Month: March 2020

சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

‘பூட்டின ரூம்ல கொலை ஸார்!’

‘என்னய்யா, பல்ப் நாவல் தலைப்பு மாதிரி சொல்லற?’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ்.

‘அப்படித்தான் ஸார் நடந்திருக்கு. இந்த வீட்லதான்,’ என்று ஏட்டையா வய் கூற, ‘வீடா, பங்களான்னு சொல்லுயா, வைட் டவுன்ல மூணு ப்ளோர்ல இவ்ளோ பெருசா கட்டணும்னா… பீச் வ்யு வேற, கொஞ்சம் பழசோ…’ என்று எக்ஸ் கேட்க, ‘எஸ் ஸார், முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும், வாங்க,’ என்றார் வய்.

‘யார் ஓனர்?’

‘கிஷோர், அவர் தான் விக்டிம். துணிக்கடை வெச்சிருக்கார், ப்ளஸ் ரெண்டு ஹை எண்ட் பேஷன் போட்டிக். இந்த ஏரியாலையே மூணு வீடு வாடகைக்கு விட்டிருக்கார்… விட்டிருந்தார்.’

ஹாலில் கட்டப்பட்டிருந்த லாப்ரடாரைப் பார்த்த எக்ஸ், ‘இது நைட் குலைக்கலையா?’ என்று கேட்க, ‘அது ஷெர்லாக் ஹோல்ம்ஸ் காலத்து க்ளூ ஸார், நூறு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அடுத்து சிகரெட் துண்டு, மண்ணுல ஷூ அச்சுன்னு துப்பறியப் போறாரா எழுத்தாளர்? இது டிஜிட்டல் புட்ப்ரிண்ட் காலம், அரதப் பழசா யோசிக்கறதை விட்டுட்டு புதுசா ட்ரை பண்ண சொல்லுங்க.’ என்றார் வய்.

‘என்னயா ரொம்ப சலிச்சுக்கற?’

‘ஹார்ட் பாயில்ட் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை, ஸார்.’

‘அந்த ழானர் மட்டுமென்ன புதுசா, ஆரம்பிச்சு அறுபது எழுபது வருஷமாச்சேயா, தவிர அந்த உலகம் ப்ரைவேட் டிடெக்டிவ்களுடையது, நம்மள மாதிரி போலிஸ்காரங்களுக்கு வாய்ச்சது இது மாதிரி சாதாரண மனிதர்களா இருக்கறது, இல்ல ஸ்காண்டிநேவியன் குற்றப் புனைவுலகில் வரவங்க மாதிரி மிதமிஞ்சிய குடி, டைவர்ஸ்னு அல்லாடறது, ரெண்டுதான், எது பெட்டர்?’

‘நாயர்ன்னு என்னமோ சொல்றாங்களே அதை ட்ரை பண்ணலாம்ல ஸார்?’

‘அது நுவார்யா. நம்பூதிரி, குறுப்புன்னு ஆரம்பிக்காத. நமக்குன்னு ஆசை, சுய சிந்தனை இருக்கக் கூடாதுயா, ரைட்டர் சொல்றதுதான். மொதல்ல இதை கண்டுபிடிப்போம், அப்பறம் பாக்கலாம், எனக்கும் சேஞ்ச் வேண்டியிருக்கு’

ஹாலிலிருந்த படிக்கட்டுக்கள் வழியாக முதல் தளத்தை அடைந்தார்கள். ‘இந்த ரூம்தான் ஸார்.’ கதவுகள் திறந்திருந்த அறைக்குள் நுழைந்தார்கள். படுக்கையிலிருந்த உடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ரத்தம் உறைந்திருந்த காயங்கள். ‘மர்டர் வெபன்?’ என்று எக்ஸ் கேட்க, ‘பெட் மேல இந்த கத்தி இருந்தது ஸார்,’ என்று ப்ளாஸ்டிக் உறையில் சீல் செய்யப்பட்டிருந்த கத்தியைக் காட்டினார் வய். ‘ப்ளட் எதுவும் இல்ல?’, ‘ஆமா ஸார், சுத்தமா தொடச்சிருக்கு, அதுக்கு யூஸ் பண்ணின துணி பெட்டுக்கு கீழ இருந்தது. கலெக்ட் பண்ணிருக்கோம்’ என்றபடி வய் நீட்டிய மற்றொரு ப்ளாஸ்டிக் உறையில் ரத்த தீற்றல்களுடன் கர்சீப். அதை வாங்கிப் பார்த்து விட்டு திரும்பித் தந்த எக்ஸ், அறையிலிருந்த ஜன்னலருகே சென்று ‘இதுவும் மூடியிருந்ததா’ என்றார்.

‘ஆமா ஸார், செக் பண்ணிட்டோம், க்ரில்ஸ் எதுவும் உடையல’ என்றபடி அதைத் திறந்தார் வய். கம்பிகளை பிடித்துப் பார்த்தபடி ‘ஹூடுனி மாதிரி யாரவது வேணும்னா இதை வளைச்சு வெளியேறி கம்பிகளை திருப்பி செட் பண்ணிருக்கலாம்’ என்ற எக்ஸ் மீண்டும் படுக்கைக்கு அருகே வந்தார். ‘இந்த ரூம்ல ஏதாவது சீக்ரட் பாசேஜ் இருக்கலாம் ஸார்’ என்று வய் சொல்ல ‘அதெல்லாம் காதிக் பிக்க்ஷன்ல தான்யா, நம்மளது நவீனத்துவ உலகம்யா,.. இல்ல போஸ்ட் மாடர்னிஸமா, எனக்கு ரெண்டும் புரிஞ்சதே இல்லை’ என்றார் எக்ஸ்.

‘அப்ப எப்படி ஸார் கில்லர் வெளியே போனான், அமானுஷ்ய வேலையாயிருக்குமோ’

அந்த கேஸ் முடிஞ்சு போச்சுயா, இது வேற. யார் பாடியை மொதல்ல பார்த்தது?’

‘வீட்ல வேலை செய்யறவங்க ரூம் கதவை தட்டியிருக்காங்க, திறக்கலைனதும் ஓபன் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க, முடியலை, உள் பக்கம் தாப்பா போட்டிருந்திருக்கு. அப்பறம் வீட்ல இருக்கறவங்களை கூப்பிட, ரெண்டு பேரா கதவை ஒடைச்சிருக்காங்க.’

‘யாரெல்லாம் இந்த வீட்ல இருக்காங்க?’

‘கிஷோருக்கு கல்யாணமாகலை. அவர் எல்டர் ப்ரதர் பசங்க மூணு பேர் இவரோட இங்க ஸ்டே பண்றாங்க.’

‘எல்டர் ப்ரதர் உயிரோட இல்லையா?’

