Month: March 2020

ரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்

ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை”,2009 ல் தொடங்கி 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

புத்தக தலைப்பாய் அமைந்துள்ள “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை ஜெர்மன் சிறையில் நடந்த ஒரு இசை அரங்கேற்றம் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வரலாற்று பின்புலம் எதுவும் அறியாது நாம் வெறுமனே இந்தக்கதையை வாசிக்கையில் எழும் அடிப்படையான கேள்வி “நாம் ஏன்  கடினமான சூழல்களில் இசையை நாடி செல்கிறோம் ? ” என்பது.

நடந்த இசை அரங்கேற்ற  நிகழ்ச்சியின் பின் புலம் குறித்து, வரலாறு  குறித்து  ஒரு புத்தகமே எழுதப்பட்டுள்ளது – For the End of Time: The Story of the Messiaen Quartet – Rebecca Rischin என்னும் ஒரு clarinet கலைஞரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. . இந்த சிறுகதை உண்மையில் நடந்த  நிகழ்ச்சியின் பிரதியாக இருப்பதால், நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சி குறித்து விளக்க ஆசிரியர் எடுத்துள்ள தேர்வுகளே நாம் கணக்கில் கொள்ள வேண்டியது.

கடினமான சிறை சூழல் , ஒரு இசை மேதைமை குறித்த வியப்பு அதே நேரத்தில் அந்த இசை மேதைமையை இறுக்கமான சூழலோடு பொருத்தி பார்த்து எடை போடும் தன்மை , இசைமேதையின் பதில் – இதுவே இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் சிறுகதையின் வடிவம் -கதையில் சிறை சூழலின் புற விவரிப்பு நன்றாக அமைந்து வந்திருக்கிறது,  அதே நேரத்தில் வாசகனுக்கு இவ்வரலாற்று நிகழ்வு குறித்த அனுமானங்களை வலிந்து வந்து கூறுவது போல் கட்டுரை போல் அமைந்து விட்டது , இந்தக் கதையில் ஆலிவர் போன்ற இசை மேதை அல்லாது வேறு ஒரு பெயர் அறியாத கலைஞன் இசைத்திருந்தால் ?அந்த இசை தொகுப்பு ” quartet for the end of time ” போல் அல்லாது யாருமறியா ஒரு இசை கலைஞனின் ஆத்ம சங்கீதமாக இருந்திருந்தால் ? இங்கு நாம் “மோகமுள்” நாவலில் வரும் ஒரு வடக்கத்திய பாடகரையும் அவரது மகனையும் நினைவு கூறலாம்.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை ” நந்தாதேவி” என் கணிப்பில் இச்சிறுகதை தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்க பட வேண்டிய ஒன்று . இந்திய ராணுவத்தின் மலையேற்ற குழுவின் அனுபவம் குறித்து அட்டகாசமான நிகழ்த்து தன்மையுடன் அமைந்துள்ள சிறுகதை – ஜாக் லண்டன் முதல் அசோகமித்திரனின் “மிருகம்” வரை மனித வாழ்வின் விளிம்புகளை நினைவூட்டும் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது,

“நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” – நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளின் சரளமான தொகுப்பு போல் அமைந்துள்ளது – ஆசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் உத்தி முறை ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது தொடர் நிகழ்வுகளின் அவலங்களின் சித்திரத்தை அதே நேரத்தில் எந்த ஒரு பார்வையையும்  கோணத்தையும்  வலிந்து திணிக்காது கால மாற்றத்தின் மௌன சாட்சி போல் அமைந்துள்ளதே இந்தக் கதையின் சிறப்பு. நீண்ட நீண்ட வாக்கியங்களை படிக்கையில் தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்றான ” தாண்டவராயன் கதை ” நினைவுக்கு வந்தது – வரலாற்று நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் ஒரு புறம் , வரலாற்றையே ஒரு மாபெரும் புனைவு வெளியாக்கி எழுதப்படும் கதைகள் இன்னொரு புறம் , பின்னதின் சாயலில் அமைந்துள்ள ” நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” எந்த ஒரு இலக்குமற்று எதேச்சையின் கரங்களால் உந்தப்பட்டு செல்லும் காலம் குறித்த நினைவலைகலாக அமைந்துள்ளது.

