கடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை

கடவுளைப் போல்
எங்கிலும் எல்லா
இரகசியங்களையும்
உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன
கமெராக்கள்.
கடவுளின் கண்களே
கமெராவாக உருமாறிவிட்டதாக
மனிதன் பதட்டமுறுகிறான்

குற்றங்களை பரகசியப்படுத்தும்
கருவியை கடவுள் நாகரீகம் கருதித்தான்
படைக்காமல் விட்டிருக்க வேண்டும்,
சிரமத்தைப் பாராமல் அவர் தன்
வெற்றுக் கண்களால்
இமைப்பொழுதும் சோராமல்
அசிங்கம் பிடித்த மனிதனை
பரிதாபத்தோடு மிக நிதானமாக
அவதானித்தபடி இருக்கிறார்
ஏனெனில், மனித குலத்துக்கான
மேன்முறையீடுகளற்ற
கடைசித் தீர்ப்பை
அவர்தான் வழங்க இருக்கிறார்

இனி,
நன்மை தீமைகளைப் பதிவுசெய்யும்
வானதூதர்கள்
தோள்களில் உட்காரந்து கொண்டு
கைவலிக்க எழுத வேண்டியதில்லை
கருமப் பதிவேடுகளை முறையாகப்
பேணத் தேவையுமில்லை.
இறுதி விசாரணையின் போது
இனி கை செய்ததை கை பேச வேண்டியதில்லை
கால் செய்ததை கால் பேச வேண்டியதில்லை
கண் பார்த்ததை கண் பேச வேண்டியதில்லை
காதுகள் கேட்டதை காதுகள் பேச வேண்டியதில்லை
ஒரு கமெராவுக்குள் அடங்கி இருக்கிறது
மனிதனின் வாழ்வும் விதியும்.

அது மனிதனை மிக நெருங்கி
அவனது எல்லா அந்தரங்கங்களையும்
பரகசியங்களையும்
பதிவுசெய்யும் கடவுளின் கண்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.