‘இவங்க சின்னப் பசங்களா இருக்கும்போதே பேரெண்ட்ஸ் இறந்துட்டாங்க, கிஷோர்தான் வளர்த்திருக்கார்.’

‘கடை இரண்டு ப்ரதர்ஸுக்கும் சொந்தமா இருந்திருக்கும் இல்லையா?’

‘செக் பண்ணனும் ஸார், பட் நீங்க ஹிண்ட் பண்ற மாதிரி மோடிவ் இருந்திருந்தாலும், பூட்டின ரூம்ல யாரு, எப்படி…’ என்ற வய் தொடர்ந்து ‘இன்னொரு விஷயம் ஸார், போன வாரம் வீட்லேந்து பத்தாயிரம் ரூபாய் காணாம போயிருக்கு, கிஷோர் வீட்ல வேலை செய்யறவங்களை சந்தேகப்பட்டார்னு அந்த பசங்க சொல்றாங்க’ என்றார்.

‘இன்ட்ரஸ்டிங். வேலை செய்யறவங்களை வரச் சொல்லுங்க,’ என்றபடி அறைக்கு வெளியே சென்றார் எக்ஸ்.

‘உங்க பேரென்னம்மா, என்ன நடந்துச்சு?’

‘ஜெயா, ஸார். வழக்கம் போல ஆறரை மணிக்கு வேலைக்கு வந்துட்டேன். ஹாலைப் பெருக்கி முடிச்சுட்டு இந்த ரூமுக்கு வந்தேன். அந்நேரத்துக்கு எப்பவும் தொறந்து தானிருக்கும், இன்னிக்கு மூடியிருந்தது. தட்டினேன், கூப்ட்டேன், யாரும் வரலை, நானே தொறக்க பார்த்தேன் முடியலை.’

‘உள்ள ஏதாவது சத்தம், சின்னதாகக்கூட… கேட்டுதா?’

‘இல்லைங்க.’

‘அப்பறம்?’

‘இவங்களைக் கூப்பிட்டேன்,’ என்று அங்கு நின்றிருந்த மூன்று இளைஞர்களில் இருவரைச் சுட்டினார் ஜெயா.

‘உங்க பேரென்ன?’ என்று எக்ஸ் கேட்க,’நான் மாதவ், இது சோனு. நாங்க செகண்ட் ப்ளோர்ல எங்க ரூம்ல இருந்தோம், இவங்க சத்தம் கேட்டு வந்தோம்.’

‘உள்ள லாக் ஆகியிருந்ததுன்னு நிச்சயமா தெரியுமா?’

‘ஆமா ஸார், ரெண்டு பேரும் புல் போர்ஸ் போட்டப்பறம் தான் தொரந்துச்சு’

‘இன்னொரு ப்ரதரா?’ என்று சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனை பார்த்து எக்ஸ் கேட்க, ‘ஆமா ஸார், ராகேஷ்,’ என்று மாதவ் சொல்ல, அவன் அருகே வந்தான்.

‘நீ எங்க இருந்த?’

‘நேத்து நைட் செம தலைவலி ஸார், மாத்திரை போட்டு தூங்கிட்டேன்.’

‘எப்ப கீழ வந்த?’

‘ நான் வந்தப்ப இவங்க கதவ ஒடைச்சுக்கிட்டு இருந்தாங்க’

‘இவர் சொல்றது கரெக்டா?’ என்று மாதவ்விடம் எக்ஸ் கேட்க, ‘ஆமா, நான் பெட் கிட்ட போய் பார்த்துட்டு பயந்து திரும்பறேன், இவன் ரூம் வாசல்ல நிக்கறான்,’ என்றான் அவன்.

‘ஓகே. உங்க சித்தப்பாவை கொலை செய்யற அளவுக்கு யாருக்கு வெறுப்பு இருக்க முடியும்னு நினைக்கறீங்க?’ என்று எக்ஸ் கேட்டதற்கு மூவரும் இல்லையென்று தலையசைத்தனர்.

‘சரி, நீங்க மூணு பேரும் ஹால்லயே இருங்க, வீட்டை விட்டு இப்போதைக்கு போகக் கூடாது.’

அவர்கள் சென்ற பின் ஜெயாவிடம், ‘போன வாரம் வீட்ல பணம் காணாம போச்சாமே’ என்று கேட்டார் எக்ஸ்.

‘ஆமா ஸார், பத்தாயிரம் ரூபாய்’

‘கிஷோர் அது பத்தி உங்க கிட்ட ஏதாவது கேட்டாரா’

‘இல்லைங்க, யாரோ திருடிட்டாங்கன்னு சொன்னார் அவ்ளோ தான்’

‘அதை நீங்க எடுத்ததா…’

‘ஐயோ அபாண்டங்க, நான் ஏங்க எடுக்கறேன், நல்ல சம்பளம் குடுத்தாருங்க, மத்தவங்க காசு எனக்கெதுக்கு’

‘கிஷோருக்கு உங்க மேல தான் சந்தேகம்ன்னு இந்த பசங்க ..’ என்ற எக்ஸை இடைமறித்து ‘ராகேஷ் தான் திருடிருப்பான்னு என் கிட்ட அவர் சொன்னார் ஸார்’ என்று உரத்த குரலில் ஜெயா கூறினார்.

‘அப்ப ஏன் மொதல்ல யாரோ திருடிட்டாங்கன்னு சொன்னதா சொன்ன’

‘அது அவங்க குடும்ப விஷயம்ங்க, நான் எதுக்குன்னு..’

‘ஆனா காணாம போன பணம் இன்னும் கிடைக்கலையே, அப்ப அந்த பசங்க சொல்றதை பத்தி யோசிக்க வேண்டியிருக்கே’

‘ஸார், ஐயாக்கும் இந்தப் பசங்களுக்கும் நாலஞ்சு மாசமா அடிக்கடி சண்டை நடக்குது, அதை விசாரிங்க.’

‘என்ன சண்டை?’

‘சொத்து ஸார், பிசினஸ் பண்ண பணம் கேட்டாங்க, அவங்க அப்பா மூலமா வர வேண்டிய பங்குன்னு எதுவுமில்லைனு ஐயா சொன்னார், அதான் பிரச்சனை.’

‘மூணு பேருமே பிசினஸா?’

‘மொதோ ரெண்டு பசங்க ஸார், ராகேஷ் இப்பத்தான் காலேஜ் முடிச்சிருக்கான், அதுலயும் நெறய பெயில் போலிருக்கு, ஐயா திட்டிட்டிருப்பாரு.’

‘சரி, நீங்க கதவை தட்டும் போது ரூம் உள்ள பூட்டியிருந்துதுன்னு ஷ்யுரா சொல்ல முடியுமா உங்களால?’

‘நிச்சயமா ஸார், நானே கதவை தொறக்க பாத்தேன், முடியலை. ரெண்டு பேர் சேர்ந்து தள்ளினப்பறம்தான் தொறந்தது.’

