Month: August 2020

அய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா

ஒவ்வொரு நாய்க்கும் அதன் இரவென்பதுண்டு

அவனது வீட்டின் வரவேற்பறை விலங்குகளால் நிரம்பியிருக்கிறது.
விலங்குகள், வெண்கலம், எஃகு, பித்தளையில் வார்க்கப்பட்டவை..
அமைதியாக இருக்க அவை பழக்கப்படுத்தப்பட்டிருப்பினும்,
நேற்றிரவில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டன.
நேற்று நாய்களின் முறை.
ஒன்றின் குரைப்பு மற்றவைகளைத் தூண்டிவிட்டது.
அதைக் கேட்டு நரிகள் அமைதியற்று ஊளையிடத் தொடங்குகின்றன.

பித்தளைச் சிங்கம் கர்ஜிக்க எழுந்தது.
பாடப் புத்தகங்களில் கர்ஜனை என்பதே சொல்;
முயற்சித்து, ஆனால் சளியிருப்பதால், கைவிட்டு
தானாகவே கூண்டுக்குத் திரும்பிவிட்டது.
கச்சேரி முடிந்து பாடகர்கள் அமைதியான போது
நானும் கண்ணயர்ந்து விட்டேன்,
ஆனால் குரைக்க முடியவில்லை.
இப்போதைக்கு இவ்வளவுதான், இது போதாதா.

திருட்டு

நான் ஏதோ சில பொருட்களைத் திருடிவிட்டேன் என்பதற்காக
நீங்கள் ஏன் என்னைத் திருடன் என்று சொல்லவேண்டும்?

ஆனால் நீ எங்கள் உடைகளைத் திருடிவிட்டாய்!

நான் உங்கள் உடைகள், உங்கள் உடைகளைத் திருடியிருந்தால்,அது
உங்களின் வெட்க உணர்வைப் பாதுகாக்கத்தான்,
உங்களின் வெட்க உணர்வைப் பாதுகாக்கத்தான்.

நீ எம் கோழிகளையும் திருடினாய்!

நீங்கள் சொல்வது போல “எம் கோழிகளை“ நான் திருடியிருந்தால்
அது அதை வறுத்துச் சாப்பிடத்தான்,
அது அதை வறுத்துச் சாப்பிடத்தான்.

அப்படியானால் நீ திருடிய எம் பசு?
நீ திருடிய எம் பசு?

நீங்கள் பசுவைச் சொல்கிறீர்களா?
நல்லது, நான் உங்கள் பசுவை உங்கள் பசுவைத் திருடியிருந்தால், அது
இருந்தது, அது இருந்தது நான் அதன் பாலைக் குடிக்கத்தான்.

தயவுசெய்து கவனியுங்கள், என் மருத்துவர், வறுத்த கோழி
அல்லது பசுவின் பாலை உண்ணக் கூடாதென்று சொல்லவில்லை.
ஒருவன் நல்ல பொருளை, நல்லதொரு பொருளைத் திருடும் போதெல்லாம்,
உங்களைப் போன்றவர்கள் ஒன்றுமில்லாததற்காகக் கூக்குரலிடுகிறீர்கள்
அவனுக்கு திருடன், திருடன் என்று பெயர் சூட்டுகிறீர்கள்,!
அது உங்கள் சட்டத்திலிருக்கும் குறை,
அது உங்கள் சட்டத்திலிருக்கும் குறை.
நான் சொல்கிறேன்,
நீங்கள் உங்கள் சட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்,
இல்லையெனில் உங்கள் சட்டங்கள் உங்களை மாற்றி விடும்.

 

 

நன்றி: Publisher: Poemhunter.com – The World’s Poetry Archive
Publication Date: 2012

ஆங்கில மூலம்

Every Dog Has His Night

The drawing room in his house is filled with animals.
Animals cast in bronze, steel and brass.
Trained to remain quiet, they
turned to quite a noisy racket last night.
It was the turn of the dogs yesterday.
One’s bark sparks off the rest.
Restless, on hearing that, the foxes begin to howl.

The brass lion rose up to roar.
Roar’s the word in the textbook;
tried, but having caught a cold, forsook
returned to the cave itself.
When the singers were settled after the symphony
I too dozed,
but couldn’t bark.
So that’s all for now, isn’t it enough.

Theft

Just because I have stolen a few things
why should you call me a thief?
But you have stolen our clothes!
If i have stolen your clothes, your clothes, it was only to protect your sense of shame,
it was only to protect your sense of shame.
You have stolen our chicken too!
If I have stolen “our chicken,” as you say,
it was only to fry it and eat it,
it was only to fry it and eat it.
‘[hen what about our cow you stole?
What about our cow you stole?
The cow, you mean?
Well, if I have stolen your cow, your cow
, it was, it was for me to drink its milk.

My doctor, please note, hasn’t said no
to fried chicken or cow’s milk.
Whenever one steals something good, something good,
you people raise a clamour for nothing
and dub him a thief, a thief!
It is the fault of your laws,
it is the fault of your laws.
Change you then your laws, I say,
lest your laws should change you.

நான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை

நான் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தேன். கடந்த சிலநாட்கள் போல ‘நான்’ என்றால் ‘நான்’ மாத்திரம் அல்ல. பூனையும், நாயும் மற்றும் நானும் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தோம். நடப்பதற்கு ஏதுவான காலநிலை, கருத்திருந்த வானம் சாரலை மட்டுமே அவ்வப்போது தெளித்துக்கொண்டு இருந்தது, முச்சூழ் மலையும் நேரடியாய் வானில் இருந்து இறங்கிய காற்றை நிலம் எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. எங்கே நடக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்கில்லை, நாயோ அங்கும் இங்கும் வெறித்தபடி வந்துகொண்டு இருந்தது. ஒருவேளை அதற்கு பிரக்ஞை இருக்கலாம். இப்போதெல்லாம் நாக்கு வெளிநீட்டி எச்சில் ஒழுக நான் அனுமதிப்பதில்லை, எனவே வாய் மூடியே இருந்தது, ஆயினும் மூச்சு பலமாக வாங்கிக்கொண்டு இருந்தது. இங்கே பூனையும் இருக்கிறது, சாலையில் வேகமாய் வாகனங்கள் சீறிப்பாய்வதால் பத்திரமாய் வந்துக்கொண்டு இருந்தது. நான் என்றுமே எதிரே வருபவரை கூர்மையாய் கவனிப்பதில்லை, கடந்து போகும் காட்சிகள் மட்டுமே. உயிரற்ற பொருட்கள் மட்டுமே என் கண்களில் நுழையும். அவையும் வெறும்குப்பைகளாக இல்லாமல், விலைமதிப்பற்ற பொருட்களின் மீது பதியுமாறு, இங்கே ஒரு பொருளின் மதிப்பு தீர்மானிக்கப்படுவது அது என்னிடம் இருக்கிறதா? என்பதனை பொறுத்தது. நாய் வித்தியாசமானது, அதன் கண்கள் எந்நேரமும் நாலாபக்கமும் சுழன்று கொண்டேவரும். ஆனால் காட்சிகள் நினைவில் நிற்காது. பூனைக்கு எதிலுமே நாட்டம் இல்லை. அதன் நடையை, ஆம் அதன் நடையை மாத்திரம் கவனிக்கிறது, தன்னை மட்டுமே ஆழமாக, எவ்வளவு ஆழம் என்றால் பள்ளிகொண்டவனின் தொப்புளில் நான்முகன் தோன்றிய தாமரைத்தண்டின் வேரினை காண விழைவதை போல. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் முதல்மாதிரி வைக்கிறது. உண்மையிலே ஒவ்வொரு அடிக்கும் ஒரே சீரான இடைவெளி இருக்கிறது. நாய் இந்நேரம் மாத்திரம், பூனையை போல சீராக நடக்கிறது. பூனை எதையும் உற்றுநோக்காது, இருப்பினும் பதிந்தவை என்றாகியும் தெளிவாய் கண்முன் விரியும். ஆக நான், நாய், பூனை சாலையில் நடந்துக்கொண்டிருந்தோம், வேகமாக, இன்னும் வேகமாக. ஏன் நடக்கிறோம் எனக்கு ‘அது’ உடனடியாக தேவைப்படுகிறது.

எதிரே, அகண்ட பெருவெளியில் சுழலும் பந்தின் ஒருசுழற்றியின் ஈடுக்கு இணையாய் வேகமாய் பருத்த, தோள் கடந்து தொங்கும் பெரும் கூந்தல்காரர் வந்தார். அதிகம் உயரம் இல்லை என்றாலும், குள்ளம் என குறைக்கூற முடியாது. அவரின் வேகத்திற்கு காரணமாக கரும்பரி அவரிடம் இருந்தது, கூடவே குள்ளநரி ஒன்றும். வந்தவரில் இருவர் எங்களை நோக்காது இருப்பினும், நரி கண்டுவிட்டது. என் பூனை ஒளிய முயற்சிக்க, நாய் அதற்கு முன்னே பேச்சை கொடுக்க எத்தனித்தது. நரியின் பார்வை நாயிடம் திரும்ப, பூனை ஒளிந்துக்கொள்ள தேவை ஏற்படவில்லை. எனக்கு எதிரே நின்றவரின் தோற்றம் பழைய கௌபாய் திரைப்படங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. நீலநிற ஜீன்ஸ் மிகவும் வெளிறி இன்னும் சிலதினங்களில் பழுப்பு நிறத்தை அடைந்துவிடும் போல, காலின் கரண்டை தொடும் பேண்டின் விளிம்பு நூல்பிரிந்து இருந்தது. கோடு போட்ட நீலமும் சிவப்பு வடிவம் சட்டையின் கசங்களை குறைத்துக்காட்டியது. அவரில் இருந்து எழும்பிய வியர்வை வாடை பூனைக்கு ஒவ்வாமையை கொடுத்தாலும், அதன் கண்கள் குதிரையை நோக்கியே இருந்தது. குதிரையோ இங்கே எதிரே நிற்பவர், எவரின் மீதும் பார்வையை திருப்பாது கர்வமாய் நின்றது. இன்னும் சிறிதுநேரம் இங்கே நிற்பதால் இழக்க ஏதுமில்லை என்ற எண்ணமே பூனையை நிற்க அனுமதித்தது. நாயோ எப்போது பேசலாம் என்பது போல வாயை திறந்ததால் , நானும் அமைதியாய் நின்றேன். என்னிடம் இருந்த நாயைப்போல அவரிடம் இருந்த, நரியும் ஆசைப்படுகிறது போல, அதுவும் முன்னங்காலை உயர்த்தி ஏதோ சமிக்கை கொடுத்தது. நாய்தான் அவரிடம் ‘அது’ இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது,

“டோப் இருக்கா அண்ணாச்சி”, நாய் எடுத்த எடுப்பிலே நேரடியாய் விஷயத்திற்கு வந்துவிட்டது. வெளிப்படையாக கேட்டதை குதிரையும் பூனையும் விரும்பவில்லை போலும், பூனை என் காலுக்கு இடையே குலைந்து, காலிடுக்கில் நெளிந்து என்னை அதன்பக்கம் இழுக்க, குதிரை வந்தவரை கனைத்து, முன்னங்கால்களை தூக்கி, மகாபலியின் தலையை ஒரு அடியில் மிதித்த குள்ளனின் பாத பதிஅதிர்வை பரப்பியது. அவரும் நானும் எங்களிடம் இருந்த இரண்டையும் ஓரம்கட்டி,

“டோப் இருக்கு அண்ணாச்சி, ஆளு லேகை தெரியு. அதுக்குன்னு பொசுக்குன்னு கேட்டுட்டிலே” என்றார்.

“மண்டகனம், பொறுக்கல. வெளியே ரவுன்சு வருவோம்னு வந்தேன். நீரு எதிர நிக்கேறு. சரி வந்தது வகை, எத்தன இழுப்புக்கு அயிட்டம் இருக்கு”

“பத்து, பதினஞ்சு இழுப்பு வரும். நாம உரிஞ்சத பொறுத்து. வச்சு இருபதும் இழுக்கலாம். ஆனா உம்ம இழுப்புக்கு அஞ்சு தாண்டுமானா சந்தேகம் தான்”

அவரின் குதிரை, ராமரின் அசுவமேத யாகத்தில் வருவது போல கர்வமாய் நின்றது. நரியும், நாயும் அசையாமல் நின்றது. பூனை, யாரின் விழிகளிலும் தன் உருவம் பதியாமல் என் காலிடுக்கில் நின்றிருந்தது. நாய் அங்கும் இங்கும் தலையை சிலுப்பி, ஓரமாய் இறங்கியிருந்த இந்தியாவின் நீண்ட கழிப்பறையை நோக்கி கண்களை செலுத்தவும், நரியும் அதனை உணர்ந்துகொண்டு எங்களை அங்கே செல்ல நிர்ப்பந்தித்தது. உள்ளே சென்றவுடன், தண்டவாளத்தின் மறுப்பக்கம் ஆற்றை நோக்கி இறங்கும் பாதையில் ஒற்றையாய் இருந்த வேம்பின் அடியில் அமர்ந்தோம். கருக்கள் நேரம் ஆகிவிட்டது, கூட காலநிலையும் சேர்ந்து வானம் இருட்டிக்கொண்டு இருந்தது.

இருவரும் எதிரெதிரே அமர, பேண்டின் மேல்பட்டை வழியே இடுப்பின் கீழே கைவிட்டு சிறிய பொதி ஒன்றை வெளியே எடுத்தார். அவரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்தார், நான் வேகமாக கீழே கிடந்த சிறுக்குச்சியை எடுத்து புகையிலை அனைத்தையும் வெளியே எடுத்தேன். அதற்குள் அவர், பொதியில் இருந்த இலைகளையும், விதைகளையும் உள்ளங்கையில் பெருவிரலால் அழுத்தி தேய்த்து கொடுத்தார், விதைகளை மட்டும் நீக்கி, இலைகளை தேய்த்து சிறுசிறு துகளாய் பின் அனைத்தையும் சேர்த்து பொடிபோல் ஆக்கிக்கொண்டார். நாயும் நரியும் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. பூனையும் குதிரையும் மட்டுமே அங்கிருக்கிறது. சிலநொடிகளில் கையில் இருந்தவற்றை சிகரெட்டில் நுழைத்து பற்றவைத்தார். பின் எனக்கும் கொடுத்தார். ஆளுக்கு ஒரு இழுப்பு வீதம் இழுத்துக்கொண்டே இருக்க, கால்கள் தரையில் மோதி, உந்தி என்னை அத்துவானவெளிக்கு அனுப்ப, என்னிடம் கனமாய் தொங்கிக்கொண்டிருந்த என் ஆன்மா நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த கூட்டை நொறுக்கி, என்னிடம் இருந்து எழும்பியது. கைகள் பலமாய் உணர, எதையும் பொருட்படுத்தாது என் உதடுகள் புன்னகையில் விரிந்தது. அதேவேளை என்னிடம் இருந்த பூனை ஒவ்வொரு இழுப்புக்கு உருவத்தில் பெரியதாக மாறிக்கொண்டு இருந்தது. மாறாக குதிரை உருவம் சிறுத்துக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் இரண்டும் ஒரே உருவத்தில் இருந்தது.

நான் “எங்கயோ போய்ட்டு இருந்தீரு. நான்தான் இங்க திருப்பிட்டேனோ”.

அவர் “எங்க போக. எங்க போனாலும் ஏத்தமும் இறக்கமும் உண்டுலா அண்ணாச்சி.”

