சிலந்தி

ப. மதியழகன்

ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது அந்த புனித சேவியர் தேவாலயம். கஜா புயலால் உருக்குலைந்து போன ஆலயத்தை செப்பனிட்டு வந்தார்கள். அங்கு பாதிரியாராக வேலை பார்ப்பவர் செபஸ்டியன். சர்ச் வளாகத்துக்குள் தான் அவர் வீடு. அவர் இந்த தேவாலயத்திற்கு மாற்றலாகி வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆசாரி ஜோசப் தான் சன் சவுண்ட் சர்வீஸ் வச்சிருக்காருன்னு செல்வராசுவை பாதிரியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

செல்வராசு ஐந்தாம் வகுப்புவரை கிறித்தவ மிஷனரி நடத்திய பள்ளியில் தான் படித்தான். அதனால் பாதிரியாரின் வெள்ளை அங்கியைப் பாரத்தவுடன் அவர்மீது தனி மதிப்பும் மரியாதையும் அவனை அறியாமலேயே மனதில் எழுந்தது.

“எத்தனை வருசமா இந்த லைன்ல இருக்கீங்க” என்று கேட்டார் செபஸ்டியன்.

“அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து ஸ்பீக்கரைத் தூக்கிட்டுத் தான் அலையறான்” என்றார் பதிலுக்கு ஆசாரி.

“எங்க வீடு?”

“வீமன் நகர்ல நாலுவீடு தள்ளி ஒரு குடிசை.”

“குழந்தை குட்யெல்லாம்?”

“ஒரு பொண்ணு மூணு வயசு ஆகுது.”

“ஸ்கூல்ல சேத்தாச்சா?”

“இந்த வருஷம்தான் சேக்கணும்.”

“கட்டடத்துல எல்லா மராமரத்து வேலையும் முடிஞ்சிடுச்சி எலக்ட்ரிஷன் வேலைதான் பாக்கி. ஜான் இவரை பிரேயர் ஹாலுக்கு அழைச்சிட்டு போய் காட்டு.”

செல்வராசு வாழ்நாளில் முதல்முறையா பிரார்த்தனைக் கூடத்துக்குள் நுழைந்தான். இருக்கைகளுக்கு எதிரே ஆளுயர சிலுவை மட்டுமே இருந்தது. ஜான் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தான். ஆனால் செல்வாராசுவின் சிந்தனை வேறெங்கோ இருந்தது. ஆனாலும் காதில் வாங்கிக் கொண்டதாக தலையாட்டினான்.

இருவரும் பாதிரியாரிடம் வந்தார்கள். “என்ன செல்வராசு பாத்தாச்சில்ல. இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை இன்னும் ஒரு வாரத்துல திறக்கப் போறோம். வெல்கம் போர்டு, லைட் செட்டிங், எல்ஈடி-ல் சர்ச் பேரு ஓடுற மாதிரி எல்லாத்தையும் செஞ்சு தந்துடு. எப்ப வேலையை ஆரம்பிக்க போற?”

“அட்வான்ஸ் ஒரு ஐயாயிரம் கொடுங்க. மீதியை எல்லாம் முடிச்சதுக்கப்புறம் வாங்கிக்கிறேன். நாளைக்கு வேலைய ஆரம்பிச்சிடலாம்.”

“ஜான் செல்வராசுகிட்ட ஒரு ஐயாயிரம் கொடுத்துவுடு. வேலை எந்த நிலைமையில இருக்குன்னு டெய்லி என்கிட்ட வந்து சொல்றது உன் வேலை ஜான்.”

“அப்ப நான் வர்றேங்க ஐயா” என விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் செல்வராசு.

செல்வராசு டிவிஎஸ் எக்ஸலில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் பார்த்த சிலுவை அவன் கண்களில் நிழலாடியது. அது காந்தம் போல் அவனை ஈர்த்தது. அங்கு எழுதியிருந்த நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்து போனது. யோசனையிலேயே வீடுவந்து சேர்ந்தான்.

