பினார்கள். அவர்கள் கையில் தலா ஒரு ரைஃபில் இருந்தது. ஜெப்ரியும் டேவிட்டும் தங்கள் ஹோல்ஸ்டரில் பிஸ்டல் வைத்திருந்தார்கள். காட்டுவாசிகள் அவர்களுடன் வர மறுத்துவிட்டதால் எல்லோரும் ஒரு பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்தார்கள். ஜெப்ரி காடுவாசிகளை திட்டிக்கொண்டே வந்தார்.

அவர்கள் காட்டுப்பகுதியின் எல்லைக்கு வந்தபோது அங்கு தங்கியிருக்கும் காட்டுவாசிகளின் குடிசைகளைப் பார்த்தார்கள். இவர்கள் அந்தக் காட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்று காட்டுவாசிகளுக்கு புரிந்துவிட்டது. குடிசைக்குள் இருப்பவர்களைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். அவற்றில் ஒரு குடிசைக்குள்ளிருந்து கிறிஸ்டோ வெளியில் வந்தான். அவன் ஜெப்ரி மற்றும் டேவிட்டைப் பார்த்தவுடன் பரவசமடைந்தான். பிரிட்டனில் பல இளைஞர்களுக்கு நாயகர்களாக இருந்த இருவரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லாக, வலது கையை நீட்டி கொண்டு, “வெரி ப்ளீஸ்ட் டு மீட் யூ” என்று சொல்லிக்கொண்டு கிடு கிடு என்று அவர்களை நோக்கி ஓடி வந்தான். அவனைப் பார்த்து ஜெப்ரி உக்கிரமாக முறைத்தார். ஓடி வந்துகொண்டிருந்த அவன் உறைந்து நின்றுவிட்டான். அவன் முகம் வாடிவிட்டது.

காட்டுப்பகுதிக்குள் அவர்கள் நுழையும் தருணம், ஜிம், “நான் உங்களுடன் வரவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. நான் இங்கேயே உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறேன்” என்றான். “நீ ஒரு கோழை. நீ ஒரு முட்டாள். உலகில் நீ முன்னுக்கு வரமுடியாது. இனி என் கண்ணில் முழிக்க வேண்டாம். உன் சாமான்களை எடுத்துக்கொண்டு லண்டனுக்குச் சென்றுவிடு. அங்கு ஏதாவது கிளார்க் வேலை தேடிக்கொள் இந்தக் காட்டில் உனக்கு வேலை இல்லை” என்று ஆவேசமாக் கத்தினார் ஜெப்ரி. “அவனை விடுங்கள். நாம் செல்லலாம்” என்று அவரை டேவிட் சமாதானப்படுத்தினான்.

இருவரும் காட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களுக்கு காடு புதிதல்ல. நுழைந்தவுடன் அவர் காதுகள் கூர்மையாகின, கண்கள் எல்லா இடங்களையும் தேட ஆரம்பித்தன. அவர்கள் உடம்பு முறுக்கிக் கொண்டிருந்தது. ஒரு சின்ன அசைவையும் அவர்களின் கண் பார்த்தது. எல்லா ஒலிகளும் அவர்கள் காதை வந்தடைந்தன. அவர்கள் இருவரும் காட்டு மிருகங்கள் போல் மாறியிருந்தார்கள். இருண்டிருந்த காட்டில் பூச்சிக்கடியைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. மரத்திலிருந்து கீழே ஊர்ந்து வரும் பாம்பு ஒன்றை டேவிட் கையால் பிடித்து, கீழே வீசி, தன் பூட்ஸ் காலால் நசுக்கினான். துடிதுடித்து இறந்தது அந்தப் பாம்பு. மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டிருந்த கொரில்லா ஒன்றை ஜெப்ரி சுட்டு தள்ளினார்.

மூன்று மணி நேரம் நடந்த பின்பு அவர்கள் நதிக்கரைக்கு வந்தார்கள். இங்கு வெளிச்சம் நிறைந்திருந்தது. ஒரு பெரிய மரத்தின் கீழே இருவரும் அமர்ந்தார்கள். ஒரு ஃபிளாஸ்க்கிலிருந்து நீரை அருந்திவிட்டு ஜெப்ரிக்கு ஃபிளாஸ்க்கை கொடுத்தான் டேவிட். இருவரும் சற்று நேரம் ஒன்று பேசிக்கொள்ளவில்லை.