“அது சரிதான், ஏறும்போது பைய போறோம், இறங்கும் போதும் ஓட்டமாலா இருக்கு. ஆனா கடைசி ஓட்டம் நின்னுதானே ஆகணும்”

“சரியா சொன்னீரு, ஆளு இளசுட்டேரே, உடம்புக்கு ஏதும் சோமில்லையா”

“அதுலாம் ஒன்னும் இல்லை” எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன் என் நிலை அவ்வளவு பரிதாபகரமான தோற்றத்திலா இருக்கிறது. நினைத்துக்கொண்டே தாடையில் கை வைக்க அது கழுத்தை தாண்டி முள்முள்ளாய் நீண்டு நிற்கும் தாடியை ஒதுக்கி கன்னத்தை தொட்டது, கடந்து போய்க்கொண்டே இருக்கிறேன். எல்லாமுமே, பகற்கனவு போல உறுத்தினாலும் என்னுடைய நிலைக்கு யாரும் பழியேற்க முடியாது. நானே வருத்தி ஏற்றுக்கொண்டது. ஆயினும் சிலகேள்விகள் நிலைகுலைய செய்யுமல்லவா,

“சாப்பாட்டுக்கே வழி இல்லையோ”

இக்கேள்வி மேலும் ஆத்திரத்தை பெருக்குகிறது. இருப்பினும் மென்மையாக பதில் அளித்தேன். காரணம் ‘அது’.

“சோத்துக்கு நிறைய வழி இருக்கு. டெய்லி நாராஜா கோயில்ல மதியம் சாப்பாடு. பஸ் ஸ்டாண்ட்ல ஒரு மணி நேரம் நின்னேனா நூறு ரூவா தேத்திரலாம்.”

ஆற்றங்கரையின் ஓரமாய் நின்ற தென்னம்பிள்ளைகள் காற்றில் அசைந்து இன்பமான ஒலியை பரப்பிக்கொண்டு இருந்தது. உள்ளே சென்ற ‘டோப்’ இறகை போல மனதை மெலிதாக்க, இனி நடப்பவை எல்லாம் எளிதாக முடியும் என்பது போலவிருந்தது. இந்த நாயும், பூனையும் சிலநாட்களாக என்னிடம் தொற்றிக்கொண்டது. வந்த புதிதில் யாரிடமும் இவை உங்கள் பார்வைக்குள் விழுகிறதா? எனக்கேட்க வசைகள் தான் பதிலாய் வந்தது. சரி, அவரோடு வந்த குதிரையும், நரியும் எனக்கு மட்டுமே தெரிந்திருக்கும், அவரே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

“வேற காரியம் என்ன” என்றார் வேம்பில் உடலை சாய்த்தபடி அவர், வேம்பின் அருகே பாறாங்கல் ஒன்று கிடந்தது. ஒருவன் தூக்குமளவுக்கு எடை இருக்கும். என் கண்கள் அதை சட்டென நோக்கியது. பின், மீண்டும் அவரிடம்,

“காரியம் ஒன்னும் இல்லவோய். சட்டுனு திரும்பாதையும். பின்ன ஆத்துக்கு அந்தப்புரம் பாரும். ஒரு கருத்த குண்டன், முறுக்கு மீசைக்காரன், எருமை கூட நிக்கானா”

அவர், தலையை திருப்பி ஆற்றின் மறுப்பக்கம் கண்களை சுழற்றினார். அங்கே எருமைக்கூட்டம் போய்க்கொண்டு இருந்தது. அருகே இவர் சொன்ன லேகையில் ஆள் யாரும் நிற்பதாய் தெரியவில்லை. ‘எவன் நின்னா நமக்கென்ன, இழுத்தாச்சு போவோம்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே,

“நாலஞ்சு எரும தான் நிக்கு அண்ணாச்சி, நா கிளம்புறேன்.இன்னொரு நாளைக்கி பாப்போம்” என்றார்.

“கொஞ்சம் இருவோய். சொல்லத கேளு.” ஆக, குண்டனும் எனக்கு மட்டுமே தெரிகிறார்கள்.

நான், பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவர் எழுந்து இங்கிருந்து நகர ஆரம்பித்தார். உருவத்தில் பெரிதான பூனை, புலி போல நின்றிருந்தது. சட்டென, உறுமி அவர் சட்டை காலரை பிடித்து கண்களால் அமரச்செய்தது. பூனை, இல்லையில்லை இப்போது புலி. தேவைப்படும் நேரம் மாத்திரம் காரியத்தை செய்யும்.

உடனே, ‘சல்ல எடவாடுகிட்டலா மாட்டிகிட்டேன்’ என எண்ணிக்கொண்டே எரிச்சலோடு அமர்ந்தார், ஆமாம் அவர் உதடுகள் முனங்குவது எனக்கு தெரிகிறது. ஆனால், இவரை இங்கே அமர்த்தியாக வேண்டும்

“நாலஞ்சு வாரம் இருக்கும், ஒரு நாலு ஆராம்பலி போயிருந்தேன். அங்க நம்ம கூட்டு உண்டு. தெக்கூறுல வடக்கால போனா ஒரு பெரிய குளம் வரும். பக்கத்துல பழைய இடுகாடு உண்டு. குளம் உமக்கு தெரியும், இடுகாடு தெரிய வாய்ப்பில்லை.” அமர்ந்திருந்தவர் என்னை கவனிக்கிறாரா என்பதை புலி அடிக்கடி உறுதிப்படுத்திக்கொண்டது.

“ஆராம்பலி பழைய நாஞ்சில் நாட்டு வாசலு அப்போ, அங்க ஒரு பிள்ளைமாரு திருவாங்கூருக்கு சிங்கி போட்டு, காவலுக்கு நிக்கேனு உத்தரவு வாங்கிருக்காரு. காவலுக்கு ஆள வச்சுக்கிட்டு, ராசட்ட இருந்து வாராத பாதி ஆட்டைய போட்டுட்டு மீதி காவக்காரனுக்கு போகும். ஆளுக்கு வயசு உண்டு, ரெண்டு மூணு பொண்டாட்டி. சாராயம் கீராயம் எந்த பழக்கமும் கிடையாது. ஆனா பாத்துக்கிடுங்க பிள்ளைக்கு அவருக்கு பொறவு வாரிசு இல்லை” சற்று அமைதியானேன். தூரத்தில் இன்னும் எருமையோடு குண்டன் நிற்பது தெரிந்தது.

“சரி உமக்கு கல்யாணம் ஆகலையே” அவரிடம் கேட்டேன்.

“யோவ், நா இப்போ உள்ள பயக்க சொல்லுகாம்ல நைன்டீஸ் கிட்டுனு. அத மாதிரி”

“அப்போ வயசு முப்பதா உமக்கு கத அடிக்காதையும்” என்றேன் சிரித்தபடி.

“இல்லவோய், அது நாப்பது ஆகு. இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்றேன்”

“சரி, கதையை பாதில விட்டுட்டேன். அவருக்கு பிள்ள இல்லையா. வயசு ஆகியும் அரிப்பு நிக்கல. அப்போ கிழக்கே இருந்து பஞ்சம் பிழைக்க இங்க ஆட்காரு வருவா. அதுல கிளி மாதிரி இருக்கிற பிள்ளைகள தூக்கிருவாரு. பிள்ளையும் இல்லை, அரிப்பும் நிக்கல. கண்டவள்ட்டயும் அவரு குட்டி வளரதுல பிடித்தக்குறவு. நல்ல ஓத்துட்டு வெளிய சொல்லலைனா விட்ருவாரு. இல்ல நா சொன்னமலா குளம், அதுக்கு மறுகரைல பொதச்சருவாரு”

“சண்டாள பாவியாலா இருக்கான், இந்த வெள்ளாள பயக்களே இப்படித்தான். நான்லாம் அரிப்பு எடுத்தா போய் கைல பிடிச்சுட்டு வந்துருவேன். கதம் கதம்” என்று மேலே கதை கேட்க ஆர்வமாய் இருந்தார். புலியும், அவரிடம் இருந்த குதிரை இல்லை சிறுத்துப்போய் இப்போது கழுதையும் அமைதியாய் நின்றது. நாயும் நரியும் எங்கு சென்றதோ இன்னும் காணவில்லை.

“அப்புறம் என்னாச்சு, ஆளு கொஞ்ச நாளுல மெலிஞ்சி போய், பொன்டாட்டிலாம் வேற யாருகூடயோ போய், ஒருநாள் அவரு வீட்டு பக்கமா போனவன் பொண நாத்தம் அடிக்க உள்ள போய் பாத்திருக்கான் ஆளு செத்து அஞ்சு ஆறு நாலு ஆயிருக்கும். இவரு சங்கதி ஊருக்கு தெரியுமே. பயக்க வீட்டோட சவத்தை போட்டு எரிச்சுட்டானுங்க. வீடு இப்போவும் பாக்கலாம் இடிஞ்சு போய் கிடக்கும்”

“ஆளுக்கு வந்தது எய்ட்ஸா இருக்கும். அப்போ உள்ள ஆட்காருக்கு இதுலாம் தெரியாதுலா. ”

“ஆமா, என்ன எழவோ. பின்ன அவரு செத்து கொஞ்ச நாலு கழிச்சு. இன்னொருத்தன் குளத்துக்கு மறுகரைல நிலம் வாங்கி மாங்கா போட்ருக்கான். எழவு அவ்வளவு கசப்பு மாங்கா, நாரு நாரா சவுரி மாங்கா. உரம் கிரம் போட்ருக்கான். ஒன்னும் எடுபடல. அப்புறம் மேற்கே ஒரு மந்திரவாதியை பிடிச்சு, சொக்கரான் எவனோ செய்வினை வச்சுட்டானான்னு பூச போட்ருக்கான். தோப்பு முழுக்க இசக்கி நிக்கா. எல்லாம் அந்த பிள்ளைமாரு ஓத்த பொம்பள. ”

“யோவ், இருட்டிட்டு வேற வருகு. நாம இருக்கிற இடமும் சரியில்ல. நீ வேற இசக்கி மயிறுனு பயம் காட்டாதவோய். ”

“மோண்டுராதா. நா சொன்னேன்ல நாலஞ்சு வாரதுக்கு முன்னாடி போனேன்னு. அப்போதான் ஒரு பய இந்த கதையை சொன்னான். அந்த பிள்ளைமாரு பணமா எதையும் சேக்கலையாம், எல்லாம் பவுனு. சாவதுக்கு முன்னாடி எங்கயோ பொதச்சருக்காரு. ”

“எல்லாத்தயுமா பொதச்சு வச்சுட்டாரா”

“ஆமா, நம்ம பய ஒருத்தன் சொல்லித்தான் நா அரிஞ்சது. ஆராம்பலி நம்ம ஜில்லாவுக்கே டோப்க்கு நடுசென்டரு, அங்கேர்ந்துதான் மொத்த சப்ளை. டோப் வாங்க போய் ரகசியம்லா கிடச்சருக்கு. ”

“அதுக்குன்னு வீட்லயும், குளத்துலயும், இடுக்காட்டுலயும் போய் தோண்டுவீரா. வேற வேலைய பாரும். நேரமாச்சு நா போனும்”

“இருக்கு, குலசேகரத்துல ஒரு மந்திரவாதியா பார்த்தேன். பவுனு இருக்கது இசக்கிக்கு தெரியும். அத சாந்திபடுத்தினா ரகசியம் தெரியும்”

“இந்த காலத்துலயும் நீரு இதுலாம் நம்புகீரே. இதுலாம் பிராடு, காச சீரழிக்காதேயும். மந்திரவாதி பயக்க இப்படித்தான் அலையான் ஊருக்குள்ள”

“அப்போ, இசக்கினு நா சொன்னதுக்கு எதுக்குவே அரண்டேயீரு. எல்லாம் நிசம், நாம கண்டுக்காம போற வர ஒன்னும் புரியாது. நின்னு கவனிச்சா எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும். நீ இருக்க வேப்பமரத்துலே ஒரு இசக்கி உண்டு. சின்னதுல இந்தப்பக்கம் ஒரு பய வெளிக்கி இருக்க வரமாட்டோம். நா அப்போவே சீம, ஒருநாள் வந்துட்டு அதுவும் கருக்கள் நேரத்துல, இங்க வெளிக்கி இருந்துட்டு போறேன். கொஞ்சம் நடந்திருப்பேன். ஓங்கி ஒரு அடி குறுக்குள்ள, எடுத்தேன் வீட்டுக்கு ஓட்டம். நமக்கு நடந்தா அது நிசம், அடுத்தவனுக்கு நடந்தா அது பிராடு. ” நான் சொல்லிமுடிப்பதற்குள் அவர் எழுந்துவிட்டார். அவர் முகத்தில் பயம் அப்பியிருந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு இன்னொரு பொட்டலத்தை வெளியே எடுத்தார். நான் எதிர்ப்பார்க்கவில்லை இன்னொரு டோப் பொட்டலம். நான் சிரிக்க, அவர் “நயிட்க்கு வச்சுருக்கேன். கிளாரா இருக்கு. சிரிக்காதையும் வாரும் இழுப்போம்”.

அவரே, எல்லாவற்றையும் செய்தார். அவரிடம் சிகரெட் இல்லை, கையில் இருந்த பீடியிலே முன்பு போல தேய்த்து சுருட்டி ஆளுக்கு இழுக்க ஆரம்பித்தோம். இப்போது கருத்த குண்டன் இன்னும் அருகே, அவர் தலைமாட்டில் நின்றிருந்தான். புலி முன்பக்க கால்களை நீட்டி பாய்வது போலவிருந்தது. கழுதை படுத்தேவிட்டது.

“ஏதோ மந்திரவாதி வழி இருக்குன்னு சொன்னானே, என்னது”

“இசக்கிய சாந்திபடுத்த நட்டசாம பூச பண்ணனும். இளங்கிடா, சேவலை அறுக்கனும். வேற மை ஒன்னும் கேட்டாரு”

“கண்ணுக்கு வைக்கிற மையா”

“இல்லையா, உமக்கு தெரியுமா. குடுகுடுப்பைக்காரன் பச்சைபிள்ளைக செத்தா நைட் சுடுகாட்டுல கிடையா கிடப்பான். எதுக்கு தெரியுமா. பொணம் எரிக்கும் போது, மெதுவா அதுக்க மூளையை மட்டும் எடுத்து வச்சுப்பான். அதுல செய்ற மைக்கு முன்னாடி பேய்க ஒன்னும் பிடுங்க முடியாது”

“சரி, இதுவும் அதே மாதிரி மையா”

“ஏறத்தாழ ஒரேமாரிதான். ஆனா, இவாளுக்கு சக்தி அதிகம், எல்லாமே மோசமான சாவு, தலைநசுங்கி, எரிச்சு கொன்றுக்காண் சண்டாளப்பய. சக்தி அதிகம். அதுக முன்னாடி நிக்கும் போது, நம்மள அடிச்சர கூடாது. அதுக்கு தான் மை தேவ, அப்புறம் தான் அதுக தேவைய கேட்டு செய்யமுடியும். இசக்கி அடிக்காம நிக்க கன்னி கழியாத ஆம்பள மை வேணும். அதுவும் அஞ்சு ஆம்பளையோடது வேணும்”

“அப்போ, நீரும் இனி சுடுகாட்டுலே கிடையா கிடக்க போறியா” என்று கூறியபடியே சிரித்தார்.

நான் எழுந்து நின்றேன். அவர் பார்வையை எங்கோ திருப்பி இருந்தார். நான் நகர்ந்து பாரங்கல்லுக்கு அருகே குனிந்தேன்.