கதவைத் திறந்துவிட்ட செல்லக்கண்ணு “என்ன ஐயா பலமான யோசனையிலேயே இருக்காரு” என்றாள்.

வண்டியை ஸ்டான்டு போட்டு நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் செல்வராசு. “ஐயாவுக்கு என்ன ஆச்சாம் வாய்க்கா வரப்புத் தகராறுன்னு பஞ்சாயத்து பண்ணப் போனீங்களா?” என்றாள் செல்லக்கண்ணு

“சர்ச்க்கு போயிருந்தேன் செல்லம்!”

“எதுக்கு?”

“ஒரு வேலையா! புயல்ல சேதமடைஞ்ச கட்டடத்தை சீர் பண்ணி இப்பத் திறக்கப்போறாங்க. லைட்டிங்கும், சவுண்ட் சர்வீஸும் நான் தான். ஃபாதர்கிட்ட ஐயாயிரம் அட்வான்ஸ் கூட வாங்கிட்டேன்.” சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்து செல்லக்கண்ணுவிடம் நீட்டினான்.

பணத்தை வாங்கிக் கொண்ட செல்லக்கண்ணு, “அதுக்கும் மூஞ்சி செத்துப்போனதுக்கும் என்ன சம்பந்தம்” என்றாள்.

“அங்க சிலுவை வைச்சிருந்தாங்க. அதைத்தான் கும்பிடறாங்க. ஒரே மாதிரியான இருக்கைதான் ஏழை, பணக்காரன்னு எந்த வித்தியாசமும் இல்லை. சூடத்துகிட்ட நெருப்பைக் கொண்டுபோனா திடீர்ன்னு பத்திக்கும் பாரு அது மாதிரி உள்ளுக்குள்ள ஏதோ எரியறது செல்லம்.”

“கோயில் கோயிலா சுத்துனப்ப பண்ணாதது இப்ப பண்ணுதாக்கும். சோத்த தின்னுட்டு படுங்க. அட்வான்ஸ் பணத்தை சாமிகிட்ட வைக்கிறேன் காலையில எடுத்துக்குங்க.”

வேலை விஷயமாக பேச வேண்டி இருந்ததால் மறுநாள் பாதிரியாரின் வீட்டிற்குச் சென்றான் செல்வராசு. அறையில் கணவனும், மனைவியும் பாதிரியாரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். காத்திருக்கலாம் என்று வெளியே உள்ளே பெஞ்ச்ல் அமர்ந்தான் செல்வராசு. அறைக்குள் அவர்கள் பேசிக் கொண்டிருப்பது நன்றாக அவன் காதில் விழுந்தது.

“ஃபாதர் இந்த உலகத்துல எதுவும் பெருசாத் தெரியலை குழந்தைகளைத் தவிர. வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கறதே குழந்தை தான். என்ன தான் மாளிகையா இருந்தாலும் குழந்தை அழும் சத்தம் கேட்கலைனா அது குடிசை தான், கர்த்தர் எங்களை ஏன் சோதிக்கிறார்” என்றது ஆண்குரல்.

“பெஞ்சமின் ஓரிடத்தில் செல்வம் இருக்கின்றது குழந்தை இல்லை, அதே வேறோரிடத்தில் குழந்தை இருக்கின்றது செல்வமில்லை. இதை கர்த்தரின் சோதனை எனக் கருதினால் அவர் மீது அவநம்பிக்கை கொள்வதற்கு ஒப்பாகும். அதே வேளையில் குழந்தை குழந்தைதான் அது யாருடையதாக இருந்தால் என்ன?” இது ஃபாதரின் குரல்.

“மருத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்துதான் உங்களை நாடி வந்திருக்கிறோம். நீங்கள் தான் எங்கள் பிரார்த்தனையை பரலோக பிதாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றது அப்பெண் குரல்.

