சிறுகதை

அப்பால் இருப்பவள்

விஜயகுமார் 

1

தாய் தந்தையரே இப்படி செய்வார்களா? தேவியை இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படி வீட்டிலேயே வைத்திருப்பதாக அவர்களுக்கு உத்தேசம். அவளுடைய சம்பளமே அவளுக்கு தடையாக வரும் என்று யார் நினைத்தார்கள். இரண்டில் ஒன்று இன்று தெரிந்தாக வேண்டும். சாரதா வெதும்பிக்கொண்டே தன் சித்தி வீட்டுக் கதவைத் தட்டினாள்.

சாரதா அன்று அதீத சினம் ஏறியவளாகத்தான் இருந்தாள். மறுமுறை தட்டுவதற்குள் சித்தி கதவைத் திறந்தாள். “வா கண்ணு..” என்று மலர்ந்தாள் சித்தி. சண்டைக்காரி போல் வந்திருந்த சாரதாவை பேச்சில்லாமல் ஆக்கியது. அவளும் லேசாக சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள். “நீ மட்டும் வந்திருக்க? பாப்பா, மாப்பிள்ளை யாரும் வரல?” என்ற விசாரிப்புக்கு “வரல” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டாள்.

“தேவி உள்ளயா இருக்கா?”

“ஆமா, லேப்டாப்பில வேல செஞ்சுகிட்டு இருக்கா.”

உள்ளே சென்றதும் அந்த சிறிய ஹாலையே நிரப்பிககிடப்பதுபோல சித்தப்பா டிவி பார்த்துக்கொண்டு தரையில் படுத்திருந்தார். “வா சாரதா..” என்றார். மறுமொழி ஏதும் சொல்லாமல் அரைக்கணம் மட்டும் அவர் கண்களை வெறுமனே பார்த்துவிட்டு தேவி இருக்கும் உள் அறைக்கு சென்றாள்.

“தேவி…. அக்கா வந்துருக்கா பாரு…..” என்று சித்தி குரல் பின்னால் கேட்டது.

நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும்போது காட்டவேண்டிய முகபாவனையை தயார் செய்துகொண்டே சாரதா உள்ளே சென்றாள். சாரதாவின் வருகையை கேட்டு தன் மடிக்கணினியை விட்டு எழுந்து நின்றிருந்தாள் தேவி. பெருங்கூட்டு உடம்புக்காரி மெலிந்து நைந்துபோய் இருந்தாள். தேவியின் வற்றிய உடல் சில வருடங்களுக்கு முன் அவள் வனப்பாய் இருந்த இளமையை சாரதாவிற்கு ஞாபகப்படுத்தியது.

“இது தேவியே அல்ல. தேவியின் சாயலில் உள்ள வேறு யாரோ. வேறு எதுவோ” சாரதாவின் கண் சட்டென்று கலங்கியது. சுதாரித்துக்கொண்டு தயார் செய்து வைத்திருந்த பாவனைக்கு மீண்டாள்.

“எப்படிடீ இருக்க. எளச்சுட்ட..” என்று அவள் தொளைப் பிடித்தாள். அது சதைப்பிடிப்பு ஏதுமில்லாமல் பொசுக்கென்று இருந்தது.

“நல்லா இருக்கேன்க்கா.. பாப்பா மாமாவெல்லாம் வரலையா? கூட்டி வந்திருக்கலாமில்ல.”

“நான் உன்ன பாக்கத்தான் வந்தேன்” என்றதும் புரிந்துகொண்டவள் போல் தலையசைத்தாள். முகம் சிறுத்துக்கொண்டு வந்தது.

எடுத்தயெடுப்பிலேயே தேவி அமைதியானாள். சங்கடமான சில வினாடிகளுக்குப் பின் சாரதா “நேத்து நல்ல மழை போல. இந்த வருஷமே ஏகதேசமா எல்லா பக்கமும் நல்ல மழை” என்றாள். தேவி, “அப்படியாக்கா…” என்று மட்டும் சொன்னாள். இருவரும் கட்டிலில் அமர்ந்துகொண்டனர். சில பல பொது விசாரிப்புகளின் வழியாக தேவியிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்பதுதான் சாரதாவின் முனைப்பு. முனைப்பு எல்லாம் ஏதோ சுவற்றில் மோதுவதுபோல் நின்றது.

சித்தி சில பலகாரங்கள் கொண்டுவந்தாள். “மாமனார் மாமியார் எல்லாம் நல்ல இருக்காங்களா?” என்று ஆரம்பித்து சித்தி பிடித்துக்கொண்டாள். உடல் நலம், விவசாய முட்டுவிலி, போக்குவரத்து, வான் நிலவரம் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சித்தி வட்டமடித்து நீட்டி முழக்கிக் கொண்டிருந்தாள். சாரதாவின் சங்கடம் கூடிவரவே தேவி, “அம்மா, அக்காவை கொஞ்சம் சும்மா விடு” என்றாள்.

“என்னடி இது. நீ உன் வேலையப் பாரு. பெரியவங்க என்ன பேசுனா உனக்கு என்ன?”

சாரதா சலிப்பு தட்டி, “ஜாதகமெல்லாம் வருதா?” என்று மையப் பேச்சை எடுத்தாள்.

“அது வந்துகிட்டேதான் இருக்கு. எங்க! உங்க சித்தப்பாவே பாதி ஜாதகத்த சரி இல்லேன்னு கழிச்சு போடுறாரு. அதுக்குமேல கேட்டா சண்டைதான் வருது.”

“இப்படி சொன்னா எப்படி சித்தி. நம்ம பொண்ணு இன்னும் சின்ன பொண்ணா? இன்னும் வருஷம் இருக்குன்னு நினைக்க.”

“இந்த அஞ்சு வருசமா நாங்களும் பாத்துகிட்டே இருக்கோம். யாரு கண்ணு பட்டதோ! நாம இப்போ ஊருக்குள்ள வசதி வாய்ப்பா இருக்கோமில்ல, அதான் எல்லாருக்கும் பல்லெரிச்சல். வர்ற ஒன்னு ரெண்டு இடத்தையும் அது இதுன்னு சொல்லி கலைச்சு போடுறானுங்க.”

சித்தி முடிக்கும் முன்னே சாரதா மறித்து தொடர்ந்தாள், “சித்தி, இன்னும் ஆறேழு மாசத்துல நாங்க வெளிநாடு போயிடுவோம். அவர் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கார். அதுக்குள்ள பாத்தாதானே நான் வந்து கல்யாணத்துக்கு வேலை செய்ய முடியும். அவளுக்கு இருக்குற ஒரே அக்கா நான்தான். நான் பாத்து செய்யுற மாறி வருமா?” கொஞ்சம் மூச்சுவிட்டு; தயங்குவதுபோல் ஆரம்பித்தாள். “இவ சம்பாரிக்கறதுதான எல்லாம். அது இதுன்னு காரணம் சொல்லாம நாலு தரகர நாமதான் போய் பாக்கணும். வர்ற ஜாதகத்த மட்டும் பாத்தா போதுமா? நான் எத்தன ஜாதகம் சொல்லி இருப்பேன். ஆச்சு இல்லேன்னு எனக்காவது ஒரு பதில் சொன்னீங்களா? உங்க ஆர்வம் அவ்வளவுதானா?” என்று கடிந்தாள். சித்தி பேச்சு தடைபட்டு நின்றாள்.

இல்லா பதில்களை கண்ணீர் நிறைக்கிறது. பார்ப்பதற்க்கு உண்மை போலவே இருந்தது. உண்மையேதான். முனைப்பின்றி சித்தியின் கண்கள் வழிந்தோடின. “உன்கிட்ட சொல்றதுக்கு என்ன. நாங்களும் போகாத கோயில் இல்ல பாக்காத இடமில்ல. ஏதும் அமைய மாட்டீங்குது. உங்க சித்தப்பாவும் எதுவும் என்கிட்டே பெருசா கலந்துக்க மாட்டிங்கறாரு. நான்தான் கெடந்து தவிக்கிறேன். யார் வீட்டுக்கு வந்தாலும் நாம எங்க போனாலும் யாராவது இவளப்பத்தி கேட்டுடுவாங்களோன்னு பயந்து பயந்து வருது.” என்று முந்தானையில் மூக்கு சிந்தினாள்.

“நான் அதுக்கு சொல்ல வரல சித்தி. நீங்க ரொம்ப கழிக்கிறீங்கன்னு..” என்று சொல்லி முடிப்பதற்குள் “நாங்க எங்க கழிக்கிறோம். தோதா வந்தா போதும்னுதான் பாக்குறோம். நான் சொல்லவும் முடியாம இருக்கவும் முடியாம கெடக்கேன் தெரியுமா. ஒரு பல்வலி வந்தாலும் சரி, மூட்டுவழி வந்தாலும் சரி கம்முன்னுதான் இருக்கேன். என்னால தடங்கல் வரக்கூடாதுன்னு. நான் அவ்ளோதான் செய்யமுடியும். என் பேச்ச இங்க யாரு கேக்குறா.”

தேவி தரையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேறு ஏதோ உலகத்தில். இவர்கள் யாரும் இல்லாத உலகத்தில்.

தேவிக்காக நியாயம் கேட்க வந்த சாரதா தன் சித்தியின் நியாயங்களை கேட்கும்படி ஆகிவிட்டது. சித்தி தனக்குத்தானே பேசுவதுபோல் இடைவிடாது பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். சாரதாவும் எப்படி எப்படியோ தன் சித்தியின் வார்த்தை ஓட்டத்தை பிடித்து தேவியின் கல்யாண விஷயத்துக்கு கொண்டு வர முயற்சித்தாள். சித்தியின் மன ஓட்டம் பல திசைகளிலும் சிதறி வடிகால் கண்டு கொண்டிருந்தது.

சாரதா அமைதியானாள். தேவி மெலிதாக சிரித்தாள்.

சித்தி, “உங்க அம்மாயி செத்துப் போனாக்கூட நாலு பேர் மத்தியில மனசார அழுது தொலைக்கலாம். அதுக்கும் வழி இல்லாம உங்க அம்மாயியும் கிண்ணுனு இருக்கு. போன வாரம்தான் போய் பார்த்துட்டு வந்தேன்.” என்றதோடு நிறுத்தினாள். சாரதா ஏற்கனவே நிறுத்தி இருந்தாள். தேவி வெகுகாலம் முன்பே நின்றிருந்தாள்.

மூவரும் பேச்சின்றி ஆனார்கள். சொல்லி முடித்த சித்தி, சொல்ல முடியாத சாரதா, சொல்ல ஏதுமில்லாத தேவி, பேச்சின்றி அமர்ந்திருந்தனர். எழுந்து செல்லவோ பேசவோ மனமின்றி அமர்ந்திருந்தனர். மூச்சு சப்தம் மட்டும் சிறிது நேரம் கேட்டு அடங்கியது.

இந்த அசௌகரியமான நிசப்தத்தை குலைக்க சாரதா மட்டும் ஏதோ சொல்ல எத்தனித்தாள். தொண்டைவரை இயம்பிய சொற்கள் தோற்று பின்வாங்கி மீண்டும் அடிவயிற்றுக்கே சென்று அடங்கியது.

சித்தி சுவற்றைப் பார்த்தும் தேவி தரையைப் பார்த்தும் நிலை கொண்டிருந்தனர். அணிகள் ஏதும் இல்லாத அமைதி அருகில் வந்து அமர்ந்து கொண்டது. அமர்ந்த அமைதி அனைவரையும் கிடுக்கிப் பிடியாக பிடித்துக் கொண்டது.

நிசப்தம் புறமாக அமைதி அகமாக மௌனம் ஆழமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

தனி மனம் அடங்கியதால் கூட்டு மனம் மேல் எழும்பியது. அங்கே சொற்கள் கரைந்திருந்தன ஆகையால் எண்ணங்கள் கரைந்திருந்தன ஆகையால் முரண்கள் கரைந்திருந்தன. ஆகையால் அவள் இவள் அது இது அங்கே இங்கே அன்று இன்று என்ற பேதம் இல்லாமலிருந்தது. அங்கே சித்தியின் நியாயத்தை சாரதாவும் சாரதாவின் ஆதங்கத்தை சித்தியும் கண்டனர். கூட்டு மனதிற்கு அப்பால் தேவி இருந்தாள். பிரிந்து சிதற அங்கு இச்சை இல்லாததால் அவர்கள் ஒற்றை மூச்சு இயக்கமாக அமர்ந்தே இருந்தனர். வழக்கமாக கேட்கும் காக்கையின் கரைச்சலோ பசுவின் மெய்ச்சலோ கோழியின் கொத்தலோ வேப்பமரத்தின் அசைவோ இல்லாமல் அவர்களுக்கு இயற்கைச் சூழல் சமைத்து தந்திருந்தது. அரிதினும் அரிதாக நிகழும் அது நிகழ்ந்தது. கூட்டு மனம் ஆழ்மனத்தில் தடுக்கி விழுந்தது. க்ஷணத்திலும் சிறிய க்ஷணமான அணுவிலும் சிறிய அணுவான அந்த அகால வெளிக்குள் பிரவேசித்தனர்.

அங்கு தேவி முற்றாய் இருந்தாள்.

அவர்கள் அங்கே வந்த மாத்திரத்திலேயே தத்தம் இச்சைகள் வந்து அவர்களை கலைத்து பின்னிழுத்து சென்றது. மீண்ட சாரதா பெருவெடிப்பாய் உடைந்து அழுதாள். வாய் பிளந்து வாய் விட்டு வாய் இழுத்து. மீண்ட சித்தி வெறுமனே அவர்களை பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினாள்.

தர்க்கத்திற்கு சிக்காத அந்த உணர்வெழுச்சியால் சாரதா தரையை அறைந்து அறைந்து அழுதாள். அறையும் கரங்களை தேவி பற்றிக்கொண்டாள். சாரதாவை தன் நெஞ்சோடு அணைத்து சமாதானப்படுத்துபவள் போல் தலையை வருடிக்கொடுத்தாள். “அக்கா இப்ப என்ன ஆச்சு… வேணாம் வேணாம் விடு விடு… நான் நல்லாத்தான் இருக்கேன் எல்லாம் சீக்கிரம் சரியா போயிடும். நீ கவலைப்படாத அக்கா. எல்லாம் சீக்கிரம் சரியாப் போயிடும். எல்லாம் சீக்கிரம் சரியாப் போயிடும்,” தேவி சாரதாவின் தலையை தடவி சொல்லிக் கொண்டிருந்தாள். சாரதா மெல்ல மெல்ல தன்னிலை மீண்டாள். மெல்ல மெல்ல விம்மலும் நின்றுவிட்டிருந்தது.

“ச்சே.. நான் ஏன் அழறேன்னே தெரியல”

“பரவால்லக்கா”

மீண்டும் அமைதியானார்கள். அவ்வமைதிக்குள் மீண்டும் பிரவேசிக்க பயந்த சாரதா அசட்டையாக சிரித்துவிட்டு, “உன்கிட்ட என்னமோ இருக்குடி. சித்தி சித்தப்பாக்குதான் அது தெரியல. ஏன் தெரியாம? எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. உன் சம்பளத்தை பார்த்து பழகினவங்க அவ்வளவு சீக்கிரமா உன்னை கட்டி கொடுத்துடுவாங்களா? வீடு நிறைய இத்தன புது ஜாமணங்க. எல்லாம் உன் சம்பளம் தானே? இந்த வீட்டிலே என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுதா இல்லையா?

“அக்கா….” என்று சிறிது இடைவெளி விட்டு “உன்ன விட எனக்கு நல்லா தெரியும்கா”

சாரதா தேவியை பரிதாபமாக பார்த்தாள். இந்த பொண்ணு எவ்வளவு பெரிய வார்த்தைய சொல்லிடுச்சு. தெருஞ்சுமா இங்க இப்படி பூதம் மாதிரி உட்கார்ந்து இருக்கு. இப்படி தன்னுடைய வாழ்க்கைய சுரண்டரதுக்கு அனுமதிக்குதே. இவங்க எல்லாம் நல்லா இருப்பாங்களா?

அவள் எண்ணங்களை உணர்ந்தது போல் தேவி, “அக்கா நீ ஒன்னும் நினைக்காதே. என் சம்மதம் இல்லாமயா இதெல்லாம் நடக்குதுன்னு நினைக்கிறே? எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் அப்புறம் எல்லாம் சரியாயிடும். நீ வேணா பாரு”

சாரதாவுக்கு தன் தலையை யாரோ இன்னும் வருடிக்கொடுப்பது போலவே இருந்தது. ஏதோ நூற்றாண்டு சங்கடத்திற்கு ஆறுதல் சொல்வது போல. தீர்வு சொல்வது போல.

