அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் – ரஞ்சனி பாசு

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

மதுரையின் புதிய தரிசனம்

“பாட்டி பூமியெங்கும் கதைகளை
புதைத்து வைத்திருக்கிறாள்
பிரசவிக்கும் குழந்தை கதை வாசம்
பட்டே பூமி பார்த்து வருகிறது
பாட்டி காற்றெங்கும் கதைகளை தூவி
வைத்திருக்கிறாள்
கல்லாய் மாறிய அகலிகை போல்
காற்றாய் மாறிய கதைகள்
பாட்டியின் சுவாசம் பட்டு மறுமொழி
கொள்கிறது
கதை மொழியாகும் பொழுது பாட்டி
கதையாகிறாள்”

சு.வெங்கடேசன் தனது ஆதிப்புதிர் கவிதையில் சொன்னது தான் காவல்கோட்டத்திற்குள் பயணப்படும் ஒவ்வொரு வாசகருக்கும் ஒளியூட்டி. கதைகள் கூறும் விந்தை உலகங்கள், வடிவமைக்கும் மனிதர்கள், ஏற்படுத்தும் பரவச அனுபவங்கள் நம்மில் பலருக்கு பால்யத்தில் கடந்த உன்னத தருணங்கள். கதைகள் கடத்தும் அதிர்வலைகள் சொல்பவரின் திறனையும், கேட்பவரின் கற்பனையையும் ஊடுபாவாய் நெய்து முப்பரிமாணமாய் விரிகிறது. கதை சொல்லியின் திறன், கேட்பவர் மனதில் உணர்வெழுச்சியை ஏற்படுத்துவதில் மதிப்பிடப்படுகிறது. விரியும் கதையின் தளத்தின் வழியே தான் நாம் நமது அனுபவங்களைக் கொண்டு, வாழ்வின் மேன்மையை, துயரங்களை, இழப்புகளை தரிசிக்கிறோம். சொல்லும் கதையும், எழுதும் கதையும் வேறு வேறா என்ன? நாவலாசிரியர் தன் உயிருள் கரைந்த உணர்வை, எழுத்துக்களில் நெய்து விரிக்கிறார். வாசகர் தன் அனுபவ உணர்வுகளால், நாவலாசிரியர் சொன்னதை, சொல்லாததை எல்லாம் தேடிக் கண்டடைகிறார். அப்புள்ளியில் தான் நாவல் முழுமையடைகிறது.

காவல் கோட்டம் நாவலைப் பற்றி வெங்கடேசன் குறிப்பிடும் போது “மதுரையின் காவல் , காவல் நிலை என்கிற புள்ளியிலிருந்து முன்பின் பயணிப்பது தான் காவல்கோட்டம்” என் கிறார். பொதுவாக மதுரையின் 600 ஆண்டுகளின் வரலாறு என்று சொன்னாலும், 550 வருடங்களை 200 பக்கங்களிலும், மீதம் உள்ள 50 வருடங்களை 800 பக்கங்களிலும் விவரித்துள்ளார். காவல் கோட்டம் நாவலைப் பற்றிய பகிர்வு என்பது, மதுரையின் பல்வேறு பரிணாமங்களின் பகிர்வே!!

