– வேல்முருகன். தி –
‘டூ நாட் என்டர்’ போட்ட போர்டு எங்களை வரவேற்றது நெருங்கி பார்த்த போது கன்னிவேடி மற்றும் எலும்பு கூடு படம் இரண்டிலும் மணல் படிந்து மங்கலாகத் தெரிந்தது.
சுற்றி கம்பி வேலி இட்டிருந்தது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதைச் சொல்லாமல் சொல்லியது. டெசர்டில் வண்டி தடமே இல்லாத தனித்த பகுதியாக தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இருக்கும்.
பாலைவனத்தில் வளரும் ஒட்டகம் மட்டுமே திங்கக் கூடிய முட்செடி காய்ந்தும் இளம் பழுப்பாகவும் குத்து குத்தாகவும் பரவி கீழிருந்த மணலை மூடி இருந்தது.
இருவரும் கம்பி வேலியை ஒட்டி பாதி தூரம் நடந்து வந்திருந்தோம். சாம்பல் பூத்த வானம். ஒரே வெய்யில். அலைஅலையாக இறங்கியது காற்று. அதன் மேல் மணலை அள்ளி வீசியது. அக்காற்றே சுழன்று சுழன்று மேலேற தூசும் சில பாலித்தீன் பேப்பர்களும் வட்டமிட்டன. பருந்தைப் போல இருந்தது கருத்த
பாலித்தீன் பை ஒன்று.
அதற்குள் உதடுகள் உலர்ந்து நா வறண்டு தாகமெடுத்தது. இரண்டு இடங்களில் சிவப்புக் கொடி கம்பியில் கட்டியிருந்து. சமீபத்தில் கட்டியிருக்க வேண்டும் புதிதாக இருந்தது.
’சூப்’ என்றார், அபுஅலி என்ற பாகத் அல் மியாஸ். எனது மேலதிகாரி. குவைத்தின் பூர்வகுடி. நல்ல ஆறே கால் அடி உயரத்தில் முடி எல்லாம் சுருளாக பிரம்மராட்சசன் போல் இருப்பார். குரலும் அதற்கேற்ற மாதிரியே இருக்கும். முதல் தடவை கேட்டால் பயத்திலே எல்லாம் நடப்பதற்கான சாத்தியம் உண்டு.
பார்த்த போது அந்த சிகப்பு கொடிகளுக்கு அருகில் மணல் பாருகளில் தங்கும் நரிகளின் குகை முகப்பு போல கருப்பாக ஒத்த அளவுள்ள பொந்து போன்ற தூவாரம் தெரிந்தது. அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகளை மண்ணில் மிக நேர்த்தியாக புதைத்து வைத்து இருக்கின்றனர். இரண்டு டாங்கையும் இணைக்கும் பங்கர் உள்ளது என்றார் அபுஅலி.
பிறகு அரபி கெட்ட வார்த்தையில் சதாமை திட்டினார்.
நான் உணர்ச்சியை மறைக்க பல்லை கடித்து திரும்பினேன்.
சதாம் தற்போது மாட்டிக் கொண்டான். குவைத்தை ஆக்ரமித்த போது அவனால் ஆன இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மக்கள் எல்லாம் நடோடிகளாய் அலைய வைத்தான். 800 ஆயில் கிணறுகள், 4 GCகள் எரிக்கப்பட்டன பொருளாதாரம் அதள பாதளத்திற்குச் சென்று விட்டது. எல்லாம் சரியாக்க 5 பில்லியன் தினார் ஆனது.
தொலைபேசி ஒலிக்க தொடங்கியதும் எடுத்து பேசி விட்டு, ’இப்ப பாரு கடவுள் தண்டித்து விட்டார். அதா அல்லா கரீம்.’ என்றார்.
இந்த வரைபடத்தில் உள்ள மாதிரி நீ எனக்கு இந்த இடத்திற்கு வருவதற்கு பாலைவனத்தில் ரோடும், சுற்றிலும் அகழ்ந்து டாங்கிகளை வெளியில் எடுப்பதற்கும் உதவ வேண்டும் என்ற போது அதிர்ச்சியில் அதில் உள்ள ஆபத்தை எண்ணி மனம் உறைந்து எனக்கு பேச்சே வரவில்லை.
மொத்த இடமும் சர்வே செய்து எத்தனை நாள் ஆகும் என்று ரிப்போர்ட் நாளைக்கு வேண்டும் என்று சொல்லி அவர் வண்டியில் ஏறிச் சென்று விட்டார்.
எனது GMCல் ஏறி அமர்ந்து தண்ணீரை எடுத்தேன். வண்டி ஆடிக் கொண்டு இருந்தது. மனம் ஆடி பயப்படுகிறாயா என்று கேட்பது போல் அனிச்சையாய் இல்லை இல்லை என்று தண்ணீரை குடித்தேன்.
திரும்ப கீழே இறங்கி நின்று பார்த்த போது பைப் லைன் எல்லாம் எறிந்து முங்கில் போல் வளைந்து உருக்குலைந்து கிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆயில் கிணறுகள் எரிந்து கிடந்தன. மண் எல்லாம் குருடாயில் படிந்து காய்ந்து ஒரே கறுப்பாக காய்ந்த சாக்கடை போல் தெரிந்தது.
தூரத்தில் தெரிந்த GC 14 முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. திரும்பிய எனக்கு டாங்கி இருந்த இடம் அமானுஷ்யமாக தெரிய அப்படியே இரண்டு
துவாரமும் நினைப்பு வந்து அச்சமூட்டயது. வந்து வண்டியை நகற்றினேன். இலக்கு இல்லாமல் வண்டி முன்னொக்கி ஒடியது.
ஆழ்மன சிந்தனை அந்த இடங்களில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்று போய்க் கொண்டிருந்தது. கம்பேனிக்கு தெரியப்படுத்தனும் என்று யோசிக்க யோசிக்க சிந்தனையில் குமார் வந்தார்.
