ஊழ்

 

தி வேல்முருகன்

 

oozh_poem

அப்போது செட்டியார் வீட்டு வேலை நடந்து கொண்டு இருந்தது. இவனது மேற்பார்வையில். முகப்பில் போர்ச்சும், இரண்டு மாஸ்டர் பெட்ரூமும், ஹால், டைனிங் ஹால், கிச்சன், சிட் அவுட் பின்னால் அவுட்-ஹவுஸ் என நவீன வில்லாவுக்கு உருவம் கொடுத்து கொண்டு இருந்தார்கள். முருகன் மேஸ்திரிதான் தினக்கூலிக்கு ஆட்களை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளி வருகிறது, பிள்ளைக்கு ஏதாவது செய்ய வேண்டும். குழந்தை பிறந்த அன்று வெறும் கையாய் நின்றது, இப்போது ஏதாவது செய்ய வேண்டும் காசுக்கு, என்று உருட்டிக் கொண்டு இருந்தது.. இந்த வேலையில் ஒன்றும் பைசா பெறாது. ஏற்கனவே கழுத்துவரை வாங்கியாகி விட்டது இப்போது வட்டிக்குச் செய்வது போலதான் அவன் அந்த வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

புரட்டாசி மாதம் ஆரம்பித்து கடைசி வாரமாகியும் மழை இல்லை. ஆனால் அன்று பார்த்து மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்து திடீர் என்று காற்று மாறி மழை வந்து வேலையைக் கெடுத்தது. எனவே, திரும்பி வரும்போது அதே தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற வாத்தியார் இவனைக் கூப்பிட்டார். வாத்தியார் மகன் அவனது நண்பன்.சிஆர்பிஎப்பில் நார்த்தில் பணிபுரிகிறான்.

“என்ன பாக்கறப்பா, வா, அம்மா கூப்டுது பாரு”

வாசலில் இருந்த வெள்ளை நாய் உறுமியது.

தயங்கி வெளியில் நின்றவனை, “வாப்பா உள்ளே”, என்று கூடத்துக்கு அழைத்தனர்.

“என்னம்மா?”

‘மேலே பாரு தம்பி”

மேலே பார்த்தபோது ரூப் சிலந்தி வலை போல் விரிசல் விட்டு அது வழியாக காலையில் பெய்த சிறு மழைக்கே தண்ணீர் கசிந்தும் சொட்டிக் கொண்டும் இருந்தது..

“சார் காலம் போட்டு கட்டிய வீடுதானே?” என்றான்.

“ஆமாம் தம்பி ஐய்யாரு மேஸ்திரிதான் கட்டினாரு செஞ்சாரு.மணி கொத்தனாருதான் கிட்ட இருந்து எல்லாம் வேலையும் செஞ்சாரு”.

“இங்கே மட்டும் தான் தண்ணீர் சொட்டுதா?”

‘இல்லப்பா ரூம்ல,கிச்சன்ல அப்படியே ஊத்துதுப்பா”

பார்த்தபோது எல்லா இடமும் சிலந்தி வலை போல் விரிசல் இருந்தது. கிச்சனில் மிக அதிகமாக விரிசல் விட்டு ரீபார்லாம் துருப்பிடித்து உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.

“ஏன் சார் தண்ணி கசியறத பாக்காம விட்டுடீங்களா?”

“நீ வேறப்பா போன வருசம்தான் மேல கொத்திட்டு புதுசா டைல்ஸ் எல்லாம் போட்டன், அதுக்குள்ள ஒழுகுது.”

“சார் வாங்க வீட்ட வெளிப்பக்கமும் மேல்தளத்தையும் பார்ப்போம்”.

அவன் பார்த்தபோது காலம் போட்டு இருந்த இடமெல்லாம் நேர்க்கோடாக விரிசல், பழைய வீட்டு அஸ்த்திவாரத்தின் மேலேயே சுவர் வைத்து எழுப்பிருக்கிறார்கள். கீழே பீம் கொண்டு இணைப்போ லிண்டல் பீமோ கொடுக்காமல் வெறும் சுவற்று மேலே ரூப் தளம் அமைத்ததால் கீழே அஸ்திவாரம் கனம் தாங்காமல் உட்கார்ந்து விரிசல் விடுகிறது. ‘மற்றபடி நகாசு வேலைகளால் தரையும், பூவூம், கைப்பிடியில் குழவும் கார்னரில் திரனையும் செய்து தங்களது அனுபவத்தால் மேஸ்திரி இழைத்து வைத்திருந்தார்.

“சார் வீட்டிற்கு மேல மேல செலவு செய்வது வேஸ்ட், கீழே அஸ்திவாரம் ஒக்காருது. இப்ப சரி செஞ்சாலும் திரும்ப பழையபடி ஒழுவும், இந்த வீடு தாங்காது அண்ணன்கிட்ட சொல்லுங்க லோன் போட்டு இடிச்சுட்டு புதுசா கட்டிடுவோம்,” என்றபோது கையில் காப்பி வைத்து கொண்டு எதிரில் நின்ற அம்மாவின் கண்ணில் நீர் பொலபொலவென வடிந்தது. காப்பியை மேஐையில் வைத்துவிட்டு ரூமுக்குச் சென்று விட்டார். தொடர்ந்து அழுவது தெரிந்தது. ஏன் சொன்னோம் என்றாகி விட்டது அவனுக்கு.

