இரா. கவியரசு

உள்சுழித்து வளரும் அலை, எறும்புகள் விசேஷமானவை – இரா.கவியரசு கவிதைகள்

உள்சுழித்து வளரும் அலை
வாசனை
தூங்கமுடியாத நோயைப் பரப்புகிறது
இருக்கைக்குப் பின் அமர்ந்து
உந்தித் தள்ளுகிறது காமம்
வாகனங்கள் சீறிப் பாய்கின்றன.
ஒவ்வொரு வீட்டையும்
ஏக்கத்தோடு பார்த்து நகர்பவன்
மெல்லிய ஒளி கசியும் அறைகளிலிருந்து
வெளிவரும் காற்றை
நுரையீரலுக்குள் இறக்குகிறான்
ஓரிடத்தில் நில்லாமல்
விளையாடும் குறுஞ்சுடர்
பாலைமணலாக உடைக்கிறது அவனை.
தற்காப்புக்காக வைத்திருக்கும் கத்தியால்
சுடரை வெட்டுகிறான்
அது அவனை ஊதிச் சிரிக்கிறது.
உள்சுழித்து வளரும் அலை
காயங்களின் இச்சை மீது
கத்தியைச் செருகும் கணங்களில்
நுரைத்துப் பொங்குகிறது கடல்.
விண்மீன்களைப் பிய்த்தெறியும் வேகத்தில்
மேல்நோக்கிச் செல்லமுடியாமல்
வீடுகளை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும்
பூமியை முத்தமிடுகிறான்
விடியல் வந்து கொண்டிருக்கிறது
அவன் மிகவும் புதியவனாக
அதே வீடுகளின் வழி
போர்வைகள் விற்பவனாக
செல்லும் போது
குரைப்பதை மறந்து
சிரிக்கின்றன நாய்கள்
​​எறும்புகள் விசேஷமானவை
கோடிக்கணக்கான
கவிதை எறும்புகள்
பூமியெங்கும் நகர்ந்து செல்கின்றன.
ஒரு முறை நகர்ந்தாலே
தடங்கள்
கூகுள் மேப்பில் வந்துவிடுவதால்
வானத்திலிருந்து கடவுள் கவனித்துக் கொண்டிருப்பதாக நம்பிய பிறகு
விஷேச எறும்புகளாக மாறி
மரங்கள் தோறும்
துளையிட்டு ஊதுகின்றன.
எறும்புகள் வாசிக்கும் இசை
காட்டு விலங்குகளுக்கு
பெரும்பாலும் புரிவதில்லை
கோபத்துடன் உறுமும் போது
எறும்புகள்
தலையைக் காப்பாற்றிக் கொள்ள
பூமிக்கடியில் பதுங்குகின்றன.
எறும்புகளுக்கு
டைனோசராக மாறி
அச்சுறுத்தும் விலங்குகளைத்
தெறிக்க விட வேண்டும் என்பது
கால்கள் முளைத்த நாளிலிருந்து
சொல்லித்தரப் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும்
நசுங்குதல் தவிர
வேறெதுவும் பெரிதாக
நிகழ்ந்து விடுவதில்லை.
எப்போது எங்கு சென்றாலும்
எறும்புகளைத் தேடிப் பிடித்து
தின்று  செரிப்பவர்கள்
எறும்புத்திண்ணிகள் அல்ல
அவர்கள்
எறும்புகளை விடவும் விஷேசமானவர்கள்
லட்சம் எறும்புகள் சேகரித்தும்
வாழ்நாள் முழுதும் ஆராய்ச்சி செய்தும்
ஒரு  எறும்பாக மாறமுடியாதது குறித்து
கோபத்தில் இருக்கும் போது
அவர்களின் தலையிலிருந்து
முடியைப் பிடுங்கி விளையாடும்
இந்தக் குறும்பு எறும்புகளை
என்னதான் செய்வது ?

மீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை

​பறையடிக்கும் போது
துள்ளிய மீன்களுக்கு
எந்தத் தெருவின்
கடலுக்குள் நுழைவது என்று
மிகப்பெரிய குழப்பம் வந்துவிட்டது.

ஊரின் நடுவேயுள்ள கடலை
அவ்வளவு நேர்த்தியாகப் பிரித்திருந்தார்கள்
வீட்டின் வாசல்களில் மிதந்த திண்ணைகள்
கம்பி வலைகளைப் பதித்திருந்தன.

அழகாகத் துள்ளி ஆடினாலும்
மீன்கள்  நாறும் என்பதால்
வீடுகள்
ரகசியமாகக்
கடலுக்குள் மூழ்கி யோசித்து
ருசிக்காக மட்டும் ஏற்றுக் கொண்டன.

இசை நகர்ந்து
வேறு கடலுக்கு சென்றதும்
வீட்டுக்குள் நுழைந்த மீன்கள்
உள்ளே ததும்பும்  கடல்
பல்வண்ண அடுக்குகளாக
பிரிந்திருந்தது கண்டு
செவுள்கள் வீங்க அழ ஆரம்பித்தன.