“கன்னி கழியாத அஞ்சு பொணத்துக்கு எங்க போவீரு. வருஷம் ஆகும். அதுக்குள்ளே இசக்கியே போயிருவா”

நான் நிதானமாய் “இனி நாலுதான் தேவ” என்றபடி கல்லை அவர் தலையில் போட்டேன். புலியின் வாயில் கழுதையின் கழுத்து இருந்தது. எங்கோ சென்ற நாய், ஓநாய் போல திரும்பிவந்தது. அதன் வாய் சிவந்த இரத்தம் படிந்து இருந்தது. கருத்த குண்டனும் அங்கிருந்து நகர, தேவையான ‘அதை’ எடுத்துக்கொண்டு நானும், புலியும், ஓநாயும் சாலையில் ஏறி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். ஆம், இன்னும் வேகமாக, எனக்கு ‘அது’ வேண்டும்.

சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை

வீரபாகு முதலியார் குளித்து முடித்து கிணற்றங்கரையிலிருந்து இடுப்பில் ஈரத் துண்டோடு தோட்டத்துப் பக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். உள் நுழைந்தவுடன் ஒரு பெரிய கூடம் அளவுக்கு இருக்கும் அறையின்( அது அறை அல்ல. ஒரு பெரிய கூடம்தான். ஒரு மூலையில் மாட்டுத் தீவனம் மூட்டை;. ஒரு பக்கம் பெரிய வென்னீர்த்தவலை வைத்து விடுவது மாதிரி முக்கூட்டி அடுப்பு’ இன்னொரு மூலையில் பாத்திரங்கள் என்னவோ பறத்தினாற்போல வைக்கப்பட்டிருந்தது). மேலோரம் உயர்த்தி கட்டியிருக்கும் கொடியிலிருந்து நேற்றுத் தோய்த்துக் காயப் போட்டிருக்கும் வேட்டியை ஒரு கம்பினால் ஏதோ தொரட்டிக் கம்பினால் மாங்காய் பறிப்பது போல எடுத்தார். வெள்ளாவி வைத்தது போல, தும்பைப் பூப் போல வெண்ணிறமாக இருந்த வேட்டியை எடுத்து உதறி இடுப்பில் சுற்றிக் கொண்டு இடது கையை வேட்டிக்குள் நுழைத்து ஈரத் துண்டினை உருவி எடுத்தார். மீண்டும் கிணற்றடிக்குப் போய் பிழிந்து வைத்த வேட்டியோடு, இந்தத் துண்டினையும் ஒரு அலசு அலசி எடுத்து வந்தார். வேட்டியைக் கொசுவி மீண்டும் அதே கொடியில் பறித்த மாங்காயை வைப்பது போல கையில் இருந்த கழியினாலேயே விரித்து விரித்து காயப் போட்டார். கையை கொஞ்ச நேரம் உயர்த்தி வைத்துக் கொண்டே இருந்ததில் தோள்பட்டையும், மணிக்கட்டுப் பக்கமும் வலித்தது. தலையைத் தூக்கியே வைத்திருந்தது, மீண்டும் தலை அதன் இடைத்திற்கு வந்தவுடன் ஒரு மாதிரி கிர் ரென்று சுற்றியது. மெதுவாக சுவற்றைப் பிடித்தாவாறு அந்த பெரிய தொட்டிகிட்டைத் தாண்டி, நிலா முற்றத்தைத் தாண்டி, கூடத்திற்கு வந்தார்.

கூடத்திற்குள் அடியெடுத்து வைத்தார் அவர். வலது பக்கம் திரும்பி சுவாமி அலமாரி முன் நின்று, இரண்டு கைகளையும் தூக்கி ஒரு கும்பிடு போட்டு, கண் மூடி நின்றார். எண்பத்தைந்து வயதுக்கும் மூப்பு தெரியாத தேகக் கட்டு. விபூதிக் கப்பரையில் இருந்து விபூதி எடுத்து, பஞ்சபாத்திரத்திலிருந்து கொஞ்சம் நீர் விட்டுக் குழைத்து நெற்றியிலும், இரண்டு கைகளிலும், நெஞ்சின் குறுக்கேயும் பட்டைகளை போட்டுக் கொண்டார். ஆழி மழைக் கண்ணனாய் கறுத்த உடம்பில், காய்ந்தவுடன் விபூதிப் பட்டைகள் பளிச்செனத் தெரிந்தன.. இது மாலையில் அவர் முகம் கழுவுவது வரை அப்படியே இருக்கும். மூன்று தோப்புக்கரணம் போட்டார்; இரண்டு ஊதுபத்தியை எடுத்து ஏற்றி, ” ஐந்து கரத்தனை” சொல்லி முடிக்கும்போது ஊதுபத்தியை எல்லாப் படங்களையும் சுற்றி, ”ஓம்” என்று எழுதுவது போல் சுற்றி முடித்து ஊதுபத்தி ஸ்டேண்ட்டில் குத்தினார். இவர் போட்ட ஊதுபத்தி “ஓம்” வளையத்தில் அப்படியே மயிலோடு முருகன் வந்து நின்ற மாதிரி இருந்தது. ”துதிப்போர்க்கு வல்வினை போம்” என்று கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தார். அப்புறம், “ பால் நினைந்தூட்டும்” ஆரம்பிப்பார். அது முடித்து, “கலையாத கல்வியும்” தொடர்ந்தது.. அதைத் தொடர்ந்து “ ஒருமையுடன் உனது திருவடி நினைக்கினற உத்தமர் தன் உறவு வேண்டும்” எனத் தொடர்ந்தார். இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டே, ஏற்கனவே மருமகள் செங்கமலம் பறித்து வைத்திருந்த அரளி, செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களை ஒவ்வொரு படத்திற்கும் வைத்து முடித்தார். கடைசியில், நெருக்கித் தொடுத்திருக்கும், முல்லைச் சரத்தை எடுத்து, தங்க ஃப்ரேம் போட்ட சதுரத்திற்குள் மங்கலமாய்ச் சிரிக்கும் மங்கலட்சுமி படத்திற்குச் சாற்றினார். கண்ணில் நீர் துளிர்த்தது. “என்ன இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டேயேடி பாவி மனுஷி” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். அவ்வளவுதான், பூஜை முடிந்தது.

மாமனாரின் “ஒருமையுடன்” காதில் விழுந்தவுடனேயே செங்கமலம் சிற்றுண்டியைத் தயாராக கூடத்தில் இருக்கும் உணவு மேசையில் கொண்டு வைத்து விடுவாள். நாற்காலியை பின்னுக்கு இழுக்கும் சத்தம் வந்தவுடன், அவள் வந்து அவருக்குப் பரிமாறுவாள். மூன்று இட்டிலிகளோ, இரண்டு தோசைகளோ சாப்பிட்டு, தொண்டைக்கு இதமாக சின்னச் செம்பில் வென்னீர் குடித்து விட்டு, அன்றைய நாளிதழை எடுத்துக் கொண்டு, வெளித்திண்ணையில் வந்து இரண்டு பக்கமும், கையை நன்றாக ஊன்றிக் கொள்ள வசதியாக இருக்கும் மர நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வார். அவர் வந்து உட்கார்ந்தால் மணி 9.25.

முதலியார் திண்ணையில் வந்து உட்காருவார். செய்தித்தாளைப் பார்ப்பார். நடு நடுவே தலையை நிமிர்த்தி சாலையில் போவோர் வருவோரையும் பார்த்துக் கொள்வார். அவர்கள் வீடு, கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டி போகும் பிரதான சாலையில் உள்ளது. இரண்டு நகருங்களுக்குமிடையே வழி நெடுக அழகான பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள் நிறைந்த கிராமங்கள். வியாபாரிகள், நரிமேட்டு ஜோஸ்யர்களைப் பார்க்கச் செல்பவர்கள், பாலூர் பண்ணைக்கு விதையோ, மரக் கன்றுகளோ வாங்கச் செல்பவர்கள், காய்கறிகள் அப்படியே புதிதாகக் கிடைக்கிறதே என்று வாங்க வருபவர்கள், அலுவலகம் செல்பவர்கள், அக்கம் பக்கத்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் செல்லும் மாணவ மாணவிகள் என எப்போதும் சாலை சுறுசுறுப்பாகவே இருக்கும். அதனால், வீரபாகு முதலியாருக்கு நேரம் போவதே தெரியாது.

அன்று வீரபாகு முதலியார் திண்ணையில் வந்து அமர்ந்து நிமிரும்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஆணும், பெண்ணும் போனதைப் பார்த்தார். அந்தப் பெண், வழக்கமாக முன்னால் உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஆணின் தோளையோ, தொடையையோ பிடித்துக் கொள்ளவில்லை. என்னவோ, பேருந்தில் உட்கார்ந்து செல்பவள் மாதிரி, மடியில் கைப்பையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். தன் வீட்டு வாசலை அந்த வண்டி கடக்கும் அந்த ஒரு நிமிடத்தில் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவருக்குக் கண்கள் மலர்ந்தன. ”ஐயோ….அப்படியே மங்கா மாதிரியே இருக்கா” என்று நினைத்துக் கொண்டார். இன்னொரு தரம் பார்க்க மாட்டோமா என்று நினைக்கும்போது வண்டி அவர் வீட்டிலிருந்து ஐந்தாறு வீடுகள் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அதன் பின், முதலியாருக்கு செய்திகளில் மனம் செல்லவில்லை.

மங்கலட்சுமி போய்ச் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஓடியே விட்டன. ”யாராரோ என்கேர்ந்தெல்லாமோ திருக்கடையூர் வந்து அறுபது, எண்பதும் செஞ்சிக்கிட்டுப் போறாங்க; இந்தா நம்ப இவ்வளவு கிட்ட இருந்துக்கிட்டு செஞ்சுக்காட்டா எப்படி” என்று சிதம்பரத்தில் இருக்கும் மச்சினிதான் எண்பதாம் கல்யாணம் செய்து கொள்ளத் தூண்டினாள். அறுபதாம் கல்யாணம் செய்து கொண்டார்கள்தான். அப்போது அலுவலக நண்பர்கள் தூண்டுதலினால் செய்து கொண்டார். அவருக்கென்னவோ அதிலெல்லாம் ரொம்ப ஈடுபாடு இல்லை. மங்காதான் எல்லாத்துக்கும் ஆசைப்படுவாள் அவளுக்கு எப்போதும் குழந்தைகள் மாதிரி மகிழ்ச்சிதான். தன்னிடம் அவள் அதிகமாகக் கோபப் பட்டது கூட இல்லை. தான் எது சொன்னாலும் முதலில் ஒப்புக் கொள்வாள். அதில் அவளுக்கு வேறு யோசனை இருந்தால் அதைப் பக்குவமாக, அப்புறம்தான் சொல்வாள். அவளுக்கு எதுவும் தெரியாத மாதிரி இருக்கும். ஆனால், அவள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். அது மாதிரி, மனுஷாளுடன் பழக அவளை மதிரி முடியாது. வாசலில் வரும் பூக்காரியிடமும் சரி, அக்கம் பக்கம் வீடுகளிலும் சரி, தன் வீட்டு சொந்தம், அவள் வீட்டு சொந்தமாகட்டும், நண்பர்களாகட்டும் யாருடனும் அவளுக்குப் பகையில்லை. எப்பப் பார்த்தாலும் “மனுஷா வேணும் காலத்துக்கும். பணம் வரும், போகும், மனுஷாள் கிடைப்பாங்களா”: என்று சொல்லிக் கொண்டே .யிருப்பாள் அது மாதிரி எந்த விசேஷங்களூக்கு யார் வீட்டுக்குப் போனாலும் சரி, உடனே, அது என்னவோ தன் வீட்டு விசேஷம் மாதிரி ஒன்றி விடுவாள். அவளே பந்தி பரிமாறுவாள். அவர்கள் வீட்டுக்கு என்ன உறவு முறையோ அதை வைத்தே இவளும் அவர்களை விளிப்பாள். அந்தக் குடும்பத்தினர் யாரும் இவளை மறக்க முடியாதபடிச் செய்து விடுவாள்.

தான் கூட அவள் என்னவோ அதீதமாக நடந்து கொள்கிறாளோ எனப் பலமுறை நினைத்ததுண்டு. ஆனால். அவள் இறந்து போய், கடந்து விட்ட இந்த ஐந்து வருஷத்தில், யார் வீட்டு விசேஷங்களூக்குப் போனாலும், அவர்கள் மங்காவை ஞாபகப்படுத்துவது இருக்கட்டும், இவருக்கே மங்கா இல்லாத அந்த விசேஷ வீடு வெறிச் சென இருப்பது மாதிரி இருக்கும்.

நாற்காலியில் உட்கார்ந்தபடியே இப்படி யோசனைகளில் மூழ்கிப் போனவரின் கண்ணோரம் கசிந்திருந்தது. வாசலில் எரிவாயு உருளை கொண்டு வருபவர்களின் வண்டிச் சத்தமும், உருளைகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டும், உருண்டு கொண்டும் வருகிற ஓசையும், “சார்…கேஸ்” என்ற குரலும்தான் அவரது நினைவுகளை அறுத்தன. வீட்டினுள்ளே திரும்பிப் பார்த்தார். அதற்குள் மருமகளே கையில் பதிவேட்டுப் புத்தகத்துடன் வந்து விட்டாள். உருளையை உருட்டி உள்ளே வைத்து விட்டு அதை வைத்தவன் வெளியேறிப் போனான். வீரபாகுவும் எழுந்து உள்ளே சென்றார். தன்னுடைய அறையில் போய் ஈசிசேரில் சாய்ந்து கொண்டார். அங்கும் மங்கா புகைப்படத்தில் சிரித்தாள். என்னவோ, இன்று காலை, அந்த இருசக்கர வாகனத்தில் கடந்து போன அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்காவின் நினைவு அதிகமாகத் தோன்றுகிறது. மருமகளுக்கு வேலைகள் ஆகி விட்டன போலும். தொலைக்காட்சியில் அவள் தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டாள். மகன் சாப்பிட வர இரண்டு மணி ஆகும்.

மங்காவுக்கும் தனக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். ஏதோ தூரத்து சொந்தம். வீரபாகுவுக்கு இரண்டு அக்காக்கள் மூன்று தங்கைகள். எல்லோர்க்கும் இவர் செல்ல சகோதரன். பாலூரில் தாத்தா பார்த்திருந்த விதைப்பாடு கொஞ்சமும், ஒரு வீடும் இருந்தது. அப்பா, பாலூர் காய்கறிப் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இரண்டு அக்காவுக்கும், ஒரு தங்கைக்கும் திருமணம் முடித்த பிறகு இறந்து போனார். மற்ற இரண்டு தங்கைகளின் திருமணத்தை இவர்தான் செய்து முடித்தார். அப்பா இறந்துபோனவுடன், இவருக்கும் அந்தப் பண்ணையிலேயே வேலை கிடைத்தது. வயதும் முப்பத்தந்தை நெருங்கியது. அப்போதுதான் பெரிய அக்கா மூலமாக கடலூர் கரும்புப்பண்ணையில் வேலை பார்க்கும் தண்டபாணி என்வருக்கு பெண் இருக்கும் விஷயம் தெரிய வந்தது. மங்காவின் கரம் பிடித்தார். பாலூர் வாசம். வந்த கொஞ்ச நாட்களிலேயே மங்கா இந்த வீட்டு நடைமுறைகளைத் தெரிந்து கொண்டதோடு, வயல், விதைப்பாடு பற்றியும் தெரிந்து கொண்டாள். பண்ணை அலுவலக வேலைகளோடு, வீரபாகுவும் வீட்டு விதைப்பாடு வேலைகளையும் கவனித்துக் கொண்டார். மங்கா வந்த நேரமோ என்னவோ, தொட்டதெல்லாம் துலங்கிற்று. கொய்யா போட்டாலும், நிலக்கடலை போட்டாலும், மிளகாய் போட்டாலும் எல்லாம் நல்ல விளைச்சல் கொடுத்தன. மங்கா பக்குவமாக சொந்தக் காரர்களுக்கும் அள்ளிக் கொடுத்தாள். தன் குடும்பத்துக்கும் லாபம் வருவது மாதிரி பொருட்களை நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்தாள்.