சாரதா முழுமையாக தன்னிலை மீண்டிருந்தாள். அவர்கள் சம்பாஷணையை வேறு எங்கேயாவது எடுத்துச் செல்ல சாரதா பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். தேவி அதை புரிந்து முழுமையாக ஒத்துழைத்தாள். இருவரும் சேர்ந்து பழைய ஆல்பம் பார்த்தார்கள். சிறுவயது சேஷ்டைகளை நினைவு கூர்ந்தார்கள். நேரம் செல்ல செல்ல சாரதா சேயாகவும் தேவி தாயாகவும் அங்கு பாவனையில் இருந்தார்கள். சாரதாவும் அந்தப் பாவனையிலேயே லயித்திருந்தாள். சாரதாவின் அன்ன உடலையும் மனோ உடலையும் ஆனந்த உடலையும் ஏதோ அரூப கரங்கள் வருடிக் கொண்டேயிருந்தன.

அன்று சாயங்காலம் சாரதா சொல்லிக்கொண்டு கிளம்பும்போது தான் வந்து தீர்வுகாண இங்கே ஏதுமில்லை என்பதையும் தேவியின் வாழ்வு பற்றிய ஒரு குழப்பமான சமாதானத்தையும் அவள் மனம் ஏற்றிருந்தது. ஏதோ ஒரு வகையில் அவள் வாய் விட்டு அழுதது ஒரு சௌக்கியமான விடுதலையாக இருந்தது. அந்த விடுதலையே அந்நேரம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

2

சில மாதங்கள் கடந்திருந்தது. சித்தி வீட்டாரை தொடர்பு கொண்டு வரன் பற்றிய விஷயங்களைக் கேட்க சாரதாவால் ஏனோ முடியவில்லை. கேட்காமலேயே அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவளால் ஊகிக்க முடிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தின் தேவியின் சம்பளத்தை தோராயமாக கணக்கு போட்டுப் பார்த்தாள். யாருக்குத்தான் ஆசை வராது. சாரதாவின் கைப்பேசி சிணுங்கவே அதை எடுத்துப் பார்த்தவளுக்கு கருக்கென்று இருந்தது. சித்தி அழைத்துக் கொண்டிருந்தாள். சாரதாவின் நெஞ்சின் மேல் திடீரென்று பாறாங்கல்லை வைத்தது போல் ஒரு அழுத்தம்.

“ஹலோ சித்தி..” என்றவுடனே சித்தி அழுதுகொண்டே சாரதா என்றாள்.

“சித்தி.. என்ன ஆச்சு?.. சித்தி அழாதீங்க.. தேவிக்கு என்ன…?”

“அவ பிதுறு கெட்ட மாறி இருக்கா சாரதா. என்ன செய்யறதுன்னே தெரில.”

“சித்தி! என்ன. பிதுறு கெட்ட மாதிரின்னா?”

“பிரம்ம புடிச்ச மாறி இருக்கா. உக்காந்தா கெடைய விட்டு எழுந்திரிக்க மாட்டேங்குறா. கண்ண மூடுன்னா தொறக்க மாட்டேங்குறா. தொறந்தா மூட மாட்டேங்குறா. உங்க சித்தப்பா சொல்றத பாத்தா பயமா இருக்கு.” என்று அழுதுகொண்டே சொன்ன சித்தியின் சொற்கள் தோராயமாகத்தான் கேட்டது என்றாலும் சாரதா புரிந்துகொண்டாள்.

“பேசுறாளா?”

“ஒன்னு ரெண்டுன்னு எப்பவாச்சியும். நீ வந்துட்டு போ கண்ணு..”

“வர்றேன் சித்தி. இன்னிக்கே வர்றேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். நான் வந்து பேசிப்பாக்குறேன்”

“வீட்டுல யாருகிட்டேயும்….”

“அதெல்லாம் யாருக்கும் தெரிய வேண்டாம்”

ஒரு நாள் தயங்கினாள். அடுத்த நாள் சித்தியே போனில் அழைத்து இப்போ வர வேண்டாம் என்றாள். இப்போது ஒரு அளவேனும் நல்ல முறையில் இருப்பதாகவும். மனநல மருத்துவரை பார்க்க ஒப்புவதாகவும் சொன்னாள். சாரதா அதிகப்படியான தன் விசாரிப்பின் வழியாக தான் தயங்கிய அந்த ஒரு நாளை சரிகட்டிக் கொண்டாள்.

சிறிது நாட்கள் கழித்து சித்தியே மறுபடியும் அழைத்து இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றும் மருத்துவர் நல்ல கைராசிக்காரர் என்றும் சொன்னாள். எல்லாம் பழைய நிலைமைக்கே வந்துவிட்டது என்றும் தனக்கு இப்போதுதான் உயிர் வந்தது என்றும் பல சொற்களில் பொழிந்துகொண்டே சென்றாள். “கைராசின்னா அப்படி ஒரு கைராசி. மருந்து மாத்திரை ஒன்னும் இல்ல சும்மா பேசியே சரி செஞ்சிட்டாரு. இவளும் கிளிப்பிள்ளை மாதிரி நடந்தா பாரு. சும்மா சொல்றேன்னு நினைக்காத உனக்கும் மனசு சரி இல்லேன்னா ஒரு எட்டு போய் பாத்துட்டு வா. சரியா”

“தேவிகிட்ட பேசட்டா?

“அவ போனுக்கே போடு. ஆமா மைக்ரோ ஓவென் வச்சுருக்கியா நீ.”

“ஹ்ம் என்ன?…… தேவி மறுபடியும் வேலைக்கு கீலைக்கு…..”

“அதெல்லாம் கெட்டிக்கார பொண்ணு வேற கம்பெனில இன்னும் அதிக சம்பளமாமே. உங்க சித்தப்பா சொன்னாரு. அது சரி நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்ன்னு இருந்தேன், மைக்ரோ ஓவேன்ல அரிசி வேகுமா?”

“ஏன் சித்தி! இத்தனைக்கு அப்புறமும் தேவிய வேலைக்கு அனுப்பனுமா?”

“அட அதுதான் அவளுக்கு சந்தோஷம். ஆமா அப்பளம்கூட சுடலாமாமே உண்மையா?”

சித்திக்கு தேவையான பதிலை சொல்லிவிட்டு தனக்கான கேள்வியை தேக்கி வைத்துக்கொண்டாள்.

ஒரு மாதம் இந்த உறுத்தலை சாரதா ஆறப்போட்டிருந்தாள். அங்கிருந்து சாதகமாகவோ பாதகமாகவோ எதுவும் செய்தி வரவில்லை. சித்தப்பா பணம் சேர்த்துக் கொண்டிருப்பார் என்றுமட்டும் தோன்றியது. சித்தி மைக்ரோ ஓவன் வாங்கியிருப்பாள். உருவாகி வந்திருந்த ஒவ்வாமை கால இடைவெளியினால் மட்டுப்பட்டிருந்தது. ஒவ்வாமையை புதுப்பிக்கும் வண்ணம் மீண்டும் சித்தியிடமிருந்து அழைப்பு வந்தது. சாரதாவிற்கு உள்ளுக்குள் அடித்துக்கொண்டது.

“ஹலோ சித்தி…”

……..

“ஹலோ சித்தி கேக்குதா? தேவிக்கு ஏதாவது.. என்ன ஆச்சு..”

சித்தி விசும்பியவாறு, “உங்க அம்மாயி தவரீருச்சு”

சாரதா ஆசுவாசமானாள்.

“தேவிதான் பக்கத்துல இருந்தா. அவதான் போன் பண்ணினா.”

“என்ன! தேவி பக்கத்துல இருந்தாளா? அம்மாயி உயிர் போறப்பவா? யாரு அவள அங்க போகச் சொன்னது? தேவி இப்போ எப்படி இருக்கா?” சாரதா பதட்டமாகக் கேட்டாள்.

“டாக்டர் தான் ஒரு சேஞ்சு வேணும்ன்னு சொன்னாரு. அவதான் அம்மாயி வீட்டுக்குப் போறேன்னா. ஏண்டி கண்ணு என்ன ஆச்சு” தன் சோக பாவனையை கைவிட்டு குழப்பமாகக் கேட்டாள்.

“சித்தி உங்களுக்கு புரியுதா இல்லையா. அவ இருக்கற நிலைமையில அவளை தனியா அங்க. சரி விடுங்க இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”

“அம்மாயி வீட்லதான். உங்க சித்தப்பாதான் பந்தல், ஆளுக்காரங்க, சாப்பாடு எல்லாம் ரெடி பண்றாரு. எல்லா செலவும் அவர்தான் பாக்குறாரு.”

“சரி நாங்க இப்பவே கெளம்புறோம்.”

குடும்பம் சகிதமாக சாரதா அம்மாயி வீட்டுக்கு வரும்போது புதியதாய் வேய்ந்திருந்த பந்தல் அவர்களை வரவேற்றது. அதற்கு நடுவில் நின்று சித்தப்பா ஆள்காரர்களிடம் உரக்க பேசிக்கொண்டிருந்தார். இந்நிகழ்வின் முக்கியஸ்தர்போல தன் புது பணக்கார அந்தஸ்த்தை பயிற்சி செய்துகொண்டிருந்தார். தேவியின் பணத்தை யார் யாரிடமோ எடுத்து நீட்டிக் கொண்டிருந்தார். ஜனங்கள் வரத் தொடங்கியிருந்தார்கள்.

சாரதா உள்ளே நடையும் ஓட்டமுமாக சென்று தேவியை தேடினாள். சித்தி அம்மாயியின் தயார் செய்த உடலருகே அமர்ந்திருந்தாள். சாரதாவைப் பார்த்ததும் தேவி உள் அறையில் இருப்பதாக சமிக்ஞை செய்தாள். சாரதா உள்ளே செல்லும்போது அவ்வறை சந்தன வாசத்தால் நிரம்பியிருந்தது. தேவியைப் போல் இருந்த ஏதோ ஒன்று “அக்கா…” என்றது. சாரதா சிறுகுழந்தையென அதன் மடிமீது விழுந்தாள். அது சாரதாவை ஏந்திக்கொண்டது. விழுந்தவள் கதறி அழுதாள். நேரம் செல்லச் செல்ல அவள் அழுகை தீவிரம் அடைந்தது. கடைசியாக அழுகை ஓய்ந்து மெல்லிய கண்ணீராக வழிந்தது. சாரதா அனைத்திற்கும் சேர்த்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். அது சாரதாவை வருடிக் கொடுத்தது. சாரதா அதனருகில் அமர்ந்திருந்தாள். சாரதா என்னவாகவோ ஆகிப் போயிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அது தேவியாக காட்சி செய்தது.

தேவியைப் பார்த்த சாரதா தன்னை திரட்டிக்கொண்டாள். மெதுவாகவும் தயக்கமாகவும் கேட்டாள், “என்னடி இதெல்லாம்?”

தேவி, ” என்னக்கா? அம்மாயி போயிடுச்சு. அம்மா இதுக்குத்தான ஆசைப்பட்டுச்சு. ஆசைப்பட்டா நடக்க வேண்டியதுதான.”

“என்னடி என்னென்னவோ பேசுற. எனக்கு பயமா வருது”

“என்னக்கா பயம். சும்மா இரு. அதுதான் நான் இருக்கேன்ல்ல”

என்னடி முகத்துல எந்த சோகமும் இல்லாத மாதிரி இருக்க.. அம்மாயி செத்துப் போச்சுன்னு உனக்கு தெரியுதா?”

“தெரியாம என்னக்கா…. நான்தான அனுப்பி வெச்சதே….”

பேயறைந்தார் போல் சாரதா தேவியைப் பார்த்தாள். அதே அரூபக் கரங்கள் சாரதாவின் தலையை வருடிக்கொடுத்தன. சாரதாவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்ள மூச்சுத்திணறல் நெஞ்சையடைக்க அந்தக் கரங்களை தட்டிவிட்டு கூட்டத்தை பிளந்து காற்றிற்காக வெளியே ஓடினாள். உலகம் சுற்றியது. உடல் ஒருபுறம் மனம் ஒருபுறம் உயிர் ஒருபுறம் பிரிந்து நின்று கூத்தடித்தது. பந்தலை விட்டு வெளியேறி ஒரு செக்கின் மீது அமர்ந்து சிதறித் தெறித்த மூச்சுக் காற்றை சீர் செய்தாள். மூச்சு இழுத்து இழுத்து விட்டாள். சீரடைந்ததும் உடைந்து அழுதாள்.

சித்தி ஆசைதீர அழுது திளைத்தாள். சித்தப்பா அந்தஸ்தில் திளைத்தார். சாரதா அச்சத்தோடு இது அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்தாள். இனி தான் செய்ய சுத்தமாக ஏதுமில்லை என்பதை உணர்ந்தாள். அம்மாயி காடு சேரும்வரை பிணம் போல் இருந்துவிட்டு குழந்தை கணவனை இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு ஓடியே போனாள்.

3

சாரதாவின் குடும்பம் வெளிநாடு சென்றுவிட்டதாக சித்தி அறிந்தாள். சொல்லிக் கொள்ளமால் சென்றுவிட்டாள் என்று சித்தி வருந்தவில்லை.சித்தப்பா கார் வாங்கியதிலிருந்து அவளுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிந்திருந்தது. இதை இப்படியே விட்டு வைக்கலாகாது. சிறிது நாட்களாக ஜாதகம் வருவதும் நின்றிருந்தது. தரகர் வருவதே இல்லை. அவரிடம் நியாயம் கேட்டதற்கு முதல் நாள் அடி வாங்கினாள் இரண்டாம் நாள் உதை வாங்கினாள் மூன்றாம் நாள் இவளும் கை ஓங்கினாள் நான்காம் நாள் சண்டையை வீதிக்கு இழுத்து வந்தாள் ஐந்தாம் நாள் தேவியை வேலை செய்ய விடவில்லை ஆறாம் நாள் புதிய ஜோதிடரைப் பார்க்க கணவனும் மனைவியும் சென்று வந்தார்கள். தேவி அக்காட்சிகளுக்கு எல்லாம் வெறும் சாட்சியாக இருந்தாள்.

புதிய ஜோதிடரிடம் சென்று வந்த நம்பிக்கையை சித்தி மந்திரம்போல் ஜபித்துக் கொண்டிருந்தாள். “ஆசைப்பட்டது நடக்கும்; எல்லாம் சரியா போகும்…..; ஆசைப்பட்டது நடக்கும்; எல்லாம் சரியா போகும்….”

“நான் ஆசைப்படறதெல்லாம் இப்போ ஒண்ணே ஒண்ணுதான்…. தாயே தெய்வமே எல்லாம் சரியா போகணும்”

குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்று சொல்லியிருந்தது ஜோதிடம். சித்தப்பா புதிய கார் ஓட்டும் ஆர்வத்திலும் சித்தி வரப்போகும் எல்லாம் சரியாகிப்போன காலத்தை எதிர்நோக்கியும் தேவி அவர்கள் கேட்டதை கொடுத்துவிடும் தீர்மானத்துடனும் எட்டுக்கையம்மன் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

சித்தி வழிநெடுகிலும் புலம்பிக்கொண்டும் வேண்டிக்கொண்டும் வந்தாள். “நீ வேணா பாரேன் இந்தக் கோவிலுக்கு போயிட்டு வந்தோமுன்னா எல்லாம் சட்டுபுட்டுன்னு நடக்கும். நாம நெனச்சமாறி” தேவி அமைதியாக இருந்தாள். “எத்தன நாளைக்கு இப்படியே இருக்குறது.. அது அது கரெக்ட்டா நடக்க வேண்டாமா… அந்த ஜோசியக்காரன் சொன்னா சொன்னதுதான். நம்மக்கு விடிவுகாலம் வந்திருச்சு. எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிடும்” தேவி அமைதியாக இருந்தாள். “ஆனாலும் பாரு எல்லாம் காலம் வர்ற வரைக்கும்தான் இப்படி. அதுக்குண்டான காலம் வந்துருச்சுனா எல்லாம் சரியா போய்டும்.” தேவி அமைதியாக இருந்தாள். இன்னாரிடம் சொல்கிறோம் என்றில்லாமல் அவளுக்கு அவளே சொல்லி சொல்லி எதையோ கட்டிக் கொண்டிருந்தாள். தேவி எல்லாவற்றையும் வெறுமனே பார்த்தவாறு இருந்தாள்.

கோயில் முற்றத்தில் இவர்களை இறக்கி விட்டுவிட்டு நல்ல நிழலான பாதுகாப்பான இடம் தேடி காரை நிறுத்த சென்றுவிட்டார். பொங்கப் பானை சாமான்களை சித்தி அவளாகவே எடுத்துக்கொண்டு ஒரு தோதான இடம் தேடி வைத்துவிட்டு, மாலை பூஜை பொருட்கள் மற்றும் இதர சாமான்கள் வாங்க புலம்பிக்கொண்டே சென்றாள். “வந்தாச்சு… வந்தாச்சு … பொங்க வெக்கிறோம் விளக்கு ஏத்துறோம் ஆத்துல குளிக்கிறோம் சாமி கும்பிடுறோம் அப்புறம் நம்மள புடிச்ச கருமத்தை இங்கேயே தொலைச்சுட்டு போறோம். கருமத்தை இங்கேயே தொலைச்சுட்டு போறோம். இங்கேயே தொலைச்சுட்டு போறோம்.” சொல்லி சொல்லி புலம்பி புலம்பி சித்தி தீர்க்கப்படுத்திக் கொண்டாள்.

காருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாத ஒரு சௌகரியமான இடத்தில் நிறுத்திவிட்டு தேவியின் அப்பா சாவகாசமாக வந்தார்.

பொங்கல் வைப்பதற்கு அடுப்பு கற்களை உருட்டிக் கொண்டிருந்தவள், “தேவி எங்கே?” என்று கேட்டாள்.

“ஏய் என்ன என்கிட்டே கேக்குற? தேவி எங்க?”

“ஏங்க! நீங்கதான கார் நிறுத்த கூட்டிட்டு போனீங்க..”

“இல்ல அவ உன்கூடவே இறங்கீட்டா…”

சுற்றும் முற்றும் பார்த்தனர். மனித முகங்களினூடே தேவி தென்படவில்லை. “சும்மா நிக்காதீங்க போய் தேடுங்க.” என்று சொல்லிவிட்டு எழுந்து ஆற்றுப் படித்துறைக்கு தேவியை தேடி சென்றாள். சித்தப்பா கோயிலுக்குள் தேட சென்றார். ஆற்றுப் படிக்கட்டு, குளிக்குமிடம், தல விருட்சத் திண்ணை, முடி காணிக்கை மண்டபம், தேர் மண்டபம், கடை வீதி என்று தேடிக் களைத்தாள். தேவி கோயிலுக்குள்ளும் இல்லை காருக்குள்ளும் இல்லை என்று வந்து நின்றார். சித்தி அழ ஆரம்பித்தாள். சித்தப்பா நின்ற இடத்திலேயே இன்ன எண்ணம் என்று தெரியாமல் சுற்றிமுற்றி பார்த்தார். எங்கும் மனிதர்கள். வெவ்வேறு முகங்கள். வெவ்வேறு பாவனைகள் வெவ்வேறு மனிதர்கள். அம்மனிதர்களுக்கு இடையே தேவி இருக்கவில்லை.

4

ஏழு பகல் ஏழு இரவு தேடினார்கள். சாமியார் மடத்தில் புதிய பெண் சாமி வந்திருப்பதாக சொன்னபோது சென்று தேடினார்கள். கருவறையில் ஒருத்தி நுழைந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு சென்று தேடினார்கள். படித்துறையில் அடிதடியின்போது. தலவிருட்ச திண்ணையில் ஒற்றை ஆடை பெண் ஒருத்தி குறி சொல்வதாய் சொன்னபோது. முதல் பெண் திகம்பர அடிகள் வந்துள்ளார் என்று சொன்னபோது. ஓடி ஓடி களைத்தார்கள். எல்லாம் சரியாகிப் போகும் என்றிருந்த நிலைமை போய் இதெல்லாம் முடிந்தால் போதும் என்றாகிவிட்டது.

எல்லோரையும் கேட்டார்கள். போலீசிடம் பூசாரியிடம் கடைக்காரர்களிடம் வந்து செல்வோரிடம். கேட்டவர்களிடமே திரும்ப கேட்டார்கள். யார் யாரோ எங்கெங்கோ எப்படியெப்படியோ பார்த்ததாக துப்பு சொன்னார்கள். சொன்ன இடம் சென்று ஏமாந்தார்கள். சமீபமாக கிணற்றில் விழுந்ததையும் இரயிலில் அடிபட்டதையும்கூட பார்த்து கழித்தார்கள்.

சித்தப்பா அழ ஆரம்பித்திருந்தார். சித்தி நிறுத்தியிருந்தாள். சித்தப்பா ஆகாரம் தவிர்க்க ஆரம்பித்திருந்தார். சித்தி மீண்டும் ஏற்க ஆரம்பித்திருந்தாள். இருவரும் ஒன்றன் பின் ஒன்றான வேறுவேறு உலகத்தில் இருந்தார்கள்.

கொந்தளிப்பும் இல்லாத சமாதானமும் இல்லாத ஒரு மனம் வந்தமைந்தது. எல்லா செயலும் முறிந்து நின்றது. சேர்ந்து தேடியோர் அகன்று கொண்டனர். தகவல் கிடைத்தால் சொல்லி அனுப்புவதாக போலீஸ் சொல்லிவிட்டது. கொஞ்சம் அக்கறை செலுத்தியோர் வீடு சென்று வர அறிவுறுத்தனர். இவர்கள் உலகம் இங்கேயே நின்றுவிட. இவர்கள் விட்டுவந்த உலகம் முன் சென்றுகொண்டிருந்தது.

“வீட்டுக்கு போய் மேல என்ன செய்றதுன்னு யோசிப்போம்” என்று சித்தப்பா சொல்லும்போது எதுவும் சொல்லாமல் இருந்தாள். “வந்த வேலை முடிந்தது. எல்லாம் சரியாக போய்விட்டது. கருமம் தொலைந்து விட்டது. அதற்குத்தானே வந்தோம்” என்று மனம் அங்கதமாக நினைக்காமல் இல்லை. நினைத்தவுடனேயே கடிந்துகொண்டது. கடிந்துகொண்டவுடன் அதுவும் செய்ய வேண்டிய செயல்தான் என்று தர்க்கம் பேசியது. வெகுநேரம் அமைதியாய் இருந்துவிட்டு போகலாம் என்றாள். அவள் அதை சொல்வாள் என்று சித்தப்பா அறிந்திருந்தார்.

அவ்விடம் விட்டு சென்றவர்களை அங்குள்ளோர் மீண்டும் இதுநாள் வரை பார்க்கவில்லை

5

ஆண்டியர் மடத்தில் அன்று எல்லோரும் குதூகலமாக இருந்தார்கள்.

“தெய்வம் வருகுதுடோய் ஒரு தெய்வம் வருகுதுடோய்
அட ஆண்டி புதிய தெய்வம் வருகுதுடோய்

கூடு ஏது வீடு ஏது டோய் – அட ஆண்டி
உனக்கு காடுகூட தான் ஏது டோய்

விதி உண்டா கதி உண்டா டோய் – இல்லை
வெறும் செயல் மட்டும் தான் உண்டா டோய்

செயல் ஒடுங்கும் மந்திரம் தெரியுமோ டோய்
மந்திர உட்பொருள் சூத்திரம் தெரியுமா டோய்
சூத்திரம் துலக்கும் மறைபொருள் அறியுமா டோய்

உடல் கரையுமோ உளம் கரையுமோ டோய்
உயிர் கூட சேர்ந்து கரையுமோ டோய்

வந்த வேலை முடிந்ததோ டோய்

தந்தாநே டோய் தாநாநே டோய்
தெய்வம் வருகுதுடோய் புதிய தெய்வம் வருகுதுடோய்.”

6

சாரதா மூன்றாவது குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டு கோவிலுக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆற்றில் அகலப்பரப்பில் தட்டையாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. விசுவிசுவென்று ஈரக் காற்று அவளை முழுதும் நனைத்து சென்றது. ஆற்றுப் படுகை பகலின் வெம்மையை மேல் அனுப்பிக்கொண்டிருந்தது. கீழ்வானம் மஞ்சளாகவும் மேல்வானம் நீலமாகவும் அந்தி நிரப்பிக் கொண்டிருந்தது. அவள் இப்போது தனிமையையோ அமைதியையோ விரும்புவது இல்லை. தடுக்கி விழுந்துவிட்டால்? மேல் மனம் தேவியை நினைப்பதே இல்லை அடி மனம் மறப்பதே இல்லை. தேவியின் மென்மயிர் தேகம், அகலமான தோள்கள், நீள்வட்ட முகம், நேர்நின்ற மார்பு, வற்றிய வயிறு, அவளின் முக ஓட்டங்கள் அக பாவனைகள் என்று எதையும்.

அடி மனம் அவளைக் காண விரும்பியதோ என்னவோ தேவியின் முகம் மின்னல்போல் ஒரு கீற்றாக எங்கோ தோன்றி மறைந்தது. சாரதாவிற்கு நெஞ்சு அடைத்தது. பரவச படபடப்பு அவளை நிரப்பியது. அங்குமிங்கும் பார்த்தாள். தென்படவில்லை. இல்லை, அது இங்கேதான் இருக்கிறது. தேவியாய் காட்சி கொள்கிறது. அருகில் பார்க்காதே தொலைவில் பார். தொலைவில் பார்க்காதே அருகில் பார். அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் அக்கரைப் பரப்பில் ஒற்றை ஆடையுடன் தேவியாகிய அது சாரதாவைப் பார்த்து நின்றுகொண்டிருந்தது.

ஜடாமுடியுடன், சாதாரணமாக, மிக சாதாரணமாக. காலநிலையால் அடிபட்டு தேகமே உயிராக. புதிராகவோ புனிதமாகவோ புராணமாகவோ இல்லாமல் வெறுமனே நேரடியாக.

தன்னைப்போலவே.

அவள் அருகில் சில பிச்சைக்கார ஆண்டிகள்.

இரு வேறு கரைகளில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செய்வலர்: செமிகோலன் 

சிலந்தி

ப. மதியழகன்

ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது அந்த புனித சேவியர் தேவாலயம். கஜா புயலால் உருக்குலைந்து போன ஆலயத்தை செப்பனிட்டு வந்தார்கள். அங்கு பாதிரியாராக வேலை பார்ப்பவர் செபஸ்டியன். சர்ச் வளாகத்துக்குள் தான் அவர் வீடு. அவர் இந்த தேவாலயத்திற்கு மாற்றலாகி வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆசாரி ஜோசப் தான் சன் சவுண்ட் சர்வீஸ் வச்சிருக்காருன்னு செல்வராசுவை பாதிரியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

செல்வராசு ஐந்தாம் வகுப்புவரை கிறித்தவ மிஷனரி நடத்திய பள்ளியில் தான் படித்தான். அதனால் பாதிரியாரின் வெள்ளை அங்கியைப் பாரத்தவுடன் அவர்மீது தனி மதிப்பும் மரியாதையும் அவனை அறியாமலேயே மனதில் எழுந்தது.

“எத்தனை வருசமா இந்த லைன்ல இருக்கீங்க” என்று கேட்டார் செபஸ்டியன்.

“அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து ஸ்பீக்கரைத் தூக்கிட்டுத் தான் அலையறான்” என்றார் பதிலுக்கு ஆசாரி.

“எங்க வீடு?”

“வீமன் நகர்ல நாலுவீடு தள்ளி ஒரு குடிசை.”

“குழந்தை குட்யெல்லாம்?”

“ஒரு பொண்ணு மூணு வயசு ஆகுது.”

“ஸ்கூல்ல சேத்தாச்சா?”

“இந்த வருஷம்தான் சேக்கணும்.”

“கட்டடத்துல எல்லா மராமரத்து வேலையும் முடிஞ்சிடுச்சி எலக்ட்ரிஷன் வேலைதான் பாக்கி. ஜான் இவரை பிரேயர் ஹாலுக்கு அழைச்சிட்டு போய் காட்டு.”

செல்வராசு வாழ்நாளில் முதல்முறையா பிரார்த்தனைக் கூடத்துக்குள் நுழைந்தான். இருக்கைகளுக்கு எதிரே ஆளுயர சிலுவை மட்டுமே இருந்தது. ஜான் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தான். ஆனால் செல்வாராசுவின் சிந்தனை வேறெங்கோ இருந்தது. ஆனாலும் காதில் வாங்கிக் கொண்டதாக தலையாட்டினான்.

இருவரும் பாதிரியாரிடம் வந்தார்கள். “என்ன செல்வராசு பாத்தாச்சில்ல. இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை இன்னும் ஒரு வாரத்துல திறக்கப் போறோம். வெல்கம் போர்டு, லைட் செட்டிங், எல்ஈடி-ல் சர்ச் பேரு ஓடுற மாதிரி எல்லாத்தையும் செஞ்சு தந்துடு. எப்ப வேலையை ஆரம்பிக்க போற?”

“அட்வான்ஸ் ஒரு ஐயாயிரம் கொடுங்க. மீதியை எல்லாம் முடிச்சதுக்கப்புறம் வாங்கிக்கிறேன். நாளைக்கு வேலைய ஆரம்பிச்சிடலாம்.”

“ஜான் செல்வராசுகிட்ட ஒரு ஐயாயிரம் கொடுத்துவுடு. வேலை எந்த நிலைமையில இருக்குன்னு டெய்லி என்கிட்ட வந்து சொல்றது உன் வேலை ஜான்.”

“அப்ப நான் வர்றேங்க ஐயா” என விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் செல்வராசு.

செல்வராசு டிவிஎஸ் எக்ஸலில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் பார்த்த சிலுவை அவன் கண்களில் நிழலாடியது. அது காந்தம் போல் அவனை ஈர்த்தது. அங்கு எழுதியிருந்த நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்து போனது. யோசனையிலேயே வீடுவந்து சேர்ந்தான்.

கதவைத் திறந்துவிட்ட செல்லக்கண்ணு “என்ன ஐயா பலமான யோசனையிலேயே இருக்காரு” என்றாள்.

வண்டியை ஸ்டான்டு போட்டு நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் செல்வராசு. “ஐயாவுக்கு என்ன ஆச்சாம் வாய்க்கா வரப்புத் தகராறுன்னு பஞ்சாயத்து பண்ணப் போனீங்களா?” என்றாள் செல்லக்கண்ணு

“சர்ச்க்கு போயிருந்தேன் செல்லம்!”

“எதுக்கு?”

“ஒரு வேலையா! புயல்ல சேதமடைஞ்ச கட்டடத்தை சீர் பண்ணி இப்பத் திறக்கப்போறாங்க. லைட்டிங்கும், சவுண்ட் சர்வீஸும் நான் தான். ஃபாதர்கிட்ட ஐயாயிரம் அட்வான்ஸ் கூட வாங்கிட்டேன்.” சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்து செல்லக்கண்ணுவிடம் நீட்டினான்.

பணத்தை வாங்கிக் கொண்ட செல்லக்கண்ணு, “அதுக்கும் மூஞ்சி செத்துப்போனதுக்கும் என்ன சம்பந்தம்” என்றாள்.

“அங்க சிலுவை வைச்சிருந்தாங்க. அதைத்தான் கும்பிடறாங்க. ஒரே மாதிரியான இருக்கைதான் ஏழை, பணக்காரன்னு எந்த வித்தியாசமும் இல்லை. சூடத்துகிட்ட நெருப்பைக் கொண்டுபோனா திடீர்ன்னு பத்திக்கும் பாரு அது மாதிரி உள்ளுக்குள்ள ஏதோ எரியறது செல்லம்.”

“கோயில் கோயிலா சுத்துனப்ப பண்ணாதது இப்ப பண்ணுதாக்கும். சோத்த தின்னுட்டு படுங்க. அட்வான்ஸ் பணத்தை சாமிகிட்ட வைக்கிறேன் காலையில எடுத்துக்குங்க.”

வேலை விஷயமாக பேச வேண்டி இருந்ததால் மறுநாள் பாதிரியாரின் வீட்டிற்குச் சென்றான் செல்வராசு. அறையில் கணவனும், மனைவியும் பாதிரியாரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். காத்திருக்கலாம் என்று வெளியே உள்ளே பெஞ்ச்ல் அமர்ந்தான் செல்வராசு. அறைக்குள் அவர்கள் பேசிக் கொண்டிருப்பது நன்றாக அவன் காதில் விழுந்தது.

“ஃபாதர் இந்த உலகத்துல எதுவும் பெருசாத் தெரியலை குழந்தைகளைத் தவிர. வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கறதே குழந்தை தான். என்ன தான் மாளிகையா இருந்தாலும் குழந்தை அழும் சத்தம் கேட்கலைனா அது குடிசை தான், கர்த்தர் எங்களை ஏன் சோதிக்கிறார்” என்றது ஆண்குரல்.

“பெஞ்சமின் ஓரிடத்தில் செல்வம் இருக்கின்றது குழந்தை இல்லை, அதே வேறோரிடத்தில் குழந்தை இருக்கின்றது செல்வமில்லை. இதை கர்த்தரின் சோதனை எனக் கருதினால் அவர் மீது அவநம்பிக்கை கொள்வதற்கு ஒப்பாகும். அதே வேளையில் குழந்தை குழந்தைதான் அது யாருடையதாக இருந்தால் என்ன?” இது ஃபாதரின் குரல்.

“மருத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்துதான் உங்களை நாடி வந்திருக்கிறோம். நீங்கள் தான் எங்கள் பிரார்த்தனையை பரலோக பிதாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றது அப்பெண் குரல்.