அதைப்பற்றி கவலைப்படாமல் வாத்தியார் காப்பியை எடுத்து உறிஞ்சும் சத்தம் நிசப்தத்தை உடைத்து நாராசமாக்கியது. ”

”என்ன தம்பி காப்பி ஆறிடும், எடுத்துக் குடி”

இவனுக்கு காப்பியை கையில் எடுத்தும் குடிக்க முடியவில்லை நெருப்பை விழுங்குவது போல் இருந்தது இரண்டு நிமிடமும்.

வாத்தியார் ரூமைப் பார்த்து, “இப்ப என்ன செய்யறது>” என்று ஆரம்பித்ததும் ;இவன், “சார் நான் உள்ளதச் சொன்னேன். இப்ப பேருக்கு செஞ்சிட்டு திரும்ப கன்டிப்பாக ஒழுவும் அப்ப கேட்க மாட்டிங்களா?” என்றான்..

ரூமில் இருந்தே அம்மா, “வேற வழியில்லையா?” என்று கேட்டார்.

‘இருக்கும்மா. செலவு ஆகும் செஞ்சா இரண்டு மூன்று வருசமாவது தாங்கும்”

“அப்படியே செஞ்சுடுப்பா,” என்றார் அம்மா.

வாத்தியார், “என்ன மாதிரி செய்யனும்?” என்று விசாரித்தார்.

“சார் பழைய டைல்ஸ் எல்லாம் கொத்தி எடுத்துட்டு ரூப் விரிசல் எல்லாம் ரிப்பேர் பார்த்து வாட்டர் புருப்பிங் பண்ணிட்டு வாட்டம் காட்டி வேற டைல்ஸ் போட்டா தாங்கும்.”

“அதெல்லாம் ஒன்றும் வாணாம், இப்படி மேலேயே ஏதாவது செய்ய முடியுமா பாரு”

‘சரி சார் அளவு எடுத்து இரண்டு தார்ப்பாய் வாங்கி போடுவோம் ஒழுவாத மாதிரி ”

“என்னப்பா நீ போவாத ஊருக்கு வழி சொல்ற?”

“இல்லை சார் வேற எப்படி செய்யறதுனு தெரியல நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க எனக்கு வேல இருக்கு” என்று அவன் கிளம்பினான்.

அம்மா வெளியே வந்து, “சாயந்திரம் வா தம்பி என்ன செய்யலாம்ன்னு நான் சொல்றேன்,” என்றார்.

வெளியே சிறு சாரல் மழை தூறி கொண்டு இருந்தது. நனைந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் துணி மாற்றிவிட்டு “தீவாளிக்கு வழி பொறந்திருக்கு,” என்றான் மனைவியுடம் குழந்தையை வாங்கி கொண்டே. பையனிடம், “கடையில உள்ள விலக்கூடிய டிரஸ்தான் உனக்கு,” என்றான்,

குழந்தை கையை ஆட்டி வழக்கம் போல கே கே என்று புன்னகைத்தது.

“என்னது அப்பாவும் பிள்ளையும் சேர்ந்துட்டிங்க, அப்படியே நாளு கிழமையில என் நகைக்கு ஒரு வழி பொறந்தா நல்லா இருக்கும் ”

“மேலும் மனைவியின் ஆவலைத் தூண்டாமல் நடந்ததைச் சொன்னதும், “வேல செஞ்ச மாதிரிதான் நீங்க வாங்குன மாதிரிதான், ஊருல அவன் அவன் எப்படி ஏய்ச்சு பொழைக்கறானுவ ” என்றாள் மனைவி. “நீங்க இப்படி ஊம கனா காண வேண்டியதுதான் ”

அவளைச் சொல்லி குற்றமில்லை, அவள் வந்ததிலிருந்தே இவனது உழைப்பும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை வெறுங்கையுடன் வருவதே வாடிக்கையாகி விட்டது !”செய்த வேலையெல்லாம் நஷ்டப்பட்டு நகையெல்லாம் அடகுக்கடையில் பத்திரமாக இருக்கிறது, திருப்பும் வழி எட்டிய தூரம்வரை தெரியவில்லை. மத்தளம் போல் இருந்தது அவன் நிலமை, ஏன்டா சொன்னோம் என்று ”

“மாலையானதும், “சரி அந்த வேலையை வாத்தியாருக்கு இல்லைன்னாலும் அந்த அம்மாவின் கண்ணீருக்காகவது செய்வோம்,” என்றான் மனைவியிடம்.

‘போய் பார்த்துட்டு வாங்க, என்ன செய்யறது அவங்களுக்கு என்ன கஷ்டமோ”

“அவன் சென்று பார்த்தபோது வாசல் கேட்டில் நாய் நின்று கொண்டு இருந்தது. ஒரே சீரான உறுமல். அடுத்த அடி வைத்தவுடன் வேகமாக குரைத்துக்கொண்டு மேலே பாய்ந்து விடும் போல் வந்தது.

