நூல் மதிப்பீடு : காச்சர் கோச்சர் – கடலூர் சீனு

கடலூர் சீனு

குருதி… நீரினும் அடர்த்தியானது.
…….நாவலிலிருந்து…..

சில வருடங்கள் முன்பு கடலூரில் நடந்த சம்பவம். சுனாமி அழிவு நடந்து சில வருடங்கள். தூரத்தில் எங்கோ நிலநடுக்கம். கடலூர் முழுக்க வதந்தி. மறுநாள் அதிகாலை சுனாமி வரப்போகிறது. குறிப்பிட்ட கிராமத்தில் மக்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறினர். அந்த கிராமத்தில் உள்ள ஒருவர், வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் பத்திரமாக மூட்டை கட்டி வண்டியில் ஏற்றினார். முடக்கு வாதம் வந்து, பயனில்லாமல் போன முதிய தகப்பனை மட்டும் வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். மறுநாள் காலை வதந்தி எல்லாம் அடங்கி ஊரார் கிராமம் திரும்பிய பிறகே அது வெளியே தெரிய வந்தது. வதந்தியாக அன்றி சுனாமி வந்திருந்தால்? எந்தச் சுவடுமின்றி ஒரு உயிர் போயிருக்கும். கூடுதலாக அரசின் நிவாரணத் தொகையும் கிடைத்திருக்கும்.

இரவெல்லாம் பூட்டிய அறைக்குள் அந்த முதிய மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? அதன் பீதியின், விரக்தியின், கைவிடப்படுதலின், துயரின், இருள்வெளி என்னவாக இருந்திருக்கும்? இப்படி ஒரு நிலையை அடைய அவன் வாழ்ந்த வாழ்வு, இருக்கும் குடும்பம், அதன் உறுப்பினர்கள் உளப்பாங்கு, எல்லாம் என்னவாக இருந்திருக்கும்? நினைக்கவே விதிர்க்க வைக்கும் அந்த மின்சார வன்தொடுகை உணர்வையே அளித்தது, ‘காச்சர் கோச்சர்’ எனும் விவேக் ஷான்பாக் எழுதிய கன்னட நாவலின் வாசிப்பனுபவம்.

அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு ஹோட்டலில், இன்னும் அருந்தப்படாத காப்பி நிறைந்த கோப்பை முன் அமர்ந்திருக்கும் கதைசொல்லியின் நினைவுகளாக விரிந்து பரவி நிறையும். அதே போல இந்த ‘காச்சர் கோச்சர்’ கதையும், ஒரு காபி கிளப்பில் காப்பிக்காக அமர்ந்திருக்கும் கதைசொல்லி தான் வந்து நின்றிருக்கும் விடுவிக்க இயலா சிடுக்கு )கதைக்குள் இந்த நிலைக்கே காச்சர் கோச்சர் என அனிதா பெயர் சூட்டுகிறாள்) நிலை குறித்து வாசகருக்கு சொல்லும் கதையாக விரிகிறது.

திமிர் கொண்ட சோம்பேறி வாழாவெட்டி அக்கா, விட்டேத்தி அப்பா, சுயநல அம்மா, சம்பாதிக்கும் புள்ளியான திருமணம் செய்து கொள்ளாத சித்தப்பா, அவர் நிறுவனத்தில் சும்மா இருந்து சம்பளம் வாங்கும் கதைசொல்லி, அவனை மணம் புரிந்து கொண்டு அந்த குடும்பத்துக்குள் நுழையும் அனிதா. பொருளாதார மையம் எனும் ஒரே தூணான சித்தப்பா வெங்கடாஜலத்தை அண்டி வாழும் குடும்பம், அப்படி அண்டி வாழ்வதற்கு செய்யும் செயல்கள் தொட்டு அண்டி வாழும் கீழ்மை உட்பட அனைத்தையும் கேள்வி கேட்கும் அனிதாவை எவ்வாறு எதிர்கொள்கிறது? அப்படி குடும்பம் மொத்தமும் ஒருங்கு கூடி எதிர்கொள்ளும் சிக்கலில், கதைசொல்லியின் பங்கு என்ன? நிலை என்ன? அதை கதைசொல்லியே அவனது பார்வைக் கோணத்தில் வாசகருக்கு விவரிக்கும் வண்ணம் வடிவம் கொண்டதே இந்த நாவல்.