குமாரைப் பார்க்க மேனேஜர் மாத்யுடமிருந்து போன் வந்தது. அடான் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி சென்ற போது வாயிலில் வந்து நின்று அழைத்து சென்றார். நான் குமாரை பார்த்து பதறிய போது எல்லாம் முடிந்து இருந்தது. புதுத் துணி மாத்தியிருந்தனர் பார்த்தவுடன் ஐிப்பை இழுத்து மூடி உள்ளே கொண்டு சென்றனர்.
என் கையைப் பற்றி ’இனி கம்பெனி பார்த்துக் கொள்ளும் நீ சென்று கிளையன்டுக்கும் நம்ம ஆட்களுக்கு தெரியாமல் வேலையைப் பார்த்துக் கொள்’ என்றார். நான் திகைத்து ஒன்றும் புரியாமல் திரும்பினேன். கூடவே வந்து குமாரின் டைம்ஷிட்டை வாங்கி சென்றார்.
சிந்தனை முழுவதும் குமாரைச் சுற்றியே வட்டமிட்டது. குமார் குவைத்தில் எங்க கம்பேனிக்கு வந்தது டிரைவராக. வந்த புதிதில் எங்களுக்கு வண்டி பழகவும் வேலை சம்பளம் இல்லாத அந்த மூன்று மாதமும் சமைப்பது நேரப்போக்குக்கு பழைய கதையை சொல்லுவது என்று இருப்பார்
அவர் இருக்கும் இடம் கலகலப்பா இருக்கும். வேலை ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும், ஒரு நாள் காலை அவர் டைம் ஷிட்டை கேட்டுப் பெற்று பார்த்து அதில் கம்மியாக இருப்பதாக கை நோட்டை காட்டினார். டைரியில் அந்த குறிப்பிட்ட தேதியை காட்டி சரியாக பாருங்கள் என்றேன். நம்ம ஆட்கள் எப்போதும் மற்றவர்களுக்கு தான் செய்வார்கள் என்றார்.
எனக்கு திடீர் கோவம் தலைக்கேறி விட்டது. “உங்களுக்கு குறைத்து போட்டு விட்டாதாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். எல்லோரும் ஒன்று தான்” என்றேன் சிறிது கடுமையாக.
முகம் வாடிப் போனார். மனம் கேட்காமல் அன்று மாலையே ஒவர் டைம் இரவு 8 மணி வரை அளித்தேன். அன்று அதிகாலை 3 மணிக்கு எனது செல்பேசி நிற்க்காமல் ஒலித்தது. எடுத்தப்போது ’குமார் கட்டிலில் இருந்து விழுந்து விட்டார் பேச்சு மூச்சு வரவில்லை உடன் வர வேண்டும்’ என்றார் வார்டனும் சூப்பர்வைசர் ராஐூம்.
ஒடிப் போய் பார்த்த போது சுத்தமாக ஒன்றும்மில்லை. கையைத் தொட்டு பார்த்தேன். உடம்புச் சூடு இருந்தது. மூச்சு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வார்டன் ஏற்பாடு செய்து உடன் அனுப்பி விட்டார்.
லேபர் கேம்ப் முழுவதும் பரபரப்பாகி எல்லாம் கூடி விட்டனர், வார்டனும் நானும் ரூம் சென்று பார்த்த போது அவர் படுக்கை கலைந்து இருந்தது. விசாரித்த போது’ கடுமையாக தும்மிக்கொண்டு குப்புற விழுந்து விட்டார். நாங்கள் பார்த்த போது கால் மட்டும் அசைந்தது பிறகு அதுவும் இல்லை’ என்றனர்.
கம்பெனி பார்த்து கொள்ளும் என்று சொல்லி விட்டு இப்ப இன்சூரன்ஸ் கிடைக்க வில்லை முயற்சிக்கிறோம் என்கிறார்கள். வீட்டினர் தொடர்ந்து போன் செய்து விட்டு கடிதம் எழுதுகிறார்கள்.
யாருக்காவது பாதிப்பு என்றால் கம்பேனி செய்யுமா?
சிந்தனை மாறி சுதாரித்த போது வண்டி முற்றிலும் எரிந்த GC 14 முன் பக்கம் வந்திருந்தது. நிறுத்தி பார்த்தேன்.
சூளையில் அதிக சூட்டில் வெந்த பானைகள் போல் குருடாயில் டேங்க் எல்லாம் வளைந்து கிடந்தன. பிளாட்பாரம் எக்யுப்மென்ட்கள் எல்லாம் சூட்டில் வெடித்துக் கிடந்தன, தீப் பற்றிக் கருகிய உடல்கள் போல. பார்க்க முடியவில்லை. மனம் சிந்தனையில் ஆழ்ந்து குழம்பி, எரியும் போது ஆட்கள் இருந்து இருப்போர்களோ என்று நினைத்து வண்டியை திருப்பி விரட்டினேன்.
எதிரில் வண்டி லைட்டைப் போட்டு நிறுத்தும்படி சைகையை பார்த்து வேகத்தை குறைத்து ஒரம் கட்டி பார்த்த போது, உதுமான் அலி எங்க சேப்டி ஆபிசர், ஊர்க்காரர் அனுபவம் முழுவதும் நெற்றியில் கோடாய் மிக கோவத்துடன் வரவேற்றார்.
’வணக்கம் சார்’
’சலாம் இருக்கட்டும் என்ன நினைச்சுகிட்டு இருக்க’ என்று எகிறினார்
’இல்ல சார் அபுஅலி கருப்பன் புதிய தலைவலிய குடுத்துட்டான் நான் உங்கள பார்க்க தான் வந்துட்டு இருந்தேன்’
’இல்ல வாப்பா. இம்மாம் வேகம்லாம் வேண்டாம் குடும்பம் இருக்கு’
’சரி சார்’
’என்ன தலைவலி வாப்பா அது’ என்றார் மூக்கு கண்ணாடியை சரியாக்கிக் கொண்டே.
