இடமூலையில் வேம்பு
வடமூலையில் மா
நடுவில் பலா
இடையில் நெல்லி எலுமிச்சை
இடைவெளிகளில்
ரோஜாவும் செம்பருத்தியும் என்ற பெருவிழைவை
செயல்படுத்தியபோது
கழிவுநீர்த் தொட்டி
மாவினிடத்தைப் பெற்றது
ஆழ்துளைக் கிணறு பறித்தது
வேம்பினிடத்தை
நீர்சேகரத் தொட்டி அடைத்தது
பிறவற்றின் இடத்தை
Month: September 2019
அலைவரிசை, மாற்றுலகம்,அந்தியின் கடைசிப்பறவை – கமலதேவி கவிதைகள்
அலைவரிசை
கானலடிக்கும் வெயில் அலைகளில்
மிதக்கிறது
நிழற்படம் போலவோ,
தொலைப்படம் போலவோ,
அந்தமுகம்.
புறத்தின் எந்தத்தடையும் இன்றி
செவிநரம்புகளை இதமாய் தொடுகிறது
மென்காற்றென ஒருகுரல்,
படக்கருவி அருகினில் காட்டிய கண்கள்,
எப்போதோ புன்னகைத்த இதழ்களை இப்போதெனக் காணும்
யுகத்தில் நீயாரோ ?
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு அலையில் உன்குரல்,
அதே பிரபஞ்சத்தில் கேட்கும் என் செவிகள்,
அருவக்குரல் சொந்தமில்லையாதலால்
அன்னியமுமில்லை.
வெயிலுக்கு ஒதுங்கிய கூரையிலிருந்து
உன்குரலோடு தெருவில் இறங்கி நடக்கிறேன்.
எனக்கும்….
அந்தத் தகரக்கொட்டகைக்கும்
இடையிலான தொலைவில் தேய்ந்து மறைகிறது
ஒரு புரியாதபுதிர்.
மாற்றுலகம்
இன்னும் மென்மை எய்தாத
இளம்சிறுமியின் குரல் அது,
கண்களை விரித்து இசைக்கு
தலையாட்டியபடி பாடினாள்,
பெரும்பாலும் முகத்தின் உணர்வுகளில்
மாற்றமில்லை…
அவள் காணும் கனவில்
நானுமிருந்தேன்
நிகழ்காலத்தின் மாசில்லாதொரு
பொழுதில்
அந்தியின் கடைசிப்பறவை
மேகங்கள் அற்றவெளியில்
நிலவெழுந்த வானில்….
மென்குரலில் ‘ கீகீகீ.. ’
ஒற்றைப்பறவையின் பதறிய குரல்.
உணவோ… நீரோ..
குறிவைத்தக் கண்ணியோ… உடலோ…
இப்படி எதனால் பிந்தியதோ?
என்னவாயிருந்தால் என்ன?
அதன் வழியில் குறுக்கிட
எந்தப்பறவையும் இல்லை என்பதே
எத்தனை ஆசுவாசம்.
மனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜெ.ரோஸ்லின் கவிதைகள்
மனம்
இந்த மனதிடம்
நீ இல்லாத எதையோ உற்றுப்பார்க்கும் பூனையைப் போல இருக்கிறாய்
என சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அது நம்ப மறுக்கிறது.
கைவிளக்குகளோடு
நான் என்னைவிட்டு வெளியேப்போய்
என்னைத் தேடும் போதுதான் கவனித்தேன்
என்னுடைய மனம் தூரத்தில் ஒரு மலையாக அமர்ந்திருப்பதை.
அதன் அடிவாரத்தில் சென்றுபார்த்தேன்.
நினைவுகள் படிக்கட்டுகள் வழியே கீழே இறங்குவதை
பார்த்தபடியே மேலே ஏறிக்கொண்டிருந்தன மறந்தவைகள்
பாதி திறந்த சன்னலுடைய அறை
இரவுகளில் அறைகள்
யுத்தச்சூழலில் நீந்திக்கொண்டிருக்கும் நீர்மூழ்கிகப்பல்களாக
தங்களை கனவு கண்டுகொள்கின்றன
தாமதத்தின் தெருக்கள் வழியே
சிங்கத்தின் தலையுடைய ஒருத்தி பால்கனியில்
தனியே நின்றுகொண்டிருக்கிறாள்.
அம்பாசிடர் கார் ஒன்று
அந்த சாலையில் எதற்கோ காரணம் மாதிரி
நிற்கிறது.
அச்சு அசலாய் என்னைப் போலவே இருக்கும்
ஆயிரம் ஆயிரம் பேர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன் தாமதத்தின் தெருக்கள் வழியே.
திரும்பிப் பார்க்கையில்
திரும்பிப் பார்க்கையில்
காலம் ஒரு இடமாக
காட்சியளிக்கிறது என்று நகுலன் எழுதியிருக்கிறார்.
ஆனால் திரும்பி பார்க்கும்போது அல்ல
இந்த சன்னலில் இருந்து
பார்க்கையில்
எனக்கு காலம் ஒரு நபராக தெரிகிறது.
அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்
எப்போதும் செய்துகொண்டிருப்பதையா?
இல்லை, மெதுவாக நிலவை தணித்துக்கொண்டிக்கிறாள்
பிரிவு
நீ எப்போதும் மூன்று பேருக்கு மத்தியில் இருக்கிறாய்
ஆனால் உன்னை மாத்திரம் தனக்கு விருப்பமான
நீலநிறபொம்மையென
தன் கையில் பொத்திவைத்துக்கொள்கிறது தனிமை
பிறகு யாருக்கும் தெரியாமல்
உன்னை தன்வீட்டிற்கு எடுத்துச்செல்கிறது
நீ மற்ற பொம்மைகளுக்கு அருகில் வைக்கப்படுகிறாய்
உன்னை வைத்து சாவகாசமாய்
இரவும் தனிமையும் விளையாடுகின்றன
இரவு உன்னை தூக்கி எறிகிறது
மறுமுனையில் தனிமை உன்னை பிடித்துக்கொள்கிறது
வீட்டில் மூன்று பேருக்கு மத்தியில்
நின்றுகொண்டிருக்கும் உன் உடலுக்கு
இப்போது தலைவலிக்கத் துவங்குகிறது
நீ உன் அறைக்கு ஓடுகிறாய்
மெதுவாக மூன்று நபராக பிரிகிறாய் நீ