பிறகு டேவிட் ஜெப்ரியைப் பார்த்து கேட்டான், “இந்த வயதிலும் நீங்கள் ஏன் இது போன்ற ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்? உங்களுக்கு இல்லாத செல்வமா, புகழா? லண்டனில் பெரிய பங்களா, எஸ்செக்ஸ்ஸில் ஒரு கோட்டை. நீங்கள் இப்பொழுது ஒரு நைட்டாகி விட்டீர்கள். உங்களுக்கில்லாத அரசியல் செல்வாக்கா? நீங்கள் லண்டனில் ஹாயாக ஓய்வெடுக்கலாமே? எதற்கு இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”

“ஹ்ம்ம். நீ இதை கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நமக்குள் காடு இறங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. நம்மால் நகரத்திற்கு செல்ல முடியாது. அங்கு சென்றுதான் என்ன செய்வோம். எனக்கு பெண்கள் மோகம் என்றோ தணிந்து விட்டது. அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. பதவி, பட்டம் இதையெல்லாம் துச்சமாக மதிக்கிறேன். நமக்கு பட்டம் கொடுக்க யாருக்கு தகுதி இருக்கிறது? இடத்தை விட்டு நகராமல் அரசியல் செய்யும் ஆட்கள் நமக்கு பட்டம் கொடுக்க, நாம் அதை வாங்குவது வெட்கக்கேடு. லண்டன் சென்றால் என்ன செய்யலாம்? தினமும் ஒரு பார்ட்டி அல்லது பால் செல்லலாம். அங்கு சென்றால் என்ன நடக்கும்? எல்லோரும் நம்மைச் சூழ்ந்து கொண்டு நம்மிடம் கதை கேட்பார்கள். நாமும் நம் வீர சாகஸ கதைகளை சொல்ல வேண்டும். சொல்லி முடித்தவுடன், “ஜெப்ரி எவ்வளவு நன்றாக கதை சொல்கிறார்’ என்று பாராட்டுவார்கள். அதற்கு பிறகு ஒவ்வொரு பார்ட்டியிலும் நாம் கதை சொல்ல வேண்டும். நம்மை ஏதோ கூத்தாடி போல் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்களை மகிழ்விப்பதே நம் வேலை போல் நினைத்துக் கொள்வார்கள். எல்லோரும் சூழ்ந்திருந்து கதை கேட்டு நம்மைப் பாராட்டும்போது நன்றாகதான் இருக்கும். ஆனால் பிறகுதான் தெரியும் அவர்கள் நம்மை ஒரு வேட்டைக்காரனாக பார்க்கவில்லை. நம்மை ஒரு கதைசொல்லியாக பார்க்கிறார்கள் என்று. டேனியல் போன்றவர்கள் சில வருடங்கள் காட்டில் இருந்துவிட்டு இப்பொழுது கதை சொல்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் அவன் மேல் மோகம் கொண்டிருக்கிறார்கள். அவன் என்றோ கூத்தாடியாகிவிட்டான். நான் அப்படி மாறத் தயாராக இல்லை” என்று ஆவேசமாக முடித்தார்.

மறுபடியும் மௌனம் நிலவியது.

சமநிலைக்கு வந்தபின் ஜெப்ரி டேவிட்டை கேட்டார், “நீ லண்டன் சென்று விடலாமே? ஏன் இன்னும் இங்கு சுற்றுகிறாய்?” என்று.
டேவிட் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். பிறகு மெல்லிய குரலில், “என் மனைவியின் நிழல் என்னை இன்னும் துரத்துகிறது ஜெப்ரி. உங்களுக்கு நான் அவளை எவ்வளவு நேசித்தேன் என்பது தெரியும். அவளுடன் இருந்த அந்த மூன்று வருடங்கள் என்னால் மறக்க முடியவில்லை ஜெப்ரி. அவளை போல் என்னை நேசித்தவர்கள் யாரும் இல்லை. அவள் வேண்டாம் என்று சொல்லியும் நான் அவளை என்னுடன் காட்டிற்கு அழைத்து வந்தேன். அவள் சொல் கேட்டு லண்டனில் தங்கி இருக்க வேண்டும். அவள் என்னுடன் காட்டுக்கு வந்து, என்ன என்று தெரியாத கொடிய நோய் தாக்கி, அழுகி செத்தாள்.” டேவிட் கண்களில் கண்ணீர் துளிகள். “அவள் டேவிட் டேவிட் என்று முனகிக்கொண்டிருந்தது இன்னும் என் காதில் ரீங்கரிக்கிறது. எவ்வளவோ சாதனைகள் செய்த நான் அவளைக் காப்பாற்ற முடியாமல் தவித்தேன். இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறேன்”

மெல்லிய குரலில் ஜெப்ரி கேட்டார், “அவள் நினைவு உன்னை வாட்டுகிறது என்றால் அதே காடுகளில் எதை எதிர்பார்த்துச் சுற்றுகிறாய்?”

“மரணத்தை. இங்குதான் என் மரணம் இருக்கிறது. ஆனால் அன்று நான் இந்தப் பகுதிக்கு வந்து பார்த்தபோது என்னை பயம் கவ்விக்கொண்டது. மரணத்தை நான் வரவேற்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால்…” திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை அகல விரித்து அங்கு இங்கும் பார்க்கலானான் டேவிட்.

ஜெப்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. டேவிட்டைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார். டேவிட் பதில் சொல்லாமல் இங்கும் அங்கும் வெறி பிடித்தவன் போல் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஜெப்ரி அதை உணர்ந்தார்.

காடு நிசப்தமாக இருந்தது.