இசை குறித்தும் வரலாற்று பின்புலத்தில் அமைந்துள்ள கதைகள் யாவும் தகவல் செறிவு காரணமாகவும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் காரணமாகவும் கவனத்தை கோருகின்றன , அதே நேரத்தில் அரசியல் சரி நிலைகள் குறித்த பிரக்ஞை காரணமாக நிகழ் தன்மை குறைந்து கட்டுரை போல் நீளும் இடங்கள் ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இருள் முனகும் பாதை – நாவலாக வந்திருக்க வேண்டிய சிறுகதை – ஷுமன் கிளாரா என்னும் இசை துருவங்கள் குறித்த ஒரு கோட்டு சித்திரமாக அமைந்து விட்டது – பென்னட் என்னும் பார்வையாளன் ஷுமனின் மேதைமையை புரிந்து கொண்டவன் , இயந்திரத்தனமான வெற்றியை நோக்கி பயணித்த கிளாரா,பென்னெட்டிடம் , தன் மொத்த இருப்பின் பொய்மையை உணர்ந்து உருகுகிறாள்,  இயந்திரம் Vs இயற்கை என்று சட்டகம் வழியே கதையை அணுக நினைக்கையில் ஷுமன் என்னும் காதலன் தன் காதல் கடிதங்களை நமக்கு வாசிக்க அளிக்கிறான் , கடைசி ஸ்டாப்பை அறிந்திருந்தாலும்  , கடைசிக்கு முந்தைய ஸ்டாப்பில் எந்த ஒரு பெரிய கலைஞனும் இறங்கி விடுவான் என்பதின் சாட்சியாக ஷுமன் கிளாரா காதல். இந்த இடத்தில சங்கர ராமசுப்ரமணியனின் இந்த கட்டுரை மிக முக்கியமானது , அனைத்துக்கும் ஆசைப்பட்டபடியே அத்வைதம் போதிக்கும் கலைமனதை உணர்கையில் மேலும் நாம் ஷுமனின் தவிப்பை புரிந்து கொள்ள முடியும் – (https://www.shankarwritings.com/2019/12/blog-post_26.html?m=1)

பலி மற்றும் மௌன கோபுரம் சிறுகதைகளில் தலைப்பு மற்றும் குறிப்புகள் சுட்டும் விஷயங்கள் நேரடியாக உள்ளது. பலி சிறுகதை ஒரு “abstract ” தன்மையுடன் அழகாக உள்ளது ,” பலி” என்னும் தலைப்பு வலிந்து வந்து ஆசிரியர் கூற விரும்புவதை சுட்டுகிறது , வேறு ஒரு மெல்லிய உருவக தலைப்பு பொருத்தமாக இருக்கக் கூடும் – இவ்விடத்தில் ஆல்பர்ட் காம்யுவின் ” The guest ” குறித்து இணைத்து வாசிக்க சில விஷயங்கள் உள்ளன – ” கதாபாத்திரத்தின் பெயர் நேரடியாக ” அரபி” என்றும் தலைப்பு ” தி கெஸ்ட் ” என்றும் உள்ளது – இக்கதையில் சுமி மற்றும் லியோன் , கதையின் தலைப்பு “பலி” – இந்த வலிய தலைப்பு எதிர்மறை அம்சம் கொண்டதாக உள்ளது – மொத்த கதையின் சாரமும் ஏன் இரண்டு அல்லது மூவர் சேர்ந்து இருக்க முடிவதில்லை ஸ்தூலம் இல்லாத எதோ ஒன்று எப்படியோ அதை ஏன் தடுத்துவிடுகிறது என்ற கேள்வியில் இருக்கிறது , இந்த சிறுகதை Godard ன்  Bande à part  திரைப்படத்தை நினைவூட்டியது.