ஃபாதர் தொடர்ந்தார் “ஜெபம் செய்கிறேன். உங்கள் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. அதே வேளையில் பெற்றால்தான் பிள்ளையா இந்த உலகிலுள்ள குழந்தைகள் அனைத்தும் உங்கள் குழந்தைகளாக நீங்கள் உணரவில்லையா? அந்த கடவுட் தன்மை தாய்மை உணர்வு உங்கள் இருவரிடமிருந்தும் பொங்கி எழவில்லையா?”

“நாங்கள் சொத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்வோம். அதற்குரிய வல்லமை எங்களிடம் இருவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் குழந்தை வரத்திற்கு கடவுளின் அனுக்கிரகம் தேவையாய் இருக்கிறது. இவ்விஷயத்தில் எங்கள் விருப்பத்தைக் கணக்கில் கொள்வது என்னவோ பூஜ்யம் தான்.”

“வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருப்பவரை பிரார்த்திப்போம், வேறென்ன நம்மால் முடியும். குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள் பாருங்கள் நிச்சயமாக கர்த்தர் உங்களுக்கு வழி பண்ணுவார். அவருடைய கிருபை உங்கள் இருவர் மீதும் இறங்கட்டும்” என்றார் ஃபாதர்.

“இன்னொன்றையும் முடிவு செய்துகொண்டுதான் இங்கு வந்துள்ளோம். ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்க்கின்ற போது அதுவே குழந்தை பெறுவதற்கு கர்த்தரின் ஆசிர்வாதமாக அமையும் என்று என் சிநேகிதர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதில் உங்கள் அபிப்ராயம் என்ன ஃபாதர்” என்றது ஆண்குரல்.

“உங்களை ஆறுதல்படுத்துவதற்காக அப்படிச் சொல்லி இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. வசதியற்ற குழந்தைக்கு உணவும், படிப்பும் அளிப்பது பரலோகத்தில் உங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தும். உங்களின் சிநேகிதர்கள் வார்த்தைகள் மூலம் கர்த்தர் உங்களை வழிநடத்தி இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் ஃபாதர்.

“எனக்கும் என் கணவருக்கும் பெண் குழந்தைதான் விருப்பம், மூன்று வயதுக்குள் உள்ள குழந்தையென்றால் பரவாயில்லை. உங்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறோம்” என்று பேசியது பெண்குரல்.

“ஃபாதர் கர்த்தரின் விருப்பம் அப்படியானால் அப்படியே நடக்கட்டும் போய்வாருங்கள்” என அந்த தம்பதிகளுக்கு விடை தந்தார்.

அறையை விட்டு வெளியே வந்த பாதிரியார் செல்வராசுவைப் பார்த்து “என்ன செல்வராசு ரொம்ப நேரம் ஆச்சா வந்து” என்றார்.

“அதுயிருக்கட்டும் இப்ப என்ன ஆகிப்போச்சி பரவாயில்லை ஃபாதர். லைட்டிங் சாதா குண்டுபல்பா எல்ஈடியா ன்னு கேட்க வந்தேன் ஃபாதர். எல்ஈடி னா கொஞ்சம் அதிகம் செலவாகும். அப்புறம் எல்ஈடி டிஸ்பிளே ஐந்தடி போதுங்களா” என்றான் செல்வராசு.

“ஐந்தடி போதும், சீரியல் செட் எல்ஈடி யா என்னன்னு ஜான்கிட்ட கேட்டுக்க” என்று சொல்லிவிட்ட ஃபாதர் வீட்டினுள் சென்றார்.

செல்வராசு பைக்கை எடுத்துக் கொண்டு சர்ச் வாயிலை கடக்க முற்பட்ட போது எதிரே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ராஜா ஓடிவந்தான். “தங்கச்சி வயித்துவலின்னு தாங்கமுடியாம மயங்கி விழுந்திடிச்சி பக்கத்துல மலர் ஆஸ்பிடல்ல சேத்துருக்கோம்” என்றான். பதட்டத்துடன் மலர் ஆஸ்பிடல் சென்றான் செல்வராசு.