‘சரி நீங்களும் கீழ வெயிட் பண்ணுங்க.’

‘என்ன ஸார், நீங்க கெஸ் பண்ணின மாதிரி மோடிவ் இருக்கு, ஆனா எப்படி செஞ்சிருக்க முடியும், தவிர இவங்க சொல்றதை எந்தளவுக்கு நம்பறது?’

‘எவிடன்ஸ் கலெக்ட் பண்றவங்க இன்னும் கிளம்பலையில்ல?’

‘இங்கதான் ஸார் இருக்காங்க’

‘வரச் சொல்லுங்க’.

வந்தவர்களிடம், ‘ரெண்டு கதவு பக்கத்துலயும் இன்னும் மைன்யுட்டா செக் பண்ணுங்க,’ என்றவர் தொடர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொல்ல,

‘ஏதாவது ஐடியா கிடைச்சிருக்கா ஸார்?’ என்று கேட்டார் வய்.

‘சால்வே பண்ணிட்டேன்.’

‘எப்டி ஸார்?’

‘ஒரு க்ளூ தரேன், ஜான் டிக்ஸன் கார்.’

வய் தன் அலைபேசியில் தேட ஆரம்பிக்க, அறையை ஒரு முறை சுற்றியபின் அறைவாசலுக்குச் சென்றார் எக்ஸ்.

‘என்னய்யா கண்டுபிடிச்சியா?’

‘கொஞ்சம் டைம் குடுங்க ஸார்.’

‘நேரமில்லை, வேற வேலையிருக்கு.’

‘இன்னொரு கேஸா ஸார்?’

‘நமக்கு என்ன நேரப் பிரச்சனை, அடுத்த கதை, கேஸ் வர நாலஞ்சு மாசம்கூட ஆகும், வாசகர்களை பத்தி யோசி. இது ட்விட்டர் பிக்க்ஷன் காலம், நொடிக் கதைகளை படிக்கவே நேரமில்லைன்னு சொல்றாங்க, ஸோ ஏன் கேஸை நீட்டி முழக்கணும். இப்பவே முடிச்சுட்டா வாசகர்கள் இன்னொரு புனைவுலகிற்குள் நுழையலாம்ல. ஹாலுக்கு போலாம்.’

‘நேத்து ஈவ்னிங்லேந்து மார்னிங் வரைக்கும் நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்லுங்க.’

‘மதியம் நாலரை மணிக்கு வந்து, எப்பவும் போல ஆறு மணிக்கு கிளம்பிட்டேன் ஸார், அதுக்கப்பறம் வீட்ல தான் இருந்தேன்,’ என்றார் ஜெயா.

‘நானும் சோனுவும் பத்தரை மணி வரை நாங்க ப்ளான் பண்ணிருக்கற பிசினஸ் பத்தி பேசிட்டு எங்க ரூமுக்கு தூங்கப் போயிட்டோம்.’

‘எனக்கு தலைவலின்னு சொன்னேனே ஸார், நான் ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துட்டேன்.’

‘நாங்க தூங்கப் போனப்போ இவன ஈவ்னிங் முழுக்க பார்க்கலையேன்னு இவன் ரூமுக்கு போனேன், லைட் எரியலை, போன் ட்ரை பண்ணினேன் லைன் கிடைக்கலை.’

‘சார்ஜ் இல்லை ஸார், டயர்டா இருந்ததால அப்படியே தூங்கிட்டேன்.’

‘உங்க சித்தப்பாவை கடைசியா எப்ப பார்த்தீங்க?’

‘டின்னர்போது ஸார், ஒன்பது, ஒன்பதேகால் இருக்கும்.’

‘நீ அதுக்கு முன்னடியே வீட்டுக்கு வந்து படுத்துட்ட?’

‘ஆமா ஸார்.’

‘உங்க பிஸ்னஸுக்கு பணம் கேட்டு சித்தப்பாவோட சண்டை போடுவீங்களாமே?’

‘…’

‘நான் சொல்றது பொய்யா?’

‘இல்ல ஸார்…’

‘அப்பறம்?’

‘எங்கப்பா பங்கைதான் நாங்க கேட்டோம், அதை தர மாட்டேன்னார், அதான் சண்டை ஸார், ஆனா கொலைலாம்… ‘

‘…’

‘வீட்ல போன வாரம் பத்தாயிரம் ரூபாவை காணும் ஸார், சித்தப்பாக்கு ஜெயா மேல…’ என்று சோனு ஆரம்பிக்க ‘ஐயோ பொய் ஸார், அவருக்கு ..’ என்ற ஜெயாவை ‘நீங்க பேசாம இருங்க’ என்ற எக்ஸ்

‘ம்ம். எல்லாரும் போன் நம்பர்ஸ் குடுங்க, தேவைப்படலாம். ராகேஷ் மொபைலை சார்ஜ் பண்ணிட்டீங்களா?’ என்று அவனிடம் கேட்டார்.

‘காத்தாலேந்து டென்ஷன் ஸார், மறந்துட்டேன்.’

‘உங்ககிட்டதான் இருக்கு போலிருக்கு?’ என்று எக்ஸ் கேட்டவுடன் சட்டை பாக்கெட்டிலிருந்து அதை ராகேஷ் எடுக்க, அவனிடமிருந்து வாங்கி அதை இயக்கினார்.

‘சார்ஜ் இல்லைனீங்க, எய்ட்டி போர் பர்சென்ட் இருக்கு, அப்பறம் ஏன் ஆப் ஆகியிருக்கு, நீங்களே ஆப் பண்ணிட்டீங்களா?’

‘இல்ல ஸார்… சரியா கவனிக்கலை போலிருக்கு.’

‘இப்பலாம் போன் எந்த நேரத்துல எந்த லொகேஷன்ல இருந்துதுன்னு கண்டு பிடிச்சிடலாம், பார் எக்ஸாம்பிள் நீங்க ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்துட்டீங்கன்னா உங்க மொபைல் லொகேஷன் இந்த வீட்டை தான் அந்த நேரத்துக்கு காட்டும்.’

‘இதுதான் ஸ்விட்ச் ஆகியிருந்ததே ஸார்?’

‘ஸோ லொகேஷன் ட்ராக்கிங் பண்ண முடியாதுன்னு சொல்றீங்க, ஓகே,’ என்ற எக்ஸ் மாதவ்விடம், ‘நீங்க பாடியை பார்த்தவுடனேயே ராகேஷும் ரூமுக்கு வந்துட்டார் இல்லையா?’ என்று கேட்க, ‘ஆமா ஸார்.’

‘என்ன ட்ரெஸ்ல இருந்தார்?’

‘இதே பேன்ட் ஷர்ட்தான் ஸார்.’

