Month: May 2019

அமர் – விஜயகுமார் சிறுகதை

“இது நின்னுக்கிட்டு இருக்குடா; சம்மணம் போட்ட மாரில நான் டிஸைன் கேட்டேன்? “ரங்கசாமி சலித்துக் கொண்டார்.

“சாரி பெரிப்பா, சின்ன ஸ்தபதிதான் எதுக்கும் இந்த டிஸைன குடுத்துப்பார்ன்னு சொன்னார். “விஜயன் தன் பெரியப்பாவைப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.

“எல்லாரும் உன்ன சொல்றது சரியா தான் இருக்கு; ஏன்டா கலுத வயசாகுதுல, உங்கிட்ட ஒரு வேல சொன்னா உன் குண்டிக்குப் பின்னாலயே ஒருத்தன் சுத்தனுமா? அப்பத்தான் எதயுமே ஒழுங்க செய்யிவியா” கத்தினார். “உக்காந்து மூணு வேலையும் கொட்டிக்க தெரியுதுல்ல?”

கோபத்தை உதட்டில் அடக்கியவாறு விஜயன் பெரியப்பாவை பார்த்தான்.

சிரிது நேரம் அமைதியாக அந்த காகிதத்தைப் பார்த்து விட்டு, “நல்லாத்தான் இருக்கு, ஆனா நம்ம சாமி உக்கந்தமாரிடா, நோம்பி வேற சீக்கிரம் வருது” என்று அந்த டிஸைன் காகிதத்தை அவன் கையில் திணித்தார். “நீ போய் பெரிய ஸ்தபதிய பாத்து சரியா விசயத்தை சொல்லு. சுகாசனதில இருக்கணும் முத்திரை அவசியமில்லை” என்றுசொல்லி உயந்திருந்த குரலை தணித்தார்.

“சரிங்க” மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சட்டென திரும்பி நடக்க அரம்பித்தான் பெரியப்பாவைப் பார்க்காமேலேயே.

“நம்ம சாமி..” என்று ஏதோ சொல்லவந்தவர் விஜயனின் நடை வேகத்தைப் பார்த்து நிறுத்திக் கொண்டார்.

2

திருவிழாவிற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் முடிக்கவேண்டுமாம். புதிதாய் வாங்கிய தோட்டத்தில் உள்ள சாமி மீது பெரியப்பவுக்கு பைத்தியமே பைத்தியம்தான். தோட்டத்தின் வேலி ஓரத்திலிலுள்ள ஒரு மணற்திட்டின் மேல் ஒரு கல்லாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. இப்போது அதை சுற்றி சுவர் எழுப்பியிருந்தார் பெரியப்பா. மேலே சிறிய கோபுரம்கூட வரலாம். எங்கள் மற்றொரு தோட்டத்தில் ஏற்கனவே இரண்டு இடத்தில் சன்னதிகள் இருந்தது. கன்னிமார் சாமிகள் ஏழு வெங்கச்சாங்கல்லாக வேப்பமரத்தடியில் வீற்றிருந்தார்கள். காட்டுமுனியும் அருகிலேயே. நானும் என் கூட்டாளியும் ஒருமுறை ஊர்களிலுள்ள அத்துனை சாமிகளையும் எண்ணினோம், மூன்றுபேருக்கு தலா ஒரு சாமி இருந்தது. பெரும்பாலும் கருப்பு.

அதுயென்ன உக்காந்து கொட்டுகிறது. எல்லோரும் நின்னுக்கிட்டா சாப்பிடுறாங்க? சொல்லப்போனால் இந்த வீட்டில் மிக குறைவாக சாப்பிடுவது ஆத்தாவிற்குப்பின் நான்தான்.

அன்று ஏனோ ஆத்தாவின் நினைவாகவே இருந்தது. மாடியில் படுத்திருந்தேன், பெரியப்பா வந்து படுக்கை விரித்தது தெரிந்தது. நான் அவருக்கு முதுகு காண்பித்து திரும்பிப் படுத்திருந்தேன்.

பெரியப்பா, “டேய்!”

“ம்ம்ம்”

“என்னடா கோவமா?”

நான் பதில் சொல்லவில்லை.

அவர், “”நானும் உனக்கு அப்பன் தான? அப்பன் திட்டகூடாதா? நீதாண்டா எனக்கு கொல்லி போடப்போறவன். ஆத்தாவுக்கு நான் எப்படியோ அப்படிதாண்டா நீ எனக்கு.”

நான், “ஆமா பெரிய அப்பன், எப்பப்பாரு உக்காந்து சாப்பிடறான் உக்காந்து சாப்பிடறான்னு சொன்னா யாருக்குத்தான் கோவம் வராது” என்றேன்.

“நம்ம சாமிகூட சிட்டிங் சாமிதான்டா” என்றார். அவருடைய ஆங்கில புலமையை என்னை கொஞ்சம் தளர்த்தியது. லேசாக சிரித்துக்கொண்டேன். “என்ன இருந்தாலும் அப்பன்ல; ஆத்தாவும் என்ன அப்படிதாண்டா பேசும்; ஆனா நான் ஆத்தாவ எப்படி பாத்துக்கிட்டேன் தெரியுமா?” என் முதுகிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“சும்மா பொய் சொல்லாதீங்க. ஆத்தாவ நீங்க கஞ்சா கிழவி கிறுக்கு கிழவின்னு தான் கூப்பிடுவீங்க.” திரும்பினேன்.

பெரியப்பா சிரித்தார், “ஆமா ஆமா, நம்ம பெரிய பண்டாரம் தான சப்ளையர். ஆத்தாவுக்கு நீன்னா உசுரு. நாலு அடிதான் இருந்தாலும் எட்டு குழந்த பெத்தவட, தெய்வ ராசிக்காரி” பெருமூச்சு விட்டார், “அய்யன் இறந்துதலிருந்து தான்டா ஆத்தா அப்படி ஆனது. அப்பெல்லாம் ஆத்தா எப்படி தெரியுமா? சும்மா சுபிக்ஷ ராசி. என்ன கெம்பீரம் என்ன தேஜசு, அத்தன பேரையும் ஒரு சொல்லு ஒரு பார்வையில வேல வாங்குவா. அப்புறம் தான் இப்படி ஆயிட்டா. காவி சேலையும் கஞ்சாவும். கொஞ்சம் கொஞ்சமா கிறுக்கு ஏறி வந்துடுச்சு. பொதுவா அவ உண்டு அவ வேலையுண்டுனு தான் இருப்பா. பொக போட்டாமட்டும்தான் கிறுக்கு கூடிவரும். ஊரு சாவடில படுத்துகிடப்பா, கெட்ட வார்த்த அல்லி வீசுவா, சேலை கலைஞ்சு கண்றாவியா திரியுவா. எப்போ ஊர் சாமி மேல கை வச்சு பேசிக்க ஆரம்பிச்சாளோ அப்பறம்தாண்ட கட்டி வைக்க ஆரம்பிச்சோம். அண்ணில்ல இருந்தே அவ மேல மிருகவாடை வர ஆரம்பிச்சுதுன்னு நினைக்கிறேன்.”

நான் “ம்ம்” கொட்டினேன். பெரியப்பா நினைவுகளில் சென்றார்.

“ஊரிலேயே இப்போ நம்ம வீடு தான் பெரிசு. அதனால தான் நம்ம விட்ட பெரிய வீடுன்னு கூப்பிடுறாங்க. பல தலைமுறைக்கு முன்னாடி ஏதோ ஒரு கிராமதித்திலிருந்து கொலைக்கு பயந்து அஞ்சு குடும்பங்கள் நம்ம நிலத்திற்குவந்து தோட்டம் செஞ்சாங்க; அவர்கள் கொண்டுவந்த ஒரு மொடா கூட நம்ம வீட்டின் தென்புல அறையில இருக்கு. வருஷம் ஒருக்கா பொங்கல் வச்சு அதை கும்பிடுறோம். ஆத்தாவுக்கு மட்டும்தான் அதை தொடும் உரிமை இருக்கு.” பெரியப்பா ஆகாயம் பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.

“அத்தா ஒரு தடி வச்சுருக்கும், நல்ல பாத்திருந்தீனா தெரிஞ்சிருக்கும் அது ஒரு உலக்கைன்னு. அது தேஞ்சு தேஞ்சு தடி மாறி ஆகிடுச்சு. அந்த உலக்கைக்கு வயசு முந்நூறாவது இருக்கும். அத்தா ஒரு பழைய உசுருடா; பெரிய உசுருடா; பத்து தலைக்கட்டுக்கு ஒருக்காதான் அப்படி உசுரு வந்து பொறக்கும்னு சொல்லுவாங்க.” பெரியப்பா அப்படியே தூங்கிப்போனார்.

நான் நினைவுகளை புரட்டினேன். வீட்டிற்க்கு தெற்குப்புறமாக மாட்டுத் தொழுவம் இருந்தது. தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததிலிருந்து மாடுகள் தோட்டத்திற்கு குடிபெயர்ந்துவிட்டது. அந்த தொழுவம்தான் அப்போது ஆத்தாவின் வசிப்பிடம். தன் கயிற்று கட்டிலை ஆத்தா அங்கு கொண்டு போட்டதிலிருந்தே பெரியப்பா அவளிற்கு தேவையான வசதிகளை அங்கு செய்ய ஆரம்பித்தார். சிறிய அறை ஒன்று கட்டினார். ஆனால் ஆத்தா வெளியிலேயே படுத்துகொண்டாள். மாட்டுத் தொட்டியை பெரியப்பா வாரம் ஒருமுறை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பியும் வைத்துவிடுவார். நேரம் தவறாமல் அம்மா சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிடுவாள். ஆத்தாவும் எப்போதாவது சமைப்பாள். தொழுவத்திற்கு பக்கத்திலேயே விரகடுப்பு மூட்டி. அவள் சமையலை நானும் பெரியப்பாவும் மட்டும்தான் சாப்பிடுவோம்.

என்னை எப்போதும் விசிக்கண்ணு என்றுதான் ஆத்தா அழைக்கும். சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு மற்றோரு விசிக்கண்ணு வந்துசேர்ந்தது. எங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல ஊரிலுள்ள எல்லா வீட்டிற்கும் கண்ணன்குட்டி, ராசாதிக்குட்டி அருள்மணிக்குட்டி போன்ற பலதுகள். டொம்பர் மக்கள் எங்கள் ஊர் வளவிற்கு அருகில் குடிசையமைத்து ஒரு சைக்கிளில் நான்குவீதம் எடுத்துவந்து அதுகளை விற்றார்கள். சுத்த கரும் நிறமாக இருக்கவேண்டும். நல்ல குட்டிகளுக்கு பெரும் கிராக்கி.

எங்கள் மூதாதையர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்ன தெய்வங்களின் வாரிசுகள் எந்த குலத்திடம் சண்டையிட்டார்கள் அவர்கள் பூர்வீக நிலமென்ன குல சடங்குகள் என்ன போன்ற கேள்விகளிற்கு விடை எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி வழிபாட்டுமுறை தான். குலதெய்வ கோவிலருகே எங்களுக்கென்று இருவது சென்ட் இடம் பெரியப்பா வாங்கி வைத்திருந்தார். பக்கத்து தோட்டத்தயும் ஒன்றுசேர்த்தாற்போல் வாங்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. கோவில் திருவிழாக்கள் சமயத்தில் அண்டை நிலத்தாரைப் போலவே எங்கள் நிலத்தையும் கோவில் பயன்பாட்டிற்கு கொடுப்பார். பத்து வருடங்களிற்கு ஒரு முறைமட்டும் வரும் திருவிழாவிற்கு பன்றியை பலியிடுவோம். அப்படித்தான் அந்த விசிக்கண்ணு குட்டியாக இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு வந்தது.

வீட்டிற்கு தெற்க்கே ஆத்தா இருக்கும் தொழுவம் இருந்ததால் வீட்டிற்கு வடபுறம் கோழிச்சாலுக்கு அருகே வேப்பமரத்தில் அந்த பன்றி குட்டியை கட்டிவைத்தார்கள். முதல்நாள் இரவன்று அடித்தொண்டையிலிருந்து உய்ய்ய் உய்ய்ய் என்று சப்தமெழுப்பிக்கொண்டே இருந்தது. யார் அதற்க்கு பக்கத்தில் போனாலும் கயிறில் கட்டுண்ட நிலையிலும் அங்குமிங்கும் ஓட முயற்சிக்கும். ஆரம்பத்தில் பார்க்க பாவமாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல பன்றிக்கு பழக்கம் ஆயிற்று. அம்மா தினமும் தென்புறம் இருக்கும் ஆத்தாவிற்கும் வடபுறம் இருக்கும் பன்றிக்குட்டிக்கும் தவராமல் சோறு வைத்தாள். பன்றி ஒழுங்காக சாப்பிட்டிருக்கும்.

நான் அதை அடிக்கடி போய் எட்டிப்பார்ப்பேன், பன்றி என் கண்களுக்கு அழகாக இருந்தது. அருகிலுள்ள மாயவன் கோவிலில் பெருமாளுடைய ஒன்பது அவதாரங்களின் படம் மாட்டியிருக்கும். அதிலுள்ள வராகவதாரம் நீல நிறத்தில் இருந்தது. பூமிப்பந்தை மூக்கில் ஏந்தியவாறு. பூமி உருண்டை என்பது அந்த வராகத்திற்கு அப்போதே தெரிந்திருந்தது. இந்த வராகத்திற்கு என்னென்ன தெரியுமோ. மதிய வெயிலில் அதைப்பார்த்தால் ஒரு சின்ன இருட்டு படுத்திருப்பதுபோல இருக்கும். பின்புறமாக பார்த்தால் மிகச்சிறிய யானைபோலவும்; முன்பக்கமாக பார்த்தால் பெரிய ஏலியயை போலவும் இருக்கும். ஒரு பந்தை அதைநோக்கி உருட்டிவிட்டால் அது செய்யும் சேட்டை சிரிப்பு வரும். என்னதான் அழகாக இருந்தாலும் அதையும் அதன் இடத்தையும் சுத்தமாக வைப்பதென்பது முகம்சுளிக்கும் வேலைதான். எங்கள் வீட்டு பெண்கள் ரொம்பவும் சுளித்தார்கள். பன்றிவாடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மடமடவென்று வளர்ந்துவந்தது; ஊரையே பன்றிகள் ஆக்கிரமித்ததுபோல இருந்தது. ஆடுமாடுகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தது. மாட்டாஸ்பத்திரியில் பன்றிகளின் வரேவே சிறப்பு கவனம் பெற்றது. ஊர் முழுவது பன்றி வாடை கமழ்ந்தது, அதன் அமறல்கள் ஆதிமந்திரம்போல் நீக்கமற நிறைந்திருந்தது.