மல்லல் மூதூர்

மதுரை நகரத்தின் வசீகரமே அது தன்னுள் பொதித்து வைத்திருக்கும் பழமை தான். ஷாப்பிங்மால்கள், மேற்கத்திய உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று மதுரை நவீனமயமாக்கப்பட்டாலும், கிராமத்துச்சிறுமியின் பொருந்தா நவீன ஒப்பனையைப் போல் தான் அது தோற்றமளிக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் போது, அது தனது நவீனப்பூச்சினை உதிர்த்து விட்டு, தனது உண்மைத் தோற்றத்தில் பழமை ஒளிர அழகாய் காட்சியளிக்கும். மதுரை நகரத்தின் சிறிய சந்து, சிதிலமான ஒற்றைச்சுவர் கூட ஆயிரமாண்டுகால வரலாற்றின் மெளன சாட்சியமாக நிற்கும். வரலாற்றின் பக்கங்களில் மதுரையின் குறிப்பைத் தேடிப் போனால், கி.மு மூன்றாம் நூற்றாண்டில், கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தெனிஸ் “கிழக்கின் ஏதென்ஸ்” என்று மதுரை நகரைப் பற்றி பதிவு செய்துள்ளார். தொடர்ச்சியாக சங்க இலக்கியங்களில் மதுரை பற்றிய விவரணைகள் இருக்கின்றன. மதுரையின் பழம்பெருமைக்கு ஆதாரம் புனைவுகளில் மட்டுமல்ல, தொல்லியல் ஆய்வுகளும் சான்றளிக்கின்றன. சமீபத்தில் நடந்தேறிய கீழடி அகழாய்வு, 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்த நகரத்தின் தொல்லியல் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறது. 258 கிமீ நீளமுள்ள வைகைநதியின் கரைகள் தொடர்ச்சியாக மக்களின் வாழ்விடங்கள் கொண்டதாக அன்று முதல் இன்று வரை இருக்கிறது என்பதே அதன் தனிச்சிறப்பு.

மதுரை நகரின் அமைப்பு அந்தந்தக் காலங்களில் மாற்றி அமைக்கப்பட்டு வந்துள்ளது.

“மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்”

என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.

“தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க்கதவின்
மழையாடு மலையினி வந்த மாடமொடு
வையையன்ன வழக்குடை வாயில்”

என்று கூறும் மதுரைக்காஞ்சி, வலிமிக்க தெய்வமாகிய கொற்றவையின் உருவம் செதுக்கப்பட்ட நெடுநிலை என்றும், அதில் விளக்கேற்றியதால் நெய் உருகிக் கரிந்த கதவு என்றும் கோட்டை அமைப்பை விளக்குகிறது. ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப நகரின் அமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டே வந்துள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளின் வழி தெரிந்து கொள்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையப்புள்ளியாகக் கொண்டு, பல அடுக்குகளாய் இதழ்கள் கொண்ட தாமரை மலரைப் போல் மதுரை நகர் அமைந்திருக்கிறது என்பது அழகியலும், வரலாறும் முயங்கும் தகவல். நாயக்கர் காலத்து நிர்வாகம் உருவாகத் துவங்கியது முதல், பல மாற்றங்களை சந்தித்து, ஆங்கிலேயர் நிர்வாகத்தில் மதுரை அமைப்புரீதியாக, நிர்வாகரீதியாக இறுதிவடிவம் பெற்றதையே காவல்கோட்டம் கூறுகிறது.

இரவின் ஒளியில்

இரவு எல்லாக் காலத்திலும் ரகசியங்களின் பொக்கிஷமாகவே திகழ்கிறது. இரவின் அழகை, இரவின் மயக்கும் தன்மையை கவிஞர்கள் எல்லாக் காலத்திலும் பதிவு செய்திருக்கின்றனர். பதுமனாரின் “ நள்ளென்றன்றே யாமம்” என்னும் குறுந்தொகைப் பாடல், காலம் கடந்து நிற்கும் இரவின் விவரிப்பு. மதுரைக்காஞ்சியில் இடம் பெற்ற
“குடமுதல் குன்றம் சேர குணமுதல்

நாள் முதிர் மதியம் தோன்றி நிலாவிரிபு
பகல் உரு உற்ற இரவு வர”

என்ற இரவின் வருகையின் வர்ணனை மதுரையை இரவின் ஒளியில் காணச் செய்கிறது.

“ இரும்பிடி மே எந்தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கிடைப்பதித்த கூர்நுனைக் குறும்பிடி
சிறந்த கருமை நுண்வினைநுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக்கச்சினர்
மென்நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்”

இரவில் கள்வர் களவுக்கு செல்வதையும் கூட, பெண்யானையின் தோலை ஒத்த கருமை சூழ் இரவில் கூர்மையான உடைவாள் ஏந்தி, மெல்லிய நூலாற் செய்த ஏணியை இடுப்பில் சுற்றி சென்றனர் என விவரித்து, அவ்வாறு செல்பவரை களிறை இரையெனக் கொள்ளும் புலியைப் போல் காவலர் தெருக்களில் உலவினர் என்ற மாங்குடி மருதனாரின் வர்ணனையில் துவங்குகிறது காவல்கோட்டத்தின் அஸ்திவாரம். 2500 கால மதுரையின் வரலாறு களவையும், காவலையும் பல்வேறு ஆட்சி மாற்றங்களின் ஊடே, இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே என்ற புரிதலோடு,காவல்கோட்டத்தினை வாசிப்பதே அதனை முழுமையாக உள்வாங்க உதவும்.