ஃபாதர் தொடர்ந்தார் “ஜெபம் செய்கிறேன். உங்கள் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. அதே வேளையில் பெற்றால்தான் பிள்ளையா இந்த உலகிலுள்ள குழந்தைகள் அனைத்தும் உங்கள் குழந்தைகளாக நீங்கள் உணரவில்லையா? அந்த கடவுட் தன்மை தாய்மை உணர்வு உங்கள் இருவரிடமிருந்தும் பொங்கி எழவில்லையா?”

“நாங்கள் சொத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்வோம். அதற்குரிய வல்லமை எங்களிடம் இருவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் குழந்தை வரத்திற்கு கடவுளின் அனுக்கிரகம் தேவையாய் இருக்கிறது. இவ்விஷயத்தில் எங்கள் விருப்பத்தைக் கணக்கில் கொள்வது என்னவோ பூஜ்யம் தான்.”

“வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருப்பவரை பிரார்த்திப்போம், வேறென்ன நம்மால் முடியும். குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள் பாருங்கள் நிச்சயமாக கர்த்தர் உங்களுக்கு வழி பண்ணுவார். அவருடைய கிருபை உங்கள் இருவர் மீதும் இறங்கட்டும்” என்றார் ஃபாதர்.

“இன்னொன்றையும் முடிவு செய்துகொண்டுதான் இங்கு வந்துள்ளோம். ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்க்கின்ற போது அதுவே குழந்தை பெறுவதற்கு கர்த்தரின் ஆசிர்வாதமாக அமையும் என்று என் சிநேகிதர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதில் உங்கள் அபிப்ராயம் என்ன ஃபாதர்” என்றது ஆண்குரல்.

“உங்களை ஆறுதல்படுத்துவதற்காக அப்படிச் சொல்லி இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. வசதியற்ற குழந்தைக்கு உணவும், படிப்பும் அளிப்பது பரலோகத்தில் உங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தும். உங்களின் சிநேகிதர்கள் வார்த்தைகள் மூலம் கர்த்தர் உங்களை வழிநடத்தி இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் ஃபாதர்.

“எனக்கும் என் கணவருக்கும் பெண் குழந்தைதான் விருப்பம், மூன்று வயதுக்குள் உள்ள குழந்தையென்றால் பரவாயில்லை. உங்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறோம்” என்று பேசியது பெண்குரல்.

“ஃபாதர் கர்த்தரின் விருப்பம் அப்படியானால் அப்படியே நடக்கட்டும் போய்வாருங்கள்” என அந்த தம்பதிகளுக்கு விடை தந்தார்.

அறையை விட்டு வெளியே வந்த பாதிரியார் செல்வராசுவைப் பார்த்து “என்ன செல்வராசு ரொம்ப நேரம் ஆச்சா வந்து” என்றார்.

“அதுயிருக்கட்டும் இப்ப என்ன ஆகிப்போச்சி பரவாயில்லை ஃபாதர். லைட்டிங் சாதா குண்டுபல்பா எல்ஈடியா ன்னு கேட்க வந்தேன் ஃபாதர். எல்ஈடி னா கொஞ்சம் அதிகம் செலவாகும். அப்புறம் எல்ஈடி டிஸ்பிளே ஐந்தடி போதுங்களா” என்றான் செல்வராசு.

“ஐந்தடி போதும், சீரியல் செட் எல்ஈடி யா என்னன்னு ஜான்கிட்ட கேட்டுக்க” என்று சொல்லிவிட்ட ஃபாதர் வீட்டினுள் சென்றார்.

செல்வராசு பைக்கை எடுத்துக் கொண்டு சர்ச் வாயிலை கடக்க முற்பட்ட போது எதிரே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ராஜா ஓடிவந்தான். “தங்கச்சி வயித்துவலின்னு தாங்கமுடியாம மயங்கி விழுந்திடிச்சி பக்கத்துல மலர் ஆஸ்பிடல்ல சேத்துருக்கோம்” என்றான். பதட்டத்துடன் மலர் ஆஸ்பிடல் சென்றான் செல்வராசு.

செல்லக்கண்ணு பெட்டில் படுத்திருந்தாள். மயக்கம் தெளிந்துவிடும் என்று நர்ஸ் சொல்லிச் சென்றாள். ஸ்கேன் ரிப்போட் வந்திருக்கு டாக்டர் உங்களை கூப்பிடுகிறார் என்று நர்ஸ் வந்து சொல்ல செல்வராசு உடன் சென்றான்.

“உங்க மனைவிக்கு கர்ப்பப்பையில கட்டி ஃபாம்ஆகி இருக்கு. கட்டியை மட்டும் ரிமூவ் பண்றது கஷ்டம் அது அவ்வளவு நல்லதுஇல்ல திரும்பவும் ஃபாம் ஆக சான்ஸ் இருக்கு அதனால் கர்ப்பப்பையை ரிமூவ் பண்ணனும் அதுக்கு ரெண்டுலட்சம் ஆகும் உங்களால முடியும்னா இங்க வைச்சி பாக்குறோம் இல்லன்னா ஜிஹெச் க்கு அழைச்சிட்டுப் போங்க. இன்னைக்கு ஈவ்னிங் குள்ள முடிவை சொல்லுங்க. இம்மீடியட்டா இன்னும் டுவெண்டி ஃபோர் ஹவர்ஸக்குள்ள அவங்களுக்கு ஆபரேசன் பண்ணியாகனும்.”

செல்வராசுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. செல்லக்கண்ணு கண்விழித்து வித்யாவைப் பற்றிக் கேட்க பக்கத்துவீட்டில் விட்டு வந்திருப்பதாகச் சொன்னான்.

திரும்பவும் மயக்கமடைந்தாள். நர்ஸ் வந்து பார்த்துவிட்டு இன்னைக்குள்ள பணம் கட்டுங்க ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க என்றாள்.

செல்வராசு ஒரு முடிவுக்கு வந்தவனாய் பக்கத்துவீட்டில் இருந்த வித்யாவை அழைத்துக் கொண்டு பாதிரியாரிடம் சென்றான். அவர் அறையில் இருந்தார்.

“என்ன செல்வராசு?”

“ஐயா ஒரு சேதி!”

“என்ன?”

“இவ எம் பொண்ணு”

“உங்ககிட்ட புருஷன்பொஞ்சாதி ரெண்டுபேர் குழந்தையை தத்து எடுக்கிறதைப் பத்தி பேசிட்டுப் போனாங்கள்ல நானும் அதைக் கேட்டேன். எனக்கு அவசரமா ரெண்டு லட்சம் தேவைப்படுது. இவளை நான் சுவீகாரம் கொடுக்கிறதா இருக்கேன்.”

“அப்படி என்ன அவசரம் செல்வராசு”

“எம் பொஞ்சாதிக்கு கர்ப்பபையில கட்டியிருக்காம் ஆப்ரேஷன் பண்ணனுமாம் ரெண்டு லட்சம் கேட்குறாங்க நான் எங்க போவேன் அவ இல்லாம் நான் இல்ல.”

“சரி நான் அந்த தம்பதிகிட்ட பேசிப் பார்க்குறேன். ஃபாதர் போன் செய்ய உள்ளே சென்றார்.”

சற்று நேரம் கழித்து வெளியே வந்த பாதிரியார். “உன் நிலைமைய பத்தி சொன்னேன். உன்னை அவங்களே அழைச்சிட்டு போவாங்க ரிஜிஸ்டர் ஆபீசில வேலை முடிஞ்சதும் பணம் உன் கைக்கு வந்துடும்” என்றார் பாதிரியார்.

இப்போதுதான் செல்வராசுக்கு உயிர் வந்தது.

வித்யாவை கையோடு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை கையோடு வாங்கிக் கொண்டு மலர் வண்டியில் ஹாஸ்பிடல் நோக்கி மின்னலென பறந்து கொண்டிருந்தான் செல்வராசு.

 

 

அவளுக்கு மிகவும் பிடித்த நக்ஷத்திரம் – ஸிந்துஜா

ஸிந்துஜா

கிளினிக்கிலிருந்து திரும்பி வரும்போதே லேட்டாகி விட்டது. மத்தியானச் சாப்பாடை முடித்து விட்டு டாக்டர் சோமநாதன் ஹால் சோஃபாவில் அமர்ந்த போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. அவர் எழுந்து சென்று கதவைத் திறந்தார். சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த தங்கம்மா “குட் மார்னிங் அங்கிள்” என்றாள். அலங்கரித்து விட்ட பூஜை அறை மாதிரி பளிச்சென்று இருந்தாள்.

அவள் கண்கள் வீட்டைச் சுற்றுவதைப் பார்த்து அவர் “ரேவதி இப்பதான் சாப்பிட்டு விட்டுக் கை அலம்பப் போனாள்” என்றார். “உன்னைத்தான் நினைச்சிண்டிருந்தேன். எங்கே ரெண்டு நாளா இந்தப் பக்கம் வரலே?”

“அதை ஏன் கேக்கறேள்? புருஷனையும் பொண்டாட்டியையும் ஒரே இடத்திலே வேலைக்கு வச்சிண்டது தப்பாயிடுத்து. கார்த்தாலே லலிதாம்மா தெனைக்கும் வந்து வீடு பெருக்கி தொடச்சி பாத்திரம் தேய்ச்சு துணி ஒணத்தி எல்லா வேலையும் பண்ணி வச்சிட்டுப் போவா. சாயங்காலம் அவ புருஷன் மோகா வந்து சமையல் வேலை எல்லாம் பண்ணிட்டுப் போவான். மோகாவோட அக்கா பொண்ணுக்குக் கல்யாணம்னு ரெண்டும் லீவை வாங்கிண்டு கோரக்பூருக்குக் கிளம்பிப் போயுடுத்து. ரெண்டு நாளா நான்தான் வேலைக்காரி, நான்தான் சமையல்காரி. அவா வர ஒரு வாரம் ஆகும்” என்றாள் தங்கம்மா.

உள்ளேயிருந்து வந்த ரேவதி “அடக் கண்றாவியே!” என்று தங்கம்மாவின் கையை எடுத்துத் தன் கைமீது வைத்துக் கொண்டாள்.

“சரி, போகட்டும் போ. ஏதோ ஒரு வாரம் பத்து நாள் உனக்கும் எக்சர்சைஸ்னு ஒண்ணு இருந்தா நல்லதுதானே!” என்றார் சோமநாதன்.

தங்கம்மா அவரை நக்கலாகப் பார்த்தாள். “போன மாசம் ரெண்டு நாள் ரேவதி உடம்பு சரியில்லேன்னு படுத்துண்டப்போ நீங்க எக்சர்சைஸ் பண்ணினதைத்தான் நான் பார்த்தேனே !”

ரேவதி அவரைப் பார்த்து “இவ கிட்டே யாராவது வாயைக் கொடுப்பாளா?”என்று செல்லமாகத் தங்கம்மாவின் முதுகைத் தட்டினாள்

“எதுக்கு என்னை நினைச்சிண்டு இருந்ததா நான் நுழையறச்சே சொன்னேள்?” என்று தங்கம்மா கேட்டாள்.

“நேத்திக்கு சாயந்திரம் அபிஷேக் பச்சன் படம் போட்டான். உடனே உன் நினைப்பு வந்தது.”

“ஐயையோ , எப்போ?” என்று பதறிக் கொண்டே கேட்டாள் தங்கம்மா. “எந்த சேனல்லே?”

சோமநாதன் “ஸ்டார்லே” என்றார்.

தங்கம்மா ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று நிறுத்தி விட்டாள். பிறகு அவரைப் பார்த்து “இதானே வேண்டாங்கிறது” என்றாள்.

கணவனும் மனைவியும் அவளைப் பார்த்தார்கள்.

“நேத்திக்கிக் காலம்பற ஃபர்ஸ்ட் கிராஸ்லேந்து பத்தொம்பதாவது கிராஸ் வரைக்கும் ஹோல் ஆஃப் மல்லேஸ்வரத்துக்கே கரண்ட் இல்லாம இருந்து இன்னிக்கிக் கார்த்தாலேதான் ஆறு மணிக்கு வந்தது. அங்கிளுக்கு மட்டும் தனியா யாரோ வந்து அபிஷேக் பச்சன் படம் போட்டுக் காட்டியிருக்கா இல்லே?” என்று தங்கம்மா ரேவதியைப் பார்த்தாள்.

“உன்னைச் சீண்டாட்டா இந்த மனுஷனுக்குப் பொழுதே போகாது” என்று ரேவதி சோமநாதனைப் பார்த்துச் சிரித்தாள்.

ஆறு மாதத்துக்கு முன்னால்தான் ரேவதிக்குத் தங்கம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது. சோமநாதனும் ரேவதியும் சொக்கலிங்கம் வீட்டுக் கிருகப் பிரவேசத்துக்குப் போயிருந்தார்கள். சோமநாதன் சொக்கலிங்கத்துக்குக் குடும்ப வைத்தியராகப் பத்து வருஷப் பழக்கம். அந்த விசேஷத்துக்கு வந்திருந்த தங்கம்மாவை சொக்கலிங்கத்தின் மனைவி சிவகாமி
ரேவதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். தங்கம்மாவின் கணவர் தனது கம்பனியின் வக்கீல் என்றும் அவர் மும்பை போயிருப்பதால் விசேஷத்துக்கு வரவில்லை என்றும் சோமநாதனிடம் சொக்கலிங்கம் சொன்னார். விசேஷத்துக்கு மறுநாளே தங்கம்மா ரேவதியைத் தேடிக் கொண்டு வந்து விட்டாள்.

“நாங்க மல்லேஸ்வரம் வந்து ஒரு வாரம்தான் ஆறது” என்றாள் தங்கம்மா ரேவதியிடம் அன்று.

“அதுக்கு மின்னே?”

“மதிக்கரையிலே இருந்தோம். ஏழெட்டு வருஷமா ஒரே வீட்டிலே இருந்தோம்னுதான் பேரு. மூணு பெட்ரூம். வீட்டுக்காரன் வருஷா வருஷம் வாடகையை கண்மண் தெரியாம ஏத்திடுவான். அங்கே
பக்கத்திலேயே இவர் ஆபீஸ் போட்டிருந்தாரேன்னு சகிச்சிண்டு இருந்தோம். இப்ப ஆறு மாசத்துக்கு மின்னாலே அவன் காலி பண்ணிக் கொடுங்கோன்னு நச்சரிக்க ஆரமிச்சிட்டான். நாமென்ன பந்திக்கு இல்லாத வாழக்காயா பந்தல்லே கட்டித் தொங்க விடறதுக்கு? மல்லேஸ்வரத்திலே வீடு பாக்க ஆரம்பிச்சோம். இங்கே பதினேழாவது கிராஸ்லே ரெண்டு பெட்ரூம் தான் கிடைச்சதுன்னு வாங்கிட்டார். வாசல், பெட்ரூம்ஸ், கிச்சன்னு எல்லாம் தலை குனிஞ்சு அடக்கமா இருன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி கட்டியிருக்கான். கைக்கெட்றாப்லே பரண் பண்ணி வச்சிருக்கான். மின்னே இருந்த வீட்டிலே அதெல்லாம் உசர உசரமா, நீள நீளமா இருக்கும். எந்த சாமானை எடுக்கணும்னாலும் எட்டி எட்டி எடுக்கணும். இல்லாட்டி ஏணி வேணும். இது அதுக்கு நேர் மாறா வசதியா இருக்கு. வடக்குப் பார்த்த மச்சு வீடை விட தெக்குப் பார்த்த குச்சு வீடு நல்லதுன்னு வந்துட்டோம். எங்காத்துக்காரருக்கு இந்த வீடு ரொம்பப் பிடிச்சுப் போயிடுத்து” என்று சிரித்தாள்.

“உனக்கு?””

“எனக்கும் அங்க இருந்ததை விட இங்க இருக்கறது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் தங்கம்மா.”அங்கே நாலு வார்த்தை தாய் பாஷையிலே பேச மாட்டமா, இல்லே கேக்க மாட்டமான்னு ஆயிடுத்து. வரவா போறவா கிட்டே ஒண்ணு இங்கிலீஷு, இல்லேன்னா இந்த ஊர் பாஷைதான் பேசணும். எனக்குக் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. அன்னமிடற கையை தூஷணை பண்ணக் கூடாதும்பா. மனசிலே இருக்கறதைச் சொன்னேன். அங்கே இருந்தப்போ நம்ம பாஷையைக் கேக்கறதுக்குன்னே மல்லேஸ்வரம் மார்க்கெட்டுக்கு வருவேன். எட்டாவது கிராஸ்லே ஷாப்பிங் பண்ணுவேன்.”

“இப்ப வீடு எந்த மெயின்லே?’

“பத்தாவது மெயின்லே. மின்னாலே கிரிக்கெட் ஹவுஸ்ன்னு இருந்து அதை இடிச்சிக் கட்டிருக்கால்லியா? அதுக்கு நாலு பில்டிங் தள்ளி. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி” என்றாள் தங்கம்மா.