வரலாறு இசை மற்றும் புலம் பெயர் வாழ்வு என்கிற வெவ்வேறான தளங்களில் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது

கோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்

கோணம்

நிரம்பி வழிந்த நீர்த்தொட்டி
காலடியில் சிறு தண்ணீர்க்குளம்
அக்கம்பக்கம் பார்த்த புறா மெல்லடியில் தத்தி
அலகு வளைத்து வந்து அருந்தும் நேரமிது
காத்திருக்கலாம் நான் அதன் தாகம் தணியும் வரை
காகத்திற்கு அதன் ஒன்றரைக் கண்ணில் பட்டுவிட்டேன்
அதன் குஞ்சிருக்கும் மரத்தை நான் என்ன செய்துவிடுவேன்?
தலையில் கொட்டும் வாதை
புறாவின் தாகம் தீரவில்லை என அறிவேன்
காகமுண்ட குருதி சிறிது உண்டு;உறையும் முன்
வரச் சொல்ல முடியுமா கண்டவர்கள் யாரும் ?

ஈசி சேர்

சிறகென விரியும் கை தாங்கி
கால் தாங்கும் சொகுசு
முதுகமர்த்தும் குழி
பின்னிருந்து விழும் ஒளி
தோதாக சிறு தலையண
பதிந்த தலை வட்டம்
மூலையில் மடங்கிய நாள்
பரணில் ஏற்றுவதா விற்பதா
இடம் அடைக்கும் நாற வேறு செய்யும்
இரு நாளில் விற்பதாக எண்ணம்
அவர்களுக்கு.

நாலு மூலத் தாய்ச்சி

சதுரத்தின் மூலை
அ,ஆ,இ,ஈ நிற்க
ஏன் ‘அ’ தொடங்கும் சடங்கு?
‘ஈ’ பாய்ந்தோடி ‘இ’யைத் தள்ள
நெடுக்கில் நின்றவர்கள் கிடக்கில்
சதுரம் சமம்தான்.

என்னதான் வேண்டும்! – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி

பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள்.

கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின் சாத்தனூர் கிராமத்தின் கதை.ஊரின் மையத்தில் மேட்டுநிலத்தில் சிவன் கோயில்.காவிரியை ஒட்டிய மேட்டுத்தெருவும்,சர்வமாணிய அக்ரஹாரமும் நாவலின் முக்கியமான கதைக்களம்.குறியீடும் கூட என்று எனக்குத்தோன்றுகிறது.மேட்டுத்தெரு சர்வமாணிய அக்ரஹாரம்.

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம்.பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது,பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை.அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது.பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு.இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார்.காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.

பாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை

​கால்சட்டை​​ அணிந்தபடி
தன்னைத்தானே தூக்குபவளின்
தோள்களில் வளரும் இளமையை
உள்ளிருந்தே உண்ணுகின்றன
அசையும் பிம்பத்தின்  நாக்குகள்.

இருவருக்கும் நடுவில் நின்று
வேடிக்கை பார்ப்பது
சித்ரவதையாய் இருக்கிறது கண்ணாடிக்கு.

பதின்வயதின் நதிக்கரையில்
கால் வைத்ததும்
துள்ளுபவளின் முன்பு
அவளுக்கு சிறிதும் பிடிக்காத
பெண்டுலமொன்று
வந்து நிற்கிறது.

