எழுத்து

நிறைய கதவுகள் உடைய அறையில்

முருகன் சுந்தரபாண்டியன் 

நிறைய கதவுகள் உடைய அறையில்
எழ முடியாது இருக்கிறேன்
மாற்று இல்லா பொருளாகி
எது கிடத்துகிறது என்னை?

ஒவ்வொரு வாசல் வழியாகவும்

நுழைந்து பார்த்ததும்
நுழைந்ததும்
ஞாபகத்தில் புகைப்படங்களாக
ஏன் தெரிகிறது

அறையில்
ஏன் காற்று குறைகிறது
எல்லாவற்றுக்கும்
ஒரு சன்னலை செய்பவன்
எங்கு தொலைந்தான்

காணாத அறையை கண்டது போல
பாய்ந்த கால்கள்
எங்கு தேங்கி நிற்கின்றன

திறந்த கண்களை மூடி
மூடிய கண்களை திறந்து
விழுந்தமர்கிறேன்
ஒரு இலையை போல

எல்லாவற்றுக்குமான
வெளியை சுவாசிக்கிறேன்
என் இதயத்தை
மெதுவாக முத்தமிடுகிறேன்

எனக்கு தெரிந்தவரைக்கும் சொல்கிறேன்
பல நேரங்களில்
அசைந்து கொண்டிருப்பது நாய் வாலல்ல, ஒளி தான்.

நினைவுகள்

சிவகுமார்

பதறிப் போய்
சிதறிக் கிடக்கும்
என் ஆகச் சிறந்த
நினைவுகளை
பொறுக்குகிறேன்
தரையோடு தரையாக
என்னை
அரைத்துவிட்டுச்
செல்கிறது
நிகழ்காலப்
பெருவாகனம்

என்றும் எம் மக்கள்

ஹேமந்த் குமார் 

இவ்வுலகை இரசிக்கப்
பிறந்தவன் நான்
என் உலகில் கலவரங்கள்
ஒழிவதற்கே – நான்
மானுடம் பாடி மகிழ்கிறேன்

நீ ஆணா பெண்ணா
அவசியமில்லை
உன் சாதியும் மதமும்
அடையாளமில்லை

நீ ஏழையா பணக்காரனா
பாகுபாடில்லை
உன் மொழியும் நாடும்
பிரிவுகளில்லை

நீ மனிதனா மிருகமா
யோசிக்கவில்லை
உன் நிறமும் குணமும்
இணைந்தவையில்லை

நீயும் நானும்
ஒன்றெனக் கண்டேன்
வயிறும் பசியும்
இருக்கும் எவரும்
எம் மக்கள் என்றெண்ணம்
கொண்டேன்

நிகழ்தகவின் மானுடத்துவம்

காஸ்மிக் தூசி

இரவி அணைந்து
இரவு வரக்கண்டு
விடாய் கொண்டு
விழி அயர்ந்து
கடாவு எழ
அனுட்டானம்
எனப் பிரக்ஞை கொண்டு
கண் மலர எழுந்தனன்
யானே இன்று,

எழாவிடின்
உறட்டை
சவம் ஊனம்
ஊத்தைப்பிணம்
மவுத்தி விடக்கு கங்காளம்
கழுமலை நெட்டைகழியுடல்
கிலுமொலெனல்

நிவகம்
எவர்க்கும்
சூதகம்.

ஒழுக்கவாதி

ஆனந்த் குமார்

ஒழுக்கவாதி நாளிதழ்களை
அடுக்கி வைக்கிறார்
ஒன்றின் மீது ஒன்றாக
அவர் நாட்களை அடுக்கி வைக்கிறார்.
மூன்று மாதங்கள் சேர்ந்ததும்
கட்டித் தூக்கி மேலே போடுகிறார்.
பரணில் கொஞ்சம்
தூசு சேர
எடைக்குப் போட மேலே ஏறுகிறார்.
ஒவ்வொரு கட்டாய்
கீழே போட்டு
பெருமூச்சுடன் இறங்கியவர் தலையில்
ஆடி ஆடி வீழ்கிறது
போன வருடத்திற்கு இடையிலிருந்து
அவர் திறந்து பார்த்திராத
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
வண்ணப்பக்கம்.