வடிவமற்ற வடிவம்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் முதல் இன்று வெளியாகும் நாவல் வரை, நாவல் பல வடிவங்களைக் கடந்து வந்துள்ளது. வாசகராய் கையில் காவல் கோட்டத்தை ஏந்துகையில், எவ்வாறு இது ஒரு நாவல் எனப்படுகிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுவதற்கு, காவல்கோட்டம் வெளிவந்த புதிதில் எழுந்த பலதரப்பட்ட விமர்சனங்கள் முக்கியமான காரணியாகும். 1054 பக்கங்கள் கொண்டதாலேயே வேறு பேச்சின்றி நாவல் எனப்படுவதா? இதற்கான துலக்கம், ஜெயமோகன் எழுதிய “நாவல் கோட்பாடு” புத்தகத்தில் கிடைக்கிறது. “ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனியாக வடிவப் பிரக்ஞை உள்ளது. எனவே வடிவங்கள் பற்றிய விவாதம் என்பதுஎல்லா படைப்பாளிகளுக்கும் உள்ள பொது அம்சங்களை ஷரத்துகளாகக் கொண்டு ஒரு வடிவ நிர்ணயத்தை உருவாக்குவது எப்படி என்பதாக இருக்க முடியாது. மாறாக, எப்படி ஒவ்வொரு படைப்பாளியும் தன் இலக்கிய வடிவத்தை மேலும் மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு முன்னகர உதவ முடியும் என்பதாகவே இருக்க முடியும். மிகச்சிறந்த உதாரணங்களாக, “போரும் அமைதியும்” “கரமசோவ் சகோதரர்கள்” போன்ற பெரும் படைப்புகளின் மிகச்சிறந்த இயல்பாக அவற்றின் “வடிவமற்ற வடிவம்” தான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்கு காரணம் இந்த விரிவு தான். பெரும் காடு போல தழைத்து ஈரமுள்ள நிலமெங்கும் பரவி நிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின் இலக்கணம் எனக் கொள்ளலாம். மலைகள் போல, வடிவமின்மையும் வடிவமாக இருப்பதே நாவல் எனப்படுகிறது.” அவ்வகையில், காவல் கோட்டம் வடிவார்த்தமாக நாவல் என ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்த தயக்கமும் இல்லை.

வரலாற்றின் மறுவாசிப்பு

வரலாற்றுத் தகவல்கள், தரவுகளை ஆகியவற்றை மறுவாசிப்பு செய்வதே வரலாற்றுப் புனைவின் அடிப்படையான நோக்கம். துண்டுகளாய் கிடைப்பவற்றை அடுக்கி, அவற்றை தன் கற்பனையில் சித்திரமாய் இணைக்கும் வேலையை நாவலாசிரியர் செய்கிறார். மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. மாலிக் கபூர் படையெடுத்து வந்தான் என்பதும் வரலாறு. அவற்றை காவல்காரர்களின் வாழ்வோடு இணைத்தது புனைவு. கிபி.1371 ஆம் ஆண்டு குமாரகம்பணனின் மதுரைப்படையெடுப்பு, சுல்தான் களை வென்றெடுக்கிறது. அவரது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் புலமை பெற்றதால், “மதுரா விஜயம்” என்ற காவியத்தை இயற்றினார். இன்றளவும், அன்றைய செய்திகளை அறிந்து கொள்ள ஆதாரநூலாக மதுராவிஜயம் திகழ்கிறது. வெங்கடேசன் கங்காதேவியை அமணமலையில், காவல் பணி செய்யும் கருப்பணனின் மனைவி சடச்சியை சந்திக்க வைக்கிறார். அவரது சித்திரத்தின் முதல் கோடு அதுவே. வரலாற்றில் கிடைக்கும் வெற்றுத்தகவல்களை அழகிய சித்திரமாக மாற்றுவதே வெற்றிகரமான வரலாற்றுப்புனைவாக அமையும். தமிழில் பிரபல சரித்திர நாவல்களாக அறியப்படும் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை காலம் கடந்து நிற்பவை. ஆனாலும், மொழிநடையிலும் கூட நாடகத்தன்மையுடன் இருக்கும். ஒரு சரித்திர நாவலை வாசிக்கும் உணர்வு வாசகர் மனதில் மேலோங்கி இருக்கும். ஆனால், காவல் கோட்டம் நாம் காலஎந்திரத்தில் ஏறிச்சென்று அந்நிகழ்வுகளின் ரத்தசாட்சியாக இருந்ததாக உணரச் செய்கிறது. இதுவே, வெங்கடேசனின் வெற்றி. காவல்கோட்டத்தின் தனித்துவத்திற்கு சான்று.

