– அஜய் ஆர். –
ஒரு முதியவர் தன் சொத்துக்களை தன் மூன்று பெண்களுக்கிடையே பிரித்துத் தர முடிவு செய்ய, மூத்த இரு பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள, கடைசி மகள் அவ்வாறு செய்வதில்லை. அந்தப் பெண்ணை அவர் விலக்கி வைக்கிறார். ஷேக்ஸ்பியரை முழுமையான/ சுருக்க (abridged/original) பதிப்பில் படித்திருந்தவர்கள் இந்தச் சூழலை ‘King Lear’ கதையோடு இணைக்கலாம். ஆம், தன் நாட்டை இரு நன்றிகெட்ட பெண்களுக்கு கொடுத்து துன்பப்பட்ட லியரின் கதையை , ஸ்மைலி லியரின் இரு மூத்த பெண்களின் கோணத்தில் ‘A Thousand Acres’ நாவலில் எழுதியுள்ளார்.
லியராக இதில் லாரி குக். அவர் அரசரல்ல, அதற்கு மாறாக ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரியவர். அவருக்கு மூன்று பெண்கள். மூத்தவள் ஜின்னியும் அடுத்த பெண் ரோசும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் அப்பாவுக்கு ஒத்தாசையாக பண்ணையில் வசிக்கிறார்கள்,. கடைசி பெண் கரோலின் ஒரு வக்கீல். அப்பாவைவிட்டுப் பிரிந்து வேறொரு ஊரில் இருக்கிறாள். குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்கும் ஒரு நாளில் தன் நிலபுலன்களைப் பெண்களுக்குப் பங்கு பிரிப்பதாக லாரி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். ஜின்னியும் ரோசும் இதற்குச் சம்மதிக்கின்றனர். ஆனால் கரோலின் அதற்கு எதிராகக் குரலெழுப்புகிறாள். இதனால் லாரி தன் சொத்தில் கரோலினுக்கு உரிமையில்லை என்று அறிவிக்கிறார். இதையடுத்து தொடரும் நிகழ்வுகள் அனைவரின் வாழ்வையும் துயர் தோய்ந்ததாக மாற்றுகின்றன. நெருங்கிய உறவுகள் கடும் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு , குடும்பத்தினர் அனைவருமே வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுகின்றனர். (more…)