காட்டுக்குள் செல்பவர்களுக்கு தெரியும் காடு எப்பொழுதும் தூங்குவதில்லை, காடு எப்பொழுதும் நிசப்தமாக இருந்தது இல்லை என்று. ஆனால் இப்பொழுது விவரிக்க முடியாத அமைதி குடிகொண்டிருந்தது. ஓர் இலையும் அசையவில்லை. பட்சிகளின் குரல் இல்லை. பூச்சிகளின் ரீங்காரம் இல்லை. நதியின் சலசலப்பும் இல்லை.

சட்டென்று தன் துப்பாக்கியை எடுத்து வானை நோக்கிச் சுட்டார் ஜெப்ரி. அதன் எதிரொலி காடு முழுக்க கேட்டது. ஆனால் ஒரு பறவையும் மரத்தை விட்டுப் பறக்கவில்லை. எதிரொலி அடங்கியபின் மறுபடியும் மயான அமைதி.

ஜெப்ரி மரத்தின் கீழே நின்றிருக்க ரைஃபிலைக் கையில் ஏந்தி முன்னே சென்றான் டேவிட். நூறடி சென்ற பின்பு சட்டென்று நின்றான். அவன் முன் பச்சை நிறத்தில் புகை போன்ற ஒன்று தோன்றியது. அதை உருவம் என்று சொல்லமுடியாதபடி அதன் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது.

டேவிட் ரைஃபிலை உயர்த்தி அதைச் சுட தயாரானான். அப்பொழுது அவன் உடல் வெடித்தது. வெடிக்கும் சப்தம் எங்கும் நிரம்பியது. வெடித்துச் சிதறிய உடலிலிருந்து ஒரே ஒரு காது பறந்து வந்து ஜெப்ரியின் முன் விழுந்தது.

வாழ்க்கையில் முதல் முறையாக ஜெப்ரியின் மனதில் பீதி உண்டானது.

இதைப் போல் அவர் என்றும் பயந்ததில்லை. பல மிருகங்களை, பல காட்டுவாசிகளை ஒண்டிக்கு ஒண்டி சந்தித்தபோதும் அவர் பயந்ததில்லை. ஆனால் இப்பொழுது பயத்தில் அவர் கண்கள் விரிந்தன. பச்சைப் புகை தன்னை நோக்கி வருவதை கண்டார். தன்னையும் அறியாமல் அவர் கண்கள் விரிவதை உணர்ந்தார். ‘படக்’ என்ற ஓசையுடம் அவர் இரண்டு கண்களும் உடலை விட்டு வெளியே விழுந்தன.

இவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்பி உட்காந்து கொண்டிருந்த ஜிம்முக்கு முன் கண்கள் இரண்டும் இல்லா ஜெப்ரியின் சவம் வந்து விழுந்தது. அதைப் பார்த்து கத்த ஆரம்பித்த ஜிம் பல மணி நேரம் நிறுத்தவில்லை. அவன் புத்தி பேதலித்தது.

பிணத்தை பார்த்த காட்டுவாசி பெண்கள் பலர் மூர்ச்சையானார்கள். பிணத்தை யாரும் தொடத் தயாராக இல்லாததால் அதன் மேல் விறகுகளைப் போட்டு பிணத்தை எரித்தார்கள்.

இனி அடுத்த பலி யார்?

(தொடரும்)

ஒளிப்பட உதவி – The Written Word

அமேஸான் காடுகளிலிருந்து- விதி வலியது

மித்யா

அத்தியாயம் 2 : விதி வலியது

கிறிஸ்டோ காட்டின் யாரும் புகுந்து வெளிவராத பகுதிக்குள் சென்று ஒரு அனகோண்டா துணையுடன் வெளியே வந்தான் eஎன்ற செய்தி காடு முழுவதும் தீ போல் பரவியது. அந்தப் பிரதேசத்தில் உள்ள குழுக்களுடன் போர் செய்து வந்த பிற குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு இந்த அதிசய மனிதனைக் காண வந்தார்கள். இவ்வாறாக, கிறிஸ்டோவிற்கு ராஜ மரியாதை கிடைத்த செய்தி ஜெப்ரி ஹைன்ஸ் காதுக்கு எட்டியது.

காட்டின் வேறொரு பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த ஜெப்ரி, கிறிஸ்டோ இருக்கும் இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முகாம் அமைத்து தன்னுடைய உதவியாளராகிய ஜிம் பார்சனை அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு வரச்சொன்னார். ஜிம் அங்கு சென்று நாம் முந்தைய அத்தியாயத்தில் படித்த விஷயங்களை அறிந்து கொண்டு அவற்றை ஜெப்ரியிடம் கூறினான். இதை கேட்டு அவர் பொரிந்து தள்ளினார்.