தெருவில் யாரோ மாடு விரட்டிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது. வளையல் விற்பவர் “ கண்ணாடி வளையல்” “கண்ணாடி வளையல்” என்று விட்டு விட்டு ராகமாகச் சொல்லியபடியே தள்ளு வண்டியை உருட்டும் சத்தம் கேட்டது. கண்ணை மூடிக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்த வீரபாகு கண்ணைத் திறந்து பார்த்தார். கடிகாரம் சரியாக பனிரெண்டு மணியைக் காட்டியது. கடிகாரத்தின், “சிக்’ “சிக்” என்ற சத்தம் மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மருமகள் செங்கமலம் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு சமையற்கட்டுக்குப் போயிருப்பாள் போல. அருகிலிருக்கும் மேசை மீதிருந்த செம்பிலிருந்து அதன் மூடி விலக்கி, பக்கதிலிருந்த தம்ளரில் விட்டுத் தண்ணீர் குடித்தார்.

மூடி வைத்து விட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்துத்தான் வெற்றிவேல் பிறந்தான். அதற்குள் எத்தனை பேச்சுகள், சந்தேகங்கள். எல்லாவற்றையும் மங்கா சகித்துக் கொண்டாள். தான் தளர்ந்த போது கூட “எப்பவும் நல்லதையே நினைங்க..நடக்கும், நடக்கும்னு நாம்ப நினைக்க நினைக்கத்தான் நல்லது நடக்கும். நம்ப எண்ணங்களுக்கு அப்பிடி ஒரு வலிமை இருக்கு தெரியுமா” அப்படினு சமாதானப்படுத்துவா. அவ எவ்ள நல்லவ. எதிலுமே அவளுக்குக் குத்தம் கண்டுபிடிக்கத் தெரியாது. யாரையும் கெட்டவங்கனு அவ ஒரு நாளும் சொன்னது கிடையாது. யார் என்ன சொன்னாலும்” ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி” அப்படினு சொல்லிடுவா. மீண்டும் வீரபாகு முதலியாருக்கு ரொம்ப அழுகையாக வந்தது. “ஏண்டி….மங்கா…என்ன விட்டுட்டுப் போன” என்று மனதிற்குள் நினைத்து கண்ணீர் சொரிந்தார். குளிச்சிட்டு வந்த ஈரம் காயறதுக்குள்ள காபியக் குடிச்சுட்டு, ஊஞ்சல்ல உட்கார்ந்தவ அப்படியே போயிட்டியே…மகராசி….ஒரு வார்த்தை என்கிட்ட பேசலையே…. ஈசி சேரில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

காலையில் அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்துதான் இன்று மங்கா நினைவு அதிகமாக வருகிறது. அவள் முகம் அப்படியே மங்கா முகம் மாதிரியே இருந்தது. அவள் எங்கிருந்து எங்கு போகிறாள்? மீண்டும் இந்த வழி வருவாளா? அப்படியே அங்கு தங்குபவளா? இல்லாவிட்டால், நெல்லிக்குப்பம் வழியாக மீண்டும் கடலூர் சென்று விடுவாளா? மீண்டும் அவளைப் பார்த்தால் நன்றாக இருக்கும்.

வெற்றிவேல் பிறந்தபோது இங்கு பாலூரிலேயே இருந்தோம். அவனைப் படிக்க வைக்க வேண்டும் எனும்போது, கடலூர்தான் சரிப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மஞ்சக்குப்பத்தில் வீடு பார்த்து, மங்காவும், வெற்றிவேலும் அங்கிருப்பது என்றும், தான் மட்டும் வாரத்திற்கு இருமுறை கடலூர் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மங்கா புளிக் குழம்பு, பொடிகள், இட்டிலி மாவு எல்லாம் செய்து தருவாள். வீரபாகு பாலூருக்கும், கடலூருக்கும் அலைந்து கொண்டிருந்தார். வெற்றிவேல் நன்றாகப் படித்தான். அவன் விவசாயம் சார்ந்தே வளர்ந்ததால் அதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றான். முடித்து விட்டு வந்தவுடன் அவன் கிராமத்திலிருந்து விவசாயம் பார்க்கப் போவதாக தீர்மானமாகச் சொல்லி விட்டான். படித்த படிப்பையும், அனுபவத்தையும் இணைத்தான். விவசாயம் பெருக்கினான். உரக்கடை வைத்தான். திருமாணிக்குழியிலிருந்து திருவதிகை வரை விதைப்பாடு வைத்திருக்கும் அத்தனை ரெட்டியார்களும் இவனிடம் வந்து ஆலோசனை கேட்டார்கள். செழித்தார்கள். வீரபாகுவுக்கும், மங்கலட்சுமிக்கும் அளவிட முடியாத சந்தோஷம். அவனுக்கு புவனகிரியிலிருந்து பெண் எடுத்தார்கள். அவர்களுக்குத் தங்களைப் போல தாமதமாகாமல் திருமணம் முடிந்த அடுத்த வருடமே ராஜா பிறந்தான். இப்போது அவன் சென்னையில் கல்லூரியில் படிக்கிறான்.

வீரபாகு எழுந்து தோட்டத்துப் பக்கம் போய் சிறுநீர் கழித்து வந்தார். சமையற்கட்டைத் தாண்டும்போது செங்கமலம் அப்பளம் பொரிக்கும் வாசனை வந்தது. இப்போது செங்கமலம் இவரைச் சாப்பிடக் கூப்பிடுவாள். வெற்றிக்கு அவன் வரும் வரை தானும் காத்துக் கொண்டிருந்தால் கோபம் வரும்.” ஏம்ப்பா சாப்பிடாம இருக்கீங்க. நான் வர முன்னப்பின்ன ஆகும். நீங்க அது வரயிலும் சாப்பிடாம இருக்க முடியுமா” என்று கேட்பான். செங்கமலத்திடம் அப்பாவிற்கு வேளையோடு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். அதனால், வீரபாகு, தான் மட்டும் முன்னாலேயே சாப்பிட்டு விடுவார். சாப்பிட்டு, மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாரானால், ஒரு தூக்கம் போடுவார். அப்புறம் நாலு மணி வாக்கில்தான் எழுந்திருப்பார். அதிகம் பேசவே மாட்டார்.

அன்று மதிய உறக்கத்திலும் கனவு வந்தது. மங்காதான். பைக்கில் இருவரும் உல்லாசமாக பாலூரிலிருந்து கடலூர் கடற்கரை வரை போகிறார்கள். கடற்கரையில் மணலில் அம்ர்கிறார்கள். மங்கா அலையில் கால் நனைக்க வேண்டும் என்று அழைக்கிறாள். இவருக்கோ அது பிடிக்காது. பிடிக்காது என்றால் கால் எல்லாம் நனைந்து, மீண்டும் மணல் ஒட்டிக் கொள்ளுமே என என்னவோ ஒரு விருப்பமின்மை. மங்கா குழந்தை மாதிரி புடவையை முட்டி வரை தூக்கிக் கொண்டு அலையில் நிற்கிறாள். மொத்தப் பல்லும் தெரியும்படி சிரித்தபடியே களிக்கிறாள். மீண்டும் கரைக்கு வந்து தன்னோடு ஒட்டி உட்கார்ந்து கொண்டு, பேசுகிறாள். என்ன சொல்கிறாள்?

’ இப்டியே நம்ப ரெண்டு பேரும் கடசி வரக்கும் சந்தோசமா இருக்கணும்.நீங்க என் கூடவே இருக்கணும்ங்க கடசி வரைக்கும்.”

“சீ…என்ன பேச்சு இது. நம்ப ரெண்டு பேரும் ஜாலியா பைக்குல பீச்சுக்கு வந்திருக்கோம். என்ன பேசற நீ? அவள் கையைப் பிடித்துக் கொண்டார். மல்லிகைப் பூ விற்கும் சிறுமி ஒருத்தி பக்கத்தில் வந்தாள். அவளிடம் இரண்டு முழம் தேவணாம்பட்டினம் மல்லி வாங்கிக் கொடுத்தார். அப்பா…என்ன மணம்….மூச்சை இழுத்தார். மல்லிகை வாசனை. அடித்தது. கண்ணை விழித்துப் பார்த்தார். வாசலில் செங்கமலம் பூ வாங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. வெற்றி வந்து சாப்பிட்டுச் சென்று விட்டான் போல. மணியை பார்த்தார். 4 30 என்று காட்டியது. எழுந்து, தோட்டத்துப் பக்கம் போய் வந்தார். செங்கமலம் தேநீரும், ஒரு தட்டில் கொஞ்சம் ஓமப் பொடியும் கொண்டு வந்து வைத்தாள். சாப்பிட்டு, காலையில் படிக்க விட்ட செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வாசலில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். மாலை நேர சம்சா, பஜ்ஜி வியாபாரங்கள், பூக்காரிகள், பள்ளி விட்டு பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக வீடு திரும்பும் மாணவர்கள்.

ஹா….காலையில் பண்ருட்டி போன அந்தப் பெண்…அதோ…அவர்கள் வண்டி வந்து விட்டது. அவள் முக தரிசனம்…ஒரு விநாடி இருக்குமா..ஒரு நிமிஷம் இருக்குமா…பளிச்….மின்னல் போல மறைந்து போனாள். மனசுக்குள் உற்சாகம் பெருக்கெடுத்து வந்தது. கொஞ்ச நேரம் நடக்கலாம் போல இருந்தது. மெல்ல கடை வீதி வரை நடந்து விட்டுத் திரும்பினார். அன்று நல்ல உறக்கம் வந்தது.

மறு நாள்…… இன்று அவள் வருவாளா எனக் காத்திருக்க ஆரம்பித்தார். சரியாக 9 30க்கு வாசலில் வந்து அமர்ந்தார். அவள் வந்தாள். மாலையும் அவள் திரும்பினாள். ஒரு நிமிட தரிசனம்தான்.மனசெல்லாம் பொங்கியது. இரண்டு மாதங்களாக வீரபாகு உற்சாகத்தில் மிதந்தார். செங்கமலம், வெற்றிவேலிடம் ஒரு நாள் சொன்னாள் .” மாமா இப்ப ரெண்டு மாசமா ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி இருக்கு. நல்ல சாப்புடறாங்க” .

வீரபாகுவுக்குக் காலையில் ஒன்பது மணியாகி விட்டால், இப்போது அவள் சுந்தரவாண்டி தாண்டியிருப்பாளா, வானமாதேவி வந்திருப்பாளா, என்று மனசு அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மாலையிலோ திருவதிகை தாண்டியிருப்பாளா, நரிமேடு வந்திருப்பாளா, எழுமெடு வந்திருப்பாளா என் மனம் தவிக்க ஆரம்பித்தது. அந்த ஒரு நிமிட தரிசனத்திற்காகக் காத்துக் கிடக்க ஆரம்பித்தார். மழை வரும் மாதிரி இருந்த ஒரு நாளில், அடடா…அவள் நனையாமல் இருக்க வேண்டுமே என கவலைப்பட்டார். மாலையில் மழை வந்து விட்டால், அவர்கள் நம் வீட்டுத் திண்ணையில் ஒதுங்க நேர்ந்தால், அவர்களுக்கு செங்கமலத்தை காபி தரச் சொல்ல வேண்டும். அவள் முகத்தை அருகிருந்து பார்க்க வேண்டும்.

இரண்டு மாதமாக போகும்போதும், வரும்போதும் பார்க்கிறாரே தவிர அவளைப்பார்த்து ஒரு புன்னகை கூடப் பூத்தது கிடையாது. ஆனால், அந்தச் சனிக்கிழமை மாலை அவள் தன் வீட்டைக் கடக்கும்போது அவளைப் பார்த்து சிரித்தார். அவளும் சிரித்துக் கையசைத்தாள். அவருக்கு மனசெல்லாம் சந்தோஷம் பொங்கிப் பிரவகித்தது.

அன்று இரவு மகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவளைப் பற்றிச் சொன்னார். அவர்கள் அலுவலகம் செல்பவர்கள்தான் என்றும், எனவே ஞாயிறு வர மாட்டார்கள் எனவும், திங்கள் கிழமை மாலை அவர்கள் தங்கள் வீட்டைக் கடக்கும்போது அவர்களை நிறுத்தி, கொய்யாப் பழமும், கடலைக்காயும் தர வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்.

ஞாயிறு காலை செய்தித்தாள் பார்த்த பிறகு, தன் அறையில் போய் ஈசி சேரில் சாய்ந்து கொண்டவர் கண்ணை மூடியிருந்தார். ஒரு முறை மங்கலட்சுமியின் படத்தை கண் விழித்துப் பார்த்தார். மங்கலட்சுமி, நேற்று அவள் கையசைத்தது போல் அசைத்த மாதிரி இருந்தது. செங்கமலம், மாமனார் சாப்பிட உள்ளே வரவில்லையே எனப் பார்த்தாள். அவர் அறையில் போய் கூப்பிட்டு வரச் சென்றாள்.

திங்கள் கிழமை அவனும். அவளும் வந்து கொண்டிருந்தார்கள். பாலூர் கடை வீதியில் பெரிய தட்டி வைத்திருந்தது. அவள் பார்த்தாள். அதில் வீரபாகு பட்டை பட்டையாக திருநீறு பூசிய வடிவில் சிரித்திருந்தார். ” ஐயோ…இந்தப் பெரியவரா? “ சனிக்கிழமை கூட பார்த்தோமே” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். கடைவீதி தாண்டி, வீரபாகு வீடு நெருங்கும்போது, போடப்பட்டிருந்த ஷாமியானாவும், கிடந்த நீல நாற்காலிகளும், மரண வீட்டின் லட்சணங்களைச் சொன்னது. ஒரு கறுப்பு நாய் குறுக்கே வந்தது. வண்டியின் ஒலிப்பான் சத்தம் கேட்டு திண்ணையில் நீர்மாலைக்கு மண்குடம் தூக்கி நின்றிருந்த வெற்றிவேல் பார்வையைத் திருப்பினான். அதில் உட்கார்ந்திருந்த பெண் அவன் அம்மா மங்கலட்சுமியின் சாயலில் இருந்தாள்.

அது வரை அழாமல் இறுக்கமாய் இருந்தவன் அழ ஆரம்பித்தான்.

இழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை

“இன்னா இப்பந்தான் போறான்” என்றார் அவர்.

ஆள் தெரியுமளவுக்கு இருட்டு கவ்வியிருந்தது. நான் அவர் கைக்காட்டிய திசையைப் பார்த்தேன். இரண்டு ஆள் செல்லும் அளவு அகலமான ஒரு சிறிய சந்து.அதன் இரண்டு பக்கமும் உயரமான கல்லாலான மதில் சுவர். கடைசியில் ஒரே ஒரு வீடு. வீட்டின் முகப்பில் ஒரு குழல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.அதன் வெளிச்சம் சற்றும் இந்த சந்திற்குள் தெரியவில்லை.நான் ஆவேசமாக சந்திற்குள் ஓடினேன்.இரண்டு எட்டு வைப்பதற்குள் அவனைப் பார்த்துவிட்டேன்.

