எளிமையில் மிளிரும் கலைஞன்

ரமேஷ் கல்யாண்

Jpeg

பாவண்ணனின் கதைகள் அனைவருக்குமானது. அனைவரைப் பற்றியுமானது. அவரது கதைமாந்தர்கள் சாதாரணமானவர்கள். எளியவர்கள். அவரது கதைகள் நம் தோளில் கைபோட்டபடி பேசிச் செல்பவை. அவற்றை வாசிப்பதில் நாம் கொள்ளும் நிறைவுக்கும், நெருக்கத்துக்கும் முக்கியமான காரணங்களில், அவர் ஒரு மிக நல்ல, தேர்ந்த வாசகர் என்ற காரணத்தைத்தான் முதலாவதாக கருதுகிறேன். நன்றாக ருசித்து சாப்பிடத் தெரிந்த ஒருவரால்தான் நன்றாக சமைக்கவும் முடியும்.

அவருடைய முன்னுரைகள், கட்டுரைகள் போன்றவற்றில் அவர் தன் வாசிப்பு அனுபவத்தை நமக்கானதாக விரித்துப் பகிர்வதைக் காண முடியும். கநாசுவின் பொய்த்தேவு நாவலுக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரை இதன் சாட்சி. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை என்று அனைத்திலும் பங்களிப்பு செய்திருக்கும் தமிழின் முக்கியமான எழுத்துக் கலைஞர்களில் ஒருவர். தன் அனுபவங்களை, தன் பார்வையில் கண்டவற்றை, கண்டடைந்தவற்றை – கலாபூர்வமாக பதிவுசெய்து கொண்டே போகிறார். வடிவங்களை எழுத்துக்கள் தீர்மானித்துக்கொள்கின்றன.

புதையலைத் தேடிஎன்ற நூல் அவர் படித்த புத்தகங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. புத்தகங்களை வாசிப்பனுபவமான கட்டுரை மூலமாக அறிமுகப்படுத்தும் வகை எழுத்துகளின் முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புத்தகத்தை தேடிப் படிப்பதில் பாவண்ணனின் தீவிர ஆர்வத்துக்கு ஒரு சோறு பதம்,ஒரு புதையலைத் தேடிஎன்கிற அவரது கட்டுரை.

கநாசுவின், தமிழ் வாசகன் படிக்க வேண்டிய புத்தகங்கள், என்ற பட்டியலைப் படித்து, ஒவ்வொன்றாக சென்று தேடித்தேடி இரண்டாண்டுகளில் அனைத்தையும் படித்து விடுகிறார். ஆனால் ராஜன் எழுதியநினைவு அலைகள்என்கிற புத்தகம் மட்டும் கிடைக்கவில்லை. யாரைக் கேட்டாலும். எந்த நூலகம் போனாலும் கிடைக்காமல் போகிறது. பிறகு அந்த ஏமாற்றத்துடனேயே முப்பது ஆண்டுகள் கழிகிறது. உப்புச் சத்தியாக்கிரகம் பற்றிய குறிப்புக்காக புத்தகங்களை தேடுகையில் ஒரு கட்டுரையில்தியாகிகள் ராஜன் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்என்று ஒரு வரி வருகிறது.  ஆனால் இந்த ராஜன் அந்த ராஜன்தானா என்று தெரியாமல் தவிக்கிறார். பிறகு அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் ராஜனைப் பற்றி எழுதியிருப்பதை பார்த்துவிட்டுஅவர் இவர்தான் என்று நிம்மதியடைகிறார். பிறகு முகம்மது யுனுஸ் எழுதிய பர்மா குறிப்புகள் புத்தகத்தில ராஜன் ஒரு மருத்துவர் என்றும் மரியாதைக் குறைவால் மனம் வாடி பர்மாவை விட்டு வெளியிறினார் என்பதையும் படிக்கும்போது பாவண்ணனுக்கு ஆவல் அதிகமாகிறது. மறுபடி தேடுகிறார். ஒரு நாள் பெங்களுர் தமிழ்ச்சங்கத்தில பழைய புத்தக குப்பைகளைப் புரட்டுகையில் புழுதிபடிந்த அட்டையுடன்நினைவு அலைகள்கிடைக்கிறது. புதையல் கிடைத்துவிட்டது என்று உடனே நூலகரிடம் சென்றுநான் எடுத்த புத்தகத்துக்கு பதிலாக இதை மாற்றித்த தாருங்கள்என்கிறார். நூலகர் அது முடியாது. அதற்கு இன்னும் பதிவுஎண் போடப்படவில்லை. எண்கள் இட்டு அடுக்கியபின் பிறகு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார். மறுபடி அதை தேடிச் செல்லும்போது புதிய அடுக்குகள் உள்ளன. ஆனால் அதைக் காணவில்லை. பிறகு சில மாதம் கழிந்து நண்பரிடம் முப்பது ஆண்டுகளாக தொடரும் இந்த ஏமாற்றத்தைப் பற்றி சொல்லுகையில் அவர் கவலைப்படாதீர்கள். புது அச்சில் தயாராகிறது என்று சொல்லி வெளிவந்தவுடன் இவரிடம் தருகிறார். இவர் படித்து முடிக்கிறார். எப்படியிருக்கிறது அவருடைய தேடிலின் இந்த ஒரு சோற்றுப் பதம்!