“உய்ய்ய் உய்ய்ய் உய்ய்ய் ”

“க்யாவ் க்யாவ் க்யாவ் ”

“உர்ர்ய்”

தீர்க்கமான கீச்சுகள்

சீற்றங்கள்

ஆட்கள் கிடைக்காததால் பெரியப்பாவே பன்றியின் இடத்தை சுத்தம் செய்வார். பன்றியை குளிப்பாட்ட வாகனங்கள் கழுவும் ரப்பர் குழாயை தண்ணீர் திறந்துவிட்டு பன்றிமீது காட்டுவார். “ஒரு கெடையில நிக்குதான்னு பாரு, அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டு. டேய் விஜயா! பட்டி நாயும் தெரு நாயும் இத வம்பிழுக்காம பாத்துக்கோணும். நாலு நாய் சேந்துச்சுனா கொதரி எடுத்துடும். ஆனா பாத்துக்க! எந்த பன்னியும் செத்ததில்ல; லாரி பஸ்ஸில அடிபட்டு தூக்கிப்போட்டாலும் குண்டுமணி கணக்கா உருண்டு எழுந்து ஓடிடும். ஜீவன மண்ணில ஊணி பொறந்ததுக. பழைய ஜீவனாகும்.” பெரியப்பா சொல்லி சிரிப்பார்.

பன்றியை குளிப்பாட்டி முடித்தவுடன் அருகிலிருக்கும் காய்ந்த மண்ணை எடுத்து ஆத்தா பன்றி நெற்றியில் பூசுவாள். தன் நெற்றிமீதும் இடுவாள்; பின்பு பெரியப்பாவுக்கு எனக்கும். பன்றியை நோக்கி இருகரம் கூப்பி “கருப்பா…” என்று சொல்லிவிட்டு தன் தொழுவத்தில் போய் படுத்துக்கொள்வாள். ஆத்தாவுக்கு பன்றி வந்ததிலிருந்து கிறுக்கு தெளிவாகிவருவதாக பெரியப்பா சொன்ன நினைவு.

3

எங்கள் தோட்டத்து பட்டிநாய் இளைத்துகொண்டே வந்தது; ஆனால் பன்றியும் ஆத்தாவும் நன்றாக தேறிவந்தார்கள். பெரியப்பா பன்றியின் இடத்தை சுத்தம் செய்ய ரப்பர் பைப்பை எடுத்துக்கொண்டு வரும்போதே ஆத்தா வந்து அருகில் நின்றுகொள்வாள். ஒருமுறை தண்ணி பீச்சி அதன்மேல் அடிக்கும்போது கயிற்றை பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டது. பெரியப்பாவும் நானும் பின்னால் ஓடினோம்; ஆத்தா எங்களை பார்த்துக்கொண்டு நின்றாள். எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. குளத்திற்கு அருகில் சுற்றுவதாக தகவல் வந்தது. நாங்கள் டொம்பர் மக்களுக்கு சொல்லி வரவைத்தோம். அவர்கள் வலையுடன் வந்து பிடிக்க முயன்றார்கள். நாங்கள் குளத்தில் சுற்றுவதைப் பார்த்து நான்குபக்கம் அணைந்தாற்போல் வலையிட்டு பிடிக்க முயற்சிசெய்தோம். ஆனால் அது தப்பி கரட்டுக்கு போகும் இட்டாலி வழியாக ஓடிவிட்டது. கரட்டுக்கு ஓடினால் இனி அதை பிடிப்பது கடினம்.

தலையை கீழே போட்டவாறு “என்னடா இப்படி ஆயிடுச்சு” பெரியப்பா நொந்துகொண்டார். நான் கண்களில் வருத்தத்தோடு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தேன்.

“ஏம்பா! அத புடிக்கமுடியுமா?” டொம்பர் தலைவரைப் பார்த்து பெரியப்பா கேட்டார்.

“இனி அது போனது போனது தான் சார்”

“வேற ஏதாவது குட்டி இருக்கு?”

“இப்ப ஒன்னும் இல்ல, சொன்னிங்கன்னா ஒரு வாரத்தில ஏற்பாடு சேரோம்”

“வேற என்ன வழி; சீக்கிரம் கெடச்ச தேவல”

நாங்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்; ஊரே எங்கள் வீட்டைப்பற்றித்தான் பேசியது. நாங்கள் கொண்டுவந்த சோகத்தை வீட்டாரின் மீதும் உரசினோம்; அது தகுந்த அலைவரிசையில் இயங்கியது. வீடே கனத்த அமைதியில் மிதந்தது. அந்த இறுகிய மூச்சடைக்கும் சோகம் வீட்டில் அருவமாக உலாவியது. ஆத்தாமட்டும் தொழுவத்தில் ஏதோ உருட்டிக்கொண்டு இருந்தாள். அவள் வேறு உலகத்தில் இருப்பதுபோல தோன்றியது எனக்கு. நாங்கள் அனைவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். ஆத்தா உலக்கைத்தடியை ஊன்றிக்கொண்டு கேட்டைத்திறந்து உள்ளே வந்தாள். எல்லோரும் அவளையே பார்த்தோம். வந்தவள் திண்ணையில் இருந்த பேட்டரி லைட்டை எடுத்தோக்கொண்டு வெளியே சென்றாள்.

பெரியப்பா “ஏய் கெழவி” என்று உதடுகளை இறுக கத்தினார்.

நான் வெளியே ஓடிப் பார்த்தேன். ஆத்தா கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

நான் உள்ளே வந்து பார்த்ததை சொன்னேன்.

“போய் தொலையட்டும்” பெரியப்பா வெறுப்பாய் முனகினார்.

அடுத்தநாள் காலை “என்னங்க என்னங்க..” என்ற அம்மா பதற்றமாய் கத்துவதை கேட்டு எழுந்தேன். அப்பாவும் பெரியப்பாவும் தொழுவம் நோக்கி ஓடியதைப் பார்த்தேன். அவர்களின் பதற்றம் என்னைத் தொற்றவில்லையென்றாலும் குழப்பத்தில் நானும் எழுந்து ஓடிப்போய் பார்த்தேன்.

தொழுவத்தில் கயிற்று கட்டிலில் ஆத்தா விலகிய காவிச்சேலையுமாக புழுதியடைந்த கால்களுமாக வலப்புறம் ஒருக்கலித்து படுத்திருந்தாள். கட்டிலின் இடதுபுறம் அவளது உலக்கைத்தடி கிடந்தது. வலதுபுறம் எங்கள் பன்றி படுத்திருந்தது. இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் எங்கிருந்தோ தூரகால தூரதேசத்திலிருந்து வந்தவர்கள் போலிருந்தது.

“ரெண்டும் வந்துருச்சு பாரு..” அப்பா பொதுவாக சொல்லிவிட்டு உள்ளே போனார். அம்மா பின் தொடர்ந்தார். பெரியப்பா மட்டும் ஆத்தாவின் கால்கள் அருகே நின்றிருந்தார். நான் அவரை கவனித்தேன். ஆத்தாவின் செம்புழுதி படர்ந்த கால்களை வருடினார். அவரது தொண்டை மேலும்கீழும் ஏறி இறங்கியது. முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றார்.

நான் கயிறு எடுத்துவந்து பன்றி கழுத்தில் கட்ட எத்தனித்தேன். ஆத்தா அரைத்தூக்கத்தில் என் கையை தட்டி விட்டு சொன்னார் “விசிக்கண்ணா கட்டவேண்டாம்”. அன்றிலிருந்துதான் அதை விசிக்கண்ணு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அந்த கட்டவிழ்ந்த வராகம் கற்றற்ற மிருகம் ஆத்தாவின் காலடியிலேயே கிடந்தது. அது ஆத்தாவைவிட்டு கணநேரமும் விலகாமலிருந்தது. ஆத்தாவின் பக்கத்தில் யாரையும் அது விடுவதில்லை. அது எருமையின் கருணையும் நாயின் சேட்டையும் அமையப்பெற்றவை போலிருந்தது. குணத்தில் பசுவிற்கும் நாய்க்கும் இடைப்பட்டதுமாக. தொழுவத்தின் ஓரத்தில் இருவரும் ஒரு ஜீவனென இருந்தார்கள். வரட்டியும் வாடையுமாக.

வழக்கங்கள் திரும்பியிருந்தது. ஆனால் அம்மா விசிக்கண்ணுக்கு போடும் உணவு ஆத்தாவுக்கு அவ்வளவாக ஒப்பவில்லை. பழையதும் புளித்ததும். அவளுடைய பங்கும் வராகத்திற்கு போதவில்லை. ஆத்தா தினமும் அவளே சமைக்க ஆரம்பித்தாள். முதலில் வெறும் சோறு, பின்பு பருப்பு குழம்புகள் அடுத்ததாக பொங்கல் கீரைகள். நாட்கள் செல்லச்செல்ல வராகம் தனக்கான விருப்ப மனு ஆத்தாவிடம் ரகசியமாக சொல்லியதோ என்னவோ; ஆத்தா இட்டிலிக்கு மாவாட்டினாள். இருபது வருடம் நின்றுபோன செக்கில். நானும் பெரியப்பாவும் சொல்லிவைத்தாற்போல காலையில் தட்டை தூக்கிக்கொண்டு தொழுவத்திற்கு போவோம். அன்னப்பூரணி மனித மிருக பேதமின்றி கும்பி நிரப்பினாள். செக்கில் ஆட்டிய சட்டினிகள். இய்யப்பாத்திரத்து அவியல்கள், மண்சட்டி வணக்கல்கள், தொவையல் தீயால். இன்னும் பெயர்தெரியாத நூற்றாண்டு வகைகள். சோலாக் கூழில் பழைய சோற்றை கணக்காகக் கலந்து வெந்தயக் கீரையை வரமிளகாயோடு நல்லெண்ணெயில் பக்குவமாய் வணக்கி சரியாக உப்பு சேர்த்து அம்புலி ஒன்று தயாரிப்பாள்; “உக்காந்து சாப்பிடறான் பாரு” என்று யார் என்னை எப்படி திட்டினாலும் பரவாயில்லை. கேப்பைக்கூழ் கம்மன்சாரரும் முருங்கை குழம்பும் அடுத்தபடிகள்.

வராகம் பெரிதாக ஆக ஆத்தா பூரித்தாள். அவள் எப்போது அந்த உலக்கைத்தடியை விட்டாள் என்று எங்களுக்கு தெரியவில்லை. கூன் நிமிந்திருந்தாற்போல் பட்டது.

எங்கு செல்லினும் அவர்கள் இருவரும் சேர்ந்தே சென்றார்கள். ஆத்தாவிடம் விளையாடி மகிழும். பின்னங்கால்களால் உந்தி முன்னங்கால்களை கொண்டு ஆத்தாவின் கைகள்மேல் ஏறும். ஆத்தா பலம்பொருந்தாமல் கீழே சாய்ந்து சிரிப்பாள். அவள் உடல்முழுவது கீறல்களும் காயங்களும். அவள் கண்டுகொள்வதாக எனக்கு தெரியவில்லை. கோழி கூப்பிடுகையில் தொழுவத்தில் இருவரும் ஏதோ உருட்டுவார்கள்; உச்சிப்பொழுதில் காலமற்ற கற்குண்டுகள்போல் அமர்ந்திருப்பார்கள்; சாமத்தில் ‘உய்ய்ய் உர்ர்ர், க்யாவ்’ என சம்பாஷித்திருப்பார்கள். இருவருக்குமிடையே புது பாஷை துளங்கிவந்தது. பூதகணங்கள் போலிருப்பார்கள்.

பன்றித் திருவிழாவும் நெருங்கிவந்தது.

4

நாளை திருவிழா; இன்றே என்னைப்போன்ற கடைநிலை குடும்பத்தினர் குலதெய்வக் கோவிலுக்குப்போய் கோவில்நிலங்களில் இடம்பிடித்து பந்தல் அமைக்கவேண்டும். குடும்ப முக்கியஸ்த்தர்கள் நாளை வருவார்கள். அதிமுக்கியஸ்த்தர்கள் எல்லாம் முடிந்தபின்பு வருவார்கள். டெம்போ அதிகாலையே வந்திருந்தது. ஒரு சமையற்காரர், இருண்டு பெண் ஆட்கள், ஒரு எடுபுடிப்பையன். விறகுகள், காஸ் சிலிண்டர், அடுப்பு, பெரியவகைப் பாத்திரங்கள், கரண்டிகள், அரிசி மூட்டை, சின்ன மற்றும் பெரிய வெங்காயப் பை. அரைத்த மசாலாக்கள். உறைகுத்த பால், வாழையிலை கட்டுகள், அரிவாள்மனைகள் கத்திகள், தேங்காய்கள், ஜமுக்காளம் என்று எல்லாம் ஏற்றியாகிவிட்டது. இரண்டுமட்டும் பாக்கி. வராகமும் ஆத்தாவும்.