’சார் வண்டிய விட்டு பூட்டி வாங்க பத்து நிமிஷம் பார்த்துடலாம்’
’ஏன் வாப்பா எப்ப ஊருக்கு’
’அத ஏன் சார் கேட்கறீங்க, மாத்யு நான் ஊருக்கு போனா பார்க்க வேற ஆளு வேணும்ன்னு வெயிட் பண்ண சொல்றாரு’
’உங்களுக்கு தான் தெரியும ஈராக்க நேட்டோ அடிக்க ஆயத்தமான போது இரா பகல் பாராமல் பாக்காம எல்லா GC க்கும் பயர் இன்ஜினுக்கு சுற்றி வரவேண்டி ரோடும் ஆபரேஷன் டீமுக்கு வேண்டி பங்கர் ரெடி பண்ணி தந்தோம்’
’நீங்க ஊருக்கு போயிருந்திங்க’
’வாப்பா ஒரு எமர்ஜென்சி அதான்’
’நாங்க இங்க சண்டை நடக்கும் போதும் எமர்ஜென்சி பாஸ்ல வேலை பார்த்தோம்’
’தெரியும் வாப்பா எப்படியா சாமளிச்சிங்க’
’சண்டை தொடங்கிய முதல் நாள் இதே அபுஅலி கருப்பன் அவன் வண்டில என்ன ஏத்திகிட்டு எல்லாம் GCயும் ஈஸ்ட் குவைத் முழுவதும் பார்க்கனும்னு சுத்துறான். புர்கன் ஏரியா வந்ததும் வீட்டிலேருந்து போனு. மனைவி சிதம்பரம் போயி அங்கிருந்து பண்றாங்க. டிவில பார்த்தேன். எல்லாம் ஊருக்கு வராங்க நீங்களும் ஊருக்கு வாங்க-கிறாங்க நான் பயப்படாத பயப்படாத நல்லா இருக்கேன் என்று சொல்றேன். இங்கே ஒரே சைரன் சத்தம் போன் கட்டாயிடுச்சி’
அப்ப GC 18, BS 140க்கு நேரா வந்திருந்தோம் அது இரண்டுலேருந்து பயங்கர சத்தத்துடன் ஊம்னு ஆரம்பிச்சு சைரன் சத்தம் தொடர்ந்து கேட்குது. கருப்பன் வண்டிய திருப்பி டெசர்ட்ல இறக்கி ஒட்டறான் இரண்டு சைடும் கிளாஸை இறக்கி, எல்லா சூப் சூப்னு மானத்தை காட்டரான்.
அதிர்ச்சியில மேல பார்த்துகிட்டு வரேன். மனதில் பல சிந்தனை ஒடுகிறது ஒடுது பையனை பார்க்க முடியுமா வந்து ஒன்றறை வருடம் ஆச்சு. வண்டி குழியில விழுந்து ஒரு பக்கம் சாய்வாக சென்று நிமிர்கிறது.
சதாமை திட்டரான் கருப்பன். ரெண்டு மூணு நிமிஷத்துல அப்படியே சைரன் சத்தம் சுத்தமாக நின்னு போய் ஒரே நிசப்தம். அதிர்ச்சில ஒன்றும் புரியல. குனிஞ்சு ரேடியாவ எடுத்து ரிசிவர்ல ’பகாத் அல் மியாஸ் ஒவர்’ ’பாகத் அல் மியாஸ் ஒவர்’ என்றதும் எதிர் முனையில் இருந்து ’அபுஅலி மூமூஸ்கில் ஒவர் , மூமூஸ்கில் ஒவர்’
அபுஅலி இந்த கலாம் டெலிபோன் என்றனர் வல்லா அதா அல்லா கரீம்’
’என் செல்போன் திரும்ப அடிக்குது.மனைவி என்னங்க கட்டாயிடுச்சி பிரச்சினை
அதிகம்னு சொல்ராங்க வர பாருங்க’
’வச்சிடட்டுமா’
’பையன்ட்ட குடு’
’த பையன்ட்ட பேசுங்க,பேசு அப்பா அப்பா’ என்றாள்
ஒன்றரை வயதில் விட்டு வந்தது ’அப்பா பத்திரம்! பத்திரம்பா!’
கண்ணில் நீர் கசிகிறது எனக்கு
அதா பச்சா என்கிறார் அபுஅலி ஆமாம் என்று தலையாட்டி கொண்டு பயப்படாதே வந்துடறேன் என்று சொல்லி வைத்தேன்.
என்ன சொல்றான்னு கேட்கிறான் கருப்பன்.
நான் கண் நிறைந்து பத்திரம்பானு எல்லாருக்குமான வார்த்தைய சொல்ரான் என்று சொன்ன உடன் ‘வல்லா அதா அல்லா கரீம்’ என்றார் அபுஅலி.
மறுநாள் அபுஅலி, நேத்து நாம வந்தப்ப வந்த மிஷேல் தான் பேட்ரியாட் அடிச்சப்ப மீனா அப்துல்லாவுல்லா எரிந்து விழுந்துச்சுன்னு சொல்றான். அதிர்ச்சியில் எனக்கு ஒன்றும் சொல்ல முடியல.
’வப்பா முதல் நாள் மாத்திரம் இரண்டு விழுந்துச்சுனு சொன்னாங்களே’
’பர்ஸ்ட் வந்தது மீன அப்துல்லாவிலும் இரண்டாவது மிஷேல் ஐகராவில உழுந்துச்சு சார் பேட்ரியாட்டோட கொஞ்சம் டைமிங் மிஸ்ஸாயிருக்கு. பிறகு எல்லாத்தையும் கிளம்பும் போதே அடிச்சுட்டானுங்க. ’அதான் TV பார்த்து இருப்பிங்களே’
’ஒரே ரூமர் அதிகம்பா’
’ஆமாம் சார் நடந்த 25 நாளும் ஒரே கதை தான்’
’ரோடு வெறிச்சொடிக் கிடக்கு. குவைத் அரசு நாட்ட விட்டு யாரும் போக அவங்க மக்களுக்கு தடை போட்டுடூச்சு. முத வாரம் மட்டும் பயங்கரமா குவைத்தாலதான் சன்டையே அதனால குவைத்த சதாம் நாசம் பண்ணுவான்ங்கற பயம் எல்லார்டியும் இருந்தது. அப்புறம் BBC பார்த்து போர் நிலவரம் தெரிஞ்சது அதுக்கு பிறகு தான் ஐனநடமாட்டம் சகஐ நிலைமைக்கு திரும்புச்சு.
