கவிதை

கைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை

கால எறும்புகள்
ஊர்தலில்
கரைந்து கொண்டிருக்கிறது
கைவிடப்பட்ட வீடு

காணாமல் போகுமுன் 
யாரிடமாவது
பகிர்ந்து விடவேண்டும்
துருவேறிக் கொண்டிருக்கும்
சில ஞாபகங்களை

கவனமீர்த்தலுக்கென்றே சப்திக்கப்பட்ட
கம்பிக் கதவின் ஒலிக்குறிப்பு
பதின்மத்தின் இசையானதை

விசிறியெறியப்பட்ட சோற்றுத்தட்டின் 
விளிம்பு வெட்டிய பிறை வடுவின்
பின்னிருந்த வன்மத்தை

பகிர்ந்து விட வேண்டும் 
கால எறும்புகள் நினைவுகளில்
ஊரும் முன்

எப்போதேனும்
எச்சமிட்டுச் செல்லும்
அயலூர்ப்பறவைக்கும்
வீட்டின் நினைவெச்சங்களின்
மொழி புரியவில்லை

அன்றைய குழந்தை
வீட்டின் மேனியெங்கும்
கரிக்கோடிழுத்த
அம்மா அப்பா
சினை ஆடு
பஞ்சாரக்
கோழிகளென
குடும்பத்துடன்
வாழும்
குச்சுவீடு மட்டும்
பகலில் எரியும் விளக்காக
அரற்றுகிறது கைவிடப்பட்ட
வீட்டின் பகிரமுடியா துயரத்தை

என்னுடையது – காஸ்மிக் தூசி கவிதை

எதையாவது ஒன்றை
எழுதும்போதும்
எதையாவது ஒன்றை
கடன் வாங்க
வேண்டி இருக்கிறது
எவருக்கோ உரியதை
அவர் அனுமதி இன்றி
எடுத்துக்கொள்ள
வேண்டி வருகிறது

ஒரு எண்ணம்
ஒரு படிமம்
ஒரு சிந்தனை
ஒரு சொல்
ஒரு எழுத்து
மற்றும்
இவற்றைத்தாண்டியும்
இவற்றில் அடங்காததுமான
ஏதோ ஒன்று
அல்லது
ஒன்றுக்கும் மேற்பட்டது.

யாரோ ஒருவரின்
உடலில் இருந்துகொண்டு
எவரோ ஒருவரின்
இருக்கையில்
அமர்ந்து கொண்டு
பாதங்களிலில் படிந்துவிட்ட
துல்லியமாக
குறிப்பிட்டுச் சொல்ல முடியாத
காலத்தின் தூசை
துடைக்க முயன்றபடி

எதைப்பற்றியோ
எவரோ ஒருவர்
எப்பவோ
கற்பிதம் செய்தது போல
இதோ,
எழுதி முடித்து விட்டேன்.

இதில்
என்னுடையது
என்பது
எது?

கவியரசு கவிதைகள் – காற்றை நோக்கி செல்லும் பூ , ​​உயரத்தின் உச்சியில்

காற்றை நோக்கி செல்லும் பூ

ஒவ்வொரு இதழிலும்
பொய்யை வரைவதற்காக
வெகுதூரம் பயணித்து வரும் காற்றின்மீது
அந்தப் பூவுக்கு
கோபம் வருவதே இல்லை

வரைந்த பொய்களை
பிற பூக்களுக்குக்கிடையே
நடித்துக் காட்டும்போது
அது அழுவதும் இல்லை

ஒருமுறை
பொய்யை எழுதும் போது
“நீ எழுதுவது பொய்தானே “
என்று குதித்த பூ
அதற்குப்பிறகு
வண்ணங்களற்ற வெள்ளைப் பாடலை
முனுமுனுக்க ஆரம்பித்தது

மற்றுமொரு நாளில்
பூவுக்காக
நறுமணங்கள் வாங்கி வந்த காற்று
பொய்களின் பருவங்களைக் கடந்து விட்டோம்
இனி வசந்தம் மட்டும்தான்
என மீண்டும் பேச ஆரம்பித்தது

காற்றை இரண்டாகப் பிரித்து
கட்டிக்கொண்ட பூ
“ரெண்டு பேருக்கும் செல்லமாம் ”
என்று சிரித்த போது
காற்று
பூவின் வேர்களில்
துகள்களாக உடைந்தது.

இந்த முறை
காற்று வெறுமனே வந்து
பூவை ஏந்திக் கொண்டு பறக்கிறது
ஒவ்வொரு கைகளாக
பூ நகர்ந்து
காற்று பிறக்குமிடத்துச் ​செல்கிறது.