உடைப்பதற்காக
சுவற்றை நோக்கி உதைக்கிறாள்.
கண்ணாடிக்குள் பெருகும்
காட்டு மரங்களில் தொங்கவிடுவதற்காக
அது
அவளை
உள்ளே இழுத்துக் கொண்டு ஓடுகிறது

கிளைகள் தோறும் குதித்தாடுபவள்
களைத்து நதியில் விழும் போது
சூழ்ந்து மிதக்கின்றன செம்பூக்கள்.
விலக்கிக் கொண்டே இருக்கிறாள்
கரையேறவே முடியவில்லை.
மீன்பிடிக்க வருபவர்களின்
வலைகளிலிருந்து தப்பிப்பதற்காக
தவளையாகித் தாவுகிறாள்.

இதற்கு முன்பு சென்றவர்கள்
செதுக்கிய குகையில்
சப்தமிடாது ஒளிந்து கொள்கிறாள்
மூச்சுமுட்ட அழுத்துகிறது நீள் இரவு.

அழுதபடியே
வெளியேறுபவளின்
நெஞ்சு பெருகுகிறது
அமுதுண்ண அமரும் பறவைகள்
விடாமல் கொத்துகின்றன.

தூக்கிச் செல்லும் பறவைகள்
வழியில் அவளை நழுவ விடுகின்றன.
மிகச்சரியாக வந்து
பிடித்துக் கொள்ளும் பெண்டுலம்
வீட்டுக்குள் வந்ததும்
பொத்தென்று போட்டு உடைக்கிறது.

அதற்குப்பிறகு
அவள்
பிம்பங்கள் உருவாகாத கண்ணாடிக்கு
தன் முதுகைக் காட்டியபடியே
சுவற்றில் முகம் பார்த்துக் கொள்கிறாள்.

அடிக்கடி சிரித்தாலோ
சிறிது
தன்னைத்தானே தூக்கினாலோ
தவறாது முன்னே வந்து விடுகிறது
பாழாய்ப் போன பெண்டுலம்.

முடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை

காவல் நிலைய வாசல் பகுதி வழக்கமான பரப்பரப்பின்றி யாருமற்று வெறிச்சோடியிருந்தது , முன்பே இங்கு பலமுறை வந்து போயிருந்தும் இப்படி மரங்கள் ஒன்று கூட இல்லாத மொட்டை வெளியாக வாசல் பகுதி இருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். காவல் நிலையம் சற்று பழங்கால கட்டிடம், ஆனால் வண்ணம் அடித்து நன்றாக பேணியிருந்தார்கள். வெளியே நிற்பதாக சொன்னவர்களை காணாது தேடினேன், அவர்கள் சற்று தள்ளி வாகன நிறுத்திற்காக போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட் கூரையில் கீழ் நின்று கொண்டிருந்தனர், நான் பார்ப்பதை கண்ட அதிலொருவர் கைகாட்டி என்னை அழைத்தார், செல்லும் போதே என் பரபரப்பை வெளிக்காட்டாது அனிச்சையாக பார்ப்பதை போல அந்த பெண்ணை துளாவினேன்,அவள் இடது கடைசி ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள், அருகில் இருந்த குண்டு பெண்மணியை ஒட்டியவாறு. அவள் முகம் நான் தேடிய பெண் அவள்தான் என்று சொல்லியது. நான் அருகில் சென்றதும் சேகர் முன்வந்து ஏன்டா லேட்டுஎன்று கேட்டபடி அந்த பெண்ணை காட்டி இவங்கதான்என்றான், அருகில் பார்த்த போது என் முதல் கவனம் அவள் கழுத்தில் தான் போனது, ரத்த திட்டுகள் போல இருந்தன, அவளை பார்த்து கழுத்துல என்ன? ‘ என்றேன், அவள் ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள், அருகில் இருந்த குண்டு பெண்மணி சண்டாளன் கழுத்துலயே மிதிச்சுருக்கான் என்றாள்.

