திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]

பாவண்ணன்

popsicle-stick-house

ஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின்  விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.

போட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற  கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமிஇங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக்கும்என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.

அது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு  வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.

கையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது.  இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது.  சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க  என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணேஎன்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆர்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள்என்னடா செய்றிங்க?” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.

காற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓடினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களாஎன்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற?” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடாஎன அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம்எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா?” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா?” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போஎன்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.

ஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்துவைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.

சந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து  ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம்? புள்ளய காட்டி என்ன பிரயோஜனம்? அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சிஎன்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் தம்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயாஎன்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.

இருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.

திண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது  ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலில் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.

பழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய நாளொன்றில்அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குதுஎன்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடாஎன்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகுஇல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாருஎன்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமேவாடா, வேகமா போயி பாக்கலாம்என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினான்.

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்?” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.

நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.

கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா?”

மாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.

செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து கையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன்? கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ? புத்தி இல்லாத மடயனா நீ? ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”

அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்குவிழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.

என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழிய பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல? திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”

நான் எங்கக்கா போவன்? எனக்கு ஒருத்தரயும் தெரியாதுக்கா…..”

பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க.  முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”

ஐயோ அக்கா

டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”

அத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

அத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று  கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு  இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.

அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடுஎன்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலைஎன்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகுநாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

மறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே  அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவுஎன்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார்ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமிஎன்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.

மாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில்எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே?” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா?” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.

என்னங்ண்ணே இது? ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணேஎன்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடுஇங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணேஎன்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடாஎன்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போதுஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணேஎன்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போஎன்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.

அடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டிஎன்ன தம்பி? யாரு ஓணும்? யார தேடற?” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடிகுடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மாஎன்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இருஎன்றாள் அவள்.

ஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா?” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல்என்ன சாப்பாடு சாப்புடற நீ? இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு? ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா?” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போஎன்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில்அண்ணே அண்ணேஎன்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.

என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட? ஏதாச்சும் கோயில் பயணமா?” என்று கேட்டான் மாயாண்டி.

கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு? ஊரு எதுக்கு? அதான் கெளம்பிட்டம்ண்ணே

பக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.

இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணேஎன்றான்.

கனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணேஎன்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா? அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடுஎன்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாகசரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா?” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்என்றான் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.

புறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான்.  பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

வருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் மாயாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா?. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாருஎன்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடாஎன்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.

ஆண்டாள் அன்று இரவு  எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடிநா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன்? வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு?” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.

போட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீட்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம்நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா?” என்று கேட்டான்.

பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு

ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.

ஒனக்கு எதுக்குடா தட்டு?”

என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”

முத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ? ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா?” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்குவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.

இரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.

வானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.

நள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது.  முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பாஎன்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி.  அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.

டேய் பசங்களா, ஏந்துருங்கடா

முத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத்துக்கொண்டது.

முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா

எங்கம்மா?” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.

பெங்களூருக்குடா. குமாரசாமி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்

திண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.

கண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமிஎன்னடா?” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.

திடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மாஎன்று சொல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.

எல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில்சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாருஎன்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா?” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருதுஎன்று சொல்லிவிட்டு சிரித்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.