​​உயரத்தின் உச்சியில்

உயரத்தின் உச்சியில்
வெறுமனே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது
பெயர் தெரியாத ஆடு

மண்டையோடுகள் தொங்கிக் கொண்டிருக்கும்
கூரான கொடிக்கம்பத்தில்
எனக்கான இடத்தைத்
தேர்வு செய்கிறவன்
கொடியை ஏற்றுமாறு அழைக்கிறான்

என் பெயரை
எதிரொலிக்காத மலைகளை
வெட்டித்தள்ள வேண்டும்.
இல்லாத காற்றை
எப்படிக் கொல்வது ?

வருகின்ற வழியெல்லாம்
என் குருதித் தடங்கள் காய்ந்து விடாமல்
அடைகாக்க வேண்டுமென்றேன்

தேன்துளிகளை நோக்கி
​​விரைந்து செல்கின்றன
தடங்களை அழித்தபடி
நகரும் எறும்புகள்

கரையான் புற்றுகளை உதைத்தவன்
உள்ளிருந்த காகிதக்கூழின்
நறுமணத்துக்குத் தீவைத்துப்
பரவ விடுகிறான்

பயந்து
நான்
பின்னோக்கி இறங்குகிறேன்.
கடலுக்குள் மூழ்குகின்றன
ஏறிய மலைகள்.

பின்னால் கூடி வருதல் – செல்வசங்கரன் கவிதை

பின்னால் திரும்பி நடந்து வந்தவனை நிறுத்தி
ஆச்சர்யத்துடன் ஒருவன் கேட்ட பொழுது
வெகு காலத்திற்குத் தலையின் முன்பக்கத்தையே காட்டிப் பழகிவிட்டதால்
தனது பின் பக்கத் தலையை எல்லாருக்கும் பழக்குவதற்காக
இவ்வாறு செய்வதாகக் கூறினான்
உடனடியாக ஆச்சர்யத்தை அங்கிருந்து லேசாக நகர்த்தியபடியே
இனி மரங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்ப வேண்டியதிருக்கும்
சட்டையை திருப்பிப் போட்டு அலைய வேண்டியதிருக்கும்
பைக்கைத் திடீரென நிறுத்தி எல்லாவற்றையும்
கழட்டி எறிய வேண்டியதிருக்கும்
எந்நேரமும் எதையாவது பிடித்து இழுக்க வேண்டியதிருக்கும்
வாய்க்குள்ளேயும் கையை விட்டு நோண்டி
ஒன்று ஒன்றாகப் பிய்க்க வேண்டியிருக்கும் பரவாயில்லையாயென
வெறும் சொன்னதற்காகப் போய்
பார்த்தவன் இவ்வளவு பறக்கிறான்
நான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறேனென
பின்னால் திரும்பியவன் பாவம் மிகவும் வருத்தப்பட்டு
பின்னால் கூடி வந்துகொண்டிருந்தான்

வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்: ஆதி, புதிர்

ஆதி

ஒரு நிர்மல வெளியின் விளிம்பிலமர்ந்து

அதிகாலை வானம் உற்றுக்கொண்டிருந்தேன்.

மெதுமெதுவாய் கீழிறங்கி

கையெட்டும் உயரத்தில் நின்றுவிட்ட வானத்தை

மயிலிறகாய் வருடுகையில்

விசுக்கென கடலைப் பொழிந்துவிட்டது.

விசைதாளாது நிர்தாட்சண்யமாய்க் கிடத்தப்பட்டேன்

பெருவெளியொன்றில்.

கழன்றவிழும் மரத்தின்

கடைசி வெண்சிறு மலர்போல்

தற்போது எனைநோக்கிக் கீழிறங்கும்

இக்கடைசி துளியில்

என் ஆதியைக் காண்கிறேன்

நானற்ற ஒரு நானாய்

இந்நிலத்தின் பெரும்பேராய்.

புதிர் உலகம்

பூ வரையச் சொல்லி கேட்டாள்

இரண்டரை வயது மகள்.

எனக்குத் தெரிந்த மாதிரி

வரைந்து தந்தேன்.

முட்டைபோல் ஏதோவொன்றை வரைந்து

பூவெனக் காட்டினாள்.

சிரத்தையோடு சில நேர்க்கோடு வரைந்து

அதன்மேல் அச்சு தீட்டச் சொன்னேன்.

அசட்டையாக

எண்ணற்ற வளைகோடுகளை

சளைக்காது வரைந்து தள்ளினாள்.

பின்பு

பல்பம் தேய்ந்துவிட்டதென

மீண்டுமொன்றைப் பெற்றுக்கொண்டு

கண்கள் மூடுமாறு கட்டளையிட்டாள்.

அரைநிமிடம் கழித்தே காண வாய்த்தது

அவள் தீட்டிய ஒரு அற்புத உலகம்.

அவள் மட்டுமே விடையறிந்த

அப் புதிர் உலகினுள் நுழைய இயலாமல்

வெறுமனே ஒருமுறை

எட்டிப்பார்த்துவிட்டு மட்டும்

நகர்ந்துவிட்டேன்.