காவல் கோட்டம்

நகரத்தின் பாதுகாப்பை, கட்டுக்கோப்பை உறுதி செய்யும் கோட்டையின் அமைப்பு, ஆட்சியாளர்களின் கெளரவச் சின்னமாக அறியப்படுகிறது. அது வெவ்வேறாக உருவாகும் சூழல் நகரம் சந்திக்கும் மாற்றங்களின் சாட்சியமாக அமைகிறது. குமாரகம்பணனின் மதுரை விஜயத்தின் போது, மதுரைக் கோட்டை குட்டையாக, முதுமைபூண்டு, சுட்ட செங்கல்களின் அடுக்காக காட்சியளிக்கிறது. அதன் பின்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில், மிகச் சிறப்பான திட்டமிடலோடு கல்கோட்டை எழுப்பப்படுகிறது. அதிலிருந்து, ஏறத்தாழ 400 ஆண்டுகள் கழித்து, பிளாக்பர்ன் தலைமையில், கோட்டையை இடிப்பது வரை, மதுரையின் தலைமை பல கைகள் மாறிவிட்டது. சிறிய அத்தியாயத்தில் சொல்லப்பட்டாலும் கூட, கட்டபொம்முவின் கதை அழுத்தமாய் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் பீரங்கி தாக்குதலைத் தாக்குப்பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒரு முறை நின்றது ஆச்சரியமே. கட்டபொம்மு நாயக்கரை, வீரபாண்டிய கட்டபொம்மனாக ஆக்கி, வீரவசனம் பேச வைத்த தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்று உணர்வு ஏனோ மனதில் வந்து போகிறது.

மதுரைக் கோட்டையை இடிக்கும் முடிவை எடுத்த கலெக்டர் பிளாக்பர்ன், அதை முழுமையாய் நிறைவேற்றி மதுரையை விட்டு வெற்றிகரமாய் வெளியேறும் வரைக்குமான சித்தரிப்பு காவல்கோட்டத்தின் மையமான, உயிரோட்டமான பகுதியாக அமைந்துள்ளது. மாடத்தை தாங்கி நிற்கும் கோட்டை வாயில் சித்திரம் ஒன்றை ஒரு இளைஞரின் தோளில் வழிகிற இரத்தத்தினூடே பச்சை குத்தும் குறத்தி மிக அழகான படிமம். கோட்டைச் சுவரை காவல் காத்த இருபத்தோரு சாமிகள், கோட்டை வாயிலை காவல் காத்த நான் கு சாமிகள் மக்களின் நம்பிக்கையில் ரத்தமும் சதையுமானவர்கள் . கோட்டைச்சுவரை இடிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மக்கள் ஒப்புக் கொள்கின்றனர். இரவு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சாமியாய் கோட்டையில் இருந்து இறங்க ஆரம்பிக்கின்றன. வெங்கடேசன் களமாடிய பகுதி இது. வெங்கடேசன் மிகுந்த சிரத்தையோடு வரிக்கு வரி அத்தனை அழகாய் செதுக்கியிருக்கிறார். எட்டுப்பேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக்கருப்பன் இறங்கிய வேகத்தில், அவர்மீதான வெற்று விமரிசனங்கள் காற்றோடு கலந்து விட்டன.

