இரவின் எதிரொலிகள்

சிகந்தர்வாசி 

 

 

என்னை வெறுமை சூழ்ந்திருக்கிறது

காலை மாலை என்று அவருக்காகவே வாழ்ந்துவிட்டு
இப்பொழுது எனக்காக வாழவேண்டும் என்றால்
எப்படி வாழ்வதென்று புரியவில்லை

ஆனால் வாழ்க்கை நம்மை வாழவைத்துவிடும்

கடைசி இரண்டு வருடங்களுக்கு மேல்
நான் யார் என்பது அவருக்கு தெரியவில்லை
அவர் கூவியதெல்லாம் பால்யத்தில்
தன்னுடன் விளையாடிய லக்ஷ்மியின் பெயரையும்
தன் உதவியாளராக இருந்த கோவிந்தின் பெயரும்தான்

எங்களை பார்க்கும்போழுது அவர் கண்ணில் எப்பொழுதாவது
ஒளி தோன்றும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தோம்
ஆனால் யாரும் அறிய முடியாத வெறுமை மட்டுமே
அவர் கண்ணில் குடியிருந்தது

நினைவுகளை தோண்டி தோண்டி அவர் மேல் வீசினேன்
அவர் செவிவழி அவை சென்று, மனதைத் தொட்டு
அதில் எழும் ஒலி ஒளியாக மாறி அவர் கண் வழி
வெளிவரும் என்று நம்பினேன்

படகே இல்லா நடுக்கடலில்
எதை பிடித்துக்கொண்டு கரையேறுவது?

ஒளிப்பட உதவி – Matthews Gallery

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.