“ஓ, அது அடுத்த தெருதான். வீட்டு விலையிலே எல்லாம் எப்பவும் நடக்கறதுதானே ! நாம வீட்டை விக்கறச்சே நாடே நாசமாப் போயிடுத்துன்னு சொல்லி அடிமாட்டு விலைக்குக் கேப்பான். நாம வாங்கறப்போ டிமாண்டு பிச்சிண்டு மானத்துக்குப் போயிடுத்தும்பான்” என்று சிரித்தாள் ரேவதி.

இருவரும் குறுகிய காலத்தில் நெருங்கி விட்டார்கள். நீங்கள் நீயாகி விட்டது. எல்லாம் வா, போ தான். சேர்ந்து மார்க்கெட்டுக்கு, புடவைக் கடைகளுக்கு, கோயில்களுக்கு, சினிமா, டிராமாக்களுக்குப் போய் வந்தார்கள். இந்த ஆறு மாதத்தில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாத நாள்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்கு மாறாக ஆண்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டவில்லை.

தனக்கு அபிஷேக் பச்சனை மிகவும் பிடிக்கும் என்று ரேவதியிடம் ஒரு நாள் தங்கம்மாள் சொன்னாள். அப்போது சோமநாதனும் அவர்களுடன் இருந்தார்.

“அவன் ஒட்டடைக் குச்சின்னா?” என்றார் சோமநாதன்.

“இருந்தா என்ன? அவனை என்ன நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேனா? என்ன உயரம்? வாட் எ பெர்சனாலிட்டி?” என்று சிரித்தாள் தங்கம்மா. “எப்பவும் உடம்பை ட்ரிம்மா வச்சிண்டு…. அந்த உயரத்துக்கு இன்னொரு ஹீரோவை இந்தப் பக்கம் காட்ட முடியுமா?”

“நீ என்ன சொன்னாலும் அவன் நெட்டைக் கொக்குதான்” என்றார் சோமநாதன்.

“சும்மா என்னைச் சீண்டறதுக்கு சொல்லாதீங்கோ. ஆறு அடி. ரெண்டு அங்குலம். ஒரு தொப்பை, தொந்தி கிடையாது. இங்க அஞ்சறை அடி கூட இல்லாதவன் பெரிய ஹீரோன்னு சொல்லிண்டு உட்லண்ட்ஸ் ஷூஸ் வாங்கிப் போட்டுண்டு நாலு இஞ்ச் ஜாஸ்தி உயரமா காமிக்க ட்ரை பண்றான். உண்டா இல்லியா சொல்லுங்கோ அங்கிள்?”

“அடேயப்பா! விட்டா பெரிய ரசிகை மன்றமே வச்சிடுவே போல இருக்கே?” என்றாள் ரேவதி.

“நாளைக்கி ஓட்டீட்டிலே எங்க அபிஷேக்கோட புதுப் படம் லூடோ வரப் போறது. நெட்ஃப்ளிக்ஸ்காரன் அறுபது கோடி குடுத்து வாங்கியிருக்கானாம். நம்ம ஊர் ஆக்ஷன் ஹீரோக்கெல்லாம் அதுலே எத்தனை சைபர் இருக்குன்னு கூடத் தெரியாது. ஒரே ஒரு ஆள். அறுபது கோடி.”

“இதெல்லாம் சினிமாக்காரங்க விடற ரீல் தங்கம் ! ஒரு வாரம் போனா காத்தாடறது எல்லாப் படமுமே.”

“மத்தவா படத்துக்கு அப்படி இருக்கலாம். ஆனால் எங்க அபிஷேக் படம் எப்பவுமே சூப்பர்தான். வாவ். என்ன ஒரு மெஜெஸ்டிக் பெர்சனாலிட்டி!”

“சினி பிளிட்ஸ்லே படிச்சேன் “என்றார் சோமநாதன்.

“என்னன்னு?”

“கதாநாயகியா உங்க அபிஷேக்கோட ஒருத்தி நடிக்கணும்னா எப்பவும் அவ ஹை ஹீல்ஸ்லேதான் இருக்கணுமாம்.!”

தங்கம்மா காயமுற்றவள் போல ரேவதியைப் பார்த்தாள்..

“இதெல்லாம் பத்திரிகைக்காராளே விக்கணுமேன்னு ஏதாவது கற்பனை செஞ்சு போடுவா. கிசுகிசு எழுதுவா.நான் நம்பறதில்லே ” என்று சமாதானமாகச் சொன்னாள் ரேவதி. தொடர்ந்து “நம்ம ஊர் மன்மத ராஜாகூட தன்னோட நடிக்கற ஹீரோயின்லாம் தன்னை விட உயரமா இருக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போடுவாராமே! அது தெரியுமா உங்களுக்கு?” என்று கணவனிடம் சொன்னாள்.

தங்கம்மா குபுக்கென்று சிரித்தாள்.

“நம்ம ஊர்னா அவ்வளவு இளப்பமா உனக்கு? சிரிப்பைப் பாரு !” என்றாள் ரேவதியும் சிரித்தபடி.

சோமநாதன் “தங்கம்! நீயும் அஞ்சே முக்கால் இல்லே அஞ்சு பத்து இருப்பியா?” என்றார்.

இரு பெண்களும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

அப்போது சோமநாதனின் கைபேசி ஒலித்தது.

“…………….”

“ஆமா, டாக்டர்தான் பேசறேன்.”

“………….”

“சரி, நான் ஒரு கால்மணியிலே அங்க வரேன். அவசரம்னுதானே போன் பண்ணினேள் ? இதிலே தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?” என்று போனை வைத்தார்.

“சாரி, அர்ஜண்டா மணிப்பால்லே கூப்பிடறா?” என்று எழுந்தார்.

“நானும் வந்து நாழியாயிடுத்து. கிளம்பறேன். நாளைக்கு நீங்களும் ரேவதியும் எங்காத்துக்கு வாங்களேன். எல்லாருமே சேந்து ஜாலியா சினிமா பாக்கலாம்” என்றாள் தங்கம்மா.

“அடடா, நாளைக்கு நாங்க மைசூர் போறோமே,.என் பெரியம்மா பேத்திக்குக் கல்யாணம்னு” என்றாள் ரேவதி. “ஊருக்குப் போயிட்டு வந்தப்பறம் வரோம்.”

ஆனால் அடுத்த வாரம் வியாழக்கிழமை காலையில் டாக்டருக்குத் தங்கம்மாவிடமிருந்து போன் வந்தது.

“டாக்டர், நீங்க இன்னும் கிளினிக்குக்கு கிளம்பலையே? நேத்தி மத்தியானத்திலேந்து இவருக்கு ஜொரம். டோலோ கொடுத்து சரியாயிடும்னு பாத்தேன். ஜொரம் எறங்கவே இல்லை. நான் இவரை அங்க ஆத்துக்குக் கூட்டிண்டு வந்து காமிக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“நீ எதுக்கு வரே? நான் கிளினிக் போற வழிதானே ? ஒரு பத்து நிமிஷத்திலே அங்கே வரேன். வீட்டு நம்பரும் அபார்ட்மெண்ட் பேரும் மட்டும் வாட்ஸப்பில் அனுப்பிடு” என்றார்.

அவர் தங்கம்மாவின் ஃப்ளாட்டை அடைந்த போது அவள்தான் கதவைத் திறந்தாள். “படுத்துண்டுதான் இருக்கார்” என்று பெட் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். அவள் கணவர் தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டிருந்தார். சோமநாதனைப் பார்த்ததும் படுக்கை
யிலிருந்து எழுந்திருக்க முயன்றார். சோமநாதனிடம் “உங்க பேர் எனக்குத் தெரியும். நான் லட்சுமணன்” என்றார்.

சோமநாதன் “எழுந்திருக்க வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமணன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவர் கையைப் பிடித்து நாடி பார்த்தபடி “குளிர்றதா?” என்று கேட்டார் சோமநாதன்..

“ஆமா. இப்ப பரவாயில்லே. ராத்திரி ரொம்ப குளிரினது. அவ்வளவு டோலோ போட்டுண்டும் வேர்க்கவே இல்லே.”

சோமநாதன் அவரை நாக்கை நீட்டச் சொன்னார். கண்களைச் சோதித்தார். ஸ்டெதெஸ்கோப்பை மார்பிலும் முதுகிலும் வைத்துப் பரிசோதித்தார். கை விரல்களை அமுக்கி “வலிக்கிறதா?” என்று கேட்டார். ஆமென்று லட்சுமணன் தலையை அசைத்தார்.

“பசி?” என்று கேட்ட போது தங்கம்மா “கஞ்சியும் ஆர்லிக்ஸும்தான் கொடுத்தேன்.வாயெல்லாம் கசக்கறதுன்னார்” என்றாள்.

“வைரல் ஃபீவர்தான். கவலைப்பட ஒண்ணும் இல்லே” என்று மருந்து எழுதிக் கொடுத்து விட்டு சோமநாதன் கிளம்பினார்.

“இருங்கோ, ஒரு நிமிஷம். முதல் தடவையா ஆத்துக்கு வந்திருக்கேள். காப்பி கொண்டு வரேன்” என்று அவர் மறுப்பதைக் கேட்காமல் தங்கம்மா உள்ளே சென்றாள்.

“ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுங்கோ. ஊர் பூரா இருமலும் காச்சலும்தான். சாயந்திரம் பசியெடுக்கும். ரசஞ் சாதமா கரைச்சு எடுத்துக்கோங்கோ” என்றார் சோமநாதன் லட்சுமணனிடம்.

அப்போது அறையின் மூலையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. லட்சுமணன் எழுந்து போய் அதை எடுத்தார்.

“எதுக்கு நீங்க எழுந்து நடக்கறேள் ? ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சொல்லியபடியே சோமநாதன் அவரைப் பார்த்தார். லட்சுமணன் குட்டையாகவும் சற்றுக் குண்டாகவும் இருந்தார். நின்று கொண்டு அவர் பேசியதைப் பார்த்து ஐந்தடிக்கும் கீழேதான் அவர் உயரம் இருக்கும் என்று டாக்டர் நினைத்தார்.

வாக்கரிசி – சுஷில் குமார்

                                                    சுஷில் குமார்                             

வழக்கம் போல அன்றும் வகுப்பறையின் சன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய்ப்பன்றியும் கிட்டத்தட்ட பத்து குட்டிப் பன்றிகளும் என்னை நோக்கி வந்தன. வழக்கமாக இடைவேளை மணி அடிக்கும்போது பன்றிக் குட்டிகளுக்கு இலந்த வடையும் கல்கோனா மிட்டாயும் கொடுத்து அவை அவற்றை சப்பிக் கொண்டிருக்கும்போது குட்டிப் பன்றிகளின் வாலைப் பிடித்து விளையாடுவேன். அன்றும் கூட தாத்தா கொடுத்திருந்த இரண்டு ரூபாய்க்கு கல்கோனா வாங்கி வைத்திருந்தேன். அந்தப் பன்றிக் கூட்டம் என் சன்னல் அருகே வந்ததும் ஒரு மிட்டாயை எடுத்து சன்னல் வழி நீட்டினேன். திடீரென என் தலையின் பக்கவாட்டில் ஏதோ வந்து தாக்க, அதிர்ந்து திரும்பிப் பார்த்தேன். முகம், தலையெங்கும் சாக்பீஸ் பொடி. என் ஆங்கில ஆசிரியர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். கண்களால் அவர் சைகை செய்ய அந்தக கரும்பலகைத் துடைப்பானை எடுத்துக் கொண்டு போய் அவரருகே நின்றேன்.

“என்ன டே வாய்பொளந்தான்! தாத்தாவுக்கு போன் பண்ணட்டா? எப்பிடி?”

நான் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றேன்.

“என்ன டே? கல்லுளிமங்கன் மாதி நிக்க? எதாம் கேட்டா ஒண்ணுந் தெரியாத்த அப்பாவி மாதி மொகத்த வச்சிருவான். செரியான சிமிளனாக்கும்.” என்று சொல்லியவாறு என் வலது காதை பிடித்துத் திருகினார். நான் அப்போதும் அசையாமல் நிற்க, என் தலையில் படிந்திருந்த சாக்பீஸ் பொடியை தட்டி விட்டவர், “போ, போ. ஒன் தாத்தாக்காக வுடுகேன், என்னா? ஒழுங்கா கிளாஸ கவனிக்கணும், கேட்டியா?” என்றார்.

“செரி சார்.” என்று நான் எனக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு என் இடத்திற்கு வந்து உட்கார்ந்தேன். பன்றிக் குட்டிகள் என் சன்னல் சுவரருகே படுத்துக் கிடந்தன. அவை பசியாகவிருக்கும். இந்த ஆங்கிலப் பாடவேளை ஏன் நீண்டு கொண்டே செல்கிறது? பள்ளிக் கூடத்தின் பெயர் ‘மலையாளப் பள்ளிக்கூடம்’, ஆனால் மலையாளப் பாடம் கிடையாது. பின் ஏன் அந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்? ஒரு பன்றிக் குட்டியாக பிறந்திருந்தால் ஆங்கிலம் என்ன, மலையாளம் என்ன, எதுவும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்திருக்கலாம், என்ன, அந்த பீக்குண்டில் கிடந்து புரள வேண்டும். அதெப்படி அதைப் போய் சாப்பிட முடியும்?

“டேய் சரவணா. எந்திரி, இங்க வா.” என்று ஆசிரியரின் குரல் என் காதுகளுக்குள் இரைச்சலாய் வந்து விழுந்தது. பயந்து போய் நிமிர்ந்து பார்க்க, ஆசிரியரின் அருகே என் அப்பா நின்றுகொண்டிருந்தார். பயம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க எழுந்து நின்று ஆசிரியரின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன்.

“என்ன டே, பேந்தப் பேந்த முழிக்க? பைய எடுத்துட்டு வா.” என்று சொல்லிய ஆசிரியர் அப்பாவிடம் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் ஆசிரியரின் முன் சென்று நிற்க, அவர் என் தோளில் தட்டி, “செரி அண்ணாச்சி. கூட்டிட்டுப் போங்கோ. என்னத்தச் சொல்ல? ஒங்கப்பா எனக்கு ஆசானாக்கும். என்ன செய்ய? நல்ல வயசாயாச்சுல்லா? கெடைல கெடக்காமப் போறதுக்கும் குடுத்துதான் வைக்கணும். பொறவு தகவல் சொல்லி அனுப்புங்கோ.” என்றார். ஆசிரியரின் முகம் சிறிது சோகமாகியிருந்தது.

தாத்தாவிற்கு என்ன ஆயிருக்கும்? காலையில் காசு கொடுத்து அனுப்பும் போது நன்றாக இருமிக் கொண்டிருந்தாரே! சாயங்காலம் குமரிசாலைக் குளத்திற்குச் சென்று மீன் பிடிக்கலாமென்று சொல்லியிருந்தாரே!

“எப்பா, தாத்தாக்கு என்னாச்சிப்பா?”

“தாத்தா கீழ விழுந்துட்டா மக்கா.”

“எங்கப்பா விழுந்தா? ஆஸ்பத்திரிக்கி போகலியாப்பா?”

அப்பா பதில் சொல்லாமல் என்னை பின்னால் ஏற்றிவைத்து மிதிவண்டியை வேகமாக மிதிக்க ஆரம்பித்தார். என்னையறியாமல் அழுகை வந்தது. ஆச்சியும் இப்படித்தான். திடீரென்று ஒருநாள் காலையில் எவ்வளவு  எழுப்பியும் எழுந்திருக்கவேயில்லை. தாத்தா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தார். சில நாட்கள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

வீட்டு வாசலில் பக்கத்துவீட்டு அத்தைமார், மாமாமாரெல்லாம் நின்று சத்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் சிலர் என்னைப் பற்றி ஏதோ சொல்லி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டனர். அம்மாவும் அக்காவும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தனர்.

நான் மெதுவாக தாத்தாவின் அறைக்குச் சென்றேன். தாத்தா தன் நார்க்கட்டிலில் படுத்திருந்தார். வாய் நன்றாகத் திறந்திருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததைப் போலிருந்தது. மார்பிற்குக் குறுக்காக கைகளை வைத்து வீட்டு உத்திரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தாத்தாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து, “தாத்தா, தாத்தா, எந்திரி.” என்றேன்.

தாத்தா மெல்ல மூச்சு விட்டார். அவரால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

“தாத்தா, ஒடம்பு நல்ல வலிக்கோ? நா கால அமுக்கி விடட்டா? நீ என்னத்துக்குப் போயி வழுக்கி விழுந்த? ஒரு எடத்துல சும்மா இருக்க மாட்டியா?”

தாத்தாவின் விரல்கள் மட்டும் மெதுவாக அசைந்தன. நான் அவரது கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்து விரல்களை மெல்ல நீவி விட்டேன். ஒவ்வொன்றாக சொடக்கு விட மடக்கினேன். தாத்தாவின் கைகள் சிறிது குளிர்ச்சியாக இருந்தன.

