சிகந்தர்வாசி

காட்சிகள் – சிகந்தர்வாசி

எதையோ பார்த்து சிரிக்கும்
சுருக்கங்களே  முகமான கிழவி

தூரத்தில் 
கதவு மூடும் ஓசை

பச்சை புல்வெளியில் சூரிய கதிர்கள் பட்டு
சிதறும் கனவுகள்

வட்டமான சூரியனை 
சதுரமாக மாற்றும் கண்ணாடி

யாரும் திறக்கத கதவு ஒன்று

'அருகே வா' என்று இடைவிடாது 
அழைக்கும் நதி

இல்லாத ஒருவனை நினைத்து
ஏங்கும் பெண்ணொருத்தி

கிணற்று தண்ணீரை நோக்கில் 
வேகமாக விரையும் கல்

பழைய நினைவுகளில் 
உறைந்த புன்னைகை

ஆசைகள் மேல் தூசு படிந்த
புகைப்படம்

நான்காண்டுகளுக்குப்பின் – சிகந்தர்வாசி

  சிகந்தர்வாசி

அவர் கைத்தடி ஊன்றியபடி
மெல்ல நடக்கிறார்

கடை வாசலின் விரிசல் விழுந்த கண்ணாடியில்
அவர் பிம்பத்தைப் பார்க்கிறேன்

எனக்காக உழைத்த மனிதர்
என்னை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும்
என்று துடித்தமனிதர்
முதல் முறை நான் திரும்பியபொழுது
என்னைப் பெருமிதத்துடன் பார்த்த மனிதர்

இப்பொழுது தளர்நடை, வெள்ளை மயிர்
இளைத்துப் போன தேகம், தடித்த மூக்\குக் கண்ணாடி
வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து விட்ட மனிதன்
சுகதுக்கங்களைத் தாண்டி, வெறுப்பைக் கடந்து,
சுயநலத்தை என்றோ விலக்கி
உலகை அமைதியான கண்களுடன் நோக்குபவர்
என்று நினைத்துக் கொள்கிறேன்.
நானும் ஒரு நாள் இந்தச் சமநிலையை அடைவேனா?

“பக்கத்து வீட்டு நரசிம்ஹன் சட்டுன்னு ஹார்ட் அட்டாக்ல போயிட்டான்.
இன்னும் கொஞ்சம் தவிச்சு செத்திருக்கலாம் அந்த தேவடியா மகன்”

என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை
பார்த்துக் கொள்கிறார் பெரியவர்..

கண்ணுக்குள் காட்சி- சிகந்தர்வாசி

 சிகந்தர்வாசி

இந்த அறை சிறியதாக இருக்கிறது

நான் ஓடி ஆடிய காலத்தில் இவ்வளவு சிறியதாகவா இருந்தது?
சுவர்கள் இவ்வளவு அழுக்காகவா இருந்தன?

என் நினைவில் மின்னும் சுவர்கள் இங்கு இல்லை
விவரிக்க முடியாத ஒளியும் இல்லை
நினைத்துப் பார்த்தபொழுது கிடைத்த சுகம்
அறைக்குள் நிற்கும்பொழுது ஏன் இல்லை?

ஜன்னல் வழியே பார்த்தால் ஒரே புகை
வீதியில் பல வாகனங்கள்
இன்னும் இங்கு கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
இங்கா நாங்கள் விளையாடினோம்?

மறைந்த காலத்தை உயிர்ப்பிக்க
தொலைந்த இடத்தைத் தேடி வருவது போல்
கொடுமை வேறொன்றில்லை.

கண்ணாடி

 சிகந்தர்வாசி

கண்ணாடியில் எல்லாம் பளிச்சென்று தெரிகின்றன-
வயல்வெளி, ஓடை, மாடுகள்
உண்மையுலகை விட்டு நம்மை விலக்கி வைக்கிறது கண்ணாடி

தூரத்தில் கால் தடுக்கி விழும் குழந்தை
அதன் அழுகையை காண முடிகிறது
ஆனால் குரல் என்னை வந்தடைவதில்லை

குரல் இல்லா நினைவுகளைக் காண்கிறேன்
பல வருடக் காட்சிகள் வந்து மறைய
ஒளி பட்டு புண் ஆறிவிட்டிருக்கிறது

மறைந்த காலத்தை கண்ணாடியில்தான் பார்க்க முடியும்

என் விருப்பத்துக்குக் காலமும் வெளியும் விரிகின்றன
கண்ணாடியில்

இரவு நெருங்க
என் முன்னுள்ள உலகம் மெல்ல மறைகிறது

௦௦௦

ஒளிப்பட உதவி – devorahsperber.com 

பிக்னிக் புகைப்படம்

 சிகந்தர்வாசி

பெல் பாட்டமும் சிவப்பு கலரில் கருப்பு
கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்த
இளைஞன் ஒரு கையால் ஆலமரத்தின்
விழுதைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறான்

இன்னொரு கை வானத்தை நோக்கி உயர்ந்திருக்க
டார்ஜான் போல் கத்த வாய் பிளந்திருக்கிறது

கீழே நின்றிருக்கும் எல்லா பெண்களும் அவனைப்
பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
எல்லோர் கண்களின் ஒளியும் அவன் மீது
பட்டுச் சிதறுகிறது

சிவப்பு கலர் பாண்ட்டும் வெள்ளை கலர் அரைக்கை
ஷர்ட்டும் அணிந்த அம்மாவின் பார்வையும்
அவன் மேல்தான் படிந்திருக்கிறது

ஆனால்

சுற்றியிருக்கும் பெண்கள் போல் அல்லாமல்
அவள் கண்களில் ஒரு பெருமிதம் தெரிகிறது
மற்றவர்கள் போல் அவள் உரக்கச் சிரிக்கவில்லை
ஆனால் அந்த கண்கள் அவனையே….

நான் புகைப்படத்தை உற்றுப் பார்க்க பார்க்க
அம்மா மனுஷியாக மாறிக்கொண்டிருக்கிறாள்

– சிகந்தர்வாசி