சதுர மதில் குளமது
இரவில் தனித்து
சலனமற்று
மௌனித்திருக்கிறது
பகலில் ரிஷிகளும்
முனிகளும்
இறங்காதிருக்கக்
கடவது.
சதுர மதில் குளமது
இரவில் தனித்து
சலனமற்று
மௌனித்திருக்கிறது
பகலில் ரிஷிகளும்
முனிகளும்
இறங்காதிருக்கக்
கடவது.
திருப்பங்களை தொலைத்தாலும்
நீண்டதொரு நடையில்
மீண்டும் வந்து சேர்ந்துவிடுகிறேன்.
புழுக்கமான இறுக்க பாதைகளிலும்
மெல்லிய மூச்சிழுப்பில்
காற்றுக்கான வெளியை
தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.
பாதையோரத்து சாளரங்கள்
சாத்தப்படும் சத்தங்களை சமன்செய்ய
விரிசல் வழியே வழியும்
புன்னகைகளை உருவகிக்க முடிகிறது.
விசித்திர வடிவங்கள் காட்டியபடி
நீண்டு பின்தொடரும்
என் நிழல்கள்
சற்றேனும் இப்பூமியை
குளிர்வித்திருக்கும்.
♪
எனது எல்லாவிதமான அவாவுதலும்
முதல் நிலத்தின் மையப் புள்ளிக்குள் மாத்திரமே
மயக்கமுற்றுக் கிடக்கிறது.
எ்னக்கான நிலமொன்று
வானக் கிளையில் அமர்ந்து
பறவை போல காத்திருப்பதை
மறக்கவே எத்தனிக்கிறேன்.
எனக்கான பிரதியும்
அதன் நிசப்த வாசிப்பும்
அந்நிலத்தில் விளையும்
அப்பிள் கனிகளும்
நான் விரும்பிய உயர்ந்த மதுக்குவளையும்
அங்குதான் இருக்கின்றன.
எனது முதல் நிலம்
வெற்றுத்தாளில் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியை ஒத்ததும்
வண்ணமற்றதுமான நிறப் பிரியை
என்பதை எனக்குள்ளிருக்கும்
நான் அறிவதற்கு
மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
வீடு திரும்புதல் மிக அவசியமானது
ஆரம்பித்த இடத்தில் முடிப்பதே
பறவைகளின் கூடு திரும்புதலின்
இன்னுமொரு யுக்தி
வனத்தில் வாழும் குரங்குகளும் அப்படிதான்
எனினும் நான்
வீடு திரும்ப விரும்பாதவனாய் இருக்கவே விரும்புகிறேன்.
எனது இறுதி நிலம் காத்துக் கிடக்கிறது
தொன்மங்களை அள்ளிக் கொண்டு
நான் முதல் நிலத்திலேயே
தாவிக் கொண்டிருக்கிறேன்
நிணம் தின்னும் பிசாசுகளுடன்
வாழ்வது எனக்குப் பிடித்துப் போய்விட்டது.
மன்னிக்க,
நான் என்பது எழுத்துப் பிழை.
அம்மாவின் தோளில் தொற்றியபடி
நீரில் துழாவிச் செல்கிறான்
குளத்தின் ஆழப்பகுதி நெருங்க
கிலேசமும் உவகையுமாக
கூக்குரலிடுகிறான்.
தனக்கென ஓர் உலகு கொண்ட
தனித்துவ சிறுவன்..
அவனுக்கு எட்டாத இன்னொரு உலகு
அடுத்த தடங்களில் இயங்குகிறது.
விசிலோசைக்கு ஏற்ப
இராணுவ ஒழுங்கோடு
படபடத்தப்படி போகின்றன
நீரில் தத்தளிக்கும்
பட்டாம்பூச்சிகள்
புள்ளிகள் மேவிய வளைய வடிவான
பச்சை வண்ண சீப்பி ஒன்றை
பார்த்தபடியே இருக்கிறார்.
முகம் என்னவோ உணர்ச்சி மிகுதியில்
விண்டுவிடுவது போல் தளும்பி நிற்கிறது
ஒரு குழந்தையின் மோகன சிரிப்பையோ
ஒரு பிரிவின் துயரையோ
உலர்ந்த சருகுகள் முறியும் ஓசையையோ
முனை மழுங்கிய சீப்பி கொண்டு
ஒருவரின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியையோ
அவர் எண்ணிக் கொண்டிருக்கலாம்.
விழியகற்றி என்னைப்
நோக்கி திரும்பும்போது
அந்த சீப்பிப் பற்றிய எந்த தடயமுமற்ற
முற்றிலும் வேறொரு சங்கதி பற்றி
பேச்செடுக்க தயாராகிறேன்.