செல்லக்கண்ணு பெட்டில் படுத்திருந்தாள். மயக்கம் தெளிந்துவிடும் என்று நர்ஸ் சொல்லிச் சென்றாள். ஸ்கேன் ரிப்போட் வந்திருக்கு டாக்டர் உங்களை கூப்பிடுகிறார் என்று நர்ஸ் வந்து சொல்ல செல்வராசு உடன் சென்றான்.

“உங்க மனைவிக்கு கர்ப்பப்பையில கட்டி ஃபாம்ஆகி இருக்கு. கட்டியை மட்டும் ரிமூவ் பண்றது கஷ்டம் அது அவ்வளவு நல்லதுஇல்ல திரும்பவும் ஃபாம் ஆக சான்ஸ் இருக்கு அதனால் கர்ப்பப்பையை ரிமூவ் பண்ணனும் அதுக்கு ரெண்டுலட்சம் ஆகும் உங்களால முடியும்னா இங்க வைச்சி பாக்குறோம் இல்லன்னா ஜிஹெச் க்கு அழைச்சிட்டுப் போங்க. இன்னைக்கு ஈவ்னிங் குள்ள முடிவை சொல்லுங்க. இம்மீடியட்டா இன்னும் டுவெண்டி ஃபோர் ஹவர்ஸக்குள்ள அவங்களுக்கு ஆபரேசன் பண்ணியாகனும்.”

செல்வராசுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. செல்லக்கண்ணு கண்விழித்து வித்யாவைப் பற்றிக் கேட்க பக்கத்துவீட்டில் விட்டு வந்திருப்பதாகச் சொன்னான்.

திரும்பவும் மயக்கமடைந்தாள். நர்ஸ் வந்து பார்த்துவிட்டு இன்னைக்குள்ள பணம் கட்டுங்க ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க என்றாள்.

செல்வராசு ஒரு முடிவுக்கு வந்தவனாய் பக்கத்துவீட்டில் இருந்த வித்யாவை அழைத்துக் கொண்டு பாதிரியாரிடம் சென்றான். அவர் அறையில் இருந்தார்.

“என்ன செல்வராசு?”

“ஐயா ஒரு சேதி!”

“என்ன?”

“இவ எம் பொண்ணு”

“உங்ககிட்ட புருஷன்பொஞ்சாதி ரெண்டுபேர் குழந்தையை தத்து எடுக்கிறதைப் பத்தி பேசிட்டுப் போனாங்கள்ல நானும் அதைக் கேட்டேன். எனக்கு அவசரமா ரெண்டு லட்சம் தேவைப்படுது. இவளை நான் சுவீகாரம் கொடுக்கிறதா இருக்கேன்.”

“அப்படி என்ன அவசரம் செல்வராசு”

“எம் பொஞ்சாதிக்கு கர்ப்பபையில கட்டியிருக்காம் ஆப்ரேஷன் பண்ணனுமாம் ரெண்டு லட்சம் கேட்குறாங்க நான் எங்க போவேன் அவ இல்லாம் நான் இல்ல.”

“சரி நான் அந்த தம்பதிகிட்ட பேசிப் பார்க்குறேன். ஃபாதர் போன் செய்ய உள்ளே சென்றார்.”

சற்று நேரம் கழித்து வெளியே வந்த பாதிரியார். “உன் நிலைமைய பத்தி சொன்னேன். உன்னை அவங்களே அழைச்சிட்டு போவாங்க ரிஜிஸ்டர் ஆபீசில வேலை முடிஞ்சதும் பணம் உன் கைக்கு வந்துடும்” என்றார் பாதிரியார்.

இப்போதுதான் செல்வராசுக்கு உயிர் வந்தது.

வித்யாவை கையோடு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை கையோடு வாங்கிக் கொண்டு மலர் வண்டியில் ஹாஸ்பிடல் நோக்கி மின்னலென பறந்து கொண்டிருந்தான் செல்வராசு.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.