‘ராகேஷ், உங்க தலைவலில ட்ரெஸ்கூட மாத்தாம தூங்கிட்டீங்களோ?’

‘…’

‘ஒருவேளை ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கீழ வந்தீங்களா?’

‘இல்ல ஸார், அப்படியே தூங்கிட்டேன்.’

‘சத்தம் கேட்டு வேகமா ஓடி வந்திருப்பீங்கல்ல?’

‘எஸ் ஸார்.’

‘அவர் ஓடி வந்த சத்தம் உங்க யாருக்காவது கேட்டுதா?’

‘இல்லை ஸார், ஆனா நாங்க பதட்டத்துல இருந்தோம் ஸார், எதையும் கவனிக்கற நிலைமைல இல்ல.’

‘நீங்க ஏன் உள்ள வராம வாசல்ல நின்னீங்க?’

‘…’

‘என்ன நடந்துன்னு தெரியாம பயத்துல நின்னுருப்பீங்களோ?’

‘…’

‘உள்ளேந்து வாசல் வரைக்கும் போனாப் போதும் இல்லையா உங்களுக்கு?’

‘என்ன ஸார் சொல்றீங்க?’ என மாதவ் கேட்க, முதல் தளத்திலிருந்து இறங்கி ஹாலுக்கு வந்த போலீஸ்காரர் இன்ஸ்பெக்டரிடம் மெலிதாக ஏதோ கூறிச் சென்றார்.

‘உங்க சித்தப்பா ரூமுக்குள்ள டோர்கிட்ட ரெண்டு மூணு தலை முடி கிடைச்சிருக்கு, டி.என்.ஏ டெஸ்ட் அது யாருதுன்னு சொல்லும்,’ என்று இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எழுந்து ஓட ஆரம்பித்த ராகேஷைப் பிடித்தார் ஏட்டையா.

‘எப்படி ஸார் கண்டுபிடிச்சீங்க!’

‘அதான் சொன்னேனே, ஜான் டிக்ஸன் கார்.’

‘எனக்கு இன்னும் பிடிபடலை ஸார்.’

‘லாக்ட் ரூம் மர்டர்ஸ்னு குற்றப் புனைவுல ஒரு வகைமை இருக்குயா, இம்பாசிபிள் க்ரைம்ஸ்னும் சொல்வாங்க, அதுல அவர்தான் பெஸ்ட், நிறைய நாவல் எழுதியிருக்கார். அதுல ஒண்ணுல துப்பறிகிறவர் பூட்டின அறைல கொலை எப்படியெல்லாம் நடக்கக்கூடும்னு பத்து பண்ணண்டு வழிகளை சொல்வார். அதை பேஸா வெச்சுகிட்டு மூணு பாய்ண்டஸை கொஞ்சம் சேஞ்ச் பண்ணினா நம்ம கேஸுக்கு  செட் ஆகக்கூடும்னு முதல்லையே தெரிஞ்சுது.’

‘எதெல்லாம் ஸார்?’

‘பர்ஸ்ட், கதவு உட்பக்கம் தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்திருக்கலாம். தட் இஸ், மாதவ், சோனு ரெண்டு பேரும் நைட்டே கிஷோரை கொலை செஞ்சிருக்கலாம். அப்பறம் மார்னிங், ரூம் உள்பக்கமா பூட்டியிருந்த மாதிரி நடிச்சிருக்கலாம், ஆனா வீட்டு வேலை செய்யறவங்க லாக் ஆகியிருந்ததுன்னு கன்பர்ம் பண்ணிட்டாங்க. ஸோ அதை விட்டுடலாம்.

‘ரெண்டாவது, இதுலயும் ரூம் பூட்டப்படாம இருந்திருக்கலாம், ஆனா உள்ள இருக்கறவர் செத்திருக்கணும்னு கட்டாயமில்லை. இவங்க ரெண்டு பேரும், கிஷோருக்கு நேத்து நைட் ஏதாவது செடேடிவ் குடுத்திருக்கலாம். அப்பறம் ஜெயா சத்தம் போட்டவுடன், கதவை உடைக்கற மாதிரி நடிச்சு, உள்ள நுழைஞ்சு அவரை குத்தியிருக்கலாம். ஆனா முதல் பாயின்ட் தப்புன்னு தெரிஞ்சவுடனேயே, அதாவது ரூம் லாக் ஆகியிருந்தது உண்மைன்னா, இதுவும் பொருந்தாம போயிடுது  இல்லையா. தவிர ஜெயா கூடவே இருந்ததால் கொலை செய்வதற்கு டைமோ, சான்ஸோ அவங்க கிட்ட இல்லை.’

‘ஜெயாவும் இதுல இன்வால்வ் ஆகியிருக்கலாமே ஸார்?’

‘பாசிபிள், ஆனா அவங்ககூட பேசினத வெச்சு ஷி இஸ் இன்னொசன்ட்ன்னு எனக்குப் பட்டது.’

‘பணம் காணாம போன விஷயம்?’

‘சோனு சொன்ன மாதிரி ஜெயா பணத்தை எடுத்திருந்தா, கிஷோர் ஏன் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலை, பெரிய அமவுண்ட்டாச்சே. ஜெயாவை அட்லீஸ்ட் வேலையை விட்டாவது எடுத்திருக்கலாமே. ஸோ வீட்ல இருக்கற ஒருத்தர் தான் திருடியிருக்கணும்னு கிஷோர் நினைச்சிருக்கணும். தவிர மூணாவது பாயின்ட் இந்த கேஸுக்கு பிட் ஆகற மாதிரி இருந்தது.’

‘அது என்னது ஸார்?’

‘கொலைகாரன் ரூமை பூட்டிட்டு உள்ளேயே, கதவு பக்கத்துல, இல்லை, வேற மறைவான இடத்துல இருப்பான். கதவை ஒடச்சுகிட்டு வரவங்களோட போகஸ் டெட் பாடி மேலத்தான் இருக்கும், பர்ஸ்ட் ப்யு செகண்ட்ஸ் ரூமை யாரும் கவனிக்க மாட்டாங்க, அந்த டைம்ல மர்டரர் வெளில போய்டுவான், இல்ல அப்பத்தான் ரூமுக்குள்ள நுழையற மாதிரி நடிப்பான். இங்க இன்னொரு விஷயத்தை நீங்க கவனிக்கணும். பூட்டிய ரூமுக்குள்ள கொலை செஞ்சுட்டு வெளில போக முடிஞ்சவனுக்கு, கத்தியை எடுத்துட்டு போக முடியாதா என்ன? ஸோ, மர்டரர் ரூம்லதான் இருந்திருக்கணும்னு கெஸ் பண்ணினேன். ராகேஷ்தான் கடைசியா வந்திருக்கான். அப்பறம் அவன் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததுன்னு தெரிய வந்தது, நைட் கால் வரும்னு அணைச்சு வெச்சிருக்கான். அவன் ட்ரஸ் பத்தி கேட்டப்ப அதை மாத்தலைன்னு சொன்னான், கத்தியை பேண்ட், சட்டைல ஒளிச்சு வைக்க அவனுக்கு பயம், அதான் ரூம்லயே விட்டுட்டான்.’