“டைகர் ” என்று சத்தமிட்டு அம்மா வெளியே வந்தார்கள். “நாய் அவர் மீது உரசி செல்லம் கொஞ்சியது

“வாப்பா உள்ளே வா ”

“சொல்லுங்கம்மா”

“எனக்கு மருமகள நினைச்சுதானப்பா பயம், பையன் ஒத்துக்கிட்டான் செய்யச் சொல்லி நீ நாளைக்கே ஆளுகள ரெடி பண்ணி பெரிய மழைக்கு முன்ன முடிச்சு குடு”

“சார் இடையில வேற மாதிரி செய்யனும்னு சொன்னா…”

“சார் அப்படிதான் ஆனா இனி ஒன்னும் சொல்ல மாட்டார், பையன் சொல்லிட்டான்ல”

“சரிம்மா”

“நாளைக்கு இரண்டு ஐோடி ஆட்களை விட்டு உடைக்க விடுவோம். சார்ட்ட சொல்லிடுங்க. நான் போய் ஆட்கள் ஏற்பாடு பண்றம்மா,” என்றவன், “அம்மா இந்த நாய்…” என்று தயங்கினான்.

“டைகரா? நான் பின்னாடி கட்டிப் போடறன், பயப்படாதே ”

“அவன் மேஸ்திரியிடம் வேலையைப் பற்றி சொல்லி மறுநாள் காலையில் ஆட்களை ரெடி செய்து வேலையை ஆரம்பித்து விட்டான். செட்டியாரைப் பார்த்து “வாத்தியார் வீட்ல ஒழுகுது, ரிப்பேர் வேலை”, என்றதற்கு செட்டியார் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், மனதில் என்ன நினைக்கிறார் என்ன சொல்லுவார் என்ற பயம் உள்ளுக்குள் அவனுக்கு இருந்தது ‘

‘மேஸ்திரி தினக்கூலிக்கு ஆள் அனுப்புவதால், மாலையானதும் சம்பளம் கையில் வந்திடும், அவரது கமிஷன் எடுத்துக் கொண்டுதான் ஆட்களுக்கு தருவார். இவனுக்குதான் பயம் திட்டமிட்டபடி வேலை முடியல என்றால் கூடுதல் செலவு ஏற்படும் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். அதும் செட்டியாரை சமாளிப்பது பெரும் பாடு.

மேஸ்திரி கலியமூர்த்தியுடன் சேர்ந்து இரண்டு ஐோடி ஆட்களை அனுப்பியிருந்தார், கணவன் மனைவியாகதான் வருவார்கள் ஒட்டர் இன பழங்குடியினர் அவர்கள், வேலையை கான்ராக்ட்டாக பேசிக்கொண்டுதான் வேலை செய்வார்கள். அதிலும் மேஸ்திரி கமிஷன் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு அடுத்த வேலை கிடைக்காது. இதெல்லாம் அவனுக்கும் தெரியும் ஆனால், ஒன்றும் செய்ய முடியாது.

வாத்தியாரை வைத்துக் கொண்டு மேஸ்திரி கலியமூர்த்தியிடம் வேலையைச் சொன்னதும், “சார் இது எல்லாம் கடுக்காய் கருப்பட்டி போட்டு ஐல்லி போட்டு இருக்கு இது கான்ராக்ட்டாக செய்ய முடியாது, சம்பளம் கொடுத்து மதிய சாப்பாடு போட்டுடுங்க, ” என்றார் அவர்.

“வாத்தியார் “இங்கே சாப்பாடுலாம் செய்ய முடியாது,” என்றார்.

“மேல என்ன செய்யறது சொல்லு தம்பி”

“சார் சாப்பாடு கடையில வாங்கி கொடுத்துடலாம்,” என்று சொல்லிவிட்டு கலியமூர்த்தியிடம், “ஒரே நாளில் முடிச்சுடனும்,” என்றதும் “சார் நாளைக்கு முடிஞ்சாலே பெரிய விஷயம்” என்றார் அவர்.

இவன் வாத்தியாரை பார்த்ததும் அவர், “சரிப்பா சாப்பாடு வாங்கி கொடுத்துடறன். வேலையை ஆரம்பி ஆனா எனக்கு நாளைய பொழுதுக்குள் முடிச்சுடனும் ” என்று கறாராகச் சொன்னார்.

‘கலியமூர்த்தி ஆட்கள் வேலையைத் தொடங்கினர், முன்பே சொல்லியிருந்ததால் தயாராக சம்மட்டி, உளி பான்டுவுடன் வந்திருந்தனர் இயல்பாக வேலை நடந்தது, ஆனால், வாத்தியாரிடம் சொல்லிவிட்டு வீடு வரை சென்று வருவதற்குள் வாத்தியார் ஆட்களுடன் சன்டை போட்டு விட்டார். அவன் திரும்பி வந்ததும் அவனிடம், “என்னப்பா நீ இவன் இங்கே அடிக்கற அடி கீழே எல்லாம் கொட்டுதுப்பா. என் கெட்ட நேரம் இருக்கிறது பத்தாமல் மேலேயும் நீங்க ஒழுவ வப்பீங்க போலிருக்க” என்று கொபமாககக் கத்தினார்.

கலியமூர்த்தியும் அவனது ஆட்களும் வருத்தத்துடன் வேலை செய்வது தெரிந்தது, முகத்தில் ஈயாடவில்லை. நாளைக்கு வேலைக்கு வருவார்களா என்று இவனுக்கு கவலையாகி விட்டது.