எனக்கும் பெரியப்பாவிற்கும் ஒருவித பதற்றமிருந்தது. ஆனால் ஆத்தாவும் வராகமும் வழக்கம்போலவே இருந்தார்கள். தப்பி ஓடும் எண்ணமிருக்குமோ?

பெரியப்பா தொழுவத்திற்குப்போய் “நேரமாவுது!!” என்றார்.

கயிற்று கட்டிலில் படுத்திருந்த ஆத்தா எழுந்து முன்செல்ல வராகம் பின்தொடர்ந்தது. அருகில்வந்து நின்றார்கள். நான் ஏற்கனவே தடிமனான நீண்ட பலகையை டெம்போவில் ஏறுவதற்கு தோதாக சாற்றி வைத்திருந்தேன். ஆத்தா டெம்போவை நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் பலகைமேல் ஏறியது. நானும் பெரியப்பாவும் முட்டுக்கொடுக்க வராகம் டெம்ப்போவில் ஏறி ஓரத்தில்போய் படுத்துக்கொண்டது. ஆத்தாவையும் கைத்தாங்கலாக ஏற்றிவிட்டோம். நானும் பின்புறம் ஏறிக்கொண்டேன். வண்டி கிளம்பியது.

எங்களுக்குள் உள்ள மௌனம் மற்றோரு ஆள் போல இறுக்கமாக அமர்ந்திருந்தது. எந்நேரமும் அந்த மௌனம் எழுந்து என்னிடம் ஏதாவது சொல்லிவிடுமோ என்று பட்டது. கோவிலுக்கு செல்லும் அந்த சிறிய பயணம் நெடுநேரமானது எனக்கு.

5

நடுச்சாமம் இருக்கும் ஒலிபெருக்கியில் கேட்டது.

:”இதுனால என்னனா இன்னும் சற்றுநேரத்தில் மொதோ பண்ணியா நம்ம கோயில் பண்ணி கெழக்கு பக்கமா இருக்க பலி போடறா எடத்துல வெட்டப்படுது; அத தொடர்ந்து எல்லாரும் அவுங்கவுங்க பண்ணிய பலி போடறா எடத்துக்கு கூடிவங்க. கோயிலை சுத்தி அஞ்சு எடத்துல ஏற்பாடு செஞ்சிருக்கோம், அதனால எல்லாரும் ஒரே எடத்துக்கு வர வேண்டாம். எது பிரீயா இருக்கோ அங்க போங்க.”

நான் வராகத்தைப் பார்த்தேன் அது மரத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்தது. ஆத்தாவை தேடினேன் அவள் பார்வைக்கு அகப்படவில்லை. இன்னும் நேரமிருந்தது. கோவிலை சுற்றி பல பந்தல்கள்; ஒவ்வொரு பந்தலருகிலும் ஒரு டெம்போ; அருகிலேயே அதற்கான சமையல் சாமான்கள். எல்லா இடத்திலும் டியூப் லைட்டுகள். கார்கள் நிறுத்தி வைக்குமிடங்கள்; பலூன் காரன் சாமத்து ஐஸ்பெட்டிக்காரன் தின்பண்டம் விற்பவர்கள் இன்னும் யார்யாரோ.

இம்முரை பலிபீடம் எங்கள் இருவது சென்ட் நிலத்திலும் அறங்காவலர்கள் அமைத்திருந்தார்கள்.

“ப” வடிவிலான தடிமனான கல் பலகையை பலி பீடமாக நட்டு வைத்திருந்தார்கள். கட்டி இழுத்துவரும் பன்றியின் கழுத்தை அதில் வைத்து. கனமான அருவாளால் தலை துண்டாகும்வரை வெட்டுவார்கள். இரத்தம் வழியெங்கும் ஓடும்.

கோவில் பன்றியை வெட்டும்போது பெரிதாக எங்கள் பந்தலிலிருந்து எதுவும் கேட்கவில்லை. அதை தொடர்ந்து சிலர் வெவ்வேறு பலி பீடங்களுக்கு தங்கள் பன்றியை கட்டி இழுத்தும் கால்களை முடக்கி தூக்கியும் சென்றனர். சிலர் தங்கள் பன்றியை டெம்போவின் அருகிலேயே அவரவர்களாக அறுத்துக்கொண்டனர். அந்த நிலப்பரப்பே பன்றியின் ஓலம் நிரம்பி வந்தது. அறுபடும் பன்றிகள் துடிக்கும்; இரண்டொருவர் பன்றியை பிடித்து அமுத்துவார்கள்; அறுப்பவன் கை பாதியில் ஓயும்; பாதி அறுபட்ட பன்றி கண்சிமிட்டி ஓலமிடும், எழுந்து ஓட முயற்சிக்கும். சிலதுகள் ஓடி விழும். சூடான இரத்தம் தெறிக்கும்; கால்களை நனைக்கும். ஓலமும் இரத்தவாடையும் மனித ஆதி இச்சைக்கு வலு சேர்க்கும்.

ஆத்தா இருட்டுக்குள் இருந்து வந்து நின்றாள். பெரியப்பா “போலாம்” என்றார்.

கயிற்றை அவிழ்த்துவிட்டு ஆத்தா பலி பீடம் நோக்கி நடந்தாள். வராகம் ஓடிச்சென்று ஆத்தாவிடம் சேர்ந்துக்கொண்டது. நானும்பெரியப்பாவும் தாமதிக்காமல் பின்தொடர்ந்தோம். ஆத்தா எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் நடந்தாள்; வராகம் பசுபோல துணைசென்றது. எங்களை ஏமாற்றி தக்க சமயத்தில் இருவரும் தப்பிவிடுவார்களோ? அத்தா வரகாத்தின்மீது சவாரியிட்டு குதிரைவேகத்தில் பறந்து விடுவாளோ? நாளை விருந்தினர்கள் வந்துவிடுவார்கள் கடைசி நேரத்தில் மாற்று பன்றிக்கு எங்கு செல்ல? இல்லை இல்லை அவர்கள் பலி பீடத்து திசையில்தான் செல்கிறார்கள்.

பலி பீடம் வந்தாயிற்று. அது எங்கள் இடம். பதற்றம் தொற்றிட்டு; மூச்சு கனத்தது; ஏதோ ஆகி விடுமோ? எல்லாம் சரியாக நடக்க வேண்டும்.

பூசாரி எங்களுக்கு பின் வருபவர்களைப் பார்த்து பொதுவாக சொன்னார் “இது தான் இங்க கடைசி மத்தவங்கெல்லாம் கிழக்கு பக்கம் போங்க… கிழக்கு பக்கம் போங்க… ”

பூசாரி எங்களை வரச்சொல்லி கை அசைத்தார். அத்தா முன்சென்று பலி பீடம் நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் அருகில் சென்றது. அதிசியத்தைப் பார்த்த இருவர் அதன் பின்னங்கால்களை பிடித்து இழுத்து காதோடு தலையை பிடித்து “ப” போன்ற அந்த கல்லில் வைத்தார்கள். நான் கடைசியாக அதை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முண்டாசு கட்டிய ஆயுதம்தாங்கி ஒருவர் இயங்கினார்; கனவு போல நடந்து முடிந்தது. எங்கள் வராகம் இரு துண்டுகளாக. முண்டம் பதறி அடங்கியது.

ஆத்தா ஏதோ அகால வெளியை பார்த்து கைகூப்பி நின்றிருந்தாள்.

பூசாரி வராக குருதியை எங்களுக்கு ஆக்கினையில் திலகமிட்டார். ஒரு சாக்கில் இரண்டு துண்டுகளையும் சுற்றி குட்டியானை ஆட்டோவில் ஏற்றினோம். பெரியப்பா “நாம முன்னாடி போவோம்” என்றார். ஆட்டோ கிளம்பியது; நான் ஆத்தாவை திரும்பிப் பார்த்தேன். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.

6

சுமார் ஐநூறு பழிகளாவது இருக்கும். எல்லோரும் பழி முடிந்து அவரவர் பந்தலுக்கு போய்விட்டார்கள். அடுத்தநாள் காலையிலிருந்தே சமையல் ஆரம்பமானது. எங்கும் ஜனக்கூட்டம். ஒருமூலையில் பறையிசை மறுமூலையில் கரகாட்டம் ஒருமூலையில் வானவேடிக்கை மறுமூலையில் ஓய்ந்திருந்த நாடகம். பூசைகள் முடிந்து மதியம் பந்தி ஆரம்பமானது. பல ஆயிரம் தனி நிகழ்வுகளாக நடந்த திருவிழா ஒரு ஆடல்போல நடந்தேறியது. எல்லாம் விமர்சையாக நடந்தும் முடிந்தது.

ஜனக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. வீட்டார்கள் எல்லோரும் சாப்பிட்டாயிற்றா என்று பெரியப்பா கேக்கும்போதுதான் நாங்கள் உணர்ந்தோம் ஆத்தாவைக் காணவில்லை. “அரைகிறுக்கு போதை தெளிவான அதுவே வந்துரும்” என்று அப்பா சொல்ல பெரியப்பா முறைத்துப் பார்த்துவிட்டு ஆத்தாவை தேட ஆரம்பித்தார். நானும் சேர்ந்து கொண்டேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருட்டி வந்ததால் முதலில் வீட்டாரை ஊருக்கு அனுப்பிவைத்தார் பெரியப்பா.

மைக் செட்டில் சொல்லலாம் என்று நாங்கள் இருவரும் சென்றோம்.

பெரியப்பா, “தம்பி ஒன்னு அனஉன்ஸ் பண்ணனும்” மைக் செட் பொடியனிடம் சொன்னார்.

பொடியன், “சொல்லுங்க சார்”

“ஒரு வயசான அம்மாவ காணல. காவி சேல போட்டிருக்கும்”

பொடியன் எழுந்தான். “எல்லாரும் அங்கதான் சார் போயிருக்காங்க”

“என்ன; எங்க? ”

“ஒரு ஆத்தா நின்னுகிட்டிருக்கு”

பேய் அறைந்தது எங்களுக்கு.

எங்கள் அந்த இருவது சென்ட் இடத்திற்கு பெரியப்பா ஓடினார். நானும் பின்னாலேயே ஓடினேன். கூட்டத்தை விளக்கி கொண்டு பார்த்தோம். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.

கூட்டம் ஐம்பது அடிகளாவது விலகிதான் நின்றிருக்கும். அவள் அருகில் யாருமில்லை. எங்களுக்கு அவள் முதுகுதான் தெரிந்தது. அந்த காட்சியை பார்த்த பெரியப்பா சற்று தள்ளாடி முகம் இருகி கண்ணீர் சொரிந்தார். கைகளை மேல்முகமாக ஆகாயத்தை பார்த்து ஏந்தி “அம்மா.. அம்மா..” என்று கதரியவாரு அருகில் சென்றார். நான் செய்வதறியாது அவர் தல்லாடி செல்வதை பார்த்து பயந்து பின்னாலேயே நின்று விட்டேன்.

கால்கள் இடர கண்ணீரோடு கதறிக்கொண்டே ஓடி ஆத்தாவின் முன் சென்று நின்றார். ஒரு கணம் முகம் நோக்கினார். உக்கிரம் தாங்காதவர்பொல் இரண்டு அடி பின்னோக்கி சென்று கண்கள் சுழன்று அலங்கோலமாக முதுகு மண்ணில் பட விழுந்து மூர்ஜையானார். நான் அவரிடம் ஓட எத்தனித்தேன்; அருகிலிருந்த ஒருவர் என் கைகளை இருக பற்றி “வேண்டாம்பா, சாமி உண்ணயும் அடிச்சுடும்” என்று சொன்னபோது ஒருவாறாக எனக்கு விளங்க ஆரம்பித்தது.

அவள் நின்றுகொண்டெதான் இருந்தாள். நிரஞ்சனா நதி சாக்கியன் போல.

7

வான் இளம் மஞ்சலாய்ப் பூத்தது. நாகமொன்று அவளின் பாதம் சுற்றிவந்தது. எலிகளும் கீரிகளும் முயல்களும் இடும்புகளும் தத்தம் வலைகளில் இருந்து வெளியே வந்து ஆடின. காகம் குருவி கொக்கு குருகு காட்டுச்சேவல் மயில் மைனா பாடி மகிழ்ந்தன. இனமறியா புட்கள் வானில் வட்டமடித்தது. சுனை ஒன்று கொப்பளித்தது. மனிதர்கள் கணமற்று இருந்தார்கள்.

ஆக்கினை ஒன்று அசைந்தது.

அடிமுதுகில் சட்டென ஒரு மின்சாரம் அடித்து பின்மண்டயில் முடிந்தது. உலகம் தெளிவானது. இருப்புணர்ச்சி உடல் எல்லையை உடைத்து எல்லா திக்குகளிலும் வெடித்து சிதறியது.

பூரணம் நிகழ்ந்தது.

வீரன் வணங்கினான் மாடன் அண்ணாந்து பார்த்தான் முனி பணிந்தான் கருப்பு தெண்டனிட்டான் தூரகால பத்தினி ஒருத்தி விழி திறந்து மூடினாள். நூறுவருட மொட்டு ஒன்று மலர்ந்தது.

அவளின் உடலில் சிறு அசைவு தென்பட்டது. எங்கள் எல்லோரது கவனமும் நேர் கோடென அவளின்மீது இருந்தது.

கால விழி திறந்தாள், திரும்பினாள்; ஒரு பார்வையில் பார்த்தாள்.

அருகிலிருக்கும் மணற்திட்டின் மேல் கடைசியாக சென்று அமர்ந்தாள்.

