மீட்டெடுக்க முடியாத முகம்

– ஸ்ரீதர் நாராயணன் –

“எனக்கு உதவவும்” என்று
ஒடிசல் எழுத்துகளில்
கோணலட்டையை விலாச அட்டையாக
வைத்துக் கொண்டிருந்தான்.

குளிரும், குத்துப் பார்வைகளும்
விரவிய வெட்டவெளியில்
சகஜமான தோரணையில்
நின்றிருந்தான்.

சில சில்லறைக் காசுகளும்,
ஒரு கோப்பை காப்பியும்,
இரண்டு சிகரெட்டுகளும்,
அரைப்புட்டி சாராயமும்,
அருகில் சென்று கொடுத்திருந்தால்
இரண்டு ஜோக்குகள் கூட
சொல்லி சிரித்திருப்பான்.

எத்தனை நாட்களோ
யாசகம் கொண்டிருந்தவன்
நின்றிருந்த இடத்தில்
மடிந்திருந்த புற்களுடன்,
விலாச அட்டையையும்
நினைவில் மீட்டெடுக்க
முடியாததொரு முகத்தையும்
விட்டுவிட்டுப் போய்விட்டான்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.