லதா சுற்றுமுற்றும் பார்த்தாள். எல்லா மின்னியங்கிகளையும், தானியங்கிகளையும் நிறுத்தியாகிவிட்டது. வருணும் படுத்தாமல் சாப்பிட்டு விட்டான். டாக்ஸி குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிடும். இன்னும் சமயம் இருக்கிறது. உறை மூடி ஸ்டேண்டில் வைத்துள்ள வீணையை எடுத்து ஒருமுறை வாசித்தால் என்ன? ஆம்,இது இங்கேதான் இருக்கப் போகிறது. அவளில்லாமல், மெட்டுக்களில் சுருதி குறைந்து, வாசிப்பார் இல்லாமல் முறுக்கு தளர்ந்த தந்திகளுடன் கவனிப்பாரற்று மூலையில் இருக்கப் போகிறது. வீணையைத் தடவிக்கொண்டே அவள் உட்கார்ந்திருந்தாள். அதன் நரம்புகளைச் சுண்டி அந்த நாதத்தில் கரைந்து போகப் பார்த்தாள். அது என்ன பாட்டு-‘சரச சாம தான பேத தண்ட சதுரா’ எத்தனைப் பொருத்தம் இன்றைக்கு. அவள் தண்டத்தை கையில் எடுத்துவிட்டாள். இனி பின்வாங்குவதில் பொருளில்லை.
எத்தனை கனவுகளோடு அவள் திருமணம் செய்து கொண்டாள். யு.எஸ் மாப்பிள்ளை என்று ஒரே பெருமை; அவள் தோழிகள் வெளியே சிரித்து உள்ளே வெந்த நாட்கள். ‘ராம நீ சமானமெவரு’ என்று உண்மையாகவே அவன் அவளைப் பெண் பார்க்கையில் வாசித்தது எத்தனை அபத்தம்! இரு வருடங்களுக்கு முன்னர்தானே, எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் மேல் தளத்தில் அவள், அவன், நாலரை வயது வருண் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தபோது,ஒரு சிறுமி ஓடி வந்து ‘டாடி’ என அவனைக் கட்டிக்கொண்டாளே அப்போதுதானே தெரிந்தது.’ஹேய், டியர்’ என்று ஒரு அமெரிக்கப் பெண் அவனை முத்தமிட்ட போது, ’இவள்தானா அவள்’ என அந்தப் பெண் இவளைப் பார்த்தபோது, இவள் கையை இழுத்துப் பற்றி குலுக்கியபோது இதெல்லாம் கனவு என நினைத்தாள். தலை குப்புற கீழே, மிகக் கீழே, முடிவற்ற குழியில் அடிக்கடி விழுந்து கொண்டிருப்பதாக அவள் காணும் கனவின் பொருளிதுதானா?
’உனக்கு டீஸென்சின்னா என்னன்னே தெரியாதா?அவ உன்னோட பேசப் பேசப் பாக்கறா, பக்கியாட்டம் முழிக்கறே, அவதான் முதல்; என் கல்யாணம் தெரிஞ்சப்போ ’நா உன்னப் பிரிய மாட்டேன்.நீ உன் வொய்ஃப்வோட குடும்பம் நடத்து; ஆனா, என்ன சிங்கிள் பேரன்ட்டா மாத்தாதே, மரியாவுக்கு அப்பா வேணும்னு’ பெருந்தன்மையா சொன்னா. எத்தன நல்ல குணம், நீ மாஞ்சு போறியே’
“அப்ப, அவளோடயே இருக்கறதுதானே; என்ன எதுக்கு கல்யாணம் பண்ணின்ட’’
‘அம்மா, அப்பால்லாம் விடலியே’
சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லயே இவனுக்கு என சினந்தாள் அவள். இரு வருடங்கள் நீண்ட போராட்டம். எத்தனை குத்தல்கள், சீண்டல்கள், அவமரியாதைகள்! ஏன் சகித்துக் கொண்டாள் என்று அவளுக்கே கழிவிரக்கமாக இருக்கிறது.
