சிகந்தர்வாசி

ஒரு மாதிரி வாழ்க்கை

– சிகந்தர்வாசி – 

 

 

 

அவன் நிறைய சம்பாதித்தான்- என்று
பேசிக் கொள்கிறார்கள், எவ்வளவு
என்று யாருக்கும் தெரியவில்லை

அவன் துவங்கிய கம்பெனியை, ஏதோ
ஒரு நிறுவனம் வாங்கிக் கொண்டது-
32 வயதில் வேலையை விட்டான்

ஜெயநகரில் ஒரு பார்க்கின் அருகில்
வீடு வாங்கிக் கொண்டான், தினமும்
மாலையில் கிரிக்கெட் விளையாடுகிறான்

பணம் இருப்பதாய் காட்டிக் கொள்வதில்லை
அக்கம்பக்கத்தில் இருக்கும் சிறுவர்கள்
விளையாட வருகின்றனர்.

அவன் எந்த இயக்கத்திலும் சேரவில்லை
எந்த இடத்திலும் பணம் போடவில்லை
எந்த சாமியாரிடமும் போகவில்லை

புதுப்புது ஊர்களைப் பார்க்கவில்லை
திருமணம்கூட செய்யவில்லை, எப்போதும்
தன் வீட்டில் ஓய்வாய் இருந்தான்

எப்போதாவது சினிமா போவான், அல்லது
டிவியில் ஸ்போர்ட்ஸ் பார்ப்பான், தினமும்
மாலையில் கிரிக்கெட் விளையாடுவான்

இது என்ன பிழைப்பு, என்று
நினைத்தார்கள், ஒரு லட்சியம்
இல்லாமல், குழந்தை குட்டி இல்லாமல்

வெட்டியாய் தின்பதும் தூங்குவதும்
தினமும் விளையாடுவதுமாய்
வாழ்வதில் யாருக்கு என்ன புண்ணியம்

என்று அக்கம்பக்கத்தில் பேசிக் கொண்டது
அவனுக்குக் கேட்டிருக்குமா, தெரியவில்லை,
ஆனால் ஒவ்வொரு நாளும் மாலை

ஐந்தரை மணிக்கு, மழை
பெய்யாத ஒவ்வொரு நாளும், கிரிக்கெட்
விளையாட வந்துவிடுகிறான்.

 

புகைப்பட உதவி: 3pointmagazine.gr

மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2

– சிகந்தர்வாசி – 

நாங்கள் இந்தக் கோளில் குடியமர்த்தப்பட்ட சில காலத்துக்குப்பின் தொழில்நுட்பத்தைச் செலுத்தும் தீசலெண்ணெய் முதலான உள்ளீட்டுப் பொருட்கள் இல்லாது போயின. இந்த இழப்பைத் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அதுவரை கற்றிருந்த கல்வியின் பயனை இழந்தது.

விவசாயிகளும் வனவாசிகளுமே இத்தகைய மாற்றங்களால் தடுமாற்றமடையாதவர்களாக இருந்தனர். விவசாயிகள் தம்மிடமிருந்த விதைகளைக் கொண்டு தொடர்ந்து பயிர்ச் சாகுபடி செய்தனர். வனவாசிகள் இயற்கையை ஒட்டி வாழ வேண்டிய சூழலில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள எங்கள் அனைவருக்கும் பயிற்சியளித்தனர். மண்வளம் குன்றாதிருந்தது, பயிர்கள் செழித்தன. நாங்கள் கொணர்ந்திருந்த விலங்குகள் வனத்தில் பெருகின. வனவாசிகள் வேட்டையாடக் கற்றுத் தந்தனர். எங்கள் காலனி மெல்ல மெல்ல உணவுப் பற்றாகுறையிலிருந்து மீண்டது. “உணவைப் பொருத்தவரை நாம் தன்னிறைவை எட்டிவிட்டோம்,” என்று ஒரு மேலாண்மை நிபுணர், சுள்ளி பொறுக்கும்போது குறிப்பிட்டதில் உண்மை இல்லாமலில்லை. (more…)

என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்

– சிகந்தர்வாசி – 

 

என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்

என் செவிகள் பழுதாகிவிடவில்லை நண்பா,
என் காதுகளை நானேதான் மூடிக் கொண்டிருக்கிறேன்
கண்களால் இன்னும் கூர்மையாய் கேட்கலாம் என்று
இப்போது சொற்கள் என்னிடம் தெளிவாகப் பேசுகின்றன
உனக்கு சொற்களின் ஓசைதான் தெரியும்
நான் அவற்றின் மௌனத்தை அறிகிறேன்
எனக்கு வேண்டாம்
நடிக்கத் தெரியாதவர்களின் அரைகுறை வசனங்கள்

நண்பா, நன்றாகச் சிரி

கம்பனின் சொற்கள் என்னுடன் நேரடியாகப் பேசுகின்றன.
ராமனின் மென்மையான குரல்,
ஜாம்பவானின் உறுமல்,
மந்தாரையின் கீச்சுக்குரல்,
ராவணனின் முழக்கம்
உன்னால் கேட்க முடியாது நண்பா

சிரி நண்பா, இதற்கும் சிரி

ஸ்வரப்படுத்தபட்ட இசைக்குறிப்பை
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
எவ்வளவு துல்லியமாய் ஒலிக்கிறது மோகனம்
உனக்கோ எதிலும் எதிர்படும் அபஸ்வரங்கள்
நான் சாகித்யகர்த்தாவின் இதயத்தை உணர்கிறேன்
நீயோ மானுட முயற்சிகளோடு போராடுகிறாய்