“இவர்கள் காட்டுவாசிகள், காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். மனிதனாக பிறந்துவிட்டால் கொஞ்சமாவது பகுத்தறிவு இருக்க வேண்டும். இவர்களுக்கு கொஞ்சம்கூட அறிவு இல்லையா? இந்த கட்டுக் கதையெல்லாம் உண்மையென்று நம்புகிறார்கள்? நம்மவர்கள் எப்படி இவர்களை முட்டாள்கள் ஆக்க வேண்டும் என்பதை நன்றாக கற்றுக்கொண்டிருகிறார்கள். இந்த சின்ன வயதிலேயே இவன் எப்படி ஏமாற்றி இருக்கிறான் பார் இந்த கிறிஸ்டோ” என்றார்.

இதற்கு ஜிம், “இல்லை சார். அவனை அனகோண்டா கொண்டு போட்டதை அவர்கள் நிஜமாகவே பார்த்திருக்கிறார்கள். அவன்…”

ஜிம்மை முடிக்கவிடாமல் ஜெப்ரி வெடித்தார், “உனக்கும் அறிவு இல்லையா? உன் அப்பாவிடம் உன்னை ஒரு ஆண்மகன் ஆக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்திருக்கிறேன். நீயோ இப்படி முட்டாள்தனமாக பேசுகிறாய். எனக்கு இப்பொழுது எழுபது வயது ஆகிறது. நான் ஐம்பது வருடங்களாக திரியாத காடு இல்லை. எந்த மனிதனும் கால் வைக்காத காட்டுக்குள் சென்றிருக்கிறேன். ஏன், சில இடங்களில் மிருகங்களே செல்ல அஞ்சும் காட்டுக்குள் சென்றிருக்கிறேன். நான் கண்டுபிடித்த நாடுகள், காடுகள் உலக வரைபடத்தை மறுபடியும் திருத்தி வரையும்படி செய்திருக்கின்றன. அப்படி இருக்கும் எனக்கே காது குத்துகிறார்களா?”

“அதில்லை சார்..”

“நீ வாயை மூடு” வீராவேசமாக கத்தினார் ஜெப்ரி. “அமேசான் காட்டுக்குள் ஏது புலி? எங்கிருந்து வந்தது சிங்கம்? அறிவு கெட்ட ஜென்மங்கள். புலியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இந்தியா செல்ல வேண்டும். சிங்கம் வேண்டும் என்றால் இந்தியாவோ, ஆப்பிரிக்காவோ செல்ல வேண்டும். இந்த அமேசான் காட்டுக்குள் பெரிய மிருகங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. விட்டால் இங்கு கரடியும் யானையும்கூட இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். இந்தக் காட்டுவாசிகளுக்கு புலி என்றால் என்ன, சிங்கம் என்றால் என்ன என்று எதுவும் தெரியாது. அவர்கள் அவற்றைப் பார்த்திருந்தால்தானே! அவன் என்ன சொன்னானோ, இவர்கள் என்ன கேட்டார்களோ? மொத்தத்தில் அவர்களை கிறிஸ்டோ நன்றாக ஏமாற்றிவிட்டான்”

ஜெப்ரி சொல்வதில் உண்மையிருப்பதை உணர்ந்த ஜிம் ஒன்றும் பேசாமல் இருந்தான். இன்னும் பேசினால் பெரியவருக்கு கோபம் அதிகமாகும். ஆனால் மனதுக்குள் அவன் கிறிஸ்டோ ஒரு அதிசய பிறவி என்றே நம்பினான்.

“இப்பொழுது என்ன செய்யலாம் சார்?”

“அதை நான் சொல்கிறேன்” என்று டென்ட் பிளாப்பை நகர்த்திவிட்டு டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளே வந்தான். அவன் ஜெப்ரிக்கு நேர் எதிராக இருந்தான். ஜெப்ரி அமேசான் காடுகளில் இருந்தாலும் வெள்ளை த்ரீ-பீஸ் சூட் அணிந்திருந்தார். வெள்ளை தொப்பி, வெள்ளை தோல், வெள்ளை முடி, வெள்ளை மீசை, வெள்ளை தாடி என்று எல்லாம் வெள்ளையாக இருந்தார். டேவிட்டின் சதை இப்பொழுது காப்பி நிறத்தில் இருந்தது. காக்கி சபாரி சட்டை அணிந்திருந்தான். தடிமனான கருப்பு பெல்ட். காக்கி ஷார்ட்ஸ், பிரவுன் பூட்ஸ் மற்றும் வேட்டையாடுபவர்கள் அணியும் தடிமனான காக்கி நிற தொப்பி அணிந்திருந்தான். ஜெப்ரியை பார்த்தால் எல்லோரும் அவரை ஒரு வயதான பிரிட்டிஷ் தாத்தா என்று தான் சொல்வார்கள். டேவிட்டை பார்த்தவுடன் அவனை ஒரு சாகசக்காரன் என்று எல்லோருக்கும் புரியும். ஆனால் ஜெப்ரி அவனுக்கு குரு. அவருடன் பல எக்ஸ்பெடிஷன்கள் சென்றுதான் அவன் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.

“என்ன நீ இங்கே?” என்று ஆச்சரியமாக கேட்டார் ஜெப்ரி.

“நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். கூடவே நீங்க எதற்கு இங்கே வந்தீங்கன்னும் கேள்விப்பட்டேன். அதனால்தான் நீங்கள் இந்த காட்டுக்குள் செல்வதாக இருந்தால் உங்களுடன் கூட வரலாம் என்று வந்தேன்”

இதைக் கேட்ட ஜெப்ரிக்கு ஒரே மகிழ்ச்சி. ஜிம்மைப் பார்த்து, “பார். இவனைப் போல் இருக்க வேண்டும். அதனால்தான் அவன் புகழ் ஐரோப்பா முழுவதும் எனக்கு ஈடாக பரவியிருக்கிறது. நீயும் இருக்கிறாயே, எதற்கும் உபயோகப்படாமல்!” என்று திட்டிவிட்டு டேவிட் பக்கம் திரும்பி, “எப்போ கிளம்பலாம்?” என்று கேட்டார்.

“நான் சென்று ஒரு முறை அந்த இடத்தை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வருகிறேன். அந்தக் காட்டுவாசிகள் எனக்கு பழக்கம். அவர்களிடமும் விசாரித்துவிட்டு வருகிறேன். நீங்கள் பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு விலகினான் டேவிட்.

இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தபொழுது அவன் நடையில் வேகம் இல்லை. அவன் முகத்தில் குடிகொண்டிருந்த நம்பிக்கை இப்பொழுது காணாமல் போய்விட்டது. மெதுவாக டெண்ட்டுக்குள் நுழைந்து ஜெப்ரியை பார்த்து இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு டெண்ட்டை விட்டு வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து ஜெப்ரியும் வெளியே வந்தார், ஆனால் சிந்தனையில் ஆழ்ந்திருந்த டேவிட்டைப் பின்தொடராமல் டென்ட்டுக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

டேவிட் கொஞ்சம் தூரம் நடந்த பிறகு ஓரிடத்தில் நின்று தன் பாக்கெட்டில்லிருந்து சிகரெட் எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவனைச் சுற்றி உயரமான மரங்கள். பட்சிகள் கத்தும் சப்தம். மரங்களை ஊடுருவி வந்த சூரியன் திட்டு திட்டாக புல்வெளியில் படிந்திருந்தான். ஆனால் டேவிட் இதையெல்லாம் கவனிக்கவில்லை. முழு கவனமும் சிகரெட் புகையை உறிஞ்சுவதிலேயே செலுத்தினான். புகையை வெளியே விட்டபின் மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். மறுபடியும் நின்றான். மறுபடியும் புகை இழுத்து விட்டான். சட்டென்று கோபமாக சிகரெட்டை கீழே விட்டெறிந்து காலால் கசக்கினான். பிறகு சட்டென்று திரும்பி ஜெப்ரியிடம் வந்தான்.

“ஜெப்ரி. வேண்டாம். நாம் போக வேண்டாம்” என்றான்

“நீயும் ஜிம் போல் உளறுகிறாய்”

“உளறவில்லை ஜெப்ரி. நான் அங்கு சென்று பார்த்தேன். அந்த காட்டுப் பகுதி அமானுஷ்யமான ஒரு பகுதியாக எனக்கு தோன்றுகிறது. அங்குள்ள காட்டுவாசிகளுடனும் பேசினேன். என் உள்ளுணர்வு அங்கு போக வேண்டாம் என்று சொல்கிறது ஜெப்ரி”

“டேவிட் லிவிங்ஸ்டன்தான் பேசுகிறானா? ஜெப்ரி ஹைன்ஸ் மற்றும் டேவிட் லிவிங்க்ஸ்டன் என்பவர்கள் இப்பொழுது ஐரோப்பா முழுக்க ஹீரோக்களாக பார்க்கப்படுபவர்கள். நாம் செல்லாத காடு இல்லை, வெல்லாத நாடு இல்லை. அந்த ஜெர்மானியர்கள், ஸ்பானியர்டுகள், பிரெஞ்சு கோழைகள் நம்மை வழிபடுகிறார்கள். அப்படி இருக்க நாம் இருவரும் ஒரு சின்னப் பையன் சென்ற இடத்திற்குச் செல்ல பயப்பட்டோம் என்று தெரிய வந்தால் இவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? நமக்கு என்ன மரியாதை இருக்கும்? பாட புத்தகங்களில் நம் வாழ்க்கை வரலாறு வருவதற்கு பதில் ஏதோ ஒரு வார இதழில் நம்மை பற்றி கார்ட்டுன் வரும். நாம் செய்த சாதனையெல்லாம் ஏமாற்று வேலை என்று எழுதுவார்கள். இவ்வளவு செய்த பிறகு எல்லோர் கண்ணிலும் ஒரு ஜோக்கர் ஆக விருப்பமில்லை. நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. நான் அங்கு செல்வது உறுதி”

ஒரு கணம் யோசித்த டேவிட், “இந்தியாவில் சொல்வார்கள் ‘விதி வலியது’ என்று. அது யாரையும் விடாது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும். நானும் வருகிறேன்”

“அதே இந்தியாவில் ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்றும் சொல்வார்கள் என்று தெரியாதா? நாளை காலையில் நாம் கிளம்புகிறோம்” என்று உறுதியாக கூறினார் ஜெப்ரி.