அம்மா என்னருகே வந்து நின்றாள். ஒரு சிறிய தம்ளரை நீட்டி, “மக்ளே, தாத்தாக்கு கொஞ்சம் பால் குடு.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதாள்.

“தாத்தாக்குப் பால் புடிக்காதுல்லாம்மா?” என்று அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.

“இப்ப பால் தான் குடுக்கணும் மக்ளே. டாக்டர் சொல்லிருக்காரு.”

திறந்திருந்த தாத்தாவின் வாயில் ஒரு மடக்கு பாலை விட்டேன். அது உள்ளிறங்காமல் வாயின் பக்கவாட்டில் வடிந்தது. முறுக்கிய வெள்ளை மீசையின் ஓரத்தில் பால் கசிந்து பனித்துளி போலத் தெரிந்தது. அம்மா தன் சேலைநுனியால் அதைத் துடைத்துவிட்டு வெளியே சென்றாள். நான் தாத்தாவின் கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டேன். வெளியே அப்பாவும் வேறு சிலரும் பேசுவது கேட்டது.

“சே, அருமாந்த மனுசன்லா? எப்பிடி ராஜா மாதி சுத்திட்டுக் கெடந்தாரு? ஒரு சொக்கேடும் கெடயாத?”

தாத்தா ராஜா மாதிரிதான் வாழ்ந்தார். ஊரில் என்ன நல்லது கெட்டது என்றாலும் தாத்தாவிடம்தான் வந்து நிற்பார்கள். அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. தாத்தா பேசும்போது என் அப்பா அசைவற்று நிற்பதைப் பார்த்து நான் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அம்மாவோ அக்காவோ தாத்தா இருக்கும்போது தலையைக் குனிந்துகொண்டுதான் போவார்கள்.

“ஆமாண்ணே, அதுதான் ஒண்ணும் புரியமாட்டுக்கு. வழுக்கி விழுந்தா, அப்பிடியே மலச்சிப் பாத்தா. தூக்கிக் கொண்டு கட்டில்ல படுக்க வச்சப் பொறவும் கண்ணு ஒரு துளி அசையல. டாக்டர் ஒண்ணும் பண்ணாண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு. மூச்சு மட்டுந்தான் இருக்கு.” என்ற அப்பாவின் குரலும் தழுதழுத்தது.

“செரி, பாப்பம், கொஞ்சம் கொஞ்சமா பால் விட்டுப் பாப்பம். மனசு நெறஞ்சி போகட்டும். என்ன, பேரன்ட்ட ஒரு வார்த்த பேசிட்டுப் போயிருந்தா நெறவா இருந்திருக்கும். எங்க பாத்தாலும் ரெண்டுவேரும் சோடியால்லா சுத்துவா! பின்ன, ஆச்சி போன பொறவு பொடியந்தான கூடவே கெடக்கான்.”

“பய தாத்தா நெஞ்சுலயேதான கெடப்பான். அவரு கத சொல்லி தட்டிக் குடுத்தாதான் அவனுக்கு ஒறக்கம்.”

எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க நான் தாத்தாவின் மார்பில் சாய்ந்து உறங்கிவிட்டேன். அம்மா வந்து எழுப்பி, “மக்ளே, வா, சாப்டு, பசிக்கும்லா.” என்றாள்.

நான் வேண்டாமென தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சாய்ந்துகொண்டேன். அதற்குள் மதியம் ஆகிவிட்டிருந்தது. மெல்ல தலையைத் தூக்கி தாத்தாவின் முகத்தைப் பார்த்தேன். வாய் அதே போல திறந்திருந்தது. கண்கள் அசையாமல் நின்றன. மூச்சு மெல்ல மெல்ல என் முகத்தின் அடியில் ஊர்ந்துகொண்டிருந்தது. சென்ற வாரம் வாய்க்காலில் பிடித்த அட்டையைப் போல. அதெப்படி தொட்டவுடன் சுருண்டு விடுகிறது? தாத்தாவின் மூச்சும் கூட சுருண்டு போயிருக்குமோ? மணிக்கு ஒருமுறை யாராவது வந்து தாத்தாவிற்குப் பால் விட்டுச் சென்றனர். தாத்தாவும் தொடர்ந்து வடித்துக்கொண்டிருந்தார்.

“எண்ணே, இப்ப என்ன செய்ய? சாயங்காலம் வர இழுத்துட்டுன்னா பொறவு இன்னிக்கி காரியம் பண்ண முடியாதுல்லா?” என்று யாரோ கேட்க, இன்னொருவர், “ஒம்ம வாய மூடும் ஓய். அதுக்குள்ள ஒமக்கு காரியச் சாப்பாடு கேக்காக்கும்? ஒம்ம வாய்ல மொதல்ல வாக்கரிசியப் போடணும்.” என்றார்.

சித்தப்பா அப்பாவை தனியாக அழைத்துச் சென்று ஏதோ மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் ஒரே சலசலப்பு.

“என்னத்த யோசிச்சிட்டுக் கெடக்கியோ? சட்டுன்னு ஆக வேண்டியதப் பாருங்கோ. மத்தவன் வந்தாதான் செரி ஆகும். எமகாதம்லா, சும்மாவா பேரு வந்து, வாக்கரிசிப் பிள்ளைன்னு.” என்று இருமினார் பக்கத்து வீட்டுத் தாத்தா.

“அது செரி. ஒமக்கு வரும்போ தெரியும் பாட்டா! ஆனாலும் ஒரு அதிசயந்தான், என்ன ஓய்? மனுசன் வந்து பக்கத்துல நின்னு ரெண்டு வார்த்த சொன்னாப் போறும். அர மணிக்குள்ள சோலி முடிஞ்சிரும். நம்ம கொமரிக் கெழவி எத்தன மாசமா இழுத்துட்டுக் கெடந்தா? பின்ன, செஞ்ச பாவம் அப்பிடி. நம்மாளு வந்துதான தீந்து போச்சி. அவ மவன் துடியாத் துடிச்சான. என்னா படமுங்கியோ? பின்ன, கொஞ்ச நஞ்ச சொத்தா என்ன? அவனே எளனிய கொடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்பான்.”

“கெழவிய விடும் ஓய். அந்த வடக்குத் தெரு பிள்ள தூக்கு போட்டால்லா? எத்தன நாளா இழுத்துட்டுக் கெடந்தா? ஒரு டாக்டரும் ஒண்ணும் பண்ண முடியலல்லா? வாக்கரிசிப் பிள்ள வந்து அந்தப் பிள்ள தலைல கைய வெச்சதுதான் உண்டும், பிள்ள மொகத்துல என்ன ஒரு திருப்தி, ஆத்மா அப்பதான சாந்தி அடஞ்சி. அந்த மனுசனுக்கு ஒரு தெய்வாம்சம் உண்டும், பாத்துக்கோரும்.”

“உள்ளது, உள்ளது. ஆமா, வாக்கரிசிப் பிள்ள ஊர்ல உண்டுமா ஓய்?”

“அவரு எங்க போகப் போறாரு? மனுசன் என்னா பவுசு காட்டிட்டுத் திரிஞ்சாரு? பெரிய பண்ணையாரு மாதி. பின்ன, எல்லாம் கவர்ன்மெண்டு சோலி உள்ள வரைக்கும் தான. ரிட்டயர்டு ஆன பொறவு கொளத்தாங்கர அரச மரந்தான் கெட. ஊர்ப்பாடு பேசதுக்கும் நல்லா ஆப்பமும் ரச வடையும் முழுங்கதுக்கும் கேக்கணுமா, என்ன?”

“அதச் சொல்லும். வக்கணையான ஆளாக்கும். அடியேந்திரத்துக்கு அவரு வந்து மொத எலைல சாப்ட்டாதான் நமக்கு சாப்பாடு. பின்ன, மேல இருக்கப்பட்டவாளுக்கு அப்பதான ஒரு நெறவு கெடைக்கும்?”

வாக்கரிசிப் பிள்ளை மாமா என் அம்மாவின் பெரியப்பா மகன். பெரும்பாலும் வெள்ளை வேட்டி மட்டும்தான். மேலுடம்பும் பெரிய தொப்பையுமாக தள்ளித் தள்ளி நடந்து செல்வார். கையில் எப்போதும் ஒரு வெற்றிலைப் பெட்டி. வெற்றிலையைக் குதப்பிக் குதப்பி அவர் பேசுவது பல சமயங்களில் எனக்குப் புரிவதேயில்லை. ஆனால், அவர் இருக்கும் கூட்டத்தில் எப்போதும் கேலியும், உற்சாகமும் நிரம்பி வழியும். ஊரில் எல்லா பெண்களும் அவருக்கு மைனியோ கொளுந்தியோ தான். ஆண்கள் எல்லோரும் சவத்துப்பயலோ, கிறுக்குப்பயலுக்குப் பொறந்த பயலோ தான்!

எப்போது என்னைப் பார்த்தாலும் “மருமவன, எப்ப வந்து எம்பொண்ணத் தூக்கிட்டுப் போகப் போறீரு?” என்று கேட்டுச் சிரிப்பார். நான் வெட்கப்பட்டு நிற்க, “என்ன ஓய் வெக்கம் ஒமக்கு? பொண்ணு எப்ப வேண்ணா ரெடி, கேட்டீரா? மீச வரட்டும், என்னா?” என்பார். மாமா பெண் என்னை விட பத்து வயதாவது பெரியவள்.

மாமா என்னிடம் மட்டுமல்ல, ஊரில் எல்லாச் சிறுவர்களிடமும் இதேபோலத்தான் கேட்பார். தன் வேட்டி மடிப்பில் எப்போதும் வைத்திருக்கும் ஆரஞ்சு மிட்டாயை எங்கள் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே போடுவார். அப்படியே கட்டிப்பிடித்து ஆளுக்கொரு முத்தம். நாங்கள் மாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்க் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போது மிக வேடிக்கையாக இருக்கும். மாமா வருவதைப் பார்த்ததும் எதிரில் வரும் தாத்தாக்களும் ஆச்சிகளும் அப்படியே திரும்பி தங்கள் வீடுகளுக்கு விறுவிறுவென்று செல்வார்கள். முதலில் இது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், ஊர்த் தலைவர் தன் கடைசிப் படுக்கையில் இருந்தபோது மாமா வந்து அவரருகே நின்று ஏதோ பேசிவிட்டுப் போனதும் தலைவர் வீட்டில் ஒப்பாரிச் சத்தம் எழுந்ததைப் பார்த்ததும் எங்களுக்கும் மாமாவின் மீது சிறிய பயம்தான்.

மாமா நல்ல வேலையில் இருந்தார். ஊரில் எல்லோருக்கும் உதவி செய்வதில் முதல் ஆளாக வந்து நிற்பார். அடுத்த ஊர்த் தலைவர் அவர்தான் என்று கூட பேச்சு அடிபட்டது. இப்போது ஓய்வு கிடைத்ததும் எங்களைக் கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போவதுதான் மாமாவின் பொழுதுபோக்கு. ஒவ்வொரு வீட்டிலும் மாமாவை விழுந்து விழுந்து கவனிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் மதிய உணவு என்று எழுதப்படாத முறைமையையே உருவாக்கிவிட்டார் வாக்கரிசிப் பிள்ளை மாமா.

“எம்மா, அதெப்படிம்மா, வாக்கரிசி மாமாக்கு மட்டும் எல்லா வீட்லயும் செம சாப்பாடு போடுகா?” என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன்.

“அடிச்சுப் பல்ல ஒடச்சிருவேன் ராஸ்கல். பெரியாளுக்கு மரியாத குடுக்காமப் பேசுக. எங்க செல்ல அண்ணனாக்கும், பாத்துக்கோ.” என்று முறைத்தாள் அம்மா.

“சாரி, சாரி. சொல்லும்மா.”

எதையோ நினைத்து சிரித்த அம்மா, “பின்ன, ஒவ்வொருத்தரும் செஞ்ச பாவம் கொஞ்சமா? பயம், உயிரு போயிருமோன்னு பயம், பின்ன என்னத்துக்குப் பயந்து ஓடப் போறா?” என்றாள்.

“மாமா வந்து பாத்தா தாத்தா ஆச்சில்லாம் செத்துப் போயிருவாளாம்மா?”

“அப்பிடி பேசப்படாது பாத்துக்கோ. அது தெய்வ காரியமாக்கும்.”

அதில் என்ன தெய்வகாரியம் இருக்கும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

அப்பாவும் சித்தப்பாவும் வேகவேகமாக எங்கோ சென்றனர்.

“அதாக்கும் செரி. பெரியவரு ராசிக்கு இன்னிக்கி சொர்க்கம்லா!” என்று ஒரு மாமா சொல்ல, “உள்ளதாக்கும். பின்ன, வாக்கரிசிப் பிள்ள சரக்கடிக்கப் போயிருக்கப் படாது.” என்று இன்னொரு மாமா சொன்னார்.

மாமா சாயங்காலங்களில் வேறு ஒரு மனிதராகி விடுவார். அரச மரத்தடியில் உட்கார்ந்து வாய்விட்டுச் சத்தமாகப் பாடுவார். பெரும்பாலும் மலேசியா வாசுதேவன் பாடல்கள்தான். பக்கத்தில் சென்றால் இழுத்துப் பிடித்து கட்டியணைத்து முத்தமிடுவார். குமட்டிக் கொண்டு வரும் வாடை.

அப்படியொரு சாயங்காலம் நான் அந்த வழியாக வந்தபோது மாமா தனியாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

“என்ன ஓய் மருமவனே, பாத்தும் பாக்காத மாதி போறீரே ஓய்? இங்க வாரும்.” என்று சிரித்தார்.

நான் அவரது அருகே சென்று நின்றேன்.

“என்ன மருமவனே, மாமாவப் பாத்து எதுக்கு பயப்படுகீரு? நமக்குள்ள ஆயிரம் மேட்டரு உண்டும்லா, ஊருல ஒரு பய கேக்க முடியாது, என்னா? எம் பொண்ண ஒமக்குத் தான் கெட்டி வப்பேன், கேட்டீரா ஓய்? பின்ன, எவளாம் வெள்ளத்தோலுக்காரிய லவ்வு பண்ணிட்டீருன்னா செரியா வராது, பாத்துக்கோரும். மாமாக்க சத்தியமாக்கும்.”

நான் வெட்கத்தில் சிரித்து நின்றேன்.

“இங்கண வந்து இரியும் மருமவன.” என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் மெல்லச் சென்று அவரருகே உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு ஆரஞ்சு மிட்டாயை என் வாயைத் திறந்து உள்ளே போட்டவர், என்னைக் கழுத்தோடு கட்டிப்பிடித்து என் கன்னத்தில் முத்தமிட்டார். நான் அந்த எச்சிலைத் துடைப்பதைப் பார்த்துச் சிரித்தார்.

“என்ன மருமவன, எச்சியத் தொடைக்கீரு, என்னா?” என்று கேட்டவர் அமைதியாகத் தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். அவரது மார்பு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. நீளமாக மூச்சிழுத்து விட்டது போலிருந்தது. என் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“அப்போ ஒம்ம வயசுதான் இருக்கும் எனக்கு! எங்க அப்பாக்க மொகம் கூட இப்போ செரியா கண்ணுல வர மாட்டுக்கு. வயல் வேலக்கிப் போன மனுசன நாலு வேரு ஒரு கயித்துக் கட்டில்ல தூக்கிட்டு வந்தானுகோ. ஆளு சும்மா சொடல மாடன் கணக்கா இருப்பாரு, கேட்டீரா? ஒத்தக்கி ஒரு பய எதுத்து நிக்க முடியாது. ஊருல எல்லாச் சட்டம்பிப் பயக்களுக்கும் எங்க அப்பாவக் கண்டா பயமாக்கும். புடிச்சி செவுட்டப் பேத்து விட்டுருவாருல்லா! பின்ன, எவனாம் செய்வின வச்சிட்டானோ என்னவோ? வச்சாலும் வச்சிருப்பானுகோ. ஒரு பயலயும் நம்பதுக்கில்ல. கட்டில்ல கெடயாக் கெடந்த மனுசன் ஒரு பொட்டு அசயல்ல. பத்து நாளு. எங்கம்ம அழுது அழுது மயங்கி விழுந்துருவா. நானும் எங்க அக்காவும் என்னத்தச் செய்ய முடியும்? அந்தக் காலத்துல இப்ப மாதி இல்லல்லா? என்ன நோயி, என்ன மருந்துன்னு யாருக்குத் தெரியும்? டாக்டரப் பாக்கணும்னா சும்மா இல்ல, கேட்டீரா? என்னல்லாமோ மருந்தக் குடுத்துப் பாத்தா. அப்பா அலங்குவனா பாருன்னு நீட்டிட்டுக் கெடக்காரு. பின்ன, எத்தன நாளக்கி எல்லாரும் அழுவா? அவரு பாட்டுக்குக் கெடக்கட்டும்னு அம்மா வயலுக்கு நடவும், கள பறிக்கவும் போயிருவா. பின்ன, வயித்துக்குக் கஞ்சி வேணும்லா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ.”