நீ சிரித்தால் என்ன நண்பா,
நாமிருவரும்தான் நகைக்கிறோம்

நீ நிகழ்கணத்தைக் கேட்டு
நான் காலங்களைக் கண்டு –
இதோ இங்கு ரிஷிகளின் வேதகோஷங்கள், அதோ,
ஏவாளிடம் ஆதாம் ஆப்பிளுக்கும் ஆசைப்படாதே என்கிறான்
அலெக்ஸாண்டரிடம் பேசுகிறானே போரஸ்,
அவன் குரலில்தான் என்னவொரு கம்பீரம்
சாக்ரடீசும் பிளாட்டோவும் பேசிக்கொள்வதைக் கேட்கிறேன்
கலிங்கத்துக்குப்பின் அசோகனின் புலம்பல்
மார்ட்டின் லூதரின் அறச்சீற்றம்
ஹிட்லர் குரலுடன் முசோலினியின் குரலும்
இவர்களுடன் ஸ்டாலினும் சங்கமிக்கும் கோரஸ்
சஹாராவில் ரோம்மல் தலைமையில் டாங்கிகளின் கர்ஜனை
சர்ச்சிலின் எழுச்சி உரைகள்
காந்தியின் சன்னக் குரல் –
உன் காதில் இவை விழுகின்றனவா?

சிரி நண்பா,
அறியாமல் சிரி.

கடந்த காலத்தின் சொற்கள்
எதிர்காலச் சொற்களை எதிரொலிக்கின்றன
உன் தலைவன் பேசப்போவதை நான் அறிவேன்
அரசியல்வாதியின் பரப்புரையில் புதிதாய் என்ன இருக்கும்?-
நாளை முதுமையில் நீயும் உன் பிள்ளைகளிடம்
சொல்லப் போவது அத்தனையும் எனக்குத் தெரியும்
புத்தகத்தைப் புரட்ட புரட்ட
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என காலங்கள்
என்முன் வரிசையாகச் செல்கின்றன

நான் எப்போதும் என் புத்தகங்களில் இருக்கிறேன் நண்பா
என் செவிகள் சொற்களை நாடுகின்றன
அவற்றின் மணத்தை சுவாசிக்கின்றன, அவற்றின் சுவையில்
கரைகின்றன, சொற்களை உண்டு செரிக்கிறேன்
நான் வாழ்வது சொற்களில்தான் நண்பா
ஏதும் கோராத தோழமையில்
எல்லாம் எனக்கென அளிக்கும் புத்தகங்கள்
என் சிலச் சொற்களைப் பெற்றுச் செல்கின்றன
அவை உனக்கில்லை நண்பா

இப்போது நீ என்னை பார்த்து சிரிக்கலாம், நண்பா-
நான் எப்போதும் வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்கிறேன்

 

image credit: Pintores y Pinturas

மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 1

– சிகந்தர்வாசி – 

நான் அணிந்திருக்கும் முகக்கவசத்தைப் பார்க்க சிரிப்பு வருகிறது, இல்லையா? பூட்டப்பட்டிருந்த பெட்டிகளில் ஒன்றில் இந்தக் கருவி இருந்ததை இன்றுதான் கண்டுபிடித்தோம். இதை அணிந்துகொண்டால் நம் கவனம் அதிகரிக்குமாம். ஆக்சிஜன் என்ற சமாச்சாரத்தை ஒரு குழாய் வழியாக மூக்கில் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக இதை அணிந்திருப்பவனது காது அடைத்துக் கொள்கிறது. இவ்வாறாக உலகிலிருந்து துண்டிக்கபட்ட நிலையில் இந்த முகக்கவசத்தில் இருக்கும் இரு சிறு கீறல்களின் வழியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இப்போது இதற்கென்ன அவசியம் வந்தது என்று நீங்கள் கேட்கக்கூடும், என் கவனத்தைக் குவித்து நான் அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறேன்? ஏன் எனக்கு ஒரு பதற்றமாக இருக்கிறது? ஏன் என் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது? என் பதற்றத்துக்குக் காரணம் என்ன? இந்த முகக்கவசம் என் பதற்றத்தைக் குறைக்குமா? இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் எங்கள் வரலாற்றைக் கொஞ்சம் அறிமுகம் செய்ய வேண்டும். (more…)

அவனுள் இருக்கின்றன ஆன்மாக்கள்…

– சிகந்தர்வாசி – 

ரேவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். பாதாதிகேசம் பளபளத்தான் அவன் – கருநிற ஷூக்கள் அணியும் வழக்கம் எப்போதும் இருந்தது. தன் மேலங்கியை அடிக்கடி பாலிஷ் செய்து கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் அதுவும் வெயில் ஒளியில் மினுங்கியது. ரேவனை இப்போது காண நேரிடும் எவரும் அவனை ஒரு நீதிபதியென்றோ பாதிரியாரென்றோதான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவனோ சட்டம் படிக்கும் வாய்ப்பும் சர்ச்சில் சேரும் வாய்ப்பும் கிடைத்திருந்தபோதும் அவ்விரு பாதைகளையும் நிராகரித்திருந்தான். (more…)