“வாத்தியார் கீழே போய், “பாரு எப்படி கிடக்குன்னு என் பேச்ச எங்க கேட்கறா,ரிட்டையர்மென்டுக்கு பிறகு கிடந்து அல்லாடுடறன்,” என்றார்.,

இரண்டு மூன்று இடங்களில் மேலே ஐல்லியை உடைத்ததும் ஏற்கனவே இருந்த விரிசலில் இருந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்திருக்கிறது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல் இவர்களுக்கு பயம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அம்மா, காப்பியோடு வந்து நிற்கிறார்கள் வாத்தியார் சண்டை போட்டு திட்டியதில் அழுதிருப்பார்கள் போல் இருந்தது.

அவன் அப்போதுதான் பழைய சாதம் தயிரோடு சேர்ந்து சாப்பிட்டிருந்தான் காப்பி வேண்டாம் என்றால் வருத்தப்படுவார் என்று வாங்கி கண்ணை மூடிக்கொண்டு குடித்து விட்டு வைத்தான்

“அம்மா கீழே விரிசல் எல்லாம் தட்டிவிட்டு புதிதாக கெமிக்கல் பூசி சரியாக்கனும் கொட்டினால் வேலைக்கு நல்லதுதான். நீங்க சாருகிட்ட கொஞ்சம் சொல்லுங்க, ஆட்களை சத்தம் போட்டா வேலைக்கு வரமாட்டாங்க., பிறகு வேலை முடிப்பதற்கு சிரமமாயிடும்!

“கேட்டுக் கொண்டு வந்த வாத்தியார், “நீ என்னப்பா, அவங்களுக்கு வக்காலத்து வாங்கற உனக்கு என் கஷ்டம் புரியாதப்பா,பையன் நாளைக்கு கேட்டால் பதில் சொல்ல வேண்டிய சங்கடம் எனக்கு. நீ கொஞ்சம் கிட்ட இருந்து இதை முடிச்சுக் கொடு, எனக்கு இந்த வேலை ஒன்றும் புரியல” என்றார்.

சரி சார் நான் பார்த்துக்கரன், ”

அப்படா என்று இருந்தது அவனுக்கு இனி கலியமூர்த்தியுடன் சமாளிச்சு வேலைய எப்படியாவது முடிக்கனும். கலியமூர்த்தி கள்ளமில்லாமல் வேலை செய்யற ஆள், வெடவெடவென்று நல்ல உயரம் கருப்பு. ஆனால் எங்கே போனாலும் கூலிக்காரன் என்று நினைத்துக் கொண்டு சற்று விரட்டினால் சன்டை போட்டு விடுவான். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று குழம்பி, “கலியமூர்த்தி உடைச்ச ஐல்லியை எங்க போடறிங்க.” என்று கேட்டான்.

சார் அத ஏன் கேட்குற, வாத்தியார் மனுசன் மாதிரியா பேசராரு?.

‘ஏம்பா என்னாச்சு ”

சார் வேலை செய்யறவன் வெத்தலை பாக்கு போடமாட்டான்? பீடி குடிச்சு போடமாட்டான்? அதுக்கெல்லாம் பேசராரு, சீரா அடிக்க சொல்ராரு, கொஞ்சம் கூட பேற மாட்டேங்குது ஓங்கி அடிச்சா மட்டு மரியாதை இல்லாமல் பேசராரு. நீ யாராவது வச்சி பாரு சார், நம்ம கொண்டு ஆவாது”.

ஏம்பா உனக்கு நாலஞ்சு நாள் வேல இருக்கு அவசரப்படாத. ஐல்லியை உடைத்து அள்ளுன பிறகு சுத்தமாக்கி விட்டு தார் பெயின்ட் அடிக்கனும், உன்னைத்தான் நம்பி இருக்கன், செஞ்சு குடு” என்றான் “நாளைக்கு வாத்தியாரோடு நீ டவுனுக்கு போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வா, உனக்கு செலவுக்கு ஆகும்”

கலியமூர்த்தி மவுனமாகி வேலை செய்து கொண்டு இருந்தான், ஒன்றும் பதில் இல்லை.

கீழே வந்து அம்மாவிடம், “ஆட்களுக்கு டீ போட்டு கொடுங்கள்” என்று கூறி விட்டு வேலையைப் பார்த்தான் வாத்தியார் டீ கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார், ஆட்கள் சிறிது இயல்பாய் பேசி கொள்ள ஆரம்பித்ததும், “சார் நாளைக்கு பெயின்ட், தார் சீட் எல்லாம் வாங்கனும் மானம் மப்பு மந்தாரமா இருக்கு எதுக்கும் பக்கத்து சுருட்டு கம்பேனியில் தார்ப்பாய் கேளுங்க, சாயந்திரம் வேலை முடிந்து மூடி வச்சிடுவோம்” என்றான். வாத்தியார் வேகமாக பக்கத்தில் தார்ப்பாய் கேட்க சென்றார்.

“தெ உன் புத்திய காட்டாத வேலை செய்ய பாரு தீவாளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல புள்ளைவோ துணி கேட்டு அழுவுதுவோ என்ன நா சொல்றது கேட்குதா என்றார் கலியமூர்த்தி மனைவி புவனா.

கலியமூர்த்தி முறைத்து விட்டு சம்மட்டியால் வேகமாக அடிக்க ஆரம்பித்ததும் கீழே இருந்து வாத்தியார் தார்ப்பாய் எடுக்க கூப்பிட்டார்

“போயி எடுத்துட்டு வா” என்றான் இவன்.