மாமா அழுகிறாரா, சலுவை வடிக்கிறாரா என்று புரியாமல் அவர் முகத்தைப் பார்த்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.

“ஒரு நாளு அம்மயும் அக்காவும் வயலுக்குப் போய்ட்டா. நான் அப்பா பக்கத்துல இருந்து அவ்வோ வாயத் தொறந்து கொஞ்சம் கொஞ்சமா கஞ்சி ஊத்துகேன். எப்பவும் அவ்வோ நெஞ்சு அசையான்னு மட்டும் பாத்துட்டே இருப்பேன். அன்னிக்கி கொஞ்சம் தூக்கித் தூக்கிப் போட்ட மாதி இருந்து. நெஞ்ச இறுக்கித் தேச்சி விட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி அவ்வோ ஒடம்பு படபடன்னு ஆடிட்டு, வெட்டு வந்த மாதி. நா ‘எப்பா, எப்பா, என்னப்பா செய்யி’ன்னு அழுகேன். வெட்டு நின்ன பாடில்ல. வீட்டுத் தாக்கோல எடுத்து அவ்வோ கைலக் குடுத்தேன். இறுக்கிப் பிடிச்சிட்டு துடிச்சிட்டே கெடந்தா. சட்டுன்னு ஒரு அசைவு இல்லாம நின்னு. நா ஒத்தக்கி ஒருத்தனா என்ன செய்வேன்? அப்பா செத்துட்டாருன்னு நெனச்சி அம்மக்கிட்ட சொல்ல ஓடுனேன்.”

நான் மெளனமாக கேட்க, மாமா என் கைகளை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தார்.

“நா ஓடுகேன். ’மக்ளே’ன்னு ஒரு சத்தம். அப்பா கொரல்தான். எனக்கு நடுங்கிட்டு. திரும்பிப் பாக்கேன், அப்பா எந்திச்சி ஜம்முன்னு உக்காந்திருக்கா. கட்டில்ல இருந்து என்னப் பாத்து கையசச்சிக் கூப்புடுகா. என்னால நம்பவே முடில. ஓடிப் போயி அவ்வோ கையப் புடிச்சேன். அப்பா மெல்ல எந்திச்சி என்னக் கூட்டிட்டு வீடு முழுக்க ஒரு சுத்து நடந்தா. அப்பிடியே வெளக்கு முன்னால கூட்டிட்டுப் போயி நின்னா. அவ்வோ மொகத்துல அப்போ அப்பிடி ஒரு ஐசுரியம். சும்மா தகதகன்னு ஜொலிக்கா அப்பா. அப்பிடியே கண்ண மூடி நின்னா. பொறவு கைய நீட்டி தாம்பாளத்துலருந்து திருநீற எடுத்துக் கேட்டா. நா எடுத்துக் கொடுத்தேன். ஏதோ மனசுக்குள்ள சொன்னா அப்பா. என்னன்னு எனக்குப் புரியல்ல. பெரிய சாமிகொண்டாடில்லா? திருநீற எடுத்து என் நெத்தில பூசி விட்டுட்டு அவ்வோ நெத்திலயும் பூசினா. அப்பிடியே கூட்டிட்டுப் போயி கட்டில்ல இருந்தா. கொஞ்ச நேரம் எம்மூஞ்சிய பாத்துட்டே இருந்தா. சிரிச்சிட்டே மெதுவா கட்டில்ல படுத்தா. நா அப்பா கைய தடவி விட்டுட்டு இருந்தேன். அப்பா என்னயே பாத்துட்ருந்தா. என் கைய எடுத்து அவ்வோ நெஞ்சுல வச்சா. நெஞ்சு மெல்ல மெல்ல அசஞ்சிட்டு இருந்து. அப்பாக்க மூச்சுச் சத்தமும் என்னோட மூச்சுச் சத்தமும் மாறி மாறிக் கேட்டு. எல்லாம் கொஞ்ச நேரந்தான். இந்தா, இந்தக் கை வழியாத்தான் எங்கப்பா போனா பாத்துக்கோ.” என்று சொல்லி என் கையோடு சேர்த்து அவரது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தினார்.

சிறிது நேரம் மாமா அப்படியே உட்கார்ந்திருந்தார்.

“பொறவு நமக்கு இந்தப் பேரு ஒட்டிக்கிட்டு. அது சும்மால்ல, ஒரு தோணக்கமாக்கும். செல மூஞ்சியப் பாத்த ஒடனே தோணிரும், இது தேறாதுன்னு. என்னைக்கு எத்தன மணிக்குப் போகும்னு கூட தெரிஞ்சிரும். பின்ன, நானாட்டு ஒண்ணும் சொல்லதில்ல. அப்பிடி ஒண்ணு ரெண்டு எடத்துல சொல்லப் போயி சொன்ன மாதியே நடந்துட்டு. பின்ன, அதுவே பேராயிட்டு. செரி, நம்மளும் பாவம் ஒண்ணும் பண்ணலல்லா? இழுத்துட்டுக் கெடக்கது கொடூரம்லா மருமவன? போயி பக்கத்துல நின்னாப் போறும். என்ன பேசுகேன்னும் தெரியாது, அங்க என்ன நடக்கும்னும் தெரியாது. சீவம் சொகமாப் போயிரும். அதான மருமவன வேணும். என்னத்த வாழ்ந்து என்னத்துக்கு?”

*

சற்று நேரத்தில் வாக்கரிசிப் பிள்ளை மாமா வந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் பயங்கரமாகக் கோபம் வந்தது. என் தாத்தாவின் மரணத்தைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அப்பாவும் சித்தப்பாவும் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டு மாமாவை உள்ளே போகச் சொன்னார்கள். நான் அவருக்கு முன்னாக ஓடிச் சென்று தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். எனக்குத் தெரிந்த சாமி மந்திரங்களையெல்லாம் வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தேன். மாமாவின் மந்திரம் இன்று பலிக்கக் கூடாது என்று எல்லா சாமிகளையும் வேண்டினேன்.

மாமா வந்து நின்று என் தலையில் கைவைத்து வருடினார். நான் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவரைப் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து என் முன் நீட்டினார். நான் அவரை முறைத்துப் பார்த்தேன்.

“மக்ளே, வெளிய வா கொஞ்சம்” என்று அம்மா அழைத்தாள்.

“ஒண்ணுல்ல மக்ளே. மருமவன் இங்கயே இருக்கட்டும்.” என்று பதில் சொன்னார் மாமா.

அம்மா வந்து மாமாவின் கையில் ஒரு தம்ளர் பால் கொடுத்துச் சென்றாள். ஒரு மடக்கை தன் வாயில் விட்டவர், “மக்ளே, கொஞ்சம் சீனி போட்டுக் கொண்டா.” என்றார்.

அம்மா சீனி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள். மாமா ஏதோ வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார். எனக்குள் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால், எதுவும் நடக்காததைப் போல, அல்லது வேறு யாருக்கோ நடப்பதைப் போல தாத்தா சுகமாகப் படுத்துக் கிடந்தார். அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாகியது. என்ன ஒரு கம்பீரம், அழகு! தாத்தா என்னைப் பார்த்து சிரித்ததைப் போல இருந்தது. மாமா மூன்று முறை தாத்தாவின் வாயில் பாலை விட்டார். தாத்தா நல்ல பிள்ளையாக வடிக்காமல் பாலை விழுங்கினார். மாமா சற்று நேரம் அமைதியாகக் கண்களை மூடி நின்றார். பின், தாத்தாவின் காலைத் தொட்டு வணங்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். வெளியே ஒரே சலசலப்பு!

நான் தாத்தாவின் அருகே உட்கார்ந்து எனது கையை அவரது கையோடு சேர்த்து அவரது நெஞ்சில் வைத்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். எங்கள் கைகள் மேலும் கீழும் மெல்ல ஏறி இறங்கின. எனது மூச்சும் தாத்தாவின் மூச்சும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தது. வாக்கரிசி மாமா வைத்துவிட்டுப் போன ஆரஞ்சு மிட்டாய் தாத்தாவின் தலைமாட்டில் இருந்தது.

 

 

சிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை

“என்ன சௌக்யமா?” என்று கேட்டுக் கொண்டே அந்த மாமா உள்ளே நுழைந்தார்.

“அடடே! யாரு ஸாமிநாத அய்யரா? வாரும், வாரும், என்ன ஆளைப் பாக்கறதே அபூர்வமா போயிடுத்தே!எப்பிடி இருக்கேள்? ஆத்தில எல்லாரும் சௌக்யமா?உக்காருங்கோ ,உக்காருங்கோ!” தாத்தா குரலில் ஒரே உற்சாகம்.

“என்ன ஓய்! நம்ம வீ.ஓ,கர்ணம் கான்ஃப்ரன்ஸ்க்கு வராம வச்சுட்டீர்! எல்லாரும் வந்திருந்தா! உம்மை ரொம்ப விசாரிச்சா! திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், செம்மங்குடி எல்லாரும் அனேகமா வந்துட்டா, நீர்தான் இப்பிடி பண்ணிப்பிட்டீர்!”அவர் உட்காருவதற்குள் தாத்தா குற்றப் பத்திரிகை படித்தார்.

“இல்ல ! ஆத்துல ரொம்ப ஆச்சோ ,போச்சோன்னு ஆயிடுத்து, உடனே நாகப்பட்டினம் டாக்டர் கிட்ட கூட்டிண்டு போய் ஒரே அமக்களமாயிடுத்து, இல்லாட்டா அப்பிடி வராம இருப்பேனா என்ன?”

“அடடா! த்சோ!த்சோ! பாவமே!இப்ப உடம்பு தேவலாமா?தெரிஞ்சிருந்தா ஒரு நடை வந்து பாத்திருப்பேனே!”

“இல்ல! இல்ல !இப்பொ தேவலாம்!”

“இந்தா,இந்தா” தாத்தா சமையலறையை நோக்கி குரல் கொடுத்தார்,பாட்டியைக் கூப்பிடுகிறார்.”யாரு வந்திருக்கா பாரு” இரைந்து சொன்னார்.

“தாத்தா!பாட்டி சமையல் உள்ளில் இல்ல! கொல்லையையில வண்டி ரிப்பேர் பண்ணவந்தவன்கிட்டையும்,மாட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போறதைப் பத்தி ராமசாமிகிட்டயும் பேசிண்டிருக்கா”ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த நான் ஆடுவதை நிறுத்தாமல் சொன்னேன்.

“யாரு பேத்தியா? மதுரையிலருந்தா?” நான் மாமாவைப் பார்த்து சினேகிதமாக சிரித்துவிட்டு “நமஸ்காரம் மாமா” என்றேன்.

“ஆமா! லீவுக்கு வந்திருக்கா,போய் பாட்டியை கூப்பிடும்மா”என்றார் தாத்தா

“இல்ல, பரவாயில்லை!மெதுவா வரட்டும்!இங்க என் மச்சினி ஆத்துக்கு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டு போலாம்னு”

“என்ன சமாசாரம்?”

“மச்சினி பொண்ணுக்கு வரன் பாத்துண்டு இருக்கா இல்லயா?அதான் ஒரு தெரிஞ்ச இடம் இருக்குன்னுட்டு சொல்றதுக்கு வந்தேன்”

“யாரு?”

“நம்ம மேலத்தெரு நாச்சாமி இருக்கான் இல்லியா?”

“ஆமா!”

“அவன் இரண்டாவது மச்சினியை கும்பகோணத்தில குடுத்திருக்கே”

“ஆமா!”

“அவ இளைய மாமனார் பிள்ளை மேட்டுர் கெமிகல்ஸ்ல வேலை பாக்கறனே”

“ஆமா!ஆமா!”

“அவன் பொண்டாட்டி கூட…… திருச்சி.”

“ ஆமா!திருச்சிக்காரி!”

“கரக்டா சொல்றேளே! அவ தம்பி திருச்சியில பி.எச்.ஈ.எல் ல வேலை பாக்கறான்”

“ஆமா!ஆமா”

இந்த ஒவ்வொரு ஆமாவுக்கும் தாத்தாவுக்கு குரலில் சத்தமும் , உற்சாகமும் கூடிக் கொண்டே போயிற்று.

“அவனொட மச்சினன் கூட மட்ராஸ்ல பாங்க்ல வேலை பாக்கறான்”

“ஆமா!ஆமா!”

“அவன் பையனுக்கு பாக்கலாம்னு!.உங்களுக்கு தெரியுமோல்லியோ”

“சரியா தெரியல யாருன்னு ! என் வைஃபை க் கேட்டா தெரியும்”

தாத்தா எப்பவும் பாட்டியை வைஃப் என்றுதான் குறிப்பிடுவார்.

இவ்வளவு நேரம் ஆமா ஆமா என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நினைத்துக்கொண்டேன். வந்த மாமா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

தாத்தா ஒல்லியாய் , உயரமாய் ஒரு சாயலில் லாரல், ஹார்டி இரட்டையரில் ஒல்லியாய் இருப்பவரான லாரலை நினைவு படுத்துகிறமாதிரி இருப்பார்.எப்பவும் கணுக்காலுக்கு மேலேயே இருக்கும் வேஷ்டி, முழங்கை வரை வருகிற தொள தொள சட்டை, முகத்தில் சதா சர்வதா சிரிப்பு, விடு விடு வென்ற வேக நடை. அந்த காலத்து எஸெல்சி. ஆங்கிலம் நன்றாக பேசுவார், அதைப் பற்றி பெருமையும் உண்டு.

ஒரு தடவைஅவர் மதுரைக்கு வந்த போது நான் படிக்கிற பள்ளிக்கு வந்து என்னுடைய ஏழாவது வகுப்பு டீச்சரிடம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தார். டீச்சரே கொஞ்சம் பயந்துகொண்டு உதறலோடு பேசினாற் போல் எங்களுக்குத்தோன்றியது.

அப்புறம் அந்த டீச்சர் என்னிடம் ”ஏண்டி! உங்க தாத்தா ரொம்ப நல்லா இங்க்லிஷ் பேசறாரே? பி.ஏ வா. எம் ஏ வா? ” என்று கேட்டார். நான் ” இல்ல டீச்சர்! எஸெஸெல்ஸி தான் “என்றேன். “அடேயப்பா! இந்த போடு போடறாரே! அந்த காலத்து எஸெஸெல்ஸி, இந்த காலத்து பி ஏ , எம் ஏக்கு சமம்டி!”

அதை தாத்தாவிடம் வந்து சொல்லி விட்டேன் . தாத்தாவுக்கு பெருமை சொல்லி மாளவில்லை.” “ஹெஹெ….. என்ன சொன்னா, பி ஏ வா, எம் ஏவான்னு கேட்டாளா? அந்த காலத்து எஸஎல்ஸி இந்த காலத்து எம் ஏ ன்னாளா” கெக்கெக்கென்று சிரித்தார்.

.அந்த டீச்சரையும் ரொம்ப பிடித்துவிட்டது “ ரொம்ப நல்லவ பாவம்!த்ஸொ! த்ஸொ! ரொம்ப நல்ல மாதிரி!” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

” மாப்பிள்ளை இதை கேட்டேளா? ராதாவோட டீச்சர் என்ன சொன்னான்னு?”

“ ம்.. கேட்டேன், கேட்டேன்! சொல்லமாட்டாளா பின்ன? எனக்கே அந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது!” சொல்லிக் கொண்டே துண்டை தோளில் போட்டுக் கொண்டு குளிக்கப்போனார் அப்பா. அப்பாவின் முக பாவத்தை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை.

தாத்தா “மாப்பிள்ளை! மாப்பிள்ளை! இன்னொரு சமாசாரம் என்னன்னா “ என்று கூறிக்கொண்டே பின்னோடு போனார். அப்பா குளியலறையில் புகுந்து குளிக்க ஆரம்பித்த பிறகும் பாத்ரூம் வாசலில் இருந்துகொண்டு ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதோடு விட்டால் பரவாயில்லையே, என்னோடு தினம் பள்ளிக்கூடத்திற்கு வருவேன் என்று பிடிவாதம். அதை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

தாத்தாவின் அப்பா அந்த காலத்திலேயே நாகப்பட்டிணம் ஜில்லாவிலே முக்கிய புள்ளி, செஷன்ஸ் கோர்ட்டில் பிரபல வக்கீல். “வக்கீல்னா என்ன தேங்கா மூடி வக்கீலா என்ன அவர்? அவர் பேரைச் சொன்னா அழுத பிள்ளை வாய் மூடும், அவர் இருந்த கெத்து என்ன , கம்பீரம் என்ன , அந்தஸ்து என்ன, ஹோதா என்ன? அடேயப்பா! சொல்லி மாளாது “என்பாள் அம்மா.