’வாப்பா ஈராக் ஆள் எடுத்தாங்களே அதுல போயிருக்குலாம்’
’வாய்ப்பு வந்துச்சி அங்கு ரோடும் பாலமும்கட்டி கொடுத்தா மொத்தத்தையும் அள்ளி
போவதற்க்கா எனக்கு விருப்பமில்லை சார்’
’நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் உலகிலேயே விவசாயம் தோன்றியது ஈராக் தான் அந்த மக்கள் ரோடில் கையேந்த வச்சிட்டானுவ’
’யூஃப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றை ஈராக் தேசமே அன்றைய மெஸப்பட்டேமியா சார்’
’மிக முக்கிய உணவுப் பயிர்களான கோதுமை, பார்லி, ரை, யூஃப்ரிட்டீஸ் – டைக்ரீஸ் நதிச்சமவெளிகளில் தோன்றியதாகச் சொல்லி உலக வரலாற்று ஆய்வாளர்கள்
நடக்கும் அநியாயத்தை பார்த்து எழுதுறாங்க. மேலும் இந்த குவைத் வழியாக தான் கொண்டு போறான். ஒரு டிராக் ரோடு முழுவதும் அவனுங்க வண்டி போக ஒதுக்கி விட்டாங்க, நடந்த அநியாயத்தை பேப்பர்ல புக்ல பார்த்துட்டு எப்படிச் செய்ய முடியும்’
’சதாம் என்னிடம் ஒன்றுமில்லை சொன்ன பிறகு அடிச்சு பிடுங்கிட்டானுவலே நியாமா சார்’
’பெரிய அநியாயம்பா எல்லாரையும் ரோட்டில் நின்று கையேந்த வச்சிட்டானுவ.
வுடு அத. மனசு கஷ்டமா இருக்கு’
’ஏன் வாப்பா, இன்னும் எவ்வளவு தூரம் போவனும்’
’வந்துட்டுது சார். இறங்கி நடந்துதான் பாக்கனும்’
’கேஸ் நாத்தம் அடிக்குது வாப்பா’
’ஆமாம் சார் சுற்றி இருக்குற எல்லா எண்ணெய் கிணறுகளையும் அழிச்சு இருக்கானுவ, அதில இருந்து வரும் சார்’
’வாப்பா, கேஸ் மானிட்டர் வண்டியில இருந்தது எடுத்து வந்து இருக்கலாம்.
பர்மிட் இல்லாம ஒரு வேலையும் செய்ய கூடாது புரியுதா’
’சார் நீங்க முதல்ல பாருங்க’
அச்சமயம் பார்க்காத மறுபுறத்திலிருந்து வந்தோம்.
’சார் ரெண்டு கொடி தெரியுதா அதுக்கு பக்கத்தில் பாருங்க தூவாரம் தெரியுதா’
’ஆமாம் வாப்பா அதுலேருந்து நாய் வருது பாரு’
’சார் நாய் இல்லை நரி. ஆமாம் சார். முன்னாடி பார்த்தப்ப மனசார நினைச்சன் நரி குகை மாதிரி இருக்குன்னு.
’இந்த மாதிரி குகை முன்னாலே பார்த்திருக்கியா’
’ஆமாம் சார். வெள்ளாத்து கரையோரம் கீரிப்பள்ளம் வயலுக்கு போவோம் அப்ப நரி நத்தை நண்டுவல மேயும் நம்மள பாத்துட்டுதுனா இந்த மாதிரி கரை பாருல டப்புன்னு ஒடி புகுந்துடும். நாம பார்க்காத போது அப்படியே நானல் வழியாக வெளியே வரும். ஏன் வாப்பா எனக்கு ஒன்னும் தெரியலையசார் அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகள், இரண்டையும் இணைத்து பங்கர் இருக்காம்.
’வாப்பா நரிவ வருது நிச்சயம் ஆளுவ செத்து இருப்பாங்க’
’என்ன செய்யனுமாம் கருப்பனுக்கு’
’மெயின் ரோடில் இருந்து ரோடு போட்டு வந்து இதுல கனைக்ட் பண்ணி டாங்கிகளை சுற்றி நோன்டி தர சொல்ரான் சார்’
’இது நம்ம வேலையே இல்ல வாப்பா நாம செய்ய வேண்டாம். நான் ஐார்ஐிகிட்ட பேசறேன். வேணுமுன்னா ஒனர் அல் மூசாரிய விட்டு பேச சொல்லும்’
எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது எப்படியாவது விட்டு போனா போதும் என்றது
மனம் உள்ளுக்குள்.
வெளியில் இருந்து பார்பவர்க்குத் தெரியாத வகையிலும் அங்கு இருந்த பார்த்த போது
சுற்றி இருந்த அனைத்து GC களும் 1,2,9,11,18 & 22 தெரியும் வண்ணம் இடம் தேர்வு செய்து அமைக்க பட்டிருந்தது.