இவர் ஒரு கவிஞர் கூட. அதற்கும் அவரது ரசனையும் வாசக ஈடுபாடுமே காரணம். அவரது மனம் வரைந்த ஓவியம்தொகுப்பில், நவீன கவிதைகள் பலவற்றை அறிமுகம் செய்து பேசும் கட்டுரைகள் மூலமும் நாம் இதை அறிய முடிகிறது.

அவருடைய கதைகளில் அவர் கதைச் சூழலில் தன்னைக் கரைத்துக் கொண்டு,  அப்படி இருந்தும் அதற்குள் இருந்தபடியே சற்று விலகி நின்று பார்த்து அதைச் சொல்லும் பார்வை ஒன்று இருப்பதையும் காண முடியும்.  இது ஒரு வித்யாசமான ஆரோக்யமான பார்வையும் உத்தியும் கூட. இதனால், நம் அனுபவத்தின் ஏதோ ஒரு துளியை அவரது கதைகளில் நாம் அடையாளம் காண முடியும் அல்லது நெருக்கமாக உணர முடியும். ஒரு புகைப்படத்தில் காற்றில் யதேச்சையாக தனியாக பிரிந்து அசையும் கூந்தல் பிரி, முகத்தின் மேல் விழும் நிழல் ஒளி கலவை, புகைப்படத்தை ஒரு பிரத்யேக அழகியல் நிலைக்கு கொண்டுபோகும் யதேச்சை போல நாம் காண முடியும் சக மனிதர்களில் இயல்பில் ஏதோ ஒன்று தனியாக கவனப்படுத்த முடியும் படி அமைத்து கதையை அழகியலுக்கு அருகே கொண்டு போய் விடும் எழுத்து லயம் இவரிடம் காணமுடிகிறது.

அனுபவத்தை கட்டுரையாக்கலாம். கதையாக்கலாம். கவிதையாக்கலாம். ஆனால் அதனதன் வடிவங்களை நிர்ணயிப்பதோ, அதற்கான அலைவரிசையில் சொல்வதோ சவாலானதொரு விஷயம். கொஞ்சம் சறுக்கினாலும் ஒன்று வேறொன்று போல நழுவிவிடும். ஆனால் அப்படி ஆகாமல் அதை அதாகவே தருவதுதான் எழுத்தாளுமை. அசோகமித்திரனிடம் இந்த மென்நுட்பத்தைக் காணமுடியும். பாவண்ணனிடமும் இதைக் காணமுடியும்.