“நின்னுல தாயோளி” என்று கத்தியவாறு சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினேன்.ஆனால் நான் கத்தியது தவறென்று உடனே உணர்ந்துவிட்டேன்.நான் கத்தியை அவன் வயிற்றைப் பார்த்து சொருகவும் அவன் சட்டென்று விலகிவிட்டான்.அவன் போட்டிருந்த பனியனைக் கிழித்தது கத்தி.அவன் சுதாரித்து தன் விரிந்த தோளால் என்னை முட்டித்தள்ளினான்.நான் தடுமாறி தலை தரையிலடிக்க கீழே விழுந்தேன். “லே” என கத்தியவாறு அவன் என் இரு கால்களையும் அதன் முட்டிகளில் பிடித்து என்னைத் தூக்கி மதில் சுவரில் அடித்தான்.என் கையிலிருந்த கத்தி தவறி விழுந்தது.நான் தரையில் உருண்டு கத்தியை எடுக்க முயன்றேன்.அவன் தன் கால்களால் என் கையை மிதித்து தரையில் வைத்து தேய்த்தான்.நான் எழும்ப முயற்சித்தப்பொழுது மீண்டும் என் நெஞ்சில் மிதித்ததை நான் கைகளால் தடுத்தேன்.மீண்டும் காலை ஓங்கியவன் “குடிகாரத் தாயோழி சவுட்டி கொன்னுபோடுவேன், பாத்து எழும்பி ஓடிரு” என்றபடி போனான்.நான் என் கால்களை இழுத்தவாறு அந்த முடுக்கைவிட்டு வெளியே வந்தேன்.

எல் எம் மருத்துவமனையில் நான் லேசாக கண்விழித்தப் பொழுது சிறீதரன் அருகில் இருந்தான். நான் அவனைப் பார்த்து சிரித்தேன்.கைகள் அசைக்கமுடியாதபடி வலியிலிருந்தன.

“என்ன மயித்துக்குல அவன குத்த போனா நீ, உன்னால அவன குத்த முடியுமால, அவன் கபடி ப்ளேயர்லா இரண்டே அடிதான் நீ இங்க வந்து கெடக்கா”

நான் மீண்டும் சிரித்தேன்.

“சிரிக்காதல, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இப்பம் எனக்குதான கேவலம்”

“அப்பம் என்னாலதான் உனக்கு கேவலமா”.

“சரில விட்டுத்தள்ளு”

“அவன் செய்தது சரியால ஒனக்கு மெட்ராஸ்ல வெளயாடுயதுக்கு கெடச்ச வாய்ப்ப தட்டி பறிச்சாம்லா”

“மெட்ராஸ் எங்க நிலாவுலையா இருக்கு, இன்னா இங்கதான இருக்கு இந்த மேட்ச் இல்லணா வேற ஒரு மேட்ச், விட்டுத்தள்ளு”

அடுத்தவாரமே சென்னை அருகே இருந்த கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் அவனை விளையாடச் சொன்னார் கண்ணன் அண்ணன்.

நான் காலையில் வீட்டில் படுத்திருக்கும் பொழுது வெளியே செருப்பை கழற்றும் சத்தம் கேட்டது.சிறீதரன் தான். நான் நடுவில் பெரிய ஓட்டை விழுந்த நார் கட்டிலில் ஓட்டையை கோரைப் பாய் கொண்டு அடைத்து அதில் படுத்திருந்தேன். இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு. அப்பாவும் நானும் தான். அம்மா இறந்து வெகுநாள் ஆகிவிட்டது. அருகிலிருக்கும் கழிக்கரை க்ளப்பில் காலை நேரப்பயிற்சியை முடித்துவிட்டு வருகிறான்.இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளில் எனக்கு மிக விருப்பமான இரண்டு மணிநேரம் என்பது சிறீதரன் காலையிலும் மாலையிலும் பயிற்சி முடித்துவிட்டு என்னுடன் வந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரம்தான்.அவன் வெளியே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

“லே நரம்பா உள்ள வால”

அது நான் அவனைச் சிறு வயதுமுதலே கூப்பிடும் பட்டப்பெயர். அவன் சிறு வயதில் ஒரு நரம்பளவே உடல் தடிமன் இருப்பான். அவனை நான் நரம்பன் எனக் கூப்பிடுவதற்கு அவன் எப்பொழுதாவது எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு.நான் உடனே அவனும் நானும் சிறுவயதில் என் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பிப்பேன்.அவன் சிரித்துவிடுவான்.நரம்பன் உள்ளே வந்து எண்ணை வழிந்துகொண்டிருக்கும் எங்கள் வீட்டிலிருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்தான். நான் மீண்டும் மீண்டும் என் மனதில் ஓட்டிப் பார்க்கும் அந்த மணம்.நரம்பனின் கால்களில் செம்மண்தரையில் விளையாடிய பொழுது ஏறிய மணலும் அவன் முட்டியில் ஏற்பட்ட காயத்தில் வடியும் ரத்தமும் சேர்ந்து வரும் மணம்.அவன் வந்து செல்லும் அந்த ஒரு மணிநேரமும் நான் அதை ரசித்துக்கிடப்பேன்.ஒரு மனித உடல் ஏற்படுத்த இயலும் உச்சக்கட்ட சாத்தியமுள்ள மணம் அது என நான் அறிவேன். ஏனெனில் மனித உடலின் மிக மோசமான நாற்றத்தை நான் மிக அணுக்கமாக அறிவேன். என் உடலிலே அது வீசும். சாயுங்காலம் பெரும்பாலும் நரம்பன் வீட்டிற்கு வந்துவிட்டு போனதும் நான் வேகமாக டாஸ்மாக்கிற்கு சென்று போட்டுவிட்டு வருவேன். வேறு யாரிடமும் பேசுவதில்லை. நேராகச் சென்று குடித்தவிட்டு வந்து முன் அறையில் படுத்துக்கொள்வேன். அப்பா சில நாட்கள் ஏதேனும் செய்து வைத்திருப்பார். அவர் சமைத்திருக்கிறார் என்பதை நான் வீட்டிற்குள் நுழையும் பொழுதே வரும் கரிந்த வாடையைக் கொண்டு அறிந்துகொள்வேன்.அப்படி இல்லையென்றால் பேசாமல் படுத்துவிடுவது வழக்கம். அவர் உள் அறையில் குடித்துவிட்டு படுத்துக்கொள்வார். நான் கட்டிலில் படுத்தவுடன் எனக்கு குமட்டும். நான் ஒவ்வொரு நொடியும் வெறுக்கும் அந்த வாடை, அது என் உடலில் இருந்து வீசும். நான் என் உடலை வெறுப்பேன்.குடித்து குடித்து நடுங்குவதை மட்டுமே செயலாகச் செய்யும் என் கைகள்.சன்னலின் வழியாக வந்து வீழும் நிலவொளியில் தெரியும் நரம்பனின் புகைப்படத்தைப் பார்ப்பேன்.அதில் நரம்பன் என் அம்மாவின் கைகளில் இருப்பான். மிக மிக ஒல்லியாக. நான் நல்ல தடிமனான கைகளுடன் நெஞ்சை திமிற்றியப்படி அந்த கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் தெரிவேன். என் கைகளை அந்த இளம் இருட்டில் பார்ப்பேன். அந்த திமிறிய சிறிய கைகளில் அவை வளர்ந்தவுடன் தேக்கிவைக்கப்போகும் ஆற்றல் உடைந்து தெறிக்க ஆயத்தமாக இருக்கும். என் மனம் உற்சாகம் கொள்ளும்.கட்டிலில் படுத்தபடி கைகால்களை உரசிக்கொள்வேன். பின் சட்டென குமட்டி வாந்தி எடுத்துவிடுவேன். அப்பா உள்ளிருந்து கத்துவார்.

“லேல வெளிய பேய் கக்கபுடாதா”

நான் பெரும்பாலும் அப்பாவிற்கு பதில் எதுவும் சொல்லவதில்லை. அப்படியே தலையை தொங்க விட்டவாறு உறக்கம். நரம்பன் காலையில் வந்து சிலநேரம் வீட்டைக் கழுவி விட்டுச் செல்வான்.அவன் அருவருப்பெல்லாம் பார்ப்பதில்லை.மிகச்சாதாரணமான ஒரு செயல்பாடாக அது இருக்கும்.

உள்ளே வந்த நரம்பன் “லே நான் அடுத்தவாரம் மெட்ராஸுக்கு போறன் கேட்டியா” என்றான்.

“பொய் சொல்லாதல”

“உண்மையாட்டுதான் சொல்லுகம்ல ,விஜயராஜா காலேஜ்ல மேட்ச்”

“அடிபொழில மக்கா, ஒனக்க ஒடம்பு கபடி வெளயாடுகதுக்கு உள்ள உடம்பாக்கும், கபடிக்கே உண்டான அசைவு உள்ள ஒடம்பு என்னாக்கும் கண்ணண் அண்ணன் சொல்லுவாரு,ஒன்னை ஒரு பயலும் தொட முடியாது கேட்டியா”

அவன் என் கைகளில் ஓங்கி குத்தினான்.

“லே என்னையா குத்துகா, ஒரு அடிக்கு பெலப்பியால, கைய மடக்கி அடிச்சம்ணா நேரா கோமா தான் பாத்துக்க”

“யாரு கோமாக்கு போவா நீயா நானா”

“லே விளையாட்டுக்கு நினைக்காத, அந்த பார்த்திபன ரோட்டுல போட்டு அடிச்சி அவன் நாலு நாளு ஆஸ்பத்திரியில கெடந்தது மறந்துற்றோ”.

“அதெல்லாம் மறக்கல, ஆனா அது எட்டு வருஸத்துக்கு முன்னுக்கு, இப்பம் அவனுட்ட போனா சவுட்டி கொடல பிதுக்கிபுடுவான்”.

“அது சரிதான், அப்பம் நமக்கு கொஞ்சம் கபடி வெளயாட்டு உண்டும்லா. இப்பமும் நான் கிரௌண்டுல எறங்குனா ஒரு பயலும் கிட்ட நின்னுகிட மாட்டான்”.

நரம்பன் சத்தமாக சிரித்துவிட்டான்.

“லே மயிராண்டி,வெளயாட்டுக்கு சொல்லல, நான் இந்த தீவாளிக்கு கழிக்கரை டீமுக்கு ஆப்போஸிற்றா ஒரு டீமு எறக்குயேன் பாரு”.

“செரி செரி, போ எழும்பி வேலைக்கு போற வழியப்பாரு” என்றவாறு எழும்பிப்போனான்.

நரம்பன் சென்னைக்கு சென்று விளையாடி வெற்றிப்பெற்று வந்தான்.ஏற்கனவே குமரிமாவட்ட அளவில் அவன் பெரும் புகழ் பெற்றிருந்தான். அவன் போனஸ் போடும் முறைக்கு உள்ளூரில் தவளைச் சாட்டம் என்ற பெயருண்டு. ஒரு காலைக் கொண்டு போனஸ் கோட்டைத் தாண்டிவிட்டு மறுகாலைத் தூக்கி பின் தப்பித்து நடுக்கோட்டை தொடுவது தான் வழக்கம்.ஆனால் நரம்பன் போனஸ் கோட்டைத் தாண்டியவுடன் இடதுகாலால் ஓங்கி தரையில் மிதித்து தவளை போன்று துள்ளி பறந்து நடுக்கோட்டை அடைந்துவிடுவான்.எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடும். அவன் பாடிச் சென்றால் போனஸ் போடுவதை தடுப்பதற்கே எதிர் அணிக்கு பெரும் பாடாக இருக்கும்.

அந்த தீபாவளிக்கு முதல் போட்டி நரம்பனின் அழிக்கரை அணிக்கும் நான் உள்ளூர் குடிகாரர்களைச் சேர்த்து அன்று காலை உருவாக்கியிருந்த அணிக்கும் அறிவிக்கப்பட்டது.என்னிடம் இருந்த ஒரு பழைய நிக்கர் ஒன்றை எடுத்துக்கொண்டு திடலுக்கு போனேன்.நரம்பன் துணிமாற்றிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்துவிட்டான்.

“லே, நீ வெளயாட்டுக்குல்லா சொல்லுகாணி நினைச்சேன். எறங்குறியா” என்று சிரித்தான்.

“ஒரு நிக்கர் சட்டை தால”.

அவன் பையைக் குடைந்து ஒரு டீசர்ட்டும் நிக்கரும் தந்தான். நான் அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினேன். அப்பா வீட்டில் இல்லை. அவர் ஏற்கனவே கபடி பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.நான் டீசர்ட்டை தடவிப் பார்த்தேன்.என் உடல் சிலிர்த்தது.நான் ஒவ்வொரு முறையும் கபடியைக் குறித்து பகற்கனவுக் காணும் பொழுதும் அணியும் டீசர்ட். மஞ்சள் நிறத்தில் முன் பக்கம் Kz என்று எழுதியிருக்கும்.பச்சை நிற நிக்கர்.நான் அதை மணத்திப்பார்த்துக்கொண்டேன்.அதை அணிந்துகொண்டு கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டேன்.அப்பொழுது தான் கவனித்தேன். அது என் உடலுக்கு சற்றும் பொருந்தாததாக இருந்தது. மிகப்பெரியது. மெலிந்து சூம்பி நடுங்கிக்கொண்டிருந்த நான் அதை அணிந்தவுடன் ஒரு ஜோக்கர் போலத் தெரிந்தேன். அதை உடனே கழற்றினேன். வீட்டு வாசலில் கிடந்த ஒரு பழைய டீசர்ட்டை எடுத்து அணிந்துகொண்டேன். என் அணியில் விளையாட சம்மதித்திருந்த முத்து வந்தான். நானும் அவனும் சென்று ஏற்கனவே வாங்கி என் வீட்டின் எதிர்புறம் கொட்டி வைக்கப்பட்டிருந்த கல்கூட்டத்திற்குள் மறைத்து வைத்திருந்த மருந்தை போட்டுவிட்டு வந்தோம். என் நடையில் சற்று தள்ளாட்டம் கூடியது. அழிக்கரை அணி ஏற்கனவே ஆடுகளத்தில் இறங்கிவிட்டதால் எங்களுக்கான கடைசி அழைப்பை விடுத்தார்கள்.நானும் முத்துவும் சென்று ஆடுகளத்திற்கு மறுபுறமிருந்த பெரிய புளியமரத்தின் அடியில் குடித்துக்கொண்டிருந்த எங்கள் அணியை சேர்ந்தவர்களிடம் சென்று சேர்ந்தோம்.பின் அனைவரும் ஒரு வரிசை ஏற்படுத்தி ஓடிச்சென்று வழக்கமான கபடி வீரர்கள் செய்வதைப் போன்று களத்தைச் சுற்றி ஓடினோம். கூட்டம் முழுவதும் சிரிப்பலை.

“எல்லாம் பயங்கர ப்ளேயர்மாருல்லா”

“லே ஆளைத் தொடணும் இல்லணா பிடிக்கணும் அப்பந்தா பாயிண்ட், சும்மா க்ரௌண்ட சுத்தி ஓடுனா பாய்ண்ட் கெடயாது பாத்துக்க”.

“ஆமா இவனுவ அஞ்சாறு சுத்து சுத்திட்டு நாங்கதான் ஜெயிச்சோம்ணு சொன்னாலும் சொல்லுவானுவ”.

முத்து சொன்னான் “மக்கா லேசா போட்டது நல்லதா போச்சி கேட்டியா, இல்லணா இந்தத் தாயோழி மக்களுக்க நடுவுல எங்க வெளயாடுயது”.