கீழ் நடுத்தர வர்க்கமான கதைசொல்லியின் குடும்பம் கைக்கும் வாய்க்கும் வருமானம் சரியாக இருக்கும் மாதச் சம்பள வாழ்க்கைக்குள், அதன் சாதக பாதகங்களை ஒன்றாக இணைந்தே கடக்கிறார்கள். நீரொழுக்கில் சிக்கிய எறுப்புக் கூட்டம் தன்னை பந்தாக திரட்டி ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில், நிற்க நிலம் கிடைக்கும் வரை பிழைத்துக் கிடக்குமே, அதே போன்றதொரு வாழ்வு. அவர்கள் வீடே ஒரு பெரிய அளவு எறும்புப் புற்று ஒன்றினுள் இருக்கிறோம் என உணரும் வண்ணம் எறும்புகளால் நிறைந்த வீடு. அத்து மீறி ஒழுங்குகளை குலைக்கும் எறும்புகளைத் தேடித்தேடி விதவிதமாக வேட்டை ஆடுவதே, அம்மாவின் உபரி நேரப் பணி.

வேலை போன பின் இழப்பீட்டு தொகையை கொண்டு அப்பாவும் சித்தப்பாவும் கூட்டுத் தொழில் துவங்குகிறார்கள். வருமானம் பெருகுகிறது. சொந்த வீடு. பொருட்கள் சேர்கின்றன. பழைய வீட்டை ஒழித்து, புதிய வீடு புகும் சித்திரம் கணுக்கணுவாக விவரிக்கப்படுவதன் வழியே அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் அகவயமான மாற்றம் துவங்கும் தருணம் புறவயமாக சித்தரிக்கப்படுகிறது. முன்பு பத்தாத சம்பள வாழ்வில் அதன் காரணமாகவே, ஏமாற்றங்கள் அளிக்கும் எதிர்பார்ப்புகள் யாருக்கும் இல்லை. இந்த புதிய வீடு, வணிக செல்வம் அளிக்கும் விடுதலை அவர்களை கண்டதையும் வாங்கி குவிக்க வைக்கிறது.

சித்தப்பாவை அண்டி வாழும் குடும்பம். வணிகத்துக்காக நிழல் வேலைகளில் இறங்கும் சித்தப்பாவை கண்டு கொள்ளாத விட்டேத்தி அப்பா. இவர்கள் குடும்பத்தின் முதல் அடுக்கு. இவர்கள் நிறுவனத்தில், வேலை செய்யும் தகுதியே இன்றி சும்மா இருந்து சம்பளம் பெறும் கதைசொல்லி, அவனது அம்மா இந்த குடும்பத்தின் இரண்டாவது அடுக்கு. இந்தச் சூழலில் தனது தேர்வான சித்ராவை உதறிவிட்டு வீடு கைகாட்டும் அனிதாவை மணக்கிறான். தனது கணவனின் சம்பாதிக்கும் திராணி, குடும்ப நிலை அறியாமல் இந்த அடுக்கு நிலைக்குள் நுழைகிறாள் அனிதா. இரண்டாம் அடுக்கில் இருக்கும் தனது நிலைக்கு வரப்போகும் ஆபத்தாக அனிதாவின் வரவை எதிர்கொள்ளும் அம்மா. திருமணம் செய்து வெளியே போன அக்கா மாலதி, தனது திமிரின் காரணமாக புகுந்த வீட்டை உதறி விட்டு மீண்டும் பிறந்த வீடு திரும்புகிறாள். பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து தனது திமிரால் முன்பு தான் விடுத்து செல்லும்போது அந்த குடும்பத்தில் எந்த அடுக்கில் நின்றாளோ, அதே அடுக்கில் சென்று நிற்க மாலதி செய்யும் வேலைகள். அடுக்கு நியதிகளுக்கு கட்டுப்பட்டு தகவமையாமல், தனது இயல்பால் அமைப்பையே குலைக்க முனையும் அனிதா. இவர்களால் காச்சர் கோச்சர் அடையும் கதைசொல்லி.