’வாப்பா சதாம் குவைத்தை அவன் வச்சிக்கனுமுனுதான் மத்த GCக்கள விட்டு வச்சான்’
’ஆமாம் சார்’
’பின்ன இதெல்லாம் யார் அழிச்சது சார்’
’என்னப்பா தெரியாத மாதிரி கேட்கற எல்லாம் நேட்டோ தான்’
’வண்டிக்கு வந்ததும் நீ மேத்யுகிட்டச் சொல்லிடு. நான் போயி பேசி தகவல் சொல்றேன்’
’சரி சார்’
அப்போது மார்ச் மாதம். மாதத் தொடக்கத்தில் வரும் இளவெயிலும் குளிருமான காலை நேரத்தில் அபுஅலியுடன் சென்று கொண்டு இருந்தேன். புது மிட்சுபிஷி பஐிரோ வண்டி மெல்ல அகமதி மெயின் ஆபிசில் இருந்து வெளியேறி புர்கன் செல்லும் மெயின் ரோடில் வேகம் பிடித்தது.
வெளியில் பார்த்த போது வேலைக்கு செல்ல சாரியாக வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. மிக்காலும் வண்டியில் ஒருவரே வீற்றிருந்தனர். வண்டி செக்யூரிட்டி கேட் நெருங்கிய போது, அபுஅலியின் நண்பர் நின்று இருந்தார். புர்கன் ஏரியாவின் செக்யூரிட்டி கெட் அவர்.
நிறுத்தி சலாம் சொன்னோம். இருவரும் அவர்கள் பழக்கப்படி மூக்கை உரசிக்கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். பேச்சு வேலையைப் பற்றி திரும்பியது. ’வல்லா முஸ்க்கிலா’ என்று அடிக்கொருதரம் சொல்லி கவலை கொண்டு
சதாம் குவைத்தை ஆக்ரமித்த போது விட்டு சென்ற ராணுவ டாங்கிகளை எடுத்து அந்த இடங்களில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க வேண்டும்
என்று ஆர்டர் வந்திருந்தை சொல்லி வருத்தப்பட்டு பேச்சு வளர்ந்து கொண்டு இருந்தது.
கேட்டில் வாகனங்கள் எல்லாம் நிறுத்தி தொழிலார்களை இறக்கி விட்டன. அவர்கள் வரிசையாக நடைபாதையில் வந்து செக்யூரிட்டி செக்கப் முடித்து அவரவர் பஸ்களில் ஏறுவதற்கு வந்து கொண்டு இருந்தனர்.
வெயிலில் சாயம் போன வெளுத்த கவரால்கள். அதன் மேல் குளிருக்கு ஸ்வெட்டர்.
தலையில் மங்கி குல்லாய் கவலையும் ஏக்கமும் தூக்க பித்தும் நிரந்தரமாக தங்கி விட்ட முகங்கள்.
சேப்டி ஷூ அணிந்து நடந்து நடந்து வேலை செய்து வலியாகவே ஆன கால்களை கொண்டு நடந்து வரும் கலவையான தொழிலார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டினர் அதிகம்.
எனது கம்பேனி பஸ் வந்து நின்றது. இன்று யார் யாருக்கு ஊரிலிருந்து போன் வரும் என்று தெரியவில்லை. சாப்பாட்டு டைமில் செல்லவில்லை என்றால் இந்த லேபர்கள் தவித்து போவார்களே என்று எண்ணிய போது, ’எல்லா எல்லா’ என்று சத்தம் கேட்டு திரும்பினேன்.அபுஅலி வண்டியில் இருந்து கூப்பிட்டார். ஏறியதும் வண்டி புர்கன் மெயின் ஆபிஸ் சாலையில் ஒடியது.
வழியில் எனது வண்டியிடம் விட்டு பின் தொடர சொல்லி சென்றார்.
அரபிகளுக்கு பொதுவாகவே தான் சொல்லுவதுதான் சரி என்ற அகங்காரம் உண்டு. பிழைக்க வந்தவர்களிடம் மிக்க் கேவலமாக நடந்து கொள்வர். முடியாதவனை மாறி மாறி அடித்து துவைப்பது போல. அபுஅலிக்கு கம்யூட்டர் என்றால் பெரும் பயம்.
என்னிடம் சிறிது நட்பு காட்டுவான். அதுவும் வேலை ஆகும் வரைதான். விருப்பத்தை கேட்டாலின்றி வாயை திறப்பதில்லை. நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காகாமல் இருந்தால் சரி.
ரோட்டின் இருபக்கத்திலும் வேலிக் கருவை மரங்களும், சில பெயர் தெரியா மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. மிகப் பிரயத்தனப்பட்டே வளர்கின்றன.
வெளிநாடு வந்து எவ்வளவோ பிரயத்தனப்பட்டு பார்க்கிறோம். இந்த பெயர் தெரியா மரங்களைப் போலே. இந்த மரஞ் செடிகளுக்காகவது நிச்சயமாக தண்ணீர் டேங்கர் மூலாமாகவோ, பைப் மூலமாகவோ நீர் கொடுக்கின்றனர்.
ஆனால் நமது தேவை எப்போது நிறைவுறும்? எப்படியாவது இருக்கும் கடன்களில் இருந்து மீண்டாலே போதும் நமக்கு எப்போது இங்கிருந்து விடுதலை?
மனம் கனத்து சிந்தனையில் ஆழ்ந்து, குழந்தையும் மனைவியும் நிழலாடினர். பையனை பார்க்க மனம் ஏங்கி ஊருக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய போது வண்டி புர்கன் ஆபிஸ் வந்து விட்டது.
அபுஅலி வண்டியில் இருக்க சொல்லி விட்டு டீம் லிடரை பார்க்கச் சென்றார்.
இவர்களுக்கு எப்போதும் வேலை இருக்கதான் செய்யும். அபுஅலி நல்ல மனநிலையில் இருக்கும் போது லீவு சொல்லி விட வேண்டும் இல்லை என்றால் காரியம் கெட்டு விடும். என்ன மாதிரி வேலை இருக்குமோ என்று கவலை வாட்டியது.
அவர்கள் எல்லாம் சென்று விட்டார்களாம். ஸ்பாட்டுக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அவர் வண்டியில் என்னை ஏறச் சொல்லி, எடுத்து விரட்ட ஆரம்பித்தார்.