வெயிலும் சேர்ந்து கொள்ள அவன் மீது கோபம் கோபமாக வந்தது, தேவிடியா மகன் என்று முணுமுணுத்து கொண்டேன், அது அவளின் காதில் விழுந்திருக்கும் போல, சட்டெனெ முகம் தூக்கி என்னை பார்த்தாள் , அவள் பார்வையை தவிர்க்கும் விதமாக திரும்பி கொண்டேன். சேகரை நோக்கி அவன் வரானா? ‘என்றேன், சேகர் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டு இப்ப மிரட்டனாரு, இப்ப வந்தரனு இருக்கான் என்றான். பிறகு அவனிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி அந்த குண்டு பெண்மணியை நோக்கி உங்க பொண்ணா என்றேன், அவள் இல்ல தம்பி அண்ணன் பொண்ணு, இவளுக்கு அம்மா இல்ல என்றாள், பின் எங்க அண்ணனும் இறந்துட்டாங்க, அவங்க இறந்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆவல என்றாள், “கூட பிறந்தவங்க என்றேன், “யாரும் இல்லங்க தம்பி !” என்று முடித்து கொண்டாள். இவள் அணிந்திருக்கும் நகைகள் 20 சவரன் இருக்கும், ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாததை மலிவான பாலியெஸ்டர் சேலை , குளிக்காத சிக்கு கொண்ட தலை என இருந்தாள், இவளுக்கு நேர் மாறாக வெறும் தாலி சரடுடன் அந்த காயம் பட்ட பெண் இருந்தாள், சில இடங்களில் தேமல்கள் இருந்ததே தவிர அவை அசூயை அளிக்க கூடியதாக இருக்க வில்லை, அவளை நோக்கி கொஞ்சம் முன்னாடி வாங்க என்றேன், அதை கேட்டு திகைத்தவளாக திரும்பி மற்றவர்களை பார்த்தேன், பின் தயங்கி என் பக்கம் வந்தாள்.

வீட்டுக்காரர் குடிப்பாராஎன்றேன், “காலைலயே குடிச்சுருவாருங்க என்றாள், அது இல்லாம அவரால இருக்க முடியாதுங்கஎன்றாள். “குழந்தைக என்றேன், இன்னும் இல்லைங்க என்றாள், அதை தயங்கி சொன்னாள், ” அதுக்கு காரணம் நீங்களா இருக்க மாட்டீங்க என்றேன், பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக இருந்தாள்.

ஒன்னும் பிரச்னை இல்லை, அவன் வேணும்னா வேணாமா னு முடிவு பண்ணுங்க “, வேணாம்னு இருந்தா பிறகு உங்க பக்கமே வராத மாதிரி ஸ்டேஷன்ல சொல்லி ரெடி பண்ணிடலாம் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்ல வில்லை, ” இப்படி தினமும் அடிப்பாரா என்றேன், “ஆமாங்கஎன்றாள், பின் சில கணம் கடந்து அழுதா எச்சா அடிப்பாருங்க என்றாள், சொல்ல சொல்ல அவளை பார்த்து கொண்டிருந்தேன், எழும்பு மேல் வெளிர்மஞ்சள் தோல் போர்த்தியவள் போல இருந்தாள், இருப்பினும் பொதுவாக ஒல்லி பெண்களை போல் அல்லாது அளவான மார்பும் ஒடுங்காத கன்னங்களும் கொண்டிருந்தாள், நீள்வட்ட முகம், நடுநேராக தலை சீவியிருந்தாள், முகத்தில் விபூதி இருந்தது, வரும் வழியில் ஏதும் சாலையை ஆக்கிரமித்த அல்லது சாலை ஆக்கிரமித்த கோவிலுக்கு சென்று வேண்டி கொண்டிருப்பாள், அவளுக்கு சோகம் அழகை கொடுக்கிறது என்று தோன்றியது. மனம் விட்டு வெளியே வந்துஎன்ன முடிவு பண்ணியிருக்க என்றேன், அவள் தயங்கி தயங்கி என்னால தினமும் பயந்து அவரோட வாழ முடியாதுங்க என்றாள்.