‘எல்லாம் சரி ஸார், ஆனா பிஸிகல் எவிடன்ஸ் எதுவும் கிடைக்கலையே, அவனோட தலைமுடி கிடைச்சாக்கூட அது எப்ப வேணா அங்க வந்திருக்கலாம்னு ஆர்க்யு பண்ணலாமே?’

‘தலைமுடி கூட கிடைக்கலைய்யா, அது அவன ட்ரிக்கர் பண்ண நான் பண்ணின ஏற்பாடு.’

‘…’

‘அரதப் பழசை விடுங்கன்னு சொன்ன, கடைசில பாரு, கோல்டன் ஏஜ் க்ரைம்தான் இதுவும், ஈஸியா கண்டுபிடிச்சுட்டோம்.’

‘என்னதான் வாசகர் மன நலம் கருதி கேஸை இவ்ளோ சீக்கிரம் சால்வ் பண்ணினாலும், இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை ஸார்.’

‘கோல்டன் ஏஜ் க்ரைம் பிக்க்ஷன் இப்படித்தானேய்யா, கடைசில எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு, குற்றம் எப்படி நடந்ததுன்னு சொன்னா, குற்றவாளி ஒத்துப்பான், அவ்ளோதான். தவிர இவன் ஒன்னும் பெரிய ப்ளான் பண்ணிலாம் கிஷோரை கொலை பண்ணலை. நேத்து நைட், இவன் படிப்பு சம்பந்தமா ஆர்க்யு பண்ணிருக்காங்க. நீதான் பணத்தை எடுத்திருக்க, இனிமே உன் செலவுக்கு எதுவும் தரமாட்டேன்னு கிஷோர் சொல்லிருக்கார். அந்த கோவத்துல இவன் அவரை குத்திருக்கான். அப்பறம் இப்படி இம்பரவைஸ் செஞ்சிருக்கான். பட் அவன் என்ன மொரியார்ட்டியா, கொஞ்சமா ப்ரஷர் அப்பளை பண்ணினவுடனே ஒத்துக்கிட்டான்’

‘…’

‘என்னய்யா, நீ இன்னும் கன்வின்ஸ் ஆகலையா?’

‘அவன் மொரியார்ட்டி மாதிரி அதிபுத்திசாலி கிரிமினல் கிடையாதுன்னா பூட்டின ரூம்ல கொலை நடந்தா மாதிரி எப்படி செட்டப் பண்ண முடிஞ்சுது, இதுலயும் லாஜிக் இல்லையே ஸார்?’

‘ட்ரூத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தான் பிக்க்ஷன்யா, அத ஒத்துக்கறல?’

‘எனக்கு அந்த டவுட் இல்லை ஸார்.’

‘பின்ன?’

‘இது பிக்க்ஷனாங்கறதே…’

விளையாட்டாய் – கா.சிவா சிறுகதை

சென்ற வேகத்தில் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மகன் குமரனை இழுத்துக்கொண்டு அந்த சிறிய க்ளினிக்குக்குள் சென்றான் சீனி. பின்னால் சென்ற நானும் என் மனைவியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தொடர்ந்தோம். நான்கைந்து பேர் வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்  அமர்ந்து வெவ்வேறு திசைகளில் வெறித்துக்கொண்டிருந்தார்கள்.   டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த மெலிந்த உடலும்  வெளிறிய நிறமும் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணை அணுகி “டாக்டர் இருக்கிறாராம்மா” எனக்கேட்டு அவளின் இல்லையென்ற தலையாட்டலை தொடங்கும் கணத்திலேயே கேட்டான் “எப்ப வருவார்”.

“இன்னும் ஒரு மணி நேரமாகும்”
“நீங்களே ஊசி எதுவும் போடுவீங்களா, கொஞ்சம் எமர்ஜென்சி”
“மாட்டோம், டாக்டர் சொல்றதத்தான் போடுவோம்.இப்ப என்னாச்சு?”
“இந்தப் பையன் கால்ல பாம்பு கடித்துவிட்டது”
அந்தப் பெண் அதிர்ந்து எழுந்தாள்..”அய்ய்யோ ,எப்போ”
“இப்பத்தாம்மா அரைமணி நேரமாச்சு ”
“அண்ணே, பாம்புக்கடிக்கெல்லாம்  சரியான மருந்தெதுவும் இங்கேயில்லை, உடனே அறந்தாங்கியில இருக்கிற ஜி.ஹெச்சுக்கு போங்க. அங்கதான் டெஸ்டு பண்ணிட்டு ஊசி போடுவாங்க.போங்கண்ணே” என்றாள் பதட்டத்துடன்.
“அங்கேயே போறோம். முறி மருந்து எதாவது இருந்தாக் குடும்மா”
“அது மாதிரி எதுவும் இல்லண்ணா, தாமதிக்காம சீக்கிரம் போங்க” எனப் பதறினாள்.

அவளின் பதற்றத்தையும் தனதுடன் சேர்த்தபடி வேகமாக திரும்பி எங்களையும் இப்போது எங்களை வெறித்துபடி அமர்ந்திருந்தவர்களையும்  கடந்து வெளியே சென்று வண்டியில் என் மகனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நாங்களும் தொடர்ந்தோம். இருசக்கர வண்டிகளும் சில கார்களும் எதிர்ப்பட தூசி கிளம்பி முகத்தில் படரும் சாலையில் , பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கியை நோக்கி  சென்றோம்.

வானம் பார்த்த வயல்களால் பேணப்பட்ட நாங்கள் , வயல்களை வானம் கைவிட, நாங்களும் வயல்களை ஒத்தி என்ற பெயரில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று இருபது வருடங்களாகிவிட்டது. முதலில் பொங்கல், தீபாவளி, செவ்வாய், பள்ளி விடுமுறைக்கு என ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொன்றாகக் குறைந்து ,  வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ என ஆகிவிட்டது.