நான் என் கைகளைப் பார்த்தேன். நடுக்கம் நின்றிருந்தது. நடுவர் விசில் ஊதினார். சற்றென்று என் மனம் கூர்மை கொண்டது.என் கண்கள் எதிர் அணியினரை துல்லியமாக நோட்டமிட்டது.மனம் உந்தியது. அவர்களை என்னால் தொட்டுவிட்டு தப்பிவிட முடியும். அவர்களை என்னால் பிடித்துவிட முடியும். ரைட் போன முத்துவை தடுத்து நிறுத்திவிட்டு நான் துள்ளி எதிர் புறம் சென்றேன்.

“அபோட் அபோட் அபோட்”

என் வாய் தன்னையறியாமல் முனங்கியது.நரம்பன் நடுவில் தான் நின்றான்.நான் துள்ளித் துள்ளிப் பாடினேன்.என்னை என்னால் நம்பமுடியவில்லை.நான் உள்ளே இறங்கி பாடினேன்.பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சம் சிறிதுமின்றி.ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு. என் மனம் மிக்கூர்மையாக அறிந்தது. அவர்களால் என்னை ஒரு பொழுதும் பிடிக்கமுடியாது. நான் மூன்று பேரைத் தூக்கிச் செல்வேன்.என்ன நடந்தது என்பது சரியாக என் மனதால் கணிக்கமுடியவில்லை. சற்று மறந்தது போலவும் இருந்தது. கூட்டம் சிரிப்பது மட்டும் என் காதுகளுக்கு கேட்டது.நான் கூட்டத்தின் மீது விழுந்து கிடந்தேன். மெல்ல கைகளை ஊன்றி எழும்பினேன். கால்களில் லேசான சிராய்ப்பு, அதில் ரத்தம். நான் மெல்ல நடந்து வந்து குத்தவைக்கும் பொழுது மொத்த அணியும் அவுட்டாகியிருந்தது.அடுத்தமுறை முத்து பாடிச் சென்றான். நான் இங்கிருந்தபடியே அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பாடிச் செல்வதுபோல் கற்பனை செய்து கொண்டேன்.எங்கும் துள்ளாமல் ஓடாமல் மெல்ல மெல்ல நடந்தபடியே பாடினேன். சட்டென்று உள்ளே பகுந்து ஒரு உடல் தொடல். துள்ளி ஓடி நடு கோட்டைத் தொட்டுவிட்டேன்.எல்லாம் தெளிவாகிட்டது போல் ஒரு நொடி. முத்து பிடிகொடுத்துவிட்டான். அழிக்கரை அணியின் அடுத்த வீரன் பாடி வந்தான். நான் என் முறைக்காக காத்திருந்தேன்.திரும்பிச் சென்ற அழிக்கரை அணி வீரனை விரட்டி உள்ளே சென்றேன். கூட்டம் ஆர்பரித்தது.

“மக்கா உடாதல, அவ்வளவுவேரையும் அள்ளுல” என்ற சத்தம்.

நான் நிதானமாக பாடினேன்.

“அபோட் அபோட் அபோட்”.

இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மெதுவாக நடந்தேன். வலப்புறமிருந்து இடப்புறம் மீண்டும் நிதானமாக பாடியபடி வந்தேன்.

“லே குப்பிய தேடுதியா” என்றது ஒரு குரல்.

நான் எதிரே நின்ற வீரர்களின் கால்களைப் பார்த்தவாறு இடதுகைகளை மட்டும் அந்தக்குரல் வந்த திசை நோக்கி அமைதி என்பது போல செய்கை செய்தேன்.சட்டென் உடலில் ஓர் இடி. நான் நடு கோட்டை தொட என் கைகளைத் துளாவினேன்.ஒரு ஆறடி உயரமிருக்கலாம் என்று நினைக்கிறேன். என் கால்களைப் பிடித்து தூக்கியிருந்தார்கள்.என் கைகள் வானத்தில் அலைந்தன. நான் நிதானமாக என்னைத் தூக்கியிருந்த கூட்டத்திலிருந்து இறங்கினேன்.பின் வெளியே சென்றபொழுதுதான் கவனித்தேன் என் பனியன் கிழிந்து தொங்கிக்கொண்டிருப்பதை.

நாங்கள் 42-0 என்ற புள்ளிக் கணக்கில் அழிக்கரை அணியிடம் தோற்றோம்.

நரம்பனுக்கு அடுத்த ஆட்டமிருந்ததால் நான் அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.உள்ளே சென்று கிழிந்துவிட்டிருந்த என் டீசர்ட்டை அடுக்களையில் போட்டுவிட்டு முன் அறைக்கு வந்தேன்.அப்பா குளித்துவிட்டு படுக்கச் சொன்னார்.வழக்கம் போல் அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வந்து கட்டிலில் படுத்தேன். ஆளரவம் ஏதுமின்றி ஊரே வெறித்திருந்தது.தொலைவில் கபடி விவரணை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.கூட்டமிடும் கூக்குரல்.நான் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தேன்.அது வெளியே இருந்த தெருவிளக்கின் ஒளி ஜன்னல் வழியாக பட்டு மின்னியதில் அம்மாவும் நரம்பனும் மறைந்துவிட்டிருந்தனர்.அந்த உடல் திமிறிக்கொண்டிருக்கும் சிறுவன் மட்டும் தெரிந்தான். முட்டியில் லேசான ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. உடலெங்கும் ஒட்டியிருந்த மணல்.நான் அந்த மணத்தை ரசித்தேன். அதில் திளைத்தபடியே உறங்கிப்போனேன்.

அப்பா விளக்கைப் போட்டவுடன் திடுக்கிட்டு கண் விழித்துக்கொண்டேன்.நான் அப்பொழுது கனவு கண்டுகொண்டிருந்தேன்.அம்மாவுடன் புகைப்படத்திலிருக்கும் உடல் திமுறும் அந்தச் சிறுவனாக நான் கபடி ஆடுகளத்தில் நிற்கிறேன்.அந்தப் படத்தில் போட்டிருக்கும் அதே குதிரை ஒன்றின் படம் போட்ட சிறுவன்.ஒரு மலையைத் எம்பித்தாண்டும் குதிரைப் படம். மலை அதன் கால்களுக்குள் சிறிதாக. மிக மிகச் சிறிதாக.எதிரே திருநைனார்குறிச்சி அணி வீரர்கள்.முழு அணியும் ஆவேசம் கொண்டு நிற்கிறது.என் பக்கமாக நான் மட்டுமே நிற்கிறேன்.நடுவர் தன் கைகளை நீட்டி காற்றில் வீசி என்னைப் போகச் சொன்னார்.நான் பாடிச் செல்கிறேன்.கூட்டம் ஆராவாரமிடுகிறது.

“லே என்னல ஒரு பொடியன் பாடி வாறான், பெலப்பானால” என்கிறான் ஒரு வீரன்.

“பாத்துல அவனுக்கு அடி பட்டுராம்ல, மெதுவா பிடிங்க”

“அபோட் அபோட் அபோட்”

நான் இரண்டுமுறை இடப்பக்கமும் வலப்பக்கமுமாக நடந்தேன்.பின் வேகமெடுத்து ஒருபக்கம் ஒரு ஓட்டம்.போனஸ் கோட்டைத்தாண்டி உள்ளே சென்று ஒரு வீரனைத் தொட்டேன்.அந்த பொடியன தூக்குல என்ற ஒலி.என்னை ஏழு வீரர்களும் சுற்றி வளைத்திருந்தனர்.நான் என் தோள்களால் அவர்களை இடித்தேன். மொத்தமாக ஏழுபேரையும் இழுத்துச்சென்று நடுக்கோட்டைத் தொட்டேன்.கூட்டம் எழுந்து வெறியாட்டம் போட்டது.பெரும் கூச்சல்.பெண்கள் குரவையிட்டனர். அழிக்கரை அணி வீரர்கள் எதிரில் இருந்தனர்.நான் பாடினேன்.

“அபோட் அபோட் அபோட்”

அம்மாவின் புகைப்படத்தில் இருக்கும் தோளின் முறுக்குகள்.என் தோள்களை தட்டிக்கொண்டேன்..ஒரு பொழுதும் ஒருவராலும் தோற்கடிக்கமுடியாத தோள்கள். பனை நார் போன்ற கைகள்.பத்து பேரை ஒரே நேரத்தில் இழுத்துப்போடும் கைகள்.கைகளை சுழற்றிக்கொண்டேன்.நான் நரம்பனை நோக்கிப்பாடினேன்.அவன் இடுப்பைவிட தாழ்வாக இருந்தேன் நான்.

“அபோட் அபோட் அபோட்”

நான் நடுக்கோட்டைப் பார்த்து திரும்பி என் கைகளை தரையில் ஊன்றி என் கால்களை மேலே தூக்கி நரம்பனை பாதத்தால் மிதித்தேன்.அவன் தடுமாறி எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியில் சென்று விழுந்தான்.என் கால்களை அடுத்த வீரன் கவ்விப்பிடித்துக்கொண்டான்.சட்டென என்னைப் பிடித்து தூக்கிவிட்டனர். நான் ஒரே உன்னில் அவர்களின் கைகளில் இருந்து நழுவிப் பறந்து நடுக்கோட்டைத் தொட்டேன்.பஞ்சு போன்ற கைகள் என்னை தாங்கிக்கொண்டன.நான் நிமிர்ந்து பார்த்தேன். புகைப்படத்திலிருக்கும் அம்மா.கூட்டத்தின் பேரிரைச்சல். அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள்.நான் அவள் கைகளை அழுத்திப்பிடித்தேன்.

“லே வலிக்குல, எனக்க மொவனுக்கு என்னா பெலம்” என்றாள்.என் தோள்களை மீண்டும் மீண்டும் தடவிப்பார்த்தாள்.வானவேடிக்கைகள் என் கண்ணைக் கூசின.

அப்பா என்னைப் பிடித்து தூக்கினார். வாயிலிருந்து லேசாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

“வயறு என்னல ஆச்சி, சாப்பிட்டுட்டு படுலணி சொன்னம்லா”.

என் வயிறு லேசாக உப்பி ஒரு வித மினுமினுப்பை அடைந்திருந்தது.கண்கள் மங்கின. அப்பா வெளியே ஓடினார்.கபடி நடந்துகொண்டிருந்த இடத்தின் அருகில்

உடைமாற்றிக்கொண்டிருந்த நரம்பனிடம் சென்று கீழே விழுந்தார்.நொடியில் நரம்பன் உள்ளே ஓடி வந்தான்.

“சொன்னா கேக்கான இவன்” என்றவாறு என்னை அவன் மடியில் கிடத்திக்கொண்டான்.வியர்வையும் இரத்தமும் கலந்த அவன் உடலின் மணத்தில் என் மனம் திளைத்தது.முறுக்கேறி தடித்திருந்த அவன் தொடைகளில் நான் என் தலையைச் செம்மையாக வைத்துக்கொண்டேன்.நரம்புகள் புடைத்து திரண்டிருந்த அவன் தோள்களைப் பார்த்தவாறு என் கண்கள் முற்றிலும் மங்கி மூடிக்கொண்டன.

நாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை

அவர் கையிலிருந்த  அந்தச்  சங்கிலி  அப்படியொன்றும்உறுதியானதாக  இல்லை. சங்கிலியோடு  இணைக்கப்பட்டிருந்த  கழுத்துப்பட்டி  அந்த  நாயின்  கழுத்தை  கவ்வியிருந்தது.  ஒரு  நேரம்அவர்  நாயை  பிடித்தபடி  முன்னே  செல்வார். நாய்  அவருக்குக்   கட்டுப்பட்டுஇலகுவாக  நடக்கும். அப்பொழுது  சங்கிலி   தொய்வாக  இருக்கும்.

மற்றொரு  நேரம்  அது  அவரை  இழுத்துக்கொண்டு  செல்லும். அப்போது  அவர்  நாயின்  வேகத்துக்கு  ஈடு  கொடுக்க  முடியாமல்ஓட்டம், நடைக்கு  இடைப்பட்ட  வேகத்தில்  சென்று  கொண்டிருப்பார்.

நாய்  திடீரென்று  நினைத்துக்கொண்டாற்போல  நிற்கும். அவரும் அதற்கு  அனுமதியளித்து  இடுப்பில்  கைவைத்து  காத்திருப்பார். சில வினாடிகளுக்குப்  பிறகு  மீண்டும்  நடைபயிற்சி  ஆரம்பிக்கும். காலை  ஆறுமணி   காட்சி  அது.

” ஆறு  மணியானா  நாய்சார்  வாக்கிங்  கிளம்பிடுவார்.  அதை  வச்சு மணி  ஆறுன்னு   தெரிஞ்சிக்கலாம்”  என்றாள்  பானு.

தெரு  L  வடிவிலானது  தெருக்கோடியில்  அவர்  வீடு  உள்ளது. மூன்றுஆண்டுகளுக்கு  முன்பு  அவர்  அங்கு  குடி  வந்தார்.  தெருவுக்குஅடிக்கடி  சாமான்கள்  ஏற்றிய  லாரி  வருவதும், தெருவிலிருந்துஅதேபோல்  சாமான்  ஏற்றி   டெம்போக்கள்   வெளியேறுவதும்வழக்கம்தான்.

யார்  வருகிறார்கள், போகிறார்கள்  என்று  தெரியாத, தெரிந்து  கொள்ள  ஆர்வப்படாத  நடுத்தர  வர்க்கத்து  சனங்கள் வசிக்கும்  நகரத்தின்  தெருக்களில்  அதுவும்  ஒன்று. ஒரு  மத்தியான பொழுதில்தான்  நாய்சார்  குடிவந்தார். அவரோடு  அந்த நாய்,  குட்டியாக  வந்தது.

” வர்ற  வழியில  கிடைச்ச  குட்டி  இது. ரோட்டோரமா  நின்னுகிட்டிந்தது. வெள்ளரிக்கா  வாங்க  இறங்கின  என்னைப் பார்த்துட்டு  கத்துச்சு.  தூக்கிட்டு  வந்துட்டேன்.”

பின்னொருநாள்  நாய்சார்  சொன்னார். அவர்  காலையில்  நாயோடுவாக்கிங்  போவார். பிறகு  எட்டரை  மணிக்கு  இருசக்கர  வாகனத்தில்அலுவலகம்  செல்வார். அப்போது  தெருமுனை  வரை  நாய்  அவர்பின்னோடு  ஓடிப்போகும்.

அவர்  சாலையில்  கலந்த  பிறகு  சிறிதுநேரம்  நின்று  கொண்டிருந்துவிட்டு  திரும்பி  வந்து  அவர்  வீட்டுவாசலில்  படுத்துக்கொள்ளும். மாலையில்  அலுவலகம்  முடிந்து  வந்தபிறகு  நாய்சார், நாயை  மறுமுறை  வாக்கிங்  கூட்டிப்  போவார்.

அந்தியின்  மஞ்சள்  வெயில்  படிந்த  சாலையில்   அவர்  நாயைப்   பிடித்தபடி  நடந்து  கொண்டிருப்பார். நடைப்பயிற்சிக்கு  தோதாக  அதன்   கழுத்தில்  சங்கிலி  கட்டிவிடுபவர்  வீட்டுக்கு  வந்ததும்  அவிழ்த்துவிட்டுவிடுவார்.

கட்டப்பட்ட  சங்கிலியிடத்தில்  கட்டுப்பாடு  இல்லை  என்று  நாய்  புரிந்து  வைத்திருந்ததோ  என்னவோ, வாயில்  காப்போன்  போல  இருந்த  இடத்தை  விட்டு  அசையாமல் அங்கேயே   கிடந்தது.