உதாரணத்திற்கு  வார்த்தைஇதழில் இவர் எழுதிய ஏரியின் அமைதிஎன்ற கட்டுரை. தாம் பார்த்துப் ரசித்த ஏரியைக் கண்டு, அதன் அசைவின்மை ஒரு மரணத்தை நினைவூட்டி அச்சப்பட வைக்கும் நொடியை அதில் காட்டி இருக்கும் நல்ல படைப்பு அது. ஏரி ஒரு நீர் நிலையாக நம்முடனே வாழ்கிறது. அதன் அசைவுகள் அதற்கு ஒரு உயிர்ப்பை ஊட்டியபடியே  இருக்கின்றன. ஆனால் நீரில் மூழ்கி நண்பனின் மரணம் ஒன்றை கண்டபிறகு அதன் குளிர்ச்சி மிகுந்த முகம் அச்சமூட்டுவதாய் நெளியும். முகத்தில் அடிக்க கைகளால் நீரை அள்ளும்போது ஏரியைப்பார்த்தேன். எல்லாம்  தெரிந்தும் எதுவும் தெரியாத பாவனையில் அசைவே இல்லாமலிருந்தது ஏரி. அமைதியான அதன் முகத்தை முதன்முதலாக அச்சத்துடன் பார்த்தேன்என்பது கடைசி பத்தி. “அமைதி“ – “அச்சம்என்ற இருதுருவங்களை ஒரே வாக்கியத்தில் வைத்து அதன் இடைவெளி தரும் அனுபவத்தை நம்மிடம் தந்துவிட்டுப் போய்விடுவதைப் பாருங்கள்.  சமீப சென்னை வெள்ளத்தில் நீரின் பெருக்கை கண்டபோதுகுழந்தைகள் குழாய் தண்ணீர் பெருகுவதை கண்டும் கூட அச்சப்படும் நிலை என்று பதிவுகளைப் படித்தபோது பாவண்ணனின் இந்த ஏரி எனக்கு நினைவுக்கு வந்தது.

அவருடைய நல்ல சிறுகதைகளில் ஒன்று விகடனில் வந்திருந்த  ‘காணிக்கை‘. இசையின் பின்னணி இல்லாமல் வசனங்கள் இல்லாமல் வாழ்வில் அன்பைப் பற்றிய குறும்படம் ஒன்றின் உச்சக் காட்சியை ஒத்திருக்கும் இந்த கதையின் இறுதிப் பகுதி. திரும்ப திரும்ப என்னைப் படிக்கவைத்த கதை இது. அதில் காட்டுப் பகுதியில் நடக்கும்போது அவ்வப்போது கூவிக்கொண்டு கிளைகள் தாவியபடி கூடவே வரும் குயில் கூட ஒரு பாத்திரம். ஆனால் அது வாசகன் கண்களில் படாது. 

இந்த கட்டுரை போனால் போகிறதுஅந்த கதையை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.

ஐயனார் கோவில் முடி இறக்கி காணிக்கை செலுத்துவதற்கு கணேசன் தன் மனைவி மற்றும் மகளுடன் இறந்துபோன தன் அம்மாவின் நினைவுகளை சுமந்தபடி.கோவிலுக்கு வந்து போகிறான். பழைய நினைவுகளும், சிறுபிராய தருணங்களும், அம்மாவின் மரணமும், தற்போது பெருகியுள்ள குடும்ப நினைவுமாக ஒன்றையொன்று தழுவியபடி செல்லும் சிறுகதை.  பொங்கல் அடுப்பு எரிந்து கொண்டிருக்க பம்பைக்காரனுடன் வந்து மர நிழலில் ஓய்வெடுத்து பிறகு தலைமுடியில் நீர் தெளிக்கும்போதுஐயனாரப்பனை நினைச்சிக்கப்பாஎன்று நாவிதன் சொல்லும்போது அவனுக்கு அம்மாவின் நினைவு வருகிறது. இந்த ஒரு வரியில் அவர் அம்மாவை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார். மழிக்கப்பட்டு முடிக்கற்றைகள் விழும்போது அம்மாவின் நினைவு. எதற்கெடுத்தாலும்  என் குழந்தையை உடல் நலம் நன்றாக ஆக்கிவிடு அய்யனாரப்பா.. படையல் வைக்கிறேன்  என்று மஞ்சள் துணியில் நாணயத்தை காணிக்கை முடிந்து  வேண்டிக்கொள்ளும் அன்பு நிறைய ததும்பும் அம்மா அவள்.