 

‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின் அகாலம்எனும் கவிதைத் தொகுப்பை இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான வயலின் மனிதன்ஐ சட்டென கடக்க இயலவில்லை.’’வயலின் மனிதன்தலைப்பின்கீழ் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே இசை சம்பந்தமான கவிதைகள். இக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மனதிற்குப் பிரியமான இசையினை இன்னும் நெருக்கமாய்க் கேட்கத் தோன்றியது. மட்டுமன்றி கவிதை வாசித்தல், இசை கேட்டல் எனும் இரு நிகழ்வுகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென இரட்டை மகிழ்வினை ஒருசேர அனுபவிக்க வாய்த்தது மனதிற்கு அலாதியான ஒரு உணர்வினை அளித்தது. அத்தகையதொரு மனநிலையில்தான் மெல்லமெல்ல இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது.

வயலின் மனிதன்

வயலின்களும் இசைப்பர்களும் மறைந்துவிட
இசை என்னைச் சுருட்டி எறிகிறது
பூமிக்கு வெளியே

குரல்களின் அடுக்குகளுக்குள்
பதுங்கியிருக்கும் வண்டுகள்
பாய்ந்து வெளியேறி
என் தலையை மூடுகின்றன

எந்த வடிவத்திற்குள்ளும் அடங்கமுடியாத
உயிரின் துக்கம்
ஒரு ஒற்றை வயலினிலிருந்து
கறுப்பு வானமாய் பெருகுகிறது.

இன்னொரு உடுமண்டலத்தில்
நானும் பியானோவும் தொங்குகிறோம்
ஒரு புல் நுனியில்
தினசரி வாழ்விலிருந்து
மில்லியன் மைல்களுக்கு அப்பால்
ஓர் அமானுஷ்யப் பரப்பில்
தாளங்களின் காலக்கணக்கு
சிம்பனியின் அடியாழத்தில்ந
ஒரு தனிமனிதனின் விம்மல்

நடத்துனனின் ஒரு சிறு தவறில்
முழு ஆர்க்கெஸ்ட்ராவும்
என்மேல் பாய்கிறது.
ஒவ்வொரு உறுப்பாய் என்னைக் கழற்றி எறிந்துவிட்டு
ஓய்கிறது இசை.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

ஒரு ஆர்கெஸ்ட்ராவின் அற்புதமான நிகழ்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்கையில் ஒலிநாடாவில் ஏற்படும் குறைபாடுகளாலோ, பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் மைக் முன் அரங்கேறும் நிகழ்வுகளை மனமொன்றிக் கவனிக்கையில் திடீரென ஏற்படும் உச்சஸ்தாயிலான கீச்சொலியிலோ அல்லது மனதிற்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கையில் வானொலியில் ஏற்படும் கரகர அதிர்விலோ இப்படி ஏதேனுமொரு நிகழ்வில் இம்மாதிரி மனம் கூசும்படியான அதிர்வினை அனைவரும் சந்தித்திருக்க அநேக வாய்ப்புகளுண்டு. இசையில் இன்புற்றிருக்கும் மனமானது திடுமென இரைச்சலுக்கு உட்படுத்தப்படுகையில் அதுவரை தான் அனுபவித்த, தனக்குப் பிடித்தமான ஸ்பரிசத்தினை முழுமையாக இழந்துவிடும் நிகழ்வே இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, கிட்டத்தட்ட காற்றிற்கு அசைந்து இசையெழுப்பும் மரமொன்றை வேரோடு பிடுங்கி எறிவது போலத்தானென எண்ணத் தோன்றுகிறது. கவிஞர்களின் இருப்பானது பூலோகமாக இருப்பினும் அவர்களின் அகவெளியானது அவ்வப்போது பூமிக்கு வெளியிலான சஞ்சரிப்புகளில் திளைத்தூறி தனது விருப்பங்களுக்கும் , அறிவுத் தேடல்களுக்கும் தீனியிட்டுக் கொள்கின்றன என்பதற்கு முதற்பத்தி சான்றாக அமைகிறது. கண்கள் மூடியபடி நாம் ரசிக்கும் இசையானது நம்மைச் சுருட்டி பூமிக்கு வெளியே வீசவேண்டுமாயின் அது மனதிற்கு இசைவானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ இருக்க வேண்டும்.் இசையின் மீது அனைத்து உயிர்களுக்கும் மயக்கமுண்டு எனும் நிதர்சனத்தை எண்ணுகையில், ‘இசையால் வசமாகா இதயம் எது?’ எனும் பாடல் வரியானது நினைவில் ஊர்கிறது. இசையும், குரலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று தழுவி நம் மனதின் ஆழத்தை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. உயிரின் துக்கமென வயலினிருந்து கசியும் இசை அரூபமானது. கறுப்பு வானம் என்பது காட்சிப்படிமம். எனவே கறுப்பு வானமாகப் பெருகும் உள்ளுணர் வரிகள் வாசகருக்கு ஒரு அழுத்தமான புறவெளிக்காட்சியை அகத்துள் தோற்றுவிக்கிறது. மனித அறிவானது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி நகர்வது போல மூன்றாம் பத்தியின் வரிகள் அரூபத்திலிருந்து மெல்ல ரூபம் நோக்கி நகர்கின்றன.

சில பாடல்கள் சுமையான மனதை சட்டென இலகுவாக்கும் தன்மை வாய்ந்தவை. ஒரு பருப்பொருளோ அல்லது மனிதனோ சிறு புல்நுனியில் தொங்கவியலாதுதான். மனமானது இலேசாகிப் பறக்கும் தருணத்தில் அப்படியொரு அரிதான வாய்ப்பு அவருக்கு கிட்டியதை அறிவதோடு குரலின் ரிதம் குறித்த அவரின் புரிந்துணர்வையும் நாம் அறியப்பெறுகிறோம். எந்தவொரு மனமும் இரைச்சலை விரும்புவதில்லை. ஆர்க்கெஸ்ட்ரா நடத்துனனின் சிறு தவறால் சட்டென தன்னுணர்வு நிலைக்குத் திரும்புவதைத்தான் இறுதிப்பத்தி சுட்டுகிறது. இசை இரைச்சலாக மாறும் தருணம் மனம் சந்திக்கும் அதிர்வில் அவர் ஏதுமற்ற ஒன்றாகி எதுவுமே இல்லாமல் ஆகிறார். The Pianist திரைப்படத்தில் இசையைத் தொடர்ந்துவரும் இரைச்சலும், இரைச்சலினூடான இசையுமென சற்று கனத்த மனஅதிர்வினை உண்டாக்கிய காட்சிகளை அசைபோடுகிறது மனம்.

 

அரங்கை விட்டு வெளியேறுகிறேன்

ஒரு பிரும்மாண்டப் பியானோவின் இசை நகர்மேல் பொழிந்து கொண்டிருக்கிறது.
பஸ் ஸ்டாப், கடக்கும் வாகனங்கள்,
விருட்டென்று வந்து எனை ஏற்றிக்கொண்ட சிட்டிபஸ்; வெளியில் விடைதரும் சிநேகிதி
ஓரத்தில் ஒளி கசியும் கட்டிடங்கள்
வேப்பமரங்கள், கறுப்புச் சாலை, கடைகள்,
வேதக்கோயில், த்யேட்டர், ரிக் ஷா வரிசைகள்
எல்லாவற்றுக்குள்ளும் இருந்து
எட்டிப்பார்க்கிறது ஒரு வயலின்.

எந்த ஸ்டாப்பிலோ இறங்குகிறேன்
எந்தத் தெருவிலோ நடக்கிறேன்
எந்த வீட்டையோ தட்டுகிறேன்
ஓர் உயிருள்ள வயலினாக நான்
எப்பொழுதோ மாறிவிட்டிருந்தேன்.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

கவிதை என்பதை மௌனம் மலர்த்தும் அலாதியான இசை எனவும் குறிப்பிடலாம். இசையானது எல்லோர் வீட்டின் கதவுகளையும் தட்டக்கூடியது. நாம்தான் செவிமடுக்க மறுத்து அலட்சியமாய் அவைகளைக் காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இசையானது ஒலியுணர்திறன் கொண்டது மட்டுமன்றி காட்சி மயக்கத்தினையும் உணரப்பெறுவதுமாகும். இக்கவிதையைப் பொறுத்தமட்டில் ஓரத்தில் ஒலி கசியும் கட்டிடங்கள், ரிக் ஷா வரிசை போன்ற காட்சி பிம்பங்களிலிருந்து ஒரு வயலின் எட்டிப்பார்க்கிறது எனும் நேர்த்தியான வரியானது காட்சிமயக்கத்தின் அற்புதத்தை மனதினுள் நிகழ்த்திக் காட்டுகிறது. மிகுந்த மெல்லதிர்வை உண்டுசெய்யும் இக்காட்சியானது ஒரு சிலிர்ப்பான நுண்ணிசையைக் கசிந்து கொண்டே மனம் முழுக்க அடர்வாக விஸ்தரிக்கிறது. ‘ஓரான் பாமுக்’ ன் “பனி” நாவல் முழுக்க விசித்திர நிலமான துருக்கியின் ‘கார்ஸ்’ நகரக் கட்டிடங்கள் பனியினூடாக இப்படியொரு நுண்ணிசையைக் கசிந்துகொண்டே இருக்கும்.

பொதுவாக மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நேர்மறையானாலும் சரி, எதிர்மறையானாலும் சரி சில பொழுதோ, காலமோ தொடர்ந்து அதன் நிழல்களில் சஞ்சரித்தவாறு மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிடுகிறது. இங்கு நேர்மறை உணர்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. சில நிகழ்வுகளின் பொருட்டு ஒரு புள்ளியில் குவிந்து அங்கேயே நிலைபெறுகிற நம் கவனமானது அதன்பிறகான எவ்வித பிரம்மாண்டங்களின் லயிப்பிலும் ஈர்ப்பு பெறுவதில்லை அல்லது அவ்வாறு இயங்கவென மனம் நம்மை அனுமதிப்பதில்லை. மழை நனைப்பதுபோல் ஒரு நகரை இசை நனைப்பதை உணர்வதென்பதே பேரின்பம். அம்மாதிரியான மனோநிலையில் தன்னைச் சூழ்ந்துள்ள உயர்திணை, அஃறிணை யாவற்றிலும் வயலின் இசை கசிந்துகொண்டிருப்பதை உணர்வதென்பது பேரின்பத்தினூடான மற்றுமொரு பேரின்பம். இசையில் மயங்கிய ஒரு மனமானது இந்த உலகத்தை இசையாகவே காணும் அறிவுமயக்கத்தில் சஞ்சரிப்பதுடன் அதை கொண்டாடிக் களிக்கிறது. ஒரு மனிதனின் இசைவயப்பட்ட மனப்பிரியத்தை வெளிப்படுத்தும் பெருங்கடத்தியாக தன்னை நிறுவிக்கொண்டுள்ளது இக்கவிதை.
உயிரின் வேர்வரை ஊடுருவி ஒரு உணர்வினை முழுமையாய் கவித்துவமாக்க வேண்டுமெனில் தான் அதுவாகவே மாறுவதன்றி வேறெப்படி இயலும்? எந்த ஸ்டாப்பிலோ இறங்கி, எந்தத் தெருவிலோ நடந்து, எந்த வீட்டையோ தட்டினாலும் திறந்துகொள்ளும் எல்லாக் கதவுகளும் அவருடையதாகவே இருக்கிறது என்பதாக விரிகிறது எனது சிந்தனை.

மேற்கூறிய இரு கவிதைகளிலும் வயலின் மற்றும் பியானோ ஆகிய இரு இசைக்கருவிகளின் தாக்கம் தெளிவாகிறது. முதற்கவிதையானது பாழ்பட்ட இசை குறித்த உணர்வையும், மற்றது ஒரு இசையூறிய மனதின் உணர்வுப் பிரவாகத்தினையும் நயமாக எடுத்துரைக்கிறது. முதற்கவிதையில் மன அடுக்குகளைச் சீர்குலைத்தபடி தன்னிலிருந்து விடுபட்டுச் சுழன்றோடி மறையும் இசையானது மற்றதில் அதே வேகத்தில் அவ்வளவையும் சீர் செய்வதெனும் கருத்தானது உணரக் கிடைக்கிறது. வாழ்வின் உன்னத தருணங்களை உயிர்ப்போடு மலர்த்துகிற இதுபோன்ற கவிதைகளை அவ்வளவு எளிதில் கடக்க முடிவதில்லை. சில சமயங்களில், அண்டை வீட்டில் கமழும் தாளிப்பு மணமானது நம் வயிற்றுப்பசியைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல, கவிஞரின் இவ்விதமான இசைத்தாளிப்பானது மனத்தின் இசைப்பசியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொகுப்பு _ அகாலம்
ஆசிரியர் _ சமயவேல்
வெளியீடு _ சவுத் ஏசியன் புக்ஸ்
முதல் பதிப்பு _ 1995

சேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு

சேவல் களம்”பாலகுமார் விஜயராமன்.

எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. ஆனால் (நல்ல வேளையாக ) எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவதில்லை,” என்று சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். அண்மையில்கூட ஓவியர் ஜீவா இதே போல ஒரு வரியை சொல்லியிருந்தார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!

நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே நமக்கு சுவாரசியமாக, சுவையாகத்தான் தெரியும். ஆனால் அவற்றை பதிவு செய்யும்போது பிறருக்கும் சுவாரசியமாகவும், சுவையாகவும் தோன்ற வேண்டுமென்றால், ஒருவர் அதுவரை எழுத்தில் பதிவாகாத ஒரு மாற்று வாழ்வை விவரிக்க வேண்டும். அல்லதுஏற்கனவே அவ்வாறு அறியப்பட்ட வாழ்வின் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படியுமில்லாமல், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கதைக்களமாக இருந்தாலும்கூட, அந்த வாழ்வின் சில பகுதிகளிலாவது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். இது போன்ற கூறுகள்தான் டயரிக் குறிப்புகளை இலக்கியமாக மாற்றுகின்றன.