அசோகமித்திரன் படைப்புலகம் மையம் கொள்ளும் கீழ் நடுத்தர வர்க்க குடும்ப நிலை. அவரது கதைகளில் துலங்கும் அதே மெல்லிய கசந்த நகைச்சுவை நோக்கிலான விவரணை. ஆனால் அசோகமித்திரன் புனைவுலகில் இருந்து இக்கதையில் ஷான்பாக் முன்னகர்ந்து தனித்துவம் கொள்ளும் இடங்கள் மூன்று. ஒன்று, குடும்பம் எனும் அமைப்பு பெண்ணியல்பில் இருந்து வெளிக்கொணரும் தீமையின் சித்தரிப்பு. இரண்டு, குடும்ப உறுப்புகள் பொருளாதாரத் தூணை அண்டி வாழும் வாழ்வில் அதற்குள் அமையும் அடுக்குகள் உருவாக்கும் உளத் திரிபு. மூன்று, வலிமையான நாடகீய முரண்.

”வெங்கா… வெளிய வா. உன்னோட டுவ்வி கூப்புடுறேன் ”-வீட்டுக்குள் தலைமறைவாகி இருக்கும் சித்தப்பாவை தேடி நெடுநேரம் தெரு முனையில் நின்றுவிட்டு வீட்டு வாசலுக்கு வருகிறாள் சுகாசினி. அம்மா அவளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். திரிபுகள் உயர்ந்து அம்மா சுகாசினியை அவமதித்து திருப்பி அனுப்புகிறாள். வெங்காவுக்கு பிடித்த டுவ்வி செய்த சமையல் வாசலில் சிதறிக் கிடக்கிறது. அவமானப்பட்டு வெளியே செல்லும் சுகாசினி, வெறுமனே அதை வேடிக்கை பார்த்து நிற்கும் தனது கணவன். மனம் பொறாமல் கேள்வி கேட்கிறாள் அனிதா.

கீழே கொட்டிய சமையலின் வாசனை கதைசொல்லியை சீண்டுகிறது. மிச்சத்தை சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என அவனை எண்ண வைக்கிறது. இந்தச் சித்திரம் வருகையில் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் சென்னிகராயர் நினைவு எழுவதை தவிர்க்கவே இயலாது. இந்த ‘கச்சார் கோச்சர்’ நாவலே வேறொரு வகைமையில் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் ”தலைகீழ் ”வடிவம் என்றே சொல்லிவிட முடியும். சென்னிகராயரை நா ருசி எவ்வாறு வழிநடத்துகிறதோ அவ்வாறே இந்தக் கதைசொல்லியையும் வழிநடத்துகிறது. புனைவு நெடுக வெவ்வேறு பண்டங்களின் ருசி, தாளிப்பு வாசனை, இவை பின்னே செல்கிறது கதைசொல்லி மனம். அனிதாவே அவனுக்கு வாசனையாகத்தான் அறிமுகம் ஆகிறாள்.

கீழே கொட்டிய சித்தப்பாவுக்கு பிடித்த அந்த சமையலை இன்று சமைக்கலாமே என அனிதா குத்தலாக சொல்லும்போது முனை கொள்ள துவங்குகிறது குடும்ப உறுப்பினர்களின் உளத்திரிபுகள். சண்டை முற்றி பிறந்த வீடு போன அனிதா, வீட்டிலிருந்து புறப்பட்டவள் ஒரு நாள் கடந்தும் இன்னும் இங்கே வந்து சேரவில்லை- இந்த இடைவெளியில் நிகழும் காத்திருப்பில் கதைசொல்லியின் நினைவுகள் வழியே துலங்கி வருகிறது அந்த குடும்ப உறுப்பினர்களின் உளப்பாங்கு. கணவனை அடியாட்களை வைத்து மிரட்ட எந்த தயக்கமும் இல்லை அக்காவுக்கு, பக்கத்து வீட்டில் நடந்த மரணத்தைப் பேசி சத்தமே இல்லாமல் ஒரு வன்முறைக்கு அடி எடுத்து கொடுக்கிறாள் அம்மா, “எதுவா இருந்தாலும் நம்ப ஆளுக இருக்காங்க செஞ்சுடலாம் சிம்பிள்தான்,” என்று திமிர் காட்டும் சித்தப்பா, மகள் இரவில், ”வெளியே தங்குவது” சார்ந்து கூட எந்த புகாரையும் வெளியே காட்டாத விட்டேத்தி அப்பா. இவர்கள் மத்தியில் இந்தப் பிணைப்பை உடைக்கும் சொற்களை சொல்லிவிட்டு போன அனிதா என்ன ஆனாள்?