அம்மாவுடனான் தன் சிறுபிராய நினைவு வருகிறது. எந்த சின்ன குழந்தையை கண்டாலும் கன்னத்தை கிள்ளி முத்தமிடும் அம்மாவிடம்உன் விரலையே நீ முத்தம் கொடுத்துக் கொள்கிறாயே“..என்று கேட்கும்போதுஉங்க அப்பனுக்கும் உனக்கும் நான் என்ன செய்யறேன்னு கவனிக்கறதே வேலையா போச்சுஎன்று செல்லமாய் விரட்டுவாள் அம்மா. “எனக்கும் அப்படி முத்தம் கொடுஎன்று சிறுவனாயிருந்த தான் கேட்கும்போதுவெறகுக் கட்டையால அடிப்பேன். போய் படிக்கற வேலைய பாருஎன்று துரத்துவாள். அடம் பிடிக்கும் மகனிடம்எதுக்குடா இப்பிடி ஒட்டாரம் புடிக்கிறஎன்று கேட்டுவிட்டு கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டுப் போவாள். இந்த நினைவு நிழலாடி முடியும்போது முடி மழிப்பும் முடிந்துவிடுகிறது.அய்யே அப்பா. மீசை இல்லாம நல்லவே இல்ல. எப்படி ஆபீஸ் போவேஎன்று கிண்டல் செய்கிறாள் மகள். சேவலையும் பூஜைப் பொருளையும் எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்கிறார்கள்.  நோயில் விழுந்து உடலெல்லாம் குழாயும் மருந்துமாக அம்மா தீவிர சிகிச்சை பலன் இன்றி இறந்து போனது நினைவுக்கு வருகிறது. அப்போது ஒரு குயில் கூவுகிறது. அது அம்மாவின் குரல் என்று நம்பி அதைத் தேடுகிறான். மகள் விரல் காட்டும் திசையில் பார்க்கிறான். குயில் தெரியவில்லை. குரல் மட்டுமே கேட்கிறது. நடந்து வருகையில் இந்த காணிக்கை செலுத்துவதற்கான காரணத்தை மனைவியுடன் செய்த உரையாடலை மனம் அசைபோடுகிறது. 

அம்மா இறந்த பிறகு ஒரு நாள் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மாவுக்கு உடல் நலம் மோசமாகும்போது  அவள் தனது கையை பிடித்துக் கொள்ளும்போது இவன் மனம் நெகிழ அய்யனார் கோவிலில் வந்து இவள் பிழைத்துவிட்டால் முடி காணிக்கை தருவதாக வேண்டிக் கொண்டதை மனைவியிடம் சொல்கிறான். “இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையேஎன்று அவள் ஆச்சரியமாக கேட்கும்போதுஇப்போதும் கூட இல்லைதான். ஆனால் அந்த சமயம் அப்படி தோன்றிவிட்டதுஎன்கிறான். வாழ்வின் மகத்தான ஒரு உண்மையை மிக எளிதான ஒரு உரையாடலில் சொல்லிவிடும் அற்புதம் இங்கு நிகழ்வதை கவனியுங்கள். இதற்கு சிகரம் வைக்கும் வரி அடுத்து வருகிறது. ஆனாலும் அம்மா இறந்து விட்டாள் அல்லவா. ஆகவே எதற்காக காணிக்கை செலுத்தவேண்டும் என்று கேட்கும்போது மனைவி சொல்கிறாள் இது என்ன வியாபாரமா. காணிக்கை என்றால் செலுத்திவிட வேண்டியதுதான் முறை என்கிறாள். அதனால் இன்று கோவிலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கொள்கிறான்.

ஐயனார் கோவிலுக்கு போகும் வழி எங்கும் குயிலின் குரல் கிளைகள் இடையே விட்டு விட்டு கேட்கிறது. அவனால் ஒரு முறையும் அதை கண்ணால் காண இயலுவதில்லை. அது அம்மாவின் குரல் என்பதை அவன் மட்டுமல்ல வாசகனே நம்பத் தொடங்கி விடுகிறான். பூசாரி கூடஅம்மா வரலையா?“ என்று கேட்டு பிறகு வருந்தி மகராசி என்று வாழ்த்தி இதெல்லாம் நம் கையில் இல்லை என்று சமாதானித்து பூஜை செய்கிறான். பிறகு வெளியே வந்துஇதோ பாருப்பா என்று மகள் குயிலை காட்டுகிறாள் அப்போதும் இவன் கண்ணுக்கு தெரியவில்லை. அப்பா தெரியாதது போல் நடிக்கிறார்என்று மகள் கிண்டல் செய்கிறாள். 