இரவின் மடியில்

காவல்கோட்டம் நாவல், தாதனூரின் காவல் பணியையும், களவு நுணுக்கங்களையும் கொண்டு பின்னப்பட்டது. மதுரையின் ஆட்சி மாற்றங்கள் நடந்த 600 ஆண்டுகால வரலாற்றில், தாதனூரின் காவல் உரிமை பறி போனது. திரும்பக்கிடைத்தது. திரும்ப பறிக்கப்பட்டது. சடச்சியின் வாரிசுகள் இரவின் மடியில் வளர்ந்தவர்கள். இரவின் ருசியை துளித்துளியாய் உணர்ந்தவர்கள். திருமலை நாயக்கர் அரண்மனையை விட்டு இருள் வெளியேறிய போது, அவரின் கெளரவமும் வெளியேறுகிறது. தாதனூர்க் களவின் முத்திரை, ராஜமுத்திரையை வெல்கிறது. காவல் உரிமையைப் பரிசாக வெல்கிறது. வெங்கடேசன் அதை “நான்மாடக் கூடலின் வீதிகளில் திரிகிற இருளின் கழுத்தில் வடம்போட்டு, சாவடியின் தூண்களில் தாதனூர்க்காரர்கள் கட்டி வைத்திருந்தனர்” என் கிறார். பார்வையால் அல்ல, புலன் களின் விழிப்பால் காவல் காக்கிறார்கள். சப்தங்களின் வழி களவுக்கு நேரும் அபாயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏட்டு வீராச்சாமியின் வீட்டிற்கு இரவில் வரும் காவல்காரர்கள் ஓசையின்றி பித்தளை செம்பில் தண்ணீர் குடித்துச்செல்லும் ஒரு காட்சி போதும் அவர்களின் இயக்கத்தை சொல்ல. இரவின் அழகை, இரவின் ரத்தவேட்கையை, இரவின் ரகசியங்களை, இரவின் மடியில் விளையாடியபடி, கரும்பளிங்குச் சிலையென மதுரையை விவரிக்கிறார் வெங்கடேசன்.

கோட்டத்தினுள்ளே…

மதுரையின் முழுமையான தொகுக்கப்பட்ட வரலாறு என்று நெல்சன் அவர்களின் “மதுரா கன்ட்ரி மானுவல்” கூறப்படுகிறது. நாயக்கர்களின் வரலாறு தனியாக “ஹிஸ்டரி ஆப் மதுரை நாயக்” என்ற சத்தியநாதய்யரின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் இருப்பதை அடுக்கி வைப்பது வரலாற்று ஆசிரியரின் வேலை. தன் மனதின் கற்பனையை வடிவமாக்குவது நாவலாசிரியரின் வேலை. வரலாற்று நாவலாசிரியர் முன்னால் உள்ள பெரும் சவால், இவ்விரு வேலைகளையும் பொருத்தமான புள்ளியில் இணைத்து, வரலாற்று இடைவெளிகளை தன் கற்பனையால் நிரப்பி அழகிய வேலைப்பாடு மிகுந்த படைப்பாக வாசகர் முன் வைப்பது. வெங்கடேசன் வரலாற்றின் சட்டகத்திற்குள் தன் கற்பனையை செதுக்கி இருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். எனினும், சில அவசியமான இடங்களை வெற்றிடமாகவே விட்டிருக்கிறார்.