சித்தன்னவாசலில் அவள் ஒரு இளவரசியைப் போல் வளர்ந்தாள்; சாமுவேல் அப்படித்தான் அவளை நினைத்திருந்தான். தாமரை சித்திரக்குளம். இலேசாக அலை அடிக்கும் குளத்தில் அவள் மொட்டுக்களும், பூக்களும் நிறைந்த இடத்தில் நின்றிருக்க, அவன் வரைந்த ஓவியங்கள். ’கால் உளயறதுரா,நீதான் தூக்கிண்டுபோகணும்’ என்று சிணுங்குவாள். ’இப்ப முடிஞ்சுடும்’என்று தன் வேலையே கண்ணாய் இருப்பான். அவள்தான் நூறுமுறை அவனைப் பெயர் சொல்லி அழைப்பாள், அவன் ’லதா’ எனக் கூப்பிட்டதேயில்லை. ஏன் அப்படி என்பது இன்றுவரை மர்மம்தான். எங்கிருந்தோ பச்சிலைகளும்,வேர்களும் கொண்டுவருவான். நிலக்கரியும், செங்கல்லும் இருக்கவே இருக்கிறது. வழவழக்கும் பாறைத்திப்பிகளைச் சித்திரத்தில் பதித்துவிடுவான். தாவர வேர்களை நுணுக்கி தூரிகைகள் செய்து கொள்வான். எத்தனை சித்திரங்கள் அவளை மையமாக வைத்து, அவளது எட்டாவது வயதிலிருந்து கல்யாணம் அவளுக்கு ஆகும்வரை, பாலையாக, திரிசடையாக, மணிமேகலையாக, மாதவியாக, விளக்குப் பாவையாக, பைரவியாக, மீராவாக இன்னும் எவ்வளவோ! தியான மண்டபத்தில் நடுநாயகமாக அவளைக் கையில் வீணையுடன் அமர்த்தி, அதுவும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு அவன் வரைந்த ஓவியம் இன்றும் அவர்களின் கிராமத்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.
ஒருமுறை விளையாடிக்கொண்டே சாமுவை அலைக்கழித்தவள் அந்த சமணப் படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டாள். அவன் குகை வாசலில் காவல் நின்றான்; தூக்கம் கலைந்து எழுந்த அவளுக்கு உள்ளே ஏதோ பொங்கியது; ’போலாமா?’ என அவன் கேட்டபோது பொங்கிய வெள்ளம் வண்ணமற்ற குமிழிகளாக வெடித்து அழிந்தது. சிறு குன்றுகளின் மீது வழிந்திறங்கும் சாய்கதிர்கள். குகை மண்டபத்தில் எரியும் கண்ணாடி விளக்கு. கரைகளுக்குள்ளேயே அலையடித்துக் கொண்டு விம்மும் குளம். ’அபீட்,அபீட்’ என்று கத்திக்கொண்டே சாட்டையை சுழற்றி வீசினாலும் பூமியில் மௌனமாக உறங்கும் பம்பரம். மலையிடுக்குகளில் உள் நுழைந்து ‘அக்கோவ்’ குருவியின் குரலோடு தனித்த கார்வையில் காற்று. தலையில் விழும் பூக்களின் மகரந்தத்தூள்கள், காலடியில் சரசரக்கும் சருகுகள். அவன் உபாசகன், அனைவருக்குமானவன், அவளுக்கு மட்டுமென அவனில்லை; யாருக்குமாக இல்லாமல் எல்லாருக்குமாக தன்னைக் கண்டு கொண்டவன். அவன் அப்படித்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். இந்தத் தெளிவிற்குப் பிறகு அவள் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாள், யாராக இருந்தாலும் சரி, வீட்டில் பார்க்கும் வரனாக இருக்கட்டும் என்றாள்.
அவளுக்குக் கல்யாணம் நிச்சயமான மறுநாள். அதிசயமாக சாமு அவள் வீட்டிற்கு வந்தான். ’லதாங்கி’ என்று தலைப்பிட்டு அவளை மணப்பெண் கோலத்தில் வரைந்திருந்தான். மறு தினம் அவன் திருக்குற்றாலத்தின் சித்திர சபைக்குப் போய்விட்டதாக அவள் கேள்விப்பட்டாள். திருமண நாளன்று அவன் வரைந்திருந்த மாதிரியே அவள் சிங்காரித்துக் கொண்டாள். நாகஸ்வரத்தில் ‘கல்யாணி’ வாசிக்கும் போதெல்லாம் ‘லதாங்கியாக’ அது ஒலிப்பதை வலிந்து விலக்கினாள்.