அப்போது மனைவி அவரை அப்படி சொல்லாதே. அவர் அப்படியான ஆள் இல்லைஎன்று சொல்லிநான் சொல்றது சரிதானேஎன்று அவனைப் பார்த்துக்கொண்டே கேட்கிறாள். இவனுக்கு அம்மாவின் நினைவு பொங்கியபடியே இருக்கும்போது, பேசிக்கொண்டிருந்த மனைவி சட்டென ஒரு நொடியில் அவனது கன்னத்தை கிள்ளி விரல் முத்தம் கொடுக்கிறாள். உடல் சிலிர்க்க மனைவியை புதியதாக பார்க்கிறான். அம்மாவின் அன்பு என்பது மனைவியின் கை மூலம் இடம் மாறும் ரசவாதத்தை நிகழ்த்தும் அற்புதமான கணம் இது. காரில் ஏறியபின் அவனது கையைத் தன் கைக்குள் பொத்திக் கொள்கிறாள் என்று கதை முடிகிறது. 

வெறும் அம்மா செண்டிமெண்ட் கதையாக இல்லாமல் அன்பு, நம்பிக்கை, உறவு, நெகிழ்ச்சி என்று பன்முகத்தை சொல்லிப் போகும் எளிமை இவரது பெரும் பலம். அசோகமித்திரனை பற்றி சொல்லும்போது அவரது எளிமை நம்மை ஏமாற்றி விடக்கூடியது என்று ஜெயமோகன் சொல்வார். அதையே பாவண்ணனுக்கும் பொருத்தலாம். 

சமீபமாக விகடனில் வெளிவந்த கதையில் கோழியை விற்கும் சைக்கிள்காரன் பற்றிய சித்திரத்தை அணுக்கமாக சொல்லி இருப்பார்.  இருவாட்சி இலக்கிய இதழில்ஒளிவட்டம்என்ற சிறுகதையில் மேடை நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்யும் ஒருவரின் வாழ்க்கையும் அதில் அவர் மரணமும் பற்றி சொல்லி இருப்பார். அதே போல தளம்  இலக்கியச் சிற்றிதழில்கண்காணிப்பு கோபுரம்என்ற சிறுகதையில் ஒரு காட்டின் கண்காணிப்பு கோபுரத்தில் காவல் தனிமையில் வேலைசெய்யும் அஜய் சிங்கா என்ற சிப்பாய் பற்றிய சித்திரத்தை தந்திருப்பார். சிலிகுரியில் வேலை செய்தவன். மேலதிகாரியின் காலணியை துடைக்க மறுத்ததால் கீழ்ப்படிய மறுத்தவன் என்று சொல்லி தண்டனையாக இங்கு அனுப்பிவிட்டதைச் சொல்லியிருப்பார். படிப்பதற்கு செய்தித்தாள் கூட இல்லாமல் இருக்கும் அந்தக் காட்டில் இருக்கும் சிங்காவுக்கு பேழைய பேப்பர் கடைக்கு சென்று பத்துகிலோ இந்தி செய்தித்தாட்களை அனுப்பி வைப்பதாக இருக்கும் இடம் தண்டனைத் தனிமையின் உக்கிரத்தை சொல்லும். நம்முடைய பார்வையில் பட்டு புத்திக்குள் நுழையாத சில விஷயங்களை இவர் கதைக்களன் ஆக்கிவிடுவது இவரிடம் உள்ள விசேஷம்.

இவருடைய நதியின் கரையில் கட்டுரை ஒன்றில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வரும் கர்நாடக மலைப் பகுதியான ஆகும்பே வில் நடந்த ஒன்றை சொல்லி இருப்பார். பலரும் மாலை வேளை நெருங்கி ஆனால் இருள் படரும் முன்பே அந்த மலைப்பகுதிக்கு சென்று சூரியன் மேற்கில் விழும் அழகை காண விரைவார்கள். காட்டுப் பகுதியும் குறைந்த நடமாட்டமும் உள்ள மாலையில் தான் வரும் வண்டியிலேயே ஒரு இளம் ஜோடிகள் உல்லாசமாக சிரித்து வரும் இளமையை ரகசிய நெருக்கத்தை சொல்வார். அஸ்தமனம் பார்க்கும் கூட்டத்தைப் பற்றி சொல்வார். மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுவிடுபவர்களை தேடிக் கண்டு பிடிப்பதையே ஒரு தொழிலாக இருக்கும் ஒரு ஆளைப் பற்றி குறிப்பிட்டு, தான் இருபது நிமிடத்துற்கு முன்பு பார்த்த அந்த ஜோடிகளை தேடி அந்த ஆள் புறப்படுவதாக  சொல்லியிருப்பார். “ஒரு மனிதரும் சில வருஷங்களும்குறுநாவலில் ரங்கசாமி நாய்க்கர் பாத்திரத்தைப் படிக்கையில், முதல்மரியாதை சிவாஜி இதிலிருந்து வந்தவரா என்று தோன்றும்.