அண்மையில், பாலகுமார் விஜயராமன் அவர்கள் எழுதிய சேவல் களம் (சேவற்களம் என்பதுதானே சரி?) நாவலை படித்தபோது, மேலே சொன்ன உணர்வைத்தான் நான் அடைந்தேன். நாவல், மூன்று திரிகளாக பிரித்து சொல்லப்பட்டு இறுதியில் இணைகிறது. ஒன்று, சேவல் சண்டையும் அதன் சித்திரமும். இரண்டு, அதன் நாயகரான ராமர் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை, மூன்றாவதாக ராமரின் தங்கை ஆண்டாள் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை.

முதல் திரி, இதுவரை தமிழ்ப் புனைவின் பரப்பில் அதிகம் சொல்லப்படாத சேவல் கட்டு எனும் ஒரு விஷயத்தை தனது பேசுபொருளாக எடுத்துக் கொண்டதில் ஒரு புதுமை இருக்கிறது.சேவல் சண்டையை,சேவல்களின் பல்வேறு வகைகளை, சண்டைக்கான முன் தயாரிப்புகளை, சண்டைக்கு இடையே சேவல்களுக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகளை, எழுதியிருப்பது எல்லாம் மிக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதில் இருக்கும் ஒரு சரளத்தன்மை வாசிப்பை லகுவாக்கவும் செய்கிறது. அந்த விளையாட்டின் நுட்பங்களை அறியாத வாசகனுக்கு இது இயல்பாகவே ஒரு நல்ல சுவாரசியமான சித்திரத்தைத் தருகிறது. இந்தத் திரியின் கிளைமாக்ஸ் போல வரும் ராமர் பார்ட்டியின் உள்நாட்டு சாம்பல் வளவி சேவலுக்கும் ஹைதராபாத் பார்ட்டியின், நூரி வெள்ளைச் சேவலுக்குமான போட்டி மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சேவல்களின் இயல்பான அறிவுக் கூர்மை, ஆபத்திலிருந்து தப்பும் வழிகள், தாக்குதல் முறைகள் எல்லாம் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

ஆனால், இந்த நாவலின் மற்ற இரண்டு திரிகளில் சொல்லப்படும் ராமரின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது தங்கையின் குடும்பத்தினர் வாழ்க்கை மிகச் சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தீவிர இலக்கிய பரப்பில் இம்மாதிரியான எழுத்துக்கு என்ன இடம் என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் நல்லவராக விளங்கும் இந்த விக்ரமன் சினிமா பாணி கதையில் ராமரின் இரண்டாவது பிள்ளை கம்ப்யூட்டர் விற்பன்னராக வந்து சில வில்லத்தனங்களை செய்கிறான். அதுவும் அப்படியே விட்டுப்போய்விடுகிறது. இதெல்லாம் அந்தக் கால, ராணி முத்து, மாலை மதி போன்ற புத்தகங்களில் வரும் ஒரு கதை போலத்தான் இருக்கிறது. முன்னுரை எழுதியுள்ள பெருமாள் முருகன் இதையே வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு 200 பக்க நாவலில் பாதிக்குப் பாதி, சேவல் சண்டை பற்றியது என்றால், இந்த குடும்பக் கதை மீதி. அதில் ஆசிரியருக்கு காத்திரமாக சொல்வதற்கு அதிகமில்லை என்பதாலேயே அந்த கடாவெட்டுக்கு ஆடு தேர்ந்தெடுக்கப் போகும் காட்சியும், காதுகுத்து கடா வெட்டு கொடுக்க குல சாமி கோவிலுக்குப் போகும் காட்சியும் அவ்வளவு நீளமாக படித்து சலித்துப் போகும் வண்ணம் எழுதுபட்டுள்ளது தெரிகிறது. பொறுமையையும் சோதித்துவிடுகிறது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த வாசகர்களுக்கு வேண்டுமானால், அது அட, நம்ம வூட்ல நடக்கறத அப்டியே எழுதியிருக்காம்பா, என்ற வியப்பையும் மகிழ்ச்சியையும் தரலாம். அவ்வளவுதான். பின் இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தப்படைப்பில் எங்கும் சாதி குறிப்பிடப்படாதது. இதுவே இதை ஒரு தொலைகாட்சி தொடராகவோ திரைப்படமாகவோ எடுப்பதற்கு மிகவும் தோதாக மாற்றுகிறது. இன்று தீவிர இலக்கியம் என்ற போர்வையில் வரும் பெரும்பாலான படைப்புகளுக்கு இந்த ஒரு நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது.

இம்மாதிரியான ஒரு படைப்பு ஒரு வணிகப் படைப்பாக, நான் மேலே சொன்ன மாதாந்திர வெளியீடுகளில் வந்திருக்குமானால், நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. காலச் சுவடு போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வெளியிடும் ஒரு பதிப்பகம் வழியாக வரும்போது, பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அவர்களது தேர்வில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் முதலில் சொன்ன விஷயத்துக்கு போவோம். எல்லாரிடமும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. பலர் அதை சொல்லவும் சொல்வார்கள். ஆனால் அது எல்லாமே ஒரு நல்ல இலக்கிய படைப்பாகி விடாது.

மொய்தீன் – அபராஜிதன் சிறுகதை

சீலையம்பட்டி கம்மாயில் இருந்து சின்னமனூர் 4 கிலோ மீட்டர்தான். கம்மாய் கரையில் நின்று பார்த்தாலே சின்னமனூரின் சிவகாமி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். தென்னைமரங்களுக்கிடையே அதன் கோபுரம் தலை தூக்கிப் பார்க்கும்.கற்கோபுரத்திற்கு வெளிற் மஞ்சள் சுண்ணாம்பு அடித்திருப்பார்கள். லாரியை கம்மாய்க் கரையில் கொண்டு வந்து நிறுத்தினார் மலைச்சாமி அண்ணன். பச்சை நிற முரட்டுத் தார்ப்பாய் போர்த்திக் கட்டப்பட்ட உருளைக்கிழங்கு லோடு லாரியின் பின்னால் இருந்தது. ஆக்ஸிலேட்டரை இரண்டு முறை அழுத்தி லாரியை உறும விட்டு அணைத்தார். அவர் வண்டியை விட்டு இறங்கியதும் லுங்கியை கழட்டி டிரைவர் சீட்டில் போட்டுவிட்டு காக்கி டவுசருடன் கரையோரம் இருந்த புதர்களுக்குள் வெளிக்குச் செல்ல ஊடுறுவினார்.

லாரியின் க்ளீனர் முத்துவேலும் நானும் லாரியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக கரையில் இறங்கினோம். முத்துவேல் லாரியின் இடையில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு வாளியைக் கழட்டி எடுத்துக்கொண்டு கம்மாயை நோக்கிச் சென்றான். ஊருக்கு வந்துவிட்டோம் என்ற உணர்வு எனக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.. பரந்து விரிந்த கம்மாய் நிரம்பி வழிந்தது.. பொதுவாக தண்ணீர் திட்டுக்களுடன் தான் இந்த கம்மாயை நான் பார்த்திருக்கிறேன்.. அப்பொழுது கம்மாயில் மீன் பிடிக்க டெண்டர் எடுத்தவர்கள் ஆட்களைக் கொண்டு தண்ணீர் திட்டுகளில் சல்லடை போட்டுக்கொண்டிருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் சிசைக்கிளின் பின்னே கூடையில் துள்ளிக்கொண்டிருக்கும் அயிரை மீன் சின்னமனூர் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும்..

முத்துவேல் தண்ணீரைக்கொண்டு வந்து லாரியின் கண்ணாடி முகத்தில் விசிறி அடித்தான். “ஊருக்குப் போயிரலாமே.. இங்கன நிக்கிறோம்” என்றேன். “எழவப் பாத்த வண்டிய அப்டியே கொண்டு போக வேண்டாம்னு மலைச்சாமியண்ணே நெனைக்கிறாப்ல.. அதேன்.. லாரிய லேசா கழுவிவிட்டு நாமளும் குளிச்சிட்டு ஊருக்குள்ள போயிறலாம்.. வெளிய கிளிய போறதுன்னா போய்ட்டு அப்டியே ஒரு முங்கு போட்டு வா.. நீதேன் மொதல்ல குளிக்கனும்” என்றான் முத்துவேல். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இங்கு எதையும் என்னால் மறுத்து பேச முடியாது என்று தோன்றியது. சட்டை பேண்ட்டை கழட்டி போட்டுவிட்டு கம்மாய் நோக்கி சென்றேன். தண்ணீர் வெதுவெதுவென்றிருந்தது. இறங்கி இரண்டு முறை முங்கினேன். வெறும் கையால் உடலைத் தேய்த்துக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் தூரத்தில் புதர்களுக்குள் இருந்து வருவது தெரிந்தது. நான் வேகமாக தண்ணீருக்குள் முங்கிவிட்டு கரையேறிக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் கம்மாயில் இறங்கி கால் கழுவிக்கொண்டு வெளியே வந்தார். சட்டையைக் கழட்டி நீட்ட முத்து வேல் போய் வாங்கிக்கொண்டான். மலைச்சாமியண்னன் தண்ணீருக்குள் இறங்கினார். என் துணிகளை ஒரு ப்ளாஸ்ட்டிக் பையில் வைத்து விட்டு வேறு உடை மாற்றிக்கொண்டேன். குளித்த உடம்பு காற்றை குளிராக உணர்ந்தது. மலைச்சாமியண்னன் ஈரமான உடம்புடன் வந்து டிரைவர் சீட்டில் கிடந்த துண்டை எட்டி எடுத்து உடம்பை துடைக்க தொடங்கினார். “பாடிய சின்னமனூருக்கு கொண்டு வருவாங்களா? என்றேன்.. மலைச்சாமியண்னன் “தெரில மணி.. முஸ்லீம்க சடங்கு என்னான்னு நமக்கு தெரியாதுல.. அந்தாளு சொந்தக்காரவுக எல்லாம் சின்னமனூருதேன்.. இவிங்ய இங்கருந்து மெட்ராசுக்கு போறாங்யலா இல்ல பாடிய இங்க கொண்டு வர்றாங்யளான்னு தெரில.. என்றார்.

சென்னையிலேயே வைத்து எல்லா சடங்கும் செய்யப்பட்டு விட்டது என்பது நாங்கள் சின்னமனூர் லாரி ஆபிஸ் சென்றதும் அறிந்துகொண்டோம். .. “பாடி தாங்காதுன்னு சொல்லி மெட்ராசுலயே வச்சு செஞ்சுட்டாங்யலாம்.. இங்கருந்து ஒறவுக்காரவுங்க யாரும் பெருசா போன மாதிரி தெரியல” என்றார் லாரி ஆபீஸ் கணக்காப்பிள்ளை. லாரியில் இருந்து உருளைக்கிழங்கு லோடுகளை கூலி ஆட்கள் இறக்க ஆரம்பித்தனர். சென்னையில் பாரீஸ் கார்னரில் லோடுகள் ஏற்றிக்கொண்டிருக்கும் போது தான் அவரை நான் பார்த்தேன். லாரியின் பின்பக்கம் நின்று பீடி பிடித்துக்கொண்டிருந்தார்.. தங்கவேல் மாமா என்னை கொண்டு போய் அங்கு இறக்கிவிடும் பொழுது பீடியை கீழே எறிந்துவிட்டு வந்து அவர் மாமாவிடம் பேசினார். வெளுத்துப்போன ஒரு வெள்ளைச்சட்டையில் நீலக்கலரில் லுங்கியும் கட்டியிருந்தார். தலையில் ஒரு அழுக்கேறிய குல்லா அணிந்திருந்தார். பல்லெல்லாம் கரையாய் இருந்தது. நாற்ப்பதைந்து வயதிருக்கும். மாமா பெரிதாக எதுவும் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை. என்னைக்கொண்டுபோய் மலைச்சாமியண்னனிடம் விட்டார். “பஸ்ஸேத்தி விட வேண்டியதுதான இவன.. லாரில ஒக்காந்துகிட்டேதான வரணும்..” என்றார் மலைச்சாமியண்ணன். ” பொங்கலுக்கு பஸ்ஸேல்லாம் புல்லு.. டிக்கெட்டு எதுவும் இல்ல.. என்னா பண்ண சொல்ற… இவனும் காலேஜ்ல ஆறு நாள் லீவு விட்டங்ய.. ஊருக்கு போயே தீருவேன்னுட்டியான்.. எங்காக்கா போன போட்டு எப்டியாவது அனுப்ச்சி விட்ருன்னுட்டாக… அதேன்..” என்றார் மாமா..

லாரியின் க்ளீனர் முத்துவேல் என்னுடன் சின்னமனூர் ஹைஸ்கூலில் படித்தவன்.. என்னைப்பார்த்ததும் மாப்ள என்று கட்டிக்கொண்டான்.. ஊர் போய் சேரும் வரை அவனுடன் பள்ளிக்கதைகள் பேசலாம்.. நான் லாரியில் ஏறி என் பையை கால் மாட்டில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.. முத்துவேல் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பி விடலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். நிறைய முறை இது போல் சின்னமனூருக்கும் சென்னைக்கும் லாரியில் போய் வந்திருக்கிறேன்.. மூன்று பேர் லாரியில் சென்றால் இடம் தாராளமாக இருக்கும். சில நேரம் க்ளீனருக்கு பின்னால் கால் நீட்டி படுத்துக்கொண்டும் செல்லலாம்.. ஆனால் அன்று லாரி கிளம்பும் போது அந்த முஸ்லீம்காரர் வந்து வண்டியில் ஏறிக்கொண்டார். கொஞ்சம் நெருக்கி உட்கார்ந்தோம்.. இப்படியே ஐநூரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தபோது ச்செய் என்று இருந்தது.. இன்றைக்கு என எங்கிருந்து இந்தாள் வந்தார் என எரிச்சல் வந்தது. அவர் உடலில் லேசாக ஏதோ வாடை வந்தது என்னை மேலும் எரிச்சல் படுத்தியது.. மனதிற்குள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அந்தளை திட்டிக்கொண்டேன்.. அவர் அடிக்கடி என்னைப்பார்த்து சிரித்தார்.. கரையோடிய பல்லும் அவர் உடலில் அடித்த வாடையும் எனக்கு குமட்டியது.. “யாரு மகென்? என்று கேட்டார்.. நான் பதில் சொல்லாமல் ரோட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.. என் தோளில் தட்டி “யாரு மகென்பா நீயீ? என்றார்.. “சின்னமனூர் தேங்கா ஏவாரி அய்யப்பன் மகென்” என்று முனங்கினேன்.. லாரியின் முறுமல் சத்தத்திலவருக்கு சரியாக கேட்கவில்லை. மேலும் தன் முகத்தை என் முகத்தருகேகொண்டு வந்து “என்னாது?” என்றார்..  அவர் வாயிலிருந்து கடுந்துர்நாற்றமாக பீடி வாடை அடிக்கஎனக்கு அழுகையே வந்துவிடும் போலஅடிக்க இருந்தது.. நான் முத்துவேல் பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டேன்.. அவன் ரோட்டை பார்த்தபடி வந்தான்..

