இரா. கவியரசு
மீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை
பறையடிக்கும் போது
துள்ளிய மீன்களுக்கு
எந்தத் தெருவின்
கடலுக்குள் நுழைவது என்று
மிகப்பெரிய குழப்பம் வந்துவிட்டது.
ஊரின் நடுவேயுள்ள கடலை
அவ்வளவு நேர்த்தியாகப் பிரித்திருந்தார்கள்
வீட்டின் வாசல்களில் மிதந்த திண்ணைகள்
கம்பி வலைகளைப் பதித்திருந்தன.
அழகாகத் துள்ளி ஆடினாலும்
மீன்கள் நாறும் என்பதால்
வீடுகள்
ரகசியமாகக்
கடலுக்குள் மூழ்கி யோசித்து
ருசிக்காக மட்டும் ஏற்றுக் கொண்டன.
இசை நகர்ந்து
வேறு கடலுக்கு சென்றதும்
வீட்டுக்குள் நுழைந்த மீன்கள்
உள்ளே ததும்பும் கடல்
பல்வண்ண அடுக்குகளாக
பிரிந்திருந்தது கண்டு
செவுள்கள் வீங்க அழ ஆரம்பித்தன.
மீன்களைத் தடவியபடியே
துள்ளலின் போது முறுக்கிக் கொண்டிருக்கும்
நரம்புகளின் வேரை அவிழ்த்த வீடுகள்
வாய்க்குள் கைவிட்டு
முதுகெலும்பை உருவி
உருள விட்டு ரசித்தன.
தவழும் மீன்களையே
ஊரின் நடுவேயுள்ள கடல்
எப்போதும் விரும்பியது.
பசி வந்ததும்
கதவை மூடிய வீடுகள்
மீன்களின் கதறலை
இசையென்று அறிவித்த போது
நிம்மதியில்
மலர்ந்து கொண்டிருந்தது பெருங்கடல்.
நள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை
பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை
பெரிய பட்டை வைத்த உள்ளாடை
சிறிய கோடு வைத்த உள்ளாடைக்கான
சூரிய ஒளியை மறைத்தபடி
காய்ந்து கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து நெருக்கப்பட்ட
பெரிய ஆடைகள்
இரண்டையும் தள்ளியபடி
சூரியனை எடுத்துக் கொண்டன.
கிளிப்பை விட்டுப்
பறக்க நினைத்தாலும் அவசரத்திற்குக்
காய்ந்தால் போதுமென நகருகின்றன.
ஈரத்துடன் மோதிக் கொள்வது
எரிச்சலாக இருந்தாலும்
நறுமணத் தண்ணீரில் மூழ்கி எடுத்ததால்
சகித்துக் கொள்வது பழகியிருந்தது.
காய்ந்த பெரிய ஆடைகளை
இரவில் மழைக்கு பயந்து
எடுத்துச் சென்றவர்கள்
உள்ளாடைகளை மறந்து விட்டனர்.
திடீரென கிட்டிய தனிமையில்
கிளிப்பை மறந்து குதித்து
தலையும் கால்களும் முளைத்து
நடனமாட ஆரம்பித்தன.
கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை
நகர்ந்து செல்லும் வீட்டிற்குள்
உள்பக்கமாகப் பூட்டியிருக்கும் கதவுக்கு
சுவற்றின் வண்ணத்தைப் பூசியிருக்கிறார்கள்.
குட்டிக் கதவுகளை சுவர் முழுவதும் வரைந்து
கண்ணாம்பொத்தி ஆடும் குழந்தை
வெளியில் ஒளிந்திருக்கும்
குழந்தையின் தலையைக்
கால்களால் தொடும் ரகசியக் கணத்தில்
சுவரில் வரைந்த குட்டிக்கதவுகள்
பட்டாம்பூச்சிகளாக மாற
இருபுறமும் பறக்கின்றனர்.
வெளியிலிருக்கும் வீடு
இப்படித்தான்
உள்ளே இருக்கும் வீட்டை
நள்ளிரவில் கொஞ்ச ஆரம்பிக்கும்.
நச்சரிப்பு தாளாமல் தள்ளிப்படுக்கும் உள் வீடு
“காணாத சூரிய சந்திர மழைக் கதைகளை
எழுதி எழுதி ஒப்பிக்காதே !
அறைக்கதவுகள்
உடையும்படித் தளும்புகின்றன.
இனி ஒரு போதும்
கதவுகளை அடைக்காமல்
வீட்டை நகர்த்து”
என்கிறது.