ஃபுல் ஆட்டோமோட்டிவ் வண்டி 140கீமி வேகத்தை எட்டியது. கிறுக்கன்! முழுவதும் கொண்டு சேர்ப்பானா என்று நினைத்து டோர் கை பிடியைப் பிடித்ததும, ’பயந்து போய் விட்டாய்’ என்று சிரித்து கொண்டே மேலும் விரட்ட ஆரம்பித்து விட்டான்.
சோதனையாய் இருந்தது எனக்கு. இப்போது இவனிடம் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என்று மவுனமாகி விட்டேன்.
வண்டி சிறிது தூரம் சென்றதும் ரிக் ரோடில் இறங்கி ஒட ஆரம்பித்து விட்டது. முதலில் GC 14 வந்ததும்,
’சூப் ஆத சதாம் கவ்வாத்’
கொளுத்தி விட்டான் எவ்வளவு இழப்பு. அவன் கோபமாக இருப்பதை பார்த்து நான் ரோடை பார்க்க ஆரம்பித்தேன்.
வண்டி வளைவில் திரும்பி GC 10 செல்லும் ரிங் ரோடில் திரும்பி வேகம் பிடித்து லோகேஷன் வந்தது.
அங்கு Koc மேலதிகாரி அனைவரும் முகாமிட்டு இருந்தனர். எனது கம்பேனி ஐிஎம் ஐார்ஐ், மாத்யு, சேப்டி உதுமான் அலி மற்றும் ஒனர் அல் முசாரி வந்திருந்தனர்.
மீட்டிங் நடந்தது அந்த இடம்தான். குவைத்தில் மிக செறிவான எண்ணெய்ப் படலம் உள்ள பகுதி. எவ்வளவு விரைவில் அந்த இடங்களை கொடுக்க முடியும் என்று கேட்டவுடன், சேப்டி உதுமான்அலி, ’நாங்க ரோடு போட்டு மட்டும் தரோம் மற்ற வேலைகளை நீங்கள் ராணுவத்தினரை கொண்டு செய்து கொள்ளுங்கள்’ என்றதும், டீம் லீடர், ’எல்லா பரா’ என்று கோவப்பட்டு விட்டு, ஒனர், அல்முசாரியை அழைத்து மொத்த வேலையும் ஒரு மாசத்துக்குள் முடித்து தரணும் இல்லை என்றால் புதிய வேலை தர முடியாதுன்னு சொல்லி விட்டார்.
ஒரு மாதத்தில் முடித்து தருகிறோம் என்று மூவரும் ஒத்து கொண்டு என்னை அழைத்து தேவையானதை சொல் கம்பெனி செய்யும் என்றனர்.
நான் பரிதாபமாக உதுமானை பார்த்து கொண்டே வாயை திறக்காமல் தலையை
ஆட்டினேன். ஐார்ஐ் உதுமான் சாரிடம் ’இந்த வேலை முடியறவரை சேப்டியா செக் பண்ணி வேலை பார்க்கனும். கம்பேனி பிரஸ்டிஐ்யாயி போச்சு. வேற மீட்டிங்
இருக்கு நான் கிளம்பறேன். மாத்யு இவிட எல்லாம் அரேன்ஐ் செய்யனும் கேட்டோ?’ என்றார்.
ஒகே சார் என்று மாத்யு சொல்லி விட்டு என்னிடம், ’இரண்டு பைலை தந்து இந்த சர்விஸ் ஆர்டர் எல்லாம் முடிச்சுக் கொடு. வேலையைத் தொடங்கு ஏதாவது பிரச்சினை என்றால் என்னை தொடர்பு கொள்’ என்றார்.
நான் சர்விஸ் ஆர்டரைப் பிரித்தேன்.
உதுமான் சார் என்னை நோக்கி வந்தார்.
’என்ன வாப்பா எப்ப ஆரம்பிக்கப் போற’
’ஆரம்பிக்கலாம். இந்த அநியாயத்தை கொஞ்சம் பாருங்க’
’சர்விஸ் ஆர்டர்ல பாருங்க சார். ஓர்கிங் அவர்ஸ் 8, ஒவர் டைம் 4 அவர்ஸ், koc கொடுக்கிறது சார்.’
’எங்க டைம் ஷிட்டை பாருங்க ஒர்கிங் அவர்ஸ் 10 ஒவர் டைம் 2 அவர்ஸ் கேட்டால் எல்லாம் பத்து மணி நேர வேலைக்கு கையெழுத்து இட்டுள்ளிர்கள்’ என்கிறார்கள்.
Koc புராஐக்ட் வேலை இல்லாத மற்ற கம்பேனி நேரடி வேலைக்கு மாத்திரம் முறையே 8 அவர்ஸ் மற்றும் 4 அவர்ஸ் தருகிறார்கள்.
ஒரே கம்பேனியில ரெண்டு விதமாக சம்பளம் கொடுத்து மலையாளிங்க கொள்ளையிடுரானுங்க. பிழைக்க வழி இல்லாமல் இங்கே வந்தா நிலமை எப்படி இருக்கு பாருங்க. அட்லீஸ்ட் இந்த லேபர்களுக்காகவது கொடுக்க சொல்லுங்க சார்.’
’வாப்பா நான் செய்ய முடியாது இது எல்லாம். கம்பேனி பாலிசி. நா வரேன். வேலை
ஆரம்பித்துவிட்டால் போன் செய்.’
நான் வெறுப்பில் பைலை தூக்கி சீட்டில் எறிந்து விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
நினைவில் வேலையின்றி நின்றது நிழலாடியது. ஒவ்வொரு முறையும் சென்னை சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்வதும் கிடைக்காமல் திரும்பியதும் கடைசியாக வேறு வழியில்லை என்ற நிலையில் இந்த வேலைக்கு ஒத்து கொண்டு வந்ததும் இங்கு வந்த பிறகு இவர்களது பித்தலாட்டம் தெரிந்த போது ஒன்றும் செய்ய இயலாத நிலை.
அதிகாரிகளை அனுப்பி விட்டு அபுஅலி என்னிடம் வந்தார்.