ஒரு மாதத்திற்கு முன் அதிகாலை விழிக்கும்போதே மழுவய்யனார் நினைவுக்கு வந்தார். ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இத்தனை ஆண்டுகள் நினைவிலிருந்து மறைந்திருக்க முடியும். ஊரில் இருந்தபோது வாரம் ஒரு தடவை , கண்மாயின் அலை தழுவித் தழுவி மிருதுவான மணற்துகள் மீது கால் தடம் பதிய நடந்து , சுற்றி நிற்கும் ஆறு பனைமரங்களுடனும்  மஞ்சள் மலர் சூடிய ஆவாரஞ் செடிகளுடனும் தனித்திருக்கும் மழுக்கோவிலுக்கு சென்று சாம்பிராணி காட்டி வணங்கி வருவது வழக்கம். கோவிலென எதுவும் இல்லை. கண்மாய்க் கரையின் எல்லையில் நான்கு கருங்கல் தூண்களை ஊன்றி கூம்பாக பிணைக்கப்பட்ட  பனங்கை உத்திரத்தின்மேல் பனையோலை வேய்ந்திருக்கும். எந்த அடைப்பும் இல்லை. காற்று சிறு பிள்ளைகள்போல அந்த குடிலுக்குள் நுழைந்து வெளியேறி விளையாடும். சிலையெதுவும் பதிக்காமல்  அரைமுழ உயரத்தில் முனைகள் மழுங்கிய கல் இருக்கும். அதன்மேல் கொண்டு செல்லும் பூவை போட்டுவிட்டு விழுந்து வணங்கிவிட்டு பசங்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். உருவம் எதுவும் இல்லாததால் அவரவருக்கு  பிடித்த மாதிரி தோற்றத்தை மனதில் கற்பனை செய்து கொண்ட  சாமியானதால்  அனைவருக்குமே நெருக்கமானவராக மழுவய்யனார் இருந்தார்.  தேர்வு எழுதப் போகும்போதோ விளையாட்டில் வெல்லவேண்டுமென எண்ணும்போதோ நண்பர்களுடன்   போட்டி போடும் போதோ மனதிலுள்ள கற்பனையுரு அய்யனாரை வேண்டிக் கொள்வோம். ஆனால்,ஊரைவிட்டு வந்தபின்  இருபது வருடங்களாக அவரைப் பார்க்கவேயில்லை. ஏன், நினைவில் கூட எழவில்லை.

இப்போது மனதில் தோன்றியவுடன் ஊருக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் உடனேயே எழுந்தது. எப்போதும் உள்ள, விடுப்பு எடுக்க முடியாது, பள்ளிகள் இருக்கின்றன, ரயில் கூட்டமாக இருக்குமென்ற காரணங்களை உள்ளத்தின் உந்துதலைக் கொண்டு ஒருவழியாகக் கடந்து , நேற்று மாலை கிளம்பி காலையில் ஊருக்கு வந்தோம். நாங்கள் முன்பு இருந்த வீடு சிதிலமடைந்து உடைந்துவிட்டதால்    என் அத்தை பையன் சீனுவின் வீட்டில் தங்கினோம். என் அப்பாவின் பிரியமான தங்கை என்பதால் எனக்கும் அத்தையின் மீது அலாதிப் பிரியம். அவர்களின் பையன் சீனுவின் மீதும்தான். நாம் அன்பாயிருக்கும்போது அவர்களால் அசட்டையாக இருக்கமுடியுமா. ஒரே வயதென்பதால் ஊரிலிருந்தவரை ஒன்றாகவே திரிவோம். ஒருவரை மற்றவர் பிரிவதேயில்லை. கோடை விடுமுறையில் நெஞ்சில் சிலாம்பு பாய்ந்துவிடாமல் பனைமரத்தில் ஏறி,  அதிகமாக கருத்திடாத, ரொம்பவும் வெள்ளையாகவும் இல்லாத நுங்கு குலைகளை வெட்டி , வயிறுமுட்ட குடித்துவிட்டு கண்மாய்க்கு சென்று செரிக்கும் வரை ஆட்டம் போட்டுவிட்டு,  கோவைப்பழம் போல கண்கள் சிவக்க வீட்டிற்குவந்து, திட்டும்,  சில நேரங்களில் அடியும் வாங்குவோம்.      சுற்றியுள்ள ஊர்களில் சித்திரைக் கொடை விழாவிற்கு போடப்படும் வள்ளி  திருமணமோ,  அரிச்சந்திர மயான காண்டமோ  எந்த நாடகமாயிருந்தாலும்  விடியும்வரை பார்த்துவிட்டு  யாராவதொருவர் வீட்டில் இருவரும் படுத்துக்கொள்வோம். அப்படிக் கூடவேயிருந்தவனை பிரியவே மாட்டேனென அடம்பிடித்த என்னை  ஊரிலிருந்து  அழைத்துச் செல்வதற்கு அம்மா மூன்றுநாள் பட்டினி கிடந்தார்.

சீனுவுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது. இன்னும் பிள்ளையேதும் இல்லை. என் பையனைத்தான் மாப்ளே, மாப்ளே எனக் கொஞ்சியபடி இருப்பான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்னோடு சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு செல்வான். பிரியமாய் இருப்பவர்களிடம் பிள்ளைகளும் ஒட்டிக்கொள்கிறார்கள் எந்தப் புகாரும் இல்லாமல்.
இன்று மதியம் கதிரறுக்கும் வண்டிக்கு சொல்ல பக்கத்து ஊருக்குச் சென்றதால் அவனால் மழுக்கோவிலுக்கு வரமுடியவில்லை. நான் மனைவி, பையனுடன் , விளைந்த மணிகளை வரப்பில் உரசியபடி மெல்ல அசைந்து கொண்டிருந்த அடர்மஞ்சள் நெற்பயிற்கள் காலணியணியாத பாதங்களில் மெல்லிய தடம் பதிக்க,  வரப்புகள் மீது நடந்தோம். ஆங்காங்கே நண்டுகளின் வளைகள் தென்பட்டன. சில நண்டு ஓடுகள் கிடந்தன. “ஓடுகள் மீது கால் வைத்துவிடாதீர்கள்”  என அவர்களை எச்சரித்தபடி நடந்தேன். கால் வைத்தால் ஓடு நொறுங்கி காலில் ஏறிவிடும். தேள் கொட்டியதுபோலக் கடுக்கும்.

வயலைத் தாண்டியவுடன்தான் கண்மாய்.  கண்மாயின் கழிமுகத்தில்தான் கோவில். மணலில் கால் பட்டபோது மனது சில்லென்றிருந்தது. புல்லின் மேல் புதைவது போல பாதம் புதையப் புதைய நினைவுகளெல்லாம் உள்நோக்கிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எந்தக் கால்தடமும் கண்ணில் படவில்லை. யாரும் இந்தப் பாதையில் நடப்பதில்லையெனத் தெரிந்தது. சீனுவிடம் கோவிலுக்கு செல்லவேண்டுமென கூறியபோது “நான் போய் ஆறு மாசமாச்சு” என்றே சொன்னான். அவசர வேலையாக இல்லாமலிருந்தால் அவனும் வந்திருப்பான். காய்ந்துபோய் தரையோடு படர்ந்திருந்த புற்களை தாண்டி கோவிலருகே சென்று பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். பதினைந்தடி தொலைவில் ஒரு காலை தூக்கியபடி பையன் நிற்க பதற்றம் உடல் முழுக்க தளும்ப மனைவி என்னை கையால்  அழைத்தாள் . என்னவென்று புரியாமல் , வேகத்தில்,  மணலில் கால்புதைய  நான்கே எட்டில் அவர்களை அடைந்தேன்.
“என்னாச்சுடா”
“பாம்பு கடிச்சிடுச்சுங்க..பய கால்ல”
“உண்மையாவா,ஏய்…முள்ளு ஏதாவது குத்தியிருக்குண்டா”
“இல்லப்பா, பாம்புதான்..அதோ கெடக்குது பாருங்க” எனக் கை காட்டிய பக்கம் கடுங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன்.

