நதிகளை கடந்து
மலைகளின் நடுவே குதிக்க
நீண்ட கால பயிற்சி எமக்கு
தேவையாகவில்லை.
நானும் தோழிகளுமாக
குதித்து விளையாடுவதில்
ஆசை கொண்டிருந்தோம்.
வெகு சீக்கிரமாக நீர்வீழ்ச்சியென
அழைக்கப்பட மலைகளே காரணம்.
எங்களை ரசிக்கவும்
எங்களை ஆராதிக்கவும்
நாங்கள் கட்டுப்பாடு விதித்ததில்லை.
எம்மீது நீந்தி திளைக்கும் சருகுகளை
பரிசளிக்கின்ற மரங்களுடன்
நீண்ட உறவை வைக்க தவறவுமில்லை.
மீன்களை அழச் சொல்லி கேட்பதும்
பறவைகளை பாடச் சொல்லிக் கேட்பதுமே
எமது பௌர்ணமி விழாக்கள்.
நதிகள் நதிகளாக இருக்கும் வரையே
இநத விளையாட்டுக்களென
கடல் எப்போதும் திமிருவது.
கர்வத்தில் என்று சொல்லிடவும் முடியாது.
சொல்லி விட்டால்
கடல் கோபிப்பதில் நியாயமுமில்லையென
தங்கை தனது கதையை எழுதி
முடித்திருந்தாள்.
..