என் மனம் ஆசுவாசம் கொண்டது, தப்பித்து கொள்வாள் என்று எண்ணி கொண்டேன், பிறகு வேலைக்கு போறீயாமாஎன்றேன்,” இல்லைங்க என்றாள், சொல்லும் போது அவள் குரலில் கொஞ்சம் உற்சாகம் வெளிப்பட்டதை உணர்ந்தேன், ” பாத்து கொடுத்தா போவியா என்றேன், அவள்ம், போறேங்க என்றாள், அவள் தனக்கு தானே சொல்லி கொள்கிறாள் என்று தோன்றியது. ” சரி இங்கயே வைட் பண்ணுங்க என்று சொல்லி சேகரை அழைத்து ஸ்டேஷன் உள்ளே சென்றேன், பெரும்பாலும் எல்லோரும் தெரிந்தவர்கள்தான், கட்சியில் இருப்பதால் கிடைத்த பலன்களில் ஒன்று இது, “பாத்துக்கலாம் தம்பி என்ற எனக்கு சாதகமான வார்த்தையை பெற்று வெளியே வந்தேன், கூட வந்த சேகர் நா செலவாகும் னு நினைச்சேன், பரவால்ல என்றான்.

பெண் பக்கம் வந்து சரி வாங்க, அவன் மெல்ல வரட்டும் நாம வெளிய டீ சாப்பிட்டு வரலாம் என்றேன், குண்டு பெண்மணி முதல் ஆளாக முன்னே வந்தாள், அந்த பெண்ணையும் வாமா போயிட்டு வந்தடலாம் எவ்வளவு நேரம் இங்கயே நிக்க என்று சொல்லி அவளையும் இணைத்து கொண்டாள் .

மொத்தம் சேர்த்து 9 டீ 1 பிளாக் டீ சொன்னேன், எனக்கு பிளாக் டீ, பால் அருந்துவது பாவம், டீ குடிப்பதும் பாவம்தான், இப்போதைக்கு ஒரு பாவத்திலிருந்து மட்டும் என்னை தற்காத்து கொண்டு வருகிறேன். எதேச்சையாக நிகழ்வதை போல அவள் அருகில் வந்தேன், அதே எதேச்சையை அந்தகுண்டு பெண்மணியும் செய்தாள், “கொஞ்சம் இவங்க கிட்ட பேசணும்என்று கடும் தொனியில் குண்டு பெண்ணிடம் சொன்னேன், நீங்க பேசுங்க என்று சொல்லி வேகமாக தள்ளி நின்று கொண்டாள்.

வீட்டு காரரை உங்களுக்கு பிடிக்குமா என்றேன், ஒன்றும் சொல்லாமல் இருந்தாள், நான் மீண்டும் அவராவது மற்ற நேரங்களில் உங்க மேல பிரியமா இருப்பாரா என்றேன், ” இல்லைங்க என்றாள். ” ஏனா எதையும் யோசிக்குங்க, அப்பறம் திரும்ப திரும்ப முடிவை மாத்திட்டுருக்க இதுல முடியாதுஎன்றேன்.” வயசு எவ்வளோ என்றேன், “32 “என்றாள், ” தாராளமா இன்னொரு கல்யாணம் பண்ணலாம், நிறைய இப்ப அப்படி நடக்குது என்றேன், அப்போது குண்டு பெண்மணி பையனை திருத்த முடியாதுங்களா , கொஞ்சம் போலீசு மிரட்டினா பையன் பயந்து சரியா நடந்துக்குவான் ல என்றாள், அதுவரை அவள் நாங்கள் பேசியதை கவனித்து நின்று கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன், அவள் மேல் எரிச்சல் வந்தது பையன் உங்க சொந்தமா என்றேன், அதை கேட்டு திணறியவள் சொந்தமெல்லாம் இல்லைங்க, பொதுவா பசங்க குணம் இப்படித்தான் இருக்கும், புள்ளைகதான் கொஞ்சம் பேசி பேசி சரிபண்ண..” இப்படி பேசி கொண்டிருந்தவளை மறித்து உங்களுக்கு வீட்டுக்காரர் இப்படியா என்றேன், அவள் பதறி இல்லைங்க என்று சொல்வதற்குள் இன்னொரு குரல் அவளை நோக்கி சனியனே, கொஞ்சம் மூடிட்டு இருடி என்று சொன்னது, அது அந்த குண்டு பெண்ணின் கணவர் போல, அவர் என்னை நோக்கி இந்த சனியன் இப்படித்தான், நீங்க இவளை பொருட்படுத்தாதீங்க, அந்த பொண்ணு தினம் தினம் நரகத்துல நிக்குது, அவன் ஒழிஞ்சாதான் இந்த பொண்ணுக்கு விமோசனம், ” என்று பொரிந்தார், நான் இனி ஒன்னும் பிரச்னை இல்லைங்க, ஸ்டேஷன் ல எல்லாம் பேசியாச்சு, ஒன்னும் கவலை பட வேண்டாம்என்றேன் .