வெயிலில் காய்ந்து பழுத்துப் படர்ந்திருந்த நண்டுப் புற்களையொட்டி  ஒரு முழ நீளத்திற்கு வளைவளைவான சாம்பல் நிறப்பாம்பு கிடந்தது.  அதைப் பார்த்தவுடனேயே ஏனோ  சட்டென கோபம் தணிந்தது.   ஒரு கணம் கண் இருட்டுவது போல் இருந்தது. பயம்கூடாது .. கூடாது.. மனதிற்குள் சில தடவை கூறிக்கொண்டு அவன் காலை நோக்கினேன். முட்டியிட்டு மணலில் அமர்ந்து அவன் பாதத்தை என் தொடைமேல் வைத்து லேசாக ரத்தம் கசிந்த கடிமுனையை என் இரு கட்டை விரலாலும் அழுத்தினேன்.இரு சொட்டு ரத்தம் வெளிவந்தது.நிறம் எதுவும் மாறவில்லை.  கால் லேசாக நடுங்குவதை கையில் உணரமுடிந்தது.  சுற்றிலும் பார்த்தேன்.  சிறிய வாழை நாரொன்று கிடந்தது. அதில் படிந்திருந்த மணலை உதறிவிட்டு மணிக்காலில் இறுக்கிக் கட்டினேன்.

“தம்பி ,ஒண்ணுமில்லை, பயப்படாதே. கட்டியாச்சு.மேலே ஏறாது. டவுனுக்குப் போயி ஊசி போட்டுக்கலாம் ” என அவனுக்கு கூறுவதுபோல எனக்கும் கூறிக்கொண்டேன்.
“ஏங்க, வீட்டுக்குப் போகலாங்க” என்ற மனைவியிடம் “இவ்ளோ தூரம் வந்துவிட்டோம், சாமியக் கும்பிட்டுவிட்டு போயிடுவோம்.ஒரு அஞ்சு நிமிசம்” எனக் கெஞ்சும் தொனியில் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. “கொஞ்சம் பொறுத்துக்கடா, தம்பி”  என மகனிடம் கூறியபோது , அவன் முகத்தில் தோன்றிய  உணர்வுகள் வலியினால்தான் என்றே நம்பினேன்.  நான் உடனே கிளம்பாததற்கு ” ஒரு காரியத்திற்கென்று செல்லும்போது என்ன தடை வந்தாலும் அதை முடிக்காமல் திரும்பக்கூடாது ”  என என் அம்மா அவ்வப்போது கூறியிருந்தது  மட்டும் காரணமல்ல ,  உருத்தெரியாமல் மாறியிருந்த அணுக்கமானவரின் இணக்கமான  விழிகளென,  மனதாழத்தின் ஓரத்தில் , பயம் தேவையில்லையென துளி  நம்பிக்கையை தக்கவைத்த  அந்தப் பாம்பின் விழிகளும்தான்.

கோயிலையடைந்து,  அவர்கள் இருவரும் தரையிலேயே நிற்க நான் மட்டும்  என் முட்டியளவிற்கு இருந்த திண்டின்மீது ஏறினேன். அந்தக்கல் காற்று மோதி மோதி இன்னும் கொஞ்சம் மழுங்கியிருப்பதாகத் தோன்றியது. கொண்டுவந்த பூவை சாமி மீது லிங்கத்தின் மீது போடுவதுபோலப் போட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியை பற்ற வைக்க தீப்பெட்டியை பொருத்தினேன்.மூன்றாவது குச்சியையும் சுழன்றடித்த காற்று அணைத்தது.  இம்மாதிரியான தருணங்களில் தெய்வங்கள்மேல் தோன்றும் புகார்கள் ஏதும் மனதில் தோன்றவில்லை.  திரும்பி மனைவி முகத்தைப் பார்க்க எழுந்த எண்ணத்தை  அடக்கியபடி குனிந்து ஒடுங்கியமர்ந்து இன்னும் நான்கு குச்சிகளுக்குப் பிறகு   கற்பூரத்தை முதலில் கொளுத்தினேன். சாம்பிராணியையும் கொளுத்தி நிற்க வைத்தவுடன் தொட்டு வணங்கி , கீழே வந்து மண்ணில் முழு உடலும் படிய வணங்கினேன். மண்ணையே எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள அவர்களும் அப்படியே செய்தார்கள்.வேகமாக திரும்பி நடக்கையில் அந்த இடத்தைக் கடக்கையில்  ஒருகணம் கூர்ந்து நோக்கினேன். அது அதே இடத்திலேயே கிடந்தது. ஏன் அதை அடிக்க வேண்டுமென்ற வெறி மனதில் எழவில்லை என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வரும்போதே தொலைபேசியில் சீனுவிடம் பேசினேன். பதற்றம் குரலிலேயே தெறித்தது. பார்க்கப் போனவரைப்  பிறகு பார்த்துக்கொள்ளலாம் என   உடனே வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வண்டியையும் வாங்கி தயாராக வைத்திருந்தான் மருத்துவரைப் பார்க்க டவுனுக்கு போவதற்காக.

சீனுவின் வண்டியை ஒட்டியபடியே பின் தொடர்ந்தேன். மனைவி, “ஏங்க, பயலோட காலு வீங்கற மாதிரி இருக்குங்க ” என்றதும் கவனித்து பார்த்தபோது சாதாரணமாக நரம்பு தெரியும் பாதத்தில் சற்று பூசினாற்போல மேடிட்டிருப்பது தெரிந்தது. குரலில் பதட்டம் தெரியாதவாறு “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றேன்.

வண்டியின் பின்னால் அமர்ந்து சீனுவின்   வயிற்றை இரு  கைகளாலும் இறுக்கிக்கொண்டு , மயக்கம் கொண்டதைப்போல அவன்  முதுகில் தலையை  சாய்த்தபடி செல்லும் மகனைப் பார்த்தபோது,  சீனு என் முதுகில் சாய்ந்தபடி இதேபோல் வந்தது நினைவுக்கு வந்தது. சென்னைக்கு சென்று  ஆறு மாதத்திற்குப் பிறகு  ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு , முதல் முறையாக  ஊருக்கு வந்தபோது என்னிடம் அவன் பேசவேயில்லை. முதல்ல   இரண்டு நாட்களுக்கு , என் கண்ணிலேயே படவில்லை. பிறகு பார்த்தபோதும் விலகி விலகியே சென்றான். அவனைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்தவனை தவிர்த்தபோது முதலில் கோபமும் வெறுப்பும்தான் வந்தது. பிறகுதான், அன்பால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது. நானே அவனைப் பார்ப்பதற்காக சென்றேன்.