‘அவன நெனச்சிண்டு எங்கிட்ட தாலி வாங்கிண்டயாக்கும்?’ என்று அவள் கணவன் சென்ற வாரம் கேட்டான்.
“ஆமாம், நீ ஏஞ்சல நெனைச்சிண்டு என்னப் ப்ராண்ட்ர மாரி”
‘ப்ராஸ் மாரி பேசற நீ’
“அது வேற இருக்காக்கும்”
‘நா எப்படி வேணாலும் இருப்பேன். நீ ஒழுங்கா இரு’
“இத்தன நா இருந்தாச்சு, இனி ஒழுங்கில்லாம இருக்கணும்னு பாக்கறேன்”
‘யூ,பிட்ச், உனக்கு கொழுப்பு அடங்கல. எந்த இளிச்சவாயன மடக்கிட்ட இப்ப; இல்ல அந்த மாகாதலன் இங்கயே வந்துட்டானா?’
“நா பிட்ச், அப்படின்னா நீ ஸ்கொண்ட்ரல். என்ன கல்யாணம் பண்ணிக்கறச்சேயே உனக்கு புள்ள பொறந்தாச்சு. அஞ்சாறு வருஷம் நாடகமாடி எப்படி மறச்சிருக்க நீ”
‘ஏஞ்சலுக்கு நீ உறைபோட காணமாட்ட., எல்லாத்லயும் அவ எனக்கு ஏத்த மாறி நடந்துப்ப; நீயும் இருக்கயே’
‘’இப்படி கம்பேர் பண்ண கூசல உனக்கு’’
‘சும்மா சொல்லு, ரதி மன்மத ஆட்டமெல்லாம் அவனோடயே முடிஞ்சுடுத்தா.’
அவள் அவனைத் தள்ளிவிட்டு திமிறினாள்; அவன் இழுத்து வைத்து அறைந்தான்.
மறு நாள் காலை உணவின்போது அவன் மீண்டும் ஆரம்பித்தான். ’இந்த மில்லட் தோசைய விட்டா வேற ஒன்னும் தெரியாதா, இல்ல அவனுக்கு இதுதான் புடிக்குமா?’
“டாடி, யார் அது?’’
‘உன்னத்தாண்டா சொல்றா அப்பா, பேசாம சாப்டு’
‘வருண், உங்க அம்மா உன்ன விட்டுட்டு வெளில போறாளா?’
“எப்பயாச்சும் போவாங்க, எனக்கு சாக்கோ நட்ஸ் ஐஸ்க்ரீம் வாங்கிண்டு வருவாங்க”
‘சீக்ரமா வருவாளா, லேட் ஆகுமாடா?’
இப்படி ஒரு வக்ர எண்ணம் எப்படி வருகிறது? ‘வருண்,உன்ன விட்டுட்டு நான் போனதெல்லாம், உன் டாடி வேலைன்னு சொல்லிண்டு போறாரே அந்த ‘ஏஞ்சல்’ ஆஃபீஸுக்குத்தான்’
“ஆமாண்டா, அங்கதான் வருவோ, அவளோட ஒரு அங்கிள் வருவான்.”
அவள் உணவு மேஜையை விட்டு எழுந்துவிட்டாள். வருண் புரியாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மட்டும் மொத்தமாக தோசைகளைத் தின்றான்.
அவன் ஏஞ்சலையும் தொட்டு அவளையும் தொடுவது சகிக்க முடியாததாக இருந்தது. உண்மை தெரிந்த இரு வருடங்களாக வீடு நரகமாகிவிட்டது. அதற்கு முன்னால், அவன் இவளுடைய நண்பனைப் பற்றி தரமற்றுப் பேசியதில்லை, கிண்டலாகப் பேசுவான், அவ்வளவுதான். இவளையும் கேலி செய்வான். ஒருக்கால் அவள் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ? ஆனால்,உறவின் புழுக்கம் மூச்சுத் திணறச் செய்கிறதே!