கலியமூர்த்தி போனதும், “தினம் வேலை செய்யறத குடிச்சுட்டு புள்ளைவோளுக்கு ஒன்னும் செய்ய மாட்டார் சாரு நான் பொம்பளை சம்பாரிச்சு அதுவள பார்க்கறன் ரா சோறு ஆக்கறதுதான் மீச்சம் மீதிய காலைல போட்டுட்டு வேலைக்கு ஒடி வரேன்,” என்றார் புவனா.

” மதியத்திற்கு?”

”பால்வாடி சோறுதான்”

‘அவனுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை..

வாத்தியார் கலியமூர்த்தியோடு மேலே தார்ப்பாய் கொண்டு வந்தார்.

“சார் மணி 12. ஆவுது சாப்பாடு வாங்கி வரனும்”

“இது நல்லாருக்குபா, வேளைக்கு சாப்பாடு, டீ நம்ம பாடு தான் சிரிப்பா சிரிக்குது யார் போய் வாங்கி வரது| கீழே வா காசு தரன்”

“‘கலியமூர்த்தி நீ போய் வாங்கி வாயேன் ”

‘சரி சாரு!

”ஏ பூனா 4, 4 பரோட்டா வாங்கியாரன்”

‘தெ காசு இருந்தா 4 வாங்கி புள்ளைவோளுக்கு குடுத்துட்டு வா”

கலியமூர்த்தி சென்றதும், “செட்டியார் வீட்டுல பூச்சு வேலை நடக்குது போயி பாத்துட்டு சாப்பிட்டுட்டு வந்துடறன் சார்” என்றான் இவன்.

” ம்ம்” என்றார் வாத்தியார், சுரத்தில்லாமல்.

‘பூச்சு வேலை சொல்லியிருந்தபடி சாரம் போட்டு ஆரம்பித்திருந்தனர், நேரம் ஓடியிருந்த அளவு வேலை நடந்திருக்கவில்லை.

“பழனி ஏன் வேலை ஆவல?”

‘வசந்து கையில சாரத்திலிருந்த தேள் போட்டுடூதுன கலவை குடுக்க ஆள் இல்லாமல் வேலை தேங்கி போச்சு”

”மேஸ்திரி வரலையா?”

” இல்லைண்ணா, காலையிலிருந்தே காணும்”

” எங்க வசந்து”

“செட்டியார் பையன் ஆஸ்பத்திரிக்கு இட்டுட்டு போயிருக்காரு, நான் அப்படியே மேஸ்திரியிடம் சொல்ல சொன்னேன்,” என்றான் கொத்தனார் பழனி.

“என்ன பழனி இவ்வளவு கலவையை போட்டு வச்சிருக்க, எப்ப முடிக்கறது?”

“சாப்பிடப் போவாம 4 மணி வேலை செய்யலாம்ன்னு பிளான் பண்ணுனோம், கடைசில இப்படி ஆயிப் போச்சு”

கொத்தனார் மணி எங்க?”

“வசந்துக்கு பதிலா யாராவது பசங்க கூப்ட்டு வரேன்னு சைக்கிள் எடுத்து போயிருக்கான்,இப்ப வந்துடுவாண்ண”

பேச்சுக்குரல் கேட்டு செட்டியார் வெளியில் வந்து விட்டார். ஐயோயோ என்றது அவன் மனம்

“என்னப்பா காலையிலிருந்து ஆள காணல?”|

“இல்லிங்க வாத்தியார் வீடு ஐல்லி உடைக்க ஆரம்பிச்ச உடனே கீழே பூச்சு எல்லாம் கொட்ட ஆரம்பிச்சதும் சார் வேலை செய்ய விடல, புரிய வைக்க போதும் போதுமுனு ஆயிடுச்சு அதான் நிக்க வேண்டியதா போயிடுச்சுங்க”

“இங்கே பாத்தியா இந்த வசந்து பயல தேளு கொட்டிடுச்சு, வேல எப்படி ஆவுமுனு தெரியல”

“அதெல்லாம் முடிச்சுடலாங்க, மணி ஆள் கூப்பிட்டு வந்துடுவாப்பல நான் போவாம இருந்து பாத்துக்கறன்”

செட்டியார் உள்ளே சென்று விட்டார்

“ஏய் பழனி ஒரு காரியம் செய்,கலவையை வாங்கி இளக்கி வாரி மேலே அடிச்சுடு , மணி வந்ததும் அப்படியே சுத்தம் பண்ணி கட்டைய புடிச்சு ஸ்பான்ச் போட்டு கீழே இறங்கலாம்”.

“சரிண்ண”

“அருளு நீ சாரத்தில் ஏறு. அமுதா கலவையை அள்ளிக் குடு, நான் ரோடு வரை போய் யாராவது கண்ணுல பட்டா கொண்டு வரேன்.”