சென்னை நெருக்கடியில் லாரி அணத்தியபடி சென்றது. தாம்பரம் தாண்டுவரை கஸ்ட்டம்தான்.. டீசல் புகை வண்டிக்குள் சன்னமாக அடித்தது.. லாரி தாம்பரம் வந்தடையம் போது இரவு பத்துமணி.. வண்டியை மெயின் ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மலைச்சாமியண்ணனும் முத்துவேலும் அருகில் உள்ள ஒரு வாழை மண்டிக்கு பணம் வாங்கச் சென்றனர். முஸ்லீம் ஆள் வண்டியை விட்டு இறங்கி கொஞ்சம் முன்னாள் சென்று பீடியை பற்றவைத்துக்கொண்டார். நான் வண்டிக்குள் அமர்ந்தபடியே அவரை பார்த்தேன்.. அவர் கைலியை மடித்துவிட்டுக்கொண்டு பீடியை ஆழ இழுத்தார். அவருடைய பீடி வாடையுடன் சின்னமனூர் வரை செல்ல வேண்டும் என்பதை நினைக்கவே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. பீடியை கீழே போட்டு விட்டு சாலையின் ஓரத்தில் வண்டியின் முன்பாக குத்த வைத்து அமர்ந்தார். அப்படியே வாந்தி எடுத்தார். லேசாக தள்ளாடியவர் தரையில் கையை ஊன்றி மீண்டும் வாந்தி எடுத்தார். எனக்கு லாரியை விட்டு இறங்கி மாமா வீட்டிற்கே சென்றுவிடலாமா என்றிருந்தது.. இல்லையென்றால் மலைச்சாமியண்னன் வந்ததும் எதாவது சொல்லி இவரை தாம்பரத்திலேயே விட்டு விட்டு செல்ல முடியுமா என்றும் யோசித்தேன். குத்த வைத்து அமர்ந்திருந்தவர் எழுந்து நிற்க முயற்சிக்கையில் தடுமாறி அப்படியே பின்னால் சரிந்தார்.. பின் இரண்டு முறை உடலை உலுக்கிக்கொண்டார். அதன்பின் அவர் உடலில் அசைவுகள் எதுவுமில்லை. நான் லாரியில் அமர்ந்தபடி அவரையே பார்த்தேன்.. பின் ஜன்னல் வழியாக மலைச்சாமியண்னனும் முத்துவேலும் வருகிறார்களா என்று பார்த்தேன்.. அவர்கள் எங்கும் தென்படவில்லை..

எனக்கு வண்டிக்கு உள்ளே அமர்ந்திருப்பது கசகசப்பாக இருந்தது. வண்டியை விட்டு இறங்கி வெளியில் நின்று கொண்டேன். விழுந்து கிடந்தவரின் உடலில் எந்த அசைவும் இல்லை. வயிறு ஏறி இறங்கவில்லை என்பதை உணர்ந்தபின்புதான் எனக்கு உறைத்தது. அவர் அருகில் சென்று அண்ணே அண்ணே என்று அழைத்தேன்.. அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை.. கைகளை தொட்டு அழைத்தேன்.. கைகள் குளிர்ந்து விரைத்திருந்தன. அவரின் கழுத்துக்கு கீழே தொண்டைப்பகுதியில் விரலை வைத்துப் பார்த்தேன்.. இதயத்துடிப்பு இல்லை.. அவர் இறந்துகிடக்கிறார் என்று புரிந்தது. சாலையில் வேகமாக விரையும் வண்டிகளைத்தவிர நடந்து போகிறவர்கள் யாரும் இல்லை.. அவர் தலை புழுதியில் கிடந்தது. தரையில் உட்கார்ந்து அவர் தலையை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தேன்.. அவர் இறந்து விட்டார் என் உறுதியாக தெரிந்தது.. ஆனால் எனக்குள் எந்த பய உணர்ச்சியும் எழவில்லை.. மனம் அமைதியாக இருந்தது. எதையும் யோசிக்க முடியவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தேன்..

சாலையின் மறுபக்கத்தில் இருந்து மலைச்சாமியண்ணனும் முத்துவேலுன் சாலையை கடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அங்கிருந்தே நான் அந்த ஆளை மடியில் கிடத்தி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை கவனித்திருப்பார்கள்.. “சரக்கப்போட்டு சாஞ்சிட்டாப்லையா?” என்றவாறு மயில்சாமி அண்ணன் அருகில் வந்தார். “இல்லண்ணே செத்துபோயிட்டாப்ல” என்றேன். மலைச்சாமி அண்ணனுக்கு நான் சொன்னது உடனே புரியவில்லை.. என்னாது என்றார்.. ” வண்டிய விட்டு எறங்கி வாந்தி எடுத்தாப்ல… அப்டியே மட்ட மல்லாக்க விழுந்தாப்ல.. வந்து பாத்த ஆள் செத்துப்போயிட்டாப்லண்ணே” என்றேன்.. மலைச்சாமியண்னன் குனிந்து அவரை சோதித்துப்பார்த்து நான் சொன்னதை உறுதி படுத்திக்கொண்டார். உடல் இறுக என் அருகில் வந்து அமர்ந்தார். முத்து வேலிடம் “லேய் வண்டி லோடோட நிக்குதுடா.. என்னடா பண்ண? என்றார்.

முத்துவேல் எஸ்.டி.டி பூத்திற்கு சென்று யார் யாருக்கோ போன் போட்டு இறந்தவரின் சொந்தங்களை தொடர்பு கொண்டு செய்தியை சொன்னான். நான் அவரின் உடலை மடியில் வைத்தபடியே சாலையில் உட்கார்ந்திருந்தேன்.. வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.. அவர் வண்டியை விட்டு இறங்கியதிலிருந்து ஒவ்வொரு விநாடியையும் திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.. கண் முன் ஒரு மரணத்தை முதன் முதலாக கண்டிருக்கிறேன்.. அவர் இறந்ததை முதன் முதலாக அறிந்தவன் நான். நாளை

முத்துவேல் சாலையை கடந்து அருகில் வந்தான். “ஓனருக்கு போன் போட்டேண்ணே.. லோடபத்தி கவலப்படாம எல்லாத்தையும் இருந்து பாத்து முடிச்சு விட்டு கிளம்பி வாங்கண்ணாப்ல” என்றான். மலைச்சாமியண்ணன் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.. பெரு மூச்சு விட்டபடி ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். இரவு இரண்டு மணி அளவில் ஒரு வெள்ளை மாருதி வேனில் சில முஸ்லீம் ஆட்கள் வந்து இறங்கினார்கள்… எல்லாரும் தலையில் குல்லா போட்டிருந்தனர். எவரும் அவரை பார்த்தவுடன் அழவில்லை.. ஆனால் அவர்கள் அனைவர் முகத்திலும் வேதனை தெரிந்தது. மலைச்சாமி அண்ணன் அவர்களிடம் நடந்ததை மெல்லிய குரலில் விளக்கி சொன்னார். அவர்கள் தங்களுக்கும் நிறைய பேசிக்கொண்டார்கள். இரண்டு பேர் சாலையை கடந்து எஸ்.டி.டி பூத்திற்குள் சென்றார்கள். என் மரத்துப்போன கால்கள் வலிக்க ஆரம்பித்தன. மெல்ல அவரின் தலையை நகர்த்தி தரையில் வைத்துவிட்டு கையூன்றி எழுந்து கொண்டேன். ரத்தம் கீழ் நோக்கிப் பாய கால்கள் கூசி தடுமாறினேன். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து முஸ்லீம் ஆளை எடுத்துச்செல்ல மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.

தாராளமான இடவசதியுடன் அமர்ந்து சின்னமனூரை நோக்கி நான் பயணப்பட்டேன்.. முத்துவேலிடம் பள்ளிக்கதைகள் எதுவும் பேசவில்லை. திண்டிவனம் தாண்டியதும் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி உடலை கொடுத்து படுத்துக்கொண்டேன். சரியாக தூங்க முடியவில்லை.. களைப்பு இருந்தாலும் மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. வீட்டிற்கு வந்து மீண்டும் ஒரு முறை ஷாம்பு சோப்பு எல்லாம் போட்டு சுடுதண்ணீரில் குளித்து சாப்பிட்டு விட்டு படுத்த பின்புதான் நல்லுறக்கம் வாய்த்தது. தூங்கி எழுந்து மறுநாள் காலையில் நான் மாடியில் இருந்து கீழே வரும் பொழுது கூடத்தில் சில ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். நடுத்தர வயதில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அம்ர்ந்திருந்தனர். கீழ வீதியை சேர்ந்த முஸ்லீம் ஆட்கள் என்று தெரிந்தது.. சின்னமனூரில் கீழ வீதியில் மட்டுமே முஸ்லீம்கள் இருந்தனர். அறுபது குடும்பங்கள் வரை இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அம்மா போட்டுத்தந்த காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். நான் கூடத்திற்குள் வந்ததும் அம்மா என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்தனர். நானும் என்ன சொல்லுவதென்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தேன்..

அம்மா “இவென் என்னமோ ஏதோனு ஓடிப்போயி பாக்குறதுக்குள்ள இறந்துட்டாராம்.. என்ன செய்றதுன்னு தெரியாம அவர மடிலயே போட்டு ரோட்ல உக்காந்திட்டு இருந்திருக்கியான்” என்றாள். நான் தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தேன்.. மேலும் சில விநாடிகள் அமைதியாக கழிந்தது. அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் மெல்ல அங்கிருந்து நகர்ந்து உள் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.. அவர்கள் கிளம்பும் ஓசை கேட்டது.. அவர்கள் முனங்களாக அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார்கள். அம்மா என்னைதேடி அறைக்குள் வந்தாள். “அவங்க என்ன ஏதுன்னு தெரிஞசுக்கத்தான வந்து ஒக்காந்திருக்காங்க.. என்னாச்சுன்னு சொல்ல வேண்டியதுதான.. ” என்றாள். “நான் என்ன சொல்றது.. அதேன் நீ சொன்னில்ல.. அதான் நடந்துச்சு.. அத நான் சொன்னா என்ன நீ சொன்னா என்ன? என்றேன்.. “நீதேன் சொல்லனும்.. வெலாவரியா சொல்லனும்.. அப்பத்தான அவங்களுக்கு புரியும்.. தீடீர்னு செத்து போயிட்டார்னா அவங்களுக்கு எப்டி இருக்கும்” என்றாள்.  நான் எழுந்து கழிவறைக்குள் சென்றேன்..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு கும்பல் வந்தது.. பல வயதினர் கலந்த கும்பல். சிறு பிள்ளைகள் வேறு இருந்தனர். அவர்கள் கூடத்தை நிறைத்து அமர்ந்திருந்தனர். “என்னாச்சுன்னு தெரிலங்க.. குத்த வச்சு உக்காந்து வாந்தி எடுத்தாரு.. நான் என்ன ஏதுன்னு ஓடிப்போய் பாக்குறதுக்குள்ள அப்டியே சரிஞ்சு விழுந்துட்டாரு.. பக்கத்தில யாரும் இல்ல.. என்ன பண்றதுன்னு எனக்கு புரியல.. நெஞ்ச தேச்சு விட்டேன்.. அப்டியே உடம்ப ரெண்டு தடவ உலுக்கினாரு.. ஓடிப்போய் லாரில இருந்து தண்ணிய எடுத்துவந்து வாயில விட்டேன்.. ஆனா அத குடிக்கிறதுக்குள்ள உயிர் போய்டுச்சு” என்றேன். கூட்டத்தில் சில விசும்பல் குரல்கள் எழுந்தன.. பிள்ளைகள் கூட்டத்திற்குள் அங்குமிங்கும் பெண்களிடம் தாவி குதித்து விளையாடின. ஒருவர் பிள்ளைகளை அதட்டினார்.

நான் வெளியே நண்பர்களை பார்க்க சென்றேன். முருகேசனுடன் சேர்ந்து மஹாராஜா கடைக்கு சென்றேன். பொங்கலுக்கு சென்னையிலேயே துணி எடுத்திருக்கலாம். சோம்பேரித்தனம். ஆனால் துணிகள் மஹாராஜாவில் பரவாயில்லை என்றிருந்தது. இரண்டு செட் உடைகள் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். தர்பார் டீக்கடைக்குள் சென்று அமர்ந்து டீ சொன்னோம். கல்லாவில் நின்றிருப்பவர் மெல்ல அருகில் வந்து உட்கார்ந்து மொய்தீனு உங்க கூட வரும் போதுதேன் மையத்து ஆனாப்லன்னு சொன்னாங்க.. என்னப்பா ஆச்சுங்க” என்றார். நான் மேலோட்டமாக நடந்ததை சொன்னேன்.. “நல்லஆளுதேன்.. ஆனா ஒரு எடத்தில நின்னு வேல பாக்குறது கெடையாது.. ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைக.. வளந்து வருதுகடா என்னத்தையாவது பண்ணுன்னு சொல்லிச் சொல்லி மெட்ராசுக்கு தெரிஞ்சவங்க கிட்ட வேலைக்கு அனுப்பி வச்சோம்..இப்ப இப்டி ஆகிபோச்சு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி சென்றார்..