டீ குடித்து முடித்த பிறகு ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம், சேகர் சட்டென என் அருகில் வந்து அவன் அங்க வந்து நின்னுட்டு இருக்கான்என்றான், நான் ஸ்டேஷன் நோக்கி பார்க்க, அங்கு பழைய புல்லட் அருகில் வெள்ளை சட்டையும், வேட்டியும் அணிந்து ஒருவன் நின்றுகொண்டிருந்தான், நாங்கள் அவனை கண்டு கொள்ளாது ஸ்டேஷன் நோக்கி நடந்தோம், அவன் வேகமாக வந்து எங்களை மறித்த படி நின்று நில்லுடிஎன்று அந்த பெண்ணை நோக்கி சொன்னான் , அவள் பதில் சொல்லும் முன்பாக நான் இடையில் புகுந்து எதுனாலும் ஸ்டேஷன் ல வச்சு பேசிக்கலாம் என்றான், அவன் என்னை பார்த்து கோபமாக முறைத்து பின் அவளை பார்த்துநில்லுடி, வாடி எங்கூட என்றாள், அப்போது அந்த பெண் சட்டெனெ நின்று விட்டாள், எனக்கு அதிர்ச்சி, அவள் நின்றதை உணர்ந்து மற்றவர்களும் நின்று விட்டனர்,

