மேலூர்சாலை குறுக்கே கடந்து
மேற்குச்சித்திரை வீதியில்
ரங்கநாயகித்தாயார் சன்னதி
தாண்டி நிமிர்ந்தால்
கோயில் வாசல் முன்
செங்குத்தாய்
ஒரு தனிக்கோயில்
அதற்குள் படிப்படியாய்
இன்னும் பலநூறு
சிறு கோயில்
இரு நூற்று
முப்பத்தொன்பது அடி
உயரத்தில்
புறா குருவி வவ்வால்கள்
சீரியல் விளக்குகள் இடையில்
தனக்கென தனிமாடம்
கிடைத்துவிட்ட பெருமையில்
வழக்கத்தைவிட
சற்று அதிகமாய்
வளைந்து நின்றாலும்
அளவாய் புன்னகைக்கும்
கடவுள்கள்
தண்டனைகள்
பிரார்த்தனைகள் போர்க்காட்சிகள்
மத்தியிலும்
தியானத்தை கைவிடாத
தேவர்கள்
நின்ற அமர்ந்த படுத்த
நிலைகளில்
நிமிர்ந்த பெரும் கொங்கை கொண்ட
தேவதைகள்
இன்னும் அதிகமாய்
ஆயுதம் ஏந்த வேண்டி
கூடுதலாய் கைகள் கொண்ட
கிங்கரர்கள்
முட்டைக்கண்
முறுக்கிய மீசையில்
அணிவகுத்து பயமுறுத்தும்
பச்சை நிறத்தசை திரண்ட
பூத கணங்கள்
சிங்கத்தலை கொண்ட
பூத முகங்கள்
கடவுளரின் சேவகர்கள்
சேவகரின் காவலர்கள்
காவலரின் ஏவலர்கள்
மற்றும் அவர்தம்
வளர்ப்பு பிராணிகள்
விருப்ப பல்லக்குகள்
ஆபரணங்கள்
ஆயுதங்கள்
குண்டலங்கள்
இசைக்கருவிகள்
விளக்குச் சரங்கள்
மாலை ஏந்தி
வரவேற்கும் யானைகள்
பல் மருத்துவர் முன்
பரிசோதிக்க
நிற்பது போல்
விரிவாய் வாய் திறந்த யாழிகள்
ஆடை நெகிழ்ந்த அழகிகள்
நெழிவுகள் சுழிவுகள்
நெஞ்சம் புடைத்த வீரர்கள்
வரிசையாய் வாத்துக்கள்
வளைவுகள் சரிவுகள்
மாலைகள் மனிதர்கள்
மாடங்கள் மேடைகள் திண்டுகள்
பூக்கள் கொடிகள் குடைகள்
பறவைகள் தேர்கள்,
இத்யாதிகள்.
அடுக்கடுக்காய்
நெருக்கமாய்
வரிசையாய்
நடுவிலும்
சுற்றிலும்
மேலும்
கீழும்.
இத்தனைக்கும் மேல்
சேட்டுக்கடை இனிப்பின்
சதுரங்கள் போர்த்தி
திரண்டெழுந்த மேடை
அதன்மேல்
வட்டக் கிரீடம் வைத்து
கூரிய முனைகொண்ட
கூம்பின் கீழ்
தலைகீழாய் மூடிக் கவிழ்த்து
ஆண்டுகள் பலநூறு
ஆன பின்பும்
பளபளப்பு மங்காத
பித்தளை கும்பாக்கள்
சுமார் பதிமூன்று
மற்றும்
அவற்றுள்
பயன்பாட்டில் இல்லாத
பழைய தானியம்,
கொஞ்சம் போல.
இதென்ன பிரமாதம் என
தொலை நோக்கியில்
அலட்சியமாய் பார்க்கையில்
ஏதோ ஒரு
வரிசையின் இடுக்கில்
மேளம் கொட்டும் சிற்பமாய்
முறைத்து நிற்கும்
ஒரு மீசை மனிதர்
அவர் மார்பில்
மாலைகள்,
நகைகள்
பூக்கள்
ஆ..ஆ…
ஈ
!
கவிதையின் அங்கதச் சுவை அகமகிழச் செய்கிறது.