அதற்குள் வண்டி சத்தம் கேட்டது, செட்டியார் பையன் சந்துரு வெறும் ஆளாய் வந்தான். சந்துரு அவன் பள்ளித் தோழன்

” மேஸ்திரி இல்லடா”

“ஏய் சந்துரு ஆளுவ சாப்பாடுக்கு கலையாமல் வேல செய்ய முடிவு பண்ணி இருக்கு, நீ காசு வச்சிருக்கியா டீ பிஸ்கட் ரெடி பண்ண போ… ”சாப்பாட்டு நேரம் தாண்டிப் போச்சு பாரு”

டீ வருவதற்குள் மணி இரண்டு பசங்களுடன் வந்து விட்டான். டீயைக் குடித்து விட்டு பழனி வாரி அடித்து இருந்ததை சுத்தம் பண்ணி முடிக்க 4 மணி ஆகி விட்டது./ பாதி வேலை பாக்கி நிற்கிறது வெளிப்பூச்சு வேலை அது, சாரம் பிரித்து விட்டு மிச்சம் உள்ளதைப் பூச வேண்டும். பார்த்தபோது மலைப்பாக இருந்தது இன்று எப்படியாவது முழுவதும் குறையில்லாமல் முடித்து விட வேண்டும். சிறுநீர் கழிக்காதது வலி எடுத்து விட்டது சென்று திரும்பும்போது பழனியும், மணியும் சாரத்தை பிரிக்க ஆரம்பித்து இருந்தனர்,

‘4 மணிக்கு டீ பிஸ்கட் வந்தது குடித்து விட்டு ஆரம்பித்தது வேலை, இடையில் தண்ணீர் கேட்டு குடிப்பதை தவிர யாரிடமும் பேச்சே இல்லை. “ஒருவழியாய் வேலை நெருங்கி முடிக்கும் போது மணி 7 ஆகிவிட்டது. மேஸ்திரி தேடிக்கொண்டு வந்து விட்டார், அவனிடம் “கலியமூர்த்திக்கு சம்பளம் வாங்கி குடுத்துட்டு வரம்பா, வாத்தியார் பேச்சு குடுத்துட்டாரு” என்றார். ‘”முடிஞ்சுதுன்ன நீங்க பார்த்துங்க ”

இதையெலாம் “பார்த்து கொண்டு இருந்த செட்டியார், “மேஸ்திரி நீங்க வரலான்ன எப்படி நடக்கும் வேலை?” என்று கேட்டார்.

”இல்லீங்க பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு, ஆஸ்பத்திரியில் லேட்டா போயிடுச்சு. அதலாம் நாளைக்கு கிட்ட இருந்து பார்த்துக்கரன் ”

‘ஆட்களைப் பார்க்க பாவமாக இருந்தது, பசியில் துவண்டு உள் வாங்கி இருந்த கண்களில். செட்டியார் அடுத்து என்ன சொல்லுவார் என்ற கவலை அவனால் பார்க்க முடிய வில்லை, செட்டியாரிடம் தலையாட்டி விட்டு கிளம்பினான். ஆனால், வீடு வந்தால்,’ “என்ன ஊர் வேலை முடிஞ்சாச்சா?” என்கிறாள் மனைவி! மதியம் சாப்பிட வராத எரிச்சலில் அவன் ஒன்றும் சொல்லவில்லை தாவிய பிள்ளையிடம், “இரு தங்கம் குளிச்சிட்டு வந்துடறன்” என்றான்.

”பச்சை தண்ணிரில் உடம்பு குளிர குளித்த போது ஆற்றாமையும் கரைந்து ஒடி சிறிது ஆறுதலாக இருந்தது சாப்பிட்டு படுக்கும்வரை பேச்சு இல்லை மனைவியுடன் குழந்தை ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தது. ‘”கோபமா?” என்று நிலைகொள்ளாமல் அவள் அவன் தலைமுடியில் கையை கொண்டு அலைந்தாள், உடம்பு குறுத்து சிலிர்த்தது திரும்பிய அவன் அவளுக்களித்த பதிலில் உடல் களைத்துப் படுத்தவள், இழுத்தணைத்து திரும்ப முத்தமிட்டாள்.

மறுநாள் வேலை திட்டமிட்டபடி மேஸ்திரி வந்ததால் அதிக சிரமமில்லாமல் இரண்டு இடத்திலும் செய்ய முடிந்தது, வாத்தியார் மதியத்திற்கு பிறகு வராததை பற்றி அதிகம் கேட்கவில்லை, செட்டியார் வீட்டீல் நடந்ததை அறிந்த பிறகு நம் வேலை சீக்கிரம் முடிந்தால் சரி என்ற மன நிலையில் இருந்தார் மாலை, வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே தேவையானவற்றை வாங்க கலியமூர்த்தியை இட்டுக் கொண்டு சென்று வந்தார். இந்த கலியமூர்த்தியும் வாத்தியார் பின்னாலே நின்று கொண்டு இருக்கிறான், அவரும் அவனைத்தான் கூப்பிடுகிறார், குறையில்லாமல் வேலை நடந்தால் சரி என்றது அவன் மனம்.

அடுத்த நாள் செட்டியார் வீட்டு அவுட்டா் பூச்சு வேலை முடிந்தது. வாத்தியார் வீட்டில் கலியமூர்த்தி மற்றும் ஆட்களைக் கொண்டு சுத்தம் பண்ணி தார் பூசி மணி கொத்தனாரை கொண்டு பிட்டுமன் சீட்டை சூடுபடுத்தி ஒட்டி விட்டு அதன் மேல் மர உருளையை உருட்டி முடிக்க இரவாகிவிட்டது. வழக்கம் போல நேரமாகிவிட்டது, ஆட்களுக்குப் புரியாத வேலை என்பதால் சாப்பிடவும் போகவில்லை, இடிமுழக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் அவன் ஆச்சரியமாக அவள் ஒன்றும் சொல்லவில்லை

“அப்பா வந்து உங்களுக்காக இத்தனை நேரம் இருந்து பார்த்து விட்டு போயிடுச்சு”

“சரி”

“இது என்ன சட்டை பேண்ட் எல்லாம் தாரு?”