“இது மதியை மீறிய விஷயம் ஜெப்ரி” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் டேவிட்.

விதி வலியதா மதி வலியதா என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஒளிப்பட உதவி – nolano.net

அமேசான் காடுகளிலிருந்து…

மித்யா

ஒன்று

ஜார்ஜ் ட்ருக்கர் என்பவர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ என்ற புத்தகம் பத்தொன்ம்பதாம் நூற்றாண்டு இறுதியில் வெகு பிரபலமடைந்து பல சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இந்தப் புத்தகத்தைத் தடை செய்யவும், அந்தத் தடையை எதிர்த்து பல வாசகர்கள் வீதியில் இறங்கினார்கள். இவர்களுக்கு எதிராக தடை கோரியவர்களும் வீதியில் இறங்கவே கைகலப்பு நடந்து பிறகு போலீஸ் தடியடி நடந்து பலர் காயப்பட்டு லண்டன் நகர வீதிகள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டன.

இந்தப் புத்தகம் கார்ல் கிறிஸ்டோ என்பவரின் இறுதி ஐந்தாண்டு கால வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. கிறிஸ்டோ என்பவர் 1850இல் பிறந்து 1882 வரை முப்பத்திரண்டு வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இருபத்தேழு வயது வரை சாதாரண இளைஞனாக இலக்கில்லாமல் சுற்றிய இவர், பல ஐரோப்பிய ‘எக்ஸ்ப்ளோரர்’ கதைகளைக் கேட்டு தானும் அது போல் ஏதாவது சாகசம் செய்ய வேண்டும் என்று எண்ணி அமேசான் காடுகளுக்கு 1877இல் புறப்பட்டார்.

அமேசான் காடுகளில் அங்குள்ள வனவாசிகள் துணையுடன் சுற்றிக்கொண்டிருந்தவர், எல்லோரும் அந்தக் காட்டின் ஒரு பகுதிக்குள் நுழைய மறுப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். விசாரித்ததில் அந்தப் பகுதியில் புலிகள், சிங்கங்கள், கரடிகள், அனகோண்டாக்கள் மற்றும் பிரான்ஹா மீன்கள் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பகுதிக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்றும், எல்லோரும் கோர மரணத்தை அடைந்தார்கள் என்றும் தெரிய வந்தது. இதையெல்லாம் நம்ப மறுத்த அவர், தான் அந்தக் காட்டுக்குள் சென்று உயிருடன் திரும்பி வருவதாக சவால் விட்டு, எல்லோரும் தடுத்ததை பொருட்படுத்தாமல், வனவாசிகள்கூட வர மறுத்ததைக் கண்டுக்கொள்ளாமல், அந்தக் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தார்.

அங்கே மரங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து சூரிய கிரணங்களை தடுத்து காட்டை இருளில் மூழ்கச் செய்திருந்தன. பறவைகளின் கூக்குரலும் பூச்சிகளில் இடைவிடாத கர்ணகடூரமான சப்தத்திற்கும் நடுவே வியர்க்க விருவிருக்க கிறிஸ்டோ நடந்து கொண்டிருந்தார். திடீரென்று புதருக்குள் சலனம் ஏற்பட, அது என்ன என்று கிறிஸ்டோ திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் மேல் ஒரு புலி பாய்ந்தது. இளைஞரான கிறிஸ்டோ சட்டென்று குனிய புலி உயரத் தாவிச் சென்று ஐந்தடி தாண்டி இறங்கியது. இறங்கியவுடன் சட்டென்று திரும்பி மறுபடியும் அவரை நோக்கி தாவி வந்துக் கொண்டிருந்தது. கிறிஸ்டோ ஓட்டம் பிடிக்க, புலி அவரை துரத்த, ஓடும் நதி முன் வந்து மாட்டிக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவர் மேல் வேகமாகப் பாயவும், இந்த முறை சட்டென்று தரையில் படுத்துக் கொண்டார் கிறிஸ்டோ. புலி அவரைத் தாண்டிச் சென்று ஓடும் நதியில் விழுந்தது. கீழே விழுந்து கிடந்த கிறிஸ்டோ எழுந்து நிற்க முடியாத அளவிற்கு முட்டியில் காயம் பட்டிருந்தது. இதை கவனித்த புலி நதியில் மெதுவாக நீந்திக்கொண்டு கிறிஸ்டோவை நோக்கி வந்தது. இனி தனக்கு மரணம்தான் என்று கிறிஸ்டோ எண்ணிக் கொண்டிருக்கையில் காட்டைப் பிளப்பது போல் புலியிடமிருந்து ஓர் ஓலம் எழுந்தது. முதலில் திடுக்கிட்ட கிறிஸ்டோவிற்கு நிலைமை மெதுவாக பிடிபட ஆரம்பித்தது. அந்தப் புலியை நதியில் இருக்கும் பிரான்ஹா மீன்கள் தின்ன ஆரம்பித்து விட்டன. அந்த வலி தாங்க முடியாமல் புலி கத்திக்கொண்டிருந்தது. மூன்று நிமிடத்திற்குப் பின் காடு நிசப்தமானது. புலியின் எலும்புக்கூடு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