கிணற்றுக் கொல்லையில் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே போனேன். தரையோடு இருக்கும் கிணற்றுக்குள்  நாலைந்து பேர்  குதித்து குளித்துக்  கொண்டிருக்க, இருவர்,  கிணற்றின் உட்புறமாக சுற்றி கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த  படிக்கல்லில்  அமர்ந்து சிறிய வாளியில் பசும் மஞ்சளாய் தளும்பிய  தண்ணீரை மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.  கிணற்றின் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை , அவன் அறியாத மாதிரி அருகில் சென்று சட்டென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன். அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதால்தான் அதை செய்தேன். ஆனால் , அதை அவன் எதிர்பார்க்காததால், குதிப்பதுபோல இல்லாமல் பக்கவாட்டில் உடலில் அடிபடுமாறு விழுந்தான். அதோடு படிக்கல்  ஒன்றின் மீதும் மோதிக்கொண்டான். ரத்தம் லேசாக வெளிவருமளவிற்கு  அவன் அடிபட்டதை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். நீருக்குள் இருந்தவர்கள்தான் அவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனே டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு போகுமாறு கூறினார்கள். உடல் தளர மயக்கமாக இருந்தவனை என் பின் அமரவைத்து அருகே கிடந்த பனை நாரால் எங்கள் இருவரையும் இணைத்துக்கட்டி வேகமாகப் போகச் சொன்னார்கள். முன்பக்கம் சற்று குனிந்தபடி மேடுபள்ளங்களில் மட்டும் சாய்ந்துவிடாமல் மெதுவாகவும்  மற்ற இடங்களில் வேகமாகவும் சென்று மருத்துவமனையை அடைந்தேன். அங்கிருந்தவர்களின் உதவியோடு உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்கப்பட்டவனை சோதித்துப்  பார்த்த மருத்துவர் “அதிர்ச்சியாலதான் மயக்கமாயிருக்காரு.  நீருக்குள் இருந்த கல் என்பதால் பெரிய காயம் உண்டாகவில்லை. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவார்”  என்றார் ஊசி போட்டபடி.

அறந்தாங்கி ஜி.ஹெச்சின் பெரிய நுழைவு வாயிலுனுள் நுழைந்து, அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “எமர்ஜென்சி எங்கே ” என விசாரித்துச்  செல்ல நானும் கூடவே சென்று வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக சாய்ந்திருந்த குமரனை கைதாங்கியபடி இறங்கவைத்து உள்ளே அழைத்துச் சென்றேன். சத்தம் கேட்டு நிமிர்ந்த செவிலியிடம் “பையனை பாம்பு கடித்துவிட்டது, ஒருமணி நேரமாச்சு, கொஞ்சம் வேகமா பாருங்கம்மா ” என்று கேவலாகச் சொன்னேன். பரிதவித்தபடி என் பின்னால் நின்ற சீனுவையும் மனைவியையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பையனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அடுத்த அறையில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்த வேகத்தை பார்த்தபோது விபரம் சொல்லியிருப்பார் எனத் தெரிந்தது.

“பாம்புதான்னு தெரியுமா”
“ஆமா, டாக்டர்”
“ஏன்னா, சிலர்  பூச்சிகள் கடிச்சதை பாம்புதான் கடிச்சிடுச்சுனு பயந்து வருவாங்க, நீங்க பாம்பை பார்த்தீங்களா, எப்படி இருந்தது ”
”  பாம்புதான், ஒரு முழ நீளத்துல சாம்பல் கலரா இருந்துச்சு, நானே பார்த்தேன் சார்” கேட்டபடியே காலை அழுத்திப் பார்த்தார்.
“சார், மணிக்கட்டை நல்லா இறுக்கமா கட்டிட்டேன், இப்ப கால் வீங்கியிருக்கிறதப் பார்த்தா பயமா இருக்கிறது”
“மொதல்ல அந்த கட்ட அவுறுங்க, இந்த கட்டுனாலதான் வீங்கியிருக்கு”  என்றார் கோபமாக.
“ஊசி ஒன்னு போடறேன், அப்பறம் இரத்தத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு என்னுன்னு பார்க்கலாம். ஏதாவது இருந்தா இரவெல்லாம் தங்கவேண்டியிருக்கும்.    பதட்டப்படாம அப்படி வெளியில உட்காருங்க ” என்று கூறியபடி செவிலியிடம் சென்று பேசினார். கட்டியிருந்த நாரை  அவிழ்த்து கோடுபோல பதிந்திருந்த தடத்தை தடவியபோது குமரன் முனகினான்.  நான் முகத்தை பார்க்கவில்லை.  செவிலி வந்து  ஊசி போட்டுவிட்டு இன்னொரு சிரஞ்ச் எடுத்துவந்து இரத்தம் எடுத்துச் சென்றார்.

சோர்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த சீனு “சாமி கும்பிடலாம்னு வந்தவங்களுக்கு இப்படி ஏண்டா நடக்குது ” என விம்மினான். நான் அவனை தோளில் சாய்த்துக் கொண்டபோது அன்றைக்கு இவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமர்ந்திருந்தது நினைவிலாடியது. மின்னல் வெட்டியதுபோல  அந்தப் பாம்பின் முகம் மனதில் தோன்றியது. என் பையனைக் கடித்த பாம்பை அடிக்கத் தோன்றாதது ஏன் என்பது சற்று புரிவது போலிருந்தது. எதிரில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தபோது எல்லாம் தெளிவானது. அன்றைக்கு சீனுவை கிணற்றில் தள்ளிவிட்டபோது என் முகமும் விளையாட்டாய் வினை செய்த குழந்தையையொத்த  அந்த பாம்பின் முகத்தைபோலத்தான் இருந்திருக்கும்.   “சாமி,  பாம்பின் உருவில் வந்ததென்று ” யாராவது கூறியிருந்தால் நேற்றுவரை  நான்கூட நம்பியிருக்கமாட்டேன் என்றே தோன்றியது. அதனால், வேறெதும் சொல்லாமல்    “ஒன்றும் பிரச்சனை இருக்காது ” என்று தெளிந்த முகத்துடன்,  நம்பிக்கையாய்க் கூறிய என்னை வியப்போடு பார்த்தார்கள் என் மனைவியும் நண்பனும்.