வெங்கடேசன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். ஒரு வாக்கியத்திற்குள் மூன்று தலைமுறைகளைக் கடக்க வேண்டிய தேவை இருந்தது என்று. முதல் அத்தியாயத்தில், நிறைசூலியாய் மதுரை நகரை விட்டு வெளியேறும் சடச்சி, இரண்டாவது அத்தியாயத்தில் கிழவியாய் பேரக்குழந்தைகளோடு தோன்றுகிறாள். இத்தனை வேகமான பாய்ச்சல், அவசியமானாலும் கூட, சில விடுபடுதலுடனே இருக்கிறது. நாயக்கர் ஆட்சியாளர்களுக்கும், கிறிஸ்தவ மிஷனரிகளுக்குமான உறவு நிலை குறித்த சித்திரம் அத்தனை தெளிவாக இல்லை. அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட, திருமலை நாயக்கரின் மிஷனரி ஆதரவு நிலைபாடு குறித்த ரகசியக் கதைகள் இன்றும் உலவுகையில் நாவல் அது பற்றி மெளனம் சாதிக்கிறது. மதுரையில் மீனாட்சி கோவிலின் விரிவாக்கம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்லும் போது, “இருந்தையூர்” என்று பரிபாடலில் குறிப்பிடப்பட்ட, திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற, இன்றும் இருக்கும் கூடலழகர் கோவிலைப் பற்றிய குறிப்பு நாவலில் எங்கும் இல்லை. நாயக்கர்களின் குலங்கள், உட்பிரிவுகள், அவற்றிற்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள், மண உறவுகள் போன்றவற்றை மிக விரிவாக இந்நாவல் பேசுகிறது. எனினும், அது அங்கங்கே சிறிய வெளிப்பாடுகளாக உள்ளன. பின் இணைப்பாகவேனும், இப்பிரிவுகள் குறித்த தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அது கூடுதல் புரிதலுக்கு வழிவகுத்திருக்கும். அமண மலையில் உள்ள தீர்த்தங்கரது சிலைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நேமிநாதன் செட்டியார் மட்டுமே சமணராய் வந்து போகிறார். 600 ஆண்டுகால வரலாற்றில், சமணக்குடும்பங்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 280 பக்கங்களிலேயே யூனியன் ஜாக் அத்தியாயம் துவங்குகிறது. அது வரை நாயக்கரின் போர் தந்திரங்களும், தாதனூரின் களவு நுணுக்கங்களும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அதிகாரம் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும், வாழ்க்கை முறையிலிருந்து சாமானியர்கள் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்!!

எல்லா காலகட்டத்திலும் எளியவர்களின் உயிர்துறத்தில் கற்பனை செய்ய முடியாத தீரத்துடனும், எளிய மதிப்பீடுடனும் வெளிப்படுகிறது. நாவலின் துவக்கத்தில் கனகநூகாவின் தற்பலி, கோட்டை வாசல் வாணம் தோண்ட திம்மன் உள்ளிட்ட நான் கு இளைஞர்களின் பலி ஆகியவை அதிகாரவர்க்கத்தின் விதிமுறைகள் என்றால், எளியவர்களின் விதிமுறைகள் அநியாயமாய் பலி கொள்ளும் சின்னானின் உயிர். இது ஒரு புறம் என்றால், உயிர்ப்பலி கொத்து கொத்தாய் நிகழும் தாது வருஷப் பஞ்சம் பற்றிய விவரிப்பு. மிகத் துல்லியமாக பஞ்சத்தின் அனைத்துக் கூறுகளையும் செய்த ஒரே பதிவு காவல்கோட்டம் தான்.

சிறிய சிறிய சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமேயில்லை. ரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தாதனூரில் களவாடிய குறவன், ஆஞ்சநேயரின் வடிவங்களை மூட்டையில் களவாடி வரும் பெருசு, கிழவிகளுக்கு பயந்து ஒதுங்கிப் போகும் பெருசுகள் என ஆங்காங்கே இளைப்பாறிச் செல்லவும் இடமிருக்கிறது.