அப்போதுதான் பார்க்கிறான், தார் பெயிண்ட் ஒட்டி இருக்கிறது

“போங்க கரித்துணிக்குக்கூட ஆவாது போலிருக்கு,” என்றாள்

“விடு, இப்ப என் நிலமையும் அப்படிதான் இருக்கு,” என்றான்

தீவாளி வரிசையைக் காட்டினாள் அதில் பையனுக்கும் அவளுக்கும் இரண்டு இரண்டாக துணி மணிகள் இருந்தன.

அன்று இரவு மழை பெய்தது, அது மிதமான மழைதான் அடுத்த நாள் காலை, எங்கு வாத்தியார் வீடு திரும்ப ஒழுவுதோ என்று பயத்தில் அவன் சென்று பார்த்தபோது இரண்டு இடங்களில் கசிவு இருந்தது

‘வாத்தியார், “என்னப்பா இது?” என்று சலித்துக் கொண்டார்.

“இல்ல சார் சரி பண்ணிடுவம், தண்ணி ஓடாமல் தேங்கி நிக்குது, அதான்”, என்றான் அவன். “கீழே சாரம் போட்டு விரிசல் எல்லாம் கெமிக்கல் பூசனும், மேல தளத்தில் ஐல்லி போட்டு வாட்டம் காட்டி டைல்ஸ் பதிக்கனும் சார் எல்லாம் செஞ்ச பிறகு பாருங்க ”

“என்னம்மோ செய்யுங்க” வாத்தியார்க்கு நம்பிக்கை இல்லை, அம்மா முகத்தில் கவலை தெரிந்தது

ஆட்களை எதிர்பார்த்து வெளியே வந்தான். மேஸ்திரி மொத்த ஆட்களோடு வந்து கொண்டு இருந்தார், இன்னும் இரண்டு நாட்கள் வேலை இருக்கிறது ”

“என்னப்பா செட்டியார் இப்படி பண்ணிட்டாரு>|

“ஏன்ணன் என்னாச்சு?”

“தீவாளி கழிச்சு செய்யலாம்னு சொல்ராரு. இந்த பயலுவல மண்ண ஏத்தி வைங்கடானு சொன்னன்,உட்டுட்டானுவ. அமுதா காலையிலே சலிக்கப் பார்த்து இருக்கு செட்டியார் பார்த்துட்டு வேலை ஆவாதுனு நெறித்துட்டாரு, என்ன செய்யறது?”

“மேலே வாங்க வாத்தியார்ட்ட பேசி பார்ப்போம்” என்றான் அவன்.

“சார் ஆளுவ நிறைய இருக்கு, நீங்கள் ஒத்துகிட்டா நாளைக்கே வேலையை முடித்துக் தரேன்,” என்று வாத்தியாரிடம் சொன்னார் மேஸ்திரி. வாத்தியார் அவனை பார்த்தார்.

|என்ன சொல்ரப்பா?”

அவன் சொல்வதற்க்குள் மேஸ்திரியே, “தீவாளி வருது சார், ஆளுவ இப்ப எங்க போவும்? நீங்க மூணு ஆள் சம்பளம் குறைச்சு கொடுங்க, நான் நிரவி கொடுத்து விடுறேன்.,” என்றார்.

வாத்தியார் ஒத்துக் கொண்டு உள்ளேயிருந்து கருப்பு கலர் பாலித்தீன் சீட் கொண்டு வந்து கொடுத்து அதை தளத்தில் விரித்து அதன் மேல் கான்கீரிட் இடவேண்டும் என்றார்

“அதுக்கு என்ன சார், ஐோரா செய்வோம்,” என்றார் மேஸ்திரி. அவன் மறுத்து, ஐல்லி கொட்டும்போதே பாலித்தீன் ஓட்டை விழுந்துடும் பிறகு இட்டு என்ன பிரயோசனம் என்றதற்கு வாத்தியார் ஒத்து கொள்ளவில்லை மேஸ்திரியும் வாத்தியாருடன் சேர்ந்து கொண்டார், அவன் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்ப்பதை தவிர? ஐல்லி மணல் ஏற்றும்வரை அதையேதான் செய்தான். வாட்டம் காட்ட புல்லோடு வைத்த பழனி இரண்டு நாளில் தங்கச்சிக்கு வரிசை கொண்டு போவனும் என்றும், மணி தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போவனும் என்றும், கலவை கொண்டு வந்த அமுதா கூரை வீட்டை பெருமழைக்கு முன் பிரித்து கட்டனும் என்றும் கவலைப்பட்டனர். அதில் அவனது கவலை அடிபட்டுப் போனது

“ஆனாலும் செட்டியார் இப்படி செய்ய கூடாதுண்ண” என்றனர் அவனிடம்

“பொறுங்க, மேஸ்திரிட்ட சொல்லி செட்டியாரிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி தர சொல்றேன் கவலைப்படாம வேலை செய்ங்க,” என்றான் அவன்.