ஆனால் துரதிர்ஷடவசமாக தாத்தாவுக்கு அந்த கல்யாண குணங்கள் எதுவுமே வர வில்லை என்பதுதான் பாட்டியின் குறை. தாத்தா ஒரு விதத்தில் நல்லவர்தான், ஆனால் வல்லவர் அல்ல. அவர் அப்பா வைத்து விட்டு போன சொத்துக்களை ஆளுகிற ஆளுமையோ, கட்டி காப்பாற்றுகிற சாமர்த்தியமோ,தோரணையோ அவரிடம் இல்லை. போதும் போதாதற்கு, எல்லாரிடமும், வயலில் வேலை செய்பவனிலிருந்து , அக்கம் பக்கத்தவர்,தாயாதி வரை ஏதோ சண்டை,பூசல். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுகிறாற் போல்பேசுகிற வித்தை அவருக்குத் தெரியவில்லை.

பாட்டி பாஷையில் சொல்வதானால் ‘அங்கிருக்கிற ஒவ்வொவொரு பயலும் எமகாதகன்கள்,கண்ணை முழிச்சுண்டிருக்கறச்சயே கையில இருக்கறதை பிடுங்கற அதி சாமர்த்திய சாலிகள், அதுகளுக்கு நடுப்பற இப்பிடி இரண்டுங்கெட்டானா இருந்தா பிழைக்கறது எப்பிடி?’

சமையலறையில் பாத்திரங்கள் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

தாத்தா இரைந்து “இந்தா , இந்தா !” என்று கத்தினார்.

“ராதா! பாட்டி கிட்ட மாமா வந்திருக்கிறார்னு சொல்லு! காபி கொண்டு வா!”

“இல்லன்னா! அதெல்லாம் வேண்டாம் , நான் கிளம்பறேன்”

“நன்னாருக்கே! அப்பிடி எப்பிடி போக முடியும்?”

நான் சமையல் உள்ளில் நுழைந்தேன்.

பாட்டி” என்ன உங்க தாத்தா தட புடலா கத்தி ஆறது? உள்ள என்ன இருக்கு என்ன இல்லைன்னு ஒண்ணும் தெரியாது! தாட்டு பூட்டுனு அமக்களப் படுத்தியாறது!”பல்லைக்கடித்தாள்.

மடிசார் புடவை தலைப்பால் வலது தோளை லேசாக மூடிக்கொண்டு( மரியாதை நிமித்தம் !!) கூடத்துக்கு வந்து

“ வாங்கோ மாமா ! வாங்கோ! ஆத்தில எல்லாரும் சௌக்யமா? மாமியை அழைச்சுண்டு வல்லியா?” என்றாள் மென்மையான குரலில்.

“ மாமிக்கு உடம்பு முடியலையாம், அதான் வல்லை! நீ போய் காபி கொண்டு வா மாமாவுக்கு!” தாத்தா உரத்த குரலில் சொன்னார்.

யாராவது வரும்பொழுது தாத்தா பாட்டியை அதிகாரம் பண்ணுகிற தோரணையில் குரலை உயர்த்தி பேசுவார். மற்ற சந்தர்ப்பங்களில் பாட்டியின் உருட்டி விழிக்கிற முழிக்கும் , அடித் தொண்டையில் மெதுவாக உறுமுகிற மாதிரி பேசுகிற பேச்சுக்கும் எதிர் பேச்சு பேச முடியாது என்பதால் இந்த மாதிரி சந்தர்ப்பங்களை எல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுவார்.

மாமா காபி சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார். தன் அதிகார பேச்சுக்கான பின் விளைவுக்கு பயந்து தாத்தாவும் அவருடனே கிளம்பி வெளியே போனார்.

சாயங்காலம் தலையாரி கோபால் “அம்மா!அய்யா இல்லிங்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

“ நல்ல வேளை நானே உன்னைக் கூப்பிட்டு விடனும்னு நினைச்சேன்!! நீயே வந்துட்ட! சித்த உடையார் வீட்டு வரைக்கும் போய் போன வாரம் குடுத்த பத்து மூட்டை நெல்லுக்கு பணம் வாங்கிண்டு வா! உங்க அய்யா கிட்ட சொல்றதும் இந்த சுவத்துகிட்ட சொல்றதும் ஒண்ணுதான்! வீட்டுல ஆயிரம் செலவு இருக்கு! என்னத்தை சொல்றது போ!”

“விளக்கு வைக்கறதுக்குள்ள போறேன், இல்லாட்டா கிடைக்காது” என்று சொல்லிக் கொண்டே போனான்.

என் அண்ணாவும், தம்பியும் விளையாட போய்விட்டார்கள்,

பாட்டி எனக்கு தலை வாரி விட்டுக்கொண்டே சொன்னாள்,

“ எனக்கும் , எங்க பெரியப்பா பொண்ணு சிவகாமுவுக்கும் ஒண்ணாதான் ஜாதகத்தை எடுத்தா. உங்க தாத்தா ஜாதகம், வெங்கடேச அத்திம்பேர் ஜாதகம் இரண்டும் வந்தது.எனக்கு இவர் ஜாதகம், அக்காவுக்கு அத்திம்பேர் ஜாதகத்தையும் பாத்தா,பொருந்தலைன்னா மாத்திப் பாத்துக்கலாம்னா! என்னைப் பிடிச்ச அதிர்ஷ்டம் , பொருந்தியுடுத்து. இல்லன்னா என்னை அத்திம்பேருக்கு பாத்துருப்பா ! ஹும்! தலைஎழுத்தை யாரால மாத்த முடியும்? இப்ப பாரு , அத்திம்பேர் , சிவகாமு அக்காவை தாங்கு தாங்குன்னு தாங்கறார்!”

“சாமி விளக்கேத்தறியா” என்று பாட்டி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது,விறு விறு வென்ற உள்ளே நுழைந்த கோபால்,

“ போங்கம்மா! நம்ம ஐய்யா பண்ற வேலையை என்னன்னு சொல்றது?” என்றான்.

“ஏன் என்ன ஆச்சு?”

“ஏண்டா?ஒரு தடவை நெல்லை குடுத்துவிட்டு , எத்தனை தடவை பணம் வாங்குவீங்கன்னு பரியாசம் பண்றாங்கம்மா!,தலை தூக்க முடியல ,இஞ்ச வந்துதான் நிமுந்தே பாக்கறேன்! “

பாட்டி முகம் ஜிவு ஜிவென்று சிவந்தது.

“ எப்ப பணம் வாங்கினாராம்?

“இரண்டு நாள் முன்னாடி போய் வாங்கிட்டு வந்தாராம்!”

தாத்தாவை நினத்தால் கவலையாக இருந்தது.

“ வரட்டும் ப்ராம்ணன்! நான் இங்க இத்தனை சிலவு பூதம் போல நிக்கறதே , என்ன பண்றதுன்னு கையை பிசைஞ்சுண்டு நிக்கறேன்!வண்டியை ரிபேர் பண்ணனும், அடுத்த உழவுக்குள்ள மாட்டை கொஞ்சம் சரிபடுத்தி வைக்கணும், லீவுக்கு வந்த குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித்தரணும், வீட்டுல மளிகை சாமான்கள் வாங்கணும்,பழய பாக்கிகளை செட்டில் பண்ணனும். இந்த மனுஷனானா இப்பிடி பண்ணறது?இவர் கூடப் பிறந்த பொண்ணுகள் ஒண்ணொண்ணும்எப்பிடி என்னைப் பார் , உன்னைப் பார்னு ஜகஜ்ஜால கில்லடிகளா இருக்குகள்! இது ஒத்தைப் பிள்ளையா பிறந்துட்டு இப்பிடி இருக்கே ! சமத்துக்கு அப்பாவைக் கொள்ளப் படாதோ, அப்பிடியே அசட்டுக்கு அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கு! போறும் போறாத்துக்கு இந்த பொய் பித்தலாட்டம் வேற!” பாட்டி எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் கடைசியில் பிரச்னையின் ஆதாரத்துக்கு வந்து சேர்ந்தாள்.

தாத்தா இருட்டி வெகு நேரம் கழித்து வந்தார். பாட்டி பிலு பிலுவென்று பிடித்து கொண்டு அரை மணி நேரம் ஓயவில்லை.

தாத்தா “ஷீ இஸ் ஏ டஃபர், ஆல்வேஸ் கம்ப்ளைனிங்க்!நெவர் லிசனிங்க்!!உச் ..உச்..” என்று நடு நடுவில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். நடுவில் கிடைத்த இடைவெளியில்,

“குழந்தை ரகு எஸ்ஸெல்ஸி போறானே, அதான் அவனுக்கு வாட்ச் வாங்கப் போனேன், அப்புறம்……” என்றார்.

அவ்வளவுதான் பாட்டிஒரு நொடியில் கொதிக்கும் எரிமலையிலிருந்து குளிரும் பனிமலையானாள்.

“அதை சொல்லிட்டு போலாமில்லியா? எங்க காட்டுங்கோ பாப்போம்!குழந்தை கைக்கு நன்னா இருக்கும், பரிட்சைம் போது மணி பாத்துக்கணுமே”

அவர்கள் இருவருக்கும் எங்கள் அண்ணா மீது இருந்த அன்பு, காவியங்களில் வைத்துப் போற்றப் பட வேண்டிய அன்பு .அதற்கு இணையான அன்பை என் வாழ்நாளில் இது வரை பார்த்ததில்லை ,ஆனால் அன்று அது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது என்பதுதான் உண்மை.

“அப்புறம் வாழைத் தோப்பிலே மரங்களுக்கு முட்டு கொடுக்கறதுக்கு முன் பணம் கொடுத்துட்டு வந்திருக்கேன், இந்தா பாக்கி பணம்!” கொடுத்தார்.

‘சரி! சரி! காலை ,கையை அலம்பிண்டு சாப்பிட வரட்டும்!அப்புறம் செலவழிச்சதுக்கு கணக்கு சொல்லட்டும்”

இதற்கப்புறம் அந்த கோடை விடு முறை வேறு வில்லங்கமான நிகழ்சிகள் எதுவும் இல்லாமல் முடிந்தது.

அதற்கடுத்த கோடை விடுமுறைக்கு வழக்கம் போல நாங்கள் நால்வரும் மறுபடியும் கிராமத்துக்குப்போனோம்.அந்தி மயங்குகிற சமயத்துக்கு வீட்டைச் சென்று அடைந்தோம். பாட்டி கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்துடன் தன் வழக்கமான உற்சாகம் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள்.

எங்களைப் பார்த்தவுடன் “வாங்கோடா குழந்தைகளா! , எப்ப கிளம்பினேள்?எப்ப சாப்பிட்டேளோ?”என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

“என்ன பாட்டி?ஏன் என்னவோ போல இருக்கேள்? தாத்தா எங்க?” என்றான் தம்பி. கொஞ்சம் குரலில் தெம்பு வந்தவளாக

“உங்க தாத்தா சமாசாரம்தான் தெரிந்த விஷயமாச்சே! இரண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு மருந்து வாங்கிண்டு வரேன்னு திருவாலூர் கிளம்பிப் போனார், இன்னும் ஆளைக் காணலை! வியாழக் கிழமை சாப்பாட்டுக்கப்புறம் கிளம்பிப் போனார், இதோ இன்னிக்கு சனிக்கிழமை ராத்ரி ஆப்போறது இன்னும் வரலை”

“என்ன பாட்டிதிருவாரூர் இங்க இருந்து பத்து,பதினைந்து கிலொ மீட்டர் தூரத்தில இருக்கு. ஜாஸ்தி ஆனாலும், நாலு, அஞ்சு மணி நேரத்தில திரும்பலாமே! நானும் சீனுவும் வேணா போய் பாத்துட்டு வரட்டுமா?” என்றான் அண்ணா.

“ ராத்திரி இருட்டிண்டு வரது,தவிர எங்கன்னு போய்த் தேடுவ? உங்க தாத்தா திருவாரூர் தான் போனாரோ? இல்ல அங்கிருந்து வேற எங்கயாவது போனாரோ?யார் கண்டா , வரப்போ வரட்டும் போ!” எங்களைப் பார்த்த தைரியத்தில் பாட்டி பேசினாள்.

ராத்திரி சாப்பாட்டிற்கு அப்புறம் சமையலறையை சுத்தம் செய்யும் போது பாட்டி முகத்தில் திரும்பவும் பயம் வந்தாற் போல் இருந்தது.

“என்ன பாட்டி, ஏன் கவலைப் படறேள்? நீங்கதான் தாத்தா இங்க இருந்தா படுத்தறார்ங்கறேள் .இரண்டு நாள் எங்கோ போய்ட்டு வந்தா வரட்டுமே!” என்றேன்.

“அது இல்லம்மா! அசடோ,சமத்தோ, இரண்டுங்கெட்டானோ, கெட்டிக்காரனோ,என் கையில இந்த மனுஷனை நன்னா பாத்துக்கோன்னு ஒப்படைச்சுட்டு போயிருக்காளே உங்க கொள்ளுப் பாட்டி மகராஜி! நான் பாத்துக்க வேண்டாமா? அது என் கடமை இல்லியா? சாப்பிட்டாரோ, வைச்சாரோ, எங்கயாவது அடி பட்டு கிடக்காரோன்னு மனசு அடிச்சுக்கறது! ஆனா அதுக்காக நான் இனிமே சண்டை போட மாட்டேன்னு அர்த்தம் இல்ல! திரும்ப வரச்ச பிடிச்ச காட்டில கொண்டு விடத்தான் விடுவேன். வரட்டும் மனுஷன்!”

மறு நாள் காலை பதினோரு மணி வாக்கில் தாத்தா வந்து சேர்ந்தார். திருவாரூரில் யாரோ பட்டாமணியத்தையோ, கர்ணத்தையோ பார்த்தாராம், முக்கியமான விஷயமாக நாகப்பட்டணம் போக வேண்டியிருந்ததாம், இந்த மாதிரி என்னவோ கதை கதையாக சொன்னார், யாருக்குமே அதை கேட்கிற மனநிலையுமில்லை, நம்புகிற மனநிலையுமில்லை. கடைசியில் பாட்டிக்கு வாங்க வேண்டிய மருந்துகளையும் வாங்கவில்லை.

அடுத்த கோடை விடுமுறை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு பாட்டி செத்துப் போனாள். அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம்.சிதையில் எரிந்தது, எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள்பால்யமும்தான். ’ பாட்டியோடு பால்யம் போம்!’ ஆம், போயிற்று!

பாட்டியை இனி பார்க்கவே முடியாது என்கிற பயங்கரமான, மாற்றமுடியாத, வலி மிக்க உண்மையை எதிர் கொள்ளத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

அன்றைக்கு இரவு தூக்கமும் இல்லாமல், விழிப்புமில்லாமல் வெகு நேரம் தவித்து விட்டு கண் அசந்த வேளையில் தங்கை , என்னை எழுப்பி “அக்கா! அக்கா ! தாத்தாவைக் காணும், படுக்கையில இல்ல,” என்றாள்.

ஒரு நொடியில் வீடே விழித்துக் கொண்டது. வீடு முழுக்க தேடி அவர் அங்கு இல்லை என்று தீர்மானமானவுடன் ,அப்பாவும் ,ராமசாமியும் , கீழத் தெருவின் கடைசியிலிருந்த சிவன் கோவில் பக்கம் போனார்கள், சித்தப்பாவும், மாமா தாத்தாவும் , மேலத்தெரு பக்கம் தேடிக் கொண்டு போனார்கள், அண்ணாவும், தம்பி சீனுவும் ,கோபாலுவும்ஆற்றங்கரைப்பக்கம் போனார்கள்.

போய் விட்டு வந்த பிறகு அண்ணா சொன்னான்

“ பிள்ளயார் கோவில் திண்ணையில் படுத்துக் கொண்டிருதவர்களில் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு ஆத்தங்கரைக்குப் போனோம்,அரச மரத்து சலசலப்பு தவிர வேற சத்தமேயில்ல, மேலே மினுங்கிக் கொண்டிருந்த நட்சத்தர வெளிச்சம் இருட்டை ஜாஸ்தியா காமிச்ச மாதிரி இருந்தது, கொஞ்சம் பயமா கூட இருந்தது. மங்கின வெள்ளையா தெரிஞ்ச ஆத்து மணல்ல தூரக்க யாரோபடுத்துண்டு இருந்தது தெரிந்தது,கோபால் சொன்னான் ,’ கிட்டப் போய் திடும்னு நின்னா அய்யா பயந்துடுவாரு, இங்கேயேயிருந்து கூப்பிட்டுகிட்டே போலாம்’

குரல் குடுத்துண்டே போனோம், தாத்தாபதில் சொல்லலை , கிட்ட போய்ப் பார்த்தால் குலுங்க குலுங்க அழுதுண்டிருந்தார். அவர் தோளைத் தொட்டதும் அழுது கொண்டே பாட்டி பாவம்! என்றார்”

தாத்தாவை எங்களோடு நாங்கள் வசித்த நகரத்துக்கு கூட்டிக் கொண்டு போனோம்.எங்களோடு நகரத்துக்கு வந்த தாத்தா கிராமத்தில் இருந்தவர் இல்லை.