வாசற்கதவு  கிறீச்சிட்டால்  தலையுயர்த்திப்  பார்க்கும். தெரிந்த  முகமாயிருந்தால்  முன்னங்கால்களுக்கு  மத்தியில்  முகத்தை  பதித்துப்  படுத்துக்கொள்ளும். புது  ஆளாக  இருந்தால்  ஜாக்கிரதை  உணர்வோடு  விருட்டென்று  எழுந்து  நின்று  குரைக்கும்..

” நாயைக்  கட்டிப்போடுங்க  சார். பயமாயிருக்கு ” என்று  யாராவது  கூறினால்  நாய்சார்  சிரிப்பார்.

” கட்டிப்போட்டு  வெறித்தனத்தை  அதிகப்படுத்தக்கூடாது. நீங்க  பயப்படாம  வாங்க. நானிருக்கேன்” என்பார்.

நான்  ஒருமுறை  சென்றபோது  நாய்  பார்த்துவிட்டு  படுத்துக்கொண்டது.

” நீங்க, நம்ம  தெருவாசின்னு  அதுக்கு  தெரிஞ்சிருக்கு. அதான்  சிநேகமா  ஒருபார்வை  பார்த்துட்டு  படுத்துகிச்சு…..” என்றார்  நாய்சார்.

அவர்  தாசில்தார்  அலுவலகத்தில்  வேலை  செய்கிறார். பட்டா  சம்மந்தமாக  அவரிடம்  சந்தேகம்  கேட்க  வேண்டியிருந்தது.  அப்படித்தான்  நாய்சார்  அறிமுகமானார்.

” நாயைக்  கட்டிப்  போடற  பழக்கம்  இல்லையா…..?” என்று  நான்  கேட்டபோது,

” அதுக்கென்ன  அவசியம்….?” என்று  அவர்  திரும்பக்  கேட்டார்.

” ஆரம்பத்துல  அது  பகல்ல  வெளியில  சுத்திட்டு  வரட்டும்னு  கட்டாம  விட்டிருந்தேன். ஆனா  அது  வீட்டை  விட்டு  எங்கேயும்  நகரலை. பழியா  வீட்டு  வாசல்லயே   கிடந்தது.   அப்புறம்தான்  வாக்கிங்  கூட்டிட்டுப்  போக  ஆரம்பிச்சேன். உங்களுக்கொண்ணு  தெரியுமா……இந்த  நாய்  இதுநாள்  வரைக்கும்  வீட்டுக்குள்ள  வந்ததேயில்ல. ”

எனக்கு  ஆச்சர்யமாக  இருந்தது. அவர்  தலையசைத்து  சிரித்தார்.

” ஆமா….வளர்ப்பு  நாய்ங்க  காலுக்கடியிலேயே  கிடக்கறத  நான்  பார்த்திருக்கேன். ஆனா  இது  தெருவோட  சரி. உள்ளே  வரவழைக்க  எவ்வளவோ  முயற்சி  பண்ணிட்டேன். பலிக்கல. ஊர்  எல்லையில  காவல்  காக்கற  அய்யனார்  சாமி  மாதிரிதான்  இதுவும். அப்படித்தான்  நான்  நினைச்சிக்கிட்டிருக்கேன் ” என்றவர்  எழுந்து  சென்று  ஃபிரிட்ஜிலிருந்து  குளிர்பானம்  எடுத்து  வந்தார். வாசற்படி  நிலையருகில்  நின்று  நாய்  என்னையே  பார்த்துக்கொண்டிருந்தது.

” இனி  நீங்க  கிளம்பற  வரைக்கும்  அந்த  இடத்தைவிட்டு  நகரவே  நகராது. அப்படியே  வெறிச்சு  பார்த்துக்கிட்டு  நிக்கும். ஒரு  பிடி  சோறு  போட்டதுக்கு  எவ்வளவு  நன்றியுணர்ச்சி  பாருங்க….”

அவர்  குளிர்பானத்தை  தம்பளரில்  நிரப்பித்  தந்தார். வீடு  சுத்தமாயிருந்தது. அனாவசிய  அடைசலில்லை. வலது  மூலையில்  டிவி, பிரம்பு  சோபா  தவிர  வேறு  சாமான்களில்லை. திரைச்சீலைக்கு  அப்பாலிருந்த  அறைக்குள்  அவர்  மனைவி  இருந்திருக்க  வேண்டும். லேசாக  இருமல்  சத்தம்  கேட்டது.

” அவ  கொஞ்சம்  சுகவீனமாயிருக்கா” என்றார்  நாய்சார்.

என்ன, ஏதென்று  விசாரிக்குமளவுக்கு  பழக்கமில்லாததால்  நான்  எதுவும்  கேட்கவில்லை. நாலைந்து  சந்திப்புகளுக்குப்   பிறகு  அவரே  சொன்னார்.

” குழந்தையில்லாத  கவலை  மனசை  அரிச்சு  உடம்பை  பலவீனமாக்கிடுச்சு. காலையில  மெல்ல  எழுந்து  சமையல்  செஞ்சு  வச்சிட்டு  படுத்துக்குவா. மறுபடியும்  சாயங்காலம்  விளக்கேத்தற  நேரத்துல  கொஞ்ச  நேரம்  உட்கார்ந்து  நாலைஞ்சு  சுலோகம்  சொல்லிட்டுப்  படுத்துக்குவா. வெளிவேலைகளுக்கு  ஆள்  வச்சிக்கிட்டேன். நானும், அவளும்  ஒண்ணா   சேர்ந்து  வெளியில  போய்  இருபது  வருஷமாயிடுச்சு.”

நாய்சார்  இதைச்  சொன்னபோது  அவர்  குரல்  நடுங்கியது. சிறிது  நேரத்தில்  சகஜமான  அவர், தெருவாசிகள்  தன்னை  நாய்சார்  என்று  அழைப்பதாக   சொல்லி  சிரித்தார்.  அவருக்கு  அந்தப்பெயர்  மிகவும்  பிடித்திருப்பதாக  சொன்னபோது  வியப்பாக  இருந்தது.

” நான்  படிச்ச  பள்ளிக்கூடத்துல  ஒரு  வாத்தியார்  எப்பவும்  கையில  பிரம்போட  இருப்பார். அந்தப்  பிரம்பு  நல்லா  மழுமழுன்னு   பார்க்கவே  வசீகரமா  இருக்கும். அதால  ஒண்ணு  வச்சாருன்னா  சுளீர்ன்னு  வலி  தெறிச்சுவிடும். வாத்தியார்  அந்தப்  பிரம்பை வீட்டுக்கு  எடுத்துட்டுப்  போய்  எடுத்துட்டு  வருவார். அதனால எல்லாரும்  அவரை  தடி வாத்தியார்ன்னு  கூப்பிடுவாங்க. அந்த  மாதிரி  எனக்கும்  நாய்சார்ன்னு  பேர்  கிடைச்சிருக்கு ” என்ற நாய்சாரை  எதிர்  ஃப்ளாட் வாட்ச்மேன்  அந்தப்  பெயரைச் சொல்லி  கூப்பிட்டிருக்கிறான்.

” நாய்சார்  வாக்கிங்  கிளம்பியாச்சா……?”

வாய்தவறி  கேட்டுவிட்ட.  அவன்  திருதிருவென்று  முழித்திருக்கிறான். பின்  அதை மறைக்க ஏதேதோ  பேசி  மழுப்பியபோது  நாய்சார்   விடவில்லையாம்.  துருவித்துருவி  கேட்டு  தெரிந்து  கொண்டாராம்.

” நாயோட. நீங்க  வாக்கிங்  போறதப்  பாத்து  நாய்சார்ன்னு  ஒருத்தர்  சொல்லப்போக  பின்னாடி  அதுவே  பேராயிடுச்சு ” என்றானாம்  அவன்.

நாய்சார்  சொல்லிவிட்டுப்   புன்னகைத்தார்.

” நாய்  துஷ்டமான  மிருகமில்ல. அதுக்கிருக்க   நன்றியுணர்ச்சியில  கால்வாசி  நமக்கிருந்தா போதும். நமக்கு  உதவி  செய்தவங்களை நாம  மறக்கவே  மாட்டோம் ”  என்றார்  நாய்சார்.

அலுவலகம்  முடிந்து  வர  தாமதமானால்  நாய்  காம்பவுண்ட்   கதவருகில்  நின்று   தெரு முனையை  வெறித்துப்  பார்த்துக் கொண்டிருக்குமாம். தூரத்தில்   அவரது  வண்டிச்  சத்தம்  கேட்டால்   பாய்ந்தோடி  எதிர்கொண்டு   அழைத்து  வருமாம்.

” முன்னாடியெல்லாம் அலுவலகத்துக்குப்  போகும்போது  என்  மனைவியை  தனியா  விட்டுட்டுப்  போறேனேன்னு  கவலையோட கிளம்புவேன். இந்த  ஊருக்கு  வந்தப்புறம்  அந்தக்  கவலை  இல்லாம போச்சு. வரும்போதே  இன்னொரு  ஜீவனையும் அழைச்சிட்டு  வந்ததுல  தைரியமா ஆபீஸ்  போறேன். ”

நாய்சார், நாயின்  முதுகை  பாசமாய்  தடவிக்  கொடுத்தார். அது  தலையை   பட், பட்டென்று   இரண்டுமுறை  உலுக்கிக் கொண்டது.  செம்பழுப்பு  நிற  நாய்  அது. நாட்டு  நாய்க்கே  உரிய   மெலிந்த  தோற்றம்  கொண்டிருந்தது.

” இதுக்குன்னு  தனியா  எதுவும்   சமைக்கிறதில்ல. நாங்க   சாப்பிடறததான்  இதுவும்   சாப்பிடுது. மத்தியான  சோறு  என்   மனைவி  வைப்பா.  மெல்ல   எழுந்து  வந்து  அவ  சோறு  வச்சதும்  அவளை  ஒரு  பார்வைப்   பார்க்குமாம்.  அது,  நீ சாப்பிட்டியான்னு  கேட்கிற மாதிரி   இருக்குமாம்.  ஒருநாள்  என்  மனைவி  சொல்லிட்டு  அழுதா. ”

நாய்சார்  சொன்னபோது  எனக்கு  வியப்பாக. இருந்தது.

” நாமகூட   ஒரு  நாய்  வளர்க்கலாம்ங்க…..” என்றாள்  பானு. எனக்கும்  ஆசைதான். இருந்தும்  முறையாக  அதைப்  பராமரிக்க  முடியுமா  என்று சந்தேகமாயிருந்தது. மேலும்  ஃபிளாட்டில்  அதற்கு  அனுமதி பெறவேண்டும். தனி  வீட்டில்  நாய்  வளர்ப்பதைக்  காட்டிலும்  ஃபிளாட்டில்  வளர்ப்பது  சிரமமானது.  அதனால்  அந்த  எண்ணத்தை  கைவிட்டேன்.

” வெளிநாட்டு  நாய்  வளர்க்கணும்னு  இல்ல. நாட்டு  நாயே  வளர்க்கலாம். ரெண்டுமே  விசுவாசத்துக்கு  குறைச்சலில்லாதது” என்றார்  நாய்சார்.

நான்  அதிலுள்ள  சிரமத்தைச்  சொன்னதும்  ஒத்துக்கொண்டார். அன்று  மாலைநேர  நடைப்பயிற்சியின்போது  நானும்  அவருடன்  இணைந்து  கொண்டேன்.  நாங்கள்  சாலையோரமாக  நடந்தோம்.

நாய்  இலக்கை  குறிவைத்து முன்னேறும்   தீவிரத்துடன்  நடந்து கொண்டிருந்தது.  நாய்சார்  சிறு வயதில்  தன்னுடைய  வீட்டிலிருந்த  நாய்  பற்றி  சொல்லிக்  கொண்டே  வந்தார்.

” கிராமத்துல  பார்த்தீங்கன்னா, வீட்டுக்  கொல்லையிலயோ, தெருவுலயோ  ஒரு  நாய்  எப்பவும் படுத்துக் கிடக்கும். அப்படி எங்க  வீட்டுலயும்  ஒரு  வெள்ளைநாய்

இருந்தது. எங்கம்மா  அதுக்கு  ஒரு  பிடி  சோறு  வைப்பாங்க.  தின்னுட்டு  ஊரைச்  சுத்திட்டு  எங்க வீட்டு  வாசல்ல  வந்து  படுத்துக்கும்.  நான்  பள்ளிக்கூடம் போகும்போது  என்  கூடவே  வரும். பள்ளிக்கூட   காம்பவுண்டு வரைக்கும்  வரும்.  நான்  உள்ளேப் போயிட்டேன்னு  உறுதி செஞ்சுக்கிட்டு  மெதுவாத்  திரும்பிப் போகும். அதேமாதிரி  சாயங்காலம்  பெல்  அடிக்கிறப்ப  காம்பவுண்டு  கிட்ட  வந்து  நின்னு  என்னைக்  கூட்டிட்டுப்  போக காத்திருக்கும். ஆச்சரியமா இருக்குல்ல…….?”

நான்  தலையசைத்தேன். பின்  என் பெரியப்பா  வீட்டில்  வளர்ந்த  நாயைப்  பற்றி  சொன்னேன்.

” மனிதன்  தன் புத்திசாலிதனத்தைக்  கொண்டு  யானையைக்  கூட அடிமையாக்கிடறான். யானை  தன்னோட  பாகன்  சொல்படி  காசை  வாங்கி  அவன்கிட்ட கொடுக்குது. ஆனா  நாய்கிட்ட நாம அடிமைத்தனத்தை  எதிர்பார்க்க  முடியாது. அன்பா  தடவிக் கொடுத்தா  அது  உசுரையே  தரும்”  என்றார்  நாய்சார்.

நாய்  நடப்பதை  நிறுத்திவிட்டுசுவற்றில்  ஒட்டப்பட்டிருந்த  சுவரொட்டியை  வெறித்தது. பின்  என்ன  நினைத்ததோ  மெதுவாக  நடக்க  ஆரம்பித்தது.  சாலையில்  போக்குவரத்து  மிகுதியாயிருந்தது.

கடைகள்  நிறைந்திருந்தன. பிள்ளையார்  கோவில்  வாசலில்  சிறு  கூட்டம்கூடியிருந்தது. அன்று  ஏதாவது  விசேஷ  நாளாயிருக்கும்  என்று  நான்  நினைத்துக்கொண்டேன்.

நாய்சார்  செருப்பைஅவிழ்த்துவிட்டு  சங்கிலியைப்  பிடித்தபடியே  கையெடுத்துக்கும்பிட்டார். நாய்  அவரையே  பார்த்துக்  கொண்டிருந்தது. கோவில்வாசலில்நின்றிருந்த  பெண்மணியின்  கையிலிருந்தகுழந்தை  நாயைக்  கண்டதும்  துள்ளியது.

மழலை  மொழியில்  ஏதோ பிதற்றியது. நாய்  திரும்பிப் பார்த்தது. குழந்தை  உதைத்து  இடுப்பிலிருந்து  இறங்க  முற்பட்டது.  அதன்  தாய்  விடவில்லை.

”  நாய்கடிச்சிடும்” என்று  பயமுறுத்தினாள்.

நாய்  நகர்ந்து  நாய்சார்  பக்கத்தில்  நின்று  கொண்டது  தான், வளர்ப்புநாய்  என்று  உறுதிபடுத்த  நினைத்ததோ  என்னவோ.  நாய்சார்  நாயை தடவிக்  கொடுத்தபடியே  குழந்தையைப்  பார்த்து  சிரித்தார். குழந்தை  கைகளை  நீட்டித்  தாவியது.

” பேசாம   இரு.  இல்லேன்னா அம்மா  அடி  கொடுப்பேன்.”

அந்த  அம்மா  நகர்ந்து  போனாள்.