செய்யும் செயலிலோ, நிகழ்விலோ யாருக்கும் எந்த குற்றபோதமும் இல்லை. ஆத்மீக உள்ளுணர்வு அல்ல, அறம் சார்ந்த எளிய கேள்வி கூட எழாத, அல்லது இல்லாத, குடும்பத்தினர்கள். கடவுளோ குறைந்த பக்ஷம் ஜோசியமோ கூட தேவைப்படாதவர்கள். அனிதா திரும்பி வராமல் போனால், அதற்கான காரணங்கள் இவர்களாகவே இருந்தாலுமேகூட, அது குறித்து எந்த அலட்டலும் இல்லாதவர்கள். கொஞ்சமேனும் குற்றபோதம் கொண்டிருப்பதால்தான் நாயகன் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்த சிக்கலை விடுவிக்க அல்லது இதிலிருந்து வெளியேற என்ன வழி என திகைக்கும் கதைசொல்லிக்கு உள்ள தீர்வு என்ன?

பாலியல் ரீதியாக சுகாசினியை அவமதித்து வெளியேற்றும் அம்மா, குடும்பச் சூழலை இயல்புக்கு கொண்டு வர வீட்டுச் செடிகளை பராமரிக்க துவங்குகிறாள். காரணமே இன்றி வாடி நிற்கும் செடி ஒன்றுக்காக வருத்தப்படுகிறாள். இப்படியாக ஒவ்வொரு ஆளுமையையும் உருவாக்கி அவர்களுக்கிடையே உள்ள உரசலை அதன் நிலையில் வைத்தே சித்தரித்துக் காட்டுவது இதன் கலை வெற்றி.

இந்தப் புனைவு கையாளும் அத்தனை சித்தரிப்புகளும் கதைமாந்தர்களின் குறியீடு என மாறிப்போகிறது. குறிப்பாக எறும்புகள் சார்ந்த வர்ணனை. மொசு மொசு என உடலெல்லாம் ஏறி மொய்க்கும் தீதற்ற கருப்பு எறும்புகள், கட்டெறும்புகள், வீட்டு எறும்புகள், குருதிச்சொட்டு வடிவில் வண்ணத்தில் திரிந்து, தசையில் விழும் அமிலச் சொட்டென கடிக்கும் செவ்வெறும்புகள். இந்த எறும்புகள் எவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்றனவோ, அவற்றைச் சுட்டி நிற்கின்றன- இறுதி அத்தியாயத்தில் பெண்கள் பேசும் குடும்ப வன்முறை உரையாடல்கள். அனிதாவுக்கும் நாயகனுக்குமான முதல் பிணக்கே, எதுவும் செய்யாமல் போய்க் கொண்டிருக்கும் எறும்பு ஒன்றை தன்னியல்பாக நாயகன் நசுக்குவதில் இருந்தே துவங்குகிறது. பழைய வீட்டில் நாயகன் விளையாட்டுகளில் ஒன்று எறும்புகளை விதவிதமாக கொல்வது. எரியும் கங்கினை எறும்பு வரிசை மேல் உருட்டுவது, வரிசையில் இருந்து ஒற்றை எறும்பை விலக்கி, அதைச் சுற்றி நீர் வட்டம் போட்டு, அதை தவிக்க விட்டு, அந்த வட்டத்தை மெல்ல மெல்லச் சுருக்கி, எறும்பு நிற்கும் மையத்தை இறுதியாக ஒரு சொட்டு விட்டு நிறைத்து, துடித்து துடித்து எறும்பு மடிவதை வேடிக்கை பார்ப்பது. இந்த முறைவரிசையில் இருந்து தப்பிய எறும்பு அனிதா. இந்த எறும்பின் மீது கங்கு உருள போகிறதா, அல்லது நீர் வட்டம் வளைக்கப் போகிறதா?