பழனியும் மணியும் சிறுவயது முதலே இவ்வேலைகள் செய்து வருவதால் தேர்ந்த குயவன் போல் கை வணங்கி வரும், அருமையாகச் செய்தனர்” நினைத்ததைவிடச் சிறப்பாக வேலை நடந்தது தினம் இரவு எட்டு மணி வரை வேலை செய்து முடிக்கும்போது வாத்தியாருக்கு முகமெல்லாம் பல்லாக தெரிந்தது. மேஸ்திரியிடம் சம்பளம் கணக்கு தீர்த்து அனுப்பிவிட்டு இவனிடம், “பையன் வந்துடட்டுமே”, என்று சொல்லி அனுப்பிவிட்டார்..

மனம் வெறுமையாக இருந்தது, விடிந்ததிலிருந்தே மழை சிறு தூறல் விட்டுவிட்டுப் பெய்தது. குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி மழையைப் பார்த்து கொண்டு இருந்தான். மேஸ்திரி அவனைத் தேடி வந்தார், செட்டியார் நாளை வரச் சொல்லி இருப்பதாகவும் அவனையும் உடன் அழைத்து வரச் சொன்னதாகவும் காலையில் வருவதாகவும் சொல்லிச் சென்றார் பணம் சீக்கிரம் கிடைத்துவிடும் என்று சிறிது நப்பாசை தோன்றியபோது வானம் கிடும்புடும் என்று கமறியது

“ஏங்க வெளியே போவாதிங்க. கீழ் மாரி கொள்ளுது சரி மழை பிடிக்கப் போவுது,” என்றாள் மனைவி

இடிச்சத்தம் வரும்போது குழந்தையோடு அவன் உடம்பும் ஆடியது மாலையில் கல்லூரியில் படிக்கும் தம்பி அவன் நினைத்த கத்தரிப்பூ கலரில் குழந்தைக்கு துணியும் சென்னையில் வேலை பார்த்த தம்பி அவனுக்கு துணிமணியும் எடுத்து வந்து பார்த்து சென்றனர் மனம் நெகிழ்ந்திருந்தது அவனுக்கு

இரவு முழுவதும் மழை விட்டுவிட்டுப் பெய்தது. காலையிலே மேஸ்திரி வந்து விட்டார். செட்டியாரை சென்று பார்த்தபோது, எவ்வளவு என்று கேட்டு அவன் முன்னிலையில் மேஸ்திரிக்குக் கொடுக்க வேண்டியதை எண்ணிக் கொடுத்து நோட்டில் எழுதி கொண்டார். இருவருமே பணம் வேண்டுமா என்று அவனைக் கேட்கவில்லை, அவனும் கேட்டு விடலாமா என தயங்கிக் கொண்டிருந்தபோது, “வா தம்பி, வழியில் டீ சாப்பிட்டு போவலாம் என்று பேச்சை முடித்துவிட்டார் மேஸ்திரி. சரி என்று அவனும் போக வேண்டியதாகிவிட்டது. டீ சாப்பிடும்போது, மேஸ்திரியிடம் காசு கேட்கலாமா, இதுவரை அப்படி கேட்டதில்லையே” என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மனது வேண்டாம் என்றது மேஸ்திரியிடம், “எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

வரும் வழியில் வாத்தியார் வீடு செல்லத் தோன்றியது, கேட்டில் நின்ற டைகர் இவனைக் கண்டதும் குரைக்காமல் ஊம்ம் என்று பிரியமாய் குரல் எழுப்பிய சத்தத்தில் அம்மா வெளியே வந்தார்கள்

“வா தம்பி உன்னைத்தான் பார்த்துட்டு இருந்தேன்”.

அவன் பயந்து மேலே பார்த்தான் அங்கெல்லாம் ஒழுவியிருக்கவில்லை

“தம்பி ராத்திரிதான் வந்துச்சி, உன்னைத்தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சி இரு கூப்பிடறேன்,” என்று உள்ளே சென்றார்கள்

டேபிளில் புதுத்துணிகளோடு பைகள் சுவிட் எல்லாம் இருந்தது அவனுக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் பரபரப்பும் தோன்றியபோது உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.

“தம்பி அந்தப் புள்ள கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சுச்சுப்பா,ஏதாவது செய்யணும்பா”

“என்னம்மா சொல்ற, அவன் என் பிரண்டும்மா கோவிச்சுபாம்மா,” என்று வெளியில் வந்தான் நண்பன்.

“நல்லா இருக்கியா?”

“இருக்கேன்ண”

“ஏய் உன் புண்ணியத்துல வீடு ஒழுவுல. அப்பா அம்மாவுக்கு தீவாளி பரிசு கொடுத்துருக்க” என்று சிரித்தான். “ஏதாவது வேணுமா, சாப்பிடுரியா?”

இல்ல சாப்பிட்டுட்டன், வரேங்க,” என்று கூறியபோது குரல் மேலன்னத்தில் ஒட்டி தாழ்ந்து ஒலித்தது அவனுக்கே கேட்டது. அவனுக்கு அவனையே பிடிக்கவில்லை, இறங்கி நடந்தான் மழை பெய்தது…….

(Art credit to http://www.surrealismnow.com/jeroenvanvalkenburg.html)

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.