நான் முகம் வாடி இருந்ததை பார்த்து விட்டு, ‘என்ன?’ என்று விட்டு, ‘நாளை வேலை தொடங்கணும்’ என்றார்.
சரி என்று தலையாட்டினேன்.
தொடர்ந்து வந்த நாட்களில் உதுமான் சேப்டி மற்றும் அபுஅலி அவர்களது அதிகாரத்தில் வேலை செய்வது போல ஒரு தோற்றத்தை மேலிடத்தில் காட்ட பிரயத்தனப்பட்டனர்.
நான் தெளிவாக நமது உழைப்பு பார்க்கப்படாதுஎன்று அறிந்தே இருந்தேன். அதனால் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து விட்டு இருவரது நாடகத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன். வேலை அதுவாகவே நடந்தது.
குறிப்பிட்ட படி செல்வதற்காக ரோடு போட்டாயிற்று. டாங்கிகளை சுற்றிலும் மண் அகற்ற எந்த லோடர் ஆப்ரெட்டரும் தயாராக இல்லை.
நான் மாத்யுவிடம் விஷயத்தை சொன்ன போது ’என்னால் ஒன்றும் செய்ய இயலாது. இது கம்பேனி வேலை நீதான் செய்து சமாளிக்கனும்’ என்றார்.
மேலதிகாரிகள் ஆளாளுக்கு கடுமையாக நடந்து கொண்டு வந்தனர். அன்று காலை அபுஅலி, ’எப்போது முடிப்பாய்’ என்றார்.
அப்போது எனது செல்பேசி ஓலித்தது.
மினு அது மாத்யு ‘ஸ்பீக் ஸ்பீக்’ என்றார்.
’சார்!’ என்றதற்கு ’சர்வீஸ் ஆர்டர் எல்லாம் கையெழுத்து ஆயிடுச்சா’
’இல்ல சார் இரண்டு நாளில் வாங்கி தருகிறேன்’ என்றதும் வைத்து விட்டார்.
அபுஅலி ’என்ன!’ என்றான். உனது கையோப்பம் வேண்டும் என்ற போது திரும்ப செல்பேசி ஒலித்தது ‘மினு மாத்யு’.
ஐிவ்
இந்த கவ்வாத், ஐ பக் யூ
’வீ ஆர் ன் மீட்டிங் டோன்ட் கால்’
மாத்யுவிடம் அவர் அது வரை கேட்காத கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு என்னிடம் ஒரு வாரத்தில் எனக்கு வேலை முடியணும். நான் கையெழுத்து போட மாட்டேன் என்று சர்விஸ் ஆர்டரை கீழே வீசி விட்டு சென் று விட்டான்.
நான் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்தேன் முகத்தில் துப்பிய எச்சிலை துடைப்பது போல் அவமானமாக இருந்தது. அப்படியே போட்டு விட்டு வீடு சென்றால் எப்படி இருக்கும்?
அவமானம் நமக்கு புதிது அல்ல முதலில் பிறந்து வளர்ந்த வீடு வெளியில் தள்ளியது பிறகு விதி கையில் எடுத்து ஆடியது.
ஆடி மாதத்தில் யாரோ கொடுத்த அவரை, சுரை விதைகளை என்னை ஊன்ற சொல்லி பிள்ளையை வைத்து கொண்டு அதை தண்ணீர் ஊற்றி வளர்த்தவளை காய்த்ததையும் பறித்துக் கொண்டு வரும் போது வண்டியில ஏற்றிவந்தியா என்று நிந்தித்தையும் பொறுத்து சமாளித்தாளே, இங்கு வருவதற்கு முதல் நாளன்று கூரையின் பொத்தல் வழியாக நிலவு எங்கள் மேல் விழுகிறது அதில் சிறு துளி பையன் மேல் பொட்டு பொட்டாக விழுந்தது.
நான் இங்கே இருந்தால் வறுமை மேலும் நம்மை தின்று விடும் பையன் மேல் விழும் இந்த நிலவொலி நாளை மழை நீராக இருந்தால் நாம் தாங்க மாட்டோம்.
நீ பெரிய மனது பண்ணி நான் போக அனுமதிக்க வேண்டும். காலம் நமக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. முடிந்தால் இவ்விடத்தில் வீடு கட்டிடலாம் என்றதற்கு ஓ! என்று அழ ஆரம்பித்து விட்டாள். பிறகு அமைதியாக சமாதானமாகி என்னை அனைத்து தேற்றி் சந்தோஷப்படுத்தி பிரிவை எண்ணிக் கலங்கி தூங்கிவிட்டாள். பாவமாக இருக்கிறது.
நான் தூங்க வில்லை. நாம் இருக்கும் போதே இவளை பேசி அவமான படுத்துகிறார்களே நாம் இல்லை என்றால் எவ்வளவு படுத்துவர். பையன் எப்படி ஏங்கி போவான் கண்ணீர் கொட்டி கொண்டு இருந்தது. இரண்டு சொட்டுசர்வீஸ் ஆர்டர் மேல் விழுந்துவிட்டது. துடைத்து மேலே வைத்தேன்.
அவள் அருகே இருந்தால் எப்படி இருக்கும்? பாலைவனம் எத்தனையோ அன்பு கொண்டவர்களின் கண்ணிரை குடித்து தான் தாகம் தீர்க்கிறது.
இந்த மாத்யு என்ன நினைப்பாரோ தெரியவில்லை. பழி நினைத்தால் ஊருக்கு போவது அவர் மனது வைத்தால்தான் நடக்கும்.
இன்று காலையிலே ஏன் இப்படி நடக்கிறது நல்லதுக்கா கெட்டதுக்கா கடவுளே!.
நான் நிலைகுலைந்து இருப்பதை பார்த்த லோடர் ஆப்ரேட்டர் நெருங்கி, ’கியாகோகையாஐி,அவன் பைத்தியக்காரன், காண்டு. நீ விடு என்ன செய்யனும் சொல்லு நான் செய்யறேன்’ என்றான்.