மீன்களைத் தடவியபடியே
துள்ளலின் போது முறுக்கிக் கொண்டிருக்கும்
நரம்புகளின் வேரை அவிழ்த்த வீடுகள்
வாய்க்குள் கைவிட்டு
முதுகெலும்பை உருவி
உருள விட்டு ரசித்தன.

தவழும் மீன்களையே
ஊரின் நடுவேயுள்ள கடல்
எப்போதும் விரும்பியது.

பசி வந்ததும்
கதவை மூடிய வீடுகள்
மீன்களின் கதறலை
இசையென்று அறிவித்த போது
நிம்மதியில்
மலர்ந்து கொண்டிருந்தது பெருங்கடல்.

நள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை

இடைவெளி இல்லாமல்
கூடிக் கிடக்கும் உடல்களை
சட்டென்று கிழித்துப் பாய்கிறது ​​
ஆம்புலன்ஸ் சைரனின் சிவப்பொளி.
திகிலடையும் நள்ளிரவின் பாதை
மரங்களின் வேர்களை எழுப்புவதால்
அயர்ந்துறங்கும் பறவைகள்
நெஞ்சிலடித்துக் கொள்கின்றன.
இலைகள்
இதயங்களாகத் துடிக்கின்றன.
நகரத்தின் கடைசியாகப் பூட்டப்படும்
தேநீர்க் கடை வாசலில் நிற்பவன்
இறப்பிலிருந்து தப்பிக்கும் படகு
ஆவி பறக்கும்
குவளைக்குள் இருக்கிறதா என
உற்றுப் பார்க்கிறான்.
சர்க்கரை தின்ற எறும்பொன்று
செத்து மிதக்கிறது.
அத்தனை கொடிய தருணத்திலும்
நடைபாதையில் உறங்குபவர்களின் காமத்தை
அனுமதியற்று  நுகருகிறான்.
ஆம்புலன்ஸிற்காக வழி விடுகிறவர்கள்
இறப்பிலிருந்து விலகி
வாழ்வின் வாகனக் கரங்களை
இறுக்கமாகப் பிடித்தபடி
வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
சைரன் ஒலி
தூங்கும் சகல ஜீவராசிகளையும்
உலுக்கி எழுப்புகிறது.
எல்லோர் ரத்தத்திலும்
அப்போது
ஒரு ஆம்புலன்ஸ்
ஓடிக் கொண்டிருக்கிறது.

​பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை

பெரிய பட்டை வைத்த உள்​​ளாடை
சிறிய கோடு வைத்த உள்ளாடைக்கான
சூரிய ஒளியை மறைத்தபடி
காய்ந்து கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து நெருக்கப்பட்ட
பெரிய ஆடைகள்
இரண்டையும் தள்ளியபடி
சூரியனை எடுத்துக் கொண்டன.
கிளிப்பை விட்டுப்
பறக்க நினைத்தாலும் அவசரத்திற்குக்
காய்ந்தால் போதுமென நகருகின்றன.
ஈரத்துடன் மோதிக் கொள்வது
எரிச்சலாக இருந்தாலும்
நறுமணத் தண்ணீரில் மூழ்கி எடுத்ததால்
சகித்துக் கொள்வது பழகியிருந்தது.
காய்ந்த பெரிய ஆடைகளை
இரவில் மழைக்கு பயந்து
எடுத்துச் சென்றவர்கள்
உள்ளாடைகளை மறந்து விட்டனர்.
திடீரென கிட்டிய தனிமையில்
கிளிப்பை மறந்து குதித்து
தலையும் கால்களும் முளைத்து
நடனமாட ஆரம்பித்தன.

​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவிதை

நகர்ந்து செல்லும் வீட்டிற்குள்
உள்பக்கமாகப் பூட்டியிருக்கும் கதவுக்கு
சுவற்றின் வண்ணத்தைப்​​ பூசியிருக்கிறார்கள்.
குட்டிக் கதவுகளை சுவர் முழுவதும் வரைந்து
கண்ணாம்பொத்தி ஆடும் குழந்தை
வெளியில் ஒளிந்திருக்கும்
குழந்தையின் தலையைக்
கால்களால் தொடும் ரகசியக் கணத்தில்
சுவரில் வரைந்த குட்டிக்கதவுகள்
பட்டாம்பூச்சிகளாக மாற
இருபுறமும் பறக்கின்றனர்.
வெளியிலிருக்கும் வீடு
இப்படித்தான்
உள்ளே இருக்கும் வீட்டை
நள்ளிரவில் கொஞ்ச ஆரம்பிக்கும்.
நச்சரிப்பு தாளாமல் தள்ளிப்படுக்கும் உள் வீடு
“காணாத சூரிய சந்திர மழைக் கதைகளை
எழுதி எழுதி ஒப்பிக்காதே !
அறைக்கதவுகள்
உடையும்படித் தளும்புகின்றன.
இனி ஒரு போதும்
கதவுகளை அடைக்காமல்
வீட்டை நகர்த்து”
என்கிறது.