மாலை வீட்டிற்கு வரும் பொழுது ஒரு நூறு பேர் வாசலில் தெருவை அடைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். என்னை அடையாளம் கண்டு கொண்டு எல்லோரும் என்னை பார்த்தார்கள். என் கால்கள் உறைந்து போனது போல் அப்படியே நின்றது.. வாழ்வில் முதல் முறையாக இத்தனை கண்கள் என்னை மட்டுமே நோக்குவதை உணர்ந்து தடுமாறினேன்.. மிக கூச்சமாக உணர்ந்த போதே நான் இன்று இவர்களுக்கு முக்கியமானவன் என்ற எண்ணம் வந்தது. ஆட்கள் நான் வீட்டிற்குள் செல்வதற்காக வழி விட்டார்கள். நான் கடந்து சென்றதும் மெல்ல சத்தமில்லாமல் என்னை தொடர்ந்து வந்தார்கள். கூடத்திலும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். கீழவீதி முழுக்கவே வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.. நான் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களை மிதிக்கமால் கால்களை எட்டி வைத்து நடந்து உள்ளறைக்கு சென்றேன்.

அம்மா பின்னாடியே வந்தாள். “ஓடிப்போய் பாத்தேன்.. வாந்தி எடுத்தாரு.. அப்டியே விழுந்து செத்தாருன்னு சொல்லாத.. அத கேக்க அவங்க வரல” என்று முனங்கி விட்டு வெளியே சென்றாள். நான் என்னை நிதானப்படுத்திக்கொண்டேன். ஆழமாக முச்சை இழுத்துவிட்டுக்கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தேன்.. எல்லோரும் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள். தெருவில் இருந்தோர் வாசலை அடைத்துக்கொண்டும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டும் நின்றார்கள். ஒரு குழந்தை அழுதது.. அதை ஒரு பெண் தோதோவென சொல்லி சமாதானப்படுத்த முயற்ச்சித்தாள். “மொய்தீன் அண்ணே என்கூடத்தான் லாரில வந்தாரு… எங்கூட பேசிகிட்டேதான் வந்தாரு.. நான் என்ன படிக்கிறேன் எல்லாம் கேட்டாரு.. ” கூட்டத்தில் மூச்சு விடும் சப்தம் தவிர எதுவும் கேட்கவில்லை. அம்மா கண்கள் விரிய என்னை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ” ரொம்ப கஸ்ட்டபட்டுட்டேன் தம்பி.. இப்பதான் எல்லாம் சரியா போய்ட்டு இருக்குன்னு சொன்னாரு.. பிள்ளைகள பெருசாகிட்டாங்க.. அவுங்களுக்கு செய்ய வேண்டியத செய்யனும்னாரு.. இனி எல்லாத்தையும் மாத்தி நல்லபடியா ஆக்கிடுவேன்னு நம்பிக்கை வந்திருச்சுன்னாரு.. பிள்ளைக மேல உசுரா இருக்கார்னு தெரிஞ்சுது.. படிச்சா பத்தாது.. நம்மள சுத்தி இருக்கவங்கள நல்லா வச்சிக்கனும் தம்பின்னாரு.. நான் ஆமாம்ணேன்னு சொன்னேன்.. ரொம்ப நாள் கூடப்பழகுனவரு மாதிரி சிரிக்க சிரிக்க பேசிட்டு வந்தாரு.. தாமபரத்தில வண்டி நின்னதும் டீ வாங்கித்தர்றேன் வாப்பான்னு கைய பிடிச்சு இழுத்தாரு.. சரிங்கண்னேன்னு சொன்னேன்.. அவருதான் முதல்ல வண்டில இருந்து இறங்கினாரு..” அழுதுகொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு என்னையையே பார்ப்பதை உணர்ந்தேன்.. ஒருகணம் சொல்வதை நிறுத்திவிட்டு பின் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன்

கூடடைதல் – லோகேஷ் சிறுகதை

நான் தங்கியிருந்த தனியறையின் பக்கவாட்டு சுவரில் சுவற்றுப் பல்லியைப் போல் ஒட்டிக்கொண்டு அந்த சத்தத்தை தினமும் கேட்டுக்கொண்டிருப்பேன். சுவரின் அந்த பக்கத்தில் ஒரு சிறு பொந்து இருக்கிறது. அந்த பொந்திற்கு அவ்வப்போது ஒரு புறா வந்துகொண்டிருக்கும். அறைக்கு பின்பக்கத்தில் கண்ணுக்கு மறைவாக அந்த பொந்து இருந்தது. ஆகவே புறாவை பார்க்க முடியாது. அதன் ஓசையை வைத்துக்கொண்டு தான் அதனை அறிய முடியும். அது எழுப்பும் குறுகல் ஒலிக்காக தான் நான் காதை சுவரோடு ஒட்டி அப்படி கேட்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். முதலில் கேட்ட போது அந்த குறுகல் ஒலி எனக்கு எங்கள் ஊரின் மகமாயி கோயிலின் மாடப்புறாவைத் தான் ஞாபகப்படுத்தியது. சரியாக காலை விடியும் வேளையில் அந்த குறுகல் ஓசை எழும். அதில் அந்த சுவரே முனகுவது போல இருக்கும். அந்த முனகலில் தான் என் கண் விழிப்பு. பின்னர் மாலை அந்தி வேளையில் நான் வேலை முடிந்து திரும்பி வந்ததும் மீண்டும் ஒருமுறை காதை வைத்து கேட்பேன். சுவரே சடசடக்கும். புறா அதன் சிறகு அதிர புறப்பட துடித்துக்கொண்டிருக்கும். கூடடைவதற்கான தன் புறப்பாடை அதன் சிறகுகளைக் கொண்டு அதிர்த்தி தெரிவிப்பது போல. அது சென்ற பிறகும் அந்த சடசடப்பு அந்த சுவற்றில் எஞ்சும்.

நான் எனக்கான சிறகுகளை எப்போது பெறப் போகிறேன்? ஒவ்வொரு நாளும் அந்த சிறகடிப்பின் சடசடப்பில் புறாவோடு புறாவாக அந்த சுவரும், அந்த சுவரோடு ஒட்டிய நானும் பறந்துவிடலாகாதா என்ன?

எனக்கான சிறகுகளைப் பெற்று என கூடடைய எழுந்திருக்கிறேன் இப்போது. எனக்கு வயது முப்பத்தி இரண்டு. இருவதாவது அகவைகளை அரை பாக்கெட் சிகரெட்டிலும், வெட்டப்படாத தாடியிலும், பன்னிரெண்டு மணி நேர உறக்கத்திலும், ஆற்றங்கரை ஒரத்திலுள்ள பாழடைந்த மண்டபத்திலும் கழித்து பொறுப்பின் சலனம் இல்லாத இளைஞர்களுள் நானும் ஒருவன். ஆனால் இன்று அப்படி இல்லை. இன்றோ மாதம் எட்டாயிரம் ரூபாய் வருவாய். சொந்த ஊரை விட்டு வெகு தொலைவில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் வேலை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் செல்ல அனுமதி. அங்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால்… என் வீடு… அப்பா… மனைவி… தங்கை… அவர்களது காலைகள்.

கொல்லைபக்கம் தோட்டத்தில் விழுந்து இறைந்து கிடக்கும் தன் மனைவி வளர்த்த பவழமல்லி செடியின் பூக்களை தன் அரைப் பார்வைக்கொண்டு நேற்றைய பூ எது இன்றைய பூ எது என்று பகுத்து அன்றைய பூக்களை மட்டும் பொறுக்கி எடுத்து வந்து சாமி அலமாரிக்கு முன் தன் மகள் போட்ட அரசி மாவு கோலத்திற்கு மேல் அலங்கரிப்பார் அப்பா. மீதியிருக்கும் பூக்களை பூக்கூடையிலேயே விட்டுவைப்பார். அதனை என் மனைவி எடுத்து பவழமல்லியின் செந்தூரக்காம்புகளில் ஊசியை நுழைத்து கோர்த்து தொடுத்து சரமாக்கி என் அம்மா படத்திற்கும் ஏனைய சாமி படங்களுக்கும் சாத்துவாள். மீதியிருக்கும் அரை முழம் பவழ மல்லி சரத்தை தங்கை பள்ளிக்குச் செல்லும் போது அவளது தலையில் வைத்துவிடுவாள். இந்த பவழமல்லி கதையை எனக்கு எழுதும் கடிதத்தில் அடிக்கடி குறிப்பிடுவார் அப்பா. ஒவ்வொரு நாளும் எப்படி அந்த பவழ மல்லிச் செடி ஓரே எண்ணிக்கையில் பூக்களைத் தருகின்றன என்று அவரது வியப்பு அந்த கடிதத்தில் கலந்து இருக்கும். அங்கிருந்த வரை அவர்களது காலைகளில் எனக்கு பெரிதாக இடம் ஏதும் இருந்தது இல்லை. இன்று அவர்களுடன் என் பிள்ளையும். பிறந்த முதல் இன்று வரை தனது தந்தையவனின் முகம் கூட நுகரா பால் வண்ணம் மாறா ஆறு மாத கைக்குழந்தை. இங்கு இரை தேடி வந்து வீடு திரும்பும் பறவையாய் நான். ஊரிலிருந்து வேலைக்கு சேர்ந்து எட்டு மாதம் ஆகிவிட்டது. இதுவே என் முதல் வீடு திரும்பல். இங்கிருந்து ஊருக்கு எழு நூறு மைல் வரை தொடர்வண்டியில் சென்ற பின் மலைப்பாதை கடந்து சாலை மார்க்கமாய் இரண்டரை நாட்களில் சென்றடையலாம்.

ஒன்றரை நாள் ஆகிவிட்டது. நான் வந்த தொடர்வண்டி மழை காரணமாய் நடுவிலே நிறுத்தப்பட்டது. என்ன செய்வதென்று அறியாது முழித்தேன். மொத்தம் ஏழு நாள் தான் விடுமுறை. ஐந்து நாள் போக வர பயணத்திற்கே சரியாக இருக்கும். மீதி இரண்டு நாட்கள் தான். இந்த எட்டு மாதங்களாய் என் உயிரை ஓட்டி கொண்டிருந்தது இந்த இரண்டு நாட்கள் தான். இரவு பதினோரு மணி. ரயிலை விட்டு இறங்க முடிவு செய்தேன். இன்னும் மூன்று மணி நேரம் பயணம் செய்தால் அருகில் உள்ள பேருந்துகள் இயங்கப்பெறும் ஊருக்கு சென்றடையலாம். அங்கிருந்து என் ஊருக்கு ஐந்து மணி நேரம் தான் என்ற நம்பிக்கையில் நடந்தேன். நிலா வெளிச்சம் நிறையப் பெற்று இருந்தது வழியெல்லாம். மனித நடமாட்டமாய் எதையும் அறிய முடியவில்லை. ஆந்தையின் அலறல். மழை மேகங்கள் மழையை பனியாய் மாற்றிப் பொழியும் குளிரை தாக்குப்பிடிக்க முடியவில்லை.வேலைக்கு செல்வதற்கு முன் என் மனைவி கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் நினைவுக்கு வந்தது. பெட்டியில் இருந்து எடுத்து அணிந்துகொண்டேன். கூடவே அவள் சம்பந்தப்பட்ட நினைவுகளும் எழுந்து என்னை அணைந்துகொண்டன.

அன்று என்னையும் என் இயலாமை தெரிந்தும் என்னை ஏற்றுகொண்டு என்னோடு வாழ வந்தவள் தான் என் மனைவி. அவளது மெளனங்களை என் வாழ்க்கை தராசில் நிறுத்தினால் என்னால் ஈடு செய்ய முடியாது. நான் பொறுப்பில்லாமல் இருந்த காலங்களில் அவள் எந்த நம்பிக்கையில் என்னை ஏற்றுகொண்டாள் என்று நான் இன்று வரை அவளிடம் கேட்டதில்லை. திருமணத்திற்கு பின்னான நாட்களில் இரவு படுக்கைக்கு முன் அரைப் பாக்கெட் சிகரெட்டையும் காலி செய்து நெஞ்சு நிறைந்த புகையை தேக்கி வெளியில் விடாமல் அந்த போதையிலேயே திளைப்பேன். ஆரம்ப காலத்திலிருந்தே சிகரெட் புகையை நெஞ்சில் தேக்கி மூச்சை அடக்கும் இந்த பழக்கம் என் நட்பு வட்டத்தின் மூலம் நன்கு பரிச்சயமாகியிருந்தது. கண்கள் சிவந்து பொங்கியெழ வந்து அவள் அருகில் படுப்பேன். படுத்து உறங்கிய சிறிது நேரத்திலேயே அந்த நெஞ்சுப்புகை என் கண்களிலும் காதுகளிலும் மூச்சிலுமாக வெளியே கசியும் ஒரு நிலக்கரி இன்ஜினைப்போல. அருகில் படுப்பவர்களுக்கு குடலையே உமிழும் அளவிற்கு நாற்றம் பிறட்டும். அத்தனையும் தாங்கிக் கொண்டு தன் சேலை முந்தானையால் தன் முகத்தினை மூடிக்கொண்டு சற்று கமறி படுத்துக்கொள்வாள். அவ்வளவுதான். என்னிடம் எந்த புகாரும் அவளுக்கு இருந்ததில்லையா என்ன? இத்தனையும் எதற்கு ஒருத்தி தாங்கிகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று வரை கூட இருக்கிறது. அதற்கும் அவள் மெளனத்தையே பதிலாய் உரைப்பாள். அவளது மெளனங்களால் என்னை அலட்சியப் படுத்துகிறாளா என்று கூட தோன்றும்.