சங்கத் தமிழ், நவீனம், நாடகம், நவீன கவிதை, ஐரோப்பிய மேற்கத்திய இலக்கியம், கன்னட இலக்கியம் உட்பட பல்வகை இலக்கியங்களை வாசித்து ருசித்தவர். அதை மிக சுவாரசியமாக பகிர்ந்துகொள்ளக் கூடியவர்.

நவீன சிறுகதை வடிவங்களில் கதையின் உள்ளடக்கம் எப்படி தன்னை விரித்துக் கொள்கிறது என்பதில் உள்ள நுட்பமும், அது வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் விசையும், மணலில் விழும் நீர் உள்ளூறி அதன் ஈரம் உள்ளுக்குள் இருப்பது போன்ற வாசக மனநிலையை உண்டாக்குவதும் முக்கியமானவை. அவ்வகையில் அத்தகு நிறைவை இவருடைய பல கதைகள் தருகின்றன.

அவரைப் போல அவர் எழுத்தா, அவர் எழுத்தைப்போல அவரா எனும்படிக்கு அவரது உலகம் நட்புடன் இழைந்த எளிமையானது. அவரது படைப்புகளைப் படித்துவிட்டு அவரை நேரில் சந்தித்தபோது திகைக்க வைக்கக்கூடிய எளிமையாக அவர் இருந்தார். எவ்வளவு தூரத்தையும் பேசிக்கொண்டே, நடந்தே கடந்துவிடக்கூடியவர். ஆழமாகவும், நிதானமாகவும் யோசித்து அனுபவித்து எழுதவும் பேசவும் கூடியவர். குடியாண்மைப் பணித் தேர்விற்கு முயன்றவர் என்பதிலிருந்தே இவரது அர்ப்பணிப்பு உணர்வு தெரியவரும்.  மட்டுமின்றி, தமிழரான இவர் பெங்களுர் வந்தபிறகு கன்னடத்தை ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டு, இலக்கியங்களைப் படித்து அவற்றின் சாரங்களை தமிழுக்கு மடைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியமான ஆளுமை.

மூலப்படைப்பாளியாக இருந்துகொண்டும், தாம் படித்தவற்றை கட்டுரைகளாக எழுதுவதில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால், இவர் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை உணரலாம். அவர் தனது படைப்புகளை இறுக்கமான நேரத்தேவைகளுக்கு இடையில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல புத்தகத்தை படித்த உடன் அது பற்றி பகிர்ந்து கொள்ளும் ஆவல் மதிக்கப்பட வேண்டியது.  உதாரணத்திற்கு உப்புவேலி பற்றி இவர் எழுதிய உடனடிக்கட்டுரைஇப்படி பலவற்றை சொல்லலாம்.

நிகழ் இலக்கிய சமூகத்தில் அவர்மீது படவேண்டிய நியாயமான வெளிச்சம் இன்னும் முழுமையாகப் படவில்லையே  என்ற எனக்கிருக்கும் ஏக்கம் பலருக்கும் இருக்கும் என்றே நம்புகிறேன்.  அதுகுறித்து பற்றற்ற அல்லது வேதாந்த மனநிலை ஒன்று அவருக்கு வாய்த்திருக்கக் கூடும். ஆனால் நாம் அவரது எழுத்துகளைக் குறித்து பேசும் வாய்ப்புகளை இவ்வகைப் பதாகைகள் மூலம் உயர்த்திப் பிடிக்கவேண்டும். அது ஒரு இலக்கிய வாசக சுகம். 

(இந்த கட்டுரையை எழுதி முடித்த பின் பாவண்ணனுக்கு இலக்கியத் திருவிழா விருது கிடைத்திருப்பதாக செய்தி கிடைத்தது. நன்நிமித்தத் துவக்கமாக கொள்வோம். அவரைப் பாராட்டுவோம். )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.