தான் காட்டுவாசிகளின் சொல்லை கேட்டு நடந்திருக்க வேண்டும் என்றும் இனி இங்கிருந்து தப்பிச் செல்வது முடியாத காரியம் என்றும் கிறிஸ்டோ நினைத்துக் கொண்டார். நாலாபுறமும் காடு சூழ்ந்திருக்க அவருக்குத் திரும்பிச் செல்லும் வழி எதுவென்று தெரியவில்லை. போதாததற்கு முட்டியில் பலத்த அடி. இனி எல்லா பாரமும் இறைவன் மேல் போட்டுவிட்டு ஏதோ ஒரு திசையில் நடந்து செல்ல வேண்டும் என்று கிறிஸ்டோ முடிவெடுத்தார்.

மெதுவாக நொண்டிக் கொண்டு நதியோரமாக கிறிஸ்டோ நடந்தார். ஆழ்ந்த சிந்தனையில் நடந்து கொண்டிருந்தவர் ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கத்தை கவனிக்கவில்லை. சப்தம் செய்யாமல் தன் பிடரியை சிலிர்த்துக்கொண்டு அவரைச் சிங்கம் பின்தொடர்ந்தது. தன் இளமைக் காலம் பற்றியும், லண்டனில் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அருமையான தேநீர் அருந்திவிட்டு ஷேக்ஸ்பியர் நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த கிறிஸ்டோ தரைக்குத் தள்ளப்பட்டார். ஆம், கீழே விழுந்து உருண்டு மல்லாக்கப் படுத்திருந்த கிறிஸ்டோ, அந்தச் சிங்கம் தன்னைப் பார்த்து சிரிப்பது போலிருக்கக் கண்டார். இப்போது தனக்கு மரணம் நிச்சயம் என்று அறிந்த கிறிஸ்டோ சிங்கத்தைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தார்.

சிங்கம் அவரிடம் மெதுவாக வந்து அவர் கழுத்தைக் கவ்வ இருந்த நேரத்தில் தண்ணீரிலிருந்து ஒரு ராட்சத அனகோண்டா வெளியே பாய்ந்து வந்தது. அனகோண்டா வருவதை கிறிஸ்டோவோ சிங்கமோ உணர்வதற்குள் அனகோண்டா சிங்கத்தைச் சுற்றிக்கொண்டது. சிங்கம் பலம் கொண்ட மட்டும் போராட, அனகோண்டாவும் சிங்கமும் சகதியில் புரண்டன. கடைசியில் அனகோண்டாவின் அணைப்பைத் தாங்க முடியாத சிங்கம் உயிர் விட்டது. அனகோண்டா ஊர்ந்து வந்து கிறிஸ்டோவை சுற்றிக்கொண்டு, ஒரு பந்து போல் உருண்டு சென்று கிறிஸ்டோ எங்கிருந்து புறப்பட்டாரோ அதே இடத்திற்கு வந்து அவரை தன் பிடியிலிருந்து அவிழ்த்துவிட்டு மறுபடியும் காட்டுக்குள் சென்று விட்டது. இந்த நிகழ்வைக் கண்ட வனவாசிகள் வாயடைத்துப் போனார்கள்.

இதறக்கு பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஒளிப்பட உதவி – Shukernature

அவன் வருவானா?

மித்யா

fingerscrossed

ன்டா அவன் வருவானா?”

“வருவான்டா. நிச்சயமா வருவான்”

“மணி ஏழு ஆகப்போவுது. எப்போ வருவேன்னு சொன்னான்?”

“வருவான்டா வருவான். நிச்சயமா வருவான். அவனுக்கு நம்ம பணம் வேணும்”

“கை நடுங்குதுடா. சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்.”

“வந்து உக்காரு. நீ இப்படி அங்க இங்கேன்னு நடக்காத. போலிஸ்காரன் எவனாவது பாக்க போறான்”

“டேய். அவந்தானா அது”

“என்னங்க. நம்ப பையன் இப்போயெல்லாம் வீட்டுக்கு ரொம்ப ரொம்ப லேட்டா வரான். ஏன்னு கேளுங்க”

“சின்னப்பசங்க. அப்படித்தான் இருப்பாங்க. அதுவும் ஆம்பளப்பசங்க. இந்த வயசுலதான் ஜாலியா சுத்த முடியும். இப்போ லீவ்தானே. வருவான் வருவான்.”