நான் அவனை உற்றுப் பார்த்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.
’நான் செய்யறேன் சொல்லு’ என்றதும்
’ஒரு வாரம் லொடிங் பாயிண்ட் போய் டோசர் ஒட்ட முடியுமா. நான் தாய்லாண்டு கம்பேனி ஆள வச்சு இந்தவேலைய முடிக்கிறேன் என்றதும்அவன் மகிழ்ந்து ஒத்துக் கொண்டான்.;
தாய்லான்டு ஆபரேட்டரை கொண்டு வந்து பிரச்சினையைச் சொன்னேன். நீ செய்தால் உனக்கு 4 அவர்ஸ் ஒவர்டைம் கிடைக்கும். இந்தி ஆப்ரேட்டர் செய்தால் 2 அவர்ஸ் தான் கிடைக்கும் இதை செய்து கொடுத்தால் உனக்கு மேற்க்கொண்டு ஒவர்டைம் தருகின்றேன் என்றேன்.
தாய்லாண்டு சுற்றி பார்த்து கொண்டு இருந்தபோது அபுஅலி லோகேஷனுக்கு டீம் லீடருடன் பார்வையிட வந்தார்.
டீம் லீடர், இப்ராகிம் ’தாள்’ என்று என்னை அழைத்தார். ’
’சார் ஆனா இந்தி’என்று சிரித்தேன்.
ஒரு வாரத்தில் முடித்துக் கொடு என்றார். எனக்கு இதனால் மிக பிரசர் இருக்கிறது
அதனால் தான் சர்ப்ரைஸ் விசிட் வந்தேன். ’இல்லை முடிச்சுடறேன்’ என்றதும் மகிழ்ந்து சென்றார்.
கருப்பன் என்னிடம் ’சாரி சாரி பேப்பரை எடுத்து வா’ கையெழுத்து இடுகிறேன் என்று செய்து கொடுத்தான்.
’வேறு ஏதாவது வேண்டுமா?’
’ஆமாம் சார் இந்த வேலை முடிந்ததும் ஊருக்குச் செல்ல வேண்டும். தற்போது மேத்யு தருவார் என நம்பிக்கையில்லை நீ கொஞ்சம் பேச
முடியுமா?;
’ஓ எஸ்; போனை அடித்து ’மிஸ்டர் மேத்யு’
’ஐயம் சாரி’
’யூ நோ, வீ கேவ் பிரஷர். ’ஐ லாஸ்ட் மை கன்ரோல். சீ ஐ சைன் ஆல் யுவர் பேப்பர் யு கேன் கலேக்ட்’
’ஒகே சார் தாங்யூ’ என்று மேத்யு மகிழ்ந்த போது
’சீ மேத்யு ஹி வான்ட் கோ ஹோம். ஆப்டர் கம்பிளிட் யு சென்ட் ஹிம்’ என்று என்னை பார்த்து ஒரு கண்ணை மூடித் திறந்தான்.
’ஒகே ஒகே எஸ் சார்’ என்றார் மேத்யு.
மிகுந்த பிரயாசைப் பட்டு ஊர் வந்து இரண்டு நாளாகிறது. கூரையை செப்பனிட்டு வைக்கோல் இட்டு இருந்தார் மனைவி. வைக்கோலின் மணம் நான் கொண்டு சென்றிருந்த பெர்புயுமை எல்லாம் பொய்யாக்கியது.
யார் யாரோ வருகிறார்கள் விசாரிக்கிறார்கள். மனம் மட்டும் பிள்ளை நம்மிடம் வரவில்லையே என்று ஏங்கித் தவிக்கிறது.
தாய்லாண்டு மேற்க்கொண்டு செய்ய தயங்கியதும் அவனிடம் மேலே அரை மீட்டர் மட்டும் மண் எடு. உன் பக்கத்தில் வண்டியில் நான் இருக்கிறேன். நீ முழுவதும் தோண்டி முடிக்கும் வரை எங்கும் செல்ல மாட்டேன். உறுதி கூறி அவன் முடிக்கும் வரை இருந்து ஒவர்டைம் அதிகம் கொடுத்து வேலையை முடித்து, மாத்யு கொடுத்த ஆபிஸ் வேலகளும் முடித்து விடைப்பெற்று வந்து சேர்ந்தேன்.
எந்தக் கெஞ்சலும் கொஞ்சலும் பையனிடம் செல்ல வில்லை இரண்டு நாளாய் அலைகழிக்கிறான்.
தூக்கச் சென்றால் ’அம்மா’ என்று கத்தி கொண்டு ஒடுகிறான். வீட்டில் இருந்தால் உள்ளேயே வருவதில்லை. போட்டாவில் இருப்பதை போல் இல்லையாம்.
மூன்றாவது நாள் காலை நான் அவனுக்கு பாகில் லூலூ சென்டரில் வாங்கிய துணி மணிகளும் மங்காப் சுல்தான் சென்டரில் வாங்கிய பொம்மை சாக்லேட் ஒன்றையுமே அவன் தொடவில்லை மனம் நடுங்கிக் கொண்டு இருந்தது.
’அப்பா எங்கம்மா’ என்று அவன் குரல் கேட்டது.
கண்ணில் தானாகவே நீர் நிறைந்து என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறு கேவல் எழுந்ததை கட்டுப்படுத்துகிறேன்.
’அப்பாவ இப்ப தான் தேடறியா? உள்ள போயி பார்’ என்றாள் மனைவி.
மெல்ல எட்டிப் பார்க்கிறான். நான் தலையை ஆட்டி சைகை செய்த போது
என் கண்ணில் நீர் நிறைந்து அவன் நிற்பது தெரியாமல் மறைத்து இருந்தது.
மெல்ல வந்து கட்டில் மேல் ஏறி என் இரண்டு கண்களையும் இரு கைகளாலும் துடைத்துகொண்டு, ’ப்பாஆ!’ என்று தேம்பி உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தான்.
நானும் தான்.