அவன் கோபத்துடன் இது எனக்கும் எ பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்னை, நீங்கல்லாம் உங்க வேலையை போய் பாருங்க என்றான், பிறகு அவளிடம் வாடி என்று கத்தினான், நான் ஒருவாறு பொறுமையை வரவைத்து கொண்டு அந்த பெண்ணிடம் உங்களுக்கு விருப்பம்னா இவர் கூட போங்க, இல்லைனா வாங்க ஸ்டேஷன் ல வச்சு பேசிக்கலாம், நீங்க இவருக்கு பயப்பட வேண்டியதில்ல என்றேன், அவன் கோபத்துடன் என்னை நோக்கி யாருடா நீ என்று கத்தினான், “மரியாதையா பேசுங்க, ஸ்டேஷன் ல பிரச்னை போயிடுச்சு, ஸ்டேஷன் வா பேசிக்கலாம் என்றேன், அது அவனுக்கு இன்னும் கோபத்தை அளித்தது, ஆனால் அவன் பதிலுக்கு என்னிடம் பேசாமல் அவளை நோக்கி திரும்பி வெறியுடன் தேவிடியா முண்ட என்று சொல்லியபடி அடிக்க போனான், என் கூட இருந்தவர்கள் அதை பார்த்த உடனே சட்டென்று ஒன்று சேர்ந்து அவனை பிடித்து தள்ளி விட்டார்கள், தள்ளியதில் பின் நேராக பொத்தென விழுந்தான், விழுந்தவன் அதே வேகத்தில் எழுந்து ஆங்காரமாக திரும்ப அதே வார்த்தையில் அவளை நோக்கி கத்தினான், சத்தம் கேட்டு ஸ்டேஷன் உள்ளே இருந்து ஒரு போலீஸ்காரர் எவன்டா கத்துனது என்று சத்தமாக மிரட்டிய படி வெளியே வந்தார், அவரது மீசையும் போத்து உடலும் எனக்கே பயத்தை அளித்தது, ஆனால் அது அவன் கவனத்திற்குள் போகவே இல்லை போல, ” வாடி என்று கத்தி கொண்டிருந்தான், போலீஸ்காரர் அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார், அவன் மீண்டும் தேவிடியா என்று சொல்ல தொடங்கும் கணத்தில் சரியாக போலீஸ் காரர் அவனை ஓங்கி ஒரு அறை விட்டார், அது அவனை தடுமாற வைத்து மீண்டும் கீழே விழ வைத்து விட்டது, அவன் தடுமாறி எழும் போது கத்தன, மிதிச்சு கொன்னுடுவேன் நாயே ! ” என்று போலீஸ்காரர் மிரட்டினார், அவன் மீண்டும் அதை பொருட்படுத்தாது அவளை நோக்கி முண்ட வாடி என்று அங்காரமாக கத்தி கொண்டே எழ போலீஸ்காரர் ஓங்கி அவன் நெஞ்சில் மிதித்தார், கீழே மண் அதிர விழுந்தான், இவனுக்கு வேணும் இது என்று எண்ணி கொண்டே அவனை பார்த்து கொண்டிருந்த நான் சட்டென்று ஏதோ தோன்ற திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன், அவள் அழுது கொண்டிருந்தாள். உடனே நான் போலீஸ்கார் அருகில் சென்று வேணாம் விடுங்க சார் என்றேன், ” இவனுக எல்லாம் சைக்கோ தாயோளிக, கைகால உடைச்சு மூலைல உட்கார வச்சாத்தான் திருந்துவானுக என்றார் , விழுந்ததில் அவன் வேட்டி நழுவியிருந்தது, சட்டை எல்லாம் மண் படிந்திருந்தது, முகம் பார்க்க எந்நேரமும் அழ தொடங்கி விடுவான் போல இருந்ததுபெண் என்னருகில் வந்தாள் அண்ணா நான் இவரோடவே போயிடுறேன்ணா என்றாள், எங்களோடு இருந்த ஒருவர் இவனோட போனா சாவடிச்சுவான் உன்ன என்று கத்தினார், நான் அவரிடம் கொஞ்சம் பொறுமையா இருங்க என்றேன்.

குண்டு பெண்மணி என் அருகில் வந்து அவனை பொண்ண அடிக்க கூடாது னு சொல்லி மிரட்டி மட்டும் விட சொல்லுங்க தம்பி, பையன் அடங்கிடுவான் என்று சொல்லி பெண்ணை நோக்கி நீயும் அவனை கோபம் வர மாதிரி நடந்துக்காதே என்றாள், இதற்கு மீறி இங்கு நிற்க வேண்டியதில்லை என்று எண்ணம் வந்த உடனே அந்த கூட்டத்திலிருந்து விலகி வேகமாக நகர்ந்து என் இரு சக்கர வாகனம் இருக்கும் இடம் நோக்கி சென்றேன், பின்னிலிருந்து சேகர்நில்லுடா என்று கத்தியது கேட்டது.

நடக்கும் போது அவன் துளியும் மாற மாட்டான்என்று மனம் எண்ண துவங்கியதுமே திரும்பி அந்த பெண்ணை பார்த்தேன், அவள் அந்த குண்டு பெண்மணியை அருகில் ஒட்டியவாறு நின்று கொண்டிருந்தாள்.