பெண்மையின் பேருரு

ஆண்ட வர்க்கத்திலும், எளிய வர்க்கத்திலும் வெங்கடேசனின் பெண் பாத்திரங்கள் சுயமரியாதையுடன், தெளிவாய் சிந்திப்பவர்களாக, அன்பால் அரவணைப்பவர்களாக, பன்முகத்திறமை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ராஜாளியைப் பார்த்த நிமிடத்தில் போரைத் துவங்க ஆணையிடும் கங்காதேவி, தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ராயரின் மூன்றாம் பட்டத்தரசி துக்காதேவி, மாமனாருக்காக ராயரிடம் வாதாடும் விஸ்வநாத நாயக்கரின் மனைவி வீரநாகம்மா,, என்று துவங்கும் பட்டியல் நல்லாட்சி வழங்கிய ராணி மங்கம்மாள், ராணி மீனாட்சி என தொடர்கிறது. எல்லையற்ற தைரியம் கொண்ட சடச்சியில் துவங்குகிறது தாதனூரின் வீரப்பரம்பரை.அது பல தலைமுறை கடந்து, வெள்ளை சிப்பாயை தனியொருத்தியாய் தலையை அறுத்து கையில் ஏந்திச்செல்லும் கழுவாயி வரை கடத்தப்பட்ட உள்ளுணர்வாய் மிளிர்கிறது. ஆதிக்க வர்க்கப் பெண்களின் வாழ்வு வீரமரணம் அடைந்த கணவன்மார்களோடு உடன் கட்டை ஏறுவதில் கருகும் போது, எளிய வர்க்கப் பெண்களின் வாழ்வு சுதந்திரமான வாழ்க்கைத்துணைத் தேர்வில் மலர்கிறது. தாதுவருஷப் பஞ்சத்தில் பேசப்பட வேண்டிய இரு வேறு பெண்களான நல்லதங்காள் மற்றும் குஞ்சரம்மாளின் சித்தரிப்பு . ஒன்று கையறு நிலையின் குறியீடு. மற்றொன்று களிமிகு வாழ்க்கையில் ஊறியவர், பேருரு கொண்டு மக்களின் துயர்துடைத்த மூதன்னையின் வடிவமானவர்.

சித்தாந்தப் பார்வையில் பொருள் முதல்வாதம் மார்க்சியத்தின் அடிப்படை. “மனித சமூகம் பொருளாதாரத்தை அடிக்கட்டுமானமாகவும், கலாச்சார – பண்பாடு – அரசியல் அம்சங்களை மேல் கட்டுமானங்களாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அடித்தளமே மேல் கட்டுமானங்களின் உருவாக்கங்களையும், தன்மைகளையும், இயக்கப் போக்குகளையும் தீர்மானிக்கிறது. எனினும் மேல்கட்டுமானங்களின் வீரிய கருத்தியல் வீச்சினால், அடிக்கட்டுமானம் பாதிப்படையும் சாத்தியங்கள் உண்டு” என்பதே மார்க்சியம் வரையறுக்கும் சமூகப்பார்வை. மார்க்ஸ் இந்தியச் சமூகத்தைப்பற்றி குறிப்பிடுகையில் “ தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக்கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கும் பூகோள ஒற்றுமையைத் தான் இந்தியா என்று அழைக்கிறோம்” என் கிறார். இந்தச் சித்திரமே விரிவாக காவல்கோட்டமாய் நம் கைகளில் உள்ளது. ஆதிக்க வர்க்கங்களுக்குள் இருந்த அதிகாரம் கைப்பற்றுதல் தொடர்பான முரண்பாடு, சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டு ஏற்றத்தாழ்வுக் கூறுக்களிடையே ஆன முரண்பாடு இந்த இரு அம்சங்கள் ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி அமைக்க வழி வகுத்தவை. பள்ளிக்கூடம் அமைத்ததும், ரயிலின் வருகையும் சாதிய வேறுபாடுகளைக் களையும் கருவிகளாயின.
வரலாறு என்பது தனித்தனியான சம்பவங்களின் தொகுப்பே. அத்தொகுப்பை சித்தாந்த சட்டகத்திற்குள் வைத்துப் பார்த்தால், அதன் சீர்மை புரியும். தொடர்ச்சியான முரண் இயக்கத்தில் பின்னப்பட்டது வரலாறு என்ற தெளிவு கிடைக்கும்.

எந்த ஒரு நாவலும் முதல் பக்கத்தில் துவங்குவதுமில்லை, கடைசிப்பக்கத்தில் முடிவதுமில்லை. வாசகர் தனது அனுபவத்தின் வழியாக அவற்றின் இடைவெளிகளை இட்டு நிரப்பி, படைப்பாளியை கூட சில தருணங்களில் வென்று புதிய தரிசனங்களைக் கண்டடைகிறார்கள். அதுவே, ஒரு நாவலின் ஆகச்சிறந்த வெற்றியாகும்.

தமிழிலக்கத்தின் மிகச்சிறந்த வரலாற்று நாவலாக மட்டுமல்லாமல், மார்க்சிய அழகியலின் மிகச்சிறந்த படைப்பாகவும் காவல் கோட்டம் திகழ்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.