“அதில்லீங்க. பக்கத்து வூட்டம்மா அவன் சிகரெட் புடிக்கறத பாத்தாங்களாம். இன்னிக்கி எங்கிட்ட சொன்னாங்க. நான் வச்சிருந்த காசும் காணோம். ஏதாவது தப்பு தண்டா பண்றதுக்கு முன்னாடி நீங்க ஒரு முறை அவங்கிட்டப் பேசுங்க”

“சும்மாப் படுடீ. ஆம்பள பசங்க சிகரெட் புடிக்கறது சகஜம்தான். நான் புடிக்கறேன். நாளைக்கு அவனும் பீர் குடிப்பான். இதெல்லாம் சாதாரணம். எல்லாம் கண்ட்ரோல்ல இருக்கணும் அவ்வளவுதான்”

“துட்டு கொணாந்தியா?”

“இந்தா ஐநூறு ரூபா”

“டேய். என்ன ஐநூறு ரூபா? ஒரு முறை மூந்து பாக்க பத்தாது இது. போயி சிகரெட் புடிக்கற வழியப் பாரு. இதுக்கு தானாடா நீ என்ன சீக்கீரம் வா சீக்கிரம் வான்னு பேஜார் பண்ண?”

“அடிக்காதண்ணே. அவன் ஐநூறு ரூபா தான் கொண்டுவந்திக்குறான்னு எனக்குத் தெரியாது.”

“நான் நாளைக்கு மீதி பணம் கொடுக்குறேன். இன்னிக்கி எனக்கு குடுங்க ப்ளீஸ். இன்னிக்கி எனக்கு வேணும். இல்லாம நான் போக முடியாது. ப்ளீஸ்…ப்ளீஸ்… நீ சொல்லுடா.”

“அண்ணே குடுண்ணே. நாளைக்கு பணம் கொணாந்து குடுத்துடுவான். ஏமாத்தற பையன் இல்லண்ணே அவன்”

“இப்படி எல்லாம் பிச்ச எடுக்கறவங்களுக்கு குடுத்துகின்னே இருந்தா என்ன எங்காளுங்க க்ளோஸ் பண்ணிடுவாங்க. பணத்த கொண்டா. அப்புறம் இத எடுத்துகினு போ.”

“உங்களுக்கு இருக்குற எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு வரணுமா? ஏன் உங்க புத்தி அப்படி போவுது?”

“ஏ. இன்னா? ரொம்பத்தான் பேசுற. நான் குடிக்கிறேன். நான் சிகரெட் புடிக்கிறேன். என் இஷ்டம். உனக்கு ஏதாவது குறை வச்சேனா? இல்லை அவனுக்குத்தான் குறை வச்சேனா?”

“அதுக்குன்னு பையன் என்ன பண்றான்னு கூட பாக்க மாட்டீங்களா?”

“இந்தக்காலத்து பசங்க ரொம்ப உஷாரு. நம்ம காலம் மாதிரி இல்ல. அவங்களுக்கு நல்லது எது கேட்டது எதுன்னு நல்லாத் தெரியும்.”

“அண்ணே குடுத்துட்டு போண்ணே. நான் அவனுக்கு ஜவாப்தாரி”

“போடா மயிரு. ஜவப்தாரியாம் ஜவாப்தாரி. நீ ஒரு… டேய். விடுறா பைய விடுறா டேய்”

“எனக்கு வேணும். எனக்கு வேணும். நான் காசு அப்புறம் தரேன். எனக்கு இப்போ வேணும். எனக்கு வேணும்.”

“டேய். விட்றா டேய். ரெண்டு பேரையும் கொன்னுடுவேன். விடுங்கா டேய். இன்னிக்கு உனக்கு சாவுதாண்டா மவனே. இனி நீங்க உயிரோட இருக்க முடியாது”

“ஏ. இங்க பார்ரா. யாரோ விழுந்து கிடக்குறான்”

“ஐயோ. ரத்தம்டா. கத்தியால குத்திக்குறாங்க போல இக்குது”

“உயிர் இக்குதா?”

“ஏ போவாத. இது போலிஸ் கேஸ்.”

“போயி போலிசுக்கு சொல்வோமா”

“மென்டலா நீ. நம்ப ஏதோ இருட்டா இக்குதுன்னு இங்க குடிக்க வந்தோம். போலிசுக்கு சொன்னா அவங்க நம்மள உள்ள தள்ளிடுவாங்கோ. யாரும் பாக்குறதுக்கு முன்னாடி கெளம்பிடுவோம்”

“என்னங்க இன்னும் அவன காணோம். அவன் இவ்வளவு லேட்டா வந்ததில்ல.”

“ஒரு ஆம்பள பையன் வெளில போயிட்டு லேட்டா வரான்னா அதுக்கு கவலை பட வேணாம். ஏதோ பொட்ட பிள்ளை வெளியில போயி இருட்டின பிறகும் வரலேன்னா பயப்படணும். செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருப்பான். கம்முன படு”

“அதில்லீங்க….”

“அத பார். யாரோ கதவ தட்டறாங்க. அவனாத்தான் இருக்கும்”