பெல் பாட்டமும் சிவப்பு கலரில் கருப்பு
கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்த
இளைஞன் ஒரு கையால் ஆலமரத்தின்
விழுதைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறான்
இன்னொரு கை வானத்தை நோக்கி உயர்ந்திருக்க
டார்ஜான் போல் கத்த வாய் பிளந்திருக்கிறது
கீழே நின்றிருக்கும் எல்லா பெண்களும் அவனைப்
பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
எல்லோர் கண்களின் ஒளியும் அவன் மீது
பட்டுச் சிதறுகிறது
சிவப்பு கலர் பாண்ட்டும் வெள்ளை கலர் அரைக்கை
ஷர்ட்டும் அணிந்த அம்மாவின் பார்வையும்
அவன் மேல்தான் படிந்திருக்கிறது
ஆனால்
சுற்றியிருக்கும் பெண்கள் போல் அல்லாமல்
அவள் கண்களில் ஒரு பெருமிதம் தெரிகிறது
மற்றவர்கள் போல் அவள் உரக்கச் சிரிக்கவில்லை
ஆனால் அந்த கண்கள் அவனையே….
நான் புகைப்படத்தை உற்றுப் பார்க்க பார்க்க
அம்மா மனுஷியாக மாறிக்கொண்டிருக்கிறாள்
– சிகந்தர்வாசி