கதைசொல்லி, இன்னும் வந்து சேராத அனிதாவை முன்னிட்டு, அவன் குடும்பம் சார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெய்ட்டர் வின்சென்ட் சொல்கிறான், குருதி நீரினும் அடர்த்தியானது. எறும்பைச் சுற்றி நீர் வட்டம் அமைக்கும் நாயகனுக்கு, வின்சென்ட் மட்டுறுத்துகிறானா? அல்லது வழிகாட்டுகிறானா?

இந்தப் புனைவின் உள்ளுணர்வு சென்று தைக்கும் புள்ளி மிகுந்த அமானுஷ்யமானது. கல்யாணம் செய்து கொண்டு போகும் மாலதி, நினைத்திருந்தால் புகுந்த வீட்டை அங்கிருந்தே ஆட்டிப் படைத்திருக்கலாம். அவள் விரும்பும் வண்ணம் எதையும் அவளது வன்முறையை கொண்டு ஈடேற்றி கொண்டு இருந்திருக்கலாம். மாறாக அவள் அந்த வீட்டை விட்டு மீண்டும் இங்கு ஏன் வருகிறாள்? நாயகனுக்காவது சொத்துக் கவலை, வேலை எதுவும் செய்யும் திறமை அற்றவன். அவன் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்க எல்லா நியாயமும் உண்டு, பொருளாதார தூணான, திருமணம் செய்து கொள்ளாத, தன்னை பின்னிழுக்கும் உறவுக்கட்டுகள் ஏதும் இல்லாத சித்தப்பா ஏன் அந்த குடும்பத்தை விட்டு தனியே போக மறுக்கிறார்? சுகாசினி போன்ற காதல் துணை கிடைத்தும் அதை வன்முறையாக மறுத்து இந்த குடும்பத்துக்கு ஏன் திரும்புகிறார்?

வேறு வழி இன்றி பிணைந்திருக்கும் குடும்பம். அந்த பிணைப்பின் மறுதலையாக உள்ளே உறங்கும் திரிபு. புழங்க சற்றே ஒரு வெளி கிடைத்ததும் அந்த திரிபு விதை மெல்ல மெல்ல முளை விட்டு மலருகிறது. மோகமும், அது கொண்டு வந்து சேர்க்கும் காமமும், இரண்டும் இணைந்து தன்னை தக்கவைத்துக் கொள்ள கிளர்த்தும் க்ரோதமும், என மனிதனின் அடிப்படை இச்சைகள், குறிப்பாக, பெண்களுக்குள் அது எந்த கலாச்சார தளைகளும் அற்று விகசிக்கிறது. அப்படி உள்முகமாக விகசிக்கும் அடிப்படை இச்சைகள் ஒருவருக்குள் போலவே மற்றவருக்குள்ளும் ஸ்பூரிப்பதைக் கண்டு தன்னியல்பாக, ஒருவரை ஒருவர் ஆக ஆழத்தில் இனம் கண்டு அதன் பயனாக ஒன்றி இருக்கிறார்கள். அப்படி ஒன்றி இருக்கும் ஒன்றே குடும்பம் எனும் அமைப்பாக பராமரிக்கப்படுகிறது எனும் நோக்கு அளிக்கும் பீதியே இந்த நாவல் அளிக்கும் தரிசன உணர்வு.

ஏழே அத்தியாயம் கொண்ட நூறு பக்க குறுநாவல். பொருந்திக் கொள்ள இயலாமல் ஒரு இருபது வருடங்கள் ஒரு திரிபு கொண்ட குடும்பத்துக்குள் வாழ்ந்து, அந்த திரிபுகள் கொஞ்சம் கொஞ்சமாக மோகமும் க்ரோதமுமாக முளை விடுவதை பதைக்கப் பதைக்க பார்க்கும் ஒரு சக உறுப்பினனாக (செறிவான சித்தரிப்பின் வழியே, நாடகீய முரண்கள் வழியே) வாசகனை மாற்றி, அந்த குடும்பத்துக்குள் சிக்கவைத்து விடுகிறார் விவேக் ஷாஷான்பாக். ஆசைத்தம்பி குறைவற மொழிபெயர்த்திற்கும் இந்த ‘காச்சர் கோச்சர்’ தமிழுக்கான முக்கியமான வரவுகளில் ஒன்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.