‘உன்னால அவள விடமுடியாதுன்னா, நாம டைவர்ஸ் செஞ்சுக்கலாம்’
“அதெல்லாம் நடக்காது. எங்க அம்மா, அப்பா ஒத்துக்கமாட்டா; ஒத்துண்டாலும் இன்னொரு கல்யாணம்னு நிப்பா; அதவிட நீ அவங்கிட்ட திரும்பறதுக்கு நா விடவே மாட்டேன்.”
மனித மனம் இத்தனை வஞ்சம் கொண்டதா?என்ன எதிர்பார்க்கிறான், தாசி போல, அடிமை போல, அவனைத் தெய்வமாக கொண்டாடச் சொல்றானா?
எண்ணங்களிலிருந்து விடுபட்ட அவள் வீணையை உறையில் இட்டு மூடினாள். வருண் அவனுடைய பைகளைப் பிரித்து எல்லாவற்றையும் பரப்பியிருந்தான். ’என்னடா இது, நேரமாச்சுடா, திருப்பியும் இதெல்லாம் உள்ள அடைச்சு எவ்ளோ வேல? படுத்தறடா’
“நீ மட்டும் வீணையை எடுத்தேல்ல”
‘அது ஊருக்கு கிடையாதுடா’
“நீ என்ன சதீஷ் வீட்ல விட்டுடு. அப்பா வந்தவுடனே அவரோட நா வரேனே”
‘தாத்தாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு வரல்லயா நீ?’
‘‘அப்போ, அப்பா வரமாட்டாரா?’’
‘இந்த அப்பா புராணத்த நிறுத்து; பைக்குள்ள சாமான வை. அந்தக் கார் பெரிசுடா, அதைத் திணிக்காதே’
“எனக்கு அதுதான் வேணும்”
முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள். பலவந்தமாக காரைப் பிடுங்கி எறிந்தாள். வாசலில் டாக்ஸி வந்து நின்ற ஓசை கேட்டது. அவனையும் இழுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள். இந்தப் பிசாசை நம்ப முடியாது, சைல்ட் ஹெல்ப் போலீசை கூப்பிட்டுவிடும்.
உழவர் சந்தையும், எம்பயர் ஸ்டேட் பில்டிங்கும், க்ரேட் லேக்கும், ஹட்சன் நதியும், அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகின்றன.வருண் அவளுடன் இருப்பானா?
செக்கிங் முறைகள் முடித்து, அதிக பணம் கொடுத்து வருணுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து எமிரேட்ஸ் விமானத்தில் அமரும் வரை அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். ’சரிதானா’ என ஒரு குரல் உள்ளே ஓடிக் கொண்டேயிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் அவன் நடந்து கொண்டது சரியென்றால் இதுவும் சரிதான்.
அவள் படுத்திருந்த அறைக்கு அவன் வந்ததை அவள் முதலில் அறியவில்லை. ‘என்ன விட்டுடு, உன் கொஞ்சலையெல்லாம் அவகிட்ட வச்சுக்க’
“உனக்கு என்ன புடிக்கலைன்னா அவனப் போலன்னு நெனைச்சுக்கோ”
‘அவனுக்கு நீ உற போட காண மாட்ட; அசிங்கமா பேசாம போய்டு’
“அப்ப அவங்கிட்டயும் அனுபவமிருக்கு”
‘மானங்கெட்டுப் பேசாதே. எனக்கும் அவனுக்கும் அந்த மாரி எண்ணமேயில்ல’
‘உன் மாரு, தொடை, கழுத்து, முகம்னு சரமாரியா வரஞ்சிருக்கான். நீயும் மேலாட இல்லாம நின்னுருக்கே’
“பாவி, இப்படியெல்லாம் பேசாத, அப்படிக்கும் உன்ன மாரி தரங்கெட்டவனில்ல அவன். பொறந்த மேனிக்கி நின்னாக்கூட சபலப்படமாட்டான்’’
“அப்படிச் சொல்லு பத்தினியே; அப்ப நின்னுருக்கே”
அவள் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் பேயடி அடித்தான். வருண் இந்தக் கலவரத்தில் முழித்துக்கொண்டு அலறினான்.
பற்றத் துடித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் செல்கையில் வருணுக்கு அவள் என்னவாகத் தெரிவாள் என ஓடிய எண்ணத்தை ஓடுதளத்தை விட்டு மேலெழுந்த விமானம் சத்தமாக எதிரொலித்தது.