வேலைக்குப் போக வேண்டிய நெருக்கடி என்னைச் சூழ்ந்த போது என் சொந்த ஊரே என்னை விரட்டியடித்தது. நான் நின்று கொண்டிருக்கிற நிலமே கூசுவது போல் இருந்தது. அப்போது அவள் மட்டும் மெளனம் காத்தாள். அவளது அந்த மெளனத்தை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. “எல்லாரும் என்ன திட்டி தீக்குறாங்க, நீ மட்டும் ஏன் இன்னும் மிச்சம் வச்சுருக்க? ஏதாவது சொல்லு” என்று அவளை உலுக்காத குறையாக கேட்டேன். ‘இல்ல எனக்கு என்ன சொல்றதுனு தெரியல’ என்றாள். நான் அவளது தயக்க எல்லையை கடக்க முற்பட்டு, “என்ன தயங்குற. சொல்றதுகென்ன.” என்றேன்.

“தயக்கம்லாம் இல்ல உண்மையாவே அவ்ளோ தான்” என்றாள்.

இப்படித்தான் தயக்கத்திலேயே முழுமையாய் முடிந்துவிடுவாள் அவள். பின்னர் எதுவென்றோ ஆனவனாகி,

கனத்த குரலில் ‘நீ ஏன் இப்படி இருக்க? எதுவுமே பேசமாட்டேங்குற. என்கிட்ட பேசுறதுக்கு உனக்கு வார்த்தையே இல்லையா?

உனக்கு எம்மேல கொஞ்ச நஞ்ச உரிமைக்கூட இல்லையா என்ன?’

‘ஒருத்தங்கள அப்படியே ஏத்துக்கறதுல உரிமையில்லாம ஆய்டுமா என்ன?’ என்றாள்.

அவளிடம் மேற்கொண்டு சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அவ்வார்த்தை என்னை நிறைத்ததா? இல்லை முழுதும் இறைத்ததா? தெரியவில்லை. இலை தளத்தில் நழுவும் பனி நீர் சுடுமணலில் விழுவதைப் போல அவ்வார்த்தையை அப்படியே உறிந்துகொண்டேன். அதிலிருந்த தண்மையும் உயிரோட்டமும் எனக்கு மட்டுமே அணுக்கமானது என்று பின்னர் பல தடவை நினைவு கூறி ஊர்ஜிதபடுத்திக்கொண்டேன். அதன் பின் அவளது மெளனங்களை அளக்க நான் முற்பட்டதில்லை. அதை சார்ந்த எந்த ஐயங்களும் இல்லை. எழுந்தாலும் அவளிடம் கேட்க போவதுமில்லை. அவளது மெளனங்களே எனக்கு காப்பாகவும் மாறியிருந்ததை சில சமயங்களில் உணரமுடிந்தது. அவளது வார்த்தைகளும் புளியமரத்தை உலுக்கி பொறுக்கி எடுக்கப்படும் புளியம்பழங்களைப் போல தான். அடி நாக்கில் எஞ்சும் அந்த இனிப்பு தாண்டிய புளிப்பைப் போல அவள் உகுக்கும் வார்த்தைகளின் சாரத்தை நான் சேகரம் செய்து கொள்வேன். நான் கிளம்பும்போது என்னை அணைத்து “இனிமேல் என் வேலையை இது செய்யும்” என்று கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் தான் இது.

இறுகி அணைத்தபடியே நடந்தேன். ஒரு ஐந்தாறு கிலோமீட்டர் நடந்திருப்பேன். சாலையை அடைந்துவிட்டேன். எதேனும் பஸ்ஸோ லாரியோ வருகிறதா என்று பார்த்து கொண்டே நின்றிருந்தேன். எதும் தென்படவில்லை. மணி ஒன்று இருக்கும். கால் கடுக்க நின்றிருந்தேன். தொலைதூரத்தில் ஒரு வெளிச்சம். அருகில் வர வரக் கூடிற்று. ஒரு ஆம்னி வேன் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்த கை நீட்டினேன். ட்ரைவர் சற்று தூரம் போய் நிறுத்தினார். என் பெட்டியை எடுத்துக்கொண்டு வண்டியின் அருகில் சென்றேன். ட்ரைவரிடம் நடந்ததை கூறி விவரித்தேன். உள்ளிருந்து கணத்த இருமல் சத்தம் கேட்டது. ஒரு அறுவது வயது அம்மாவும் முப்பது முப்பத்திரண்டு வயது மகளும் இருந்தார்கள். அந்தப் பெண் சால்வையை மூடிக்கொண்டு தொடர்ந்து கத்திக்கொண்டும் இரும்பிக்கொண்டும் இருந்தாள். அம்மா அவளை தடவி கொடுத்து சமாதான படுத்தியவாறே இருந்தாள். ட்ரைவர் என்னை ‘ஏறுங்க சார்’ என்றார். அந்த மகளுக்கு என்ன தோனியதோ தெரியவில்லை என்னை பார்த்து அனத்திக்கொண்டே வந்தாள். “இந்த ஆளும் முகரயுமே சரி இல்ல…ஏன் இந்த ஆள வண்டில ஏத்துனீங்க ..?” என்று அம்மாவிடமும் ட்ரைவரிடமும் அனத்திக்கொண்டே வந்தாள். ஆம், என் முகமும் அப்படித்தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் என் விஷயத்தில் அது தப்பி விட்டது. திருடனும் எளிதாய் கைக்காட்டி திருட்டு பழியை சுமத்தி விட்டு தப்பிவிடுவான். அப்படிப்பட்ட முக அம்சம் பொருந்தியவன் நான். என்னை முதலில் பார்பவர்களுக்கு நான் சந்தேகப்படும்படியாகவும் இழிவாகவும் தெரிவதை நான் பல சமயங்களில் ஊகித்திருக்கிறேன். ஒருவரைத் தவிர – அவள் தான் என் மனைவி. போக போக அந்த பெண்ணின் அனத்தல் உச்சத்தை தொட்டது. இரைச்சலாய் மாறியது. அந்த வேனின் ஓரக்கண்ணாடியில் என் முகத்தை பார்த்தவாறே புழுவினும் இழிந்த நிலையை எண்ணினேன். வாழ்க்கையே இழிவாய் மாறிய தருணம் அது.

போக வேற்று வழி இல்லாமல் என் உணர்ச்சிகளை கண்ணீராய் பதிவு செய்த தருணமும் அது தான். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் நிலைமை மோசமாக உரத்தக் குரலில் கத்தினாள். “ட்ரைவர், வண்டிய நிப்பாட்டுங்க, இந்த ஆள எறங்க சொல்லுங்க” என்று சத்தம் போட்டாள். அவள் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. ட்ரைவரும், “பக்கத்து ஊர்ல இவர் எறங்கிருவாருமா அது வரை அட்ஜஸ் பண்ணிகோங்க” என்றார். ஆனாலும் அவள் மூச்சுத் திணற திணற சத்தம் போட்டாள். அவள் அம்மா “தயவு செஞ்சு அவர எறக்கி விடுங்க” என்று கேட்டுக்கொண்டபடியே தண்ணீர் பாட்டிலை எடுத்து மகளிடம் தந்து மாத்திரை கொடுத்தாள். ட்ரைவரும் வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்தி என்னை தனியே இழுத்து சென்று, “சார் தப்பா நெனைக்காதீங்க. அந்த பொண்ணுக்கு ஹிஸ்டீரியா கம்ப்ளைண்ட், டிபி வேற அதான் இப்டி நடந்துக்குறாங்க. நீங்க வேற பஸ் லாரி புடிச்சு போய்க்கோங்க” என்று சொல்லி விட்டு சென்றார்.

மறுபடியும் தொலைந்து போனேன். ஒரு கண்ணில் என் குடும்பம். ஒரு கண்ணில் அந்த பெண்ணின் வசை மொழிகள் கணம் கணம் தோன்றி மறைந்தன. கொஞ்ச தூரத்தில் ஒரு லாரி வந்தது தெரிந்தது. மூன்று மணி இருக்கும். கையை நீட்டினேன். வண்டி வேகம் குறைந்து நின்றது. ட்ரைவர் ஒத்துக்கொண்டார். நடந்ததை மனதில் வைத்துகொள்ளாமல் குடும்பத்தை எண்ணியவாறே கண் அயர்ந்தேன். விடிந்தது. கண் முழித்துப்பார்த்தேன். தூரத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டம். சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று இருந்தது. போலீஸ் ஜீப்பும் அருகில் நின்றது. விபத்து நிகழ்ந்ததற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தது. லாரி ட்ரைவர் வண்டியை நிறுத்தி இறங்க முற்பட்டார். அதற்குள் ஒரு போலீசுகாரர் அவரை தடுத்து “வண்டியலாம் இப்டி தேவ இல்லாம ஓரங்கட்டாத…கெளம்பு…கெளம்பு” என்றார் “என்ன சார் ஆச்சு?” என்று லாரி ட்ரைவெர் அவரை வினவ, ” ஒரு அம்மாவும் பொண்ணும் வந்துருக்கராங்கையா….ட்ரைவர் பனில வண்டி ஓட்டத் தெரியாம தடுமாறி இருக்கான். வளைவுல கல்’ல மோதி ஆக்சிடென்டு. அதுல அம்மாவும் மகளும் ஸ்பாட் ஔட். ட்ரைவெர் அடிப்பட்டு கெடக்குறான்யா” என்று வழியை சரி செய்து அனுப்பினார். இதை கேட்ட எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. லாரி ட்ரைவர் “யாரு செஞ்ச பாவமோ? இப்டி ரத்தம் பட்டு கெடக்குதுங்க” என்று புலம்பினார் என்னிடம். என்னை வண்டியிலிருந்து இறக்கி விட்டதனால் தான் அவர்களுக்கு இந்த கதியா என்ன? என்ற எண்ணம் எழாமலில்லை. ச்ச, என்ன அபத்தம் இது? ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன் நான்? லாரியின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை நானே தேடி ஒருமுறை பார்த்துக்கொண்டேன். இது மாதிரி தருணங்களில் தான் ஒரு கண்ணாடியின் தேவையை நான் மிகவும் உணருகிறேனோ?

இப்படி பலவித எண்ணப்பரிமாற்றங்களுடன் அந்த ஊர் வந்து சேர்ந்தேன். லாரி ட்ரைவர் “இதான் சார் பஸ் ஸ்டாண்ட். இங்கேந்து உங்க ஊருக்கு பஸ் கெடைக்கும். பாத்து கேட்டு போய்டு வாங்க” என்றார். வண்டியை விட்டு இறங்கிய பின் ட்ரைவரிடம் “இந்தாங்க இத வச்சுகோங்க” என்றேன். ட்ரைவர் “அதலாம் வேணாம். ஒதவி செஞ்சு ஒருத்தன் அடையற விசாலத்த இப்படி பணங்கொடுத்து குறுக்கப் பாக்கறீங்களே சார். நாட்டுல எல்லாத்துக்கு மாத்தா இது இருக்கு. மனுசன் மனசுக்கு மட்டும் வேணாமே. என்ன சொல்றீங்க? ஓயாம லாரி ஓட்டுறவன் நான். எதோ என்னால முடிஞ்சது.” என்று புன்னகையுடன் மறுதலித்தார். “எல்லாரும் இப்படி பண்ணமாட்டாங்கள்ள ணா. அதனால தான்…” என்றேன். “அவங்கள வுடுங்க சார்” என்று லாரியின் கியரை மாற்றினார்.

மணி ஆறு முப்பதுக்கெல்லாம் என் ஊருக்கு பஸ் ஏறிவிட்டேன். அரசங்கொல்லை என் ஊர். மீண்டும் எண்ண ஓட்டங்கள். அந்தப் பெண்ணின் அரற்றல். அந்த வேன் ட்ரைவரின் மன்றாடல். அந்த லாரி ட்ரைவர் புன்முறுவல் என்று மாறி மாறி. ஒரு வழியாக ஊர் வந்து சேர்தல் ஆயிற்று. வீட்டுக்கதவை தட்டியவுடன் அப்பா கதவு திறந்தார். புத்தகத்தை கீழே போட்டு விட்டு ஓடி வந்து தன் கண்ணாடி வலையல்கள் நொறுங்க கட்டி அணைத்தாள் தங்கை, சமையல் வேலையைப் போட்டது போட்டபடி விட்டு வேகமாய் வந்து, தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து வந்து கையில் கொடுத்து என் தோளில் மெளனச் சாய்வு சாய்ந்தாள் மனைவி. “என்னடா பையன், அசப்புல உன்ன போலயே மூக்கும் முழியுமா இருக்கான் பாரு” என்றார் அப்பா. கையில் இருந்த என் மகன் மெலிதாய் சிரித்தான். நானோ அழுதேன். ஆம் என் முகத்தை தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எந்த கண்ணாடியும் என் எதிரில் இல்லை இப்போது.

விழித்த என் கண்களின் ஈரத்தை வற்றச்செய்தது பேருந்தின் ஜன்னல் ஓரம் வீசும் எதிர்காற்று. இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். என் உடலில் முளைத்த சிறகுகளை எவரோ பிடுங்கி எறிவதைப் போல ஒரு வலி மிஞ்சியிருந்தது. அறைக்கதவைத் திறந்தபோது, தள்ளிய வேகத்தில் இருந்த காற்றழுத்த வேறுபாட்டினால், திறந்திருந்த ஜன்னலின் அடித்தளத்தில் இருந்து ஒரு இறகு அசைவுற்று கதவின் பின்புறம் வந்து விழுந்தது.