” குழந்தைகளுக்கு  நாய்னா  ரொம்ப  இஷ்டம்.  எங்க  வீட்டுக்குப்பக்கத்துல  இதேமாதிரி  ஒருகுழந்தை  இருக்கு. அதுக்கு  எப்பவும்  நாயைத்  தொட்டுத், தடவி  விளையாட  ஆசை. அவங்கம்மா  ஒரு  அடி  எடுத்து  வைக்க  விடமாட்டாங்க. கையில  ஒரு  கரடி  பொம்மையோட  அந்தக்   குழந்தை  ஜன்னல்  வழியா   ஏக்கமா  பார்த்துக்கிட்டேயிருக்கும். சில  பேருக்கு   வளர்ப்பு  மிருகங்கள்னா   ஒவ்வாமை”  என்றார்  நாய்சார்.

இருட்டத்  தொடங்கியிருந்தது.  நாங்கள்  திரும்பி  நடக்க   ஆரம்பித்தோம்.

நாய்  ஒரு  விளக்குக்  கம்பத்தில்  ஒதுங்கிவிட்டு  நடந்தது. சகமனிதன்  போல்  பாவித்து  ஒரு தோழமை  உணர்வோடு  நாய்சார்  அதனுடன்  நடந்து  கொண்டிருந்தார். எஜமானரின்  பிடிக்குள்  திமிரும்  நாய்  போலன்றி  அதுவும்  இயல்பாக  நடை போட்டது.

சாலையோர  மின்விளக்குகள் பளிச்சிட த்  தொடங்கின. கடந்து சென்ற  கடலை  வண்டியில்  வறுபட்ட கடலையின்  மணம்  நாசியை  வருடியது. நாய்சார்  இரண்டு  கடலைப்  பொட்டலங்கள் வாங்கி  ஒன்றை  என்னிடம்  தந்தார்.

” அவளுக்குக்  கடலைன்னா  ரொம்பப்  பிரியம். வறுபட்ட  சூடு ஆறிப்  போறதுக்குள்ள சாப்பிடணும்னு  சொல்லுவா ” என்றவர்,

” ஆனா  இந்நேரத்துக்கு  கடலை  சாப்பிட்டா  அவளுக்கு  செரிக்கிறதில்ல. அதனால  பிற்பகல்  எடுத்துக்குவா ” என்றார்.

” உங்களுக்கு  வாங்கிக்கலையே…..”

நான்  என்னிடமிருந்ததை  நீட்டினேன். வேண்டாமென  சைகை செய்தவர்  ஃபிளாட்டுக்கருகில் வந்ததும்  விடைபெற்றுக்  கொண்டார்.

”  நாளைக்கு  நேரமிருந்தா  வாங்களேன்.”

நான்  அவரது  அழைப்பைஏற்றுக்கொண்டேன்.  காலைநேர நடைபயிற்சி  எனக்கு  அவ்வளவாக  ஒத்து  வருவதில்லை. அலைபேசியில்  அழைப்புகள்வந்தவண்ணமிருக்கும். ஒவ்வொருஅழைப்பும்  கால்மணி, அரைமணி  என்று  நேரத்தை  சாப்பிட்டுவிடும். என்  வேலை  அப்படி.

அதனால்  மாலை  நேரத்தை  தோதாக்கிக் கொண்டேன். வேலை  முடிந்து  நேரமே  வீட்டுக்கு  வரும்  நாட்களில் நாய்சாருடன்  நடைப்பயிற்சி  செல்ல  ஆரம்பித்தேன். பானுவுக்கு  பரம திருப்தி.

” நீங்க, நாய்சார், நாய்  மூணுபேரும்  வாக்கிங்  போறது  பார்க்க  சிரிப்பா  இருக்கு”  என்று  கிண்டல்  வேறு செய்தாள்.

இரவு  உணவை  நாய்சார்  தயாரிப்பாராம்.

” பெரும்பாலும்  இட்லி  அல்லது  தோசைதான்  ராச்சாப்பாடு. அதனால  நானே  தயார் பண்ணிடுவேன். இட்லியோ, தோசையோ  கொஞ்சம்  பால்  சேர்த்துப்  பிசைஞ்சு  வட்டில்ல  வச்சுட்டா  நாய்  சாப்பிட்டுடும்.”

அன்றைய  நடைப்பயிற்சியின்போது   நாய்சார்  சொல்லிக்கொண்டே  அந்த  சாலையோரப்  பூங்காவிலிருந்த  சிமெண்ட் பெஞ்சில்  அமர்ந்தார். என்னையும்  அருகில்  அமரச்  சொன்னார். நாய்  பின்னங்கால்களை  மடக்கி  முன்னங்கால்களை  ஊன்றி  அமர்ந்து  கொண்டது.

“ நாய்களை  கவனிச்சிருக்கீங்களா…….நான்  பார்த்தவரைக்கும்  அதுங்க  பெரும்பாலும்  அஞ்சு  விதமான போஸ்ல  தான்  இருக்கும். ”

நாய்சார்  சொல்லிவிட்டு தொண்டையை  செருமிக்  கொண்டார். கடந்த  ஒரு  மாதமாக  அவருடன்  நடைப்பயிற்சி  வருவதில்  நிறைய  விஷயங்களை தெரிந்துகொண்டேன். அதிலும்  குறிப்பாக  நாய்களைப்  பற்றி  அதிக  தகவல்களைக்  கூறினார். நாய்சார்  அருகில்  அமர்ந்திருந்த நாயின்  தலையைத்  தடவிவிட்டார். அது  பெருமையாக  என்னைப்  பார்த்தது.

” சார், சொல்லுங்க…….”

நான்  ஞாபகமூட்டினேன்.

” அஞ்சு  விதமான  போஸ். முதலாவது  இதோ  இப்படி, பின்னங்கால்களை  மடக்கி  தரையில  பதிச்சு  முன்னங்கால்களை  ஊன்றி உட்கார்ந்திருக்கறது,  ரெண்டாவது  முழு  உடம்பையும்  தரையில  கிடத்தி  கால்களை  நீட்டிப்  படுத்துக்கறது,  மூணாவது பின்னங்கால்களை  மடக்கி  முன்னங்கால்களை முன்னால  நீட்டி  உட்கார்ந்துக்கறது, நாலாவது  அப்படியே  முன்னங்கால்களுக்கு  மத்தியில  முகத்தைப்  பதிச்சு  படுத்துக்கறது,  அஞ்சாவது  உடம்பைக்  கிடத்தி  கால்களை  நீட்டிப்  படுத்தவாக்குல  தலையை உயர்த்திப்  பார்த்தபடி உட்கார்ந்திருக்கறது. இதைத்தவிர வேறமாதிரி  இருந்து  நீங்கப் பார்த்திருக்கீங்களா……?”

நான்  யோசித்தேன்.  எதுவும்ஞாபகத்துக்கு  வரவில்லை. இல்லையென்று  தலையாட்டினேன். அவர்   சொன்னபோது  கண்ணுக்கெதிரே  காட்சிகள்  வந்து  போயின. நாய்சார்   தொடர்ந்தார்.

“ நாய்  கால்களை   நீட்டி  உடம்பைக்  கிடத்தி  படுத்துத்   தூங்கும்போது  ஆழ்ந்த உறக்கத்துல  இருக்கும். அதுவே   பின்னங்கால்களை  மடக்கி  முன்னங் கால்களை  நீட்டி  நடுவுல  முகத்தைப்  பதிச்சு  தூங்கறப்ப  எப்பவும்  தாக்கத்  தயாராயிருக்க  ராணுவவீரன்  மாதிரி  உஷார்  நிலையிலயே  இருக்கும். சின்னதா  ஒரு  சத்தம்  கேட்டாலும்  விருட்டுன்னு  எந்திரிச்சு  நிக்கும். இதெல்லாம்  என்னோட  கணிப்புதானேயொழிய  நிரூபிக்கப்பட்ட  உண்மையில்ல ”  என்றார்  நாய்சார்.

நான்  அவரையே  பார்த்துக்  கொண்டிருந்தேன். தன்நாய்  மீதான  அன்பில்  அவர்எவ்வளவு  யோசித்திருக்கிறார்என்று  தோன்றியது. மறுநாள்நான்  அவருடன்  நடைப்பயிற்சிக்கு  செல்லவில்லை.

அதற்கடுத்த  நாட்களும்  அலுவலகத்தில்  வேலை  அதிகம்  இருந்ததில்  செல்ல  முடியவில்லை. நாய்சாரிடம் அலைபேசியில்  சொன்னபோது,

” விடுங்க  பார்த்துக்கலாம்” என்றார்  அவர்.

கிட்டதட்ட  ஒரு  மாதமாகியிருந்தது  அவருடன்  நடைபயிற்சி  சென்று. காலையில் பால்கனியில்  நின்று  அவர் போகும்போது  கையசைப்பதோடு சரி.

”  ஒழுங்கா  வாக்கிங்  போயிக்கிட்டிருந்தீங்க. அதுவும் போச்சு…….” என்று  பானு  புலம்பினாள்.

மழை  நாட்கள்  தொடங்கிவிட்டன. அப்படியொன்றும்  பெரிதாக  கொட்டி விடவில்லை. மழை ஓரிரு  நாட்கள்  கனத்து  பெய்தது. மற்ற  நாட்களில்  நினைத்துக் கொண்டாற்போல்  தூறல்  போட்டது. விரல் விட்டு  எண்ணிவிடலாம்  என்கின்ற  அளவுக்கே  இருந்தன  மழை  நாட்கள்.

” நல்லவேளையா  காலைநேரத்துலமழை  பெய்யறதிலல”  என்றார்  நாய்சார்.

அவர்  நடைபயிற்சிக்கு  போக  மழை  பெறும்  ஒத்தாசை  செய்தது. மழை  கொட்டும்போது  கார்  பார்க்கிங்கில்  நாய்  படுத்துக் கிடக்குமாம்.

” நாய்க்கு  தடுப்பூசி  போட்டுட்டு வந்தேன். ”

ஒருநாள்  மாலை  அலுவலகம்  முடிந்து  திரும்பியபோது  தெருமுனையில்  எதிர்ப்பட்ட  நாய்சார்  சொன்னார்.

” நாய் வச்சிருக்கறவங்களுக்கு  இதெல்லாம்  கூடுதல்  சுமை  இல்லையா…….?”

நான்  கேட்டபோது  நாய்சார்  மறுத்து  தலையாட்டினார்.

” குழந்தையை  கவனிச்சிக்கறதை  சுமையா  நினைப்போமா…… அப்படித்தான்  இதுவும்” என்றார்.

அன்று  காலை  எழுந்தபோது  நாய்சார்  மனைவி  இறந்துபோன  செய்தி  வந்தது. கடந்த  ஒருவாரமாக  அவரைப்  பார்க்கசந்தர்ப்பம்  வாய்க்கவில்லை. பார்த்திருந்தால்  அவர்  மனைவி உடல்நலம்  பற்றி  தெரிந்திருக்கும். நான்  பதறி  அவர்  வீட்டுக்குஓடினேன்.

தெருவாசிகள்  இயந்திரம்  போல  வருவதும்,  போவதுமாயிருந்தனர்.

நாய்சார்  என்னைப்  பார்த்ததும்  கைகளைப்  பிடித்துக்கொண்டார்.

” எப்போதும்  போலதான் இருந்தா. அதிகாலை  மூணு  மணியிருக்கும். உடம்பெல்லாம்  வேர்த்துக் கொட்டுச்சு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்  போயிடலாம்னு  நினைக்கறதுக்குள்ள  சட்டுன்னு  நின்னுடுச்சு. சிவியர்  அட்டாக்குன்னு  டாக்டர் சொல்றார். ”

நாய்சாரின்  கண்கள்  கலங்கியிருந்தன. துக்கம் விசாரிக்க  வந்த  அனைவரிடமும்அவர்  அதைச்  சொல்லிக்கொண்டிருந்தார். தெருவாசிகளில்  பலர்  முன்பின்அறிமுகமில்லாதவர்கள். அவர்களிடமும்  அவர்  அதைச்சொல்ல  வேண்டியிருந்தது.

நாய்அவர்  காலருகில்  நின்றுகொண்டிருந்தது.  சிலநேரம்வாசற்படியில்  நின்று  கூடத்தில்கிடத்தப்பட்டிருந்த  நாய்சாரின்மனைவியை  அதுவெறித்தது. பின்  திரும்பி  வந்து  ஓரிடத்தில்  படுத்துக்கொண்டது.  உடனேமறுபடியும்  எழுந்துபோய்  வாசற்படியருகில்   நின்று  உள்ளே  பார்த்தது. இருப்புகொள்ளாதன்மையுடன்  அது  அங்குமிங்கும்அலைபாய்ந்ததைக்  கண்டபோது  ஆச்சரியமாக  இருந்தது.

நாய்சாரின்  உறவினர்கள்  சிலர்  வந்திருந்தனர். நாய்சார்  காதல் மணம்  புரிந்தவர். பலத்த  எதிர்ப்புகளுக்கு  மத்தியில் மனைவியை  கரம்  பிடித்திருக்கிறார். அதனால்  இரு  பக்கமும்  சொந்தங்கள்  விலகிக் கொண்டனவாம். ஒருநாள்  நடைப்பயிற்சியின்போது  பகிர்ந்த  செய்தி  இது. வந்திருந்தவர்கள் ஒப்புக்கு   உட்கார்ந்துவிட்டு போய்ச்  சேர்ந்தனர்.  அவர்   அலுவலக  ஆட்கள்  மட்டுமே  இறுதிவரை  உடனிருந்தனர். நான்  நாய்சாருக்குத்  துணையாக  மயானம்  வரை  சென்று  வந்தேன். வீட்டில்  அவரைத்  தனியே  விட  மனமில்லாது  சிறிதுநேரம்  உடனிருந்துவிட்டு  கிளம்பினேன்.

” நாளைக்குக் காலையில  வரேன்  சார்.”

நான்  விடை பெற்றுக்  கொண்டபோது   அலுவலக  பியூன்  ஹோட்டலிலிருந்து  சாப்பாடு வாங்கி  வந்தான். நான்  சாப்பாடு கொண்டுவந்து  தருவதாக  சொன்னபோது  நாய்சார்  பிடிவாதமாக  மறுத்துவிட்டார்.

” பக்கத்துல  நல்ல  மெஸ்  இருக்கு. அங்கே வாங்கிக்கறேன்  சார். உங்களுக்கெதுக்கு  வீண்  சிரமம்….”  என்று  விட்டார் .

மறுநாள்  நான்  அலுவலக  வேலையாக  வெளியூர்  செல்ல வேண்டியிருந்தது. நாய்சாரிடம்  சொல்லிவிட்டுக்  கிளம்பினேன். நான்குநாட்கள்  இருந்து முடிக்கவேண்டிய  வேலை. வேலை  முடிந்து  ஊர்  திரும்பியபோது  மாலை  ஆகியிருந்தது.  நான்  வந்ததையறிந்து  நாய்சார் பதட்டத்துடன்  ஓடி  வந்தார்.

” நாய்  செத்துப்  போச்சு  சார். ”

” எ……எப்ப  சார்……?”

” அரைமணி நேரமிருக்கும்.  கொஞ்சம்  வீட்டுக்கு  வாங்க  சார். ”

நான்  அவரைத்  தொடர்ந்தேன். நாய்  வாசற்படியருகில்  கிடந்தது.

” நாலுநாளா  ஒருவாய்  சாப்பிடல  சார்.  ஒரு  அடிகூட  அடிச்சுப்  பார்த்துட்டேன். பிடிவாதமா  பட்டினி  கிடந்து  உயிரை விட்டுடுச்சு. “